
பாளையங்கோட்டை முப்பிடாதி அம்மன் கோவில்
மூன்று முகம் கொண்ட முப்பிடாதி அம்மன்
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது முப்பிடாரி அம்மன் கோவில்.
மகிசாசுரனை அழிக்க, அம்பிகை எட்டு பெண் குழந்தைகளாக நாகலோகத்தில் பிறந்தாள். அவர்களில் மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தைதான் முப்பிடாதி. அஷ்ட காளியரில் மூன்றாவதாக மூன்று தலைகளுடன் அவதரித்தவள் முப்பிடாதி அம்மன். பிடரி என்றால் தலை என்று பொருள். மூன்று தலைகள் இருந்தமையால் முப்பிடரி என்று அழைக்கப்பட்ட இந்த அம்மன் பின்னர் முப்பிடாரி என்று அழைக்கப்படலானார். இதுவே மருவி முப்பிடாதி என்றானது. இந்த அம்மனுக்கான கோவில் திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் அமைந்துள்ளன.
இந்த அம்மனுக்கு மூன்று முகம் தோன்றியதற்கு பின்னணியில் ஒரு ஒரு புராண நிகழ்ச்சி உள்ளது. இந்த அம்மன் சிவனை நோக்கி தவம் செய்து சிவனிடம் 103 சிவலிங்கம் பெற்றார். பின்பு ஒரு நாள் சிவனடியார்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்ய பால் கொண்டு செல்லும் போது, அதனை வாங்கி பருகினாள். இதனால் கோபம் அடைந்த சிவன் தான் வழங்கிய சிவலிங்கத்தை, திருமாலை வாங்கி வர வேண்டினார். திருமாலும் வாங்க வரச் சென்றார். இதனை அறிந்த அம்பிகை மூன்று சிவலிங்கத்தை விழுங்கினார். ஆகையால் அம்மனுக்கு மூன்று முகம் தோன்றியது, இதனால் அம்மனுக்கு முப்பிடாரி அம்மன் என்று பெயர் வந்தது.

பருத்தியூர் சந்தன மாரியம்மன் கோவில்
ஏழைக்காக ஆங்கிலேயே நீதிபதியிடம் சாட்சி சொன்ன சந்தன மாரியம்மன்
திருவாரூர் மாவட்டத்தில் குடவாசலுக்குக் கிழக்கே 7 கி.மீ. தொலைவில் குடமுருட்டி ஆற்றின் வடகரையில், பச்சை வயல்களின் நடுவே அமைந்துள்ளது. பருத்தியூர் சந்தன மாரியம்மன் கோவில்.
பருத்தியூர் மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறார் இந்த சந்தன மாரியம்மன். இந்த அம்மன் புரிந்த லீலைகள் ஏராளம். அதில் ஒன்றைத்தான் இப்பதிவில் நாம் காண இருக்கிறோம்.
பாவாடை என்பவன் ஏழை விவசாயி. செல்வந்தர் ஒருவரிடம் கடன் பெற்றான். தன்னிடமிருந்த ஆடு, மாடுகளை விற்று, பாவாடை உரிய நேரத்தில் கடனைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். பாவாடை கடனை மீண்டும் செலுத்தியும், செல்வந்தர் கடன் பத்திரத்தை கொடுக்க மறுத்தார், அத்துடன், "பாவாடை பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை' என்று வழக்கும் தொடுத்துவிட்டார். ஆங்கிலேயே நீதிபதி முன்பு வழக்கு வந்தது. ஆங்கிலேயே நீதிபதி, 'நீர் கடனைத் திருப்பிக் கொடுத்ததற்கு எவரேனும் சாட்சி சொல்லுவார்களா?' என்று, பாவாடையிடம் கேட்டார். பாவாடையோ 'ஐயா… எங்க ஊரு சந்தன மாரியம்மனே சாட்சி' என்றான். பாவாடை அவரது பாமரத்தனத்தைக் கண்டு அனைவரும் சிரித்தனர்.
அன்று இரவு, அந்த ஆங்கிலேய நீதிபதியின் கனவில் ஒரு நீதிமன்றக் காட்சி தோன்றியது! விசாரணைக் கூண்டில், மஞ்சள் நிறத்தில் பட்டுப் பாவாடை உடுத்திய ஒரு சிறுமி நின்றாள்!. 'நீ யாரம்மா?' என்று ஆங்கிலேய நீதிபதி கேட்டார். 'நான்தான் பருத்தியூர் சந்தனமாரி! நிரபராதியான பாவாடைக்குச் சாட்சி சொல்ல வந்திருக்கிறேன்!' என்றாள்.
‘நான் எதனை ஆதாரமாகக் கொண்டு பாவாடை நிரபராதி என்று தீர்மானிப்பது?' என்று நீதிபதி, சிறுமியிடம் கேட்டார். சில நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, 'அவர்களையும் அழைத்து விசாரித்து, நீதி வழங்கு!' என்ற சிறுமி புன்னகை பூத்து மறைந்துவிட்டாள். கனவு கலைந்து விழித்து எழுந்த நீதிபதி, சிறுமி கனவில் குறிப்பிட்ட பெயர்களை எழுதி வைத்துக் கொண்டார், சந்தனமாரி கனவில் குறிப்பிட்ட பெயருள்ள நபர்கள் ஊரில் உண்மையிலேயே இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்வதற்காக நீதிபதி கிராம அதிகாரிகளை அழைத்து விசாரித்தார்.
கிராம அதிகாரிகள், அம்பிகை குறிப்பிட்டவர்கள் இருப்பதை உறுதி செய்தவுடன், அந்த நபர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவர்கள், 'பாவாடை தன்னிடமிருந்த ஆடு, மாடுகளை விற்றுக் கடனைத் தீர்த்து விட்டார்' என்பதை நீதிமன்றத்தில் கூறினார்கள். 'சந்தனமாரி சாட்சி கூறியபடி, பாவாடை நிரபராதி எனத் தீர்ப்பளிக்கிறேன்!' என்று அந்த ஆங்கிலேய நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இன்றுவரை இதுபோன்ற விஷயங்கள் நிறைய நடக்கின்றன. சந்தனமாரி தவறு செய்தவர்களை தண்டிக்கிறாள். மக்களை நல்வழியில் நடக்க வைக்கிறாள்.

சந்தவாசல் கங்காதேவி கோவில்
விஷ்ணுவுக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படும் கோவில்
வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில், 32 கிமீ தொலைவில் அமைந்துள்ளது சந்தவாசல் கங்காதேவி கோவில். இக்கோவிலில், ஐந்து தலை நாகத்தின் கீழ் அமர்ந்திருக்கிறாள், கங்காதேவி. கைகளில் தண்டம், உடுக்கை மற்றும் அமுத கலசம் உள்ளது. கீழே சிம்ம வாகனம் இருக்கிறது.
சிவபெருமானை அழைக்காமல், அவரது மாமனார் தட்சன் யாகம் நடத்தினார். இதனால், கோபத்துடன் இருந்த அவரது வெம்மையை, தலையில் இருந்த கங்காதேவியால் தாங்க முடியவில்லை. சிவனை சாந்தப்படுத்தும்படி, அவள், மகாவிஷ்ணுவை வேண்ட, அவரும் அவ்வாறே செய்தார். மேலும், சிவபெருமானின் உக்கிரமான பார்வையால் எரிந்த பகுதிகளைச் சுற்றிலும், ஏழு நீர் நிலைகளை உண்டாக்கி, குளிரச் செய்தார். இந்த சம்பவத்தின் அடிப்படையில், சந்தவாசலில், குமார கம்பணன் என்ற சிற்றரசரின் மனைவி கங்காதேவிக்கு, கோவில் எழுப்பினார்.
கோவிலுக்குப் பின்புறம் ராஜகம்பீர மலை உள்ளது. பூலோகம் வந்த சிவன், முதலில் இந்த மலையிலும், அடுத்து, திருவண்ணாமலையிலும் பாதம் பதித்தார். இதற்கு, 'மிதிமலை' என்று பெயர். மலையில் சிவபாதம் உள்ளது. திருக்கார்த்திகைக்கு மறுநாள் கைசிக கார்த்திகையன்று, இந்த மலையில் விஷ்ணு தீபம் எனப்படும் தீபத்திருவிழா வெகு விமர்சையாக நடக்கும். இக்கோவிலில் விஷ்ணுவுக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது தனிச்சிறப்பாகும். இங்கு, பெருமாள் கோவில் இருந்ததன் அடையாளமாக, கோவில் முகப்பில் ஒரு தீபஸ்தம்பம் உள்ளது. இதில், சங்கு, சக்கரம், கருடாழ்வார், ஆஞ்சநேயர் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
கங்காதேவிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தையே இங்கு பிரதான பிரசாதமாகத் தருகின்றனர். தண்ணீர் வடிவ தெய்வமான கங்கைக்கே, பூஜை செய்த தீர்த்தமென்பதால் இதை மிகவும் புனிதமானதாகக் கருதுகின்றனர் இதை சிறிது வாங்கிச் சென்று. வீட்டில் வைத்துக் கொள்ள ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தீர்த்த வழிபாட்டிற்கு முக்கியத்துவம் உள்ள தீபாவளி, மாசி மகம் நாட்களில் விசேஷ பூஜை நடக்கும். சித்திரை முதல் நாள், பக்தர்களே, அம்பிகைக்கு பூஜை செய்யலாம்.
திருமணத்தடை, புத்திரதோஷம் உள்ளவர்கள், 'துணி முடிதல்' என்ற வழிபாட்டைச் செய்கின்றனர். மஞ்சள் துணியில் காணிக்கை கட்டி, அம்பாள் பாதத்தில் வைத்து, கோவிலில் கொடுத்து விடுவார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும், மீண்டும் வந்து துணி முடிப்பை வாங்கி காணிக்கை செலுத்துவார்கள். கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்கவும், அவரது நன்மைக்காகவும் அம்பிகைக்கு தாலி அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள்.

செல்லப்பிராட்டி அட்சர லலிதா செல்வாம்பிகை கோவில்
கற்பலகையில் இயந்திர வடிவில் இருக்கும் அபூர்வ அம்பிகை
லலிதாம்பிகைக்கான தனித்த பழமையான கோவில்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியிலிருந்து, மேல்மலையனூர் செல்லும் செஞ்சி சேத்துப்பட்டு சாலையில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது செல்லப்பிராட்டி என்ற கிராமம்.
இந்த கிராமத்தில் கல் பலகையில், 12 மந்திர எழுத்துக்களாக (அட்சரம்), உருவமற்ற நிலையில் எழுந்தருளி இருக்கிறார் லலிதா செல்வாம்பிகை.
ஸ்ரீராமர் பிறக்க, தசரத சக்ரவர்த்திக்கு புத்திர காமேஷ்டி யாகத்தை செய்து கொடுத்த ரிஷ்ய சிருங்கரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தேவி இவள். ரிஷியசிருங்கர், 6 அடி உயரம் 2 அடி அகலம் 4 அங்குலம் கனம் கொண்ட கற்பலகையில் 12 கட்டங்கள் கொண்ட இயந்திரம் அமைத்து, ஒவ்வொரு சதுர கட்டத்திலும் ஒவ்வொரு பீஜ மந்திரத்தை பொறித்துள்ளார். இந்த சதுர கட்டங்களுக்கு மேல், நடுவே சூலமும், வலது பக்கத்தில் சூரியனும், இடது பக்கத்தில் சந்திரனும் பொறிக்கப்பட்டுள்ளது. பீஜாட்சர எழுத்துக்கள் குறிக்கப்பட்ட கற்பலகை சிலையில் மகா மந்திரங்களின் சூட்சமம் அடங்கியுள்ளது.
லலிதம் என்றாலே இதமானது, அழகானது என்று பொருள். லலிதாம்பிகை மகாசக்தியும், பேரழுகும் ஒருங்கே பெற்றவள். முப்பெரும் தேவியர்களும் ஒன்றாக இணைந்த சக்தி வடிவம் தான் இந்த லலிதா செல்வாம்பிகை.
இந்த இயந்திரக் கல் பலகையின் முன்னே சிலா ரூபத்திலும் காட்சி அளிக்கிறார் லலிதா செல்வாம்பிகை. சுமார் மூன்றடி உயர சிறிய திருமேனியுடன் இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். வலது திருக்கரம் பக்தர்களை காக்கும் படியும், இடது திருக்கரம் பாதத்தை நோக்கியபடியும் அமைந்துள்ளது. மற்ற ஆறு கரங்களில் பார்வதிக்குரிய பாசம், அங்குசம், லக்ஷ்மிக்குரிய சங்கு, சக்கரம், சரஸ்வதிக்குரிய கமண்டலம், அக்ஷயமாலை ஆகியவை உள்ளன.
லலிதா சகஸ்ரநாமத்தை இவ்வாலயத்தில் அமர்ந்து ஒரு முறை பாராயணம் செய்தாலே ஆயிரம் முறை பாராயணம் செய்த பலன் கிட்டும். ஏனெனில் லலிதை எனும் தேவிக்கான தனித்த பழமையான ஆலயம் இது என்பதுதான்.
இந்த அம்பிகைக்கு எல்லா பூக்களுமே விசேஷமானவை என்றாலும்கூட சிவப்பு நிற மலர்களால் செவ்வாய்க்கிழமைகளில் பூஜிப்பது சிறப்பு . வெண்ணிற மலர்களால் வெள்ளிக் கிழமைகளில் மாலைப்பொழுதில் அர்ச்சிப்பது விசேஷம்.
திருமணம் ஆகாதவர்கள் பௌர்ணமி நாட்களில் இந்த அம்பாளுக்கு பன்னிரெண்டு நெய்தீபங்கள் ஏற்றி கல்யாணமாலை சாற்றினால் திருமணம் நிச்சயம் நடக்கும் என்பது நம்பிக்கை.

திருமீயச்சூர் மேகநாதர் கோவில்
பக்தர்களின் கோரிக்கைகளை லலிதாம்பிகையிடம் சமர்ப்பிக்கும் துர்க்கையம்மனின் கிளி
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையின் அருகிலுள்ள பேரளம் ரயில் நிலையத்திலிருந்து, மேற்கே ஒரு கி.மீ. தொலைவில் அமைந்து உள்ள தேவார தலம் திருமீயச்சூர் மேகநாதர் கோவில். இறைவியின் திருநாமம் லலிதாம்பிகை.
இந்த தலத்தில், மேகநாதர் சந்நிதி கோஷ்டத்தில், அஷ்ட புஜங்களுடன் 'சுகப்பிரம்ம துர்காதேவி' எழுந்தருளியுள்ளாள். முழுவதும் கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள துர்க்கை, மகிஷனின் தலைமீது நின்றபடி முன் இடது கையை இடுப்பில் வைத்து, வலது கையில் அபயஹஸ்தம் காட்டி, சங்கு, சக்கரம், பட்டாக்கத்தி, சூலம், கேடயம் ஆகிய ஆயுதங்களுடன் ஒரு கிளியையும் ஏந்தியபடி புன்னகை வதனத்துடன் சாந்தவடிவமாக அருள்புரிகிறாள். துர்க்கை சிலையிலேயே கிளி அமைக்கப்பட்டுள்ளது அதிசயமாக உள்ளது. இவள் மகிஷாசுரன் மீது நின்றாலும் சாந்த சொரூபிணியாக திகழ்கிறாள்.
அன்னை லலிதாம்பிகையிடம் நாம் வைக்கும் கோரிக்கையை துர்க்கையம்மனிடம் மனமுறுக வேண்டினால், துர்க்கையம்மன் கையில் உள்ள கிளி தூது சென்று, லலிதாம்பிகையிடம் வரம் பெற்று வரும் என்பதும் ஐதீகம். அம்பிகையும், கிளி சொல்வதைக் கேட்டு, பக்தர்களின் குறைகளை தீர்த்துவைப்பாளாம். அதுவும், பக்தர் தன்னிடம் சொன்ன கோரிக்கைகளை அம்பிகை நிறைவேற்றி வைக்கும் வரை, இந்த கிளி, அம்பிகையிடம் கோரிக்கைகளை நினைவுபடுத்திக் கொண்டே இருக்குமாம். 'சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை' என்ற சொலவடை கூட இதில் இருந்து தான் பிறந்தது.
கோவிலுக்குள் ஏராளமான பச்சைக் கிளிகள் பறந்த வண்ணம் உள்ளன. துர்க்கையின் கையிலுள்ள கிளியால் தங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறி விடுவதால், இந்த துர்க்கையை 'சுகபிரம்ம துர்க்காதேவி' ( 'சுகம்' என்றால் கிளி ) என்று பக்தர்கள் அழைக்கின்றனர். இன்றும் கூட தினமும் மாலை வேளையில் மட்டும் ஒரு கிளி துர்க்கா சன்னதியில் இருந்து லலிதாம்பிகை சன்னதிக்கு சென்று வருவதைக் காணலாம்.

கங்கைகொண்ட சோழீசுவரர் கோவில்
வீணை இல்லாத ஞான சரஸ்வதி தேவி
அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கங்கைகொண்ட சோழபுரம் அல்லது கங்கைகொண்ட சோழீஸ்வரம் கோவில். இத்தலத்தில் கையில் வீணை இல்லாமல் சரஸ்வதி தேவி எழுந்தருளி இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.
பொதுவாக சரஸ்வதி தேவி கையில் வீணையுடன் தான் காட்சி அளிப்பாள். சரஸ்வதி தேவி கையில் வைத்திருக்கும் வீணையின் பெயர் கச்சபி ஆகும். இந்த வீணையானது சிவபெருமானால் உருவாக்கப்பட்டது. பின்னர் சிவபெருமான், நாரதர் உள்ளிட்ட பல இசைக் கலைஞர்களுக்கு இசை நுணுக்கங்களை உபதேசித்த பிறகுத் தனது சகோதரி சரஸ்வதிக்கு, இந்த வீணை வீணையை வழங்கினார்.
ஆனால் சரஸ்வதி தேவி, இக்கோவிலில் கையில் வீணை இல்லாமல், ஞான சரஸ்வதியாக தாமரை பீடத்தின் மேல் அமர்ந்து காட்சி தருகிறாள். அர்த்த (பாதி) பத்மாசனத்தில் காட்சி தரும் இவளின் வலது கையின் ஆள்காட்டி விரல் மேல் நோக்கியபடி உள்ளது. இதற்கு சூசி முத்திரை என பெயர். கடவுளைப் பற்றி அறிவதே மேலானது என்ற ஞான உபதேசத்தை நமக்கு போதிக்கிறாள். சாந்த முகத்துடன் மார்பில் பூணூல், கைகளில் ஜபமாலை, கமண்டலம், சுவடி, வளையல்கள் என கலை நயத்துடன் காட்சி அளிக்கும் இவளது தோற்றம், பார்ப்பவரை பரவசமடைய செய்யும்.

தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில்
மானுட உருவம் கொண்டு அம்பிகை இறைவனை பூஜை செய்த தலம்
திருச்சி மாவட்டம் முசிறியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கோவிந்தவல்லி. கோவிந்தவல்லி என்றால் உயிர்களுக்கெல்லாம் தலைவி என பொருள் உண்டாம். இந்த அம்பிகைக்கு சிவகாமசுந்தரி, கோவர்த்தனாம்பிகை அம்மன் போன்ற பல்வேறு பெயர்களும் உண்டு.
ஒரு சமயம் கைலாயத்தில் சிவபெருமான், பார்வதிதேவிக்கு வேதசிவாகமப் பொருளை உணர்த்திக் கொண்டிருந்தபோது, அம்பிகையின் கவனம் மாறும்படியாக காமதேனு அவ்வழியே செல்ல, தேவியின் கவனம் அந்த காமதேனு மீது மாறுவதை உணர்ந்து கோபமடைந்த சிவபெருமான், அம்பிகையை நோக்கி 'பூலோகத்தில் திண்ணக்கோணம் அடைந்து பங்குனி மாத வளர்பிறையில் வரும் வசந்த நவராத்திரி என்னும் ஒன்பது ராத்திரி நாள்கள் நீ தவமிருக்கும்போது, நான் பசுவாக உனக்கு காட்சியளிப்பேன். அதன் பின் என்னை வந்து நீ அடைவாயாக' என்று பார்வதி தேவிக்கு சாபமிட்டு அதற்கான விமோசனத்தையும் அருளினார். அதன்படி மானுட உருவம் கொண்டு இடையர் குலத்தில் அம்பிகை பிறந்து, சிவபெருமானை நோக்கி தவமிருந்து வரம் பெற்று மீண்டும் அடைந்தது இந்தக் கோவிலில்தான்.
சிவபெருமானால் சாபம் விட்டு, மானுட வேடம் பூண்டு, பின்னர் தவமிருந்து தேவி அவரிடம் இணைந்த திருக்கோயில் என்பதால், பங்குனி மாத வளர்பிறையில் வசந்த நவராத்திரி உற்சவம் இறைவிக்கு நடத்தப்படுகிறது.

திருமாகாளம் மாகாளேசுவரர் கோவில்.
மறுபிறவியை தவிர்க்கும் அம்மனின் நெய்க்குளம் தரிசனம்
திருமணத்தடை நீங்க அரளி மாலை வழிபாடு
திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் என்னும் ஊருக்கு அருகில் உள்ள தேவார தலம் திருமாகாளம் மாகாளேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் பட்சயாம்பிகை (அச்சம் தவிர்த்த நாயகி). காளி அம்பன், அம்பாசூரன் என்னும் அசுரர்களை வதைத்த தோஷம் நீங்க இத்தலத்து இறைவனை வழிபட்டதால், அவருக்கு மாகாளநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் தான் சோமாசிமாற நாயனார் சோம யாகம் செய்தார்.
மாகாளம் என்ற பெயர் பெற்ற சிவதலங்கள் இந்தியாவில் மூன்று இடங்களில் இருக்கின்றன. அவை வட இந்தியாவிலுள்ள உஜ்ஜயனி மாகாளம், தொண்டை நாட்டுத் தலமான இரும்பை மாகாளம், மற்றும் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான அம்பர் மாகாளம் என்ற இத்தலம்.
இத்தலத்து அம்பாள் பட்சயாம்பிகை (அச்சம் தவிர்த்த நாயகி), பக்தர்களின் மன துயரத்தையும், மனதில் உள்ள அச்சத்தையும் தீர்க்கும் நாயகியாக போற்றப்படுகிறார்.
இத்தலத்தில் அம்பாள் அச்சம் தீர்த்த நாயகிக்கு நெய் குளம் தரிசனமும் அன்ன பாவாடை சேவையும் மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது. கருவறைக்கு முன்பாக 15அடி நீளத்திற்கு வாழை இலையை பரப்பி அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர். அத்துடன் புளி சாதம், தயிர்சாதம் போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைக்கப்படும். சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம் போல அமைத்து அங்கே இரண்டரை டின் தூய நெய்யைக் கொண்டு நிரப்புவர்.
அதன் பின்னர் கருவறையின் திரையை விலக்கினால் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உருவம் நெய் குளத்தில் பிரதிபலிக்கும். இதனை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது. இதனால் இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் இத்தலம் வந்து சிவப்பு அரளிப்பூ மாலைகள் இரண்டு தொடுத்து அதை இறைவன், இறைவிக்கு சார்த்தி ஐந்து வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டு, பின்பு ஒரு மாலையைப் பெற்று கழுத்தில் அணிந்து கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது இக்கோவிலின் தனி சிறப்பாகும்.

உத்திரகோசமங்கை வராகி அம்மன் கோவில்
உலகின் முதல் வராகி அம்மன் கோவில்
காளியம்மன் போல் அமர்ந்திருக்கும் வராகி அம்மனின் வித்தியாசமான தோற்றம்
ராமநாதபுரத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ளது மிகவும் பழமையான சுயம்பு வராகி அம்மன் கோவில். இந்த வராகி அம்மனுக்கு மங்கை மாகாளியம்மன் என்ற பெயரும் உண்டு. உலகின் முதல் சிவாலயம் என்று கருதப்படும் உத்திரகோசமங்கை மங்களநாதர் கோவிலின் காவல் தெய்வம் இந்த வாராகி அம்மன். இந்த இரு கோவில்களும், சதுர் யுகங்களையும் கடந்த பழமையான கோவில்கள் ஆகும். 'மண் முந்தியதோ, மங்கை முந்தியதோ' என்ற சொற்றொடர் இத்தலத்தின் தொன்மையினைக் குறிக்கும். எனவே இந்த வராகி அம்மன், உலகின் முதன்மையான வராகி அம்மன் என்று போற்றப்படுகின்றாள்.
இந்தியாவில் வராகி அம்மனுக்கு உத்தரகோசமங்கை, தஞ்சாவூர், காசி உள்ளிட்ட சில இடங்களில்தான் முதலில் கோவில்கள்/ சன்னதிகள் ஏற்பட்டன. அவற்றில் மிக மிக பழமையானது தான் உத்தரகோசமங்கையில் உள்ள மங்கை மாகாளி என்ற சுயம்பு வராகி அம்மன் கோவில்.
ஆறடி உயரத்தில் எட்டு திருக்கரங்களுடன் மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தரும் சுயம்பு வராகி அம்மன், வலது கரம் அபயம் அளிக்க, இடது கரம் வரதம் காட்ட, மற்ற கரங்களில் சங்கு, சக்கரம், ஏர்கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம் தாங்கிட, காளியம்மன் போல வலது காலை குத்த வைத்து, இடது காலை தொங்கவிட்டு உக்கிரமாக அமர்ந்த கோலத்தில் வராகி அன்னை இருக்கிறாள். வடக்கு திசை நோக்கி இருக்கும் அவள் காலடியில் பஞ்ச பூதங்களும் அடக்கம். இதனைக் குறிக்கும் வகையில் 5 பூதகணங்கள் அவள் காலடியில் உள்ளனர்.
அன்னையின் உக்கிரத்தை தணிக்கும் பொருட்டு அவளது இடது பக்கம் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளார். இவர் அம்பாளின் கோபத்தை பெற்றுக் கொண்டு, பக்தர்களுக்கு அருள் மட்டும் கிடைக்க வழிவகை செய்கிறார். இப்படி விநாயகர் அருகில் இருக்கும் வராகி அம்மனை, வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது
வராகி அம்மனுக்கு மஞ்சளை அரைத்து சாத்தும் பரிகாரம்
வராகி அம்மனுக்கு மஞ்சள் அரைத்து சாத்துவது இந்த கோவிலில் சிறந்த பரிகாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஏனென்றால் அன்னையின் முகம் காட்டுப்பன்றி வடிவம் கொண்டது. பன்றிகள் பொதுவாக பூமியை கிளறி கிழங்கு வகைகளை உண்ணும். மஞ்சளும் பூமிக்கடியில் விளையும் ஒரு கிழங்கு வகை என்பதாலும், அதோடு மங்களகரமான பொருள் என்பதாலும் வராகி அம்மனுக்கு மஞ்சளை அரைத்து சாத்தும் வழக்கம் ஏற்பட்டது.
திருமணம், குழந்தை பேறு, வேலைவாய்ப்பு, தொழில் அபிவிருத்தி, பணம் மற்றும் சொத்து பிரச்சினை, வழக்கு மற்றும் நோய் நொடிகள் தீர பக்தர்கள் மஞ்சளை அரைத்து அம்பாளின் பாதத்தில் சாத்தி கோரிக்கைகளை சொல்லி வழிபடுவார்கள். அன்னையின் பாதத்தில் சாத்திய மஞ்சளை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள். அதனை சிறிதளவு எடுத்து 3 நாட்கள் சாப்பிட வேண்டும். பெண்கள் உடலுக்கு பூசியும் குளிக்கலாம்.
பக்தர்கள் மஞ்சள் அரைத்து சாத்துவதற்கு மஞ்சள் பொடியை பயன்படுத்தக் கூடாது. கோவிலுக்கு வந்து தான் மஞ்சள் கிழங்கை அரைத்து கொடுக்க வேண்டும். இதற்காக கோவில் வளாகத்தில் 180 அம்மிகற்கள் வைக்கப்பட்டு உள்ளன.
மற்றொரு சிறப்பு பரிகாரமாக தேங்காய் விளக்கு ஏற்றுதலும் செய்யப்படுகிறது.
வளர்பிறை, தேய்பிறை பஞ்சமி திதியில் வராகி அம்மனை விரதமிருந்து வழிபட நல்ல பலன் கிடைக்கும். வராகி அம்மனிடம் மேற்கண்ட பரிகாரங்கள் மூலம் வைக்கும் வேண்டுதல்கள் யாவும் 3 முதல் 6 மாத காலத்தில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அம்பகரத்தூர் அஷ்டபுஜ பத்ரகாளியம்மன் கோவில்
அம்பகரத்தூர் அஷ்டபுஜ பத்ரகாளியம்மன்
வெள்ளைத் துணி அணிவிக்கப்படும் காளியம்மன்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில், சனி பகவான் திருத்தலமான திருநள்ளாறிலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அம்பகரத்தூர் என்னும் தலத்தில் அமைந்துள்ளது, அஷ்டபுஜ பத்ரகாளியம்மன் கோவில். தமிழக எல்லையில் அமைந்துள்ள இத்தலம், பேரளம் என்ற ஊரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது..உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் இக்கோவில், வட இந்தியாவுக்கு அடுத்த இரண்டாவது காளியம்மன் தலமாக விளங்குகின்றது.
அம்பர் மாகாளத்தில் அம்பன், அம்பராசுரன் என்ற இரண்டு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் மக்களை துன்பப்படுத்தி வந்தனர். அனைவரும் சிவபெருமானை வணங்கி காத்தருள வேண்டிக்கொண்டனர். அம்பிகையின் திருவருளால் அம்பராசுரனை அம்பன் கொன்று விட்டான். பின்னர் அவன் தேவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்க உடனே காளியாக மாறி அம்பனை விரட்டுகிறாள். ஓடிக்கொண்டு இருக்கும் போது அந்த அசுரன் கிடாமங்கலம் என்று ஊரில் எருமை கிடாவாக மாறுகிறான். அம்பகரத்தூரில்தான் அவன் காளியால் சம்ஹாரம் செய்யப்படுகிறான்.
அரக்கனை சம்ஹாரம் செய்த உடன் காளிக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு இரண்டு அசுர முகமானது தலையில் ஒன்றும் காதில் ஒன்றும் தோன்றி விடுகிறது. இதனால் எம்பெருமானிடம் சென்று முறையிட்டுகிறாள். அவர் உபதேசித்தப்படி அம்பகரத்தூரில் இருந்து கோவில் திருமாகாளம் சென்று தனது திருக்கரங்களால் சிவலிங்கம் பிடித்து வைத்து பூஜை செய்து தோஷ நிவர்த்தி பெறுகிறார்.
ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் இங்கு திருவிழா நடக்கும். மகிஷாசுரன் சம்ஹார நினைவு வைபவம் மிகவும் முக்கியமான நிகழ்வாக கொண்டாடப்படும். ஏராளமான பக்தர்கள் பல ஊர்களில் இருந்து திரண்டு வருவார்கள்.
கருவறையில், காளியம்மன் வடதிசை நோக்கிக் காட்சி தருகிறாள். நீண்ட பற்கள், கோபமுகம். வலக்கரங்கள் நான்கில் சூலம், கத்தி, உடுக்கை, கிளி; இடக்கரங்கள் நான்கில் பாசம், கேடயம், மணி, கபாலம் ஏந்தியுள்ளாள். வலப்பாதத்தை மடித்து இடப்பாதத்தை அம்பரன்மீது ஊன்றி, திரிசூலம் கொண்டு அவனது மார்பைப் பிளப்பது போன்ற கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறாள். பத்ரகாளியம்மனுக்கு 18 மீட்டர் அளவில், எப்பொழுதும் வெள்ளைத் துணி அணிவிப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இந்தத் துணியை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
பிரார்த்தனை
வழக்கு பிரச்சனைகள் உள்ளவர்கள், எதிரிகளின் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இங்கே வந்து வேண்டிக் கொள்கிறார்கள். ஏவல், பில்லி, சூன்யம் அனைத்தும் இங்கே வந்தால் தொலைந்து போகும்.

திருமீயச்சூர் மேகநாதர் கோவில்
திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மன்
லலிதா என்றால் மென்மையானவள் என்றும் சுலபமானவள் என்றும் அர்த்தம். திருமீயச்சூர் தலத்தில், லலிதாம்பிகை, மிகுந்த கலை அழகுடன், தன் வலது காலை மடித்து இடது காலைத் தொங்கவிட்டவாறு ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்து அபய, வரத ஹஸ்த முத்திரையுடன் காட்சியளிக்கிறார். இப்படி வலது காலை மடித்த அம்பிகையை வேறெங்கும் காண்பது அரிது.
பக்தையிடம் கால் கொலுசு கேட்ட லலிதாம்பிகை அம்மன்
லலிதாம்பிகையின் அலங்காரத்திற்கு கால் கொலுசு தவிர அனைத்து வகை ஆபரணங்களும் இருந்தன. அம்பிகை தனக்கு வேண்டிய கால் கொலுசை பெற்றுக் கொண்டது ஒரு அதிசயமான நிகழ்ச்சியாகும்..
பெங்களூரில் வசித்து வந்த ஒரு பெண்மணி மிகுந்த இறை பக்தி உடையவர். தினமும் லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்த பின்தான், தன் அன்றாட பணிகளை மேற்கொள்வார. 1999-ம் வருடம் நவம்பர் மாதத்தில் ஒரு நாள் இரவில் அவருடைய கனவில் அம்பிகை வடிவில் ஓர் உருவம் தோன்றி, எனக்கு காலில் அணிந்து கொள்ள கொலுசு இல்லை. அதனை நீதான் எனக்கு செய்து தர வேண்டும் எனக் கட்டளையிட்டு மறைந்தது. அப்பெண்மணி கனவில் வந்த அம்பிகை யார் என்று அறிந்து கொள்ள முயன்றார். ஆனால், ஒன்றும் பிடிபடவில்லை. வைணவக் குலத்தைச் சேர்ந்த அப்பெண்மணி, திருப்பதி, ஸ்ரீரங்கம் முதலிய தலங்களுக்குச் சென்று, அங்கிருக்கும் தாயார்தான் தன் கனவில் வந்தவராக இருக்குமோ என்று அறிந்து கொள்ள முயற்சித்தார் ஆனால் அவர்கள் எவரும் கனவில் வந்த உருவத்தோடு ஒத்து போகவில்லை. ஒருநாள் தற்செயலாக ஆன்மீக மாத இதழ் ஒன்றில் லலிதாம்பிகையின் உருவப்படத்தை பார்த்தார. தன் கனவில் வந்தது இந்த அம்பிகைதான் என்றுணர்ந்தார். தினமும் லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்ததால்தான் தனக்கு இந்த பாக்கியம் என்று மகிழ்ந்தார். உடனே அம்பிகைக்கு கொலுசை காணிக்கையாகத் தர விரும்பினார. திருமீயச்சூர் கோவிலுக்கு வந்து விவரங்களை தெரிவித்தார். ஆனால் கோவில் அர்ச்சகர்கள் அம்மனின் கால் பீடத்தில் ஒட்டி இருப்பதால், கொலுசு அணிவிக்க முடியாது என்று மறுத்து விட்டனர். ஆனால் அப்பெண்மணியோ, கொலுசை கேட்டது அம்மன்தான் என்றும், எனவே அதை அவள் கண்டிப்பாக அணிந்து கொள்வாள் என்றும் வற்புறுத்தினார்.
அர்ச்சகர்கள் மீண்டும் கொலுசை அம்மனுக்கு அணிவிக்க முயற்சி செய்தார்கள். அப்போது அம்மனின் கணுக்காலலுக்கும் பீடத்துக்குமிடையே முக்கால் அங்குலத்தில் துவாரம் இருப்பதையும், அதனை இத்தனை காலம் அபிஷேகப் பொருட்கள் அடைத்து இருந்ததையும் கண்டுபிடித்து ஆச்சரியப்பட்டனர். அந்தப் பகுதியை சுத்தம் செய்து கொலுசையும் அம்மனுக்கு அணிவித்தனர். அப்பெண்மணி அம்மனின் உத்தரவை நிறைவேற்றியதை எண்ணி ஆனந்தமடைந்தார். அன்றிலிருந்து பிரார்த்தித்துக் கொண்டு வேண்டுதல் நிறைவேறியவுடன் லலிதாம்பிகைக்கு கொலுசு அணிவிக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
அன்னப்பாவாடை சார்த்தும் வைபவம் - லலிதாம்பிகை அம்மனின் நெய் குள தரிசனம்
லலிதாம்பிகைக்கு அன்னப்பாவாடை சார்த்தும் வைபவம், நவராத்திரி விஜயதசமியிலும், மாசி மாத அஷ்டமி நாளிலும், வைகாசி - பௌர்ணமியன்றும் நடைபெறுகிறது. இந்த வைபவத்தைக் காண, வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். அன்னப்பாவாடை என்னும் இந்த நைவேத்தியத்தில் 50 கிலோ சர்க்கரை பொங்கல், 50 கிலோ புளியோதரை 50 கிலோ தயிர் சாதம், அதிரசம், முறுக்கு, லட்டு, வடை, பாயாசம் போன்றவையுடன் இளநீர், பழங்கள் படைக்கப்படும். அம்பிகையின் சந்நிதிக்கு முன்னேயுள்ள அர்த்த மண்டபத்தில் இந்த நைவேத்திய பொருட்களை ஒரு பெரிய பாத்தியாகக் கட்டி, அதில். நெய்யை ஊற்றிக் குளம் போலாக்கிவிடுவார்கள். குளம் போல் ததும்பியிருக்கும் நெய்யில், அம்பிகையின் திருவுருவம் பிரதிபலிப்பதைக் காண கண் கோடி வேண்டும்.
புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே தரிசிக்கக் கூடிய தலம்
காஞ்சி மகாபெரியவர் இதலத்தின் சிறப்பு பற்றி குறிப்பிடுகையில், ‘இத்தலம் மிகவும் புண்ணியமான க்ஷேத்திரம். பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்களே இத்தலத்திற்கு வர முடியும். அப்படி வந்து தரிசித்தீர்கள் என்றால், ஸ்ரீலலிதாம்பிகை, ஏழேழு ஜென்மத்துக்கும் உங்களைக் காப்பாள்’ என அருளினாராம்.
இத்தலம், திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

கூத்தனூர் சரஸ்வதி கோவில்
ஆயக்கலைகள் அறுபத்தி நான்கினையும் வழங்கும் சரஸ்வதி தேவி
சரஸ் என்றால், நீர் மற்றும் ஒளி ஆகியவற்றை தடையின்றி வழங்குபவள் என்று பொருள். பிரம்மனின் துணைவியான சரஸ்வதி கல்வி கடவுளாகவும், ஆயக்கலைகள் அறுபத்து நான்கினிற்கும் தெய்வமாகவும் திகழ்கிறாள். இவருக்கு கலைமகள், காயத்ரி, சாரதா என்ற பெயர்களும் உண்டு. சரஸ்வதி கையில் இருக்கும் வீணையின் பெயர் கச்சபி. இவரது சகோதரர் சிவபெருமான்தான் இந்த வீணையை உருவாக்கி, இவருக்கு வழங்கினார்.
தமிழ் நாட்டில் சரஸ்வதிக்கு என்றே தனியாக கோவில் உள்ள திருத்தலம் கூத்தனூர். கூத்தனூரில், நாம் வீணையை கையில் ஏந்தாத சரஸ்வதியை தரிசிக்கலாம்.
இத்தலத்தை, இரண்டாம் ராஜராஜன் தன் சபையில் அவைபுலவராக விளங்கிய, சரஸ்வதியின் அருள்பெற்ற ஒட்டக்கூத்தருக்கு பரிசாக வழங்கினார். ஒட்டக்கூத்தருக்கு பரிசாக வழங்கப்பட்டதால் இவ்வூர் கூத்தன் + ஊர் = கூத்தனூர் என்றாயிற்று .ஓட்டக்கூத்தருக்கும் ஆலயத்தில் தனி சன்னதி உள்ளது.ஓட்டகூத்தரை எதிரிகள் சூழ்ந்து கொண்டு பரணி பாடினால் விட்டுவிடுவதாக கூற ,கூத்தரின் நாவில் சரஸ்வதி அமர்ந்து பரணி பாடிட அருளினார். புலவர் கம்பரின் சங்கடங்களை தீர்ப்பதற்காக, இந்த சரஸ்வதி கிழங்கு விற்கும் பெண்ணாகவும் , இடையர் குல பெண்ணாகவும் நேரில் வந்து அருள் புரிந்தார். பிறவி ஊமையான புருஷோத்தமன் என்னும் பக்தனுக்கு தன்னுடைய வாய் தாம்பூலத்தை தந்து, உலகம் போற்றும் புருஷோத்தமா தீட்சிதர் ஆக்கினார்.
சரஸ்வதி பூஜையன்று பக்தர்கள் சரஸ்வதி தேவியின் பாதங்களை தாங்களே மலரிட்டு பூஜிக்கும் வகையில் அம்மனின் பாதங்களை அர்த்த மண்டபம் வரை அமையுமாறு, நீட்டி அலங்கரிப்பது கண்கொள்ளா காட்சி
இத்தலம், மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் பூந்தோட்டம் என்னும் ஊரில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில்
பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன்
துர்க்கை அம்மனின் திருநாமத்தில் உள்ள துர் என்பது தீயவை எனப் பொருள்படும். தீய செயல்களையும் தீயவர்களையும் தனது கையால் அழிப்பவள். அதனால் துர்க்கை என்று பெயர். துர்க்கம் என்பதற்கு அரண் என்ற பொருளும் உண்டு. பக்தர்களுக்கு அரணாக இருந்து காப்பதாலும், துர்க்கை அம்மன் என்று பெயர். இவளை துர்காதேவி, ஆர்த்தி தேவி, ஜோதி தேவி என்றும் அழைக்கிறார்கள்.
பார்வதி தேவியின் உக்கிர வடிவம்தான் துர்க்கை அம்மன். ஆனால் கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் துர்க்கை அம்மன் இதழோரம் புன்னகை ததும்ப, சாந்த சொரூபினியாக காட்சி தருகிறாள். பொதுவாக எல்லா ஆலயங்களிலும் துர்க்கை அம்மன், கோஷ்டத்தில்தான் தரிசனம் தருவாள். ஆனால், பட்டீஸ்வரத்தில், தனிச்சந்நிதியில் ஒய்யாரமாக நின்ற திருக்கோலத்தில் மூன்று கண்கள், எட்டு திருக்கரங்களுடன் எருமை முகமுடைய மகிஷாசுரனைக் காலில் மிதித்தபடி காட்சி தருகிறாள். எட்டு திருக்கரங்களின் ஒன்றில் அபயஹஸ்தம் காட்டுகிறாள். மற்றொரு கரத்தை இடுப்பில் ஒயிலாக வைத்திருக்கிறாள். ஆறு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் ஆகிய ஆயுதங்களைக் கொண்டிருக்கிறாள். துர்க்கை இங்கு சாந்த சொரூபிணியாக இருப்பதை அவளது புன்னகை தவழும் முகமும், வலப்புறம் திரும்பியுள்ள சிம்ம வாகன முகமும் நிரூபிக்கிறது. தன்னைச் சரண் அடையும் பக்தர்களுக்கு உடனே அருள்புரிய காலைஎடுத்து வைத்துப் புறப்படுகிற தோற்றத்தில் துர்க்கை நிற்பது இன்னொரு சிறப்பு.
பாண்டிய மன்னர்களின் குல தெய்வமாக எப்படி மீனாட்சிஅம்மன் விளங்கினாரோ, அதுபோல இந்த துர்க்கையம்மன் சோழ மன்னர்களின் குல தெய்வமாக திகழ்ந்தாள்.
பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் மிகுந்த வரப்பிரசாதி. திருமணமாகாத ஆண்களும், பெண்களும், நோயினால் பீடிக்கப்பட்டவர்களும், குடும்ப துன்பத்தில் தவிப்பவர்களும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டால் குறைகள் நீங்கி நலம் அடைவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன்
அகிலாண்டேஸ்வரி என்பதற்கு உலகத்தை ஆள்பவள் என்று பொருள். திருவானைக்காவல் பஞ்சபூதத் தலங்களில் அப்புத்(நீர்) தலமாகும் இத்தலத்தில் இருக்கும் ஜம்பு லிங்கம் அம்பிகையால் செய்யப்பட்டது. ஒரு முறை இத்தலத்திற்கு வந்த அம்பிகை, காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் அமைத்து சிவபெருமானை வழிபட்டார். நீரால் செய்யப்பட்டதால் அந்த லிங்கம் ஜம்புகேஸ்வரர் எனப் பெயர் பெற்றது.
அகிலாண்டேஸ்வரி அம்பிகையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியும். இந்தக் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பார்கள். ஆரம்பத்தில் இத்தலத்தில் அம்பாள் உக்கிரமாக இருந்ததால், பக்தர்கள் மிகவும் அச்சமுற்று கோவிலுக்குள் செல்லாமல் வெளியில் இருந்து வழிபட்டு வந்தனர். பொதுவாக உக்கிரமான அம்பிகையை சாந்தப்படுத்த, ஸ்ரீசக்ரத்தில் அம்பாளின் ஆக்ரோஷத்தைச் செலுத்தி சாந்தப்படுத்துவர். ஆனால், இங்கு வந்த ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்துக்குப் பதிலாக, இரண்டு தாடங்கங்களை, ஸ்ரீசக்ரம் போல் உருவாக்கி அம்பாளுக்குப் பூட்டி விட்டார். பின்னர் அம்பாள் சாந்தமானாள். அம்பிகையை மேலும் சாந்தப்படுத்தும் வகையில் அம்பிகைக்கு முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
இத்தலத்தில் தினமும் நடைபெறும் உச்சிக்கால பூஜை தனிச்சிறப்புடையது. அப்போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வார். இது போன்ற பூஜை வேறு எந்த தலத்திலும் காண முடியாது.
51 சக்தி பீடங்களில் தண்டநாதபீடம் எனும் வாராஹி பீடமாக இந்த சந்நதி விளங்குகிறது.

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில்
தன் சிலையைத் தானே வடிவமைத்த அம்மன்
உலகப் புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலகப் புகழ்பெற்றதாகும். பக்தர்கள் இத்திருவிழாவிற்காக, சுமார் ஒரு மண்டல காலம் விரதம் இருந்து, தசரா திருவிழாவன்று பல்வேறு வேடங்களை அணிந்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம்.
தன் சிலையைத் தானே வடிவமைத்த அம்மன்
குலசேகரப்பட்டினம் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் பாதையில் 76 கி.மீ. தொலைவில் உள்ளது. 150 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில், முத்தாரம்மனை முதலில் சுயம்பு வடிவிலேயே பக்தர்கள் வழிபட்டு வந்தனர். பின்னர் அம்மனுக்கு விக்கிரகம் அமைக்க விரும்பினர்.
கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன், கன்னியாக்குமரி அருகே மைலாடி என்றொரு சிற்றூர் உள்ளது. அங்கு சென்றால் உங்கள் விருப்பம் நிறைவேறும் என்று கூறினாள். மைலாடி பகுதியில் அதிக அளவில் பாறைகள் உண்டு. சிலை செய்யும் சிற்பிகளும் அதிகம் பேர் உண்டு. அவர்களில் ஒருவரான சுப்பையா ஆசாரி என்பவர் மிகவும் திறமைசாலி. .அவரது கனவிலும் முத்தாரம்மன் தோன்றி, குலசேகரப்பட்டினத்தில் தான் சுயம்புவாக இருப்பதாகவும், பக்தர்கள் தனக்கு விக்கிரகம் அமைக்க விரும்புவதையும் கூறினாள்.
பின்னர், சுவாமியுடன் ஆசாரிக்குக் காட்சி அளித்த அன்னை, தங்களை நன்கு உற்று நோக்குமாறும், தென் திசையில் உள்ள ஆண் பெண் பாறையில் ஒரே கல்லில், ஒரே பீடத்தில் தங்கள் திருவுருவச் சிலையை வடித்துக் கொடுக்குமாறும் உத்தரவிட்டாள். அந்தக் கற்சிலையை தன் சுயம்பு மேனிக்கு அருகில் நிறுவ வேண்டும் என்றும் கட்டளையிட்டாள்.
சுப்பையா ஆசாரி, முத்தாரம்மன் தனக்கிட்ட ஆணையை நிறைவேற்ற முடிவு செய்தார். குலசேகரப்பட்டினம் எங்கிருக்கிறது என்று விசாரித்து அறிந்து கொண்டார். அதன்பிறகு தன் மனதில் திடமாகப் பதிந்திருந்த அம்பாள் மற்றும் சுவாமியின் திருமேனியை அப்படியே கற்களில் சிலையாக வடித்தார்.
முத்தாரம்மன் கனவில் கூறியபடி குலசை அர்ச்சகர் மைலாடி சென்றார்.சுப்பையா ஆசாரி பற்றி விசாரித்து அறிந்து அவரைச் சந்தித்தார். சுப்பையா ஆசாரி ஏற்கனவே ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் சிலையை செய்து வைத்திருந்ததைப் பார்த்தார். பக்தர்கள், அம்மனின் திருவிளையாடலை எண்ணி மெய்சிலிர்த்தனர்.
இந்த அம்மன்தான் குலசேகரன்பட்டினத்தில், இன்றும் காட்சியளிக்கிறாள். ஒரே பீடத்தில், முத்தாரம்மன் அருகே சுவாமி ஞானமூர்த்தி வீற்றிருப்பது இந்த ஆலயத்தின் முக்கியச் சிறப்பாகும். இப்படி அம்பாளும், சிவனும் ஒரே பீடத்தில் வீற்றிருப்பது வேறு எந்த தலத்திலும் இல்லை

திருவாரூர் தியாகராஜர் கோவில்
திருவாரூர் கமலாம்பிகை
திருவாரூர் கமலாம்பிகை, முப்பெரும் தேவியரும் இணைந்த அம்சமாகும். கமலாம்பிகை திருநாமத்தில் உள்ள க- கலைமகளையும், ம- மலைமகளையும், ல- அலைமகளையும் குறிக்கின்றது. இந்த அம்பிகையின் சிறப்புகளாலேயே, திருவாரூருக்கு ஸ்ரீபுரம், கமலாபுரி, கமலா நகரம், கமலாலயம் என்ற பெயர்களும் உண்டு.
திருவாரூர் தியாகராஜர் கோவிலில், தனிக்கோயில் கொண்டு, கமலாம்பிகை அருள்பாலிக்கிறார். கமலாம்பாள் ஆலயம், அம்பிகையை பெண்ணின் ஐந்து பருவ நிலைகளில் வைத்து வணங்கப்படும் ஐந்து அக்ஷித்தலங்களுள், இளம் பெண் பருவத்தினைக் குறிக்கின்றது. கருவறையில் கமலாம்பிகை, மூன்றடுக்கு பீடத்தின் மேல் இடக்கால் மீது வலக்காலை அமர்த்தி, இடக்கரம் ஊரு ஹஸ்தமாய் விளங்க, நீலோத்பல மலரை வலக்கரத்தில் பற்றி, வளர்பிறை சந்திரனையும் கங்கையையும் சிரசில் கரண்ட மகுடத்தில் தரித்து, தவ யோக நிலையில், அமர்ந்த கோலத்தில் காட்சித் தருகிறார். தர்மம் தழைத்தோங்கவும், சரஸ்வதி, சசிதேவி எனும் இந்திராணி, மகாலக்ஷ்மி, பூதேவி போன்ற தெய்வங்களும் தேவதைகளும் சர்வ மங்கள செளபாக்கியங்களுடன் வாழவும், சகல உயிர்கள் அனைத்தும் இன்புறவுமே கமலாம்பிகை தவக்கோலம் பூண்டு இருக்கிறார். இக்கோவிலில் உள்ள அக்ஷர சக்தி பீடம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்பீடத்தின் பிரபையில் முன்னும் பின்னும் 51 அக்ஷரங்களும், பீடத்தின் மத்தியில் ஹ்ரீம் எனும் புவனேஸ்வரி பீஜமும் பொறிக்கப்பட்டுள்ளன
லலிதா ஸஹஸ்ரநாமம் பல இடங்களில் கமலாம்பிகையை துதித்துப் போற்றுகின்றது. ஸ்ரீவித்யா எனும் உபாசனையின் யந்திர நாயகி இத்தேவியே ஆவார். முத்துசுவாமி தீட்சிதர் அன்னை கமலாம்பாளைத் துதித்து நவாவரண கீர்த்தனைகளை பாடியிருக்கிறார்.
சக்தி பீடங்களில், கமலாம்பிகை அருள் பாலிக்கும் திருவாரூர், கமலை பீடம் ஆகும்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்
காமாட்சி அம்மனின் திருநாமத்தில் உள்ள காம என்பது அன்பையும் கருணையையும், அட்ச என்பது கண்ணையும் குறிக்கும். காமாட்சி அம்மன் தன் அருட்கருணை பொங்கும் திருவிழிப் பார்வையினால், பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி அருள்பவர். இவருக்கு, மகாதேவி, திரிபுரசுந்தரி, ராஜராஜேஸ்வரி, காமேஸ்வரி, லலிதா, ஸ்ரீசக்கரநாயகி என்னும் பெயர்களும் உண்டு.
காமாட்சி அம்மன் இருபத்தி நான்கு தூண்கள் தாங்கி நிற்கும் காயத்ரி மண்டபத்தின் நடுவில் பத்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறார். தன் நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், மலர் அம்பு, கரும்பு வில் ஏந்தியிருக்கிறார். காமாட்சியின் பிரகாசமான முகத்தை தீர்க்கமாக தரிசிப்பவர்களுக்கு, அம்மனின்_கண்கள் சிமிட்டுவது போன்ற உணர்வினை ஏற்படுத்துமாம்
இக்கோலிலில் காமாட்சி அம்மன் ஸ்தூலம், சூட்சுமம், காரணம் என்னும் மூன்று வடிவில் இருக்கின்றார். மூலவர் காமாட்சி அம்மன் ஸ்தூல(உருவ) வடிவிலும், அஞ்சன காமாட்சி சூட்சும(உருவமில்லாத) வடிவிலும், காமாட்சி அம்மன் முன் அமைந்துள்ள ஸ்ரீ சக்கரம் காரண(உருவமும், உருவமில்லாத) வடிவிலும் அருளுகிறார்கள. ஸ்ரீ சக்கரம், ஆதிசங்கரரால், எட்டாம் நூற்றாண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மிகவும் உக்கிரமாக இருந்த காளியன்னையை, சௌம்யமான காமாட்சியாக ஆதிசங்கரர் சாந்தப்படுத்தினார்.
காஞ்சிபுரத்திலுள்ள எல்லா சிவாலயங்களுக்கும் காமாட்சி அம்மனே மூலவர் அம்பாளாக விளங்குகிறார். இதனால் காஞ்சீபுரத்தில் உள்ள சிவாலயங்களில், அம்மனுக்கு என தனி சன்னதி கிடையாது.
அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றான இத்தலம், ஒட்டியாண(அம்பிகையின் இடுப்பு எலும்பு விழுந்த) பீடம் ஆகும்.

நாகை காயாரோகணேசுவரர் கோவில்
நாகை நீலாயதாக்ஷி அம்மன்
நாகை நீலாயதாக்ஷி, நீலோற்பல மலரின் குளிர்ச்சியைப் போல தன் பார்வையை பக்தர்களுக்கு வழங்குவதால், ‘நீலாயதாட்சி’ என்ற திருநாமத்தோடு விளங்குகிறாள். அம்பிகைக்கு கருந்தடங்கண்ணி என்ற பெயரும் உண்டு. அம்பிகையை, பெண்ணின் ஐந்து பருவ நிலைகளில் சித்தரித்து வணங்கப்படும் ஐந்து அக்ஷித் தலங்களுள், இத்தலமும் ஒன்றாகும். இத்தலத்தில், நீலாயதாக்ஷி பூப்படைந்த கன்னியாக இருந்து அருள் பாலிக்கிறார்.
அன்னை நீலாயதாக்ஷி பாயும் குதிரைகளும், யாளிகளும் அமைந்த, தோரணங்கள் அலங்கைரிக்கப்பட்ட, இருபுறமும் சக்கரங்கள் கொண்ட ரதம் போன்ற மகா மண்டபத்தில், பூப்பெய்த பருவத்தினளாய் 12 வயதுடையவளாய், தன் இரு திருக்கரங்களில் ஜபமாலையும் கமலமும் ஏந்தி, மற்ற இரு திருக்கரங்களில் அபய வரத முத்திரையுடன், கரிய அகன்ற கண்களை உடையவளாய், நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கிறார். பூப்பெய்திய அம்பிகைக்கு காவலாக இருக்கும்படி, நந்திதேவரை சிவபெருமான் பணித்தார். அதனால் கோவில் வாசலில் அமர்ந்திருக்க வேண்டிய நந்திதேவர், அம்பிகையின் சன்னதி முன் வலது கண்ணால் அம்பிகையையும் இடது கண்ணால் சிவபெருமானையும் பார்த்தபடி இரட்டை பார்வையுடன் அமர்ந்திருக்கிறார்.
நீலாயதாக்ஷி, இத்தலத்தின் அரசியாக இருந்து பரிபாலனம் செய்வதால் அவருக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அதனால் இங்கு வீதிகளின் பெயர்கள் கூட நீலா வடக்கு வீதி, நீலா தெற்கு மடவிளாகம் என்று இருக்கின்றது. இதுபோல அம்மனின் பெயர் தாங்கிய வீதிகள் வேறு எந்த தலத்திலும் இல்லை. அம்பிகை இத்தலத்தில் பருவமடைந்ததால், மற்ற கோயில்களைப் போல இக்கோவிலில் திருக்கல்யாணம் ஆடிப்பூரம் வளைகாப்பு போன்ற வைபவங்கள் நடைபெறுவதில்லை.
ஆடிப்பூரத்தன்று காலையில் முளை கட்டின பச்சைப் பயிறுக்கு, சூர்ணோற்சவம் செய்து, அதை மூலவர் அம்பிகையின் புடவைத் தலைப்பில் முடிச்சிட்டு அம்பிகையின் இடுப்பில் கட்டி விடுவார்கள். பின்னர் அம்மனுக்கு வெள்ளை புடவை சார்த்தி வீதி புறப்பாடு நடைபெறும். இந்த முளைக்கட்டிய பச்சைப் பயிறு பிரசாதம், குழந்தைப் பேறின்மை, கர்ப்பப்பை பிரச்சனை, வயதாகியும் பூப்படையாமல் இருத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும் என்பது ஐதீகம்.
மாலையில் ஆடிப்பூரம் கழித்தல் என்னும் சடங்கு அம்மனுக்கு நடத்தப்படும். இச்சடங்கு பெண்கள் பருவம் அடைந்த போது செய்யப்படும் சடங்கு முறைகளை ஒத்ததாக இருக்கும்.
ஆடிப்பூரத்தன்று இரவு நீலாயதக்ஷி அம்மன் சிறப்பான ஆடை அலங்காரத்துடன், பின்னால் அழகிய ஜடை தரித்து ஜெகஜோதியாய் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பீங்கான் ரதத்தில் ஊர்வலம் வரும் காட்சி காண்போரை பரவசப்படுத்தும்.
சங்கீத மும்மூர்த்திகள் நீலாயதாட்சி மீது பல கீர்த்தனைகள் பாடியுள்ளனர். அதில்,‘அம்பா நீலாயதாக்ஷி’ என்று முத்துச் சாமி தீட்சிதர் இந்த அம்பிகையை போற்றிப் பாடும் கீர்த்தனை மிகவும் பிரசித்தம்.
அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றான இத்தலம், நேத்திர (அம்பிகையின் கண் விழுந்த) பீடம் ஆகும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
மதுரை மீனாட்சி அம்மன்
மீனாட்சி அம்மன், மீன் போன்ற கண்களை உடையவர் என்பதால், மீனாட்சி என்று பெயர் பெற்றார். மீன், தன்னுடைய முட்டைகளை, தனது பார்வையாலேயே பொரியச்செய்து பின் பாதுகாப்பது போல, மீனாட்சி அம்மன், தனது பக்தர்களை, அருட்கண்ணால் நோக்கி அருள்பாலிக்கிறவள். கண் துஞ்சாமல் மீன் இரவு, பகல் விழித்துக் கிடப்பது போலவே. மீனாட்சி அம்மனும் கண்ணிமைக்காது உலகைக் காத்து வருகிறாள் இவருக்கு, மரகதவல்லி, தடாதகை, அபிராமவல்லி, பாண்டிப் பிராட்டி எனப் பல பெயர்கள் உள்ளன. அம்பிகையை, பெண்ணின் ஐந்து பருவ நிலைகளில் சித்தரித்து வணங்கப்படும் ஐந்து அக்ஷித் தலங்களுள், ஒன்றான இத்தலத்தில், சுமங்கலியாக இருந்து அருள் புரிகிறார்..
மரகத்தினாலான ஆன திருமேனி உடைய அன்னை மீனாட்சி நின்ற கோலத்தில், இடைநெளித்து கையில் கிளி ஏந்தி அழகே உருவாகக் காட்சி தருகிறார். அம்மன் கையில் உள்ள கிளி, பக்தர் அம்மனிடம் வைக்கும் கோரிக்கையைக் கேட்டு, அதை திரும்பத் திரும்ப அம்மனுக்குச் சொல்லி, பக்தர் துயர் களைய உதவுகிறதாம். இத்தலத்தில் முதல் பூசை, மீனாட்சி அம்மனுக்கே செய்யப்படுகின்றது. அதன் பின்பே, மூலவரான சிவபெருமானுக்குப் பூசைகள் செய்யப்படும். இதற்குக் காரணம், மீனாட்சியம்மன் பதிவிரதையாக இருந்து, தன் கணவனுக்கு பணிவிடை செய்ய வேண்டுமென்பதால், கணவர் எழுவதற்கு முன்னமே தன் அபிஷேகத்தை முடித்துத் தயாராகிறாள். இவர், மதுரையின் அரசியாக இருப்பதால், இவருக்கு நடக்கும் அபிசேகங்களைப் பார்க்க, பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மீனாட்சியம்மனை, அலங்காரம் செய்த பிறகே, பக்தர்கள் பார்க்க முடியும்.
அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றான இத்தலத்தை ராஜமாதங்கி சியாமள பீடம் என்று அழைக்கின்றனர். இத்தலத்தின் தாழம்பூ குங்குமப் பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்
மயிலாப்பூர் கற்பகாம்பாள்
‘கற்பகம்’ என்றால் ‘வேண்டும் வரம் தருபவள்’ என்று பொருள். தேவலோகத்தில் கற்பக விருட்சம் எப்படித் தன்னிடம் கேட்பதையெல்லாம் தருகின்றதோ, அது போல தன் பக்தர்களின் கோரிக்கையை கற்பகத் தருவாக இருந்து நிறைவேற்றித் தருவதால் கற்பகாம்பாள் என்று பெயர். பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலை என்று பெயர் பெற்றது.
ஒருசமயம் பார்வதிதேவி சிவபெருமானிடம், சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை உபதேசிக்கும்படி வேண்டினார்.. சிவபெருமான் அதை உபதேசித்து கொண்டிருக்கும்போது பார்வதிதேவி கவனம் சிதறி,அங்கே தோகை விரித்து நடனமாடிக் கொண்டிருந்த ஒரு மயில் மீது கவனத்தை செலுத்தினார். இதனால் கோபமுற்ற சிவபெருமான் பார்வதியை பூலோகத்தில் மயிலாக பிறக்க சாபம் கொடுத்தார். பார்வதிதேவி சாபவிமோசனம் வேண்டியபோது தொண்டை நாட்டில் மயில் வடிவில் பூஜை செய்தால் தன்னை மீண்டும் அடையலாம் என்று கூறினார். அம்பிகை இத்தலத்தில் புன்னை மரத்தின் அடியில், மயில் உருவில் சிவனை வேண்டி தவமிருந்தபோது, சுவாமி அவளுக்கு காட்சியளித்து சாபவிமோசனம் கொடுத்தார்
பொதுவாக சிவாலயங்களில், சிவனை தரிசித்த பிறகே அம்பிகையை தரிசிக்கும் படியான அமைப்பு இருக்கும். ஆனால் இக்கோவிலில், கற்பகாம்பாளை தரிசித்து விட்டே கபாலீசுவரரை தரிசிக்கும்படியான அமைப்பானது தனிச்சிறப்பாகும்.
இத்தலத்தில் நடைபெறும் பங்குனித் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது