நெடுங்களநாதர் கோயில்
சூரியனை நோக்கி திரும்பியிருக்கும் எட்டு கிரகங்கள்
சிவாலயங்களில் பொதுவாக நவகிரகங்கள் இருக்கும் பீடத்தில் சூரியன் நடுவில் இருப்பார். அவரை சுற்றி மற்ற எட்டு கிரகங்கள் வெவ்வேறு திசைகளை நோக்கிய வண்ணம் இருப்பார்கள். ஆனால் திருச்சியை அடுத்த தேவாரப்பாடல் பெற்ற திருநெடுங்களம் நித்தியசுந்தரர் ஆலயத்தில் உள்ள நவக்கிரக சன்னதியில், சூரிய பகவான் தன் இரு தேவியருடன் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். மற்ற எட்டு கிரகங்கள், சூரியனை நோக்கி திரும்பியிருக்கிறார்கள். இப்படி சூரியனை நோக்கி உள்முகமாக திரும்பி இருப்பது ஒரு அரிதான அமைப்பாகும்.

துளஸீஸ்வரர் கோயில்
துளசி தீர்த்தப் பிரசாதம் தரும் சிவாலயம்
தாம்பரம்-செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிங்கப் பெருமாள் கோவில் என்ற ஊருக்கருகில் கொளத்தூர் என்றழைக்கப்படும் கிராமம் உள்ளது. இங்கு துளஸீஸ்வரர் திருக்கோவில் எனும் சிவாலயம் உள்ளது. அகத்திய முனிவர் கயிலாயததிலிருந்து தென்பகுதிக்கு செல்லும் வழியில் எங்கு பார்த்தாலும் துளசி செடிகள் நிறைந்த வனமாக காட்சியளித்த இத்தவத்திற்கு வந்தார். அவர் சிவ வழிபாட்டிற்காக ஏதாவது சிவாலயம் இருக்கின்றதா என்று இத்தலத்தில் தேடினார். அப்போது ‘அகத்தியரே என்னைத் தேடி அலைய வேண்டாம். நான் துளசி செடிகள் சூழ இங்குதான் மறைந்து இருக்கின்றேன்’ என்று அசரீரி ஒலித்தது. அகத்தியர் அசரீரி வந்த திசையில் சென்று பார்த்தபோது, அங்கே சுயம்பு லிங்கம் ஒன்று தென்பட்டது. அகத்தியர் அந்த சிவலிங்கத்திற்கு துளசியை சூட்டி துளசியாலேயே அர்ச்சனை செய்தார். அதனால் இத்தலத்தில் இன்றும், துளஸீஸ்வரரை துளசியால் அர்ச்சித்து துளசி தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
ரவீஸ்வரர் கோயில்
சூரிய ஒளிக்கதிர்கள் மூன்று வேளையும் சிவலிங்கத்தை தழுவும் ஆலயம்
சென்னை வியாசர்பாடியிலுள்ள ஐந்நூறு ஆண்டுகள் பழமையான ரவீஸ்வரர் ஆலயத்தில், காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும், சூரிய ஒளிக்கதிர்கள் சிவலிங்கத்தைத் தழுவும். சூரிய ஒளிக்கதிர்கள் சிவலிங்கத்தின் மீது மாலை போல விழுகின்றன.
தில்லை நடராசர் கோயில்
சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரையும் ஒருசேர தரிசிக்கக் கூடிய தலம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில், மும்மூர்த்திகளான பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவரும் எழுந்து அருளி இருக்கிறார்கள். இவர்கள் மூவரையும், நாம் ஒரே இடத்தில் நின்றபடியே தரிசிக்க முடியும். இந்த மாதிரி அமைப்பு வேறு எந்தத் தலத்திலும் இல்லை. இந்த ஆலயம், தேவாரப்பாடல் பெற்ற திருத்தலமாகவும், திவ்ய தேசமாகவும் விளங்குவது மற்றுமொரு தனிச்சிறப்பாகும். இத்தகைய தனிச்சிறப்பு பெற்ற மற்றுமொரு ஆலயம். காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலாகும். சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தில்லை கோவிந்தராஜன் பெருமாள் சன்னதியும், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள நிலாத்திங்கள் துண்டம் பெருமாள் சன்னதியும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள் ஆகும்

ஐயாறப்பர் கோவில்
திருவையாறு ஐயாரப்பன் கோவில் தட்சிணாமூர்த்தியின் தனிச் சிறப்பு
திருவையாறு ஐயாரப்பன் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு, சிவயோக தட்சிணாமூர்த்தி என்று பெயர். இவரது மேல்நோக்கிய வலது கரத்தில் கபாலமும், இடது கரத்தில் சூலமும் தாங்கி இருக்கிறார். கீழ்நோக்கிய வலது கரத்தில், சின்முத்திரை, இடது கரத்தில் சிவஞானபோதம் காணப்படுகின்றது. இந்த தட்சிணாமூர்த்தியின் திருவடியின் கீழ் ஆமை இருக்கின்றது. திருவடியானது ஆமையை மிதித்திருப்பது புலன் அடக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

தாணுமாலயன் கோயில்
இந்திரன் நள்ளிரவில் பூஜை செய்யும் ஆலயம்
நாகர்கோவில் அருகிலுள்ள சுசீந்திரத்தில் அருளும் தாணுமாலயன் ஆலயத்தில், தினமும் நள்ளிரவு இந்திரன் வந்து பூஜை செய்வதாக ஐதீகம். அதனால் இக்கோவிலில் முதல் நாள் மாலை பூஜை செய்யும் அர்ச்சகரை, மறுநாள் காலை பூஜை செய்ய அனுமதிப்பதில்லை. இக்கோவிலில் அர்ச்சகர்களை நியமிக்கும்போதே, தாங்கள் மூலவர் சன்னதியில் கண்ட காட்சிகளை வெளியில்சொல்லக் கூடாது என்ற உறுதிமொழியை அவர்களிடம் வாங்கிக் கொள்கிறார்கள்.

மகாலிங்கேஸ்வரர்_கோயில்
கரத்துடன் கூடிய அதிசய சிவலிங்கம்
கும்பகோணம் அருகிலுள்ள திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயத்து மூலவரின் சிவலிங்க திருமேனியிலிருந்து வலது கரம் வெளியில் வந்து ஆசி தரும் திருக்கோலத்தில் காட்சி தருகின்றது. இது ஆதிசங்கரர் அத்வைதம் உண்மை என்று நீருபணம் செய்தபோது,அதை ஆமோதிக்கும் வகையில் சிவபெருமான் தன் வலது கரத்தை நீட்டி ஆசி வழங்கியதைக் குறிப்பிடுவதாக உள்ளது.

வாலீஸ்வரர் கோயில்
கோலியனூர் சிவபெருமானுக்கு துளசியால் அர்ச்சனை
விழுப்புரத்திலிருந்து 9 கி.மீ. தூரத்திலுள்ள கோலியனூர் என்ற ஊரிலுள்ளது வாலீஸ்வரர் ஆலயம்.வாலி வழிபட்ட சிறப்புடையது இத்தலம்.இந்த ஆலயம் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் நரசிம்ம வர்மனால் எழுப்பப்பட்டு பின்னர் ராஜ ராஜ சோழனால் விரிவுபடுத்தப்பட்டது. இந்த ஆலயத்து இறைவனை துளசியாலும் வில்வத்தாலும் சேர்த்து அர்ச்சனை செய்தால் சகல துன்பங்களும் விலகும் என்பது இத்தலத்து சிறப்பாகும்.
செந்நெறியப்பர் கோயில்
மூன்று துர்க்கை சன்னிதிகள் உள்ள தேவாரத்தலம்
கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்ப கோணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தேவாரப்பாடல் பெற்ற திருச்சேறை திருத்தலம்.இத்தலத்தில்,வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில் சிவதுர்க்கை,விஷ்ணு,துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை என்று மூன்று துர்க்கை சன்னிதிகள் இந்த ஆலயத்தில் ஒரே இடத்தில் அமைந்துள்ளன. ராகு கால நேரத்தில் இந்த மூன்று துர்க்கைகளையும் வழிபடுவது நல்ல பலனைத்தரும்.
காயாரோகணேசுவரர் கோயில்
நாகை காயாரோகணர் ஆலயத்து நந்தியின் விசேடப் பார்வை
நாகை காயாரோகணர் ஆலயத்து நந்தியின் பார்வை இரண்டு திசைகளை நோக்கியுள்ளது.வலது கண் அம்பாளைப் பார்ப்பது போலவும் இடது கண் சிவனைப் பார்ப்பது போலவும் இருக்கின்றது.இந்த நந்திக்கு அருகம்புல் சாற்றி,சிவன்,அம்பாள் மற்றும் நந்தி என மூவருக்கும் தேன் அபிக்ஷேகம் செய்து வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

வீழிநாதேஸ்வரர் கோயில்
திருவீழிமிழிலை திருத்தலத்து ஆலயத்து படிகளின் சிறப்பு
பூந்தோட்டம் அருகிலுள்ள திருவீழிமிழிலை என்ற ஊரிலுள்ள திருவீழிமிழிலைநாதர் சிவாலயத்திலுள்ள மகாமண்டபத்து படிகள் சற்று வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளன.மகாமண்டபத்தின் கிழக்குப்புறத்தில் வாரத்தைக் குறிக்கும் விதமாக ஏழு படிக்கட்டுகளும்,தென்புறத்தில் மாதத்தைக் குறிக்கும் விதமாக பன்னிரெண்டு படிக்கட்டுகளும், வடக்குப்புறத்தில் நவக்கிரகங்களைக் குறிக்கும் விதமாக ஒன்பது படிக்கட்டுகளும் இருப்பது ஓர் விசேடமான அமைப்பாகும்.
பாடலீஸ்வரர் கோவில்
சிவன் சன்னதியில் பள்ளியறை
அனைத்து சிவ ஆலயங்களிலும், அம்பாள் சன்னதியில்தான பள்ளியறை அமைந்திருக்கும். ஆனால் தேவாரப் பாடல் பெற்ற திருப்பாதிரிப்புலியூர் (கடலூ்ர்) சிவாலயத்தில் பள்ளியறை சிவன் சன்னதியில் உள்ளது, இங்கு மற்ற ஆலயங்களைப் போல சுவாமி அம்மனின் சன்னதியிலுள்ள பள்ளியறைக்கு எழுந்தருள்வதற்கு பதிலாக, அம்மன் தானே சிவன் சன்னதியி லுள்ள பள்ளியறைக்கு எழுந்தருள்கிறாள்.
கபாலீசுவரர் கோயில்
இரண்டு கொடிமரங்கள் அமைந்த தேவாரத்தலம்
பொதுவாக ஆலயங்களில் ஒரு கொடிமரம்தான் இருக்கும்.ஆனால் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில்,சுவாமி சன்னதிக்கு எதிராக ஒரு கொடிமரமும் சிங்காரவேலர் சன்னதிக்கு எதிராக மற்றொரு கொடிமரமும் என இரண்டு கொடிமரங்கள் அமைந்துள்ளன.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
கால் மாற்றி ஆடும் நடராஜப் பெருமான்
நடராஜப் பெருமான் பொதுவாக தன் வலது காலை முயலகன் மீது ஊன்றி இடது காலைத் தூக்கி ஆடும் கோலத்தில் தான் எல்லா சிவாலயங்களிலும் காட்சி தருவார்.ஆனால் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், ஒரு பாண்டிய மன்னன் ஒரே காலில் நிற்பது நடராஜப் பெருமானுக்கு வலிக்குமே என்று ஆதங்கப் பட்டதால்,தன் இடது காலை முயலகன் மீது ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடும் கோலத்தில், வெள்ளியம்பலத்தில் காட்சி தருகிறார்.

தில்லை நடராசர் கோயில்
சிதம்பரத்து பொன்னம்பலத்திற்கும் நமது உடலுக்கும் உள்ள ஒற்றுமைகள்
சைவ உலகில் கோவில் என்றால் அது சிதம்பரத்தைத்தான் குறிக்கும். சிவபெருமானின் ஐந்து சபைகளுள் ஒன்றான பொற்சபை உள்ள தலம்.
பஞ்ச பூதத் தலங்களுள் ஆகாயத் தலம்.பொன்னம்பலத்தில் சிவபெருமான் நடராசர் திருக்கோலத்துடன் காட்சி தருகிறார்.
இந்த பொன்னம்பலத்திற்கும் நமது உடலுக்கும் ஒற்றுமைகள் உள்ளன. பொன்னம்பலத்தின் மேலே உள்ள ஒன்பது தங்கக் கலசங்கள் 9 சக்திகளைக் குறிக்கின்றன. இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள 64 மரத்துண்டுகள் 64 கலைகளையும், இதில் வேயப்பட்டுள்ள 21,600 ஓடுகள் ஒரு நாளில் நாம் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றினையும், இவற்றில் அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள் நம் உடலில் உள்ள நரம்புகளின் எண்ணிக்கையையும் குறிக்கும். இக்கோயிலில் மட்டும் கருவறை இடதுபுறம் உள்ளது. அதேபோல் நமது உடம்பில் இதயம் இடப்புறத்தில்தான் உள்ளது.
சகல தீர்த்தமுடையவர் கோவில்
விசேடத் தீர்த்தம்
இராமநாதபுர மாவட்டம் தொண்டியிலிருந்து 15 கீ.மீ. தொலைவிலுள்ள தலம்தான் தீர்த்தாண்டதானம். இத்தலத்து இறைவன் சகல தீர்த்தமுடையவர்.இறைவி பெரியநாயகி. இத்தலத்து தீர்த்தமான கடலில் நீராடி பின்னர் இறைவனை வழிபட்டால் 64000 தீர்த்தங்களில் நீராடிய புண்ணியமும், பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம்.