சுப்பிரமணிய சுவாமி கோயில்
வள்ளியும் தெய்வானையும் ஒருவராக இணைந்து காட்சி தரும் திருப்புகழ் தலம்
முருகனின், ஆறுபடை வீடுகளில் 5 ஆம் படைவீடாக திகழும் திருத்தணி, அரக்கோணத்தில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
திருமாலின் மகள்களான அமுதவல்லி, சுந்தரவல்லி இவர்களில் அமுதவல்லி, தெய்வானை என்ற பெயரில் இந்திரனிடமும், சுந்தரவல்லி வள்ளியாக நம்பிராஜனிடமும் வளர்ந்து முருகனை மணந்தனர். சகோதரிகளான இவ்விருவரும் வேறில்லை என்பதன் அடிப்படையில் இங்கு வள்ளியும் தெய்வானையும், ஒரே அம்பிகையாக, கஜவள்ளி என்னும் பெயரில் அருள்கிறார்கள். கஜவள்ளி வலது கையில் வள்ளிக்குரிய தாமரையும், இடக்கையில் தெய்வானைக்கு உரிய நீலோத்பவ மலரும் வைத்திருக்கிறாள்.
பக்தவத்சல பெருமாள் கோவில்
தாயார் சன்னதியில் அமைந்திருக்கும் தேன்கூடு
திருவாரூரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திவ்ய தேசம், திருக்கண்ணமங்கை. இத்தலத்து தாயார், கண்ணமங்கை நாயகி சன்னதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.
பெருமாளையும் தாயாரையும் கல்யாண கோலத்திலேயே தரிசிக்க வேண்டுமென்று, இத்தலத்திற்கு வந்த தேவர்களும் மகரிஷிகளும் விரும்பியதால், அவர்கள் தேனீக்கள் வடிவில் இங்கே தங்கியிருக்கிறார்கள் என்று தல புராணம் கூறுகிறது.
காளிகா பரமேஸ்வரி கோவில்
திருமேனியில் தாலிச் சரடுடன் காட்சிதரும் அம்மன்
திருச்சி நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது காளிகா பரமேஸ்வரி கோவில். இந்த அம்மன் அமர்ந்த நிலையில் தன் நான்கு கரங்களில் டமருகம், பாசம், சூலம், கபாலம் ஆகியவற்றை ஏந்தி காட்சி தருகிறாள். அம்மனின் கழுத்தில் திருமாங்கல்யம் துலங்குவது மிகவும் சிறப்பான அம்சமாகும். விக்கிரகத்தின் அமைப்பிலேயே தாலிச் சரடு இருப்பது வேறு எங்கும் காண இயலாத அற்புத அமைப்பாகும்.
இந்த அம்மனிடம் வேண்டிக்கொள்ளும் பெண்களுக்கு திருமணப்பேறு விரைவில் கிடைக்கிறது. திருமணம் நிச்சயம் ஆனதும் மணமகளின் தாலியை அன்னையின் பாதத்தில் வைத்து, அர்ச்சனை செய்து
பெற்றுக்கொள்ளும் வழக்கம் இங்கு உள்ளது.
நீலகண்டேஸ்வரர் கோயில்
அபிஷேக எண்ணெயை உறிஞ்சும் அதிசய சிவ லிங்கம்
தஞ்சை மாவட்டம் திருநீலக்குடியில் உள்ளது தேவாரப்பாடல் பெற்ற நீலகண்டேஸ்வரர் திருக்கோவில். இங்குள்ள சிவனுக்கு நல்லெண்ணெய் கொண்டு பிரத்யேகமாக அபிஷேகம் நடக்கிறது. தினமும் பாத்திரம் பாத்திரதமாக எவ்வளவு எண்ணெயை ஊற்றினாலும் அவ்வளவு எண்ணெயையும் இங்குள்ள சிவ லிங்கம் தன்னுள்ளே உறிஞ்சிக்கொள்கிறது. அடுத்தநாள் மீண்டும் அபிஷேகம் செய்வதற்கு முன்பு சிவ லிங்கத்தை பார்த்தால், பல வருடங்களாக எண்ணெயே தடவாதது போல் மிகவும் வறண்டு காணப்படுகிறது. சிவபெருமான் அருந்திய ஆலகால விஷம் அவர் தொண்டையிலேயே தங்கி இருப்பதால்,அந்த விஷத்தன்மையை குறைக்கவே இவருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது ஐதீகம்
மீனாட்சி அம்மன் கோவில்
முக்குறுனி விநாயகர்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், எட்டடி உயரத்தில், நான்கு திருக்கரங்களோடு அமர்ந்த கோலத்தில் பிரமாண்டமாகக் காணப்படுபவர் முக்குறுனி விநாயகர். மதுரை தெப்பக்குளத்தில், திருமலை நாயக்கரால் கண்டெடுக்கப்பட்ட இந்த விநாயகருக்கு முக்குறுணி அரிசியில் பிரம்மாண்டமான கொழுக்கட்டை தயாரித்து படைக்கிறார்கள் (ஒரு குறுணி என்பது 6 படி. முக்குறுணி என்பது 18 படி) எனவே இவர் முக்குறுணி விநாயகர் என அழைக்கப்படுகின்றார்.
சுருளிவேலப்பர் கோவில்
சுருளிமலையில் அமைந்துள்ள விபூதி குகை
தேனி மாவட்டம் கம்பம் என்ற ஊரில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவிலுள்ள சுருளிமலையில் அமைந்துள்ளது சுருளிவேலப்பர் கோவில் . இந்த கோவிலை நெடுவேள்குன்றம் என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள்.சுருளிவேலப்பர் கோவிலின் அருகே உள்ளது விபூதி குகை, இந்த விபூதி குகையில் ஈர மண் விபூதியாக மாறும் அதிசயம் நிகழ்கிறது.மேலும் இங்கு அள்ள அள்ள விபூதி வந்துகொண்டே இருக்கின்றது.
இத்தலத்தின் மூலவரான சுருளிவேலப்பர் குழந்தையில்லாதவருக்கு இறுதிக் கடன்களை செய்தார். அதனால் இறுதி காலத்தில் குழந்தை இல்லாதவர்கள் மூலவர் சுருளிவேலப்பரை தங்கள் குழந்தையாக எண்ணுகின்றனர்.
அழகிய மணவாளர் கோவில்
தாயார் மட்டும் பரமபதவாசல் கடக்கும் திவ்ய தேசம்
பெருமாள் தலங்களில் வைகுண்ட ஏகாதசியின்போது, சுவாமி சொர்க்கவாசல் கடப்பார். ஆனால், திருச்சியில் இருக்கும் திவ்ய தேசமான உறையூர் அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயிலில், தாயார் கமலவல்லி மட்டும் தனியே சொர்க்கவாசல் கடக்கிறாள். இக்கோயிலில், வைகுண்ட ஏகாதசியின்போது சொர்க்கவாசல் திறக்கப்படுவது இல்லை.
இக்கோவில் விழாக்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் விழாக்களையொட்டி நடக்கிறது.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மார்கழியில் வைகுண்டவாசல் கடந்தபின்பு, மாசியில் வரும் ஏகாதசியன்று தாயார் கமலவல்லி சொர்க்கவாசல் வழியே செல்கிறாள்.
நெல்லுக்கடை மாரியம்மன் கோவில்
தனக்கான கோவிலைத் தேர்ந்தெடுத்த மாரியம்மன்
நாகப்பட்டினத்தில் வணிகர் ஒருவர் நெல்லுக் கடை நடத்தி வந்தார். ஒருநாள் இரவு கனத்த மழை பெய்யத் தொடங்கவே, வணிகர் கடையைச் சாத்திவிட்டு வீடு திரும்பத் தயாரானார். அப்போது அங்கே வந்த ஒரு பெண்மணி இரவு அவர் கடையில் தங்கிக் கொள்ள அனுமதி கேட்டார். அந்தப் பெண்ணை தனியே தன் கடையில் தங்க வைக்க வணிகர் தயங்கினார். அதனால், அந்த பெண்மணியை கடைக்குள் வைத்து, கடையைப் பூட்டிக் கொண்டு வீடு திரும்பினார்.
மறுநாள் கடையை திறந்து பார்த்தபோது, அந்தப் பெண்மணியை காணவில்லை. மாறாக அந்தப் பெண்மணியே, கடைக்குள் அம்மனாக அமர்ந்திருந்தார். நெல்லுக்கடையே அம்மனின் கோவிலாக மாறியது. அதனால், இந்த கோவிலை, நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் என்றழைத்தார்கள்.
இக்கோவிலில் நடைபெறும் செடில் திருவிழா மிகவும் பிரபலமானது. அப்போது, பக்தர்கள் தங்களது குழந்தைகளை செடில் மரத்தில் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
ரிஷபேஸ்வரர் கோவில்
தங்க நிறமாக மாறும் நந்தி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் என்ற ஊரில், ரிஷபேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பங்குனி மாதம் மூன்றாம் நாள் மாலை சூரிய அஸ்தமனத்தின் போது, சூரிய ஒளிக்கதிர்கள் இராஜ கோபுரத்தின் மேல் பட்டு நந்தியின் மேல் விழும். அப்படி சூரிய ஒளி விழும் சில நிமிடங்கள், நந்தி தங்க நிறமாக மாறி காட்சியளிக்கும்.
தாணுமாலயன் கோவில்
பெண் தோற்றத்தில் காட்சி தரும் விநாயகர்
பெண் தோற்றத்தில் காணப்படும் விநாயகரை விநாயகி, விக்னேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி என்ற பெயர்களில் வழிபடுகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகிலுள்ள, சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில், ஒரு தூணில் விநாயகியின் சிற்பமுள்ளது. விநாயகி, அமர்ந்த கோலத்தில் வலக்காலை மடித்து, இடக்காலைத் தொங்கவிட்ட நிலையில் இருக்கின்றார். தலையில் வேலைப்பாடுடன் கூடிய அழகிய மகுடம் விளங்குகிறது. மேற்கைகளில் அங்குச, பாசம் உள்ளன. கீழ்க்கைகள் அபய, வரத ஹஸ்தங்களாக விளங்குகின்றன. கழுத்திற்குக்கீழ் பெண்ணுருவம் கொண்ட இவர், கழுத்தணியும், கால்களில் சிலம்புகளும், இடையில் புடவை அணிந்தும் காட்சி தருகிறார்.
சுப்பிரமணிய சுவாமி கோயில்
முருகப் பெருமான் தன் மனைவியருடன் சிவபூஜை செய்த திருப்புகழ் தலம்
வயலூர் முருகன் கோவில் திருச்சியில் இருந்து 9 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது. வயலூர் சுப்பிரமணிய சுவாமிக்குத் தனிப்பெருமை உண்டு. மற்றத் தலங்களில் தாய் தந்தையரை முருகப்பெருமான் தனித்து நின்று பூசை செய்திருக்க, வயலூரில் மட்டும் தெய்வயானையுடனும், வள்ளியுடனும் சேர்ந்து பூசை செய்தார்..தாய் தந்தையரை வணங்காதவர்களுக்கு இறைவனருள் கிட்டாது என்பது வேதவாக்கு. முருகப்பெருமான், இங்கு தன் கையிலுள்ள வேலால் சக்தி தீர்த்தம் அமைத்து,அதில் நீராடி தன் மனைவியருடன் பெற்றோரைப் பூசித்து வழிபட்டார்..
சாரங்கபாணி கோவில்
பெருமாள் வில்லுடன் இருக்கும் திவ்ய தேசம்
பொதுவாக பெருமாள் சங்கு, சக்கரத்துடன் மட்டும் காட்சி தருவார். ஆனால் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில்,பெருமாள் சார்ங்கம் என்னும் வில்லும் வைத்திருக்கிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் சுவாமி, உற்சவர் இருவருமே சார்ங்கம் வைத்திருப்பது விசேஷம். இதன் பெயராலேயே இவர், சார்ங்கபாணி என்று அழைக்கப்பட்டார். மூலவரிடம் இருக்கும் சார்ங்கத்தை பார்க்க முடியாது.
பாகம்பிரியாள் கோயில்
புற்றுநோயை குணப்படுத்தும் பாகம்பிரியாள்
புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள் சிவகங்கை மாவட்டம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் அம்மனை வழிபட்டால், நோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தலத்து இறைவன் திருநாமம் பழம் புற்றுநாதர். வாமன அவதாரம் எடுத்து, மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மகாவிஷ்ணு மூன்றடி மண் கேட்டார். மகாபலி அந்தத் தானத்தைக் கொடுக்க, தன் முதல் ஓரடியால் மண்ணுலகத்தையும், ஈரடியால் விண்ணுலகத்தையும் அளந்த மகாவிஷ்ணு, தனது மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து, அவனை பாதாள லோகத்துக்கு அனுப்பினார். நீதி நெறி தவறாமல், தர்மத்தின்படி ஆட்சி செய்துவந்த மகாபலியை பாதாளத்துக்கு அனுப்பிய மகாவிஷ்ணுவைத் தொடர்ந்து வந்த தர்மதேவதை, அவரின் பாதத்தில் புற்றுநோய் ஏற்பட சாபம் தந்தாள். தர்மதேவதையால் சபிக்கப்பட்ட மகாவிஷ்ணு, தனது சாபம் தீர பூவுலகில் சிவாலய தரிசனம் செய்து, திருவாடானை ஆதிரத்தினேஸ்வரரை வணங்கி, பின் ஜெயபுரம் என்கிற வெற்றியூர் தலத்தை அடைந்தார். அங்கு வாசுகி தீர்த்தத்தில் நீராடி, இறைவன் பழம்புற்று நாதரை வழிபட்டு சாபவிமோசனம் அடைந்தார். பாதத்தில் ஏற்பட்டிருந்த புற்றுநோயும் தீர்ந்தது. புற்றுநோய் தீர வாசுகி தீர்த்தத்தில் நீராடி அம்பிகையை வணங்கி தீர்த்தம் வாங்கிக் குடித்து வர குணம் அடையலாம் என்று இப்பகுதி மக்கள் இன்றும் நம்பிக்கையுடன் இத்தலம் வந்து வழிபடுகின்றனர். மரணபயத்துடன் இங்கு வருவோர், புத்துணர்வு பெற்று நம்பிக்கையுடன் செல்கின்றனர்.
கடம்பவனேசுவரர் கோயில்
கருவறையில் சிவபெருமானுடன் காட்சி தரும் சப்த கன்னியர்கள்
பொதுவாக சப்த கன்னியர்களுக்கு கோவில்களில் உபசன்னதி அமைந்திருக்கும். சில இடங்களில் சப்த கன்னியர்களுக்குத் தனியாக கோவில் அமைந்திருக்கும். ஆனால், கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில், சப்த கன்னியர்கள் மூலவர் கடம்பவனநாதரின் பின்புறம் அமர்ந்திருக்கிறார்கள். இதுபோல மூலஸ்தானத்தில் சப்த கன்னியர்கள் மற்ற தெய்வங்களுடன் இருப்பது போன்ற அமைப்பு வேறு எங்கும் காண முடியாது.
கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில்
வெட்டுடையார் காளியம்மனிடம் பக்தர்கள் செய்யும் வினோதமான முறையீடு
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் உள்ள வெட்டுடையார் காளியம்மன் தன் வலது காலை குத்துக்காலிட்டு இடது காலை தொங்கவிட்டு வலது கையில் சூலம் ஏந்திய கோலத்தில் அருள்பாலிக்கிறாள. இங்கு பக்தர்கள் மேற்கொள்ளும் பிரார்த்தனை சற்று வினோதமானது. செய்யாத தவறுக்கு பரிகாரம் தேடுவோர், தம் மீது வீண் பழி சுமத்தப்பட்டோர் ஆகியோர் இந்த அம்பாளிடம் வந்து வேண்டிக்கொள்கின்றனர் இங்கு வந்து, நான் எந்த தவறும் செய்யவில்லை என் மீது வீண் பழி சுமத்தியவர்களை பார்த்துக்கொள் என்று காசு வெட்டிப் போட்டு வேண்டிக்கொள்கின்றனர். தவறு செய்தவர்களை வெட்டுடையார் காளியம்மன் தக்கபடி தண்டிப்பாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இப்படி வெட்டிப் போடப்பட்ட காசுகள், சன்னதிக்குப் பின்புறம் உள்ள பீடத்தில் ஏராளமாக இருக்கின்றன. ஏவல், பில்லி சூனியங்களையும், கண் திருஷ்டிகளையும் நீக்குபவளாக இங்குள்ள வெட்டுடையார் காளியம்மன் இருக்கின்றாள்..
வேணுகோபாலசுவாமி கோயில்
குழலூதும் அழகிய ஶ்ரீவேணுகோபாலன்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, வெங்கடாம்பேட்டை. இத்தலத்திலுள்ள, வேணுகோபாலசுவாமி கோவிலில், பெருமாள் நின்ற திருக்கோலத்தில், ஶ்ரீபாமா ருக்மணி சமேத ஶ்ரீவேணுகோபாலனாக அருள்பாலிக்கிறார். சுமாா் 6 அடி உயரத்தில், இருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், மற்ற இருக்கரங்களில் புல்லாங்குழல் பற்றி, வலது திருப்பாதத்தை சற்றே மடித்து, ஒய்யாரமாகக் காட்சி தரும் ஶ்ரீவேணுகோபாலனின் எழிற் கோலம் நம்மைப் பரவசப்படுத்தும்..மூங்கிலால் வேயப்பட்டதைப் போன்ற அழகிய புல்லாங்குழலில் வேணுகோபாலன் தன் விரல்களை லாவகமாக அதன் துளைகளில் பதித்து, கன்னங்கள் குவிய தன் திருப்பவளச் செவ்வாயால் குழலூதும் பேரழகுக் காட்சியைக் காண இரு கண்கள் போதாது.
கொடுங்குன்றநாதர் கோயில்
வயோதிக கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான்
பிரான்மலை தலத்தில், முருகப்பெருமான் தனிச்சன்னதியில் வயோதிக கோலத்தில் காட்சி தருகிறார். வழக்கமாக முருகன் சன்னதி எதிரில் மயில் வாகனம்தான் இருக்கும். ஆனால், இவரது சன்னதி எதிரில் யானை வாகனம் இருக்கிறது. அருணகிரிநாதருக்கு இத்தலத்தில் முருகன் நடனக்காட்சி காட்டியதாக ஐதீகம்.
நெடுங்களநாதர் கோயில்
சூரியனை நோக்கி திரும்பியிருக்கும் எட்டு கிரகங்கள்
சிவாலயங்களில் பொதுவாக நவகிரகங்கள் இருக்கும் பீடத்தில் சூரியன் நடுவில் இருப்பார். அவரை சுற்றி மற்ற எட்டு கிரகங்கள் வெவ்வேறு திசைகளை நோக்கிய வண்ணம் இருப்பார்கள். ஆனால் திருச்சியை அடுத்த தேவாரப்பாடல் பெற்ற திருநெடுங்களம் நித்தியசுந்தரர் ஆலயத்தில் உள்ள நவக்கிரக சன்னதியில், சூரிய பகவான் தன் இரு தேவியருடன் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். மற்ற எட்டு கிரகங்கள், சூரியனை நோக்கி திரும்பியிருக்கிறார்கள். இப்படி சூரியனை நோக்கி உள்முகமாக திரும்பி இருப்பது ஒரு அரிதான அமைப்பாகும்.
மாணிக்கவண்ணர் கோயில்
ரிஷப வாகனத்தில் விநாயகர்
மயிலாடுதுறை அருகில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற திருவாழ்கொளிபுத்தூர் ரத்தினபுரீஸ்வரர் ஆலயத்தில் காட்சி தரும் நடன விநாயகர், ரிஷப வாகனத்தில் இருக்கிறார். இது விநாயகரின் ஓர் அபூர்வமான காட்சியாகும்,
சிவாநந்தீஸ்வரர் கோயில்
முருகப் பெருமான் ஜெப மாலை,அமுத கலசம் தாங்கி காட்சிதரும் தேவாரத் தலம்
தேவாரத் தலமான திருக்கள்ளில் கோயிலில் உள்ள முருகப் பெருமான் வலது கையில் ஜெப மாலை, இடது கையில் அமுத கலசம் ஆகியவை தாங்கி நின்ற கோலத்தில், பிரம்ம முருகன்' என்னும் திருநாமத்துடன் காட்சி தருகின்றார். முருகப் பெருமானது சன்னதி, சுவாமி சன்னதிக்கும், அம்மன் சன்னதிக்கும் இடையில் சோமாஸ்கந்த அமைப்பில் இருப்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.