நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவில்

நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவில்

பட்டத்து யானைக்கு மீண்டும் கண்பார்வை அளித்த நஞ்சுண்டேஸ்வரர்

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் 23 கி.மீ., தொலைவில், அமைந்துள்ள தலம் நஞ்சன்கூடு. இறைவன் திருநாமம் நஞ்சுண்டேஸ்வரர். இறைவியின் திருநாமம் பார்வதி.

ஒரு சமயம், மைசூரை ஆண்ட திப்பு சுல்தானிற்கு மிகவும் பிரியமான பட்டத்து யானைக்கு திடீரென கண் பார்வை பறி போனது. அமைச்சர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் நடக்கும் பூஜைகளில், நாற்பத்தி எட்டு நாட்கள் கலந்து கொள்ள தனது பட்டத்து யானையை அனுப்பி வைத்தார் திப்பு சுல்தான். நாற்பத்தி எட்டாவது நாள் பூஜை நிறைவடைந்த போது, யானைக்கு மீண்டும் கண் பார்வை திரும்பியது. இதனால் மகிழ்ந்த திப்பு சுல்தான், மரகத லிங்கம் ஒன்றை இக்கோவிலில் பிரதிஷ்டை செய்தார். மரகத ஆரம் ஒன்றையும் காணிக்கையாகக் கொடுத்தார். இந்த சிவலிங்கம், ஹக்கீம் நஞ்சுண்டா என்று பெயரால் அழைக்கப்படுகிறது.

Read More
கல்பட்டு சனீஸ்வரன் கோவில்

கல்பட்டு சனீஸ்வரன் கோவில்

21 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தரும் சனி பகவான்

விழுப்புரத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் கல்பட்டு என்ற ஊரில் அமைந்துள்ள தனிக்கோவிலில், மூலவராக சனி பகவான், வேறெங்கும் இல்லாத வண்ணம் 21 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். நான்கு திருக்கரத்துடன், கரங்களில் சூலம், கத்தி, வில் மற்றும் அம்பு தாங்கி, வலது காலை காகத்தின் மீது ஊன்றி நின்ற வண்ணம் காட்சி தருகிறார். மேலும் இவர் யோகநிலையில் இருப்பது இன்னும் சிறப்பான விஷேசமாகும்.

சனி பகவானின் வலது காலில் உள்ள ஊனத்தால் அவரால் வேகமாக நடக்க இயலாது எனவே தான் மந்தன் என்ற திருநாமம் கொண்டார். இதை உணர்த்தும் வகையில் வலது கால் சற்று சிறியதாகவும் இடக்கால் நீண்டு இருக்கும் வண்ணம் மூலவர் விக்கிரகம் அமைந்துள்ளது.

ஏழரை சனி, கண்ட சனி, வக்ர சனி, விரய சனி என்று எந்த சனி தோஷத்தால் பாதிப்பு இருந்தாலும் ஒருமுறை இக்கோவிலில் வந்து பிராத்தனை செய்தால் போதும். அவை யாவும் நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

பங்குனி உத்திரத்தன்று இரண்டு தடவை திருக்கல்யாணம் நடைபெறும் அதிசயம்!

பங்குனி உத்திரத்தன்று நடைபெறும் தெய்வத் திருமணங்களை கண்டு வழிபட்டால், நமது திருமண வாழ்க்கை இனிமை நிறைந்ததாக மாறும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

பொதுவாக பங்குனி உத்திரம் தினத்தன்று ஒவ்வொரு கோவிலிலும் ஒரே ஒரு தடவைதான், அதுவும் உற்சவருக்குத்தான் திருக்கல்யாண உற்சவத்தை நடத்துவார்கள். ஆனால் திருவண்ணாமலை தலத்தில் மட்டும் பங்குனி உத்திரம் தினத்தன்று இரண்டு தடவை திருக்கல்யாணம் நடைபெறும். முதலில் மூலவரான அண்ணாமலையாருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். பிறகு உற்சவரான பெரிய நாயகருக்கு திருக்கல்யாணம் நடத்தப்படும். இது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மட்டுமே பின்பற்றப்படும் அதிசயமான நடைமுறையாகும். தமிழ்நாட்டில் எந்த ஒரு சிவாலயத்திலும் இப்படி திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுவதில்லை. குறிப்பாக மூலவருக்கு எந்த ஆலயத்திலும் திருக்கல்யாணம் நடத்த மாட்டார்கள்.

பொதுவாக எல்லா கோவில்களிலும் பங்குனி உத்திர திருமண விழா ஒரே நாளில் நடந்து முடிந்து விடும். ஆனால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மொத்தம் ஆறு நாட்கள் இந்த திருமண விழா நடைபெறும். நமது கலாச்சாரத்தில் கடைபிடிக்கப்படும் அனைத்து திருமண சடங்குகளும் செய்யப்படும். மாலை மாற்றுவது, நலங்கு வைப்பது, பூப்பந்து வீசி விளையாடுவது, மரு வீட்டுக்கு செல்வது, மீண்டும் தாய் வீட்டில் இருந்து வருவது, நலங்கு ஊஞ்சல் உற்சவம், பாலிகை விடுதல் என்று முழுமையான திருமண விழாவாக அந்த அண்ணாமலையார் கல்யாண உற்சவம் நடைபெறும்.

Read More
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி தேர் திருவிழா

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவின் ஏழாம் நாள் காலை தேரோட்டம் நடைபெறும். முதலாவதாக சிறிய தேரில் விநாயகர் உலா வர, அதை தொடர்ந்து பெரிய தேரில் கபாலீஸ்வரர் பவனி வருவார். அவரைப் பின்தொடர்ந்து கற்பகாம்பாள், வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேரில் வருவார்கள்.

கபாலீஸ்வரர், கைகளில் வில்லும் அம்பும் ஏந்தி பார் வேட்டைக்குச் செல்லும் கோலத்தில், மேளதாளம், நாதஸ்வரம் முழங்க, பக்தர்கள் கூட்டத்தின் நடுவே நான்கு மாட வீதிகளிலும் தேரில் பவனி வருவார். கபாலீஸ்வரரின் தேரோட்டத்தை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, பல வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

சகட தோஷத்தை நீக்கும் தேரோட்டம்

ஒருவருடைய ஜனன ஜாதகத்தில், குருவுக்கு 6, 8, 12 மிடங்களில் சந்திரன் நின்றால் அது சகட யோகமாகும். இந்த யோகம் இருப்பவர்கள் சில நேரங்களில் உச்சத்திலும் சில நேரங்களில் துன்பப்பட்டுக்கொண்டும் இருப்பார்கள். தேர் அசைந்து சென்று ஓரிடத்தில் நிலைத்தன்மை பெற்றுவிடும். அதுபோல, திருக்கோவில்களின் தேரோட்டத்தை தரிசிப்பது, ஒருவரின் சகட தோஷத்தை போக்கி, ஏற்ற இறக்கங்களை நீக்கி, நிலையான வாழ்வை தந்துவிடும் என்பது நம்பிக்கை. கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம் பார்ப்பவர் அனைவரும், சகடதோஷம் நீங்கி நிலையான வாழ்வு பெறுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோவில்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோவில்

ராகு-கேது இணைந்து ஒரே வடிவாக காட்சி தரும் அபூர்வ தோற்றம்

திருவாரூரில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள தேவாரத் தலம் திருவாஞ்சியம். இறைவனின் திருநாமம் வாஞ்சிநாதர். இறைவியின் திருநாமம் மங்களநாயகி.

ராகு பகவான் மனித தலையும்,பாம்பு உடலும் கொண்டவர். கேது பகவான் பாம்பு தலையும் மனித உடலும் கொண்டவர். திருவாஞ்சியத்தில் மட்டுமே ராகுவும் கேதுவும் ஒன்றாக ஓரே சிலையில், பாம்பு உடலாகவும் மனித முகமாகவும், ஓரே நிலையில் காட்சி தருகின்றனர். ஓரே மூர்த்தியாக எழுந்தருளியுள்ள ராகு-கேதுவை வழிபட்டால் நாகதோஷம், காலசர்ப்பதோஷம் நீங்கி நலம் பெறலாம். ராகு-கேதுவிற்கு பாலாபிஷேகம் செய்யும் போது பால் நீலநிறமாக மாறிவிடும்.

ஒருவரின் ஜாதகத்தில் ராகு மற்றும் கேதுவுக்கு இடையில் அனைத்து கிரகங்களும் இருந்தால், அவருக்கு 'காலசர்ப்ப தோஷம்' என்று கூறப்படுகிறது. திருவாஞ்சியம் தலம் என்பது ராகு, கேது மற்றும் காலசர்ப்ப தோஷத்திற்கு அதிகம் அறியப்படாத பரிகார தலமாகும். .

இத்தலத்திலுள்ள லக்ஷ்மி தீர்த்தம், நாக தீர்த்தம் மற்றும் சக்கர தீர்த்தம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகின்றன. இவை மூன்றும் முறையே லக்ஷ்மி, ஆதிசேஷன் மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகியோரால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. லக்ஷ்மி தீர்த்தத்தில் ஆவணி மாதத்தில் வெள்ளிக்கிழமை நீராடுவதால் ஒருவன் தான் பிரிந்து வந்த குடும்பத்துடன் மீண்டும் சேருவான் என்றும், நாக தீர்த்தத்தில் வைகாசி மாதம் திருவோணம் நடசத்திர நாளன்று நீராடுதல் நாக தோஷத்தைப் போக்கும் என்றும் ஆவணி மாதம் ஏகாதசி விரதம் இருந்து மறுநாள் துவாதசியில் சக்கர தீர்த்தத்தில் நீராடுதல் பிரம்மஹத்தி தோஷத்தை போக்குமென்றும் தலபுராணம் கூறுகின்றது.

Read More
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழா - வெள்ளி ரிஷப வாகன காட்சி

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவின் ஐந்தாம் நாள் இரவு, இறைவன் வெள்ளி ரிஷப வாகனத்தில் மயிலாப்பூர் மாடவீதிகளில் பவனி வருவார். அவருடன் கற்பகாம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் தங்க மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் வலம் வருவார்கள். பஞ்சமூர்த்திகளும் மறு நாள் காலையில்தான் கோவிலுக்குத் திரும்புவார்கள்.

இந்த ஆண்டு வெள்ளி ரிஷப வாகன காட்சி, 1.4.2023, சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கு தொடங்க உள்ளது.

வெள்ளி ரிஷப வாகன காட்சியை தரிசித்தால், திருஞானசம்மந்தருக்கு ஞானப்பால் ஊட்டியதுபோல் ஞானம் வேண்டி நிற்பவருக்கெல்லாம் ஞானப்பால் கிட்டிவிடும் என்பது நிச்சயம்.

Read More
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழா - அதிகார நந்தி சேவை

'மயிலையே கயிலை' என்னும் பெருமையுடையது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில். இக்கோவிலில் நடைபெறும் பங்குனி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றத. பத்து நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளன்று நடைபெறும் அதிகார நந்தி சேவை, ஐந்தாம் நாள் அன்று இரவு நடைபெறும் வெள்ளி ரிஷப வாகன காட்சி, ஏழாம் நாள் திருத்தேர், எட்டாம் நாள் நடைபெறும் அறுபத்து மூவர் திருவிழா, பத்தாம் நாள் இரவு நடைபெறும் திருக்கல்யாணம் ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

சென்னைக்கு பெருமை மயிலை என்றால், மயிலை கபாலீஸ்வரருக்குப் பெருமை அதிகார நந்தி சேவை. இந்த ஆண்டு அதிகார நந்தி சேவை 30.3.2023, வியாழனன்று காலை 5.45 மணிக்கு தொடங்க உள்ளது.

ரிஷபத்தின் முகமும் (காளையின் முகம்) சிவனின் உருவமும் கொண்ட அதிகார நந்தி, ஞானத்தின் தலைவனாகக் கருதப்படுகிறார். சிவபெருமானின் வாகனமான நந்தி பகவான். வேதங்களின் முதல்வனாகப் போற்றப்படுகின்றார். 'நந்தி' என்ற சொல்லுக்கு 'மகிழ்ச்சி' என்று பொருள். நான்கு மறைகளையும் ஈசன், நந்தி தேவருக்குத்தான் முதலில் கூறியதாக புராணங்கள் கூறுகின்றன. அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவ்வகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக இருப்பதால், அதிகார நந்தி என்ற பெயர் வந்தது.

வெள்ளியாலான அதிகார நந்தி வாகனம்

இக்கோவில் அதிகார நந்தி வாகனம் 106 ஆண்டுகள் பழமையானது. அதற்கு முன்னால் மரத்தாலான அதிகார நந்தி வாகனம்தான். பயன்பாட்டில் இருந்தது. இப்போதைய நந்தி வாகனத்தை வழங்கியவர், வந்தவாசி அருகே இருக்கும் தண்டரை கிராமத்தைச் சேர்ந்த த.செ .குமாரசாமி என்பவர். இவரின் குடும்பம், ஆயுர்வேத சித்த மருத்துவத்தை பாரம்பரியமாக, பல தலைமுறைகளாக செய்து வந்தனர். வெள்ளியாலான இந்த அதிகார நந்தி வாகனம் உருவாக்கும் பணி, 1912ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1917 ல் நிறைவு பெற்றது. அப்போதைய மதிப்பில் 48 ஆயிரம் ரூபாய் செலவில் உருவான இந்த அதிகார நந்தி வாகனத்தின் தற்போதைய மதிப்பு, மூன்று கோடி ரூபாய் ஆகும்.

Read More
திருமழப்பாடி வைத்தியநாதசுவாமி கோவில்

திருமழப்பாடி வைத்தியநாதசுவாமி கோவில்

திருமழப்பாடி நந்தியம்பெருமான் - சுயசாம்பிகை திருக்கல்யாணம்

திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருமழப்பாடி. இறைவன் திருநாமம் வைத்தியநாதசுவாமி. இத்தலத்தில் அருள்பாலிக்கும் இரண்டு அம்பிகைகள் சுந்தராம்பிகை மற்றும் பாலாம்பிகை ஆவர். இந்த ஆலயத்தில் நடைபெறும் நந்தி திருமணம் மிக விசேஷமானது.

நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம் என்பது சான்றோர் வாக்கு. அதாவது திருமழப்பாடி கோவிலில், பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தன்று நடைபெறும் நந்தி திருக்கல்யாணத்தைப் பார்ப்பவர்களுக்கு முந்தி திருமணம் ஆகும் என்பது தான் இதன் பொருள். அதன்படி திருமழப்பாடி நந்தி திருக்கல்யாணம் பார்த்தால், அடுத்த ஆண்டு நந்தி கல்யாணம் நடைபெறுவதற்கு முன் திருமண வரம் வேண்டுவோருக்குத் திருமணம் நடந்து முடியும் என்கின்றனர்.

சிலாத முனிவர் என்பவர் குழந்தை பாக்கியம் வேண்டி சிவனை நோக்கி தவம் இருந்தார். சிவபெருமான், 'நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய். அதற்காக யாகபூமியை உழும் போது பெட்டகம் ஒன்று தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனை உன் மகனாக வளர்த்து வா. அவன் 16 வயது வரை உன்னுடன் இருப்பான்' என்று அருளினார். சிலாத முனிவர், பெட்டகத்தில் கண்டெடுத்த அந்தக் குழந்தைக்கு 'செப்பேசன்' என பெயர் சூட்டி வளர்த்தார். 14 வயதுக்குள் வேதங்கள் கற்றதோடு, அனைத்து கலைகளிலும் அக்குழந்தை சிறந்து விளங்கியது.

செப்பேசன் வளர்ந்து வருவதை நினைத்து சிலாத முனிவருக்கு வருத்தம் உண்டானது. இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் செப்பேசன் நம்முடன் இருப்பான் என்று நினைத்து துயருற்றார். இதையறிந்த செப்பேசன், திருவையாறு ஐயாறப்பர் கோவிலுக்குச் சென்று ஈசனை நினைத்து கடும் தவம் புரிந்தார். அவருக்கு ஈசன் தனது அருளாசியை வழங்கியதோடு, சிவகணங்களுக்கு தலைவராகும் பதவியையும், திருக் கயிலையின் தலைவாயிலைக் காவல் காக்கும் உரிமையையும் அளித்தார். இத்தகைய சிறப்புகளைப்பெற்ற இவரே, நந்தியம்பெருமான் ஆவார்.

இதையடுத்து , சிலாத முனிவர் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்ய முன்வந்தார். இதற்காக திருமழப்பாடியில் , தவம் செய்து வந்த வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயசாம்பிகையை மணப்பெண்ணாக பேசி முடித்தார். இவர்களின் திருமணம் பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் நடைபெற முடிவுசெய்யப்பட்டது. இதற்காக திருவையாற்றில் இருந்து நந்தியம்பெருமான், வெள்ளித் தலைப்பாகை, பட்டு வேட்டி துண்டு, வெள்ளிச் செங்கோலுடன் மாப்பிள்ளைக் கோலத்தில் குதிரை வாகனத்தில் திருமழப்பாடி புறப்பட்டார். தனது பக்தனுக்கு தானே முன்னின்று திரு மணம் செய்து வைப்பதற்காக திருவையாற்றில் இருந்து ஐயாறப்பர்- அறம் வளர்த்த நாயகி ஆகியோர் பல்லக்கில் திருமழப்பாடிக்குச் சென்றனர். திருமழப்பாடியில் உள்ள சுந்தராம்பிகை உடனாய வைத்திய நாதப் பெருமான் கொள்ளிடம் சென்று மங்கல வாத்தியங்கள் முழங்க ஐயாறப்பர், அறம் வளர்த்தநாயகி, நந்தியம்பெருமான் ஆகியோரை வரவேற்று கோவில் முன் அமைக்கப்பட்ட திருமண மேடைக்கு அழைத்து வந்தார். இதையடுத்து நந்தியம்பெருமானுக்கும், சுயசாம்பிகைக்கும் வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.

இந்த ஆண்டு நந்தியம்பெருமான் - சுயசாம்பிகை திருக்கல்யாணம், 30.3.2023 வியாழக்கிழமையன்று நடைபெற உள்ளது. திருமண வயதில் இருக்கும் ஆண், பெண் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டால், விரைவில் திருமண பாக்கியம் அடைவார்கள் என்பது நம்பிக்கை.

Read More
மப்பேடு சிங்கீஸ்வரர் கோவில்

மப்பேடு சிங்கீஸ்வரர் கோவில்

ஆஞ்சநேயர் வீணையை இசைத்து சிவபெருமானை வழிபட்ட தலம்

சென்னை பூந்தமல்லி - பேரம்பாக்கம் சாலையில், பூந்தமல்லியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் மப்பேடு. இறைவனின் திருநாமம் சிங்கீஸ்வரர். இறைவியின் திருநாமம் புஷ்பகுஜாம்பாள்.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, தன் உண்மையான ரூபத்தை மீண்டும் பெற இங்கு வந்து சிவனை வழிபட்டார். பெண் வடிவில் திருமால் வழிபட்டதால், (மால் - திருமால்; பேடு - பெண்), `மால் பேடு' என்றும், மீண்டும் சுய உருவம் பெற்றதால் (மெய் உருக் கொண்டதால்) `மெய்ப்பேடு' என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. திருவாலங்காட்டில் சிவபெருமான் திருநடனம் புரிந்த போது, அவரின் நந்தி கணங்களில் ஒருவரான சிங்கி, சிவனாரின் நடனத்துக்கு ஏற்ப, மிருதங்கத்தை லயிப்புடன் வாசித்தார். தன் இசையில் கவனம் செலுத்திய அவரால், ஈசனின் திருநடனத்தை தரிசிக்க இயல வில்லை. இந்தக் குறை தீர, மப்பேடு திருத் தலத்தில் சிங்கிக்குத் திருநடனக் காட்சியைக் காட்டினாராம் ஈசன். ஆகவே அவருக்கு இத்தலத்தில், சிங்கீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.

இக்கோவிலின் வடகிழக்கு மூலையில் உள்ள ஒரு மண்டபத்தில் அமைந்திருக் கும் ஒரு சிறிய மாடத்தில் வீணை வாசிக்கும் கோலத்தில் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். சீதையைத் தேடிக்கொண்டு ஆஞ்சநேயர் இலங்கைக்குச் சென்றபோது வழி தெரியா மல் தவித்ததாகவும், பின்னர் இந்தத் தலத்தில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு வீரபாலீஸ்வரரை, வீணையில் அமிர்தவர்ஷிணி ராகம் இசைத்து வழிபட்டதாகவும், இறைவனின் அருளால் இலங்கைக்குச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இன்றைக்கும் சந்தியா காலத்தில் ஆஞ்சநேயர் சூட்சும வடிவில் வந்து வீணையில் அமிர்தவர்ஷிணி ராகம் இசைப்பதாக ஐதீகம். இசைத்துறையில் பெயரும் புகழும் பெற விரும்புபவர்கள், இங்கு வந்து வீரபாலீஸ்வரர் சந்நிதிக்கு முன்பு அமர்ந்து பயிற்சி செய்தால், அவர்களுடைய விருப்பம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான நோய்கள் தீர்க்கும் பிரதோஷ வழிபாடு

இக்கோவில், கொடிமரத்துக்கு அருகில் அமைந்திருக்கும் நவ வியாகரணக் கல்லின் மேல் இருந்தபடி, நந்தியையும் சிவபெருமானையும் பிரதோஷக் காலத்தில் வழிபட்டால், எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்பது ஐதிகம். கார்த்திகை சோமவாரம், பிரதோஷம், ரேவதி நட்சத்திரம் போன்ற தினங்களில் இப்படி தரிசிப்பது கூடுதல் சிறப்பு.

மூல நட்சத்திரக்காரர்களின் பரிகாரக் கோவில்

அருள்மிகு சிங்கீஸ்வரர் மூல நட்சத்திரத்தில் தோன்றியவர் என்பதால், மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய பரிகாரக் கோயிலாக விளங்குகிறது. மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் ஜாதகத்தில் உள்ள சகலவிதமான தோஷங்கள் நீங்கவும், மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையவும் தொடர்ந்து ஐந்து மூல நட்சத்திர நாள்களில் இந்த ஆலயத்துக்கு வந்து, சிங்கீஸ்வரர் சந்நிதியில் ஐந்து நெய்விளக்குகள் ஏற்றி அர்ச்சகரிடம் கொடுத்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

Read More
விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில்

விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில்

குடும்ப சமேதராக அருள் பாலிக்கும் அனுக்கிரக சனி பகவான்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் விளங்குளம் . இறைவன் திருநாமம் அட்சயபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் அபிவிருத்தி நாயகி.

இத்தலத்தில் நவக்கிரக சன்னிதி கிடையாது. அதற்குப் பதில் சூரியனும் அவரது புத்திரர் சனிபகவானும் தனித் தனி சன்னதிகளில் அருளுகின்றனர். இத்தலத்தில் சனீஸ்வர பகவான் தெற்கு நோக்கி குடும்ப சமேதராக தனது மனைவியர் மந்தா, ஜேஷ்டா ஆகியோருடன் எழுந்தருளியிருக்கிறார். இத்தலத்தில் சனிபகவான் சிவபெருமானை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றதால் இங்கு அவர் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இவரை ஆதி பிருஹத் சனீஸ்வரர் எனப் போற்றுகிறார்கள். சனி பகவான் குடும்பத்துடன் இருப்பதால், 12 ராசிக்காரர்களும் இங்கு வந்து வழிபட்டால், சனியின் கோபத்தில் இருந்து தப்பிக்கலாம், அவரின் அருளைப் பெறலாம் என்கிறது தல புராணம்.

பூச நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய சனிபகவான்

இவரை நினைத்து மாதந்தோறும் அமாவாசை தினங்களில் காகத்துக்கு அல்லது இயலாதவர்களுக்கு உணவு வழங்கினால், பித்ரு தோஷம் நீங்கும். கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். வீட்டில் தரித்திரம் விலகி ஐஸ்வரியம் பெருகும் என்கிறார்கள்.

குறிப்பாக, பூச நட்சத்திரக்காரர்கள் வணங்கிய வேண்டிய திருத்தலம் என்றும் பூச மருங்கர் எனும் சித்தர் வழிபட்ட தலம் இது என்றும் சொல்கிறது தல புராண மகிமை. எனவே, மாதந்தோறும் பூச நட்சத்திர் நாளில், தைப் பூச நாளில் வந்து வேண்டிக்கொள்ளலாம்.

Read More
துடையூர் விஷமங்களேஸ்வரர் கோவில்

துடையூர் விஷமங்களேஸ்வரர் கோவில்

கண்பார்வை பிரச்சனைகளை தீர்க்கும் வீணாதர தட்சிணாமூர்த்தி

திருச்சிக்கு அருகே, தேவாரத் தலமான திருவாசிக்கு மிக அருகில் அமைந்துள்ள தேவார வைப்புத் தலம் துடையூர், இறைவனின் திருநாமம் விஷமங்களேஸ்வரர் . அம்பிகையின் திருநாமம் வீரமங்களேஸ்வரி என்ற மங்களநாயகி.

சுவாமி சந்நிதியை வலம் வரும்போது கோஷ்டத்தில் நின்ற கோலத்தில் 'வீணாதர தட்சிணாமூர்த்தி' காட்சி தருகிறார். இவர் கரங்களில் ஏந்தியிருப்பது 'திகி சண்டளா வீணை' என்பதால், 'திகி சண்டளா வீணாதர தட்சிணாமூர்த்தி' எனப்படுகிறார். இப்படி நின்ற கோலத்தில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தியை காண்பது மிக அரிது. இவருடைய வீணையின் இசைக்கேற்ப, இவருக்கு அருகில் ஒரு பூத கணம் உடுக்கை அடித்துக் கொண்டும், ஒரு பெண்மணி தாளம் போட்டுக் கொண்டும் காட்சி தருகிறார்கள்.

இவர் கண்களுக்கு ஒளி தரும் நரம்புகளைக் காக்கக் கூடியவர். எனவே, கண் பிரச்னை உள்ளவர்கள், இங்கே வந்து இந்த வீணாதர தட்சிணாமூர்த்தியை தரிசித்து மனதாரப் பிரார்த்தித்தாலே போதும். பார்வை பிரகாசமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்தச் சந்நிதியில் செவ்வாய், புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமைகள் விசேஷமானவை. உயர்கல்வி, குடும்ப நலன், மருத்துவச் சிகிச்சை போன்ற வேண்டுதல்களுக்காக, இத்தினங்களில் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.

Read More
விளமல் பதஞ்சலி மனோகரர் கோவில்

விளமல் பதஞ்சலி மனோகரர் கோவில்

அமாவாசைதோறும் அன்னாபிஷேகம் நடைபெறும் தேவாரத் தலம்

திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில், திருவாரூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் விளமல் இறைவனின் திருநாமம் பதஞ்சலி மனோகரர் . இறைவியின் திருநாமம் யாழினும் மென்மொழியம்மை.

பொதுவாக எல்லா சிவாலயங்களிலும், ஐப்பசி பவுர்ணமியன்றுதான் அன்னாபிஷேகம் செய்வார்கள். ஆனால், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் எல்லா அமாவாசை நாட்களிலும், அன்னாபிஷேகம் செய்யப்படுவது தனிச்சிறப்பாகும். பித்ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் அமாவாசையன்று, திருவாரூர் கமலாலய தீர்த்தத்திலுள்ள (தெப்பக்குளம்) பிதுர் கட்டத்திலும், விளமல் கோயிலில் உள்ள அக்னி தீர்த்தத்திலும் நீராடுகின்றனர். பின், பதஞ்சலி மனோகரருக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து, தலைமுறை சிறக்க ஆசிர்வதிப்பர் என்பது நம்பிக்கை. புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை தினத்தன்று இந்த வழிபாட்டைச் செய்வது இன்னும் சிறப்பு. அன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்து, பித்ரு தர்ப்பணம் செய்து வழிபடுகின்றனர். விபத்தில் அகால மரணமடைந்தவர்களுக்காகவும், இறக்கும் தருவாயில் அவஸ்தைப்படுவோருக்காகவும் இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இத்தலத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில்

திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில்

நந்தி பகவான் தனது மனைவியுடன் காட்சிதரும் தேவார வைப்புத் தலம்

செங்கல்பட்டு - மகாபலிபுரம் சாலை வழியில், 14 கி மீ தொலைவில் அமைந்துள்ள தேவார வைப்புத் தலம் திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில். இறைவனின் திருநாமம் ருத்திர கோடீஸ்வரர். இறைவியின் திருநாமம் பெண்ணின் நல்லாள் என்கிற அபிராம நாயகி.

இக்கோவிலின் நுழைவு வாசல் அருகில் உள்ள சுவற்றில், நந்தி பகவான் தனது மனைவி சுயம்பிரபாதேவி என்கின்ற சுயசாம்பிகையுடன் புடைப்புச் சிற்பமாக காட்சி தருவது, எந்த தலத்திலும் காணமுடியாத ஒரு அரிய காட்சியாகும். இத்தலத்து நந்தி பகவான், கருட பகவானின் ஆணவத்தை அழிப்பதற்காக, தன் மூச்சுக் காற்றினால் அவரை பூமிக்குள் அழுத்தி புதைத்தார். அதனால், மற்ற தலங்களில் தலையை சாய்த்து அமர்ந்திருப்பது போல் இல்லாமல், இத்தலத்து நந்தி பகவான் தலையை நேராக நிமிர்த்தி,நாசி புடைக்க உக்கிர கோலத்துடன் காட்சி தருகிறார்.

தீராத நோய்களைத் தீர்க்கும் பிரதோஷ வழிபாடு

இக்கோவிலில் 16 பிரதோஷங்கள் தொடர்ந்து வழிபட்டால், இருதய நோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்,கிரக சஞ்சார பாதிப்புகள் முதலியவை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில்

அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் அபூர்வ பைரவர்

திருவாரூரிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருவாஞ்சியம். இறைவனின் திருநாமம் வாஞ்சிநாதர். இறைவியின் திருநாமம் மங்களநாயகி.

காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் ஆறு காவிரித் தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும். காசியில் வழங்கப்படுவது போல் திருவாஞ்சியத்திலும் காசிக்கயிறு எனும் கருப்புக் கயிறு வழங்கப்படுகிறது. காசியில் பாவமும், புண்ணியமும் சேர்ந்தே வளர்கின்றன. அதனால் நம் பாவங்களுக்கு காசியில் பைரவர் தண்டனை வழங்குகிறார். அதனால் காசியில் மரித்தால், எம பயமில்லா விட்டாலும் ஒரு நாழிகையாவது பைரவ தண்டனை உண்டு. ஆனால் திருவாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளர்கிறது. அதனால் பைரவர் தண்டனை இங்கு இல்லை. வாஞ்சியத்தில் மரித்தவருக்கு யம பயம், பைரவ தண்டனை என்ற இரண்டுமே கிடையாது.

பொதுவாக சிவாலயங்களில் பைரவர் நின்ற நிலையில் நாய் வாகனத்துடன் காட்சி அளிப்பார். ஆனால் இத்தலத்தில் பைரவர், யோக நிலையில், தமது தண்டங்களையெல்லாம் கீழே வைத்துவிட்டு, யோக பைரவராக ஈசனையே துதித்த வண்ணமிருக்கிறார். .நாய் வாகனமும் இவருக்கு இல்லை. இவரை ஆசன பைரவர் என்று அழைக்கிறார்கள். திருவாஞ்சியத்தில் பைரவர் தவமிருந்து பொன் வண்டு வடிவில் ஈசனை வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது. யமன், பைரவர் இருவருக்குமே அதிகாரமில்லாத இத்தலம், காசியைக் காட்டிலும் நூறு மடங்கு உயர்ந்தது என முனிவர்கள் கூறுகின்றனர்.

பூச நட்சத்திரக்காரர்களுக்கு செல்வம் வழங்கும் பைரவர்

இத்தல பைரவரை, பூச நட்சத்திரக்காரர்கள் வழிபட்டால் மிகுந்த செல்வம் அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வன்னி' இலைகளைக் கொண்டு யோக பைரவருக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. பூஜைக்கு பயன்படுத்தப்படும் வன்னி இலைகளால் தயாரிக்கப்படும் பொடியை தினமும் உட்கொண்டால் நரம்பு கோளாறுகள் மற்றும் நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம். யோக பைரவரை இங்கு வழிபட்டு வந்தால், ஒருவரை பீடித்திருக்கும் அனைத்து தீமைகளும் நீங்கும். 6 தேய்பிறை அஷ்டமி நாட்களில் 'சிவப்பு அரளி' பூக்களைக் கொண்டு பூஜைகள் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். அமாவாசை தினங்களில் தயிர் சாதம், தேங்காய் சாதம், தேன் ஆகியவற்றைச் சமர்ப்பித்து சிறப்பு வழிபாடு செய்வதன் மூலம் தனது செயல்கள் அனைத்திலும் வெற்றி பெறவும், வியாபாரத்தில் லாபம் பெறவும் உதவுகிறது. விரைவில் திருமணம் செய்து கொள்ள, ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் பருப்பு மற்றும் நெய்யால் செய்யப்பட்ட வடை படைத்து, பூஜை செய்யப்படுகிறது.

Read More
மதுரை முக்தீஸ்வரர் கோவில்

மதுரை முக்தீஸ்வரர் கோவில்

ஆண்டிற்கு இரண்டு முறை சூரிய பூஜை நடக்கும் திருவிளையாடல் தலம்

மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் கோவிலின் அருகில் அமைந்துள்ளது முக்தீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் மரகதவல்லி தாயார். சிவனின் 64 திருவிளையாடல்களில், இரண்டாவது திருவிளையாடல் நடந்த இடம் தான், முக்தீஸ்வரர் கோவில்.

இந்திரனின் ஐராவத யானைக்கு சாபவிமோசனம் அளித்த திருவிளையாடல்

இந்திரனின் வாகனம், 'ஐராவதம்' என்ற வெள்ளை நிறம் கொண்ட யானையாகும். ஒரு சமயம், துர்வாசக முனிவர், சிவபெருமானை பூஜை செய்து கொண்டுவந்திருந்த தாமரை மலரை இந்திரனிடம் தந்தார். அதனை வாங்கிய இந்திரன் சிவபெருமானின் பூசை மலரினை ஐராவதம் மத்தகத்தில் வைத்தார். அதனை எனனவென்று அறியாத ஐராவதம், அம்மலரை காலில் இட்டு அழித்தது. இதனால் கோபம் கொண்ட துர்வாசக முனிவர் ஐராவதத்தினை பூமியில் பிறக்கும் படி சாபமிட்டார். அதனால் பூமியில் அவதரித்த ஐராவதம், மற்ற யானைகளின் நிறத்தினை அடைந்து இந்திரன் உருவாக்கிய மதுரை கோயிலில் சிவலிங்கத்தினை வழிபட்டு வந்தது. பின்னர் சிவபெருமான் அருளால் சாபவிமோசனம் பெற்றது. ஆனால் ஐராவதத்திற்கோ, மதுரை மதுரையம்பதி விட்டு பிரிந்து செல்ல மணம் இல்லை. அதனால் சிவபெருமானிடம் தங்கள் கருவறை விமானத்தை தாங்கும் யானைகளில் தானும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விண்ணப்பித்தது. ஆனால் சிவபெருமான், இந்திரன் என்னுடைய பக்தன். நீ அவனை சுமப்பது என்னை சுமப்பதற்கு ஒப்பானது. அதனால் நீ தேவலோகம் சென்று விடு என்று பணித்தார்.

இந்திரன் சிவபெருமானிடம், யானையின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தான் எழுப்பிய மதுரை சொக்கநாதர் கோவில் விமானம், தன் பெயரால் இந்திர விமானம் என அழைக்கப்பட வேண்டும் என்றும், ஐராவதம் தன்னைத் தாங்குவது போல் அந்த விமானத்தையும் ஐராவதமே எட்டு வடிவங்களில் தாங்குவது போன்ற தோற்றம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். அதன்படியே எட்டு வெள்ளை யானைகள் மதுரை சொக்கநாதர் கருவறை விமானத்தை தாங்கி இருப்பதை இப்போதும் நாம் காணலாம்.

இன்றும் அரசு ஆவணங்களில் இக்கோயில் அமைந்துள்ள பகுதி ஐராவதநல்லூர் என்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூரிய பகவானின் பூஜை

சூரியக் கதிர்கள் கருவறையில் உள்ள சிவபெருமானின் லிங்கத் திருமேனியில் படருவதை சூரிய பூஜை என்று குறிப்பிடுவார்கள். சூரிய பூஜை பல ஆலயங்களில் நிகழ்ந்தாலும், அவை குறிப்பிட்ட ஒரு சில நாட்களில் மட்டுமே நிகழும். ஆனால் இங்கோ, ஒவ்வொரு மார்ச் மாதத்தின் இரண்டாம் வாரத்தில், அதாவது 10 ம் தேதி முதல் 21 தேதி வரையிலும் மற்றும் செப்டம்பர் மாதம் 19 முதல் 30 ம் தேதி வரையிலும், காலையில் இந்த அற்புதம் நிகழும்.

காலை நேரத்தில் கருவறைக்கு எதிரே உள்ள துவாரங்கள் வழியாக சூரியக்கதிர்கள், கருவறைக்குள் ஊடுருவுகின்றன.முதலில் மஞ்சள் நிறத்திலும், பின்பு கண்கள் கூசும் வகையில் வெள்ளொளியாகவும் தெரியும். சூரிய பூஜையின் 15 நிமிட இடைவெளியின் போது கோவில் சார்பில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அலங்காரம் செய்யப்படும்.இந்த நிகழ்வு இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

மொத்தம் 24 நாள்கள் நடக்கும் இந்த அற்புத தரிசனத்தைக் கண்டால் நம் மனதின் பிணிகள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை. மேலும் சூரிய பகவானே இங்கு முக்தீஸ்வரரைத் தன் கதிர்க் கரங்களால் தழுவி வழிபடுவதால் இந்த ஈசனை வணங்கினால் சூரியன் பலமில்லாத ஜாதகக் காரர்கள் சகல நன்மைகளையும் பெறமுடியும். மேலும் சூரியனே ஜாதக அடிப்படையில் ஆத்மகாரகன். அவன் பணிந்து கொள்ளும் இந்த முக்தீஸ்வரரை, நாமும் பணிந்துகொண்டால் நம் வினைப்பயன்கள் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சூரிய பகவானே நேரடியாக சிவனின் மீது தன் ஒளிக்கதிர்களை வீசி பூஜிப்பதால் இங்கு நவக்கிரகங்களுக்கு என தனி சன்னதி கிடையாது. முக்தீஸ்வரரை வழி பட்டாலே நவகிரக தோஷங்கள் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

Read More
பாமணி நாகநாத சுவாமி கோவில்

பாமணி நாகநாத சுவாமி கோவில்

நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து இருக்கும் தட்சிணாமூர்த்தி

மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் பாமணி. இறைவன் திருநாமம் நாகநாத சுவாமி. இறைவியின் திருநாமம் அமிர்தநாயகி.

இத்தலத்தில் குருபகவான் நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து சிம்ம தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிப்பதால், இவரை வழிபடுபவர்களுக்கு சிம்ம குருவின் அருள் கிடைக்கும். ஒருமுறை தட்சிணாமூர்த்தியின் சீடர்கள் நால்வரும் விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் சென்றார்கள். அப்போது இவர்களை துவார பாலகர்கள் தடுத்தனர். கோபம் கொண்ட முனிவர்கள், அவர்களுக்கு சாபம் கொடுத்தனர். இதனால் முனிவர்களுக்கு தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நீங்க பாமணி நாகநாதரையும், சிம்ம தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு தங்கள் தோஷம் நீங்கப் பெற்றனர்.

சிம்மம், கும்பம், கடகம், தனுசு, மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்களும், லக்னத்திற்குரியவர்களும் சிம்ம தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சிறப்பான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.

Read More
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

வள்ளாள மகாராஜாவிற்கு 680 ஆண்டுகளாக திதி கொடுத்து வரும் அண்ணாமலையார்

ஹொய்சாளப் பேரரசு என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய அரச மரபின் கடைசி மாமன்னன் மூன்றாம் வீர வல்லாள மகாராஜா ( கி.பி.1291-1343) . நடுநாடு எனப்பட்ட திருவண்ணாமலை பகுதியை ஆண்ட அரசர்களில் புகழ்பெற்றவர். வல்லாளன் சிறந்த சிவபக்தர். அண்ணாமலையார் ஆலயத்துக்குப் பல திருப்பணிகளைச் செய்துள்ளார். வல்லாள ராஜன் கோபுரம் எனப்படும் திருவண்ணாமலை கோவிலின் ராஜ கோபுரத்தை தனது ஆட்சிக்காலத்தில் நிர்மாணித்தார். கி.பி 16-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட அருணாச்சல புராணத்தில் இவரது சரித்திரம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வள்ளாள மகாராஜாவிற்கு ஒரு பெரிய மனக்குறை இருந்தது. தான் கொஞ்சி மகிழவும், தனக்குப் பின் நாட்டை ஆளவும் ஒரு வாரிசு இல்லையே என்பதுதான் அது. ஒரு நாள் வல்லாள மகாராஜாவின் கனவில் தோன்றிய அண்ணாமலையார், உனக்கு இந்த பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை. என்னையே மகனாக பாவித்து கொள். யாமே, உனக்கு மகனாக இருந்து உன் ஈம காரியங்களை செய்து முடிப்பேன். ஒவ்வொரு ஆண்டும் அந்த சடங்குகளை செய்வேன் என்றார்.

கி.பி.1343ம் ஆண்டு தைப்பூசத்தன்று அண்ணாமலையார், திருவண்ணாமலை ஈசானிய குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியில் கலந்துகொண்டு விட்டு மாலையில் மேளதாளத்துடன் கோயிலுக்கு திரும்பிச் செல்லும் போது, பள்ளிகொண்டாபட்டு போர்க்களத்தில் வள்ளாள மகாராஜா வீரமரணம் அடைந்தார் என்ற செய்தி அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகு அண்ணாமலையார் மேளதாளங்கள் இன்றி, அமைதியாக கிரியை நடக்கும் பள்ளிகொண்டாபட்டு கௌதம நதிக்கரைக்குச் சென்று சடங்குகளை செய்து முடித்தார். அன்றிலிருந்து இன்றுவரை, அண்ணாமலையார், ஒவ்வொரு ஆண்டும் மகாராஜா உயிர் நீத்த 30ம் நாளான மாசி மகம் தினத்தன்று பள்ளிகொண்டாபட்டு கிராமத்துக்கு சென்று வல்லாள மகாராஜாவுக்கு மகனாக இருந்து திதி (தர்ப்பணம்) கொடுத்து வருகிறார்.

மாசிமகத்தன்று, அண்ணாமலையார் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு பள்ளிகொண்டாபட்டு கௌதம நதிக்கரைக்கு வருவார். அங்கு வல்லாள மகாராஜாவுக்கு திதி கொடுப்பார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பள்ளிகொண்டாபட்டுக்கு திரண்டு வந்து தம் மூதாதையருக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். ஈசன் திதி கொடுக்கும் போது, தாங்களும் அவ்வாறு செய்தால் தங்கள் மூதாதையர்களுக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். இந்த நிகழ்ச்சியின் போது அண்ணாமலையாருக்கு சம்பந்தம் கட்டும் முறை நடைபெறும். அதாவது அண்ணாமலையாரை தங்கள் ஊர் சம்மந்தியாக ஏற்று பட்டாடை சாத்துவார்கள். பள்ளிகொண்டாபட்டு அருகில் உள்ள சம்மந்தனூரை சேர்ந்தவர்களே இதை ஆண்டாண்டு காலமாக செய்து வருகிறார்கள். இதனால்தான் அந்த ஊருக்கு 'சம்மந்தனூர்' என்ற பெயர் ஏற்பட்டது.

அரசனுக்குப் பிறகு இளவரசன் பட்டம் சூட்டிக் கொள்ள வேண்டும் என்ற மரபின்படி மறுநாள் அண்ணாமலையார் கோவிலில், அண்ணாமலையாருக்கு அரசராக முடி சூட்டப்படும் விழா நடத்தப்படடும்.

உலகில் எந்த மன்னனுக்கும் இத்தனை ஆண்டுகளாக இறைவனே திதி கொடுக்கும் சிறப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் எந்த சிவாலயத்திலும் சிவபெருமான், யாருக்காகவும் இப்படி ஆலயத்தை விட்டு வெளியில் வந்து திதி கொடுப்பதில்லை. திருவண்ணாமலை ஆலயத்தில் மட்டுமே ஆண்டு தோறும் இந்த அதிசயம் நடக்கிறது.

Read More
மாசி மகத்தின் சிறப்புகள்

மாசி மகத்தின் சிறப்புகள்

மாசிமக தீர்த்தமாடலின் சிறப்பு

மாசி மாதம் முழுவதும் 'கடலாடும் மாதம்' என்றும், 'தீர்த்தமாடும் மாதம்' என்றும் சொல்வார்கள். இதன் காரணமாகவே இந்த மாதத்தில் நீர்நிலைகளில் புனித நீராடுவதை இந்துக்கள் பழக்கமாகக் கொண்டுள்ளனர். மாசி மாதத்தில் வரும் பௌர்ணமியுடன் கூடிய மக நட்சத்திர நாள் தான் மாசி மகம். மாசி மகத்தன்று கடல், குளம், ஆறு ஆகிய நீர்நிலைகளில் கூட புண்ணிய நதியாகிய கங்கையும் கலந்திருப்பதாக கருதப்படுகிறது.

மாசி மகம் அன்று புனித நீராடல் ஏழு ஜென்ம பாவங்களை கூட அடியோடு போக்கும் என்பது ஐதீகம். இதனால் தான் 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை கும்பகோணத்தில் மகாமகம் கொண்டாடப்படுகிறது.

மாசிமக தீர்த்தமாடல் பற்றிய புராணக்கதை

ஒருசமயம் வருண பகவானை பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது. அதனால் அவர் உடல் கட்டப்பட்ட நிலையில் கடலில் வீசப்பட்டார். வருணன் கட்டுண்டு கிடந்ததால் உலகத்தில் பஞ்சமும் வறட்சியும் ஏற்பட்டது. வருண பகவான் சிவபெருமானை நினைத்து பிரார்த்தனை செய்தார். அவரின் தவத்தை மெச்சிய சிவ பெருமான் அருள் பாலித்தார். வருண பகவான் தோஷத்தில் இருந்து நிவாரணம் அடைந்த தினம் தான் மாசி மகம் ஆகும். இந்த தினத்தில் புனித நீராடும் நபர்களுக்கு பாவங்களை போக்கிவிட சிவனிடம் வருண பகவான் அருள் செய்ய கேட்டு கொண்டாராம். அதனை கேட்ட சிவ பெருமானும் கேட்ட வரத்தை கொடுத்தாராம். வருண பகவானுக்கு முழுமையாக தோஷ நிவர்த்தி கிடைத்த தினம் என்பதால் அன்றைய தினம் புனித நீராடுவது புண்ணியமாக கருதப்படுகிறது.

திருஞானசம்பந்தா் தன்னுடைய மயிலாப்பூா் பதிகத்தில் கபாலீசுவரரின் மாசிமகக் கடலாடு விழாவைப் பற்றிக் கூறுகிறார்.

சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்ததும் மாசிமகத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. மாசி பௌர்ணமியில்தான் சிவபெருமானால் மன்மதன் எரிக்கப்பட்டான். இந்நிகழ்ச்சி காமதகனம் என்று அழைக்கப்படுகிறது. கடலுக்கு அடியில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொண்டு வந்ததும் இந்த மாசி மகத்தன்றுதான் என புராணங்கள் கூறுகின்றன.

பார்வதி தேவி, தாட்சாயிணியாக உருவெடுத்த நாளும் மாசி மகம் நாள்தான். மாசிமக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும். துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.

மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜகத்தை ஆள்வர் என்பதும் மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம் மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது.

மாசிமகம் பித்ரு தோஷம் மற்றும் தடைகள் நீக்கும் புனித நாளாகும். மாசி மகம் நாளில் புனித நீர் நிலைகளில் நீராடினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆண் குழந்தை வேண்டுபவர்கள் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வேண்டிக் கொண்டால் ஆண்குழந்தை நிச்சயம் பிறக்கும் என்பது நம்பிக்கை.

Read More
பாமணி நாகநாத சுவாமி கோவில்

பாமணி நாகநாத சுவாமி கோவில்

மனித முகம், பாம்பு உடலுடன் ஆதிசேஷன் காட்சியளிக்கும் அபூர்வத் தலம்

மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் பாமணி. இறைவன் திருநாமம் நாகநாத சுவாமி. இறைவியின் திருநாமம் அமிர்தநாயகி.

இறைவன் புற்று மண்ணாலான சுயம்பு திருமேனி உடையவர் என்றாலும் அவருக்கு தினமும் அபிஷேகம் நடைபெறுகிறது. இத்தலத்து இறைவன் மீது பாம்புகள் அடிக்கடி ஊர்ந்ததால் இவருக்கு பாம்பை மேலே அணிந்து கொள்பவர் என்ற பொருள்பட பாம்பணி நாதர் என்ற பெயரும் உண்டு. அதனால் இந்தத் தலத்துக்கு பாம்பணி என்ற பெயர் ஏற்பட்டு பின்னர் பாமணி என்று மருவிற்று.

ஆதிசேஷன் நாகநாதரை பூஜிக்க பாதாளத்திலிருந்து வந்ததால் இத்தலத்திற்கு பாதாளேச்சரம் என்ற பெயரும் உண்டு. ஆதிசேஷன் இத்தலத்திற்கு வந்தபோது தலம் எங்கும் சிவலிங்கமாய் தெரிந்ததால், கால் தரையில் படாமல் இறைவனை தொட்டு வணங்குவதற்காக இடுப்பிற்கு கீழே பாம்பு ரூபமாயும், மேலே மனித ரூபமாயும் இருந்து வணங்கினார். பாம்பு உருவாக்கிய லிங்கம் என்பதால், அது புற்றுவடிவாக அமைந்தது.

கால சர்ப்ப தோஷம் நீக்கும் தலம்

மனித முகம், பாம்பு உடலுடன் காட்சியளிக்கும் ஆதிசேஷனுக்கு, இத்தலத்தில் தனி சன்னதி இருப்பது சிறப்பாகும். அனந்தன், வாசுகி, தக்ஷகன், கார்கோடகன், சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன் என்ற அஷ்ட நாகங்களுக்கும், ராகு கேதுவிற்கும் தலைவன் ஆதிசேஷன். இந்த ஆதிசேஷனை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் ஜாதக ரீதியாக நாகதோஷம், ராகு கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் ஏற்பட்டவர்கள் நிவாரணமடைவர் என்பது நம்பிக்கை. 1000 தலை கொண்ட ஆதிசேஷனே இங்கு வந்து வழிபாடு செய்துள்ளதால், இத்தலம் செவ்வாய் உட்பட சகல தோஷங்களுக்கும் நிவர்த்தி தலமாக விளங்குகிறது.

Read More
கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோவில்

கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோவில்

கல் நந்தி புல் தின்ற அதிசயம் நிகழ்ந்த தேவாரத்தலம்

கும்பகோணத்திற்குக் கிழக்கே, கல்லணை- பூம்புகார் சாலையில் 20 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்கஞ்சனூர். இறைவன் திருநாமம் அக்கினீஸ்வரர் . இறைவியின் திருநாமம் கற்பகாம்பிகை.

முன்னொரு காலத்தில், தேவசம்பு என்ற முதியவர் தனது பசுவிற்காக மிகவும் கனமான புல்லுக்கட்டை தலையில் சுமந்தபடி சென்றார். அப்போது நிலைதடுமாறி புல்லுக்கட்டை தவறவிட்டார். அது அருகில் நின்ற கன்றின் மீது விழுந்து அழுத்த, அந்தக் கன்று உயிரிழந்தது. கன்றின் உயிரைப் பறித்ததால் ஏற்பட்ட பாவம் அகல வேண்டும் என்றால், முதியவர் காசிக்குப் போய் நீராட வேண்டும் என்று சில வேத விற்பன்னர்கள் கூறினர்.

தேவசம்பு, அவ்வூரில் பிரசித்தி பெற்று விளங்கிய சிவஞானியார், ஹரதத்தர் என்பவரை அணுகினார்ர். ஆனால் ஹரதத்தரோ, 'அவ்வாறு நெடுந்தூரம் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் சிவனையே சிந்திக்கும் பக்தியுடையவர். நடந்தது உங்களை அறியாமல் நடந்த பிழை. அது பாவத்தில் சேராது. வேண்டுமென்றால் அதை சோதித்து பார்த்து விடலாம். அக்னீஸ்வரர் கோவிலுக்குச் சென்று, அங்குள்ள கல் நந்திக்குப் புல் கொடுங்கள். அது புல்லை ஏற்றுக்கொண்டு தின்றால் உங்களுக்கு தோஷமில்லை' கூறினார்.

இதையடுத்து கஞ்சனூரில் ஓடும் காவிரியில் மூழ்கிய முதியவர், இறைவனையும், இறைவியையும் வழிபட்டு விட்டு, அவர்களுக்கு எதிரே இருந்த கல் நந்திக்கு புல் கொடுத்தார். அது தலையைத் திரும்பி புல்லை வாங்கித் தின்றது. ஊர் மக்கள் அனைவரும் அதிசயித்துப்போனார்கள். இப்போதும், திருக்கஞ்சனூர் கோவிலில் தலையைத் திருப்பிய நிலையில் அமர்ந்திருக்கும் நந்தியை நாம் காணலாம். இந்த நந்தி புல் உண்டதால் அதன் நாக்கு வெளியில் நீட்டிக் கொண்டிருக்கவில்லை.

Read More