தஞ்சாவூர் தஞ்சபுரீசுவரர் கோவில்

குபேரன் இழந்த செல்வத்தை மீட்டெடுத்த தலம்

தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் கரந்தட்டாங்குடியை அடுத்துள்ள வெண்ணாற்றங்கரை பகுதியில் அமைந்துள்ளது தஞ்சபுரீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் தஞ்சபுரீசுவரர், இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. தன்னைத் தஞ்சமென்று வரும் அடியார்களைக் காப்பதனால், இறைவன் தஞ்சபுரீசுவரர் எனவும் அவர்களுக்கு ஆனந்தத்தை அள்ளித் தருபதால் அம்பிகைக்கு ஆனந்தவல்லி அம்மன் எனவும் பெயர் வந்தது.

அம்பிகையின் சன்னிதிக்கு எதிரே உள்ள மண்டபம் அஷ்டலட்சுமி மண்டபம் என்றே அழைக்கப் படுகிறது. இதன் சுவர்களில் மூன்று பக்கங்களிலும் வண்ணக்கோலத்தில் எட்டு லட்சுமிகளும் காட்சி தருகின்றனர். அதன் தென்கிழக்கு மூலையில் சிவலிங்கத்தை லட்சுமிதேவியும், குபேரரும் பூஜை செய்யும் காட்சி அமைந்துள்ளது.

இந்தத் திருத்தலத்தில்தான் வட திசைக்கு அதிபதியான குபேரன் தவமிருந்து, தான் இராவணனிடம் இழந்த அரும் பெரும் செல்வத்தையும், புஷ்பக விமானத்தையும் மீண்டும் பெற்றான் என்பது ஐதீகம். ஐப்பசி மாதம் அமாவாசை நாளில்தான் குபேரனுக்குச் சிவ தரிசனம் கிடைத்து, சிவபெருமானிடமிருந்து வரமும் கிடைக்கப்பெற்றது. எனவே இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஐப்பசி அமாவாசை அன்றும் குபேர யாகம் நடைபெறுகிறது. இப்போது ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று குபேர யாகத்துடன் அஷ்டலட்சுமி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள குபேரனுக்கும் மஹாலட்சுமிக்கும் மஹா அபிஷேகம் நிகழ்கின்றது

பிரார்த்தனை

அஷ்டலட்சுமிகளும் வழிபட்டதாலும், செல்வத்துக்கு அதிபதியான குபேரன் பூஜித்ததாலும் இத்தலத்து இறைவன் தன்னை வழிபடுவோருக்கு சகல சம்பத்துகளையும் வாரி வழங்குவதாக ஐதீகம். பண கஷ்டம், மன கஷ்டம், பணம் தொல்லை, சனி தோஷம், கடன்கள் நீங்க இக்கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். லட்சுமி குபேர யாகத்தில், பங்கேற்கும் பக்தர்களுக்குப் பொருளாதார பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்களிடம் நம்பிக்கை நிலவுகிறது.

மகாலட்சுமியும் குபேரனும் சிவபூஜை செய்யும் காட்சி

 
Previous
Previous

கார்த்திகை மாத அமாவாசையின் சிறப்புகள்

Next
Next

மேலக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோவில்