திருச்சி பைரவ நாத சுவாமி கோவில்

திருச்சி பைரவ நாத சுவாமி கோவில்

திருச்சி மலைக்கோட்டையின் காவல் தெய்வம்

சிவபெருமானுடைய ஐந்து குமாரர்கள் விநாயகர், முருகன், சாஸ்தா, வீரபத்திரர், பைரவர் ஆகியோர் ஆவர். இவர்களை பஞ்ச குமாரர்கள் என்று அழைப்பர். இத்தகைய சிறப்பு வாய்ந்த பைரவருக்கு தமிழ்நாட்டில் ஒரு சில தலங்களில் தான் தனி கோவில்கள் உள்ளன. அப்படி பைரவருக்கு அமைந்த அபூர்வ கோவில்களில் ஒன்றுதான் திருச்சி மாநகர பெரிய கடை வீதியில் உள்ள பைரவ நாத சுவாமி கோவில். காசியில் கங்கையை பார்த்தபடி வீற்றிருக்கும் பைரவருக்கு நிகரான சக்தி வாய்ந்தவராக, இந்த பைரவ நாத சுவாமி நம்பப்படுவதால் இத்தலத்தை திருச்சியின் காசியாகவே கருதி வழிபட்டு வருகிறார்கள். இங்கு மூலவராக அருள் பாலிக்கும் பைரவர் மலைக்கோட்டையின் காவல் தெய்வமாக விளங்குகிறார்.

வழக்கமாக உக்கிரமான முகத்துடன் விளங்கும் பைரவர் இங்கு சிரித்த முகத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கருவறை முன் ஒளிவிட்டு சுடர் விடும் தீபம் 'பைரவ தீபம்' என அழைக்கப்படுகிறது. பகல், இரவு என நாள் பூராவும் இந்த தீபம் எரிந்து கொண்டேயிருக்கிறது. கருவறையின் முன், பைரவரின் வாகனம் சுவானம் (நாய்). உள்ளது. நாய்க்கு துன்பம் விளைவித்தவர்கள் அதனால் தோஷம் ஏற்படாமல் இருக்க, இங்குள்ள சுவானத்திற்கு பால் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கி, சுக வாழ்வு பெறலாம்.

மாதந்தோறும் வரும் வளர்பிறை அஷ்டமியில், பைரவருக்கு பள்ளய பூஜை எனும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அன்று பைரவரை பூக்களாலேயே அலங்காரம் செய்வர். இங்கு மூலவரை வழிபடுவதாலும் ஹோமத்தில் கலந்து கொள்வதாலும் பக்தர்கள் இழந்த பொருளை மீண்டும் பெறுவதுடன், கடன் தொல்லை, பில்லி, சூனியம், பகைகளில் இருந்து மீள முடியும்.

Read More
தஞ்சைப் பெரிய கோவில்

தஞ்சைப் பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவில் நந்திக்கு மாட்டுப் பொங்கலன்று நடைபெறும் சிறப்பு பூஜை

உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீட்டர், நீளம் 7 மீட்டர், அகலம் 3 மீட்டர் ஆகும். இதன் எடை 20 டன் ஆகும். இந்த நந்தியம் பெருமான், ஆந்திர மாநிலத்தில் உள்ள லேபாக்ஷி கோவில் நந்திக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே 2வது பெரிய நந்தி ஆவார். ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கல் தினத்தில், நந்தியம் பெருமானுக்கு பூஜைகள் மிகவும் சிறப்பாக நடக்கும். அப்போது 108 பசுக்களுக்கு 'கோ' பூஜை செய்யப்படும். பெருந்திரளான பக்தர்கள் இந்த பூஜையில் கலந்து கொள்கிறார்கள். மிகவும் விஷேசமான இந்த பூஜையையொட்டி, நந்திககு ஒரு டன் எடையில் காய்கறிகள், பழங்கள், பலவகை இனிப்புகள், பலகாரங்கள் உள்ளிட்டவைகளால் அலங்கரித்து பெருவுடையாருக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடத்தப்படும். இந்த பூஜையில் கலந்துகொண்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
திருத்தெளிசேரி பார்வதீசுவரர் கோவில்

திருத்தெளிசேரி பார்வதீசுவரர் கோவில்

சிவனும், பார்வதியும் உழவராக பணிபுரிந்து பஞ்சம் தீர்த்த தேவாரத்தலம்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நகரின் ஒரு பகுதியாக விளங்கும் தேவார தலம் திருத்தெளிசேரி. இறைவன் திருநாமம் பார்வதீசுவரர், இறைவியின் திருநாமம் பார்வதியம்மை.

ஒரு சமயம் உணவு பஞ்சம் சோழநாட்டில் சரிவர மழை பெய்யாததால் உணவு பஞ்சம் ஏற்பட்டது. நாட்டு மக்கள் பசியால் வாடினர். சோழ மன்னன் இத்தல இறைவனிடம் வேண்டினான். இதையேற்ற சிவபெருமான், பார்வதிதேவியுடன் உழவன் வேடத்தில் வந்து, நிலங்களில் விதை தெளித்துச் சென்றார். பயிர் சிறப்பாக விளைந்து பஞ்சம் நீங்கியது. இறைவனே விதை தெளித்து சென்றதால் இத்தலம் 'திருத்தெளிசேரி' ஆனது. இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் விதத்தில் இத்தலத்தில் ஆனி மாதம் விதை தெளிவு உற்சவம் நடைபெறுகின்றது. இறைவனும் இறைவியும் கோவிலுக்கு எதிரே உள்ள சூரிய தீர்த்தத்திற்கு எழுந்தருளி விதை தெளிக்கும் வைபவம் நடைபெறும். அதன் பின்னரே, விவசாயிகள் தங்கள் நிலத்தில் விதை தெளிப்பார்கள்.

பங்குனி மாதம் நடைபெறும் சூரிய பூஜை

சூரியபகவான் தனது துணைவியான சாயா தேவியிடம் அன்பு செலுத்தாத காரணத்தினால், அவள் மிகுந்த வருத்தமடைந்தாள். இதனை நாரதர் மூலம் அறிந்த அவளது தந்தை, சூரியனை சபித்து விட்டார். இதனால், சூரியன் தனது ஒளியை இழந்து வருந்தி இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி பார்வதீசுவரரை வழிபட்டான். இவனது வழிபாட்டிற்கு மகிழ்ந்த இறைவன் சாபத்தை நீக்கி அருளினார். சூரியன் வழிபட்டதால், இதனை 'பாஸ்கரத்தலம்' என்கின்றனர். . இறைவனை வழிபட்டு சூரிய பகவான் சாபம் நீங்கப் பெற்றதால், ஆண்டு தோறும் பங்குனி மாதம் 13ம் தேதி முதல் 19ம் தேதி வரை சூரிய பூஜை வெகு விமரிசையாக இங்கு கொண்டாடப்படுகிறது. அந்த நாட்களில், அஸ்தமனச் சூரியன் தன் பொன் நிறக்கதிர்களால் இறைவனை ஆராதனை செய்யும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

Read More
பிரமனூர் கைலாசநாத சுவாமி கோவில்

பிரமனூர் கைலாசநாத சுவாமி கோவில்

அபூர்வமான ஆறடி உயரமுள்ள சூரியபகவான்

மதுரையில் இருந்து 23 கிமீ தூரத்தில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்திலுள்ள பிரமனூரில் அமைந்துள்ளது கைலாசநாத சுவாமி கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி. பிரம்மதேவன் சிவனால் ஏற்பட்ட சாபம் நீங்க இத்தலத்துக்கு வந்து வழிபட்டதால், இந்த ஊருக்கு (பிரமன்+ஊர்) பிரமனூர் என பெயர் ஏற்படடது.

பல நூறு ஆண்டுகள் பழமையான கோவிலில் உள்ள சூரியபகவான் சிலை மிகவும் அபூர்வமானது. சுமார் 6 அடி உயரமுள்ள இந்த சூரியபகவான் இறைவனை பார்த்த வண்ணம், சுவாமியின் இடப்பாகம் எழுந்தருளி உள்ளார்.

பொதுவாக சூரிய பகவான், சூரியபகவான் இறைவனின் வலப்பாகத்தில் தான் இருப்பார். இத்தகைய சூரிய பகவானை, இந்தியாவின் வேறு எந்த தலத்திலும் நாம் காண்பது அரிது.

மகர சங்கராந்தி

சூரிய பகவான் மகர ராசிக்குள் பிரவேசிக்கும் தினமே மகர சங்கராந்தி ஆகும். சூரியபகவான் வான்வெளியில் வடக்கு நோக்கி தனது பயணத்தை திருப்புகின்ற நாள் தான் மகர சங்கராந்தி. சமசுகிருதத்தில் 'சங்கரமண' என்றால், 'நகரத் துவங்கு' என்று பொருள். இதுவே இவ்விழா சங்கராந்தி என அழைக்கப்பட காரணமாயிற்று. தமிழகத்தில் இந்நாள், பொங்கல் பண்டிகை எனவும், இந்தியாவின் பிற பகுதிகளில் சூரிய வழிபாடு எனும் மகர சங்கராந்தி என்ற பெயரிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் இது தானிய அறுவடையோடு ஒன்றுவதால், அறுவடை திருவிழாவாகவும், சூரியனுக்கு வரவேற்பும், நன்றியும் தெரிவிக்கும் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

Read More
கருப்பத்தூர் சிம்மபுரீசுவரர் கோவில்

கருப்பத்தூர் சிம்மபுரீசுவரர் கோவில்

பக்தர்களின் கோரிக்கைகளை கேட்பதற்காக ஒரு காது பெரிதாக உள்ள நந்தி

சிம்மபுரீசுவரர் கோயில் என்பது கரூர் மாவட்டத்திலுள்ள கருப்பத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சிம்மபுரீசுவரர் என்றும், அம்பிகை குந்தாளம்பாள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

கரூர் மாவட்டம் திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில், குளித்தலையிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது கருப்பத்தூர் சிம்மபுரீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் சிம்மபுரீசுவரர். இறைவியின் திருநாமம் குந்தாளம்பாள். நரசிம்மர் பூஜை செய்து பாவம் விலகப்பெற்ற தலம் கருப்பத்தூர். இங்குள்ள இறைவன் நரசிம்மபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டு பின் சிம்மபுரீஸ்வரர் என அழைக்கப்படலானார்

இத்தலத்து நந்தியம் பெருமான் ஒரு காதில் பெரிய துவாரமும், மற்றொரு காதினை மூடியவாறும் இருக்கிறார். இவரிடம், பக்தர்கள் தங்களின் குறைகளைச் சொன்னால், இறைவனிடம் அக்கோரிக்கைகளை நந்தி கூறுவார். இரணியனை கொன்ற பாவம் நீங்க, நரசிம்மர் இத்தலத்துக்கு வந்து வழிபட்டார். சிவபெருமான் நரசிம்மரைப் பார்த்து, 'இரணியவதம் செய்ததால் ஏற்பட்ட ரத்தக்கறை, பாவம் இரண்டும் நீங்கப் பெற வேண்டும் என நந்தியின் காது வழியே கூறு. அவைகள் நீங்கிப் பெறுவாய் ' எனக் கூற அதன்படியே நந்தியின் காதில் நரசிம்மர் கூறி, பின் பாவ விமோசனம் அடைந்தார். எனவேதான், பக்தர்கள் இத்தலத்து நந்தியின் மூலம், தங்கள் கோரிக்கைகளை இறைவனிடம் சமர்ப்பிக்கிறார்கள்.

Read More
நல்லாத்தூர் பொன்னம்பலநாதர் கோவில்

நல்லாத்தூர் பொன்னம்பலநாதர் கோவில்

சாளரத்தின் வழியாக மட்டுமே தரிசனம் தரும் சிவபெருமான்

கடலூர் மாவட்டம் நல்லாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது பொன்னம்பலநாதர் என்கிற சொர்ணபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சாளரக் கோவில் வகையைச் சேர்ந்தது. இத்தகைய கோவில்களில் கருவறைக்கு எதிரில் வாசல் கிடையாது. மூலவரை பலகணி என்னும் கருங்கல் ஜன்னல் (சாளரம்) வழியாகத்தான் தரிசிக்க முடியும். சாளர சக்கரத்திற்கு கீழ் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள் உள்ளடக்கிய சர்ப்ப யந்திரம் உள்ளது. துவாரபாலகர்களை எந்த ஒரு கோவிலிலும் வலம் வர முடியாது. ஆனால், இங்கே வலம் வரலாம். மகாமண்டபமான சொக்கட்டான் மண்டபத்தில் 24 இதழ்களுடன் கூடிய மூன்றடுக்கு தாமரை கவிழ்ந்த நிலையில் அமைந்திருப்பது சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது.

பலகணி வழியாகப் பார்க்கின்ற சிவலிங்கங்கள், அக்னியின் சொரூபம் என்று சொல்லப்படுகிறது. இவரை நேரடியாக தரிசிப்பதற்கான உடல் வலிமை பக்தனுக்கு இருக்காது. எனவே பலகணி வழியாக வழிபாடு செய்தால், அவரவர் உடல் நிலைக்கு தகுந்தாற் போல் தீக்கதிர்கள் இறைவனிடமிருந்து வெளிப்பட்டு உடல் பலமும் மனபலமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

ஆங்கிலேய கலெக்டர், தன் மகளுக்கு கண்பார்வை கிடைத்ததற்கு, காணிக்கையாக கொடுத்த ஆலயமணி

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 120 ஆண்டுகளுக்கு முன்னர், கடலூர் (அப்போதை தென்னாற்காடு மாவட்டம்) கலெக்டராக பணிபுரிந்தவர் பகோடா என்பவர். அவரது மகள் கண்பார்வையற்று இருந்தார். இவ்வாலயத்தில் தரிசனம் செய்ததால் அந்த சிறுமிக்கு கண்பார்வை கிடைத்தது. இதனால் மகிழ்ந்த ஆங்கிலேய கலெக்டர் பகோடா நஞ்சை நிலங்களை ஆலயத்திற்கு வழங்கினார். பின்னர் இங்கிலாந்து நாட்டில் உருவாக்கப்பட்ட அற்புத ஓசையுடன் கூடிய ஆலயமணியை 1907ம் ஆண்டு இந்த கோவிலுக்கு வழங்கினார். இந்த மணியின் ஓசை குறைந்தது 3 கி.மீ தொலைக்கு கேட்கும் என்பது கூடுதல் சிறப்பு.

பிரார்த்தனை

இத்தலத்தில் 5 நிமிடம் வழிபாடு செய்தால் பல்லாண்டு வழிபட்ட பலன் கிடைக்கும். சுவாசம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தட்சிணாயண (ஆடி), உத்ராயண (தை) புண்ய காலங்களில் சூரியனுக்குரிய ஆரஞ்சு நிற ஆடை, கோதுமை வகை உணவுகளை தானமாக கொடுத்து வழிபடுவது நல்ல பலன் தரும். பிதுர் தோஷத்திற்கான பரிகார தலம் இது.

Read More
அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோவில்

அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோவில்

காசிக்கு இணையான காலபைரவர் தலம்

கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோவில். சப்தரிஷிகளான மரீசி, அத்திரி, புலத்தியர், பிருகு, ஆங்கிரசர், வசிஷ்டர், பரத்வாஜர் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டதால், இத்தல சிவபெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. ருத்ராட்சப் பந்தலின் கீழ் இறைவன் அமைந்துள்ளார். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில், இக்கோவிலும் ஒன்றாகும்.

புண்ணியத் தலமான காசியை காலபைரவர் க்ஷேத்திரம் என்று புராணங்கள் கூறுகின்றன. காசியில் வாழ்பவர்கள், இறைவன் திருவடியை அடையும்போது அவர்கள் எமவாதம் இன்றி முக்தியடைகின்றனர் என்பது புராணங்கள் உணர்த்தும் உண்மையாகும். ஏனெனில், காசியை அதன் எட்டுத்திக்கிலும் எட்டு விதமான பைரவர்கள் காத்து அருள்வதாக ஐதீகம். இதனால் காசி, காலபைரவர் க்ஷேத்திரம் என்று வணங்கப்படுகின்றது. 'காசிக்கு இணையான தலம் காசினி(பூமி)யில் இல்லை' என்ற முதுமொழிக்கும் இதுவே காரணமாகும்.

காசியைப் போலவே கோவில் நகரமான கும்பகோணத்தையும் எட்டு பைரவர்கள் காத்து அருள்வதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த வரிசையில் அம்மாசத்திரம் என்ற இத்தலத்தில் அருள்பாலிக்கும் காலபைரவர்,காசிக்கு இணையான பெருமையும் முக்கியத்துவமும் வாய்ந்த சக்தி வாய்ந்த மூர்த்தமாகும்.

பவிஷ்யோத்தர புராணம், காசியில் உள்ளோரின் பாவங்களையும் போக்கும் சக்தி கொண்டவராக இத்தல காலபைரவரைக் குறிப்பிடுகின்றது.

இங்கு பைரவரின் வாகனத்தின் முகம் வடக்கு நோக்கி இருப்பதால் பிதுர் தோஷங்கள் நீங்கும் என்பதும், தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பதும் ஐதீகம். மனநிலை பாதிப்பு, தீயசக்தியால் பாதிப்பு, செய்வினை தோஷங்கள், அமைதியின்மை முதலான பல துன்பங்களுக்கு தேய்பிறை அஷ்டமியில் இத்தல பைரவருக்கு வழிபாடு செய்வது நிவர்த்தி தரும்.

Read More
வாணியம்பாடி அதிதீசுவரர் கோவில்

வாணியம்பாடி அதிதீசுவரர் கோவில்

ஊமையாக இருந்த வாணி (சரசுவதி) பாடிய தலம்

வேலூர் - ஆம்பூர் - கிருஷ்ணகிரி சாலையில், வேலூரில் இருந்து 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் வாணியம்பாடி. இத்தலத்து இறைவன் திருநாமம் அதிதீசுவரர். இறைவி பெரியநாயகி.இக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. காசியப முனிவரின் மனைவி அதிதி வழிபட்டதால் இத்தல இறைவனுக்கு அதிதீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோவிலில் சரசுவதி தனி சன்னதியில் அமர்ந்த திருக்கோலத்தில், மடியில் வீணையுடன், வலது காலைத் தொங்க விட்டு, இடது காலை மடித்து ஒய்யாரமாக வீற்றிருக்கிறாள்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மனுக்கு ஒரு சமயம் கர்வம் ஏற்பட்டது. மும்மூர்த்திகளில் தானே உயர்ந்தவன் என்று தனது மனைவியான சரசுவதி தேவியிடம் தெரிவித்தார்.அதைக் கேட்டு சரசுவதி தேவி, அவரது எண்ணம் தவறு என்று சுட்டிக் காட்டி அவரை பரிகாசம் செய்தாள். அதனால் கோபமுற்ற பிரம்மதேவன், தனது மனைவி சரசுவதியை ஊமையாகும்படி சாபமிட்டார். அதனால் வருத்தமுற்ற சரசுவதி, தனது சாபம் தீர சிருங்கேரி பகுதியில் தவம் மேற்கொண்டதாகத் தல வரலாறு கூறுகிறது.

வாணியை பிரிந்த பிரம்மா, தேவர்களைத் திருப்திப் படுத்தி யாகம் செய்து, அவர்கள் மூலம் மனைவியைக் கண்டுபிடிக்க முற்பட்டார். ஆனால், மனைவி இல்லாமல் செய்யும் யாகத்தின் பலனைத் தங்களால் பெற முடியாது என தேவர்கள் சொல்லி விட்டனர். எனவே பலதிசைகளிலும் தேடி, சிருங்கேரியில் அவளைக் கண்டுபிடித்தார். அவளை சமரசம் செய்து அழைத்துச் சென்றார். செல்லும் வழியில், இக்கோவிலில் தங்கி சிவனையும், பார்வதியையும் வழிபட்டனர். கலைவாணி தானே மானுடப் பெண் வடிவில் உணவு சமைத்து, அதிதியாக வந்த சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் உணவளித்து உபசரித்தாள். இதனால் மகிழ்ந்த சிவனும்,பார்வதியும் வாணிக்கு அருள் செய்து அவளைப் பாடும்படி கூறினர். வாணியும் பேசும் சக்தி பெற்று இனிய குரலில் பாடினாள். வாணி ஊமைத் தன்மை மாறி, உரக்கப் பாடிய இடம் வாணி பாடி என்று அழைக்கப் பெற்று பின்னாளில் மருவி வாணியம்பாடி என மாறியது.

புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்

காசிப முனிவரின் மனைவி அதிதி, புனர்பூசம் நட்சத்திரம்தோறும் இத்தலத்தில் விரதமிருந்து வழிபட்டு தேவர்களைப் பெற்றாள் என புராணங்கள் கூறுகிறது. புனர்பூச நட்சத்திரம் மற்றும் மாத பவுர்ணமி தோறும் இங்கு சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகமும், சரசுவதி தேவிக்கு வெண்ணிற நறுமணப் பூக்களால் பூச்சொரியலும் நிகழ்த்துதல் சிறப்பானதாகும். எனவே இக்கோவில் புனர்பூசம் நட்சத்திரக்காரர்களின் பரிகார தலமாக விளங்குகின்றது. புனர்பூசம் நட்சத்திரத்தில் மளிகை சாமான்கள் வாங்கினால் தானிய விருத்தி அதிகரிக்கும். அன்ன தோஷம் விலக,ஓட்டல் தொழில் செய்பவர்கள், வியாபார விருத்திக்காக அதிதீஸ்வரரை வழிபட்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறார்கள். வாணி வழிபட்டு அருள் பெற்ற தலமாதலால், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு, இங்குள்ள சரசுவதியை வழிபடுவது சிறப்பு..

Read More
திருவாரூர் தியாகராஜர் கோவில்

திருவாரூர் தியாகராஜர் கோவில்

மார்கழி திருவாதிரை பாத தரிசன விழா

திருவாரூர் தியாகராஜர் கோயில், நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. மூலவர் தியாகராஜரின் முழு மூர்த்தத்தையும் யாரும் கண்டதில்லை. தில்லை இரகசியம் போல, திருவாரூர் இரகசியம் என்பது தியாகராஜ சுவாமியின் திருமேனியாகும். இதை சோமகுல இரகசியம் என்பர். சுவாமியின் மார்பை ஸ்ரீசக்கரம் அலங்கரிப்பதால், தியாகராஜரின் முழு திருமேனியையும் நாம் தரிசிக்க முடியாது. நித்தியப்படி அவரின் திருமுக தரிசனம் மட்டுமே நமக்கு கிட்டும். மற்ற அங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டு, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டும் இருக்கும். தியாகராஜரின் பாதங்களை ஆண்டுக்கு இருமுறை மட்டுமே நாம் தரிசிக்க முடியும். அவை மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும்.

தியாகராஜர் கோவிலில் ஆண்டுதோறும் இரண்டு முறை தியாகராஜர் பாத தரிசன விழா நடைபெறுகிறது. மார்கழி மாத திருவாதிரை அன்று வலது பாத தரிசனம் விழாவும், பங்குனி உத்திரத் திருவிழாவில் பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ரபாத மகரிஷிகளுக்கு இடது பாத தரிசன நிகழ்ச்சி நடைபெறும். ஆருத்ரா தரிசனத்தின்போது இறைவன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இடது பாதத்தையும், திருவாரூரில் வலது பாதத்தையும் காட்டுவதாக ஐதீகம்.

Read More
பேரூர் பட்டீஸ்வரர் கோவில்

பேரூர் பட்டீஸ்வரர் கோவில்

மார்கழி திருவாதிரையன்று சொர்க்கவாசல் வழியாக கோவிலுக்கு திரும்பும் அம்பிகை

கோயம்புத்தூரில் இருந்து சிறுவானி செல்லும் வழியில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பேரூர் பட்டீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் பட்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் மனோன்மணி, பச்சைநாயகி.

பொதுவாக சிவலிங்க சொருபத்தில், பீட சக்தியாக மனோன்மனி அம்பாள் பாவிக்கப்படுகிறது. இந்த அம்பிகையை நாம் தரிசிக்க முடியாது. ஆனால் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் இந்த அம்பிகைக்கு தனி சன்னதி அமைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும்.

எல்லா சிவாலயங்களிலும், நடராஜர் தாண்டவமாடும் நிலையில்தான் நமக்கு காட்சி தருவார். ஆனால், தாண்டவமாடி முடியப்போகும் நிலையில், இக்கோவிலில் நடராஜர் தரிசனம் தருகிறார். மேலும், இந்த கோவிலில் இருக்கும் நடராஜரின் முகத்தில் ஒருவித குறும்பு பார்வை தெரிகிறது. கலைநயமிக்க வகையில் நடராஜர் சிலை அமைந்துள்ளது.

பொதுவாக எல்லா பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் அதிகாலையில் திறக்கப்படும். ஒரு சில, பெருமாள் எழுந்தருளி உள்ள சிவாலயங்களிலும் சொர்க்கவாசல் திறப்பது உண்டு. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலிலும் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் இருக்கின்றது. பங்குனி உத்திரம், மார்கழி திருவாதிரையன்று போன்ற விசேட தினங்களில் நடராஜர், சிவகாமி அம்பாள் ஆகியோர் வீதியுலா செல்வர். அவர்கள் கோவிலுக்குத் திரும்பும் போது, சிவகாமி அம்பாள் மட்டும் இந்த சொர்க்கவாசல் வழியாக கோவிலுக்குள் நுழைவாள். அண்ணன் மகாவிஷ்ணுவிற்குரிய வாசலில் தங்கையான அம்பிகை உரிமையுடன் நுழைவதாகச் சொல்கிறார்கள்.

Read More
சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில்

ஆருத்ரா தரிசனத்தின் சிறப்புகள்

மார்கழி மாதம் பௌர்ணமியோடு, திருவாதிரை நட்சத்திரம் கூடி வரும் நாளன்று  'ஆருத்ரா தரிசனம்' திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மார்கழி  திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம்.

 

ஆருத்ரா தரிசனம் பற்றி புராணத்தில் கூறப்பட்ட சிறப்புகள்

ஆருத்ரா தரிசனம் அன்றுதான் பார்வதி தேவியின் தவத்தில் மகிழ்ந்து அவரை மணக்க சிவபெருமான் சம்மதம் கூறிய நாளாகக் கருதி, இன்றும் கன்னிப்பெண்கள் தங்களுக்கும் நல்ல கணவன் கிடைக்க வேண்டி நோன்பை அனுஷ்டிக்கிறார்கள்.

ஆருத்ரா தரிசனம் அன்றுதான் சிவபெருமான் தேவலோகப் பசுவான காமதேனுவுக்கு  தரிசனம் தந்து அருள்புரிந்ததாக ஐதீகம்.

பதஞ்சலி முனிவரும் வியாகரபாதரும் சிதம்பரம் திருத்தலத்தில் திருவாதிரை நாளில் திருநடனத்தைக் கண்டனர்.

ஆருத்ரா தரிசனம் அன்றுதான் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை நிறைவுற்று அவர் ஈசனை தரிசித்தார்.

திருவாதிரைக்களியின் பின்னணி வரலாறு

திருவாதிரை அன்று நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். இந்த திருநாளில்  சிதம்பரத்திற்குச் சென்று நடராஜப் பெருமானை  தரிசிப்பது விசேஷமாகும்.  திருவாதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்த பட்டினத்தாரிடம் கணக்கு பிள்ளை, சேந்தனார் என்பவர். பட்டினத்தார் துறவறம்ஏற்றதும், அவரிடம் இருந்த சொத்துக்களை சேந்தனார் சூறைவிட்டார். இதை அறிந்த சோழ மன்னர், சேந்தனாரை சிறையிலடைத்தார். அதைக் கேள்விப்பட்ட பட்டினத்தார் சேந்தனாரை சிறையிலிருந்து விடுவிக்க சிவபெருமானிடம் வேண்டினார். உடனே சிறைக்கதவுகள் திறந்து சேந்தனார் விடுதலை பெற்றார்.

சிறையிலிருந்து விடுபட்ட சேந்தனார், சிதம்பரத்திற்கு வந்து அங்கு விறகு வெட்டி விற்று வாழ்க்கை நடத்தி வந்தார். அந்த வருவாயில் தினமும் ஒரு சிவனடியாருக்காவது ஒரு வேளை உணவளித்த பின்பே, தான் உண்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இப்படி இருக்கையில், சேந்தனாரின் பக்தியை சோதிக்க எண்ணினார் சிவபெருமான். ஒரு நாள் அளவுக்கதிகமாக மழை பெய்து விறகுகளை அனைத்தும் ஈரமாகியது. விறகுகள் ஈரமானதால், அதை வாங்குவதற்கும் யாரும் முன்வரவில்லை. இதனால் அன்றைய உணவுக்கு அரிசி வாங்குவதற்கு கூட கையில் பொருள் இல்லை.  இதனால், வீட்டிலிருந்த கேழ்வரகில் களி செய்து சிவனடியாருக்காக காத்திருந்தார். நேரம் சென்றதே தவிர, சிவனடியார் யாரும் வருவதாக தெரியவில்லை.

சேந்தனாரின் பக்தியை உலகுக்கு வெளிப்படுத்த விரும்பிய சிவபெருமான், ஒரு சிவனடியார் வேடத்தில் நள்ளிரவு வேளையில் சேந்தானரின் வீட்டுக் கதவை தட்டினார்.   வந்திருப்பது சிவனடியார் என்பதை அறிந்து அகமகிழ்ந்து சேந்தனார், அவருக்கு கேழ்வரகு களியை விருந்தாக படைத்தார். சிவனடியாரும் அந்த களியை மிக்க மகிழ்ச்சியோடு உண்டதோடு, எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவுக்கு தருமாறு கேட்டு வாங்கிச் சென்றார்.

இந்நிலையில், சோழ மன்னர் கண்டராதித்தர், தினசரி இரவு செய்யும் சிவபூஜையில் சிவபெருமானின் திருப்பாதச் சலங்கை ஒலி கேட்பது வழக்கம். ஆனால், அன்றிரவு, சேந்தனாரின் வீட்டுக்கு களி உண்ணச் சென்றதால் கண்டராதித்த சோழரின் சிவபூஜையில் நடராஜரின் திருப்பாதச் சலங்கை ஒலி கேட்கவில்லை. இதனால் மனம் நொந்த மன்னர், தன்னுடைய சிவ வழிபாட்டில் ஏதேனும் குறை இருக்குமோ என்று கலங்கியவாரு தூங்கச் சென்றார். கண்டராதித்த சோழ மன்னரின் கனவில் வந்த நடராஜ பெருமான், மன்னா! வருந்த வேண்டாம், இன்றிரவு யாம் சேந்தனாரது இல்லத்திற்கு களி உண்ணச் சென்றொம், அதனால் தான் உன்னுடைய சிவபூஜையில் சிலம்பு ஒலிக்கவில்லை. நாளைய தேர்த் திருவிழாவில் அந்த சேந்தனாரை நீ காண்பாயாக, என்று சொல்லிவிட்டு சென்றார்.

மறுநாள் காலையில் வழக்கம்போல், தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் நடராஜர் கோவில் கருவறையைத் திறந்தனர். அங்கு நடராஜப் பெருமானை சுற்றிலும் களிச் சிதறல்கள் இருந்தன. இந்த செய்தியை உடனடியாக அரசருக்கு தெரியப்படுத்தினர். அரசரும் முதல் நாளிரவு தான் கண்ட கனவை எண்ணி மகிழ்ந்தார். கனவில் நடராஜப் பெருமான் தான் சேந்தனாரின் வீட்டுக்கு களி உண்ண சென்றிருந்தை தெரிவித்திருந்தார். அதன்படியே, அரசரும் சேந்தனாரை கண்டுபிடிக்குமாரு அமைச்சருக்கு கட்டளையிட்டார். ஆனால், சேந்தனாரோ தில்லையில் நடைபெற்ற நடராஜப் பெருமானின் தேர்த் திருவிழாவிற்கு சென்றுவிட்டார். எம்பெருமான் நடராஜப் பெருமானை தேரில் அமர்த்திய உடன் அரசர் உள்பட அனைவரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆனால், மழையின் காரணமாக சேற்றில் தேர் சக்கரம் அழுந்தியதால், தேர் நகரவில்லை.

அந்த சமயத்தில், சேந்தனாரின் பாடச்சொல்லி அசரீரியாக ஒரு குரல் ஒலித்தது. உடனே சேந்தனாரோ, ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜரை துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிய சேந்தானர் இறைவன் அருளால், ‘மன்னுகதில்லை வளர்க் நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல‘ என்று தொடங்கி பல்லாண்டு கூறுதுமே என்று முடித்து 13  திருப்பல்லாண்டு பாடல்களை  பாடினார். உடனே, தேர் அசைந்தோடி  சுற்றி வந்து நிலை பெற்று நின்றது.

இதைப் பார்த்த அரசரும், தில்லை வாழ் அந்தணர்களும் சேந்தனாரின் கால்களில் விழுந்து வணங்கினர். அரசரும் தன்னுடைய கனவில் இறைவன் வந்ததை சேந்தனாருக்கு தெரிவித்தார். சேந்தனார் வீட்டுக்கு நடராஜப் பெருமான் களி உண்ணச் சென்ற அந்த நாள் சிவபெருமானின் நட்சத்திரமான மார்கழி திருவாதிரை நாள் என்றும், இன்றைக்கும் திருவாதிரை நாளில் நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுவதால் திருவாதிரைக்களி  என்றும் சொல்லப்படுகிறது. அதனால் தான் ஆருத்ரா தரிசன நாளன்று சிவபெருமானுக்கு களி அமுது படைத்து உண்கிறோம்.

எனவே 'திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி' என்ற சொலவடையே ஏற்பட்டது.

Read More
ஸ்ரீசைலம் மல்லிகார்ச்சுனேசுவரர் கோவில்

ஸ்ரீசைலம் மல்லிகார்ச்சுனேசுவரர் கோவில்

நந்தி தேவர் அவதரித்த தலம்

ஆந்திர மாநிலத்தின் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ள நல்லமலைக் குன்றில் அமைந்துள்ளது, ஸ்ரீசைலம் மல்லிகார்ச்சுனேசுவரர் கோயில். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இறைவன் திருநாமம் ஸ்ரீசைலநாதர். இறைவியின் திருநாமம் பிரமராம்பாள். ஸ்ரீசைலம், சிவனின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. அம்மனின் 51 சக்திபீடங்களில் இது மூன்றாம் இடத்தில் இருக்கிறது. குருக்ஷேத்ரத்தில் லட்சக்கணக்காக தானம் செய்வதாலும், கங்கையில் 2000 முறை குளிப்பதாலும், நர்மதா நதிக்கரையில் பல வருடங்கள் தவம் செய்வதாலும், காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அவ்வளவு புண்ணியம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை ஒரு முறை தரிசிப்பதால் கிடைக்கிறது என கந்த புராணம் கூறுகிறது. நந்தியே இங்கு மலையாக அமைந்திருந்து அதன் மீது சிவபெருமான் ஆட்சிபுரிகிறார்.

சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவனைக் குறித்து தவம் இருந்தார். சிவனின் அருளால் நந்தி, பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள், நந்திதேவர் சில காலம் தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர். சிலாதர் மிகவும் வருந்தினார். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி,"தந்தையே! கலங்காதீர்கள். நான் சிவனைக்குறித்து கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன்," என்றார். தவத்தில் மகிழ்ந்த சிவன், நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னை காண வர முடியாது என்று உத்தரவும் பிறப்பித்தார். நந்தி தவம் செய்த 'நந்தியால்' என்ற இடம் மலையின் கீழே உள்ளது. அத்துடன் அவனது தம்பியாகிய பர்வதனும் தவமிருந்து பர்வத மலையாக மாறும் வரம் பெற்றான். சிவபெருமான் நந்தியை தன் வாகனமாக்கியதும் இத்தலத்தில் தான். மேலும், அவரது அனுமதியின்றி யாரும் தன்னை காண முடியாது என்ற உத்தரவையும் பிறப்பித்தார்.

முக்கிய சிவத்தலங்களில், இமயமலையிலுள்ள கைலாயம் முதலிடமும், நந்தி அவதரித்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடமும் வகிக்கிறது. பிரதோஷத்தன்று நமது ஊர் நந்தீஸ்வரரை வணங்கி வந்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் போது, நந்திதேவர் அவதரித்த தலத்திற்கே சென்று அவரை வணங்கி வந்தால், முக்தியே அடைந்து விடலாம் என்பது ஐதீகம்.பிரதோஷத்தன்று நமது ஊர் நந்தீஸ்வரரை வணங்கி வந்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் போது, நந்திதேவர் அவதரித்த தலத்திற்கே சென்று அவரை வணங்கி வந்தால், முக்தியே அடைந்து விடலாம் என்பது ஐதீகம்.

Read More
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்

அருணாசலேசுவரர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு திருவிழா

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று, திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் திறக்கப்படுவதாக ஐதீகம். எனவேதான் எல்லா வைணவத் தலங்களிலும் வைகுண்ட ஏகாதசியை மிகச் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல், அன்று அனைத்து வைணவத் தலங்களிலும் திறக்கப்படும்.

பஞ்சபூத சிவாலயங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலிலும் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடத்தப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்கவாசல் திறப்புக்குரிய சாவியை, கோவில் பிரகாரத்தில் அமைந்துள்ள வேணுகோபால சுவாமிகள் சன்னதியில் வைத்து சிறப்புப் பூஜைகள் நடத்துவார்கள். பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பிறகு அந்த சாவி மேளம் தாளம் முழுங்க எடுத்து வரப்படும். அந்த சாவியை கொண்டு சொர்க்கவாசல் திறக்கப்படும். அப்போது பக்தர்கள் 'அரோகரா' கோஷம் எழுப்பியபடி சொர்க்கவாசலை கடந்து செல்வார்கள்.

தமிழ்நாட்டில், அருணாசலேசுவரர் கோவில் தவிர வேறு எந்த சிவாலயத்திலும் இத்தகைய சொர்க்க வாசல் திறப்பு திருவிழா நடப்பதில்லை.

Read More
திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோவில்

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோவில்

சனி பகவானை வணங்கிய பின் தான் சிவனை வழிபட வேண்டும் என்ற அபூர்வமான நடைமுறை உள்ள தேவார தலம்

சனி பகவான், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு, 20. 12. 2023 அன்று மாலை 5.20 மணிக்கு, பெயர்ச்சி அடைகிறார். சனிபெயர்ச்சி என்றாலே காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்திற்கு இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். காரைக்காலில் இருந்து 5 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள இக்கோவில், தேவாரப் பாடல் பெற்றது. இறைவனின் திருநாமம் தர்ப்பாரண்யேசுவரர், இறைவியின் திருநாமம் பிராணேசுவரி. இறைவன் தர்ப்பையில் முளைத்தவர் என்பதால் தர்ப்பாரண்யேசுவரர் எனப்படுகிறார். தர்ப்பையில் முளைத்த தழுப்புடன் உள்ளார். தரப்பாணேஸ்வரரை சனிபகவான பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று புராணம் கூறுகிறது.

பிராணேசுவரி அம்மன் சன்னதிக்கு முன்னால், சனிபகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இக்கோவிலின் வாயிற் காப்பாளராக சனி பகவானே கருதப்படுகிறார். பொதுவாக சிவனை வழிபட்ட பிறகு தான் நவகிரகங்களை வழிபடுவார்கள். ஆனால் இத்தலத்தில் சனீஸ்வரனை வணங்கிய பிறகு தான் சிவனை வழிபட வேண்டும் என்ற வழக்கம் உள்ளது. மேலும் சனி பகவானை தவிர, மற்ற எட்டு கிரகங்களும் இந்தக் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. சனிபகவானது விக்ரகத்தின் கீழே, அவரது சாந்நித்யம் கொண்ட மகாயந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சனி பகவானாலேயே அந்த மகாயந்திரம் அருளப்பட்டதால், அதனுடைய சக்தி அளவிட முடியாதது. அதனாலேயே சனிபகவானின் திருச்சன்னதி மிக்க சிறப்பும், சக்தியும், மூரத்திகரமும் பெறறு விளங்குகிறது.

பிரார்த்தனை

இத்தலத்தில் நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம் தவிர அஷ்டதீர்த்தங்கள் எனப்படும் மொத்தம் 8 தீர்த்தங்கள் உள்ளன. சனித் தொல்லை தீர நள தீர்த்தத்திலும், முன் ஜென்ம சாபவங்கள் விலக பிரம்ம தீர்த்தத்திலும், கலைகளில் தேர்ச்சி பெற வாணி தீர்த்தத்திலும் நீராடி பிரார்த்தனை செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

சனி பகவானை வழிபடும் போது சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்

சனி காயத்ரி மந்திரம் :

காகத் வஜாய வித்மஹே

கட்க ஹஸ்தாய தீமஹி

தந்நோ மந்த: ப்ரசோதயாத்

Read More
பேரூர் பட்டீஸ்வரர் கோவில்

பேரூர் பட்டீஸ்வரர் கோவில்

அசுவினி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஞானபைரவர்

கோயம்புத்தூரில் இருந்து சிறுவானி செல்லும் வழியில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பேரூர் பட்டீஸ்வரர் கோயில். இறைவன் திருநாமம் பட்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் மனோன்மணி, பச்சைநாயகி. இத்தலத்தை தரிசிப்போருக்கு இனி பிறப்பில்லை என்பது பொருள். ஆதிசங்கரர் தன் தாயின் முக்தி வேண்டி இங்கு பிரார்த்தனை செய்துள்ளார். சுந்தரமூர்த்தி நாயனாருக்காக நடராஜர் தமது தில்லை திருநடனத்தை காட்டியருளிய தலம் பேரூர்.

இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பைரவர் ‘ஞான பைரவர்’ என்று அழைக்கப்படுகிறார். இந்த பைரவருக்கு நாய் வாகனம் இல்லை. இது முக்தி தலம் என்பதால் பைரவர் வாகனம் இன்றி இருக்கிறார். ஞான பைரவர் வலது கையில் சிவனைப் போல் உடுக்கையையும், இடது கையில் பாசத்தையும் கொண்டுள்ளார். ஞான பைரவர் நின்ற கோலத்தில் உள்ளார். செவ்வாய்க்கிழமை மாலையில் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் நாம் இழந்த பொருள் எதுவாக இருந்தாலும் அது திரும்ப கிடைக்கும். மேலும் மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் பைரவரை வழிபட உகந்த நாளாகும். செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி திதி இணைந்து வந்தால் சிறப்பு. ஆறு தேய்ப்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளிப் பூவால் வழிபட்டு வந்தால் நற்பலன்கள் வந்தடையும்.

Read More
சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்

சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்

சிற்பத்தின் ஒரு காதிலிருந்து மறு காது வரை மிக நுண்ணிய துளை அமைந்திருக்கும் அதிசயம்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகிலுள்ள, சுசீந்திரத்தில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோவில். இக்கோவிலில் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கிறார்கள். இந்து மதத்தின் முக்கியமான தெய்வங்கள் அனைவருக்கும் இங்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இக்கோவில் ஒன்பதாம் நூற்றாண்டில் சோழ வம்சத்தால் கட்டப்பட்டது. பின்னர் திருமலை நாயக்கர் மற்றும் திருவிதாங்கூர் மன்னர்களால் விரிவாக்கங்கள் செய்யப்பட்டன. மதுரை, ஆவுடையார் கோவில், திருநெல்வேலி, கிருஷ்ணாபுரம் கோவில்களைப் போல, இக்கோவிலின் கட்டிடக் கலையும், சிற்பக் கலையும் மிகவும் நுணுக்கமும், அற்புத அழகும் வாய்ந்தவை.

இக்கோவிலில் கலை வேலைப்பாடுகள் மிகுந்த சில மண்டபங்கள் உள்ளன. அவை

1. கலைநயத்துடனான சிற்பங்களுடன் கூடிய செண்பகராமன் மண்டபம்.

2. இசைத்தூண்கள் கொண்ட குலசேகர மண்டபம்.

3. திருக்கல்யாணம் நடக்கும் ஊஞ்சல் மண்டபம்.

4. வேனிற்காலத்தில் மும்மூர்த்திகள் ஓய்வெடுக்கும் வசந்த மண்டபம்.

5. பல இறை வடிவ சிற்பங்களை கொண்ட சித்திர சபை.

கோவிலின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நான்கு இசைத்தூண்கள் ஆகும். 1035 நுணுக்கமாக செதுக்கப்பட்ட தூண்களைக் கொண்ட நடன மண்டபமும் உள்ளது. இம்மண்டபத்து தூண்களில் ஒரே மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ள பாவை விளக்கு சிற்பங்கள் உள்ளன. இப்பாவை விளக்கு சிற்பங்களில் தான் அந்த காலங்களில்,இரவு நேரங்களில் விளக்குகள் ஏற்ற பயன்படுத்தப்பட்டது.

முருகன் சன்னதி மண்டபத்தில் உள்ள தூணில் அமைந்துள்ள தர்மராஜா சிற்பம், அதி அற்புதமான அழகுடனும், நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுடனும், ஆச்சரியமும் பிரமிப்பும் அடைய வைக்கும் நம் முன்னோர்களின் விஞ்ஞான தொழில்நுட்பத் திறனையும் விளக்குவதாக அமைகின்றது. இச்சிற்பத்தில் நம்மை வியக்க வைக்கும் அம்சம் என்னவென்றால், ஒரு 0.5 மி.மீ. விட்டமுள்ள சிறிய குச்சியை ஒரு காதின் வழியே நுழைத்தால் அது மறு காது வழியாக வெளியே வருகின்றது. இவ்வளவு மிகச் சிறிய துளையை, சிலையின் முக அகலத்திற்கு ( சுமார் ஒரு அடி) எந்த உபகரணத்தை கொண்டு அமைத்தார்கள் என்பது இன்றுவரை விடை கிடைக்காத கேள்வியாக உள்ளது.

Read More
கொடுமுடி மகுடேசுவரர் கோவில்

கொடுமுடி மகுடேசுவரர் கோவில்

கையில் திரிசூலம் ஏந்தி இருக்கும் சனிபகவானின் அபூர்வ தோற்றம்

கரூர்- ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் 27 கி.மீ. தூரத்தில், காவிரி நதிக் கரையில் அமைந்துள்ள தேவாரத்தலம் கொடுமுடி. இறைவன் திருநாமம் மகுடேசுவரர். இறைவியின் திருநாமம் வடிவுடை நாயகி. இக்கோவிலில் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவரும் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும்.

திருநள்ளாறு,திருநாரையூர், திருக்கொள்ளிக்காடு, திருவாதவூர், வழுவூர் போன்ற சனிப் பரிகாரத் தலங்களில் இத்தலமும் ஒன்று. இக்கோவிலில் சனிபகவான் காகத்தின் மேல் வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்து கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார். அவர் வலது கையில் திரிசூலத்தை ஏந்திய நிலையில் காட்சி தருகிறார். இப்படி திரிசூலம் ஏந்திய சனி பகவானை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இங்கு சனி பரிகாரம் செய்து வழிபட்டால் சனீஸ்வரர் அருள் கிட்டும்.

இத்தலத்து அனுமன், கோரை பற்களோடு எழுந்தருளி இருப்பதும் ஒரு அபூர்வமான காட்சியாகும்.

Read More
கார்த்திகை மாத அமாவாசையின் சிறப்புகள்

கார்த்திகை மாத அமாவாசையின் சிறப்புகள்

கார்த்திகை மாத அமாவாசையின் சிறப்புகள்

நமது வழிபாட்டில் அமாவாசை தினம் என்பது சிறப்பு மிக்கது. மாதத்திற்கு ஒரு முறை என அமாவாசை தினம் வந்தாலும், குறிப்பிட்ட சில மாத அமாவாசை தினங்களுக்கு தனிச்சிறப்புகள் உண்டு. அவற்றில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஐப்பசி அமாவாசை, கார்த்திகை அமாவாசை ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கார்த்திகை அமாவாசையை பெளமாவதி அமாவாசை என்றும் குறிப்பிடுவதுண்டு. கார்த்திகை அமாவாசை நாளில்தான் லட்சுமி தேவி, பூமிக்கு வருகை தருவதாக ஐதீகம். இந்த நாளிலேயே லட்சுமி தேவி, பாற்கடலில் இருந்து அவதரித்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.

அமாவாசை தினங்களில் புனித நீர் நிலைகளில் நீராடி,இறந்த நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் அளித்து வழிபடுபடுவது மரபு. ஆனால் கார்த்திகை அமாவாசை என்பது முன்னோர் வழிபாட்டுடன், ஆன்மிக வழிபாட்டிற்கும் மிக முக்கியமான நாளாகும்.

கார்த்திகை அமாவாசை அன்று அனுமனையும் செவ்வாய் பகவானையும் வழிபடுவதால் வாழ்வில் நாம் சந்திக்கும் பல விதமான துன்பங்களில் இருந்து விடுபட முடியும். கார்த்திகை அமாவாசை நாள் என்பது தேவர்களின் தலைவனான இந்திரன், சூரிய பகவான், அனுமான், முன்னோர்கள் ஆகியோரை வழிபட ஏற்ற நாள். இந்த நாளில் அனுமனை வழிபட்டால் எப்படிப்பட்ட கடன் பிரச்சனையில் இருந்தும் விடுபடுவதற்கு வழி கிடைக்கும். அதே போல் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருந்தாலும் அது நீங்கி விடும். அதிக கடன் பிரச்சனையால் சிக்கி தவிப்பவர்கள் இந்த நாளில் அனுமன் வழிபாட்டினை முறையாக மேற்கொள்வதால் கைமேல் பலன் கிடைக்கும். பித்ருதோஷம், சர்ப்ப தோஷம் உள்ளிட்ட தோஷங்களுக்காக பரிகாரம் செய்ய நினைப்பவர்கள் இந்த நாளில் செய்வது மிக சிறப்பானதாகும்.

இந்த தினத்தில் பசு, காகம் உள்ளிட்ட உயிரினங்களுக்கு உணவளிப்பதும், ஆதரவு இல்லாமல் இருக்கும் மக்களுக்கு அன்னதானம் செய்வதும் கோடி புண்ணியத்தை பெற்றுத் தரும்.

Read More
தஞ்சாவூர் தஞ்சபுரீசுவரர் கோவில்

தஞ்சாவூர் தஞ்சபுரீசுவரர் கோவில்

குபேரன் இழந்த செல்வத்தை மீட்டெடுத்த தலம்

தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் கரந்தட்டாங்குடியை அடுத்துள்ள வெண்ணாற்றங்கரை பகுதியில் அமைந்துள்ளது தஞ்சபுரீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் தஞ்சபுரீசுவரர், இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. தன்னைத் தஞ்சமென்று வரும் அடியார்களைக் காப்பதனால், இறைவன் தஞ்சபுரீசுவரர் எனவும் அவர்களுக்கு ஆனந்தத்தை அள்ளித் தருபதால் அம்பிகைக்கு ஆனந்தவல்லி அம்மன் எனவும் பெயர் வந்தது.

அம்பிகையின் சன்னிதிக்கு எதிரே உள்ள மண்டபம் அஷ்டலட்சுமி மண்டபம் என்றே அழைக்கப் படுகிறது. இதன் சுவர்களில் மூன்று பக்கங்களிலும் வண்ணக்கோலத்தில் எட்டு லட்சுமிகளும் காட்சி தருகின்றனர். அதன் தென்கிழக்கு மூலையில் சிவலிங்கத்தை லட்சுமிதேவியும், குபேரரும் பூஜை செய்யும் காட்சி அமைந்துள்ளது.

இந்தத் திருத்தலத்தில்தான் வட திசைக்கு அதிபதியான குபேரன் தவமிருந்து, தான் இராவணனிடம் இழந்த அரும் பெரும் செல்வத்தையும், புஷ்பக விமானத்தையும் மீண்டும் பெற்றான் என்பது ஐதீகம். ஐப்பசி மாதம் அமாவாசை நாளில்தான் குபேரனுக்குச் சிவ தரிசனம் கிடைத்து, சிவபெருமானிடமிருந்து வரமும் கிடைக்கப்பெற்றது. எனவே இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஐப்பசி அமாவாசை அன்றும் குபேர யாகம் நடைபெறுகிறது. இப்போது ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று குபேர யாகத்துடன் அஷ்டலட்சுமி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள குபேரனுக்கும் மஹாலட்சுமிக்கும் மஹா அபிஷேகம் நிகழ்கின்றது

பிரார்த்தனை

அஷ்டலட்சுமிகளும் வழிபட்டதாலும், செல்வத்துக்கு அதிபதியான குபேரன் பூஜித்ததாலும் இத்தலத்து இறைவன் தன்னை வழிபடுவோருக்கு சகல சம்பத்துகளையும் வாரி வழங்குவதாக ஐதீகம். பண கஷ்டம், மன கஷ்டம், பணம் தொல்லை, சனி தோஷம், கடன்கள் நீங்க இக்கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். லட்சுமி குபேர யாகத்தில், பங்கேற்கும் பக்தர்களுக்குப் பொருளாதார பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்களிடம் நம்பிக்கை நிலவுகிறது.

Read More
 மேலக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோவில்

மேலக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோவில்

சிவபெருமான் ரிஷபத்தின் மேல் தாண்டவமாடும் அபூர்வ கோலம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில், எய்யலூர் சாலையில் அமைந்துள்ள தேவாரத் தலம் மேலக்கடம்பூர். இக்கோவில் சுமார் 1000-2000 ஆண்டுகள் பழமையானது. இறைவன் திருநாமம் அமிர்தகடேசுவரர். இறைவியின் திருநாமம் வித்யூஜோதிநாயகி.

பிரதோஷத்தின் போது மட்டுமே தரிசனம் தரும் தசபுஜ ரிஷப தாண்டவமூர்த்தி

இத்தலத்தில் சிவபெருமான் ரிஷப தாண்டவமூர்த்தி என்னும் பெயரோடு, நந்தி மீது நடமாடும் அபூர்வ கோலத்தில், 10 கைகளுடன் உற்சவராக இருக்கிறார். செவ்வக பீடத்தில் மையமாக உள்ள தாமரை பீடத்தில் மேல்நோக்கி நிற்கும் காளையின் மேல் சதுர தாண்டவ கோலத்தில், வீசிய பத்து கரங்களில் வீரவெண்டயம், பிரம்மகபாலம், கேடயம், சூலம், அரவம், கட்டங்கம், தண்டம், குத்தீட்டி, ஏந்திட, வலக்கை கஜஹஸ்த அமைப்பிலும், இடக்கை பிரபஞ்சம் தாங்கியும், சிவபெருமான் நின்றாடுகிறார். அவர்காலடியில் திருமால் மத்தளமிசைக்க வீரபத்திரர் சூலமாட, பைரவர், கணங்கள், விநாயகர், பார்வதி, பிருங்கி, காரைக்கால் அம்மையார், மகாகாளர், நந்தி, நாட்டிய பெண்கள் சேர்ந்தாட முருகன் மயில் மேல் பறக்க, கந்தர்வர்கள் மலரிட, அனைத்தும் சேர்ந்திட்ட அற்புத கலைப்படைப்பு. திருவாசியில் அக்கினிக்குப் பதிலாக, இங்கே போதி இலைகள் காணப்படுகின்றன. தலைக்குப் பின்புறத்தில் ஒளிவட்டமும் மணிமுடியும் வங்க தேச பாணியில் உள்ளது. இவருக்கு பிரதோஷத்தின் போது சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று ஒருநாள் மட்டுமே இவரை தரிசிக்க முடியும்.

Read More