திருப்பைஞ்ஞீலி  ஞீலிவனேஸ்வரர் கோவில்

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோவில்

எமதர்மன் குழந்தை வடிவில் இருக்கும் அபூர்வ தோற்றம்

திருச்சியில் இருந்து ( வழி - மண்ணச்சநல்லூர் சுமார் 19 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருப்பைஞ்ஞீலி. இறைவன் திருநாமம் ஞீலிவனேஸ்வரர். இறைவியின் திருநாமம் விசாலாட்சி. இத்தலத்தில் அருளும் யமதர்மராஜனை சனிக்கிழமைகளில் வழிபட, சனி பகவான் அருள் கிட்டும்.

இத்தலத்தில் எமதர்மனுக்கு என்று அமைந்துள்ள தனிச் சன்னதி, ஒரு குடைவரைக் கோவிலாகும். பூமிக்கு அடியில் சற்று பள்ளத்தில் உள்ள இந்த குடைவரைக் கோவிலில் புடைப்பு சிற்பமாக சோமஸ்கந்தர் ரூபத்தில் சிவன் அம்பாள் இருவருக்கும் இடையே முருகன் அமர்ந்திருக்க,சுவாமியின் பாதத்தின் கீழே குழந்தை வடிவில் எமதர்மன் இருக்கிறார். இறைவன் பெயர் மிருத்யுஞ்சயர் , தாயார் தாட்சாயணி . மிருத்யுஞ்சயர் என்றால் எம பயம் போக்குபவர் என்று அர்த்தம் அதனால் இந்த சந்நிதி முன்பு திருக்கடவூரில் செய்வது போல சஷ்டியப்தபூர்த்தி, ஆயுள்விருத்தி ஹோமம் ஆகியவை நடத்துகின்றனர்.

திருக்கடவூர் தலத்தில், மார்க்கண்டேயனுக்காக எமதர்மனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் சிவபெருமான். இதனால் உலகில் இறப்பு என்பதே இல்லாமல் போக பூமியின் பாரம் அதிகரித்தது. பாரம் தாங்காத பூமிதேவி சிவபெருமானிடம் முறையிட்டாள். சிவபெருமான் அதற்கிணங்கி தைப்பூச நாளன்று மீண்டும் எமதர்மனை இத்தலத்தில் தன் பாதத்தின் அடியில் குழந்தை உருவில் எழும்படி செய்து, தர்மம் தவறாமல் நடந்து கொள்ளும்படி அறிவுரை கூறி மீண்டும் தன் பணியை செய்து வரும்படி அருள் செய்தார்.

எமதர்மன் சனி பகவானுக்கு அதிபதி என்பதாலும், எமனுக்கு இத்தலத்தில் தனி சன்ன உள்ளதாலும் இத்தலத்தில் நவகிரக சன்னதி இல்லை . இத்தலத்தில் அருளும் யமதர்மராஜனை சனிக்கிழமைகளில் வழிபட, சனி பகவான் அருள் கிட்டும். அதனால் சனிபகவானின் பாதிப்புக்கு உள்ளானவர்கள் இக்கோவிலுக்கு வந்து பிராத்தனை செய்கின்றனர் .

Read More
துடையூர் விஷமங்களேஸ்வரர் கோவில்

துடையூர் விஷமங்களேஸ்வரர் கோவில்

பிரம்மாவிற்கும் சரஸ்வதி தேவிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் ஒரே தலம்

திருச்சியிலிருந்து முசிறி செல்லும் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவில், தேவாரத் தலமான திருவாசிக்கு மிக அருகில் அமைந்துள்ள தேவார வைப்புத் தலம் துடையூர், இறைவனின் திருநாமம் விஷமங்களேஸ்வரர் . அம்பிகையின் திருநாமம் வீரமங்களேஸ்வரி என்ற மங்களநாயகி. சுமார் 2,000 வருடப் பழைமை மிக்க கோயில்.

இறைவன் கருவறையின் வடபுற சுற்றுச்சுவரில், நான்முகனாராகிய பிரமன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கருவறையின் தென்புறச் சுவரில் பத்மாசன கோலத்தில் குடையின்கீழ், ஞான சரஸ்வதி தேவி கரங்களில் வீணை இல்லாமல், அருள்புரிகிறார். தீச்சுவாலைகளுடன் திகழும் திருவாசி இத்தேவியின் தலைக்குப் பின் திகழ, சடாமகுடத்துடன் அமர்ந்த கோலத்தில், வலக்கரம் சின்முத்திரை காட்ட, தொடைமீது திகழும் இடக்கரத்தில் ஏட்டுச் சுவடி திகழ பின்னிரு கரங்களில் நீர்ச் சொம்பும், மணிமாலையும் ஏந்திய நிலையில் ஞான சரஸ்வதி தேவி, காணப் பெறுகின்றாள்.

வைகாசி விசாக நன்னாளில் இந்த கோயிலில் பிரம்மாவிற்கும் சரஸ்வதி தேவிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். ஹோமங்கள் முடிந்து பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் காலை 4.30 மணிமுதல் 6 மணிக்குள் பிரம்மாவிற்கும், சரஸ்வதி தேவிக்கும் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும். இது போல் பிரம்மாவிற்கு கல்யாணம் நடைபெறும்தலம் தமிழ்நாட்டிலேயே இந்த துடையூர் தலம் மட்டும் தான். வேறு எங்கும் நடப்பதில்லை- பிரம்ம முகூர்த்த வேலையில் பிரம்மாவை தரிசிப்பதே பெரும் புண்ணியம். அத்துடன் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி- பிரம்மா திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்வது பெரும் புண்ணியம்.

Read More
திருநெல்வேலி  நெல்லையப்பர் கோவில்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்

விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் இசை தூண்கள்

திருநெல்வேலி தேவாரப்பாடல் பெற்ற 14 பாண்டிய நாட்டு தலங்களில் ஒன்றாகும். இறைவன் திருநாமம் நெல்லையப்பர். இறைவியின் திருநாமம் காந்திமதி அம்மன்.

நம் தமிழகத்தில் ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் கொண்ட பல கோவில்கள் உள்ளன. அவற்றுள் விஞ்ஞானிகளாலும் இன்று வரை கண்டுபிடிக்க முடியாத அதிசயமான இசைத் தூண்களைக் கொண்டது திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில். தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில், ஆழ்வார் திருநகரி, திருவானைக்காவல், தாடிக்கொம்பு, தாராசுரம் உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள கோவில்களில் இசைத் தூண்கள் உள்ளன. இருந்தாலும் நெல்லையப்பர் கோவிலில் உள்ள இசைத்தூண்கள் தனித்துவமானவை. நெல்லையப்பர் கோவிலில் உள்ள இசைத் தூண்கள், உலகில் வேறு எங்கும் காண முடியாத அதிசயங்களில் ஒன்றாகும். இந்த தூண்களில் இருந்து வெளிப்படும் சப்த ஸ்வரங்கள் எப்படி ஒலிக்கிறது என்பது இன்றும் வரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இக்கோவில் இரண்டாம் பிரகாரத்தில் ஏழிசை ஸ்வரங்களை எழுப்பும் இசை தூண்கள் உள்ளன. ஒரு பெரிய தூணை சுற்றிலும் 48 சிறிய தூண்களை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன. வெளித்தூண்கள் வேறுபட்ட வடிவங்களையும், உயரங்களையும் கொண்டவையாக உள்ளன. இந்த தூண்களை வெறும் கைகளால் தட்டினாலே ச,ரி,க,ம,ப,த,நி என்ற ஏழு ஸ்வரங்களும் ஒலிக்கும். ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு இசையை எழுப்பக் கூடியவையாகும்.

பெரிய தூணில் கர்நாடக சங்கீதமும், அதை சுற்றி உள்ள சிறிய தூண்களில் மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி போன்ற இசைக்கருவிகளின் இசையை ஒலிக்கின்றன. ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்தில் இழைத்திருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். அந்த காலத்தில் திருவிழாக்களின் போது இசைக்கலைஞர்கள் இந்த தூண்களை பயன்படுத்தியே இசைத்ததாக சொல்லப்படுகிறது.

​எந்த தொழில்நுட்ப வசதியும் இல்லாத காலத்தில் ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு விதமான அலைக்கற்றையை உருவாக்கும் விதத்தில் எப்படி உருவாக்கினார்கள் என்பது இன்று வரை வியப்பை மட்டுமே தருகிறது. இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி கழகத்தின் இயற்பியல் பிரிவு விஞ்ஞானிகள் இந்த தூண்களின் வடிவமைப்பு, இதிலிருந்து வெளிப்படும் இசை போன்றவற்றை ஆய்வு செய்தனர். தன்மைக்கு ஏற்ப மாறுபட்டு இசைந்து கொடுக்கும் அலைக்கற்றையினால் சப்தம் உருவாவதாக மட்டுமே ஆய்வின் முடிவில் தெரிவித்தனர். ஆனால் இந்த தூண்களை எப்படி வடிவமைத்திருப்பார்கள் என்பது தற்போதும் விடை தெரியாத புதிராக மட்டுமே உள்ளன.

இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வழிபடுத்தும் ஒரு முறை ஆகும். ஆனால் கற்களால் செதுக்கப்பட்ட இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே செல்வதற்கு துவாரம் ஏதும் கிடையாது. அப்படி இருக்கையில் எப்படி ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு விதமான இசையை எழுப்ப முடியும் என்பது விஞ்ஞானிகளை இன்று வரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

Read More
தகட்டூர் கால பைரவர் கோவில்

தகட்டூர் கால பைரவர் கோவில்

குழந்தை உருவிலான கால பைரவர்

வேதாரண்யம்-திருத்துறைப்பூண்டி சாலையில், 20 கிமீ தொலைவில்,முள்ளியாற்றின் கரையில் அமைந்துள்ளது தகட்டூர் கால பைரவர் கோவில். இக்கோவிலில் உள்ள மூலவர் பைரவர் ஆவார். காசியில் இருப்பது போல், மூலவராக கால பைரவர் எழுந்தருளியிருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இக்கோவில் மகாமண்டபத்தில் ஐந்தெழுத்து மந்திரத்தினைக் கொண்ட யந்திரம் உள்ளதால் தகட்டூர் என்று பெயர் பெற்றது. இவ்வூருக்கு 'யந்திரபுரி' என்ற பெயரும் இருக்கிறது.சுந்தரர் பாடிய வைப்புத்தலமாகும்.

காசியில் கருடன் பறக்காது இருப்பதற்கும், பல்லி கத்தாது இருப்பதற்கான காரணம்

ராவணனைக் கொன்ற பிரும்மஹத்தி தோஷத்தை களைந்து கொள்ள ராமர், ராமேசுவரத்தில் சுயம்பு சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து சிவ பூஜை செய்ய விரும்பினார். அனுமனை சுயம்பு சிவலிங்கத்தை கொண்டுவருவதற்காக காசிக்கு அனுப்பினார். காசிக்கு சென்ற அனுமான் பல சிவலிங்கங்களை கண்டார். ஆனால் அவை அங்கு தவம் இருந்த ரிஷி முனிவர்களால் பிரதிட்டை செய்யப்பட்டவை. எனவே சுயம்பு லிங்கங்கள் அல்ல. அனுமான் எத்தனை தேடியும் சுயம்பு லிங்கத்தைக் கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது. அப்போது அங்கு பறந்து கொண்டு இருந்த ஒரு கருடனும், சிவலிங்கங்கள் மீது ஓடிக் கொண்டு இருந்த பல்லி ஒன்றும் அனுமானின் தேடுதலைக் கண்டு அவருக்கு உதவ முன் வந்தன. சுயம்பு லிங்கம் ஒன்றின் மீது கருட பகவான் பறக்கத் துவங்க, பல்லியும் அந்த சிவலிங்கத்தின் அருகில் சென்று கத்தியது. அனுமானும் அவை அடையாளம் காட்டிய ஸ்வயம்புவாக எழும்பி இருந்த சிவலிங்கத்தை அடையாளம் கண்டு கொண்டு அதை எடுத்துக் கொண்டு கிளம்பினார். காசி நகரமோ கால பைரவர் கட்டுப்பாட்டில் இருந்தது. தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் தன் அனுமதி இன்றி கருடன் மற்றும் பல்லியின் உதவியுடன் ஒரு சிவலிங்கத்தை பகவான் அனுமான் எடுத்துச் செல்வதைக் கண்ட, பைரவர் கோபம் கொண்டு அனுமானை தடுத்து நிறுத்த அவர்கள் இடையே கடும் யுத்தம் நடந்தது. யுத்தம் பல நாட்கள் நீண்டு கொண்டே இருக்க அதைக் கண்ட தேவர்கள் பயந்து நடுங்கினார்கள். அவர்கள் பகவான் பைரவரிடம் சென்று பிரும்மஹத்தி தோஷத்தை தொலைத்துக் கொள்ள ராமபிரான் அனுப்பிய தூதுவராகவே அனுமான் அங்கு வந்து சிவலிங்கத்தை எடுத்துச் செல்கின்றார் என்று கூற, அதைக் கேட்ட கால பைரவரும் சினம் தணிந்தார்.

சிவன் கோவில்களில் பைரவரே காவல் தெய்வம். அக்காலத்தில், கோவிலைப் பூட்டி பைரவர் சன்னதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவார்கள். அதனால் பைரவர் காசி சிவலிங்கத்தை ராமேஸ்வரம் வரை பத்திரமாக எடுத்துச் செல்ல அனுமானுக்கு தானே துணையாக செல்வதாக வாக்குறுதி தந்தார். பின் அனுமானுடன் சென்று அதை ராமபிரானுக்கு அளித்தார். பின் தான் சென்ற வழியில் கண்ட தகட்டூரிலேயே தங்கி விட முடிவு செய்தார். அதன் காரணம் என்ன எனில் அவர் அனுமானுடன் சென்றபோது, வழியில் வந்த தகட்டூர், காசியைப் போலவே தனக்கு தோற்றம் தந்ததால், தகட்டூரில் ஒரு கணம் தான் சிறு குழந்தையாக மாறி விட்டு, மீண்டும் தன் பழைய உருவை அடைந்ததை உணர்ந்தார். ஆகவே தகட்டூரிலேயே அமர்ந்து விட முடிவு செய்து அங்கு அமர்ந்து கொண்டார். அதே சமயத்தில் காசியில் தன்னை மீறி கருடனும், பல்லியும் அனுமானுக்கு உதவி செய்ததினால், இனி காசியில் பல்லி கத்தக் கூடாது, கருடன் பறக்கக் கூடாது என தடை விதிக்க, இன்றுவரை காசியில் பல்லியும் கத்துவது இல்லை. கருடனும் பறப்பது இல்லை.

தகட்டூரை அடைந்த பைரவர் தன்னை சிறு குழந்தை உருவிலான பைரவராக மாற்றிக் கொண்டு அங்கேயே தங்கி, தன்னை நாடி வந்து வழிபட்ட பக்தர்களுக்கு அருள் புரியலானார். அவர் அங்கு தங்கி உள்ளதைக் கேள்விப்பட்ட, பைரவருக்கு அடங்கி உள்ள ஒன்பது கிரகங்களும் அங்கு வந்து அவரை தரிசித்து ஆசி பெற்றார்கள். இந்த ஆலயத்தில் ஒன்பது கிரகங்களைக் குறிக்கும் ஒன்பது மரங்கள் உள்ளன். அவற்றை ஒன்பது முறை சுற்றினால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும்.

Read More
லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில்

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில்

கைகளில் வீணையோடு நின்ற கோலத்தில் காட்சி தரும் வீணா தட்சிணாமூர்த்தி

திருச்சியில் இருந்து அரியலூர் செல்லும் வழியில், 23 கி.மீ. தொலைவில் உள்ள தலம் லால்குடி. இறைவனின் திருநாமம் சப்தரிஷீஸ்வரர். இறைவனின் திருநாமம் சப்தரிஷீஸ்வரர். இறைவியின் திருநாமம் பெருதிருப்பிராட்டியார். இவ்வூர் பக்கம் படையெடுத்து வந்த முகமதிய மன்னன் மாலிக் கபூர் இத்திருக்கோவிலின் சிவப்பு கோபுரத்தை கண்டு உருதுமொழியில் லால்குடி (லால் – சிவப்பு, குடி – கோபுரம்) என்று அழைக்க, அதுவே இவ்வூருக்கு பெயராகி அழைக்கபடுகிறது.

இத்தலத்தில் வீணையைக் கையிலேந்தி, சற்றே வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கின்றார் தட்சிணாமூர்த்தி. இவரை 'வீணா தட்சிணாமூர்த்தி' என்றே தலபுராணம் குறிப்பிடுகின்றது. இசைக்கு தலைவன் சிவபெருமான். இதை உணர்த்தும் வகையில் அழகிய சடை முடியோடும், கைகளில் வீணையோடும், நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் இத்தலத்து தட்சிணாமூர்த்தி.

பிரார்த்தனை

இவரை வணங்கினால் உயர்பதவி, கல்வியில் முன்னேற்றம், நினைத்த படிப்பு படிக்கும் அமைப்பைக் கொடுப்பார். வியாழக் கிழமைகளில் இவருக்கு சந்தனக் காப்பிட நினைத்தக் காரியம் கைகூடும். வெண்தாமரை அர்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் கொடுக்க மனம் ஒருமுகப்படும். மேலும் இவர்க்கு தேனாபிசேகம் செய்தால் தேன் போன்ற இனிமையான குரல்வளம் கிடைக்கும்.

Read More
திருநிலை பெரியாண்டவர் கோவில்

திருநிலை பெரியாண்டவர் கோவில்

சிவபெருமான் மனிதனாக அவதாரம் எடுத்த தலம்

செங்கல்பட்டிற்கு கிழக்கே 14 கி.மீ. தொலைவிலுள்ள திருநிலை கிராமத்தில் அமைந்துள்ளது பெரியாண்டவர் கோவில். இறைவியின் திருநாமம் அங்காள பரமேசுவரி. இந்த தலத்தில் சிவபெருமான், மனித வடிவம் தாங்கி உலகெல்லாம் வலம் வந்து திருநிலையில் ஒருநிலையாய் தன் பாதம் பதித்து, பெரியாண்டவராய் காட்சி தந்த பின் சுயம்பு லிங்கமாய் கோவில் கொண்டார். இத்தலத்தில் சிவபெருமான் நின்ற கோலம், அமர்ந்த கோலம், தவக்கோலம் என மூன்று வித தோற்றத்தில் இருப்பது ஒரு அரிய காட்சியாகும். சிவபெருமானை சுற்றி 21 சிவகணங்கள் கைகூப்பி வணங்கி நிற்கும் காட்சி இவ்வாலயத்தை தவிர வேறு எங்கும் காணமுடியாத அரிய காட்சியாகும்.

சிவபெருமான் ஒரு நாழிகைப் பொழுது மனிதனாக அவதாரம் எடுத்ததன் பின்னணி

சுந்திரபத்திரன் என்ற அசுரன் சிவபெருமானை வணங்கி, பல அரிய வரங்கள் பெற்றான். அவன் பெற்ற வரத்தின்படி, சிவபெருமான் ஒரு நாழிகைப் பொழுது மனிதனாய் வாழ்ந்தால்தான் அவனை அழிக்க முடியும் என்னும் நிலை இருந்தது. இறைவனின் திருவிளையாடலின்படி, பார்வதி தேவி எம்பெருமான்மேல் கோபம் கொண்டு, ஒரு நாழிகைப் பொழுது மனிதனாய் பிறப்பீர்கள்! என்று ஈசனை சபித்தாள். அதன் காரணமாக சிவபெருமான் மனிதனாகப் பிறந்து தன்நிலை மறந்து பூமியில் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தார். இதனால் அனைத்து இயக்கங்களும் தடைப்பட்டன. தேவர்கள் மனம் கலங்கினர். அவர்கள் அனைவரும் பார்வதி தேவியிடம் சென்று, ஈசனை ஆட்கொண்டு உலகை உய்விக்க வேண்டும் என்று வணங்கி நின்றனர். அதையேற்ற பார்வதி தேவி அங்காள பரமேசுவரியாக பூவுலகம் வந்து, மனம்போன போக்கில் அலைந்து கொண்டிருந்த சிவனைக் கண்டு மனம் வருந்தி, தன் சூலாயுதத்தை ஓரிடத்தில் வீசியெறிந்தாள். அது பூமியில் ஓர் இடத்தில் குத்தி, நிலையாய் நின்றது. சூலாயுதம் வீழ்ந்த இடத்தில் இருந்து 21 மண் உருண்டைகள் சிதறி விழுந்தன. பின் அவை ஒவ்வொன்றும் சிவகணங்களாக மாறி, சுற்றி சிவனின் வருகைக்காகக் காத்து நின்றன. சூலாயுத ஒளியைக் கண்டு சிவபெருமான் அந்த இடத்தில் பாதம் பதித்து, ஒருநிலையாய் நின்றார். அவரை பரமேஸ்வரி வணங்கினாள். அப்போது ஒரு நாழிகைப் பொழுது நிறைவுற, சிவபெருமான் மனித உருவம் நீங்கி தன்நிலை அடைந்தார். பெரிய மனிதராய் உலகை வலம் வந்த ஆண்டவராகிய நீவிர் பெரியாண்டவர் என்னும் பெயரில் வழங்கப் பெறுவீர்கள் என்று உமாதேவி கூற, தேவர்கள் அனைவரும் பெரியாண்டவரே என்று சொல்லி ஈசனின் பாதங்களைப் பணிந்தனர். அங்கேயே சிவபெருமான் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார். இந்த நிகழ்ச்சி நடந்த திருத்தலம்தான் திருநிலை.

நந்திதேவர் மனித உடலுடன் இருக்கும் அபூர்வ தோற்றம்

சிவபெருமான் மனித அவதாரம் எடுத்தபோது அவருடன் நந்தி தேவரும் மனித வடிவில் சென்றார். எனவே இங்குள்ள நந்திதேவர் மனித உடலுடன் காணப்படுகிறார். இங்குள்ள விநாயகரும் இரண்டு கரங்களோடு மனித உடலுடன் காட்சி தருகிறார். இவருக்கு திருநீறு அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகிறது. இந்தத் திருநீற்றைப் பூசி, உட்கொள்வதால், நோய் நீங்குவதாகவும்; கல்வி, செல்வம் கிட்டுவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.

பிரார்த்தனை

இவ்வாலயத்தின் அருகிலுள்ள சித்தாமிர்த குளத்தில் குளித்துவிட்டு, சிவபெருமானையும் அம்மனையும் தொடர்ந்து ஆறு வாரங்கள் வணங்கி வந்தால் நடக்காத காரியங்களும் நடைபெறும் என்கின்றனர். மகப்பேறு கிட்ட பிரார்த்தனை தலமாகவும் இது விளங்குகிறது. பல்லாயிரம் பேர் இந்த சிவனை குலதெய்வமாக வணங்கி வருகின்றனர். அவர்கள் 21 மண் உருண்டைகளை சிவலிங்கத்தைச் சுற்றி வைத்து வணங்கிச் செல்கின்றனர்.

Read More
யனமதுரு  சக்தீசுவரர் கோவில்

யனமதுரு சக்தீசுவரர் கோவில்

தலைகீழாக காட்சி தரும் சிவபெருமானின் அபூர்வ தோற்றம்

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது பீமாவரம் என்ற ஊர். இந்த ஊரின் அருகில் 5 கி.மீ. தொலைவில் யனமதுரு கிராமத்தில் அமைந்துள்ளது சக்தீசுவரர் கோவில். இறைவனின் திருநாமம் சக்தீசுவரர்.இறைவியின் திருநாமம் பார்வதி.

இந்த ஆலயத்தில் சதுர வடிவ ஆவுடையாரின் மீது சிவலிங்கத் தோற்றத்தில் இறைவன் அருள்பாலிக்கிறார். இதில் என்ன விசேஷம் என்றால், இந்த சிவலிங்க தோற்ற கல்லின் மீது, ஜடா முடியுடன் கூடிய சிவபெருமானின் உரு வம் செதுக்கப்பட்டுள்ளது. அதுவும் தலை கீழாக. தியான கோலத்தில் இருப்பது போல கண்களை மூடியிருக் கும் ஈசனின் தலைப் பகுதி கீழேயும், கால் பகுதி மேலேயும் அமைந்திருக்கிறது. இந்த இறைவனின் அருகில் பார்வதி அமர்ந்திருக்கிறார். அவர் தன்னுடைய மடியில் முருகனை கிடத்தி வைத்திருக்கும் நிலையில் காட்சி தருகிறார்.

சிரசாசன கோல தலவரலாறு

முன்னொரு காலத்தில் சம்பாசுரன் என்ற அரக்கன் கடும் தவம் புரிந்து பிரம்மனிடம் இருந்து பல வரங்களை பெற்றான். தன் வரத்தை கொண்டு அனைத்து தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அஷ்டதிக்கு பாலகர்களில் எமனை தவிர அனைவரையும் தோற்கடித்தான். எமன் தனது பலத்தால் போர் புரிந்தார். போர் தொடர்ந்து கொண்டே இருக்க எமன் தன் பலத்தை இழந்து கொண்டே வந்தார். இறுதியாக சம்பாசுரன் எமபுரியை கைப்பற்றினான். தேவர்களை அடிமைப்படுத்தினான். இதனால் எமன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார். அப்போது இறைவன் தற்பொழுது கோவில் உள்ள இடத்தில் ஆழ்ந்த தியானத்தில் சிரசானத்தில் இருந்தார். ஈசனின் தியானம் கலைய வழி அறியாது எமன் நின்றார். எமனின் வேதனை அறிந்த அன்னை பார்வதி காட்சி அளித்தார். எமனிற்கு அசுரனை அழிக்கும் சக்தி வழங்கினார். எமனும் சம்பாசுரனை கொன்று தேவர்களின் குறையை தீர்த்தார். பின் இங்கு வந்து சிரசாசனத்தில் இருந்த இறைவனையும், குழந்தை முருகனுடன் இருந்த பார்வதியையும் பூஜித்தார். எனவே தான் இன்றும் இங்கே இறைவன் சிரசாசனத்தில் தலைகீழாய் காட்சி தருகிறார் என்கிறது தலபுராணம்.

யம பயம் போக்கும் சிவ பெருமான்

எமன் பூஜித்த தலம் ஆதலால் ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம் உள்ளவர்கள், ஜாதகத்தில் கண்டம் உள்ளவர்கள் இங்கு வந்து இறைவனையும் அம்பிகையையும் ஒரு சேர தரிசித்து செல்ல எம பயம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகள், திருமண தடை, குழந்தையின்மை போன்ற குறைபாடுகளை நீக்கும் தலமாகவும் விளங்குகிறது. இந்த இறைவனையும், அம்பாளையும் வழிபட் டால் குடும்ப ஒற்றுமை ஓங்கும், கணவன்-மனைவி பிரச்சினை மறையும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

Read More
தேனி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்

தேனி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்

நவக்கிரகங்கள் தங்களின் தேவியருடனும், வாகனத்துடனும்அருள்பாலிக்கும் அரிய காட்சி

தேனி மாவட்டம் அல்லிநகரம் பங்களா மேடு பகுதியில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இறைவனின் திருநாமம் சுந்தரேசுவரர்.இறைவியின் திருநாமம் மீனாட்சி.

பொதுவாக சிவாலயங்களில் நவக்கிரகங்கள் ஒரே பீடத்தில் தனியாக எழுந்தருளி அருள் பாலிப்பார்கள். ஆனால் இக்கோவிலில் நவக்கிரகங்கள் தங்கள் மனைவியரோடும், வாகனங்களோடும் எழுந்தருளியிருப்பது ஒரு அரிய காட்சியாகும். நவக்கிரகங்களின் இத்தகைய தோற்றத்தை, நாம் ஒரு சில இடங்களில் மட்டுமே தரிசிக்க முடியும்.

Read More
அதியமான்கோட்டை தட்சிண காசி காலபைரவர் கோவில்

அதியமான்கோட்டை தட்சிண காசி காலபைரவர் கோவில்

தனது திருமேனியில் 12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும் கொண்ட தட்சிண காசி காலபைரவர்

தர்மபுரி - சேலம் சாலையில் 7 கி.மீ. தொலைவிலுள்ள அதியமான்கோட்டையில் அமைந்துள்ளது கால பைரவர் கோவில். இந்தியாவில் 2 காலபைரவர் கோயில்கள் மட்டுமே உள்ளன. 'ஒன்று காசி கங்கைக்கரையில். இரண்டாவது அதியமான் கோட்டையில்' உள்ள தட்சிண காசி காலபைரவர். காசிக்கு அடுத்தபடியாக இக்கோவில் போற்றப்படுவதால், தட்சிண காசி கால பைரவர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. அதனால் இந்தத் தலம் முக்தி க்ஷேத்திரம் என்றும் போற்றப்படுகிறது.

வள்ளல் அதியமான் கட்டிய கோவில்

ஔவைக்கு நெல்லிக்கனியைக் கொடுத்த, கடையெழு வள்ளல்களில் ஒருவராகப் போற்றப்படும் அதியமான்தான் இங்குள்ள தட்சிண காசி காலபைரவர் கோவிலைக் கட்டினார். அதியமான், தனக்கு பகை மன்னர்களால் ஆபத்து எதுவும் நேராமல் இருக்க தெய்வ சக்தி துணை இருந்தால் நல்லது என்றும், அந்த தெய்வ சக்தி, சிவபெருமானின் அவதாரங்களில் ஒன்றான, காவல் தெய்வமான கால பைரவர்தான் என்றும் நினைத்தார். அதனால் கால பைரவருக்கு ஓர் ஆலயம் ஏற்படுத்த விரும்பினார். காலபைரவர் சிலையை காசியிலிருந்து கொண்டு வந்து தான் கட்டிய கோவிலில் பிரதிஷ்டை செய்தார். கால பைரவரின் கருவறை விதானத்தில் நவகிரகங்களின் திருவடிவங்களையும் வடித்தார். நவகிரகங்களின் ஆற்றலும் கோயிலில் இருக்கவேண்டும் என்பதற்காகவும், கால பைரவரை மட்டுமே ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யக்கூடாது என்பதற்காகவும்தான் அதியமான் மன்னர் நவகிரகங்களை வடித்து வழிபட்டார் என்று சொல்லப்படுகிறது. 64 வகை பைரவர்களும் ஒரே சொரூபமாக, 'உன்மத்திர பைரவராக' அருள்பாலிக்கும் இவர் திருமேனியில் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் இருக்கின்றன. கோவில் உட்கூரையில் 9 நவகிரகங்களும் சக்கரம்போல் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

அதியமான் மன்னருக்கும், நாட்டு மக்களுக்கும் தட்சணகாசி காலபைரவர் குலதெய்வமாக விலங்கினார். அதியமான் கோட்டையின் சாவி கூட காலபைரவரின் கையில்தான் இருக்கும். தனது நாட்டைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட பைரவர் என்பதால், பைரவர் கையில் திரிசூலத்துடன் சேர்த்துப் போர் ஆயுதமான வாளும் வைத்து இன்றளவும் வணங்கி வருகின்றனர்.

பிரார்த்தனை

மேஷராசிகாரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும், ரிஷபம் கழுத்து, மிதுனம் தோள், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.

தட்சிண காசி கால பைரவருக்கு பூசணி தீபம் ஏற்றி வழிபட்டால், எதிரிகளின் தொல்லைகள் அகல்வதுடன், காரியங்கள் சித்தியாகும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால பூஜை, மாதம்தோறும் வரும் தேய்பிறை அஷ்டமி அன்று காலை கணபதி, லட்சுமி, அஷ்டமி நாளில் அஷ்ட பைரவ ஹோமம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதும் குறிப்பிடத் தக்கது. மேலும் அன்று நள்ளிரவு 1,008 கிலோ மிளகாய் மற்றும் 108 கிலோ மிளகு கொண்டு சத்ரு சம்ஹார ஹோமமும் நடைபெறுகிறது.

பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிப்பு பிரசாதம்

பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிப்பது, திருச்சி குணசீலம் பெருமாள் கோயில் போல், இங்கேயும் நடைபெறுகிறது. இதனால், பில்லி, சூனியம் முதலான துஷ்ட சக்திகளின் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். எதிரிகளின் தொல்லை ஒழியும். எதிர்ப்புகள் யாவும் அகலும் என்பது ஐதீகம்.

தர்மபுரி மக்கள் மட்டுமல்ல, கர்நாடகா, கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தட்சிண காசி கால பைரவரை வழிபட்டு அருள் பெற்றுச் செல்கின்றனர்.

Read More
தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில்

தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில்

தென்குடித்திட்டை - தமிழகத்தில் குரு பெயர்ச்சிக்கு சிறந்த தலம்

தஞ்சாவூருக்கு வடமேற்கே 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் தென்குடித்திட்டை. இறைவன் திருநாமம் வசிட்டேசுவரர். இறைவியின் திருநாமம் உலகநாயகியம்மை.

தமிழகத்தில் குரு பெயர்ச்சிக்கு சிறந்த தலம் என்றால் அது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோவில்தான். குருபகவான் இக்கோவிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில், தெற்கு நோக்கி தனி சன்னதியில், ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். சனி பகவானுக்கு பரிகாரம் செய்ய உகந்த கோவிலிலாகவும் இது விளங்குகின்றது.

நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது.

இவருக்கு இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும் குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வியாழ பகவானுக்குரிய நாளாகிய வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம். நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். குருபகவானுக்கும் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர் களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பின்னர், மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம். மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும். குரு பகவானின் அதி தேவதைகளான பிரம்மன், இந்திரன் ஆகியோரை வழிபட்டாலும் குரு மகிழ்ச்சி கொண்டு பலன்களை வழங்குவார். ஜாதகத்தில் குரு பலவீனமாகவோ, தோஷத்துடனோ இருந்தால், நவமி அன்று சண்டி ஹோமம் செய்வது சிறப்பான பலனை தரும்.

சந்தான பாக்கியம் அளிக்கும் தலமாக இத்திருத்தலம் விளங்குகிறது. மேலும் கடன் தொல்லை அகலவும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படவும் இங்கு வந்து வழிபடுகின்றனர்.

Read More
திருமங்கலக்குடி மங்களாம்பிகை உடனாய பிராணநாதேசுவரர் கோவில்

திருமங்கலக்குடி மங்களாம்பிகை உடனாய பிராணநாதேசுவரர் கோவில்

சரும நோய் தீர எருக்க இலையில் உப்பில்லாத தயிர் சாத நைவேத்தியம் படைக்கப்படும் தேவாரத்தலம்

கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில், ஆடுதுறைக்கு வடக்கே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருமங்கலகுடி. இறைவன் திருநாமம் பிராணநாதேசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை.

தலபுராணம்

இத்தலம் ஒரு சிறந்த குஷ்டரோக நிவர்த்தித் தலம் ஆகும். ஒரு முறை காலமா முனிவர் கிரக மாற்றத்தால் தனக்கு தொழு நோய் ஏற்படப் போவதை அறிந்து, நவக்கிரகங்களை வேண்ட, நவக்கிரகங்கள் அவருக்கு அருள் புரிந்தன. இதையறிந்த பிரம்மன் கோபம் கொண்டு முனிவருக்கு வரவிருந்த நோயை நவக்கிரகங்களுக்கு உண்டாகும்படி சபித்து விட்டார். பூலோகம் வந்த நவக்கிரகங்கள் சிவனை நோக்கித் தவமிருந்து சாப விமோசனம் பெற்றனர். நவக்கிரகங்கள் தங்களுக்குத் தொழுநோய் ஏற்படாமலிருக்க ஸ்தாபித்த லிங்கத்தைக் கொண்டு எழுந்த ஆலயம் திருமங்கலக்குடி பிராணநாதேசுவரர் ஆலயம்.

நவக்கிரகங்கள் தங்களின் சாபம் நீங்க, வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் படைத்து இறைவனை வழிபட்டதாக தல புராணம் சொல்கிறது. எனவே இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் உச்சிகால பூஜையின் போது, உப்பில்லாத தயிர் சாதம் சுவாமிக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. பித்ரு தோஷம் உள்ளவர்கள், முன்னோர்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யாதவர்கள், இத்தல இறைவனுக்கு தயிர் சாதம் நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். இங்கு நவக்கிரகங்களுக்கு என்று தனிச் சன்னிதி கிடையாது. இங்கிருந்து சற்று தூரத்தில் நவக்கிரகங்கள் அனைத்தும் அருளும், சூரியனார் கோவில் அமைந்திருக்கிறது. ஒரே ஆலயம்தான் இப்படி இரண்டாக பிரிந்திருப்பதாகவும், அதில் பிராணநாதேசுவரர் கோவில்தான் பிரதானமானது என்றும் சொல்லப்படுகிறது. பிராணநாதேசுவரரை வழிபட்ட பிறகுதான், சூரியனார் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.

சரும நோய் தீர செய்யப்படும் பரிகாரம்

உடலில் சரும வியாதியுள்ளவர்கள் இங்கு வந்து கார்த்திகை முதல் ஞாயிறு தொடங்கி 11 ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் சுவாமிக்கு நிவேதனம் செய்து சாப்பிட்டு வந்தால் வியாதியிலிருந்து நீங்கப்பெருவர் என்பது வரலாறு.

Read More
கோடங்கிப்பட்டி சித்திரபுத்திர நாயனார் கோவில்

கோடங்கிப்பட்டி சித்திரபுத்திர நாயனார் கோவில்

அசுவினி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய சித்திரகுப்தன் தலம்

தேனி - போடிநாயக்கனூர் சாலையில், சுமார் 9 கி.மீ. தூரத்திலுள்ள கோடங்கிபட்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது, 500 ஆண்டுகள் பழமையான சித்திரபுத்திர நாயனார் கோவில். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தையும், கோடங்கிபட்டியையும் தவிர வேறு எந்த தலத்திலும் சித்திரகுப்தனுக்கு என்று தனி கோவில் கிடையாது.

பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, தர்மங்கள் குறித்த முழு விபரங்களையும் பதிவு செய்துவைப்பது சித்திரகுப்தன். ஜீவனின் மரண காலத்தில் சித்திரகுப்தன் கொடுக்கும் பாவ, புண்ணியக் கணக்கின் முடிவை வைத்தே எமதர்மன் ஜீவனுக்கு தண்டனை அளிப்பதும், பிரம்மா அதன் தலையில் எழுதுவதும் அமையும். ஆகவே சித்திரகுப்தரை வேண்டிக்கொள்வது மிகவும் அவசியமாகிறது.

சித்திரகுப்தன் காமதேனுவின் மகனாக சித்திரை மாதத்தில், சித்திரை நட்சத்திரத்தில், பௌர்ணமி தினத்தன்று பிறந்தார். இதனாலும், சக்திதேவி வரைந்த சித்திரத்தில் இருந்து தோன்றியதாலும் சித்திரபுத்திரன் என்று அழைக்க்கப்படுகிறார். இருப்பினும், சித்திரகுப்தன் என்ற பெயரே பிரசித்தி பெற்றுள்ளது.

சித்திரகுப்தர் பிறந்த நாளான சித்ரா பௌர்ணமியன்று எண்ணெய் தேய்த்து குளித்தால் அவர் நமது பாவங்களை நீக்குவார் என்பது நம்பிக்கை. கோடாங்கிபட்டி சித்திரபுத்திரநாயனார் கோவிலில் இவரது மனைவியான பிரபாவதிக்கு சன்னதி உள்ளது. பசுவின் கர்ப்பத்தில் இருந்து இவர் பிறந்ததால் பசும்பால், பசுந்தயிர், பசுநெய் உள்ளிட்டவற்றை முற்றிலுமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சித்திராபவுர்ணமியன்று சித்திரகுப்த மந்திரம் சொல்லி வழிபட அவர் நமது இல்லத்தில் குடியேறி செழிப்பான வாழ்க்கை அமைய வழிவகுப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

நவகிரகங்களில் கேதுவுக்கு சித்திரகுப்தன்தான் அதிபதியாக உள்ளார். எனவே, கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இவரை வழிபட்டால், தோஷம் நீங்கும். அசுவினி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இவரை வழிபட நற்பலன்கள் அடைவார்கள். சித்ரா பௌர்ணமி அன்று பெண்கள் விரதமிருந்து, உப்பில்லாத உணவு உண்டு வேண்டிக்கொள்வதால் ஆயுள் நீளும் என்பது நம்பிக்கை. சித்திரகுப்தனிடம் மலையளவு பாவத்தை கடுகளவாகவும், கடுகளவு புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக்கொள்ளும்படி பிரார்த்திப்பார்கள்.

Read More
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்

குரு தட்சிணாமூர்த்தி பரிகார தலம்

கும்பகோணத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் ஆலங்குடி. தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் இந்த இடத்திற்கு ஆலங்குடி என்று பெயர் வந்தது. இறைவன் திருநாமம் ஆபத்சகாயேஸ்வரர். இறைவியின் திருநாமம் ஏலவார்குழலி.

இத்தலம் சிறந்த குரு தட்சிணாமூர்த்தி பரிகார தலமாக விளங்குகிறது. இந்த தலத்தில் சிறப்புடைய குரு தட்சிணாமூர்த்தி, இறைவனின் தெற்கு சுற்றுச் சுவரில் எழுந்தருளியுள்ளார். தட்சிணாமூர்த்தி உற்சவராகத் தேரில் பவனி வருவது தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டும்தான் என்பது கூடுதல் சிறப்பாகும். சித்ரா பௌர்ணமி அன்று பத்து நாள் உற்சவ விழாவும், தட்சிணாமூர்த்திக்குத் தேர்த் திருவிழாவும் நடைபெறுகிறது.

குரு தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்து 24 நெய் தீபங்கள் ஏற்றி வழிபட குரு தோஷங்கள் நீங்கி நன்மை பெறலாம் என்பது ஐதீகம். குருபகவானுக்கு முல்லை மலரால் அர்ச்சனை, மஞ்சள் வஸ்திரம் சாத்துதல், கொண்டைக்கடலை சுண்டல், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியங்களுடன் சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பாலாபிஷேகம், குரு ஹோமம் செய்ய சகல தோஷங்களும் நிவர்த்தியாகி அவருடைய அருள் கிடைக்கும்.

வாரந்தோறும் வியாழக்கிழமை, தினசரி வரும் குரு ஹோரை மற்றும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்கள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் குரு பகவானை வழிபடுதல் சிறந்தது.

Read More
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

வெள்ளைக் கல்யானை மீண்டும் கரும்பு தின்ற அதிசயம்!

மதுரையில் சோமசுந்தரக்கடவுள் செய்த அறுபத்திநான்கு திருவிளையாடல்களில் ஒன்று, சொக்கநாதர் கோவில் கல் யானை கரும்பு தின்ற நிகழ்ச்சியாகும். சோமசுந்தரேசுவரர் சன்னதியின் திருச்சுற்றில் இருக்கும் வெள்ளை யானைகளில் ஒன்று தான் கரும்பு தின்றதாகப் புராணம்.

புராணக் காலத்தில் நடந்த அதிசயம் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் நிகழ்ந்ததாக வரலாறு உண்டு. டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதி மாலிக்காபூர் மதுரை வரை படையெடுத்து வந்து எல்லாத் திருக்கோவில்களையும் கொள்ளை அடித்துக் கொண்டு வந்த போது நிகழ்ந்தது இது. மதுரையை முற்றுகையிட்டு மதுரையை வென்று மாலிக் காபூர் ஆண்டு வரும் போது அவரது படைத்தளபதி ஒருவர் திருக்கோவிலைச் சுற்றி வந்துக் கொண்டிருந்தார். அப்போது திருச்சுற்றில் இருக்கும் எட்டு வெள்ளை யானைகளைக் கண்டு வியந்து அருகில் இருந்தவர்களிடம் அவற்றைப் பற்றிக் கேட்டார்.

அங்கிருந்தவர்கள் பலருக்கு அந்த யானைகள் அங்கே காலம் காலமாக இருப்பது தெரியுமே ஒழிய அவற்றைப் பற்றிய மற்ற செய்திகள் தெரியவில்லை. அதனால் அங்கே அமர்ந்திருந்த துறவி ஒருவரிடம் அந்த தளபதியை அழைத்துச் சென்றனர். அந்தத் துறவியும் கல் யானை கரும்பு தின்ற கதையைச் சொன்னார். அந்தக் கதையைக் கேட்ட தளபதி உடனே நேராக மாலிக் காபூரிடம் சென்று அந்தக் கதையைச் சொன்னார். கதையைக் கேட்டு மாலிக்காபூர் ' கல்யானையாவது, கரும்பைத் தின்பதாவது. நல்ல கதை' என்று ஏளனமாகச் சிரித்தான் . அந்தக் கதையைச் சொன்ன துறவியைக் காட்டு. இப்போதும் கல்யானை கரும்பைத் தின்னுமா என்று கேட்போம்' என்று சொல்லி கோவிலுக்கு வந்தார்கள்.

துறவியிடம் வந்து 'எந்தக் கல்யானை கரும்பு தின்றது?' என்று கேட்டான் மாலிக்காபூர். அவர் ஒரு யானையைக் காட்ட, 'இப்போது இந்த யானை கரும்பைத் தின்னுமா?' என்று கேட்க, துறவி 'தின்னும்' என்று சொன்னார். ஏளனமாகப் பார்த்துக் கொண்டே மாலிக்காபூர் ஒரு கரும்பை நீட்ட அந்த கல்யானை கரும்பை வாங்கித் தின்றது. ஆச்சரியப் பட்ட மாலிக்காபூர் திரும்பி அந்தத் துறவியைப் பார்க்க அங்கே யாரும் இல்லை. அங்கே கூடியிருந்தவர்கள் எல்லோரும் அது சோமசுந்தரக் கடவுளின் திருவிளையாடலே என்று போற்றினார்கள்.

Read More
விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில்

விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில்

அட்சய திருதியைக்கு உரிய தனிச்சிறப்புத் தலம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் விளங்குளம் . இறைவன் திருநாமம் அட்சயபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் அபிவிருத்தி நாயகி.

கருவறையில் அட்சயபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இவர், சனி பகவானுக்கு அருளிய தினம் ஓர் அட்சய திருதியை நாள். எனவே இறைவன், அட்சயபுரீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார். அட்சயம் என்றால் வளர்வது என்று அர்த்தம். இத்தலத்திற்கு ஒருமுறை வந்து போனாலே பக்தர்களின் இல்லத்தில் செல்வம் உள்ளிட்ட பதினாறு பேறுகளும் தழைத்து வளரும் என்பது ஐதீகம்.

செல்வங்கள் அனைத்துக்கும் அதிபதியான குபேரன், ஈசனை வழிபட்டே சங்கநிதி, பதுமநிதிகளைப் பெற்றான் என்கிறது புராணம். அப்படி குபேரன் செல்வங்களைப் பெற்று அளகாபுரிக்கு அரசனானதும், அட்சயபுரீஸ்வரரின் அருளால்தான் என்பதால் இத்தலம் அட்சய திருதியைக்கு உரிய தனிச்சிறப்புத் தலமாகக் கூறப்படுகிறது.

அம்பிகை அபிவிருத்தி நாயகி, மேல் இரு கரங்களில் தண்டத்தையும், தாமரையையும் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் புன்னகை தவழ தென்திசை நோக்கி அருள்பாலிக்கின்றாள். அம்பிகையின் திருநாமமும், அபிவிருத்தி நாயகி என அமைந்திருப்பது, இத்தலத்தில் வழிபட்டால், மேலும் மேலும் செல்வங்கள் வளரும் என்பதையே உறுதிப்படுத்துகிறது. கணவருக்கு நிகராக, இவளும் நமக்கெல்லாம் அபிவிருத்தியைத் தந்தருளும் கருணைக் கடல் என்று பக்தர்கள் போற்றுகின்றனர்.

அட்சய திருதியை நாளில், மூலவர் சிவனாருக்கு சந்தனக் காப்பில் மாதுளை முத்துக்கள் பதித்து, சிறப்பு பூஜைகள் நடைபெறும். பிறகு, சனீஸ்வரருக்கு புனுகு கலந்த சந்தனக் காப்பு செய்வித்து, எள், அரிசி, கோதுமை, பாதாம்பருப்பு, குங்குமப்பூ மற்றும் நவதானியங்களைப் பதித்து அலங்கரிப்பார்கள்.

அட்சய திருதியை நாளிலும் வெள்ளி, ஞாயிறு, திங்கட்கிழமை முதலான நாட்களிலும் விளங்குளம் வந்து, சிவபார்வதியைத் தரிசித்தால், சகல செல்வங்களும் பெற்று இனிதே வாழலாம் என்பது ஐதீகம்.

புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அட்சயதிருதியை நாளில் நடந்த சில நிகழ்வுகள்

- வேத வியாசர், மகாபாரதத்தை விநாயகர் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நாள் அட்சய திருதியை.

- திருமாலின் பத்து அவதாரங்களில் ஒருவரான பரசுராமர் அவதரித்த நாள்

- நான்கு யுகங்களில் முதல் யுகமான கிருத யுகத்தில், பிரம்மன் உலகத்தைப் படைத்தது அட்சய திருதியை நாளில்தான்

- இரண்டாவது யுகமான கிரேதா யுகம் தோன்றிய நாளும் ஒரு அட்சய திருதியை அன்றுதான்

-காசியில் அன்னபூரணியிடம் அன்னம் பிச்சை பெற்று, சிவனின் தோஷம் நீங்கிய நாளும் அட்சய திருதியைதான்

- பகீரதனின் தவத்தால் கங்கை பூமிக்கு வந்ததும் ஒரு அட்சய திருதியை அன்றுதான்

- கிருஷ்ணன் தன் நண்பன் குசேலனிடமிருந்து அவல் மூட்டையை பெற்றுக் கொண்டு அவருடைய வறுமையை நீக்கிய நாள் அட்சய திருதியை.

- கிருஷ்ணன், துரியோதனன் சபையில் திரௌபதியின் மானத்தை காப்பாற்றியதும் ஒரு அட்சய திருதியை அன்றுதான்

Read More
திருக்காலிமேடு சத்தியநாதர்  கோவில்

திருக்காலிமேடு சத்தியநாதர் கோவில்

ஏழு சீடர்களுடன் காட்சி தரும் அபூர்வ தட்சிணாமூர்த்தி

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருநெறிகாரைக்காடு. இத்தலம் திருக்காலிமேடு என்று தற்போது அழைக்கப்படுகின்றது. இறைவன் திருநாமம் சத்தியநாதர். இத் தலம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கும் முற்பட்டது.

காஞ்சீபுரத்தின் ஆதி கோவிலான இத்தலத்தில், இறைவன் திருமேனி மணலால் ஆனது. காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோவிலே எல்லா சிவன் கோவில்களுக்கும் பொதுவான அம்பிகை சன்னதியாக விளங்குகின்றது. அதனால் தனிப்பட்ட அம்பிகை சன்னதி எந்த சிவன் கோவிலிலும் கிடையாது. ஆனால் இக்கோவிலில் பிரமராம்பிகை என்ற திருநாமத்துடன், அம்பிகை உற்சவ திருமேனியாக எழுந்தருளி இருக்கிறாள். அம்பிகையின் உலோகத் திருமேனியின் வலது கரத்தில் மச்ச ரேகையும், தான்ய ரேகையும், மீனின் வடிவம் மற்றும் நெற்கதிர் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது ஒரு தனிச்சிறப்பாகும்.

பொதுவாக தட்சிணாமூர்த்தி, இறைவனின் கருவறை சுற்றுச்சுவரில் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களுடன் எழுந்தருளி இருப்பார். ஆனால் இந்தத் தலத்தில் தட்சிணாமூர்த்திப் பெருமான் ஏழு சீடர்களுக்கு ஞானம் தருவதாக அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு வித்தியாசமான அமைப்பாகும். இவரிடம் வேண்டிக்கொண்டால் தெளிந்த ஞானம் பிறக்கும்.

Read More
பாமணி நாகநாத சுவாமி கோவில்

பாமணி நாகநாத சுவாமி கோவில்

சிவபெருமானுக்கு மாம்பழ சாறில் அபிஷேகம் செய்யப்படும் தேவாரத்தலம்

மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் பாமணி. இறைவன் திருநாமம் நாகநாத சுவாமி, திருப்பாதாளேஸ்வரர். இறைவியின் திருநாமம் அமிர்தநாயகி.

இறைவன் புற்று மண்ணாலான சுயம்பு திருமேனி உடையவர். பொதுவாக சிவாலயங்களில் சுயம்பு லிங்கத்துக்கு வெள்ளிக்கவசம் சாற்றியே அபிஷேகம் நடக்கும். ஆனால் புற்று மண்ணால் ஆன நாகநாத சுவாமிக்கு, நேரிடையாகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தினமும் இருவேளை அபிஷேகம் நடைபெற்று வருவது இத்தலத்தின் தனிப்பெரும் மகிமையாகும்.

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடைபெற்ற போரில் முசுகுந்த சக்கரவர்த்தி தேவர்களுக்கு ஆதரவாக சென்று அசுரர்களை போரிட்டு வென்றார். அதற்கு இந்திரன் தான் தினமும் பூஜித்து வந்த மரகத லிங்கத்தையும், கொடி முந்திரியையும் (திராட்சை) அவருக்கு பரிசாக வழங்கினான். அவர் அந்த லிங்கத்துடனும், திராட்சையுடனும் திருவாரூர் தியாகேசர் சன்னிதிக்கு வந்தார். அப்போது திருப்பாதாளேசுவரத்தில் பிரம்மோற்சவம் நடப்பதால் அங்கு சென்று நிவேதனம் செய்வாயாக என்று அசரீரி கேட்டது. இதையடுத்து அவர் இங்கு வந்து திருப்பாதாளேஸ்வரரை பணிந்து திராட்சையை நிவேதனம் செய்தார். அதுமுதல் இங்கு கொடி முந்திரி எனப்படும் பச்சை திராட்சை சிறப்பு நிவேதனம் செய்யப்படுகிறது.

இத்தலத்தில் இறைவனுக்கு மாம்பழ சாறில் அபிஷேகம் செய்யப்படுவதும் ஒரு தனிச் சிறப்பாகும். திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது நான்கு மாங்கனிகள் தோன்றின. அதை எடுத்த பிரம்மன் ஒன்றை விநாயகருக்கும், மற்றொன்றை ஆறுமுகனுக்கும் கொடுத்தார். மூன்றாவது கனியை காஞ்சியில் முளைக்கும்படி ஊன்றிவிட்டு, நான்காவது கனியை இத்தலத்திற்கு கொண்டு வந்து நாகநாதசுவாமிக்கு சாறு பிழிந்து அபிஷேகம் செய்தார். பிறகு அதன் விதையை பிரம்ம தீர்த்தத்தின் வட கரையில் ஊன்றினார். இதனால் மாமரம் இத்தல விருட்சமாகிறது. இன்றும் நாகநாதருக்கு மாம்பழச்சாறு அபிஷேகம் நடப்பது விசேஷம். மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம், நதி என ஐந்து வகையாலும் சிறப்பு பெற்றது இத்தலம் ஆகும்.

இக்கோவில் விசேஷ அமைப்பின்படி சுவாமியை தரிசனம் செய்து நவக்கிரகங்களை வலம் வந்தால் 'ஓம்' என்ற ஓங்கார வடிவில் பக்தர்களின் தரிசன சுற்று முடிவடையும். பொதுவாக சிவாலயங்களில் அம்பாள் சன்னிதியை தாண்டிய பிறகே நவக்கிரகங்கள் அமைந்திருக்கும். இக்கோவிலின் விசேஷ அமைப்பின்படி இத்தலத்தில் அம்பாள் சன்னிதி தனியாக பலிபீடம் கொடி மரத்தின் அருகில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

Read More
கத்தரிநத்தம் காளகஸ்தீஸ்வரர்   கோவில்

கத்தரிநத்தம் காளகஸ்தீஸ்வரர் கோவில்

ஸ்ரீகாளஹஸ்திக்கு இணையான ராகு-கேது பரிகார தலம்

தஞ்சாவூர்- திருவாரூர் சாலையில் அமைந்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள தலம் கத்தரிநத்தம். இறைவன் திருநாமம் காளகஸ்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இக்கோவில் மூலவரின் வடிவமைப்பு தஞ்சை பெரிய கோயில் மூலவர் பெருவுடையாரின் வடிவமைப்பை ஒத்திருக்கும்.

ராகு, கேது இங்கே இறைவனை வழிபட்டு நலம் அடைந்ததால் இது ராகு, கேது, தலம் என்றும்,ஜாதகத்தில் ராகு, கேது தோஷம் உள்ளவர்களுக்கு பரிகார தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. இத்தலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்திக்கு இணையான ராகு-கேது பரிகார தலமாக விளங்குகிறது. இறைவன் இறைவியின் திருநாமங்களும் ஸ்ரீகாளஹஸ்தி தலத்தைப் போலவே அமைந்திருக்கிறது.

ராகு-கேது தோஷம் உள்ளவர்கள், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ராகு கால வேளையில் இங்கு வந்து, நாகலிங்கப் பூ, வில்வம் மற்றும் வன்னி இலை ஆகியவை சாற்றி, தல விருட்சமான குரா மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி மனதாரப் பிரார்த்தனை செய்தால், ராகு கேது தோஷம் யாவும் விலகும்.

திருமண தடை நீக்கும் பரிகார பூஜை

திருமண தோஷம் உள்ள ஆண், பெண் இந்த தலத்திற்கு வந்து வழிபட்டால் திருமணம் உடனே நடைபெறும். திருமண தடை நீக்கும் பரிகார தலமாக திகழும் இக்கோவிலில், ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலத்தில் திருமண தடையை நீக்கும் பரிகார பூஜை நடைபெறுகிறது. அப்போது திருமண தோஷம் உள்ளவர்களின் ஜாதகத்தை வைத்து அர்ச்சனை செய்கிறார்கள். அப்படி செய்தால் மூன்று மாதங்களுக்குள், அவர்களுக்கு திருமணம் நடந்தேறி விடும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இதனால் பல வெளியூர் பக்தர்கள் இப்பூஜையில் வந்து கலந்து கொள்கிறார்கள்.

Read More
பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோவில்

பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோவில்

இறைவனுக்கும் அம்மனுக்கும் சித்திரை முதல் ஏழு நாட்கள் சூரிய பூஜை நடக்கும் அதிசயத் தலம்

சென்னை தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் விக்ரவாண்டியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் பனையபுரம். இறைவன் திருநாமம் பனங்காட்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் சத்யாம்பிகை. சிவனின் இடதுபுறத்தில் சற்று தொலைவில் அம்பிகைக்கு தனியாக ஆலயம் அமைந்துள்ளது. பனை மரத்தை தல விருட்சமாக கொண்ட ஐந்து தலங்களுள் இதுவும் ஒன்று.

சூரியன் வழிபட்ட தலங்களில் புறவார் பனங்காட்டூரும் ஒன்றாகும். அதனால் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் நாளில் இருந்து தொடர்ந்து ஏழு நாட்கள் சூரியன் தன் ஒளிக்கதிர்களால்,இறைவனையும் அம்மனையும் வழிபடுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இப்படி ஏழு நாட்கள் தொடர்ந்து இறைவனுக்கும் அம்மனுக்கும்

சூரிய வழிபாடு நடப்பது வேறு எந்த தலத்திலும் கிடையாது. சூரிய உதயத்தின் போது, சூரியன் தன்னுடைய பொன்னிற ஒளிக்கதிர்களால் இராஜகோபுரம், கொடிமரம், பலிபீடம், நந்தி,மண்டபங்கள் இவற்றையெல்லாம் கடந்து, கருவறையில் வீற்றிருக்கும் இறைவனின் சிரசில் பட்டு வணங்குகிறது. இதன் பின் அது மெல்ல கீழிறங்கி சிவனின் பாதத்தை அடைகின்றது. பாதத்தைத் தொடும் அதேவேளையில் சற்று தொலைவில் உள்ள அருள்மிகு மெய்யாம்பிகை அம்மன் சிரசின் மீதும் ஒளிக்கதிர்கள் விழுகின்றன. பின்பு அந்த ஒளி மெல்ல கீழிறங்கி அன்னையின் பாதத்தில் அடைவதுடன் அன்றைய சூரிய பூஜை நிறைவு பெறுகின்றது. வானவியல் சாஸ்திர நுட்பத்தை உணர்ந்து, கோவிலின் கட்டிட வடிவமைப்பை அமைத்திருப்பது, நம் முன்னோர்களின் புத்திக்கூர்மையையும், தொழில்நுட்பத்திறனையும் உலகத்துக்கு பறைசாற்றுகின்றது.

கண் கோளாறுகள் போக்கும் பரிகாரத் தலம்

புறாவுக்கு அடைக்கலம் தந்து தன் கண்களை அளித்த சிபி சக்ரவர்த்திக்கு காட்சி தந்து மீண்டும் இறைவன் கண்ணொளி தந்த தலம் இது. பனங்காட்டீசனின் மற்றொரு பெயர் கண்ணமர்ந்த நாயனார், நேத்தோதாரகேஸ்வரர் சுவாமி என்பது. இதன் பொருள் கண் கொடுத்த கடவுள் என்பதாகும். எத்தகைய பார்வைக்கோளாறு உள்ளவரும் இங்குள்ள இறைவனிடம் தஞ்சம் புகுந்தால் அவர்களது குறை நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின்நம்பிக்கையாக அமைந்துள்ளது.

குழந்தை வரம் அருளும் பனம் பழம்

இக்கோவிலில், தலமரமான பனை மரங்களில் ஆண் பனை உயரமாகவும், பெண்பனை குள்ளமாகவும் காலம் காலமாக காட்சி தருவது வியப்பான ஒன்றாகும். பெண் பனையிலிருந்து விழும் பழத்தை உண்பவர்களுக்கு மகப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

Read More
முறப்பநாடு கைலாசநாதர் கோவில்

முறப்பநாடு கைலாசநாதர் கோவில்

நவகைலாய தலங்களில் குரு தலம்

திருநெல்வேலி - தூத்துக்குடி சாலையில், 15 கி.மீ தொலைவில் உள்ள தலம் முறப்பநாடு. இறைவன் திருநாமம் கைலாசநாதர். இறைவியின் திருநாமம் சிவகாமி அம்மன்.

இந்தியாவில் கங்கை நதியும், முறப்பநாடு தலத்தில் தாமிரபரணி நதியும் மட்டுமே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடுகின்றது. இதனால் இவ்விடம் தட்சிண கங்கை என்று போற்றப்படுகிறது. முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் குளித்தால் காசியில் குளித்த புண்ணியம் கிட்டும்.

முறப்பநாடு, திருநெல்வேலி/ தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நவகைலாய தலங்களில் ஐந்தாவது இடத்தை (நடுக் கைலாயம்) பெறுகின்றது. இந்த கோவில், நவக்கிரகத்தில் குருபகவான் ஆட்சி பெற்று ஏழாவது இடத்தை பெறுகிறது. சிவபெருமானே தட்சிணாமூர்த்தியாக, குருவாக, தென்முகக் கடவுளாக வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். இங்கு கைலாசநாதர், குரு அம்சமாக இருப்பதால் அவருக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, கொண்டைக்கடலை நைவேத்யம் படைத்து வழிபடும் வழக்கம். எனவே, குருபகவானின் அருள் பெற நாம் வழிபட வேண்டிய திருத்தலம் முறப்பநாடு ஆகும்.

வியாழ பகவானின் அனைத்து சக்திகளையும் இத்தலம் பெற்றிருப்பதால், பக்தர்கள் இந்த கோவிலில் வித்தியாசமான முறையில் தக்ஷிணாமூர்த்தி முன்பும், சனி பகவான் முன்பும் ஒன்பது முறை சுற்றி வழிபாடு செய்கிறார்கள். இப்படிச் செய்தால், நவகிரகங்களையும் சுற்றி வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இரட்டை பைரவர்

கோவிலின் வடகிழக்கு பகுதியில் தனிச்சந்நிதியில் இரண்டு பைரவர்கள் அருள்பாலிக்கின்றனர். நாய் வாகனத்துடன் காட்சி தரும் பைரவர் கால பைரவர் என்றும், வாகனம் இன்றி காட்சி தரும் மற்றொரு பைரவர் வீர பைரவர் என்றும் அழைக்கின்றனர். இது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.

தனுசு, மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்

குருவின் ஆதிக்கம் பெற்ற ராசி/நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம் இது. கையில் பணம் தங்குவதில்லை என வருந்துபவர்களும், வீட்டில் சுப காரியங்கள் நடப்பதில்லை என வருந்துபவர்களும் சென்று வணங்க வேண்டிய கோவில் இது தான். இது வியாழனுக்குரிய பரிகார தலம் என்பதால், திருமண தடை உள்ளவர்கள் இக்கோவிலில் சென்று வணங்கினால், சுப காரிய தடை

Read More