கீழ கபிஸ்தலம் ஏகாம்பரேசுவரர் கோவில்

திருமண வரம் வேண்டி அம்பிகைக்கு சாற்றப்படும் கண்ணாடி வளையல் மாலை

தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள பாபநாசம் என்ற ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது கீழ கபிஸ்தலம் ஏகாம்பரேசுவரர் கோவில். திவ்ய தேசமான கபிஸ்தலம் கஜேந்திர வரதப் பெருமாள் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது இத்தலம். இறைவன் திருநாமம் ஏகாம்பரேசுவரர். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். இக்கோவில் தொண்டை மண்டலத்தில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவிலுக்கு இணையானது.

இத்தலத்து காமாட்சி அம்மன், நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். மேல் வலது கரத்தில் தாமரை மலரையும், மேல் இடது கரத்தில் அங்குசத்தையும் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய, வரத, ஹஸ்த முத்திரைகளுடன் அருள்பாலிக்கிறாள்.

தனக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்று வேண்டும் கன்னிப் பெண்களுக்கு, அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் கருணை உள்ளம் கொண்ட தாயாக விளங்குகின்றாள் இத்தலத்து காமாட்சி அம்மன். திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் வாழ்க்கைத் துணையாக வேண்டும் என்று இந்த அம்பிகையிடம் வேண்டிக் கொள்கிறார்கள். தங்கள் வேண்டுதலின் போது, அவர்கள் கண்ணாடி வளையல்களை மாலையாகக் கோர்த்து, அம்பிகையின் கழுத்தில் அணிவித்து வணங்குகிறார்கள். பின், அந்த வளையல்களை பிற பெண்களுக்குப் பிரசாதமாகக் கொடுக்கின்றனர். அவர்கள் கண்ணாடி வளையல் மாலை அணிவித்த 90 நாட்களுக்குள், அந்தப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாவது உறுதி என்கிறார்கள் இத்தலத்து பக்தர்கள்.

குழந்தை பாக்கியம்

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இங்கு நடைபெறும் பிரதோஷத்தில் 11 நாட்கள் கலந்து கொண்டு இறைவன், இறைவிக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தால், அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டுகின்றது.

படங்கள் உதவி : திரு. முத்துசாமி குருக்கள், ஆலய அர்ச்சகர்

கண்ணாடி வளையல் மாலையுடன் காமாட்சி அம்மன்

 
Previous
Previous

கருவளர்சேரி அகஸ்தீஸ்வரர் கோவில்

Next
Next

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்