கருவளர்சேரி அகஸ்தீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கருவளர்சேரி அகஸ்தீஸ்வரர் கோவில்

மழலைச் செல்வம் அருளும் அகிலாண்டேஸ்வரி

மண்ணால் ஆன சுயம்பு திருமேனி உடைய அம்பிகை

திரையிடப்பட்டு இருக்கும் அம்பிகையின் பாதி திருமேனி

கும்பகோணம் - வலங்கைமான் பாதையில் மருதா நல்லூரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கருவளர்சேரி. இறைவன் திருநாமம் அகஸ்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. அகத்திய முனிவர் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, தனது மனைவி லோப முத்திரையுடன் வழிபட்ட தலம் இது.

இத்தலத்து அம்பிகை அகிலாண்டேஸ்வரி மண்ணால் ஆன சுயம்பு திருமேனி உடையவள். அதனால் அம்பாளுக்கு இங்கு அபிஷேகம் கிடையாது. அர்ச்சனை மூல ஸ்ரீ சக்ர மகா மேரு மற்றும் ஸ்ரீ சக்ரத்திற்கும் செய்யப்படுகிறது. இப்படி மண்ணாலான சுயம்பு திருமேனி உடைய அம்பிகையை நாம் வேறு தளத்தில் பார்ப்பது அரிது. மேலும், அம்பாளின் முழு உருவத்தை சிவராத்திரி மற்றும் நவராத்திரியின் ஒன்பது நாட்களில் மட்டுமே நாம் காண முடியும். மற்ற நாட்களில் அம்பாளின் பாதி உருவம் மட்டுமே பார்க்கும் அளவிற்கு திரையிடப்பட்டு இருக்கும். அதாவது சாதாரண நாட்களில் நாம் அம்பிகையின் முகத்தை மட்டுமே தரிசிக்க முடியும்.

அகிலாண்டேஸ்வரி கரு வளர்க்கும் நாயகி என்று அழைக்கப்படுகிறார் - கரு வளர அருள் புரியும் தெய்வம். கருவில் இருக்கும் சிசுவிற்கு வளர்ச்சி வரம் தருகிறாள். இத்தலத்துக்கு அருகாமையில் உள்ள புகழ் பெற்ற திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலை இந்த ஆலயம் நிறைவு செய்கிறது. கருவைக் காக்கும் தெய்வம் கர்ப்பரட்சாம்பிகை. அந்த அம்பிகை கருவில் இருக்கும் சிசுவிற்கு பாதுகாப்பு அருளுகிறாள். இதனால் கர்ப்பிணிகளுக்கு ஒரு புனித தலத்தில் (கருவளர்சேரி) வளர்ச்சியும், மற்றொரு இடத்தில் (திருக்கருகாவூர்) பாதுகாப்பு வரமும் கிடைக்கும்.

கருவளர்சேரி திருத்தலத்துக்கு வந்து அகிலாண்டேஸ்வரி அம்பிகையை வழிபடுவோருக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் கர்ப்பம் தரித்த பெண்களும் இங்கு வந்து வழிபடுவதால், சிக்கலற்ற பிரசவம் நடக்கும். திருமணமாகி வெகுநாட்களாகியும் குழந்தையில்லாமல் ஏங்கும் பெண்கள் இக்கோவிலுக்கு வந்து அன்னையை மனமுருக வேண்டி, படி பூஜை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபடவேண்டும். வழிபாட்டுக்குப் பின் சன்னிதியில் பூஜை செய்த மஞ்சள் கிழங்கினை வாங்கி வந்து, தொடர்ந்து பூஜித்து வர வேண்டும். இங்கு தரப்படும் மஞ்சள் பிரசாதம் சக்தி வாய்ந்தது. இப்படிச் செய்தால், தடைகளை எல்லாம் நீக்கி, கருவளர் நாயகி மகப்பேற்றை அருள்வாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கர்ப்பிணிகளும் இந்த பூஜையை செய்து பயன்பெறலாம். பூஜை செய்து வழிபட்டுச் சென்ற பெண்கள் சில மாதங்களிலேயே கருவுற்று, மீண்டும் இக்கோவிலுக்கு வந்து தொட்டில், தங்களுக்கு வளைகாப்பு நடைபெறும்போது கொடுக்கப்படும் வளையல் ஆகியவற்றை தங்கள் நேர்த்திக்கடனாக சமர்ப்பிக்கிறார்கள்.

மேலும், கருவளர்சேரிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்யும் அனைவரின் உடல் ரீதியாக உள்ள தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
ஆதனூர் வீர சுதர்சன ஆஞ்சநேயர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஆதனூர் வீர சுதர்சன ஆஞ்சநேயர் கோவில்

தலைக்கு மேல் சுதர்சன சக்கரத்தை தாங்கி இருக்கும் அபூர்வ ஆஞ்சநேயர்

கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ள திவ்யதேசம் ஆதனூர். இந்த திவ்ய தேசத்தில், 20 அடி நீளம், 10 அடி அகலம் கொண்ட சிறிய மண்டபத்தில், வீர சுதர்சன ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. மண்டபத்திற்கு சற்று வெளியே ஸ்ரீராமரின் பாதம் பதித்த ஒரு கல் உள்ளது. சன்னதிக்குள் நுழையும் முன், பக்தர்கள் தங்கள் பிரார்த்தனையை ஸ்ரீராமரிடம் செலுத்துகிறார்கள். மண்டபம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முன்புறப் பாதி பக்தர்கள் தரிசிக்கும் இடமாகவும், பின்புறப் பாதி ஆஞ்சநேயரின் கர்ப்பக் கிரகமாகவும் உள்ளது.

கருவறையில், வீர சுதர்சன ஆஞ்சநேயர் ஏழடி உயர திருமேனி உடையவராய், கிழக்கு நோக்கியவாறு வடக்கு நோக்கி நடக்கும் கோலத்தில் காட்சி அளிக்கிறார். ஆஞ்சநேயரின் வால் தலைக்கு மேல் சுருள் வடிவில் உயர்த்தி காணப்படுகிறது. வால் சுருளின் மையத்தில் பன்னிரண்டு இதழ்கள் கொண்ட ஒரு சக்கரம் அமைந்திருக்கின்றது. இப்படி தலைக்கு மேல் சுதர்சன சக்கரத்தை கொண்டிருக்கும் ஆஞ்சநேயரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. அவரது தலையின் மேல், நேர்த்தியாகக் கட்டப்பட்ட கேசத்தின் உச்சியில் 'ரக்கொடி' எனப்படும் ஒரு ஆபரணத்தை அணிந்திருக்கிறார். இரு காதுகளிலும் தோள்களைத் தொடும் அளவு, நீளமான குண்டலங்களை தரித்திருக்கிறார். வலது கையை உயர்த்தி அபய முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

Read More
திருமண்டங்குடி திருபுவனேசுவரர் கோவில்

திருமண்டங்குடி திருபுவனேசுவரர் கோவில்

பெண்களின் வீரத்தை போற்றும் அபூர்வ சிற்பங்கள்

கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில், கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி கிராமத்தில் திருபுவனேசுவரர் கோவில் உள்ளது. இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. பன்னிரு ஆழ்வார்களில் மிக முக்கியமானவரான தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்த திருத்தலம் இது.

பொதுவாக பல பழமையான கோவில்களில், ஆண்களின் வீரச் செயலை போற்றும் வகையிலான சிற்பங்கள் ஏராளமாக இருப்பதை காணலாம். ஆனால், இக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோமுகத்தில் ( அபிஷேகத் தீர்த்தம் வெளி வரும் பாதையில்) வேறு எந்த கோவிலிலும் இல்லாத, பெண்களின் வீரத்தை போற்றும் வகையிலான காட்சிகள் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு உள்ள சிற்பங்களில பெண்கள் கையில் ஆயுதம் ஏந்தி நிற்கிறார்கள். வனப்பகுதியில் நடக்கும் வீரமிக்க நிகழ்ச்சிகளை விவரிக்கும் வண்ணம் சிற்பங்கள் அமைந்துள்ளன. யாளி (பழங்கால விலங்கு) ஒன்று யானையை துரத்த, அந்த யானையோ ஒரு குதிரையை துரத்திக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. அக்குதிரைமீது வீரன் ஒருவன் அமர்ந்து வேட்டையாடிக் கொண்டிருக்கிறான். இக்காட்சிகளை வேட்டையாட வந்த ஒருவர் மரத்தின் மேல் அமர்ந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இவற்றிற்கிடையே தீரமிக்க ஒரு பெண் சிறிய வாள் ஒன்றை கையில் ஏந்தி காட்டுப் பன்றி ஒன்றை கழுத்துப் பகுதியில் குத்தி வீழ்த்தும் காட்சி மிக அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளது. நளின உடல் கொண்ட பெண்களின் பரத நாட்டிய அடவுகளை வெளிப்படுத்தும் சிற்பங்களும் இக்கோமுகத்தில் உள்ளன. சங்கநாதம் ஒலிக்கும் சிவ கணங்கள் சிற்பங்கள் வரிசையாக வடிவமைக்கப்பட்டு உள்ளன.

பெண்களின் கலை நயத்தையும், வீரத்தையும் அக்காலத்தில் எந்த அளவுக்கு போற்றியிருந்தால் ஒரு சிவாலயத்தின் கருவறை கோமுகியில், மக்கள் வழிபடுமிடத்திலேயே இந்த சிற்பங்களை அமைத்திருப்பார்கள் என்று எண்ண தோன்றுகிறது.

Read More
திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோவில்

சோழர்களின் போர் தெய்வம் பிடாரி ஏகவீரி எனும் அஷ்டபுஜ காளி

கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோவில். இக்கோவிலில், பிடாரி ஏகவீரி எனும் அஷ்டபுஜ காளி, அம்பாள் பெரியநாயகி சன்னதியின் வடக்குப் பகுதியில் எழுந்தருளி உள்ளார். இச்சன்னதியில், பிடாரி ஏகவீரி எனும் அஷ்டபுஜ காளி. உத்குடி ஆசனத்துடன், திருச் செவிகளில் விசேஷ குண்டலங்கள், கழுத்தில் சரப்பளி, கால்களில் சலங்கை, தொடைவரை மறைத்த சிற்றாடை என வீரமும் அழகும் நிறைந்த திருக்கோலத்தில் துடியாகக் காட்சி தருகிறான் பிடாரி ஏகவீரி. விஷ்பூர முத்திரையுடன், கனிவுடன்கூடிய கீழ்நோக்கிய பார்வையுடன் அருள்கிறாள் காளி. ஒருகாலத்தில் எல்லைத் தெய்வமாகத் தனிக்கோவிலில் திருவலஞ்சுழியில் அருள்பாலித்தவள் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். மகிஷாசுரனை வதம் செய்த காளிதேவி, ஈசனின் ஆணைப்படி இங்கு வந்து சிவபூஜை செய்தாள் என கோவில் புராணம் புராணம் கூறுகின்றது.

சோழப்பேர்ரசர்கள் ராஜ ராஜ சோழனும், அவன் மகன் ராஜேந்திர சோழனும் போர்க்களம் கிளம்பும் முன் இந்த மாகாளிக்கு வாள்,போர் ஆயுதங்களை வைத்து பூசை நடத்தி உத்தரவு வாங்கிய பின்னரே போர்க்களம் நோக்கிக் கிளம்புவார்கள். அவற்றின் மூலம் போரில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இராஜராஜன், இராஜேந்திரன் போன்ற சோழப் பேரரசர்கள் கொண்டாடிய தெய்வம் இவள். 'ஏகவீரி' என்று அழைக்கப்பட்டதாக அன்றைய கல்வெட்டுகள் தெரிவிக்கிறது. இன்றைக்கு அஷ்டபுஜ காளி என்ற பெயர் மாற்றம் பெற்று இருக்கிறாள். இராஜராஜனின் மாமியார் குந்தணன் அமுதவல்லியார், இந்த காளிக்கு நிவந்தங்கள் வழங்கியுள்ளார்.

Read More
கும்பகோணம் ராமசாமி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கும்பகோணம் ராமசாமி கோவில்

தென்னக அயோத்தி - கும்பகோணம் ராமசாமி கோவில்

சீதையும் ராமரும் திருமண கோலத்தில் ஒரே ஆசனத்தில் அருகருகே அமர்ந்து இருக்கும் அபூர்வ காட்சி

கும்பகோணம் ராமசாமி கோவில் தென்னக அயோத்தி என்னும் சிறப்பை பெற்றது. இக்கோவில் கி.பி.1600 முதல் கி.பி.1645 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த ரகுநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. கும்பகோணத்திற்கு அருகே உள்ள தாராசுரத்தில் குளம் வெட்டும்போது கிடைத்த ராமன், சீதையின் சிலைகளைத் தான் இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்தார் என்கிறது தல வரலாறு.

கருவறையில் பட்டாபிஷேகக் கோலத்தில் ராமர், சீதை, லட்சுமணன், சத்ருகனன், அனுமார் ஆகியோர் எழுந்தருளி இருக்கிறார்கள். மூலவர் இராமரும் சீதைப்பிராட்டியும் பீடத்தில் அமர்ந்திருக்க, பரதன் குடை விரிக்க, லட்சுமணன் அஞ்சலி பந்தத்துடன் நிற்க, சத்துருக்கனன் வெண்சாமரம் வீச, அனுமன் கையில் வீணையையும், சுவடியையும் ஏந்தியிருக்க காட்சி தருகின்றனர். ராமபிரான் தனது சகோதரர்களோடு எழுந்து அருளி இருக்கும் தலங்கள் மிகவும் அரிது. உத்தரப்பிரதேசம் அயோத்தி, சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் மற்றும் இத்தலத்தில் தான் நாம் இந்த அபூர்வ காட்சியை தரிசிக்க முடியும். அயோத்தியில் சீதா ராமர் பட்டாபிஷேக கோலத்தில் இருப்பர். இங்கே இருவரும் திருமண கோலத்தில் காட்சி தருகின்றனர். மேலும் ராமரும் சீதையும் ஒரே ஆசனத்தில் அருகருகே அமர்ந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். மற்ற கோவில்களில் ராமர், சீதையை தனித்தனி ஆசனத்தில் தான் காண முடியும்.

இத்தலத்தை தரிசனம் செய்தாலே குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். திருமணத் தடையுள்ள ஆண், பெண்கள் இக்காட்சி கண்டால் தடை நீங்கி என்றும் தியாக மனப்பான்மையுள்ள வாழ்க்கைத் துணையைப் பெறுவர்.

அயோத்தியில் கும்பாபிஷேகம் நடைபெறும் இன்று (22.01.2024), கும்பகோணம் ராமசாமி கோவிலில் சீதாராமருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

"ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம"

"ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்"

Read More
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில்

தினமும் குழந்தை, இளம்பெண், பெண் என மூன்று வித தோற்றங்களில் காட்சி தரும் அம்பிகை

கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருநாகேஸ்வரம். இறைவன் திருநாமம் நாகநாதசுவாமி. இத்தலத்தில் கிரிகுஜாம்பிகை மற்றும் பிறையணிவாள் நுதல் அம்மை என இரண்டு அம்மன்கள் அருள்பாலிக்கிறார்கள்.

கிரிகுஜாம்பாள் அம்பிகை தனிச் சன்னதியில் தவக்கோலத்தில் காட்சியளிக்கின்றாள். கிரிகுஜாம்பிகையின் வலதுபுறம் வீணையைக் கையில் தாங்கி சரஸ்வதியும், இடதுபுறம் கரங்களில் தாமரை மலரைத் தாங்கி லட்சுமிதேவியும் இருக்கின்றனர் . கிரிகுஜாம்பிகை காலையில் சிறுமியாகவும், மதியத்தில் இளம் பெண்ணாகவும், மாலையில் தேவியாக, பெண்ணாகவும் அலங்கரிங்கப்படுகிறார்.

கிரிகுஜாம்பிகையின் திருவடிவம் சுதையால் ஆனது என்பதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகுச் சட்டம் மட்டுமே சார்த்துகிறார்கள். மார்கழி மாதத்தில் 48 நாட்கள் புனுகு சட்டம் மட்டுமே சாற்றுவது வழக்கம். அந்நாட்களில் அம்பிகையை தரிசிக்க முடியாது. இந்நாட்களில் அம்பிகையின் சன்னதி முன்புள்ள திரைச்சீலைக்கே பூஜை நடக்கிறது. தை மாதத்தில் அம்பாளுக்கு, புனுகு காப்புத் திருவிழா நடைபெறும். தை கடைசி வெள்ளியன்று அம்மனது சன்னதி முன்மண்டபத்தில் அன்னம், காய்கறி, பழங்கள் போன்றவற்றை படைத்து சிறப்பு பூஜை நடைபெறும்.

இங்கு முத்தேவியரை வணங்கி, இவர்களை வழிபட குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை. இத்தலம் ராகுவிற்கான பரிகார தலமாகவும் விளங்குகிறது.

Read More
அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோவில்

அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோவில்

காசிக்கு இணையான காலபைரவர் தலம்

கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோவில். சப்தரிஷிகளான மரீசி, அத்திரி, புலத்தியர், பிருகு, ஆங்கிரசர், வசிஷ்டர், பரத்வாஜர் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டதால், இத்தல சிவபெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. ருத்ராட்சப் பந்தலின் கீழ் இறைவன் அமைந்துள்ளார். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில், இக்கோவிலும் ஒன்றாகும்.

புண்ணியத் தலமான காசியை காலபைரவர் க்ஷேத்திரம் என்று புராணங்கள் கூறுகின்றன. காசியில் வாழ்பவர்கள், இறைவன் திருவடியை அடையும்போது அவர்கள் எமவாதம் இன்றி முக்தியடைகின்றனர் என்பது புராணங்கள் உணர்த்தும் உண்மையாகும். ஏனெனில், காசியை அதன் எட்டுத்திக்கிலும் எட்டு விதமான பைரவர்கள் காத்து அருள்வதாக ஐதீகம். இதனால் காசி, காலபைரவர் க்ஷேத்திரம் என்று வணங்கப்படுகின்றது. 'காசிக்கு இணையான தலம் காசினி(பூமி)யில் இல்லை' என்ற முதுமொழிக்கும் இதுவே காரணமாகும்.

காசியைப் போலவே கோவில் நகரமான கும்பகோணத்தையும் எட்டு பைரவர்கள் காத்து அருள்வதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த வரிசையில் அம்மாசத்திரம் என்ற இத்தலத்தில் அருள்பாலிக்கும் காலபைரவர்,காசிக்கு இணையான பெருமையும் முக்கியத்துவமும் வாய்ந்த சக்தி வாய்ந்த மூர்த்தமாகும்.

பவிஷ்யோத்தர புராணம், காசியில் உள்ளோரின் பாவங்களையும் போக்கும் சக்தி கொண்டவராக இத்தல காலபைரவரைக் குறிப்பிடுகின்றது.

இங்கு பைரவரின் வாகனத்தின் முகம் வடக்கு நோக்கி இருப்பதால் பிதுர் தோஷங்கள் நீங்கும் என்பதும், தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பதும் ஐதீகம். மனநிலை பாதிப்பு, தீயசக்தியால் பாதிப்பு, செய்வினை தோஷங்கள், அமைதியின்மை முதலான பல துன்பங்களுக்கு தேய்பிறை அஷ்டமியில் இத்தல பைரவருக்கு வழிபாடு செய்வது நிவர்த்தி தரும்.

Read More
கும்பகோணம் சாரங்கபாணி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கும்பகோணம் சாரங்கபாணி கோவில்

சொர்க்கவாசல் இல்லாத திவ்ய தேசங்கள்

பொதுவாக எல்லா பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் அதிகாலையில் திறக்கப்படும். ஆனால் திவ்ய தேசமான கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு கிடையாது. ஏனென்றால் இந்த கோவிலில் சொர்க்கவாசல் கிடையாது. ஏனென்றால் இத்தலத்து மூலவர் சாரங்கபாணி, இந்த கோவிலுக்கு வந்து எழுந்தருளினார். இத்தலத்து தாயாரான மகாலட்சுமியின் அவதாரமான கோமளவல்லியை, பெருமாள் நேராக வைகுண்டத்திலிருந்து இந்த கோவிலுக்கு வந்து எழுந்தருளி, திருமணம் புரிந்து கொண்டார். எனவே இவரை வணங்கினாலேயே பரமபதம் கிடைத்து விடும் என்பதால், இந்த கோவிலில் சொர்க்கவாசல் கிடையாது.

இக்கோவிலில் மூலவரை தரிசிக்கும் வழியில், உத்திராயண வாசல், தட்சிணாயண வாசல் என்று இரண்டு வாசல்கள் உள்ளன. உத்திராயண வாசல் வழியே தை மாதம் முதல் ஆனி மாதம் வரையும், தட்சிணாயண வாசல் வழியே ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையும் பெருமாளை தரிசிக்க செல்ல வேண்டும். இந்த இரு வாசல்களை கடந்து சென்று பெருமாளை தரிசித்தாலே பரமபதம் கிட்டும் என்பது ஐதீகம்.

இதேபோல் திருச்சிக்கு அருகே உள்ள மற்றொரு திவ்ய தேசமான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் கிடையாது. இக்கோயில் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுகிறது. இங்கும் உத்திராயண வாசல், தட்சிணாயண வாசல் என்று இரண்டு வாசல்கள் உள்ளன.

Read More
கும்பகோணம் ஏகாம்பரேசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கும்பகோணம் ஏகாம்பரேசுவரர் கோவில்

சுமங்கலிகள் தங்கள் தாலியை அம்மனுக்கு நேர்த்திக் கடனாக செலுத்தும் கோவில்

கும்பகோணம் நாகேஸ்வரன் கீழவீதியில் அமைந்துள்ளது ஏகாம்பரேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி. அம்பிகை ருத்திராம்சம் பொருந்தியவள் என்பதால், அம்பிகைக்கு முன் சிம்மத்திற்கு பதிலாக நந்தி இருக்கின்றது.

இக்கோவிலின் திருச்சுற்றில் இராகுகால காளிகா பரமேஸ்வரிக்கு தனியாக சன்னதி உள்ளது. சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கிருக்கும் காளிகா பரமேஸ்வரி சன்னதியிலேயே கூட்டம் அலைமோதுகிறது.சன்னதியின் முன்புறம் வலப்புறம் விநாயகரும், இடப்புறம் நாகமும் காணப்படுகின்றன. கருவறையில், அசுரனை வதம் செய்யும் கோலத்தில் எட்டு கரங்களுடன் அஷ்டபுஜ காளியாக கன்னிகா பரமேஸ்வரி வீற்றிருக்கிறாள். கத்தி, கேடயம் ஆகியவை கைகளில் உள்ளன. இந்த அம்மனுக்குத்தான் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக ராகுகால வழிபாடு நடத்தப்பட்டது. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு நாட்களில் ராகு கால நேரத்தில் பரமேஸ்வரி அன்னைக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.

பிரார்த்தனை

ராகு கால காளிகா பரமேஸ்வரி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் என்று பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர். கன்னிப் பெண்கள் நல்ல கணவன் அமைய, கன்னிகா பரமேஸ்வரியை வேண்டிக் கொள்கிறார்கள். தீராத நோய்களால் அவதிப்படும் தங்கள் கணவர் குணமாக வேண்டும் என்று பெண்கள் கன்னிகா பரமேஸ்வரியிடம் பிரார்த்தனை வைக்கிறார்கள். தங்கள் கணவர் குணமானபின், தாங்கள் வேண்டியபடி தங்கள் கழுத்திலுள்ள மாங்கல்ய நாணில் உள்ள தாலியையே கழற்றி உண்டியலில் போட்டு நன்றிக் கடன் செலுத்துகின்றனர். இப்படி தாலியையே அம்மனுக்கு நேர்த்திக் கடனாக செலுத்தும் பழக்கம் இந்த கோவிலில்தான் இருக்கின்றது. குழந்தை பேறு வேண்டும் பெண்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் வெள்ளியில் செய்த சிறிய தொட்டிலை உண்டியலில் செலுத்தி தங்கள் நன்றியை தெரிவிக்கின்றனர்.

Read More
கும்பகோணம் சாரங்கபாணி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கும்பகோணம் சாரங்கபாணி கோவில்

அட்சய திருதியை - கும்பகோணம் பன்னிரெண்டு கருடசேவை உற்சவம்

ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு பிறகு வரும் 3-வது திதியான அட்சய திருதியை தினத்தில் கும்பகோணத்தில் உள்ள பன்னிரெண்டு வைணவ கோவில்களிலிருந்து, பன்னிரெண்டு கருட வாகனங்களில் உற்சவர் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு ஒரே இடத்தில் அருள்பாலிப்பது வழக்கம்.

இந்த ஆண்டு ஏப்.23-ம் தேதி கும்பகோணம் டிஎஸ்ஆர் பெரிய தெருவில், கருட வாகனங்களில் உற்சவ பெருமாள் சுவாமிகள், அங்கு அமைக்கப்பட்டுள்ள அலங்கார பந்தலில் ஒரே இடத்தில் எழுந்தருளி பொதுமக்களுக்கு காட்சி தரவுள்ளனர்.

இதில், ஸ்ரீசாரங்கபாணி, ஸ்ரீசக்கரபாணி, ஸ்ரீராமசுவாமி, ஸ்ரீஆதிவராகபெருமாள், ஸ்ரீராஜகோபாலசுவாமி, ஸ்ரீபட்டாபி ராமர், பட்டாச்சாரியார் தெரு ஸ்ரீகிருஷ்ணன், ஸ்ரீசந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், ஸ்ரீவேணு கோபால சுவாமி, ஸ்ரீவரதராஜபெருமாள் உள்ளிட்ட 12 கோயில்களின் உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளுவர். அப்போது, எதிரில் ஆஞ்சநேயர் எழுந்தருளியவுடன், அந்த பெருமாளுக்கு முன்பு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும்.

பெருமாளை கருட வாகனத்தில் சேவை சாதிக்கக் காண்போருக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம். மேலும் நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் இருந்தாலும் நீங்கும் என்பது நம்பிக்கை.

Read More
கும்பகோணம் சக்கரபாணி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கும்பகோணம் சக்கரபாணி கோவில்

மூன்று கண்கள், எட்டு கைகள் உடைய சக்கரபாணி பெருமாள்

கும்பகோணம் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில், 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சக்கரபாணி கோவிலிலும் ஒன்று. மூலவர் ஸ்ரீ சக்கரபாணி பெருமாள். தாயார் விஜயவல்லி. பெருமாள் சக்கர வடிவமான தாமரைப்பூவில், அறுகோண எந்திரத்தில் மூன்று கண்களுடனும், எட்டு ஆயுதங்களை எட்டுத் திருக்கரங்களில் ஏந்தியும் காட்சி தருகிறார். மூன்று கண்களுடன் சக்கரபாணி இருப்பதால் சிவபெருமானை போல இவருக்கும், பூ துளசி, குங்குமம் போன்றவற்றுடன் வில்வ இலைகளாலான அர்ச்சனையும் செய்யப்படுகிறது. சக்கரபாணி சுவாமிக்கென்று தனிக்கோவில் இருப்பது, இத்தலத்தில் மட்டும்தான் என்பது தனிச்சிறப்பாகும்.

தல வரலாறு

ஜலந்தராசுரன் எனும் அரக்கனை வதம் செய்ய திருமால் ஏவிய 'சக்ராயுதம்', ஜலந்தாசுரனையும் மற்ற அசுரர்களையும் வதம் செய்த பிறகு, காவிரி நதிக்கரையோரம் இருக்கும் புண்ணிய ஸ்தலமான கும்பகோணத்தில் தவம் புரிந்து கொண்டிருந்த பிரம்ம தேவரின் கைகளில் வந்து விழுந்தது. சக்தி வாய்ந்த இந்த சக்ராயுதத்தை கும்பகோணத்தில் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்தார் பிரம்ம தேவன். இந்த சக்ராயுதத்தால் இருந்து வெளிப்பட்ட ஒளி, சூரியனின் ஒளிப்பிரவாகத்தை மிஞ்சும் வகையில் இருந்ததால் பொறாமை கொண்ட சூரிய பகவான் தனது ஒளி அளவை கூட்டிய போது, ஒட்டு மொத்த சூரிய ஒளியையும் தன்னுள் உள்வாங்கிக்கொண்டது இந்த சக்ராயுதம். தனது கர்வம் நீங்க பெற்ற சூரிய பகவான், வைகாசி மாதத்தில் மூன்று கண்கள், எட்டு கைகளுடன் அக்னிப்பிழம்பாக தோன்றிய ஸ்ரீ சக்கரபாணியின் காட்சி கிடைக்க பெற்று, இழந்த தனது ஒளியை மீண்டும் பெற்றார் சூரிய பகவான். தனது நன்றியை வெளிப்படுத்த சூரிய பகவான் கட்டிய கோவில் தான் இந்த சக்கரபாணி கோவில். சூரியன் பூசித்ததால் இத்தலம் பாஸ்கர சேத்திரம் என்றழைக்கப்படுகிது.

பிரார்த்தனை

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 'மகாமகம்' திருவிழாவில் கலந்து கொண்டவர்கள், அதில் பங்கேற்ற புண்ணியத்தை இந்த கோவிலின் இறைவனான சக்கரபாணிக்கே சமர்ப்பித்து வேண்டிக் கொள்வதால் நமக்கு மிகுந்த நன்மைகளை ஸ்ரீ சக்கரபாணி உண்டாக்குவார் என்பது ஐதீகம். சூரிய பகவான் வழிபட்டு நன்மையடைந்ததால், ஜாதகத்தில் சூரியனின் நிலை பாதகமாக இருப்பவர்கள் வழிபடுவதற்கான பரிகார தலமாக இருக்கிறது. உடலில் வலது கண் சூரியனின் ஆதிக்கம் நிறைந்ததாகும் வலது கண்ணில் பிரச்சனை உள்ளவர்கள், கண் பார்வை கோளாறுகள் உள்ளவர்களும் இந்த ஆலய இறைவனான ஸ்ரீசக்கரபாணியை வழிபடுவதால் மேற்கூறிய பிரச்சனைகள் நீங்கும்.

ஜாதகத்தில் ஏழரை சனி, அஷ்டம சனி, ராகு – கேது கிரகங்களின் பாதகமான நிலை போன்றவற்றால் கஷ்டங்களை அனுபவிப்பவர்கள், இங்கு வந்து வழிபட்டு நன்மைகளை பெறலாம். சுதர்சன ஹோம பூஜையை, இக்கோவிலில் செய்பவர்களுக்கு எதிரிகள் தொல்லை, துஷ்ட சக்திகள் பாதிப்பு ஆகியவை நீங்கி சுபிட்சங்கள் ஏற்படும்.

Read More
கும்பகோணம் நாகேஸ்வரர்  கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில்

காய்ச்சல் நீங்க மிளகு ரசம் சாதமும், பருப்புத் துவையலும் நைவேத்தியமாக படைக்கப்படும் ஜுரஹர விநாயகர்

கும்பகோணம் நகரின் மத்தியில் அமைந்துள்ள தேவாரத்தலம் நாகேஸ்வரர் கோவில். இக்கோவில் குடந்தைக் கீழ்க்கோட்டம் என்று அழைக்கப்படுகிறது. இங்கே ஜுரஹர விநாயகர் எழுந்தருளியிருக்கிறார்.

உஷ்ண சம்பந்தமான நோய்கள் நீங்குவதற்கு, இங்கே வந்து ஜுரஹர விநாயகருக்கு அபிஷேகம் செய்து, மிளகு ரசம் சாதமும், பருப்புத் துவையலும் நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள். வெப்ப நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து பரிகாரம் செய்யும் போது மட்டுமே மிளகு ரசம் சாதம், துவையல் நைவேத்தியம். மற்ற நாள்களில் சாதாரண நைவேத்தியமே படைக்கப்படுகிறது. இந்தப் பிரார்த்தனையை ஞாயிற்றுக்கிழமையில் செய்வது சிறப்பு. அந்நாளில் வர இயலாதவர்கள், வேறு ஏதேனும் ஒரு நாள் வந்து ஜுரஹர விநாயகருக்கு அர்ச்சனை செய்து, காய்ச்சல் நீங்க வேண்டிக்கொண்டு, வணங்கிச் சென்றாலும் நல்லது.

Read More
தேப்பெருமாநல்லூர் விசுவநாத சுவாமி கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

தேப்பெருமாநல்லூர் விசுவநாத சுவாமி கோவில்

கபால மாலையும், ஒட்டியாணமும் அணிந்த கபால கணபதி

கும்பகோணத்திற்கு அருகே, சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில், திருவிடைமருதூர் அருகே உள்ள தலம் தேப்பெருமாநல்லூர். இறைவன் திருநாமம் விசுவநாத சுவாமி. இறைவியின் திருநாமம் வேதாந்த நாயகி. இக்கோவில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாகும்.

இக்கோவிலின் கன்னி மூலையில், தனி சன்னிதியில் கபால கணபதி எழுந்தருளியுள்ளார் . இவர் கழுத்தில் மண்டையோடுகள் மாலையாக அணி செய்கின்றன. இந்த கபால கணபதியின் கண்கள் யானை முகத்திற்கு உள்ளது போல் முகத்தின் பக்கவாட்டில் இல்லாமல், மனிதர்களுக்கு இருப்பது போல் முகத்தின் நடுவில் உள்ளது. மேலும், இவரது கை, கால் விரல்கள் மனித விரல்களைப் போல் நீண்டுள்ளது. மனிதனுக்குத் தெரிவது போல், இவர் உடலில் நரம்புகள் தெரிகின்றன. இடுப்பில் கபால மாலையை அணிந்திருக்கிறார்.

ஒரு மகா பிரளய காலத்தில், இந்தப் பூவுலகமே நீரில் அமிழ்ந்தபோது, இத்தலம் மட்டும் மூழ்காமல் வெளியே தெரிந்தது. இதனைக் கண்டு திகைத்த நான்முகன், தன் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள விநாயகரை தியானித்தார். அவர் முன் தோன்றிய விநாயகர், இத்தலம் புனிதமானது. இங்கே சிவபெருமான் எழுந்தருளப்போகிறார். மறுபிறவி இல்லாத புனிதருக்குதான் இத்தல ஈசனை வழிபடும் பாக்கியம் கிட்டும். ஈசனுடன், அன்னையும் நானும் இத்தலத்தில் எழுந்தருள்வோம். அப்போது என் கண்கள், மனித கண்கள் போல நேராகக் காட்சி தரும்; என் நகங்கள், நரம்புகள் எல்லாம் மனித உறுப்புகள் போலவே இருக்கும். அந்த வேளையில் அஷ்டதிக் பாலகர்களை மண்டை ஓடு மாலைகளாக மாற்றி, என் இடுப்பில் ஒட்டியாணமாக அணிவேன். என்னை வழிபடுபவர்களுக்கு அவர்கள் செய்த பாவங்களை நிவர்த்தி செய்து சகல பாக்கியங்களையும் அளிப்பேன் என்று திருவாய் மலர்ந்தருளினார். இந்த கபால விநாயகருக்கு சந்தன அபிஷேகம் செய்யும் போது, அவரது இடுப்பில் உள்ள கபால ஒட்டியாணத்தை தரிசிக்கலாம்.

இவரை வழிபட சகல பாவங்களும் நீங்கி, எடுத்த காரியம் முழு வெற்றி பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

1. பழைய சோற்றை நிவேதனமாக ஏற்றுக் கொள்ளும் அன்னதான தட்சிணாமூர்த்தி 

https://www.alayathuligal.com/blog/8b87el97d7m4g5rnrjpx7l82wtsxy2-gcz2h

2. நந்தியெம்பெருமான் வலதுக்காது மடங்கி இருக்கும் அபூர்வத் தோற்றம்

https://www.alayathuligal.com/blog/8b87el97d7m4g5rnrjpx7l82wtsxy2

3. சிவபெருமானுக்கு ருத்ராட்ச மணி கவசம் சாத்தப்படும் தலம்

https://www.alayathuligal.com/blog/lc5e8xag9et35fe4jwj8llpwtt9f85

Read More
கும்பகோணம் ஆதிவராகப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கும்பகோணம் ஆதிவராகப் பெருமாள் கோவில்

நிலம், வீடு தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் பெருமாள்

கும்பகோணத்தின் மையப்பகுதியில், சக்கரபாணி கோவிலுக்கு தென்மேற்கில், ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது, மிகப் பழமையான ஆதிவராகப் பெருமாள் கோவில். இதன் அருகிலேயே வராக விநாயகராகிய கரும்பாயிரம் பிள்ளையார் கோவிலும் உள்ளது.

இக்கோயிலில் உள்ள மூலவர் ஆதிவராகப்பெருமாள் ஆவார். தாயார் அம்புஜவல்லி.

உலகில் முதலில் தோன்றிய இடம் 'வராகபுரி' என்னும் கும்பகோணம் என்று இந்தக் கோவில் தல புராணம் சொல்கிறது. எனவே முதலில் இந்தக் கோவிலில் உள்ள ஆதிவராகப் பெருமாளை வழிபட்ட பிறகே, அனைத்து தெய்வங்களையும் வழிபட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா உண்டாவதற்கு முன்பாகவே இவர், இத்தலத்தில் எழுந்தருளியிருந்தார். எனவே இவரை, 'ஆதிவராகர்' என்று அழைக்கின்றனர். இவரே இங்குள்ள பெருமாள்களுக்கெல்லாம் முந்தியவர். மாசிமகத் திருவிழாவின்போது, கும்பகோணத்திலுள்ள சாரங்கபாணி, சக்கரபாணி, வரதராஜர், ராஜகோபாலர் மற்றும் இத்தலத்து மூர்த்தி ஆகிய ஐவரும் காவிரிக்கரைக்கு தீர்த்த நீராட எழுந்தருளுகின்றனர்.

மூலஸ்தானத்தில் சுவாமி, பூமாதேவியை இடது மடியில் அமர்த்திய கோலத்தில் காட்சி தருகிறார். பூமாதேவி திருமாலை வணங்கியபடி இருக்கிறாள். மூலவர் ஆதிவராகப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் இருக்க, அவருக்கு முன்பாக உற்சவர் நின்றபடி இருக்கிறார். உற்சவர் ஆதிவராகர், தனது இடது பாதத்தை ஆதிசேஷன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். சுவாமி முன்பாக 'வராக சாளக்கிராமம்' உள்ளது. இதில் சங்கு, சக்கர ரேகைகள் உள்ளன.

தல வரலாறு

வராகத்தின் (பன்றி) முகத்தோடு விளங்குவதால் வராகப் பெருமாள் என்ற பெயர் பெற்றார். ஒருசமயம் இரண்யாட்சன் என்னும் அசுரன், பூமியை பாதாள உலகிற்குள் எடுத்துச்சென்று மறைத்து வைத்தான். தன்னை மீட்கும்படி, பூமாதேவி திருமாலிடம் வேண்டினாள். திருமால் வராக அவதாரம் எடுத்து பாதாளத்திற்குள் சென்று பூமியை மீட்டு வந்தார். இவரே இத்தலத்தில் வராகமூர்த்தியாக அருள்புரிகிறார்.

கோரைக்கிழங்கு மாவுருண்டை பிரசாதம்

தினமும் ஆதிவராகப் பெருமாளுக்கு அர்த்தஜாம பூஜையின்போது, கோரைக்கிழங்கு மாவுருண்டையை நைவேத்யமாக படைக்கிறார்கள். பாய் நெய்வதற்குரிய நாணல் புல்லின் அடியில் முளைப்பது கோரைக்கிழங்கு. இந்தக்கிழங்கை பொடித்து, அதனுடன் அரிசி மாவு, சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து உருண்டையாகப் பிடித்து வைப்பர். மறுநாள் காலையில் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். பூமியை மீட்டு வந்த பெருமாள் என்பதால். பூமிக்கு கீழே விளையும் கிழங்கு கலந்த நைவேத்யம் இவருக்கு படைக்கப்படுகிறது.

ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் சுவாமியை வணங்கி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். நிலம், வீடு தொடர்பான பிரச்னைகள் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

Read More
தேப்பெருமாநல்லூர் விசுவநாத சுவாமி கோவில்

தேப்பெருமாநல்லூர் விசுவநாத சுவாமி கோவில்

பழைய சோற்றை நிவேதனமாக ஏற்றுக் கொள்ளும் அன்னதான தட்சிணாமூர்த்தி

கும்பகோணத்திற்கு அருகே, சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலம் தேப்பெருமாநல்லூர். இறைவன் திருநாமம் விசுவநாத சுவாமி. இறைவியின் திருநாமம் வேதாந்த நாயகி. யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர்கள்தான் இக்கோவிலுக்கு வரமுடியும்; சுவாமியைத் தரிசிக்க முடியும் என்பது நம்பிக்கை.

இக்கோவிலின் தெற்குப் பகுதியில் உள்ள சந்நிதியில் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். இவர் காலடியில் முனிவர்கள் இல்லை. அதற்கு பதில் நாகம் ஒன்று படம் எடுத்திருக்கும் காட்சியை தரிசிக்கலாம். இவரை அன்னதான தட்சிணாமூர்த்தி என்பர். இவரை தரிசித்தால் சாபங்கள் நீங்கும்; கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க லாம். இவருக்கு பழைய சோறு (அதாவது முதல் நாள் சமைத்து இரவு தண்ணீர் ஊற்றிய அன்னம்) நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. இவரை மனதார வழிபட்டால் பசித்த நேரத்தில் உணவு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

1. நந்தியெம்பெருமான் வலதுக்காது மடங்கி இருக்கும் அபூர்வத் தோற்றம்

https://www.alayathuligal.com/blog/8b87el97d7m4g5rnrjpx7l82wtsxy2

2. சிவபெருமானுக்கு ருத்ராட்ச மணி கவசம் சாத்தப்படும் தலம்

https://www.alayathuligal.com/blog/lc5e8xag9et35fe4jwj8llpwtt9f85

Read More
தேப்பெருமாநல்லூர் விசுவநாத சுவாமி கோவில்

தேப்பெருமாநல்லூர் விசுவநாத சுவாமி கோவில்

நந்தியெம்பெருமான் வலதுக்காது மடங்கி இருக்கும் அபூர்வத் தோற்றம்

கும்பகோணத்திற்கு அருகே, சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலம் தேப்பெருமாநல்லூர். இறைவன் திருநாமம் விசுவநாத சுவாமி. இறைவியின் திருநாமம் வேதாந்த நாயகி.

இக்கோவிலின் மகா மண்டபத்திலிருந்து கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால் நந்தியெம்பெருமான் காட்சி தருகிறார். இங்குள்ள நந்தி பெருமானுக்கு ஒரு பக்க காது சிறியதாகக் காட்சியளிக்கின்றது. பிரளய காலத்தில் உலகமே மூழ்கியபோது இத்தலம் மட்டும் தண்ணீரில் மூழ்காமல் வெளியே தெரிந்தது. அப்போது பிரம்மா இத்தலத்தில் இறங்கிப் பார்த்தார். அங்கே விசுவநாத சுவாமி எழுந்தருளியிருப்பதைக் கண்டு வழிபட்டார். ஈசன் அப்போது ஜோதிர்லிங்கமாய் காட்சி கொடுத்தார்.

இந்த நிலையில் பிரளயத்தில் சிக்கிக் கொண்ட நந்தி இறைவனைத் தேடி இத்தலத்திற்கு வேகமாக வந்தது. அப்போது அது கால் சறுக்கி ஒரு பக்கமாக விழுந்துவிடவே, அதன் வலதுக்காது மடங்கி உள்நோக்கிச் சென்று விட்டது. இதனால் வருந்திய நந்தி இறைவனை நோக்க, நந்தியின் உள்ளப் போக்கை அறிந்த இறைவன், 'நந்தியே! வருந்தாதே. யார் ஒருவர் தங்கள் குறைகளை உன் வலக் காது இருந்த பக்கம் சொல்கிறார்களோ, அதனை நான் உடனே நிவர்த்தி செய்வேன்' என்று ஆறுதல் கூறினார். அதன்படி, இந்த நந்தியின் வலக்காதுப் பக்கம் தங்கள் குறைகளைக் கூறினால் அது நிவர்த்தி ஆகி விடுகிறது என்கிறார்கள்.

ருத்திராட்சம் பிரசாதமாகத் தரப்படும் தலம்

இக்கோவிலில் மாதம்தோறும் நடைபெறும் பிரதோஷ வழிபாடு பிரசித்தி பெற்றதாகும். நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. பிரதோஷ காலங்களில் சிவபெருமான் ருத்ராட்சக் கவசம் சாற்றப்பட்டு காட்சி அளிப்பது பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக அமைகின்றது எனப் பக்தர்கள் கூறுகின்றனர். மேலும் பிரதோஷ தினங்களிலும், மகா சிவராத்திரி போன்ற விசேஷ தினங்களிலும் ருத்திராட்சம் பிரசாதமாகத் தரப்படுவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

சிவபெருமானுக்கு ருத்ராட்ச மணி கவசம் சாத்தப்படும் தலம்

https://www.alayathuligal.com/blog/lc5e8xag9et35fe4jwj8llpwtt9f85

Read More
கும்பேஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கும்பேஸ்வரர் கோவில்

கும்பகோணம் மங்களாம்பிகை அம்மன்

அம்மனின் சக்தி பீட வரிசையில், குடந்தை கும்பேஸ்வரர் கோவிலில் மங்களாம்பிகை அம்மன், விஷ்ணு சக்தி பீடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்தலம் மந்திரிணி சக்தி பீடம் என்று அழைக்கப்படுகிறது.

கும்பேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியிருக்கும் அம்பாளுக்கு மங்களநாயகி, மந்திரபீட நலத்தாள், மங்களாம்பிகை ஆகிய திருநாமங்கள் உண்டு. திருஞானசம்பந்தர் தனது பாடலில் மங்களாம்பிகையை 'வளர் மங்கை' என்று அழைக்கிறார். சிவபெருமான் பார்வதி தேவிக்கு தனது திருமேனியில் பாதியை வழங்கினார். அதே போல் தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை மங்களாம்பிகைக்கு வழங்கியுள்ளார். அதனால் மங்களாம்பிகை 'மந்திரபீடேஸ்வரி' என்றும் அழைக்கப்படுகிறார். மஞ்சள் பட்டுடுத்தி, மஞ்சள் பூசி, குங்குமத் திலகமிட்டு, அம்பாள் அருள்பாலிப்பதைக் காண பக்தர்கள் எப்போதும் இந்த கோயிலில் குவிவது வழக்கம்.

கிழக்கு நோக்கிய தனி சந்நிதியில் நான்கு கரங்களுடன் மங்களாம்பிகை அருள்பாலிக்கிறார். வலது மேல்கரத்தில் அமுதக் கலசத்தையும், இடது மேல்கரத்தில் அட்சமாலையையும் தாங்கி அருள்பாலிக்கிறார். வலது கீழ் கரம் அபயகரமாகவும், இடது கீழ்க்கரம் ஊர்வ அஸ்தமாகவும் அமைந்துள்ளன.

கல்வியில் சிறந்து விளங்க, தொழிலில் மேம்பட, திருமணத் தடை நீங்க, குழந்தை வரம் கிடைக்க, செல்வம் பெருக இத்தலத்தில் பக்தர்கள் கூடி மங்களநாயகிக்கு வழிபாடு செய்வது வழக்கம். விநாயகப் பெருமான் அம்மையும் அப்பனுமே உலகம் என்று கூறுவதைப் போன்று, இக்கோயிலில் கும்பேஸ்வரர், மங்களாம்பிகை இருவரையும் சேர்த்தே வலம் வருவது போன்ற பிரகார அமைப்பு உள்ளது.

ஸ்ரீ மங்களாம்பிகை பிள்ளைத் தமிழ்

பொன்னூஞ்சல், நீராடல், அம்மானை, அம்புலி, வாரானை, முத்தம், சப்பாணி, தாலம், செங்கீரை, காப்பு ஆகிய பருவங்களை விளக்கி, மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, திருக்குடந்தை மங்களாம்பிகை மீது பிள்ளைத் தமிழ் இலக்கியத்தை அருளியுள்ளார்.

தளர்நடை பயிலும் குழந்தையாக மங்களாம்பிகையை பாவித்துப் பாடும்போது, "கண்டோர் பவத் துன்பு காணார்களாய்ப் பருங்களி ஆர்கலிக் கண்மூழ்கி" என்கிறார். மங்களாம்பிகையைக் கண்டாலே, பிறவிக்கடலில் மூழ்கிப் படும் துயரம் அனைத்தும் பறந்தோடும் என்கிறார். பேரானந்தம் கொண்டு உள்ளம் கடல்போல் ஆராவரிக்கும் என்று கூறி மகிழ்கிறார்.

சிவராத்திரி, நவராத்திரி, பிரதோஷ தினங்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும். நவராத்திரி தினங்களில் கோயில் முழுவதும், கொலுவைக்கப்படுவதும் அதைக் காண பல ஊர்களிலிருந்து பக்தர்கள் இங்கு வருவதும் வழக்கம்.

ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி இரண்டாம் நாளன்று வெளியான பதிவு

மதுரை மீனாட்சி அம்மன்

https://www.alayathuligal.com/blog/l6eks5ceh4mjgbcx42w4tamp656mnn

Read More
சூரியகோடீசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சூரியகோடீசுவரர் கோவில்

பக்தர்களை எழுந்து வந்து வரவேற்கும் அபூர்வத் தோற்றத்தில் துர்க்கை அம்மன்

கும்பகோணத்தில் இருந்து, கஞ்சனூர், திருலோகி கிராமங்களை அடுத்து 15.கி.மீ தொலைவில், சூரியனார் கோவிலுக்கு அருகே மைந்துள்ளது கீழசூரியமூலை என்ற தலம். இறைவன் திருநாமம் சூரியகோடீசுவரர். இறைவி பவளக்கொடி.

இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் துர்க்கையின் ஒரு பாதத்தில் மட்டும் மெட்டி உள்ளது. ​மேலும் துர்க்கையின் இரு பாதங்களும் ஒன்றுக்கொன்று நேரான நிலையில் இல்லை. அதாவது துர்க்கை அம்மன் தன் வலது காலை சற்று முன்பக்கமாக நீட்டி வைத்துக்கொண்டு காட்சி தருகிறாள். இந்த தோற்றமானது, தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களை துர்க்கை அம்மன் வலது காலை முன் வைத்து எழுந்து, அவளே​ முன்னால் வந்து வரவேற்ப​து போல தோன்று​ம். துர்க்கை அம்மனின் இந்த தோற்றத்தை நாம் வேற எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

வல​து காலில் ​ ஆறு விரல்கள் உள்ள மகாலட்சுமி

இக்கோவிலின் குபேர மூலையில், பத்மாசன​த்தில் வீற்றிருக்கும் மகாலட்சுமியின் வல​து காலில் ​ ஆறு விரல்கள் அமைந்துள்ளன. 'ஆறு' என்பது சுக்கிரனுக்குரிய எண் ஆகும்.​ எனவே சுக்கிரனின் ​ சக்தி அவளிடம் ​பூரணமாக உள்ளது. எப்போதும் சுக்கிரனுடைய அனுக்கிரகத்திலேயே இருப்பதால், அவளை ​வழிபடும் பக்தர்களுக்கு செல்வத்தை வாரி வழங்குபவளாக விளங்குகின்றாள்.

Read More
கரும்பாயிரம் கொண்ட விநாயகர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

கரும்பாயிரம் கொண்ட விநாயகர் கோவில்

சாரமற்ற கரும்பை இனிப்பாக மாற்றிய விநாயகர்

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ளது கரும்பாயிரம் கொண்ட விநாயகர் கோவில். கும்பகோணத்திற்கு ஆதியில் வராஹபுரி என்று பெயர் இருந்தது. வராஹ அவதாரத்தின்போது பகவான் பிள்ளையாரை வேண்டிக் கொண்டே பூமாதேவியை ஹிரண்யாட்சனிடமிருந்து மீட்டார். அதனால் இந்தப் பிள்ளையாருக்கு வராஹப் பிள்ளையார் என்ற பெயரும் உண்டு.

கும்பகோணம் நகரத்தின் மூத்த பிள்ளையாரான இவருக்கு கரும்பாயிரம் பிள்ளையார் என்ற பெயர் ஏற்பட்டதற்கு பின்னணியில் ஒரு சுவையான கதை உள்ளது.

வணிகன் ஒருவன் கட்டுக்கட்டாக கரும்புகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு இந்த ஆலயத்தின் வழியாக சென்று கொண்டிருந்தான். அவனிடம் திருவிளையாடல் புரிய நினைத்த பிள்ளையார் ஒரு சிறு பாலகனாக வேடம் தரித்து அவனிடம் ஒரு கரும்பு கொடுக்கும்படி கேட்டார். வணிகன் கரும்பை கொடுக்க மறுத்தான். அங்கிருந்தவர்கள் பாலகன் விநாயகருக்காக வணிகனிடம் பரிந்துரை செய்தார்கள். அவர்களுக்கு பதில் அளித்த வணிகன், இக்கரும்புகள் ஒடித்து உறிஞ்சினால் கரிக்கும். வெல்லமாக மாற்றிய பிறகு தான் இனிக்கும் என்றான்.பாலகன் விநாயகரும் கோயிலுக்குள் சென்று மறைந்து விட்டார். அந்த சமயத்தில் இன்னொரு ஆச்சரியமும் நிகழ்ந்தது. தித்திக்கும் சுவையுடன் இருந்த கரும்பெல்லாம் சாறற்ற சக்கையாக மாறின. இதைக் கண்ட வணிகன் அதிர்ச்சி அடைந்தான். விநாயகர் கோயிலுக்குள் சென்று தன் தவறை மன்னிக்கும்படி வேண்டினான். அவனை மன்னித்த விநாயகர், மீண்டும் சக்கை கரும்பை இனிப்பாக மாற்றினார். ஆயிரம் கரும்புகளுக்குள்ளும் இனிப்புச் சுவை ஊறியது. அன்று முதல் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் என்று அழைக்கப்பட்டார்,

Read More
சாரங்கபாணி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

சாரங்கபாணி கோவில்

மாமனார் வீட்டோடு மாப்பிள்ளை

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் தாயாரின் திருநாமம் கோமளவல்லி ஆகும். இந்த தலம் தாயாரின் பிறந்த வீடு ஆகும். திருமால், அவளைத் திருமணம் செய்து, வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. அதற்கேற்றாற்போல், தாயார் சன்னதிக்கு சென்ற பிறகே, பெருமாள் சன்னதிக்குள் செல்லும் வகையில் கோவில் வடிவமைப்பும் செய்யப்பட்டிருக்கிறது. இக்கோவிலில் காலை நடைதிறக்கும் போது, சுவாமி சன்னதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, கோமளவல்லி தாயார் சன்னதி முன்பாக நடத்துகின்றனர். தாயாரே பிரதானம் என்பதால், கோமாதா பூஜை, தாயார் சன்னதியில் நடத்தப்பட்ட பிறகே, சுவாமி சன்னதியில் நடக்கிறது.

Read More