ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்

குரு தட்சிணாமூர்த்தி பரிகார தலம்

கும்பகோணத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் ஆலங்குடி. தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் இந்த இடத்திற்கு ஆலங்குடி என்று பெயர் வந்தது. இறைவன் திருநாமம் ஆபத்சகாயேஸ்வரர். இறைவியின் திருநாமம் ஏலவார்குழலி.

இத்தலம் சிறந்த குரு தட்சிணாமூர்த்தி பரிகார தலமாக விளங்குகிறது. இந்த தலத்தில் சிறப்புடைய குரு தட்சிணாமூர்த்தி, இறைவனின் தெற்கு சுற்றுச் சுவரில் எழுந்தருளியுள்ளார். தட்சிணாமூர்த்தி உற்சவராகத் தேரில் பவனி வருவது தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டும்தான் என்பது கூடுதல் சிறப்பாகும். சித்ரா பௌர்ணமி அன்று பத்து நாள் உற்சவ விழாவும், தட்சிணாமூர்த்திக்குத் தேர்த் திருவிழாவும் நடைபெறுகிறது.

குரு தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்து 24 நெய் தீபங்கள் ஏற்றி வழிபட குரு தோஷங்கள் நீங்கி நன்மை பெறலாம் என்பது ஐதீகம். குருபகவானுக்கு முல்லை மலரால் அர்ச்சனை, மஞ்சள் வஸ்திரம் சாத்துதல், கொண்டைக்கடலை சுண்டல், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியங்களுடன் சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பாலாபிஷேகம், குரு ஹோமம் செய்ய சகல தோஷங்களும் நிவர்த்தியாகி அவருடைய அருள் கிடைக்கும்.

வாரந்தோறும் வியாழக்கிழமை, தினசரி வரும் குரு ஹோரை மற்றும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்கள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் குரு பகவானை வழிபடுதல் சிறந்தது.

Read More
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

வெள்ளைக் கல்யானை மீண்டும் கரும்பு தின்ற அதிசயம்!

மதுரையில் சோமசுந்தரக்கடவுள் செய்த அறுபத்திநான்கு திருவிளையாடல்களில் ஒன்று, சொக்கநாதர் கோவில் கல் யானை கரும்பு தின்ற நிகழ்ச்சியாகும். சோமசுந்தரேசுவரர் சன்னதியின் திருச்சுற்றில் இருக்கும் வெள்ளை யானைகளில் ஒன்று தான் கரும்பு தின்றதாகப் புராணம்.

புராணக் காலத்தில் நடந்த அதிசயம் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் நிகழ்ந்ததாக வரலாறு உண்டு. டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதி மாலிக்காபூர் மதுரை வரை படையெடுத்து வந்து எல்லாத் திருக்கோவில்களையும் கொள்ளை அடித்துக் கொண்டு வந்த போது நிகழ்ந்தது இது. மதுரையை முற்றுகையிட்டு மதுரையை வென்று மாலிக் காபூர் ஆண்டு வரும் போது அவரது படைத்தளபதி ஒருவர் திருக்கோவிலைச் சுற்றி வந்துக் கொண்டிருந்தார். அப்போது திருச்சுற்றில் இருக்கும் எட்டு வெள்ளை யானைகளைக் கண்டு வியந்து அருகில் இருந்தவர்களிடம் அவற்றைப் பற்றிக் கேட்டார்.

அங்கிருந்தவர்கள் பலருக்கு அந்த யானைகள் அங்கே காலம் காலமாக இருப்பது தெரியுமே ஒழிய அவற்றைப் பற்றிய மற்ற செய்திகள் தெரியவில்லை. அதனால் அங்கே அமர்ந்திருந்த துறவி ஒருவரிடம் அந்த தளபதியை அழைத்துச் சென்றனர். அந்தத் துறவியும் கல் யானை கரும்பு தின்ற கதையைச் சொன்னார். அந்தக் கதையைக் கேட்ட தளபதி உடனே நேராக மாலிக் காபூரிடம் சென்று அந்தக் கதையைச் சொன்னார். கதையைக் கேட்டு மாலிக்காபூர் ' கல்யானையாவது, கரும்பைத் தின்பதாவது. நல்ல கதை' என்று ஏளனமாகச் சிரித்தான் . அந்தக் கதையைச் சொன்ன துறவியைக் காட்டு. இப்போதும் கல்யானை கரும்பைத் தின்னுமா என்று கேட்போம்' என்று சொல்லி கோவிலுக்கு வந்தார்கள்.

துறவியிடம் வந்து 'எந்தக் கல்யானை கரும்பு தின்றது?' என்று கேட்டான் மாலிக்காபூர். அவர் ஒரு யானையைக் காட்ட, 'இப்போது இந்த யானை கரும்பைத் தின்னுமா?' என்று கேட்க, துறவி 'தின்னும்' என்று சொன்னார். ஏளனமாகப் பார்த்துக் கொண்டே மாலிக்காபூர் ஒரு கரும்பை நீட்ட அந்த கல்யானை கரும்பை வாங்கித் தின்றது. ஆச்சரியப் பட்ட மாலிக்காபூர் திரும்பி அந்தத் துறவியைப் பார்க்க அங்கே யாரும் இல்லை. அங்கே கூடியிருந்தவர்கள் எல்லோரும் அது சோமசுந்தரக் கடவுளின் திருவிளையாடலே என்று போற்றினார்கள்.

Read More
விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில்

விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில்

அட்சய திருதியைக்கு உரிய தனிச்சிறப்புத் தலம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் விளங்குளம் . இறைவன் திருநாமம் அட்சயபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் அபிவிருத்தி நாயகி.

கருவறையில் அட்சயபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இவர், சனி பகவானுக்கு அருளிய தினம் ஓர் அட்சய திருதியை நாள். எனவே இறைவன், அட்சயபுரீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார். அட்சயம் என்றால் வளர்வது என்று அர்த்தம். இத்தலத்திற்கு ஒருமுறை வந்து போனாலே பக்தர்களின் இல்லத்தில் செல்வம் உள்ளிட்ட பதினாறு பேறுகளும் தழைத்து வளரும் என்பது ஐதீகம்.

செல்வங்கள் அனைத்துக்கும் அதிபதியான குபேரன், ஈசனை வழிபட்டே சங்கநிதி, பதுமநிதிகளைப் பெற்றான் என்கிறது புராணம். அப்படி குபேரன் செல்வங்களைப் பெற்று அளகாபுரிக்கு அரசனானதும், அட்சயபுரீஸ்வரரின் அருளால்தான் என்பதால் இத்தலம் அட்சய திருதியைக்கு உரிய தனிச்சிறப்புத் தலமாகக் கூறப்படுகிறது.

அம்பிகை அபிவிருத்தி நாயகி, மேல் இரு கரங்களில் தண்டத்தையும், தாமரையையும் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் புன்னகை தவழ தென்திசை நோக்கி அருள்பாலிக்கின்றாள். அம்பிகையின் திருநாமமும், அபிவிருத்தி நாயகி என அமைந்திருப்பது, இத்தலத்தில் வழிபட்டால், மேலும் மேலும் செல்வங்கள் வளரும் என்பதையே உறுதிப்படுத்துகிறது. கணவருக்கு நிகராக, இவளும் நமக்கெல்லாம் அபிவிருத்தியைத் தந்தருளும் கருணைக் கடல் என்று பக்தர்கள் போற்றுகின்றனர்.

அட்சய திருதியை நாளில், மூலவர் சிவனாருக்கு சந்தனக் காப்பில் மாதுளை முத்துக்கள் பதித்து, சிறப்பு பூஜைகள் நடைபெறும். பிறகு, சனீஸ்வரருக்கு புனுகு கலந்த சந்தனக் காப்பு செய்வித்து, எள், அரிசி, கோதுமை, பாதாம்பருப்பு, குங்குமப்பூ மற்றும் நவதானியங்களைப் பதித்து அலங்கரிப்பார்கள்.

அட்சய திருதியை நாளிலும் வெள்ளி, ஞாயிறு, திங்கட்கிழமை முதலான நாட்களிலும் விளங்குளம் வந்து, சிவபார்வதியைத் தரிசித்தால், சகல செல்வங்களும் பெற்று இனிதே வாழலாம் என்பது ஐதீகம்.

புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அட்சயதிருதியை நாளில் நடந்த சில நிகழ்வுகள்

- வேத வியாசர், மகாபாரதத்தை விநாயகர் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நாள் அட்சய திருதியை.

- திருமாலின் பத்து அவதாரங்களில் ஒருவரான பரசுராமர் அவதரித்த நாள்

- நான்கு யுகங்களில் முதல் யுகமான கிருத யுகத்தில், பிரம்மன் உலகத்தைப் படைத்தது அட்சய திருதியை நாளில்தான்

- இரண்டாவது யுகமான கிரேதா யுகம் தோன்றிய நாளும் ஒரு அட்சய திருதியை அன்றுதான்

-காசியில் அன்னபூரணியிடம் அன்னம் பிச்சை பெற்று, சிவனின் தோஷம் நீங்கிய நாளும் அட்சய திருதியைதான்

- பகீரதனின் தவத்தால் கங்கை பூமிக்கு வந்ததும் ஒரு அட்சய திருதியை அன்றுதான்

- கிருஷ்ணன் தன் நண்பன் குசேலனிடமிருந்து அவல் மூட்டையை பெற்றுக் கொண்டு அவருடைய வறுமையை நீக்கிய நாள் அட்சய திருதியை.

- கிருஷ்ணன், துரியோதனன் சபையில் திரௌபதியின் மானத்தை காப்பாற்றியதும் ஒரு அட்சய திருதியை அன்றுதான்

Read More
திருக்காலிமேடு சத்தியநாதர்  கோவில்

திருக்காலிமேடு சத்தியநாதர் கோவில்

ஏழு சீடர்களுடன் காட்சி தரும் அபூர்வ தட்சிணாமூர்த்தி

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருநெறிகாரைக்காடு. இத்தலம் திருக்காலிமேடு என்று தற்போது அழைக்கப்படுகின்றது. இறைவன் திருநாமம் சத்தியநாதர். இத் தலம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கும் முற்பட்டது.

காஞ்சீபுரத்தின் ஆதி கோவிலான இத்தலத்தில், இறைவன் திருமேனி மணலால் ஆனது. காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோவிலே எல்லா சிவன் கோவில்களுக்கும் பொதுவான அம்பிகை சன்னதியாக விளங்குகின்றது. அதனால் தனிப்பட்ட அம்பிகை சன்னதி எந்த சிவன் கோவிலிலும் கிடையாது. ஆனால் இக்கோவிலில் பிரமராம்பிகை என்ற திருநாமத்துடன், அம்பிகை உற்சவ திருமேனியாக எழுந்தருளி இருக்கிறாள். அம்பிகையின் உலோகத் திருமேனியின் வலது கரத்தில் மச்ச ரேகையும், தான்ய ரேகையும், மீனின் வடிவம் மற்றும் நெற்கதிர் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது ஒரு தனிச்சிறப்பாகும்.

பொதுவாக தட்சிணாமூர்த்தி, இறைவனின் கருவறை சுற்றுச்சுவரில் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களுடன் எழுந்தருளி இருப்பார். ஆனால் இந்தத் தலத்தில் தட்சிணாமூர்த்திப் பெருமான் ஏழு சீடர்களுக்கு ஞானம் தருவதாக அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு வித்தியாசமான அமைப்பாகும். இவரிடம் வேண்டிக்கொண்டால் தெளிந்த ஞானம் பிறக்கும்.

Read More
பாமணி நாகநாத சுவாமி கோவில்

பாமணி நாகநாத சுவாமி கோவில்

சிவபெருமானுக்கு மாம்பழ சாறில் அபிஷேகம் செய்யப்படும் தேவாரத்தலம்

மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் பாமணி. இறைவன் திருநாமம் நாகநாத சுவாமி, திருப்பாதாளேஸ்வரர். இறைவியின் திருநாமம் அமிர்தநாயகி.

இறைவன் புற்று மண்ணாலான சுயம்பு திருமேனி உடையவர். பொதுவாக சிவாலயங்களில் சுயம்பு லிங்கத்துக்கு வெள்ளிக்கவசம் சாற்றியே அபிஷேகம் நடக்கும். ஆனால் புற்று மண்ணால் ஆன நாகநாத சுவாமிக்கு, நேரிடையாகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தினமும் இருவேளை அபிஷேகம் நடைபெற்று வருவது இத்தலத்தின் தனிப்பெரும் மகிமையாகும்.

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடைபெற்ற போரில் முசுகுந்த சக்கரவர்த்தி தேவர்களுக்கு ஆதரவாக சென்று அசுரர்களை போரிட்டு வென்றார். அதற்கு இந்திரன் தான் தினமும் பூஜித்து வந்த மரகத லிங்கத்தையும், கொடி முந்திரியையும் (திராட்சை) அவருக்கு பரிசாக வழங்கினான். அவர் அந்த லிங்கத்துடனும், திராட்சையுடனும் திருவாரூர் தியாகேசர் சன்னிதிக்கு வந்தார். அப்போது திருப்பாதாளேசுவரத்தில் பிரம்மோற்சவம் நடப்பதால் அங்கு சென்று நிவேதனம் செய்வாயாக என்று அசரீரி கேட்டது. இதையடுத்து அவர் இங்கு வந்து திருப்பாதாளேஸ்வரரை பணிந்து திராட்சையை நிவேதனம் செய்தார். அதுமுதல் இங்கு கொடி முந்திரி எனப்படும் பச்சை திராட்சை சிறப்பு நிவேதனம் செய்யப்படுகிறது.

இத்தலத்தில் இறைவனுக்கு மாம்பழ சாறில் அபிஷேகம் செய்யப்படுவதும் ஒரு தனிச் சிறப்பாகும். திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது நான்கு மாங்கனிகள் தோன்றின. அதை எடுத்த பிரம்மன் ஒன்றை விநாயகருக்கும், மற்றொன்றை ஆறுமுகனுக்கும் கொடுத்தார். மூன்றாவது கனியை காஞ்சியில் முளைக்கும்படி ஊன்றிவிட்டு, நான்காவது கனியை இத்தலத்திற்கு கொண்டு வந்து நாகநாதசுவாமிக்கு சாறு பிழிந்து அபிஷேகம் செய்தார். பிறகு அதன் விதையை பிரம்ம தீர்த்தத்தின் வட கரையில் ஊன்றினார். இதனால் மாமரம் இத்தல விருட்சமாகிறது. இன்றும் நாகநாதருக்கு மாம்பழச்சாறு அபிஷேகம் நடப்பது விசேஷம். மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம், நதி என ஐந்து வகையாலும் சிறப்பு பெற்றது இத்தலம் ஆகும்.

இக்கோவில் விசேஷ அமைப்பின்படி சுவாமியை தரிசனம் செய்து நவக்கிரகங்களை வலம் வந்தால் 'ஓம்' என்ற ஓங்கார வடிவில் பக்தர்களின் தரிசன சுற்று முடிவடையும். பொதுவாக சிவாலயங்களில் அம்பாள் சன்னிதியை தாண்டிய பிறகே நவக்கிரகங்கள் அமைந்திருக்கும். இக்கோவிலின் விசேஷ அமைப்பின்படி இத்தலத்தில் அம்பாள் சன்னிதி தனியாக பலிபீடம் கொடி மரத்தின் அருகில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

Read More
கத்தரிநத்தம் காளகஸ்தீஸ்வரர்   கோவில்

கத்தரிநத்தம் காளகஸ்தீஸ்வரர் கோவில்

ஸ்ரீகாளஹஸ்திக்கு இணையான ராகு-கேது பரிகார தலம்

தஞ்சாவூர்- திருவாரூர் சாலையில் அமைந்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள தலம் கத்தரிநத்தம். இறைவன் திருநாமம் காளகஸ்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இக்கோவில் மூலவரின் வடிவமைப்பு தஞ்சை பெரிய கோயில் மூலவர் பெருவுடையாரின் வடிவமைப்பை ஒத்திருக்கும்.

ராகு, கேது இங்கே இறைவனை வழிபட்டு நலம் அடைந்ததால் இது ராகு, கேது, தலம் என்றும்,ஜாதகத்தில் ராகு, கேது தோஷம் உள்ளவர்களுக்கு பரிகார தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. இத்தலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்திக்கு இணையான ராகு-கேது பரிகார தலமாக விளங்குகிறது. இறைவன் இறைவியின் திருநாமங்களும் ஸ்ரீகாளஹஸ்தி தலத்தைப் போலவே அமைந்திருக்கிறது.

ராகு-கேது தோஷம் உள்ளவர்கள், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ராகு கால வேளையில் இங்கு வந்து, நாகலிங்கப் பூ, வில்வம் மற்றும் வன்னி இலை ஆகியவை சாற்றி, தல விருட்சமான குரா மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி மனதாரப் பிரார்த்தனை செய்தால், ராகு கேது தோஷம் யாவும் விலகும்.

திருமண தடை நீக்கும் பரிகார பூஜை

திருமண தோஷம் உள்ள ஆண், பெண் இந்த தலத்திற்கு வந்து வழிபட்டால் திருமணம் உடனே நடைபெறும். திருமண தடை நீக்கும் பரிகார தலமாக திகழும் இக்கோவிலில், ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலத்தில் திருமண தடையை நீக்கும் பரிகார பூஜை நடைபெறுகிறது. அப்போது திருமண தோஷம் உள்ளவர்களின் ஜாதகத்தை வைத்து அர்ச்சனை செய்கிறார்கள். அப்படி செய்தால் மூன்று மாதங்களுக்குள், அவர்களுக்கு திருமணம் நடந்தேறி விடும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இதனால் பல வெளியூர் பக்தர்கள் இப்பூஜையில் வந்து கலந்து கொள்கிறார்கள்.

Read More
பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோவில்

பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோவில்

இறைவனுக்கும் அம்மனுக்கும் சித்திரை முதல் ஏழு நாட்கள் சூரிய பூஜை நடக்கும் அதிசயத் தலம்

சென்னை தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் விக்ரவாண்டியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் பனையபுரம். இறைவன் திருநாமம் பனங்காட்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் சத்யாம்பிகை. சிவனின் இடதுபுறத்தில் சற்று தொலைவில் அம்பிகைக்கு தனியாக ஆலயம் அமைந்துள்ளது. பனை மரத்தை தல விருட்சமாக கொண்ட ஐந்து தலங்களுள் இதுவும் ஒன்று.

சூரியன் வழிபட்ட தலங்களில் புறவார் பனங்காட்டூரும் ஒன்றாகும். அதனால் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் நாளில் இருந்து தொடர்ந்து ஏழு நாட்கள் சூரியன் தன் ஒளிக்கதிர்களால்,இறைவனையும் அம்மனையும் வழிபடுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இப்படி ஏழு நாட்கள் தொடர்ந்து இறைவனுக்கும் அம்மனுக்கும்

சூரிய வழிபாடு நடப்பது வேறு எந்த தலத்திலும் கிடையாது. சூரிய உதயத்தின் போது, சூரியன் தன்னுடைய பொன்னிற ஒளிக்கதிர்களால் இராஜகோபுரம், கொடிமரம், பலிபீடம், நந்தி,மண்டபங்கள் இவற்றையெல்லாம் கடந்து, கருவறையில் வீற்றிருக்கும் இறைவனின் சிரசில் பட்டு வணங்குகிறது. இதன் பின் அது மெல்ல கீழிறங்கி சிவனின் பாதத்தை அடைகின்றது. பாதத்தைத் தொடும் அதேவேளையில் சற்று தொலைவில் உள்ள அருள்மிகு மெய்யாம்பிகை அம்மன் சிரசின் மீதும் ஒளிக்கதிர்கள் விழுகின்றன. பின்பு அந்த ஒளி மெல்ல கீழிறங்கி அன்னையின் பாதத்தில் அடைவதுடன் அன்றைய சூரிய பூஜை நிறைவு பெறுகின்றது. வானவியல் சாஸ்திர நுட்பத்தை உணர்ந்து, கோவிலின் கட்டிட வடிவமைப்பை அமைத்திருப்பது, நம் முன்னோர்களின் புத்திக்கூர்மையையும், தொழில்நுட்பத்திறனையும் உலகத்துக்கு பறைசாற்றுகின்றது.

கண் கோளாறுகள் போக்கும் பரிகாரத் தலம்

புறாவுக்கு அடைக்கலம் தந்து தன் கண்களை அளித்த சிபி சக்ரவர்த்திக்கு காட்சி தந்து மீண்டும் இறைவன் கண்ணொளி தந்த தலம் இது. பனங்காட்டீசனின் மற்றொரு பெயர் கண்ணமர்ந்த நாயனார், நேத்தோதாரகேஸ்வரர் சுவாமி என்பது. இதன் பொருள் கண் கொடுத்த கடவுள் என்பதாகும். எத்தகைய பார்வைக்கோளாறு உள்ளவரும் இங்குள்ள இறைவனிடம் தஞ்சம் புகுந்தால் அவர்களது குறை நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின்நம்பிக்கையாக அமைந்துள்ளது.

குழந்தை வரம் அருளும் பனம் பழம்

இக்கோவிலில், தலமரமான பனை மரங்களில் ஆண் பனை உயரமாகவும், பெண்பனை குள்ளமாகவும் காலம் காலமாக காட்சி தருவது வியப்பான ஒன்றாகும். பெண் பனையிலிருந்து விழும் பழத்தை உண்பவர்களுக்கு மகப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

Read More
முறப்பநாடு கைலாசநாதர் கோவில்

முறப்பநாடு கைலாசநாதர் கோவில்

நவகைலாய தலங்களில் குரு தலம்

திருநெல்வேலி - தூத்துக்குடி சாலையில், 15 கி.மீ தொலைவில் உள்ள தலம் முறப்பநாடு. இறைவன் திருநாமம் கைலாசநாதர். இறைவியின் திருநாமம் சிவகாமி அம்மன்.

இந்தியாவில் கங்கை நதியும், முறப்பநாடு தலத்தில் தாமிரபரணி நதியும் மட்டுமே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடுகின்றது. இதனால் இவ்விடம் தட்சிண கங்கை என்று போற்றப்படுகிறது. முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் குளித்தால் காசியில் குளித்த புண்ணியம் கிட்டும்.

முறப்பநாடு, திருநெல்வேலி/ தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நவகைலாய தலங்களில் ஐந்தாவது இடத்தை (நடுக் கைலாயம்) பெறுகின்றது. இந்த கோவில், நவக்கிரகத்தில் குருபகவான் ஆட்சி பெற்று ஏழாவது இடத்தை பெறுகிறது. சிவபெருமானே தட்சிணாமூர்த்தியாக, குருவாக, தென்முகக் கடவுளாக வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். இங்கு கைலாசநாதர், குரு அம்சமாக இருப்பதால் அவருக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, கொண்டைக்கடலை நைவேத்யம் படைத்து வழிபடும் வழக்கம். எனவே, குருபகவானின் அருள் பெற நாம் வழிபட வேண்டிய திருத்தலம் முறப்பநாடு ஆகும்.

வியாழ பகவானின் அனைத்து சக்திகளையும் இத்தலம் பெற்றிருப்பதால், பக்தர்கள் இந்த கோவிலில் வித்தியாசமான முறையில் தக்ஷிணாமூர்த்தி முன்பும், சனி பகவான் முன்பும் ஒன்பது முறை சுற்றி வழிபாடு செய்கிறார்கள். இப்படிச் செய்தால், நவகிரகங்களையும் சுற்றி வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இரட்டை பைரவர்

கோவிலின் வடகிழக்கு பகுதியில் தனிச்சந்நிதியில் இரண்டு பைரவர்கள் அருள்பாலிக்கின்றனர். நாய் வாகனத்துடன் காட்சி தரும் பைரவர் கால பைரவர் என்றும், வாகனம் இன்றி காட்சி தரும் மற்றொரு பைரவர் வீர பைரவர் என்றும் அழைக்கின்றனர். இது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.

தனுசு, மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்

குருவின் ஆதிக்கம் பெற்ற ராசி/நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம் இது. கையில் பணம் தங்குவதில்லை என வருந்துபவர்களும், வீட்டில் சுப காரியங்கள் நடப்பதில்லை என வருந்துபவர்களும் சென்று வணங்க வேண்டிய கோவில் இது தான். இது வியாழனுக்குரிய பரிகார தலம் என்பதால், திருமண தடை உள்ளவர்கள் இக்கோவிலில் சென்று வணங்கினால், சுப காரிய தடை

Read More
நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவில்

நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவில்

பட்டத்து யானைக்கு மீண்டும் கண்பார்வை அளித்த நஞ்சுண்டேஸ்வரர்

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் 23 கி.மீ., தொலைவில், அமைந்துள்ள தலம் நஞ்சன்கூடு. இறைவன் திருநாமம் நஞ்சுண்டேஸ்வரர். இறைவியின் திருநாமம் பார்வதி.

ஒரு சமயம், மைசூரை ஆண்ட திப்பு சுல்தானிற்கு மிகவும் பிரியமான பட்டத்து யானைக்கு திடீரென கண் பார்வை பறி போனது. அமைச்சர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் நடக்கும் பூஜைகளில், நாற்பத்தி எட்டு நாட்கள் கலந்து கொள்ள தனது பட்டத்து யானையை அனுப்பி வைத்தார் திப்பு சுல்தான். நாற்பத்தி எட்டாவது நாள் பூஜை நிறைவடைந்த போது, யானைக்கு மீண்டும் கண் பார்வை திரும்பியது. இதனால் மகிழ்ந்த திப்பு சுல்தான், மரகத லிங்கம் ஒன்றை இக்கோவிலில் பிரதிஷ்டை செய்தார். மரகத ஆரம் ஒன்றையும் காணிக்கையாகக் கொடுத்தார். இந்த சிவலிங்கம், ஹக்கீம் நஞ்சுண்டா என்று பெயரால் அழைக்கப்படுகிறது.

Read More
கல்பட்டு சனீஸ்வரன் கோவில்

கல்பட்டு சனீஸ்வரன் கோவில்

21 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தரும் சனி பகவான்

விழுப்புரத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் கல்பட்டு என்ற ஊரில் அமைந்துள்ள தனிக்கோவிலில், மூலவராக சனி பகவான், வேறெங்கும் இல்லாத வண்ணம் 21 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். நான்கு திருக்கரத்துடன், கரங்களில் சூலம், கத்தி, வில் மற்றும் அம்பு தாங்கி, வலது காலை காகத்தின் மீது ஊன்றி நின்ற வண்ணம் காட்சி தருகிறார். மேலும் இவர் யோகநிலையில் இருப்பது இன்னும் சிறப்பான விஷேசமாகும்.

சனி பகவானின் வலது காலில் உள்ள ஊனத்தால் அவரால் வேகமாக நடக்க இயலாது எனவே தான் மந்தன் என்ற திருநாமம் கொண்டார். இதை உணர்த்தும் வகையில் வலது கால் சற்று சிறியதாகவும் இடக்கால் நீண்டு இருக்கும் வண்ணம் மூலவர் விக்கிரகம் அமைந்துள்ளது.

ஏழரை சனி, கண்ட சனி, வக்ர சனி, விரய சனி என்று எந்த சனி தோஷத்தால் பாதிப்பு இருந்தாலும் ஒருமுறை இக்கோவிலில் வந்து பிராத்தனை செய்தால் போதும். அவை யாவும் நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

பங்குனி உத்திரத்தன்று இரண்டு தடவை திருக்கல்யாணம் நடைபெறும் அதிசயம்!

பங்குனி உத்திரத்தன்று நடைபெறும் தெய்வத் திருமணங்களை கண்டு வழிபட்டால், நமது திருமண வாழ்க்கை இனிமை நிறைந்ததாக மாறும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

பொதுவாக பங்குனி உத்திரம் தினத்தன்று ஒவ்வொரு கோவிலிலும் ஒரே ஒரு தடவைதான், அதுவும் உற்சவருக்குத்தான் திருக்கல்யாண உற்சவத்தை நடத்துவார்கள். ஆனால் திருவண்ணாமலை தலத்தில் மட்டும் பங்குனி உத்திரம் தினத்தன்று இரண்டு தடவை திருக்கல்யாணம் நடைபெறும். முதலில் மூலவரான அண்ணாமலையாருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். பிறகு உற்சவரான பெரிய நாயகருக்கு திருக்கல்யாணம் நடத்தப்படும். இது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மட்டுமே பின்பற்றப்படும் அதிசயமான நடைமுறையாகும். தமிழ்நாட்டில் எந்த ஒரு சிவாலயத்திலும் இப்படி திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுவதில்லை. குறிப்பாக மூலவருக்கு எந்த ஆலயத்திலும் திருக்கல்யாணம் நடத்த மாட்டார்கள்.

பொதுவாக எல்லா கோவில்களிலும் பங்குனி உத்திர திருமண விழா ஒரே நாளில் நடந்து முடிந்து விடும். ஆனால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மொத்தம் ஆறு நாட்கள் இந்த திருமண விழா நடைபெறும். நமது கலாச்சாரத்தில் கடைபிடிக்கப்படும் அனைத்து திருமண சடங்குகளும் செய்யப்படும். மாலை மாற்றுவது, நலங்கு வைப்பது, பூப்பந்து வீசி விளையாடுவது, மரு வீட்டுக்கு செல்வது, மீண்டும் தாய் வீட்டில் இருந்து வருவது, நலங்கு ஊஞ்சல் உற்சவம், பாலிகை விடுதல் என்று முழுமையான திருமண விழாவாக அந்த அண்ணாமலையார் கல்யாண உற்சவம் நடைபெறும்.

Read More
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி தேர் திருவிழா

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவின் ஏழாம் நாள் காலை தேரோட்டம் நடைபெறும். முதலாவதாக சிறிய தேரில் விநாயகர் உலா வர, அதை தொடர்ந்து பெரிய தேரில் கபாலீஸ்வரர் பவனி வருவார். அவரைப் பின்தொடர்ந்து கற்பகாம்பாள், வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேரில் வருவார்கள்.

கபாலீஸ்வரர், கைகளில் வில்லும் அம்பும் ஏந்தி பார் வேட்டைக்குச் செல்லும் கோலத்தில், மேளதாளம், நாதஸ்வரம் முழங்க, பக்தர்கள் கூட்டத்தின் நடுவே நான்கு மாட வீதிகளிலும் தேரில் பவனி வருவார். கபாலீஸ்வரரின் தேரோட்டத்தை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, பல வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

சகட தோஷத்தை நீக்கும் தேரோட்டம்

ஒருவருடைய ஜனன ஜாதகத்தில், குருவுக்கு 6, 8, 12 மிடங்களில் சந்திரன் நின்றால் அது சகட யோகமாகும். இந்த யோகம் இருப்பவர்கள் சில நேரங்களில் உச்சத்திலும் சில நேரங்களில் துன்பப்பட்டுக்கொண்டும் இருப்பார்கள். தேர் அசைந்து சென்று ஓரிடத்தில் நிலைத்தன்மை பெற்றுவிடும். அதுபோல, திருக்கோவில்களின் தேரோட்டத்தை தரிசிப்பது, ஒருவரின் சகட தோஷத்தை போக்கி, ஏற்ற இறக்கங்களை நீக்கி, நிலையான வாழ்வை தந்துவிடும் என்பது நம்பிக்கை. கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம் பார்ப்பவர் அனைவரும், சகடதோஷம் நீங்கி நிலையான வாழ்வு பெறுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோவில்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோவில்

ராகு-கேது இணைந்து ஒரே வடிவாக காட்சி தரும் அபூர்வ தோற்றம்

திருவாரூரில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள தேவாரத் தலம் திருவாஞ்சியம். இறைவனின் திருநாமம் வாஞ்சிநாதர். இறைவியின் திருநாமம் மங்களநாயகி.

ராகு பகவான் மனித தலையும்,பாம்பு உடலும் கொண்டவர். கேது பகவான் பாம்பு தலையும் மனித உடலும் கொண்டவர். திருவாஞ்சியத்தில் மட்டுமே ராகுவும் கேதுவும் ஒன்றாக ஓரே சிலையில், பாம்பு உடலாகவும் மனித முகமாகவும், ஓரே நிலையில் காட்சி தருகின்றனர். ஓரே மூர்த்தியாக எழுந்தருளியுள்ள ராகு-கேதுவை வழிபட்டால் நாகதோஷம், காலசர்ப்பதோஷம் நீங்கி நலம் பெறலாம். ராகு-கேதுவிற்கு பாலாபிஷேகம் செய்யும் போது பால் நீலநிறமாக மாறிவிடும்.

ஒருவரின் ஜாதகத்தில் ராகு மற்றும் கேதுவுக்கு இடையில் அனைத்து கிரகங்களும் இருந்தால், அவருக்கு 'காலசர்ப்ப தோஷம்' என்று கூறப்படுகிறது. திருவாஞ்சியம் தலம் என்பது ராகு, கேது மற்றும் காலசர்ப்ப தோஷத்திற்கு அதிகம் அறியப்படாத பரிகார தலமாகும். .

இத்தலத்திலுள்ள லக்ஷ்மி தீர்த்தம், நாக தீர்த்தம் மற்றும் சக்கர தீர்த்தம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகின்றன. இவை மூன்றும் முறையே லக்ஷ்மி, ஆதிசேஷன் மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகியோரால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. லக்ஷ்மி தீர்த்தத்தில் ஆவணி மாதத்தில் வெள்ளிக்கிழமை நீராடுவதால் ஒருவன் தான் பிரிந்து வந்த குடும்பத்துடன் மீண்டும் சேருவான் என்றும், நாக தீர்த்தத்தில் வைகாசி மாதம் திருவோணம் நடசத்திர நாளன்று நீராடுதல் நாக தோஷத்தைப் போக்கும் என்றும் ஆவணி மாதம் ஏகாதசி விரதம் இருந்து மறுநாள் துவாதசியில் சக்கர தீர்த்தத்தில் நீராடுதல் பிரம்மஹத்தி தோஷத்தை போக்குமென்றும் தலபுராணம் கூறுகின்றது.

Read More
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழா - வெள்ளி ரிஷப வாகன காட்சி

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவின் ஐந்தாம் நாள் இரவு, இறைவன் வெள்ளி ரிஷப வாகனத்தில் மயிலாப்பூர் மாடவீதிகளில் பவனி வருவார். அவருடன் கற்பகாம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் தங்க மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் வலம் வருவார்கள். பஞ்சமூர்த்திகளும் மறு நாள் காலையில்தான் கோவிலுக்குத் திரும்புவார்கள்.

இந்த ஆண்டு வெள்ளி ரிஷப வாகன காட்சி, 1.4.2023, சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கு தொடங்க உள்ளது.

வெள்ளி ரிஷப வாகன காட்சியை தரிசித்தால், திருஞானசம்மந்தருக்கு ஞானப்பால் ஊட்டியதுபோல் ஞானம் வேண்டி நிற்பவருக்கெல்லாம் ஞானப்பால் கிட்டிவிடும் என்பது நிச்சயம்.

Read More
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழா - அதிகார நந்தி சேவை

'மயிலையே கயிலை' என்னும் பெருமையுடையது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில். இக்கோவிலில் நடைபெறும் பங்குனி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றத. பத்து நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளன்று நடைபெறும் அதிகார நந்தி சேவை, ஐந்தாம் நாள் அன்று இரவு நடைபெறும் வெள்ளி ரிஷப வாகன காட்சி, ஏழாம் நாள் திருத்தேர், எட்டாம் நாள் நடைபெறும் அறுபத்து மூவர் திருவிழா, பத்தாம் நாள் இரவு நடைபெறும் திருக்கல்யாணம் ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

சென்னைக்கு பெருமை மயிலை என்றால், மயிலை கபாலீஸ்வரருக்குப் பெருமை அதிகார நந்தி சேவை. இந்த ஆண்டு அதிகார நந்தி சேவை 30.3.2023, வியாழனன்று காலை 5.45 மணிக்கு தொடங்க உள்ளது.

ரிஷபத்தின் முகமும் (காளையின் முகம்) சிவனின் உருவமும் கொண்ட அதிகார நந்தி, ஞானத்தின் தலைவனாகக் கருதப்படுகிறார். சிவபெருமானின் வாகனமான நந்தி பகவான். வேதங்களின் முதல்வனாகப் போற்றப்படுகின்றார். 'நந்தி' என்ற சொல்லுக்கு 'மகிழ்ச்சி' என்று பொருள். நான்கு மறைகளையும் ஈசன், நந்தி தேவருக்குத்தான் முதலில் கூறியதாக புராணங்கள் கூறுகின்றன. அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவ்வகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக இருப்பதால், அதிகார நந்தி என்ற பெயர் வந்தது.

வெள்ளியாலான அதிகார நந்தி வாகனம்

இக்கோவில் அதிகார நந்தி வாகனம் 106 ஆண்டுகள் பழமையானது. அதற்கு முன்னால் மரத்தாலான அதிகார நந்தி வாகனம்தான். பயன்பாட்டில் இருந்தது. இப்போதைய நந்தி வாகனத்தை வழங்கியவர், வந்தவாசி அருகே இருக்கும் தண்டரை கிராமத்தைச் சேர்ந்த த.செ .குமாரசாமி என்பவர். இவரின் குடும்பம், ஆயுர்வேத சித்த மருத்துவத்தை பாரம்பரியமாக, பல தலைமுறைகளாக செய்து வந்தனர். வெள்ளியாலான இந்த அதிகார நந்தி வாகனம் உருவாக்கும் பணி, 1912ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1917 ல் நிறைவு பெற்றது. அப்போதைய மதிப்பில் 48 ஆயிரம் ரூபாய் செலவில் உருவான இந்த அதிகார நந்தி வாகனத்தின் தற்போதைய மதிப்பு, மூன்று கோடி ரூபாய் ஆகும்.

Read More
திருமழப்பாடி வைத்தியநாதசுவாமி கோவில்

திருமழப்பாடி வைத்தியநாதசுவாமி கோவில்

திருமழப்பாடி நந்தியம்பெருமான் - சுயசாம்பிகை திருக்கல்யாணம்

திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருமழப்பாடி. இறைவன் திருநாமம் வைத்தியநாதசுவாமி. இத்தலத்தில் அருள்பாலிக்கும் இரண்டு அம்பிகைகள் சுந்தராம்பிகை மற்றும் பாலாம்பிகை ஆவர். இந்த ஆலயத்தில் நடைபெறும் நந்தி திருமணம் மிக விசேஷமானது.

நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம் என்பது சான்றோர் வாக்கு. அதாவது திருமழப்பாடி கோவிலில், பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தன்று நடைபெறும் நந்தி திருக்கல்யாணத்தைப் பார்ப்பவர்களுக்கு முந்தி திருமணம் ஆகும் என்பது தான் இதன் பொருள். அதன்படி திருமழப்பாடி நந்தி திருக்கல்யாணம் பார்த்தால், அடுத்த ஆண்டு நந்தி கல்யாணம் நடைபெறுவதற்கு முன் திருமண வரம் வேண்டுவோருக்குத் திருமணம் நடந்து முடியும் என்கின்றனர்.

சிலாத முனிவர் என்பவர் குழந்தை பாக்கியம் வேண்டி சிவனை நோக்கி தவம் இருந்தார். சிவபெருமான், 'நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய். அதற்காக யாகபூமியை உழும் போது பெட்டகம் ஒன்று தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனை உன் மகனாக வளர்த்து வா. அவன் 16 வயது வரை உன்னுடன் இருப்பான்' என்று அருளினார். சிலாத முனிவர், பெட்டகத்தில் கண்டெடுத்த அந்தக் குழந்தைக்கு 'செப்பேசன்' என பெயர் சூட்டி வளர்த்தார். 14 வயதுக்குள் வேதங்கள் கற்றதோடு, அனைத்து கலைகளிலும் அக்குழந்தை சிறந்து விளங்கியது.

செப்பேசன் வளர்ந்து வருவதை நினைத்து சிலாத முனிவருக்கு வருத்தம் உண்டானது. இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் செப்பேசன் நம்முடன் இருப்பான் என்று நினைத்து துயருற்றார். இதையறிந்த செப்பேசன், திருவையாறு ஐயாறப்பர் கோவிலுக்குச் சென்று ஈசனை நினைத்து கடும் தவம் புரிந்தார். அவருக்கு ஈசன் தனது அருளாசியை வழங்கியதோடு, சிவகணங்களுக்கு தலைவராகும் பதவியையும், திருக் கயிலையின் தலைவாயிலைக் காவல் காக்கும் உரிமையையும் அளித்தார். இத்தகைய சிறப்புகளைப்பெற்ற இவரே, நந்தியம்பெருமான் ஆவார்.

இதையடுத்து , சிலாத முனிவர் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்ய முன்வந்தார். இதற்காக திருமழப்பாடியில் , தவம் செய்து வந்த வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயசாம்பிகையை மணப்பெண்ணாக பேசி முடித்தார். இவர்களின் திருமணம் பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் நடைபெற முடிவுசெய்யப்பட்டது. இதற்காக திருவையாற்றில் இருந்து நந்தியம்பெருமான், வெள்ளித் தலைப்பாகை, பட்டு வேட்டி துண்டு, வெள்ளிச் செங்கோலுடன் மாப்பிள்ளைக் கோலத்தில் குதிரை வாகனத்தில் திருமழப்பாடி புறப்பட்டார். தனது பக்தனுக்கு தானே முன்னின்று திரு மணம் செய்து வைப்பதற்காக திருவையாற்றில் இருந்து ஐயாறப்பர்- அறம் வளர்த்த நாயகி ஆகியோர் பல்லக்கில் திருமழப்பாடிக்குச் சென்றனர். திருமழப்பாடியில் உள்ள சுந்தராம்பிகை உடனாய வைத்திய நாதப் பெருமான் கொள்ளிடம் சென்று மங்கல வாத்தியங்கள் முழங்க ஐயாறப்பர், அறம் வளர்த்தநாயகி, நந்தியம்பெருமான் ஆகியோரை வரவேற்று கோவில் முன் அமைக்கப்பட்ட திருமண மேடைக்கு அழைத்து வந்தார். இதையடுத்து நந்தியம்பெருமானுக்கும், சுயசாம்பிகைக்கும் வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.

இந்த ஆண்டு நந்தியம்பெருமான் - சுயசாம்பிகை திருக்கல்யாணம், 30.3.2023 வியாழக்கிழமையன்று நடைபெற உள்ளது. திருமண வயதில் இருக்கும் ஆண், பெண் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டால், விரைவில் திருமண பாக்கியம் அடைவார்கள் என்பது நம்பிக்கை.

Read More
மப்பேடு சிங்கீஸ்வரர் கோவில்

மப்பேடு சிங்கீஸ்வரர் கோவில்

ஆஞ்சநேயர் வீணையை இசைத்து சிவபெருமானை வழிபட்ட தலம்

சென்னை பூந்தமல்லி - பேரம்பாக்கம் சாலையில், பூந்தமல்லியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் மப்பேடு. இறைவனின் திருநாமம் சிங்கீஸ்வரர். இறைவியின் திருநாமம் புஷ்பகுஜாம்பாள்.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, தன் உண்மையான ரூபத்தை மீண்டும் பெற இங்கு வந்து சிவனை வழிபட்டார். பெண் வடிவில் திருமால் வழிபட்டதால், (மால் - திருமால்; பேடு - பெண்), `மால் பேடு' என்றும், மீண்டும் சுய உருவம் பெற்றதால் (மெய் உருக் கொண்டதால்) `மெய்ப்பேடு' என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. திருவாலங்காட்டில் சிவபெருமான் திருநடனம் புரிந்த போது, அவரின் நந்தி கணங்களில் ஒருவரான சிங்கி, சிவனாரின் நடனத்துக்கு ஏற்ப, மிருதங்கத்தை லயிப்புடன் வாசித்தார். தன் இசையில் கவனம் செலுத்திய அவரால், ஈசனின் திருநடனத்தை தரிசிக்க இயல வில்லை. இந்தக் குறை தீர, மப்பேடு திருத் தலத்தில் சிங்கிக்குத் திருநடனக் காட்சியைக் காட்டினாராம் ஈசன். ஆகவே அவருக்கு இத்தலத்தில், சிங்கீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.

இக்கோவிலின் வடகிழக்கு மூலையில் உள்ள ஒரு மண்டபத்தில் அமைந்திருக் கும் ஒரு சிறிய மாடத்தில் வீணை வாசிக்கும் கோலத்தில் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். சீதையைத் தேடிக்கொண்டு ஆஞ்சநேயர் இலங்கைக்குச் சென்றபோது வழி தெரியா மல் தவித்ததாகவும், பின்னர் இந்தத் தலத்தில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு வீரபாலீஸ்வரரை, வீணையில் அமிர்தவர்ஷிணி ராகம் இசைத்து வழிபட்டதாகவும், இறைவனின் அருளால் இலங்கைக்குச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இன்றைக்கும் சந்தியா காலத்தில் ஆஞ்சநேயர் சூட்சும வடிவில் வந்து வீணையில் அமிர்தவர்ஷிணி ராகம் இசைப்பதாக ஐதீகம். இசைத்துறையில் பெயரும் புகழும் பெற விரும்புபவர்கள், இங்கு வந்து வீரபாலீஸ்வரர் சந்நிதிக்கு முன்பு அமர்ந்து பயிற்சி செய்தால், அவர்களுடைய விருப்பம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான நோய்கள் தீர்க்கும் பிரதோஷ வழிபாடு

இக்கோவில், கொடிமரத்துக்கு அருகில் அமைந்திருக்கும் நவ வியாகரணக் கல்லின் மேல் இருந்தபடி, நந்தியையும் சிவபெருமானையும் பிரதோஷக் காலத்தில் வழிபட்டால், எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்பது ஐதிகம். கார்த்திகை சோமவாரம், பிரதோஷம், ரேவதி நட்சத்திரம் போன்ற தினங்களில் இப்படி தரிசிப்பது கூடுதல் சிறப்பு.

மூல நட்சத்திரக்காரர்களின் பரிகாரக் கோவில்

அருள்மிகு சிங்கீஸ்வரர் மூல நட்சத்திரத்தில் தோன்றியவர் என்பதால், மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய பரிகாரக் கோயிலாக விளங்குகிறது. மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் ஜாதகத்தில் உள்ள சகலவிதமான தோஷங்கள் நீங்கவும், மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையவும் தொடர்ந்து ஐந்து மூல நட்சத்திர நாள்களில் இந்த ஆலயத்துக்கு வந்து, சிங்கீஸ்வரர் சந்நிதியில் ஐந்து நெய்விளக்குகள் ஏற்றி அர்ச்சகரிடம் கொடுத்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

Read More
விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில்

விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில்

குடும்ப சமேதராக அருள் பாலிக்கும் அனுக்கிரக சனி பகவான்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் விளங்குளம் . இறைவன் திருநாமம் அட்சயபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் அபிவிருத்தி நாயகி.

இத்தலத்தில் நவக்கிரக சன்னிதி கிடையாது. அதற்குப் பதில் சூரியனும் அவரது புத்திரர் சனிபகவானும் தனித் தனி சன்னதிகளில் அருளுகின்றனர். இத்தலத்தில் சனீஸ்வர பகவான் தெற்கு நோக்கி குடும்ப சமேதராக தனது மனைவியர் மந்தா, ஜேஷ்டா ஆகியோருடன் எழுந்தருளியிருக்கிறார். இத்தலத்தில் சனிபகவான் சிவபெருமானை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றதால் இங்கு அவர் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இவரை ஆதி பிருஹத் சனீஸ்வரர் எனப் போற்றுகிறார்கள். சனி பகவான் குடும்பத்துடன் இருப்பதால், 12 ராசிக்காரர்களும் இங்கு வந்து வழிபட்டால், சனியின் கோபத்தில் இருந்து தப்பிக்கலாம், அவரின் அருளைப் பெறலாம் என்கிறது தல புராணம்.

பூச நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய சனிபகவான்

இவரை நினைத்து மாதந்தோறும் அமாவாசை தினங்களில் காகத்துக்கு அல்லது இயலாதவர்களுக்கு உணவு வழங்கினால், பித்ரு தோஷம் நீங்கும். கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். வீட்டில் தரித்திரம் விலகி ஐஸ்வரியம் பெருகும் என்கிறார்கள்.

குறிப்பாக, பூச நட்சத்திரக்காரர்கள் வணங்கிய வேண்டிய திருத்தலம் என்றும் பூச மருங்கர் எனும் சித்தர் வழிபட்ட தலம் இது என்றும் சொல்கிறது தல புராண மகிமை. எனவே, மாதந்தோறும் பூச நட்சத்திர் நாளில், தைப் பூச நாளில் வந்து வேண்டிக்கொள்ளலாம்.

Read More
துடையூர் விஷமங்களேஸ்வரர் கோவில்

துடையூர் விஷமங்களேஸ்வரர் கோவில்

கண்பார்வை பிரச்சனைகளை தீர்க்கும் வீணாதர தட்சிணாமூர்த்தி

திருச்சிக்கு அருகே, தேவாரத் தலமான திருவாசிக்கு மிக அருகில் அமைந்துள்ள தேவார வைப்புத் தலம் துடையூர், இறைவனின் திருநாமம் விஷமங்களேஸ்வரர் . அம்பிகையின் திருநாமம் வீரமங்களேஸ்வரி என்ற மங்களநாயகி.

சுவாமி சந்நிதியை வலம் வரும்போது கோஷ்டத்தில் நின்ற கோலத்தில் 'வீணாதர தட்சிணாமூர்த்தி' காட்சி தருகிறார். இவர் கரங்களில் ஏந்தியிருப்பது 'திகி சண்டளா வீணை' என்பதால், 'திகி சண்டளா வீணாதர தட்சிணாமூர்த்தி' எனப்படுகிறார். இப்படி நின்ற கோலத்தில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தியை காண்பது மிக அரிது. இவருடைய வீணையின் இசைக்கேற்ப, இவருக்கு அருகில் ஒரு பூத கணம் உடுக்கை அடித்துக் கொண்டும், ஒரு பெண்மணி தாளம் போட்டுக் கொண்டும் காட்சி தருகிறார்கள்.

இவர் கண்களுக்கு ஒளி தரும் நரம்புகளைக் காக்கக் கூடியவர். எனவே, கண் பிரச்னை உள்ளவர்கள், இங்கே வந்து இந்த வீணாதர தட்சிணாமூர்த்தியை தரிசித்து மனதாரப் பிரார்த்தித்தாலே போதும். பார்வை பிரகாசமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்தச் சந்நிதியில் செவ்வாய், புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமைகள் விசேஷமானவை. உயர்கல்வி, குடும்ப நலன், மருத்துவச் சிகிச்சை போன்ற வேண்டுதல்களுக்காக, இத்தினங்களில் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.

Read More
விளமல் பதஞ்சலி மனோகரர் கோவில்

விளமல் பதஞ்சலி மனோகரர் கோவில்

அமாவாசைதோறும் அன்னாபிஷேகம் நடைபெறும் தேவாரத் தலம்

திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில், திருவாரூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் விளமல் இறைவனின் திருநாமம் பதஞ்சலி மனோகரர் . இறைவியின் திருநாமம் யாழினும் மென்மொழியம்மை.

பொதுவாக எல்லா சிவாலயங்களிலும், ஐப்பசி பவுர்ணமியன்றுதான் அன்னாபிஷேகம் செய்வார்கள். ஆனால், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் எல்லா அமாவாசை நாட்களிலும், அன்னாபிஷேகம் செய்யப்படுவது தனிச்சிறப்பாகும். பித்ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் அமாவாசையன்று, திருவாரூர் கமலாலய தீர்த்தத்திலுள்ள (தெப்பக்குளம்) பிதுர் கட்டத்திலும், விளமல் கோயிலில் உள்ள அக்னி தீர்த்தத்திலும் நீராடுகின்றனர். பின், பதஞ்சலி மனோகரருக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து, தலைமுறை சிறக்க ஆசிர்வதிப்பர் என்பது நம்பிக்கை. புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை தினத்தன்று இந்த வழிபாட்டைச் செய்வது இன்னும் சிறப்பு. அன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்து, பித்ரு தர்ப்பணம் செய்து வழிபடுகின்றனர். விபத்தில் அகால மரணமடைந்தவர்களுக்காகவும், இறக்கும் தருவாயில் அவஸ்தைப்படுவோருக்காகவும் இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இத்தலத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More