திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்

திருஈங்கோய்மலை மரகதாம்பிகை அம்மன்

திருச்சி - கரூர் சாலை வழியிலுள்ள குளித்தலை என்ற ஊரிலிருந்து காவிரி ஆற்றைக் கடந்து சென்றால் காவிரியின் வடகரையில், மலையின் மேல் அமைந்துள்ள தேவாரத் தலம், திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோவில். மலைமேல் அமைந்த வெகு சில தேவாரத் தலங்களில் இத்தலமும் ஒன்று. சுமார் 500 படிகள் ஏறினால் கோவிலை வந்தடையலாம். அகத்தியர் ஈ உருவத்தில் இங்குள்ள இறைவனை வழிபட்டதால் ஈங்கோய்மலை என்று பெயர் வந்தது. இத்தலத்து இறைவன் திருநாமம் மரகதாசலேசுவரர், ஈங்கோய்நாதர். இறைவியின் திருநாமம் மரகதாம்பிகை, லலிதா, மரகதவல்லி.அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சாயா சக்தி பீடம் ஆகும். கருவறையில், அம்பாள் நான்கு கரங்களுடன், நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார், அம்பாளின் கருவறை விமானம், கோபுரம் போன்ற அமைப்பில் மூன்று கலசங்களுடன் இருக்கின்றது.

மூலவர் மரகதாலேஸ்வரர் பெயருக்கு ஏற்றாற் போல மரகதம் போன்று பச்சை நிறத்தில் அமைந்துள்ளார். சிவராத்திரி நாளின், முனபின் நாடகளில் சூரிய ஒளி இத்தல இறைவன் மீது படுகிறது. அச்சமயம் லிங்கம் பல வண்ணத்தில் காட்சி அளிப்பதைக் காணலாம். சிவனுக்கு தீபாராதனை காட்டும்போது லிங்கத்தில் ஜோதி ஜொலிப்பதைக் காணலாம்.

பிருகு முனிவர் சிவனை வணங்கும் வழக்கம் உடையவர். ஆனால், அம்பாளைக் வணங்க மாட்டார். பக்தர்களின் வழிபாட்டில் அம்பாளுக்கும் முக்கியத்துவம் வேண்டும் எனக் கருதிய சிவன், அவளைக் கோபப்படும்படி செய்தார். அம்பாள், பூலோகம் வந்து இத்தலத்தில் தவம் செய்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தன் உடலின் இடப்பாகத்தை தருவதாக இத்தலத்தில் உறுதியளித்தார். அம்பாளுக்கு, சிவன் தன் இடப்பாகம் தர உறுதி தந்த மலை என்பதால் இம்மலையை 'சக்திமலை' என்கின்றனர்.

திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க இத்தலத்திற்கு வந்து வழிபடுகிறார்கள்.

Read More
ஸ்ரீகாளஹஸ்தி காளத்தியப்பர் கோயில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

ஸ்ரீகாளஹஸ்தி காளத்தியப்பர் கோயில்

ஸ்ரீகாளஹஸ்தி ஞானப் பூங்கோதை அம்மன்

சென்னையில் இருந்து 110 கி.மீ. தொலைவில், ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள தேவாரத் தலம் ஸ்ரீகாளஹஸ்தி காளத்தியப்பர் கோயில். இறைவன் திருநாமம் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர். இறைவியின் திருநாமம் ஞானப் பூங்கோதை. இந்த அம்பிகைக்கு ஞானப்பிரசனாம்பிகை, ஞானக்கொழுந்து, ஞானசுந்தரி, ஞானப் பேரொளி, வண்டார்குழலி என்ற பெயர்களும் உண்டு. 51 சக்தி பீடங்களில் இத்தலம் ஞான பீடம் ஆகும். பஞ்ச பூதத்தலங்களுள் இது வாயுத்தலம். தட்சிண(தென்) கயிலாயம் என்னும் சிறப்புடையது.

கயிலாச கிரி மலையடிவாரத்தில், சுவர்ணமுகி எனப்படும் பொன்முகலி ஆற்றின் கரையில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அம்பாள் ஞானப் பூங்கோதை நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்பாள் திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 'அர்த்த மேரு ' உள்ளது. அம்பாள் இடுப்பு ஒட்டியாணத்தில் 'கேது ' உருவமுள்ளது. அம்பாள் கருவறையை வலம் வரும்போது வட்டமாகத் தரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மூலை இடத்தில் மூன்று தலைகள் சேர்ந்திருப்பது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தினடியில் சக்தி வாய்ந்த யந்த்ரம் இருப்பதால் இங்கு அமர்ந்து ஜபம் செய்வது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. அம்பாளுக்கு வெள்ளிக்கிழமை தோறும் தங்கப்பாவாடை சாற்றப்படுகிறது. சந்நிதிக்கு நேர் எதிரில் உள்ள மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தோறும் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.

இத்தலம் சிறந்த 'ராகு, கேது க்ஷேத்ரம்' என்றழைக்கப்படுகிறது. சர்ப்ப தோஷம் முதலியவை நீங்கும் தலமாதலின் இங்கு இராகு கால தரிசனம், இராகுகால சாந்தி முதலியன விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

நவராத்திரி நாட்களில் ஞானப் பூங்கோதையை நேரிலோ, நினைத்தோ வழிபட்டால் அம்பிகையின் திருவருள் கைகூடி சகல அஞ்ஞானங்களும் நீங்கும். மேலும் ஞானகாரகனாம் கேதுவின் திருவருள் கிட்டும்.

Read More
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன்

அம்மனின் சக்தி பீடங்களில் முதன்மையானது என போற்றப்படுவது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இந்த பீடத்திற்கு 'ராஜமாதங்கி சியாமள பீடம்' என்று பெயர். மீனாட்சிஅம்மன் சிலை மரகதக்கல்லால் ஆனது.

இத்தலத்தை பொறுத்தவரை பெண்மைக்கு முக்கியத்துவம் தரும் வகையில், அம்மனின் இடப்பக்கம் சுவாமி வீற்றிருக்கிறார். மதுரையில் மீனாட்சிக்கே முதல் மரியாதை. இங்கு மீனாட்சி அம்மனை முதலில் வணக்க வேண்டும். பின்னர்தான் சுவாமியை தரிசிக்க வேண்டும். பொதுவாக சிவாலயங்களில் முதலில் இறைவனுக்கு நைவேத்யம் செய்தபிறகு, அதையே தான் சுவாமியின் பிரசாதமாக அம்பாள் முதலான மற்ற எல்லா தெய்வங்களுக்கும் நைவேத்யம் செய்வார்கள். மதுரையிலே மட்டும் மீனாட்சிக்கு முதலில் நைவேத்யம் செய்துவிட்டு, பின்னர் சுந்தரேஸ்வர் உட்பட பிற மூர்த்திகளுக்கு நைவேத்யம் செய்வார்கள்.

மீனாட்சி அம்மனின் ஆபரணங்கள்

மீனாட்சி அம்மனின் மாணிக்க மூக்குத்தி மிகவும் பிரசித்தம். அது போன்றே மீனாட்சி அம்மன் திருவிழாக்காலங்களில் அணியும் பல நகைகள் பக்தர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும். பாண்டியர், நாயக்கர் கால மன்னர்கள், ஆங்கிலேயர்கள் என அம்மன், சுவாமிக்கு பலரும் தங்கம், வைரம், வைடூரியம், முத்து, மாணிக்கம், புஷ்பராகத்தில் ஆபரணங்கள் செய்து காணிக்கையாக கொடுத்துள்ளனர். இவை திருவிழா காலங்களில் அம்மன், சுவாமிக்கு அணிவிக்கப்படுகின்றன. அவைகளில் சில - பாண்டிமுத்து, முத்து சொருக்கு, முத்து உச்சிக் கொண்டை, முத்து மாம்பழக் கொண்டை, முத்துமாலைகள், முத்து கடிவாளம், பெரியமுத்து மேற்கட்டி, முத்து உச்சிக் கொண்டை, முத்து மாம்பழக் கொண்டை, முத்தங்கிகள், முத்து மாலைகள், முத்துக் கடிவாளம் ஆகிய முத்தாரங்கள். தலைப்பாகை கிரீடம், திருமுடி சாந்து, பொட்டுக்கறை, பவளக் கொடி பதக்கம், ரோமானிய காசு மாலை, நாகர் ஒட்டியாணம், நீலநாயகப் பதக்கம், திருமஞ்சன கொப்பரை (வெள்ளி), தங்க காசுமாலை, தங்க மிதியடிகள், பட்டாபிஷேக கிரீடம், ரத்தின செங்கோல்.

அம்மனின் தங்க கவசம் - 7 ஆயிரம் கிராம் எடையுள்ளது. தங்க கவசத்தை அம்மனுக்கு சாத்தினால், அழகிய புடவை அணிந்திருப்பது போல் தோன்றும்.

ரத்தின செங்கோல் - இதன் எடை 67 தோலா. இதில் 761 சிவப்பு கற்கள், 21 பலச்ச வைரங்கள், 269 மரகதம், 44 முத்துக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பெரிய அளவில் 2 வாகன பதக்கங்கள். ரோமானிய காசுமாலை. இதில் தங்க ரோமன் 48 காசுகள் 50 தங்க மணிகளுடன் கோர்க்கப்பட்டுள்ளன. இதேபோல் வெளிநாட்டினர் கொடுத்த காசுமாலை, கிழக்கத்திய கம்பெனி வழங்கிய 73 தங்ககாசுகளுடன் கூடிய காசுமாலை உள்ளது.

வைர கிரீடம்

1972ல் திருப்பணி நடத்தியபோது வைர கிரீடம் உருவாக்கப்பட்டது. வைர கிரீடம் 3 ஆயிரத்து 500 கிராம் எடையுள்ளது. இதில் வெளிநாட்டில் பட்டை தீட்டப்பட்ட 399 காரட் எடையுள்ள முதல் தரமான 3 ஆயிரத்து 345 வைர கற்களும், 600 காரட் எடையுள்ள 4 ஆயிரத்து 100 சிவப்பு கற்களும் பதிக்கப்பட்டுள்ளன இது தவிர எட்டரை காரட் எடையுள்ள ஒரு மரகத கல்லும், அதே எடையில் ஒரு மாணிக்க கல்லும் பொருத்தப்பட்டுள்ளன. கிரீடத்தின் உயரம் பதிநான்கரை அங்குலம்.

விக்டோரியா மகாராணி பார்வைக்காக இங்கிலாந்து சென்று திரும்பிய நீலநாயகப் பதக்கம்

நீலநாயகப் பதக்கம் மன்னர் திருமலை நாயக்க மன்னர் அளித்தது. ஆபரணங்களில் இதுவே மிக அற்புதமானது. எந்த பக்கம் பார்த்தாலும் பளபளப்பும், ஒளியும் ஊடுறுவி பளிச்சிடும். இதன் எடை 21 தோலா. இதில் 10 பெரிய நீல கற்கள், 2 கெம்பு, 1 கோமேதம் பதிந்துள்ளது. நீலநாயகப் பதக்கத்தை ஒரு தடவை ஏழாம் எட்வர்டு சக்கரவர்த்தி மதுரைக்கு வந்திருந்தபோது பார்த்துவிட்டு ஆச்சரியப்பட்டுப் போனாராம். உடனே அந்தப் பதக்கத்தை அவர் தமது தாயார் விக்டோரியா மகாராணிக்குக் காட்ட வேண்டுமென்று சொல்லிக் கையோடு எடுத்துக் கொண்டு இங்கிலாந்து போனார் . எடுத்துக் கொண்டு போனவர் அதை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பத்திரமாகத் திருப்பியும் அனுப்பி விட்டார்.

பீட்டர் பாடுகம்

அம்மனின் திருவடிகள் தாங்கும் தங்க மிதியடிகள்-ஒன்றின் எடை 27 தோலா. 211 சிவப்பு கற்கள், 36 மரகத கற்கள், 40 பலச்ச வைரம், 2 முத்து, 2 நீலம், 2 வைடூரியம் பதிக்கப்பட்டுள்ளது. மற்றொன்றின் எடை 28 தோலா. 211 சிவப்பு கற்கள், 40 பலச்ச வைரம், 36 மரகத கற்கள், 2 நீலம், 2 முத்து, 2 வைடூரியம் பதிக்கப்பெற்றது. இந்த மிதியடிகளை, சிறுமி வடிவில் வந்து தன் உயிரை காப்பாற்றிய மீனாட்சி அம்மனுக்கு ரவுஸ் பீட்டர் (1812-1828) என்ற ஆங்கிலேய கலெக்டர் காணிக்கையாக அளித்தார். பின்னர் கோவில் நிர்வாகம் அவரது பெயரை, காலணிகளின் அடியில் 'பீட்டர் பாடுகம்' என்று செதுக்கி அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். மேலும் மாணிக்கக் கற்கள் பதித்த தங்க அங்கவடிகளை (குதிரைச் சேணத்திலிருந்து தொங்கும் பாதந்தாங்கிகள்) அம்மனுக்கு அளித்தார்.

Read More
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்

தன் பக்தையிடம் தங்கக் காசு மாலை கேட்ட மயிலை கற்பகாம்பாள்

தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களுள், தேவாரத் தலமான மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் மிகவும் முக்கியமானது. மயிலாப்பூர் பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது. 'கயிலையே மயிலை; மயிலையே கயிலை' என்னும் சிறப்புடையது. மயிலாப்பூர் என்ற பெயரே மயிலை என்று மருவியது. மயில் + ஆர்ப்பு + ஊர்= மயிலாப்பூர். இதற்கு, மயில்கள் நிறைந்த இடம் அல்லது மயில்கள் ஆரவாரம் செய்யும் ஊர் என்று பொருள். பிரம்மாண்ட புராணம் இந்தத் தலத்தை மயூரபுரி, மயூரநகரி ஆகிய பெயர்களால் குறிப்பிடுகிறது. வேண்டுவோருக்கு வேண்டியதைத் தரும் தேவலோக மரமான கற்பகத் தருவைப் போன்று, தன் பக்தர்கள் தன்னிடம் வேண்டும் வரங்களை எல்லாம் தருவதால், இந்த அம்பிகைக்கு ஸ்ரீகற்பகாம்பாள் என்று திருநாமம்.

இத்தலத்து இறைவி கற்பகாம்பாள், நான்கு திருக்கரங்களுடன் அபய-வரத ஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில் அழகே உருவாகக் காட்சி தருகிறாள். வெள்ளிக் கிழமைகள் மற்றும் சில விசேஷ தினங்களில் மலர்களால் ஆன பூப்பாவாடைகளை அணிந்து காட்சித் தருகிறாள் ஸ்ரீகற்பகாம்பாள். மேலும் வெள்ளிக்கிழமைதோறும் மாலை வேளையில் அன்னை கற்பகாம்பாளுக்கு தங்கக் காசு மாலையும், வைரக் கிளி தாடங்கமும் அணிவிக்கப்படுவது இந்தக் கோயிலின் தனிச் சிறப்பு. இந்தத் தங்கக் காசு மாலையின் பின்னணியில் அம்பிகையின் திருவிளையாடல் உள்ளது.

இக்கோவிலில் 1950-ம் வருடத்திலிருந்து, 'கற்பகாம்பாள் சஹஸ்ரநாம கோஷ்டி' என்னும் பெண்கள் குழு அனுதினமும் லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்வது வழக்கம். இந்தக் குழுவிற்கு 'குரு பாட்டி' என்பவர் தலைவியாகவும், ஆனந்தவல்லி என்பவர் செயலாளராகவும் இருந்தனர். அனுதின பாராயணத்தைத் தவிர கோவிலின் பல்வேறு உற்சவங்கள் மற்றும் விசேஷ நாட்களில் அர்ச்சனை, அபிஷேகம் ஆராதனை ஆகியவையும் செய்து வந்தனர்.

1970-ல் ஒரு நாள் குரு பாட்டியின் கனவில் வந்த கற்பகாம்பாள், 'நீயும் உனது குழுவினரும் தினமும் எனக்கு சஹஸ்ரநாம பாராயணம் செய்கிறீர்கள். காசி விசாலாட்சிக்கும், காஞ்சி காமாட்சிக்கும் இருப்பதைப் போல் எனக்கும் தங்கத்துல சஹஸ்ரநாம காசுமாலை வேணும்' என்று கேட்டாள். குரு பாட்டியும் தான் கனவில் கண்டதை தன் குழுவினரிடம் சொன்னாள். அனைவரும் நன்கொடை பெற்று காசுமாலை செய்து கற்பகாம்பாளுக்கு அணிவிக்க முடிவு செய்தனர்.

வருடங்கள் பல சென்றும், குழுவினரால் காசு மாலைக்கு தேவையான பொருளை சேர்க்க முடியவில்லை. 1978-ல் குருபாட்டியும், ஆனந்தவல்லி மற்றும் உறுப்பினர்கள், இது பொருட்டு காஞ்சி மகா பெரியவரிடம் முறையிட காஞ்சி மடத்திற்கு சென்றனர். 'என்ன? காசுமாலைக்கு பணம் சேரலியா' என்று அவர்கள் முறையிடும் முன்னரே, மகா பெரியவர் கேட்டதால் அவர்கள் ஆச்சரியமடைந்தனர். ' கேட்டவள் அம்பிகை தானே. அதற்கு அவளே அருள் கொடுப்பாள். கவலைப்பட வேண்டாம்' என்று சொன்னார். மேலும் 'விசாலாட்சிக்கும், காமாட்சிக்கும் இருக்கறது பணக்கார காசுமாலை; ஆனால் கற்பகாம்பாளுக்கு கிடைக்கப் போறது பக்தியால காசுமாலை' என்று அங்கிருந்தவர்களிடம் கூறினார். பிறகு ஆனந்தவல்லியிடமும் குரு பாட்டியிடமும் 'கற்பகம் சுவாசினி சங்கம் அப்பிடின்னு பேர்வச்சு, நிறைய சுவாசினி மற்றும் பாலா திருபுரசுந்தரி பூஜைகள் செஞ்சிண்டு வாங்கோ' என்று சொல்லி ஆசீர்வாதம் செய்து பிரசாதமளித்தார்.

மகா பெரியவர் சொன்னதை சிரமேற்கொண்டு நடைமுறைப்படுத்தியதால், பொன்னும் பொருளும் வந்து குவிந்தன. 1982-ல் காசு மாலை செய்யும் வேலை துவங்கியது. ஒவ்வொரு தங்கக் காசிலும், காசின் ஒரு புறத்தில் சஹஸ்ரநாமாவளியின் ஒரு நாமாவும், மறு புறத்தில் கோவிலின் முத்திரையான சிவலிங்கத்தை மயில் பூஜை செய்வது -பின்னணியில் அம்பாள் உருவமும் பதிக்கப்பட்டது. தங்க காசு மாலையும் உருவானது.

கற்பகாம்பாளுக்கு லலிதா சஹஸ்ரநாம தங்க காசு மாலையை சமர்ப்பிக்கும் விழா 26. 2. 1986 அன்று கொண்டாடுவது என்று முடிவானது.

ஆனால், 20-1-1986 அன்று ஆனந்த வல்லியின் கணவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கை கால்கள் செயலிழந்து, பேச்சும் இல்லாமல் போனது. மருத்துவர்கள் , அதிக பட்சம் 48 மணி கெடு கொடுத்து விட்டனர். ஆனந்தவல்லி இதைத் தாங்க முடியாது மனமுடைந்து வீட்டின் பூஜை அறையிலேயே அடைந்து கிடந்தார். குரு பாட்டி சங்கத்தின் உறுப்பினர்களோடு காசு மாலையை எடுத்துக்கொண்டு பெரியவாளை தரிசிக்க மடத்திற்குச்சென்றார். இவர்கள் எல்லோரையும் பார்த்த மகா பெரியவர் , 'ஏன்? உங்க செயலாளர் வரலியா?' என்று கேட்க, இவர்களும் அனந்தவல்லி கணவரின் நிலைமை பற்றி கண்ணீருடன் விவரித்தனர். காசுமாலையை பார்வையிட்ட மகா பெரியவர், 'மாலை சிறப்பாக அமைந்திருக்கிறது. இந்த மாலையை கற்பகாம்பாளுக்கு போட, உங்க செயலாளர் உடன் இருப்பார். கவலைப்படாதீர்கள்' என்று சொல்லி ஆசீர்வதித்து பிரசாதங்கள் கொடுத்தார்.

அனைவரும் நேராக ஆனந்தவல்லி வீட்டிற்கு வந்து ஸ்வாமிகளின் ஆசிகளை சொல்லி பிரசாதங்களை கொடுத்தனர். என்ன ஒரு அதிசயம்! அதேநேரத்தில் மருத்துவ மனையிலிருந்து, ஆனந்தவல்லியின் கணவர் நினைவு திரும்பி பேசுவதாகவும், நல்ல நிலையில் இருப்பதாகவும் செய்தி வருகிறது. மருத்துவர்கள் மிகுந்த ஆச்சர்யத்துடன், ஏதோ அற்புதம் நடந்துள்ளது என்று சொல்லி மறு நாளே டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள்.

26-2-1986 அன்று நடந்த காசுமாலை சமர்ப்பண விழாவில், ஆனந்தவல்லி கணவரும் கலந்து கொண்டார். ஆனந்தவல்லி விழாவை முன்னின்று நடத்தி, அன்று காலையில் கற்பகம்பாளுக்கு காசுமாலையினை சாற்றி, மாலையில் நடை பெற்ற கூட்டத்தில் தனது அறிக்கையையும் சமர்ப்பித்தார்.

மேலும், காசுமாலையைப் பாதுகாப்பாக வைக்க ஒரு கோத்ரேஜ் அலமாரியினையும் அளித்தார். தற்போதும், அம்பாளுக்கு அனைத்து வெள்ளிக் கிழமைகள், பெளர்ணமி நாட்கள் மற்றும் வருடா வருடம் பிப்ரவரி 26 நாளிலும் இந்தக் காசுமாலை சாற்றப்படுகிறது.

Read More
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்

திருவான்மியூர் திரிபுரசுந்தரி அம்மன்

நாயன்மார்களால் பாடப்பட்ட தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று சென்னையில் உள்ள திருவான்மியூர். இறைவன் திருநாமம் மருந்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி அம்மன். இந்த அம்மனுக்கு சொக்கநாயகி என்ற என்ற பெயரும் உண்டு. இத்தலத்தில் அன்னை திரிபுரசுந்தரியாக மூன்று உலகங்களிலும் அழகும், அருளும் நிறைந்தவளாகக் காட்சி தருகிறாள்.

பத்தாம் நூற்றாண்டின் சோழர் கால கல்வெட்டுக்கள் அம்மன் கோவில் சுவற்றில் உள்ளன. இறைவன் திருவான்மியூருடைய மகாதேவனென்றும், இவ்வூரை ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர் என்றும் குறித்துள்ளனர்.

கோவில் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் வலது புறம், திரிபுரசுந்தரி அம்மன் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி தாமரைப் பீடத்தின் மேலே, நான்கு திருக்கரங்களோடு பூரண சந்திர பிரகாசத்தோடு காட்சி தருகிறாள்.அவரது இரு கரங்கள் அங்குச, பாசங்களை ஏந்தியுள்ளன. மற்ற இரு கரங்கள் அபய முத்திரைகளைப் பெற்றுள்ளன. ஒன்பது கஜ பச்சை பட்டு உடுத்தி ரோஜா, செவ்வந்தி, மல்லிகை மாலைகள் அணிந்து, அன்னை நிற்கும் கம்பீரத்தில் நம்மையே மறந்து போய் விடுவோம். விசேட நாட்களில்‌ சந்தனக்காப்பு, மஞ்சள்‌ காப்பு, புஷ்ப அலங்காரம்‌ ஆகியவற்றுடன்‌ அம்மன்‌ தோன்றும்‌ போது, அக்காட்சியைக்‌ காணும்‌ கண்களே பாக்கியம் செய்தவை. இந்த அன்னையைப் பலரும் வழிபட்டு, கலைகளில் சிறந்த ஞானமும், கல்வி கேள்விகளில் தேர்ச்சியும் அடைந்தார்கள்.

இந்தத் தலத்தில், இறைவன் அகத்தியருக்கு திருமணக் காட்சி வழங்கி அருளினார். அவரைப் போன்றே யோகத்தில் ஆழ்ந்து சிவ மந்திரங்களை ஜபித்து, இறைவனிடத்தில் ஈடுபடும் அடியார்கள், பெருமானின் திருமணக் கோலத்தைக் காண வேண்டும் என்று அகத்தியர் வேண்டிக் கொண்டார். அவருடைய வேண்டுதலுக்கு இணங்க, இறைவனும் சிவயோகத்தின் இரகசியங்களை அன்னைக்கு இந்தத் தலத்தில் உபதேசம் செய்து வைத்தார். அதோடு, தானே எல்லா சுகங்களையும் துறந்து, தியாகம் செய்து தியாகராஜராக எழுந்தருளி, யோகமும் செய்து, இந்த யோகத்தின் மூலம் அடியார்கள் பெறக்கூடிய பரமானந்த நிலையைத் தான் அடைந்து, அன்னைக்குக் காண்பித்தார்.

Read More
திருத்தியமலை ஏகபுஷ்ப பிரியநாதர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருத்தியமலை ஏகபுஷ்ப பிரியநாதர் கோவில்

தாயை விட அதிக கருணை காட்டும் அம்பிகை

திருச்சி-துறையூர் பேருந்துப் பாதையில் திருப்பைஞ்சீலியிலிருந்து 12 கி.மீ. அமைந்துள்ள தலம் திருத்தியமலை. இறைவன் திருநாமம் ஏகபுஷ்ப பிரியநாதர். இறைவியின் திருநாமம் தாயினும் நல்லாள். 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இத்தலம், தரை மட்டத்திலிருந்து சுமார் 200 மீட்டர் உயரத்தில் உள்ளது. இறைவனுக்கு ஏகபுஷ்பப் பிரியநாதர் என்ற பெயர் வந்ததற்குச் சுவையான வரலாறு ஒன்று உண்டு. இறைவனால் படைக்கப்பட்ட எத்தனையோ மலர்கள் இறைவனுக்குச் சாத்தப்படுகின்றன. ' தேவ அர்க்கவல்லிப்பூ' என்னும் ஒரு மலரை மட்டுமே இறைவனே காத்திருந்து ஏற்றுக் கொள்வதாக நம்பிக்கை உண்டு. வற்றாத நீர் உள்ள ஒரு சுனையில், பல யுகங்களுக்கு ஒரே முறை தேவ அர்க்கவல்லிப்பூ பூக்கும் சிறப்பு மிக்க சுனை, அமைந்திருக்கும் இடம்தான் திருத்தேசமலை என்னும் திருத்தியமலை. தேவ அர்க்கவல்லிப்பூவை அணிந்து மகிழ்வதற்காக யுக யுகாந்திரமாய் இறைவன் காத்திருப்பதால், இந்த சிவபெருமானின் திருப்பெயர், ஏகபுஷ்பப் பிரியநாதர் என்று வழங்கப்படுகிறது. இறைவனின் இந்த திருநாமம் அபூர்வமான ஒன்று.

இத்தலத்து இறைவன் சற்றே சாய்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். பக்தர்கள் அளிக்கும் மலரை விரும்பி ஏற்றுக் கொள்வதற்கு ஏற்றவாறு சற்றே சாய்ந்த நிலையில் காட்சியளிக்கிறார்.திங்கட்கிழமை தோறும் லிங்கத்திற்கு வில்வ இலை கொண்டும், ஆவுடையாருக்கு துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். 11 வாரங்கள் தொடர்ந்து இவ்வாறு செய்தால் எண்ணிய செயல்கள் எல்லாம் நிறைவேறும்.

இக்கோவிலில் தனிசன்னதி கொண்டு எழுந்தருளியுள்ள இறைவிக்குத் தாயின் நல்லாள் எனப் பெயர். இந்த அம்பிகை ஒரு தாயை விட அதிக கருணை காட்டுவதால் தாயின் நல்லால் என்ற பெயர் பெற்றாள். இந்த அம்மனுக்கு மாத்ரு அதீத கருணாம்பிகா, சுருள் குழல் நாயகி என்ற பெயர்களும் உண்டு. பெண்களால் ஏற்பட்ட சாபங்கள் நீங்க இந்த அம்பிகையை வழிபட வேண்டும். அதனால் பெண்களால் விடப்பட்ட சாபங்கள் நீங்கி, விமோசனம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆறு வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் போதும். சூரியனைக் கண்ட பனிபோல தடைகள் தானே விலகும். திருமணத்தடை, கல்வித்தடை, மணமக்களிடையே ஏற்படும் பிரச்னைகள் முதலான எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்து அருளும் அன்னையாகத் திகழ்கிறாள், தாயினும் நல்லாள்.

Read More
காஞ்சிபுரம் அரசு காத்த அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

காஞ்சிபுரம் அரசு காத்த அம்மன் கோவில்

காஞ்சி காமாட்சி அம்மனுக்கு காவல் தெய்வமாக விளங்கிய அரசு காத்த அம்மன்

காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவிலின் தெற்கு கோபுரத்திற்கு அருகில், சன்னதி தெருவில் அமைந்துள்ளது அரசு காத்த அம்மன் கோவில். காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலிலிருந்து வடமேற்கு திசையில் சுமார் அரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கருவறையில் அரசு காத்த அம்மன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்ட நிலையில் வடக்கு நோக்கி வீற்றிருகிறாள். அம்மன் வலது காதில் குண்டலம், இடது காதில் தோடு அணிந்து காட்சி தருகிறாள். இரு கோரைப் பற்களும், நான்கு கரங்களில் வலது மேற்கரத்தில் உடுக்கையும், கீழ் கரத்தில் சூலமும், இடது மேல்கரத்தில் பாசம், கீழ் கரத்தில் கபாலமும் உள்ளன. ஜ்வாலா கிரீடம் அணிந்திருக்கிறாள். ஆறடி உயரத்தில் இருக்கும் இந்த அம்பிகை இடது காலால் அசுரனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

தல வரலாறு

பார்வதி தேவி, சிவபெருமான் கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெறுவதற்காக காஞ்சியில் தவம் செய்தார் . பார்வதி தேவியின் அந்த தவத்திற்கு எந்த இடையூறும் இல்லாமல் இருப்பதற்காக, அரசு காத்த அம்மன், பச்சை அம்மன், சந்தை வெளி அம்மன், கருக்கினில் அமர்ந்த அம்மன் ஆகிய எட்டு பெண் தெய்வங்கள் பார்வதி தேவிக்கு காவல் புரிந்தனர். இவர்களுக்கு தலைமை பொறுப்பேற்றவள் அரசு காத்த அம்மன். சோழ மன்னர்களின் அரசாங்கத்திற்கு பாதுகாப்பாக இருந்ததால் 'அரசு காத்த அம்மன்' என்று பெயர் வந்தது .

செல்வம் பெருக்கும் அம்மன்

அரசு காத்த அம்மனுக்கு சம்பத்கரீஸ்வரி என்ற பெயரும் உண்டு. 'சம்பத்' என்றால் செல்வம். 'கரி' என்றால் யானை. யானை மீது பவனி வந்து செல்வங்களை வாரி வழங்குவதால் இப்பெயர் வந்தது. இதற்கு அடையாளமாக அம்மனின் எதிரில் சிம்ம வாகனத்திற்கு பதிலாக யானை வாகனம் இடம் பெற்றுள்ளது. இந்த அமைப்பு இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

பிரார்த்தனை

வாதம், தோல் நோய், வாய் பேச இயலாதவர்கள் தங்கள் பிரச்சனை தீர இந்த அம்மனிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

Read More
சென்னை சௌகார்பேட்டை ஏகாம்பரேசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சென்னை சௌகார்பேட்டை ஏகாம்பரேசுவரர் கோவில்

ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் காட்சி தரும் காமாட்சி அம்மன்

சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்று, தங்கசாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஏகாம்பரேசுவரர் கோவில். இக்கோவில், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பாரிமுனையில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் அமைந்துள்ளது. இறைவியின் திருநாமம் காமாட்சி.

இத்தலத்து அம்பாள் காமாட்சி, ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். ஆணும் பெண்ணும் சமம் என்பதை சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தின் மூலம் உணர்த்தியது போல, இத்தலத்து காமாட்சி அம்பாள் ஆவுடையார் மேல் நின்றபடி சிவனில் சக்தி அடக்கம் என உணர்த்துகிறாள். அதனால் இங்கு அம்மனே பிரதானமாகவும் கருதப்படுகிறார். அம்பாளின் பாதத்திற்கு முன் ஸ்ரீசக்கரம் உள்ளது. ஆலயத்தில் அம்பாளுக்கு எதிராக சனீஸ்வரர் வீற்றிருப்பதால், இத்தல அம்மனை வழிபட்டால் சனியின் கெடு பார்வையில் இருந்து நிவாரணம் பெறலாம்.

பிரார்த்தனை

திருமண வரம், வீடு வாங்கும் யோகம் ஆகியவற்றை தருவதால் இக்கோவில் பக்தர்களிடையே மிகவும் பிரபலமாக விளங்குகிறது.

Read More
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்

பிரம்மாண்டமான புற்று வடிவில் காட்சி தரும் பகவதி அம்மன்

கன்னி்யாகுமரி மாவட்டம், நாகர்கோவிலிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். முற்காலத்தில் நெருக்கமான பனைக்காடாக இருந்த இந்தப் பகுதியில் சுயம்புவாக எழுந்தவள் மண்டைக்காடு பகவதியம்மன். ஆரம்பத்தில் காளிதேவியாக வழிபடப்பட்டவள், பின்னர் கேரள மக்களின் வழக்கப்படி 'பகவதி அம்மன்' என்று அழைக்கப்பட்டாள். கால்நடைகளை இங்கே மேய்ச்சலுக்குக் கொண்டு வந்ததால், இதை மந்தைகாடு என அழைத்துள்ளனர். அதுவே காலப்போக்கில் மருவி'மண்டைக்காடு' என்று மாறியதாக தல வரலாறு கூறுகின்றது.

பகவதி அம்மன் பிரம்மாண்டமான புற்று வடிவில் காட்சி தருகிறார். 15 அடிக்கு உயர்ந்து நிற்கும் புற்றின் மேல் பகவதி அம்மனின் முகம் சந்தனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பிரம்மாண்டமான புற்று வேறு எங்கும் இல்லை என்றும், இப்புற்றில் இதுவரை எந்த பாம்பும் வசித்ததில்லை என்றும் கூறுகின்றனர். பொதுவாக புற்றுக்கோவிலில் பக்தர்கள் பால் ஊற்றுவதும், முட்டைகளை வைத்து வேண்டுவதும் உண்டு. ஆனால் இங்கு பால் ஊற்றுவதோ, முட்டைகளை உடைப்பதோ கிடையாது. ஆனால் இந்த புற்றுக்கு தினமும அபிஷேகம் நடைபெறுகிறது. பூசாரி ஓர் ஏணி மரத்தை வைத்து அதில் ஏறி அம்மனுக்கு பூமாலைகளைச் சாற்றுகிறார்.புற்றுவடிவ மூலவர் தேவிக்கு முன்பாக வெண்கலச்சிலையாக நின்ற கோலத்திலும், வெள்ளிச்சிலையாக அமர்ந்த கோலத்திலும் பகவதியம்மன் அருள் பாலிக்கிறார்.

பெண்களின் சபரிமலை

கேரள கோவிலை போன்று அமைப்பு கொண்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வருகின்றனர்.. சபரிமலைக்கு ஆண்கள் 41 நாள்கள் விரதம் இருந்து,பயபக்தியுடன் சென்று வழிபட்டு வருவதைப் போல, பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோயிலுக்கு வருவதால், பெண்களின் சபரிமலை என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசி கொடை விழாவை ஒட்டி கேரளத்து பெண்கள் 41 நாள்கள் பயபக்தியுடன் விரதம் இருந்து, இருமுடி கட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார்கள். மாசி மாத கொடை விழா இந்த ஆலயத்துக்குப் புகழ் சேர்க்கும் ஒரு திருவிழா. பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி சுமந்து, கால்நடையாக இங்கு ஆயிரக்கணக்கில் வந்து தரிசனம் செய்வார்கள். மாசி கொடை விழாவின் போது வேண்டுதல் நிறைவேற ஆலய வளாகத்தை சுற்றிலும் பொங்கல் வைத்தும் வழிபாடு செய்கின்றனர்.

பிரார்த்தனை

செவ்வாய்,வெள்ளிக் கிழமை, பௌர்ணமி நாட்களில் மண்டைக்காடு அம்மன் கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது. கல்யாண வரம், குழந்தை வரம், உடல் உறுப்புகளில் குறைபாடு, கண் திருஷ்டி தோஷம், தலைவலி நிவாரணம் போன்றவற்றிற்காக இங்கு பிரார்த்தனை செய்யப்படுகின்றது. இக்கோயிலில் கொடுக்கப்படும் மண்டையப்பம் மிகவும் பிரசித்தி பெற்றது. அரிசி மாவில் வெல்லம்,பாசிப் பருப்பு,ஏலம்,சுக்கு ஆகியவை சேர்ந்து நீராவியால் அவித்துத் தயார் செய்யப்படுகிறது இந்த மண்டையப்பம். அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது. அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோயிலிருந்து மீண்ட பிறகு இங்கே வந்து, முத்தப்பம் என்னும் அப்பத்தை நைவேத்தியம் செய்கின்றனர்.

Read More
பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவில்

தமிழக சாமுண்டீஸ்வரி அம்மன்

நீடாமங்கலம்- மன்னார்குடி சாலையில் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவில். இக்கோவிலில் ராஜராஜேஸ்வரி, கற்பகவல்லி என்று இரண்டு அம்பிகைகள் அருள்பாலிக்கிறார்கள். இத்தலத்தில் சிவபெருமான், ராஜராஜேஸ்வரி அம்பிகையை சதுரங்க ஆட்டத்தில் வென்று மணம் புரிந்தார். அதனால் இத்தல இறைவனுக்கு சதுரங்க வல்லபர் என பெயர். சதுரங்கத்தில் 64 சதுர கட்டங்களானது இறைவனின் 64 வடிவங்களையும், 64 நாட்டிய நிலைகளையும் குறிக்கின்றது என்பதனை அம்பிகை மூலம் இறைவன் உணர்த்தி உள்ளார்.

மைசூர் நந்திமலையில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு தனிக் கோவில் உள்ளது. இத்தலத்திலும் சாமுண்டீஸ்வரி அம்மன் தனிச் சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் போல் இந்த அம்மனும் வடக்கு நோக்கி எழுந்தருளி இருக்கின்றாள். இவள் தமிழக சாமுண்டீஸ்வரி அம்மன் என்று போற்றப்படுகின்றாள்.இந்த அம்மன் விசேஷமான சக்தி உடையவள். சாமுண்டேஸ்வரி அம்மனிடம் பெண்கள் பிரார்த்தனை சீட்டு கட்டி வேண்டிக் கொள்கிறார்கள். அந்த பிரார்த்தனையானது 90 நாட்களில் நிறைவேறும் என்பது நம்பிக்கை. கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, திருமண தடை, குழந்தை பாக்கியம் ஆகியவற்றுக்கும் இந்த அம்மனை வழிபடுகிறார்கள்.

எலிக் கடியினாலும், பிற விஷக் கடியினால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். இத்தலத்தில்தான் அகஸ்தியர் போகருக்கு விஷக்கடி நிவர்த்திக்கான மூலிகை வைத்திய முறைகளை போதித்துள்ளார். அனைத்து சித்த வைத்தியர்களும் அகஸ்தியருக்கு பூஜை செய்து வழிபட வேண்டிய தலம் இது. ஞாயிற்றுக்கிழமை தோறும் விஷக்கடி நிவர்த்தி செய்ய, அகத்தியர் பிரானின் ஆசியோடு, சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதி முன் மூலிகை வேர் ரட்சை கட்டப் பெறுகின்றது. இங்குள்ள தீர்த்தங்களில் கோயிலின் பின்புறம் உள்ள 'கிருஷ்ண குஷ்டஹரம்' தீர்த்தம், கருங்குஷ்டம் போக்கும் தன்மையுடையது.

சர்க்கரை பாவாடை விழா

ஆடி மாதத்தில் அம்மனுக்கு சர்க்கரை பாவாடை போடப்பட்டு நிவேதனம் செய்ப்படுகிறது அப்போது அம்மனின் முகம் அந்த சர்க்கரை பாவாடையில் தெரியும்போது தீபாராதனை நடக்கிறது. அவ்விழாவின் போது சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசிக்க பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

Read More
பண்ணாரி மாரியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

பண்ணாரி மாரியம்மன் கோவில்

பக்தர்களுடன் கால்நடைகளும் தீ மிதிக்கும் அம்மன் தலம்

ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் பண்ணாரி மாரியம்மன் கோவில் முக்கியமான ஒன்றாகும் . இக்கோவில், சத்தியமங்கலத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், ஈரோட்டில் இருந்து சுமார் 75 கி.மீ. தொலைவிலும், மேற்குத்தொடர்ச்சி மலைச்சாரலில், தமிழ்நாடு கர்நாடகா எல்லைப் பகுதியில் ஒரு அழகான வனப்பகுதியில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த பண்ணாரி அம்மன் கோவிலுக்கு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர மற்றும் கேரளாவில் இருந்து பல பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து அருள் பெற்று செல்கின்றனர்.

புற்று மண் பிரசாதம்

கருவறையில் பண்ணாரி அம்மன் தாமரை பீடத்தில் அமர்ந்த நிலையில், தெற்கு நோக்கி சுயம்புவாக எழுந்தருளி இருக்கின்றாள். சாந்தம் தவழும் முகத்துடன், கைகளில் கத்தி, கபாலம், டமாரம் , கலசம் ஆகியவற்றை ஏந்தி காட்சி தருகின்றாள். எல்லாக் கோவில்களிலும் திருநீற்றைத்தான் பிரசாதமாக தருவார்கள் . ஆனால், இங்கே புற்று மணலையே விபூதி பிரசாதமாக தருகிறார்கள். இதை வீட்டுக்கு எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்தால், திருட்டு மற்றும் தீங்கு போன்ற அபாய செயல்கள் நடக்காது என்பதும், தீராத நோயும் தீரும், கால் நடைகளுக்கு நோய் வராது என்பதும் நம்பிக்கை. மங்களகரமான செயல்கள் வீடுகளில் நடப்பதுடன், அம்மன் தங்களுக்கு பாதுகாப்பாகவும் இருப்பாள் என்கின்றனர் பக்தர்கள். அம்மன் கால்நடை வளர்ப்போரின் காவல் தெய்வமாக விளங்குகிறாள். கால் நடைகள் கொண்டு தொழில் செய்பவர்கள், தங்கள் தொழில் விருத்தியடைய அம்மனை வணங்குகின்றனர்.

பங்குனி மாத குண்டம் திருவிழா

இந்த கோவிலில் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் இறங்கும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. குண்டம் இறங்கும் திருவிழா என்பது தீமிதி திருவிழா என்பது ஆகும். பூக்குழி என்றழைக்கப்படும் அக்னி குண்டத்திற்கு தேவையான விறகுகளை வெட்ட காட்டுக்குள் சென்று பக்தர்கள் வெட்டி வருவார்கள் இதை 'கரும்பு வெட்டுதல்' என இப்பகுதில் அழைப்பார்கள் .தமிழகத்தில் எங்கும் இல்லாத விசேஷமாக இங்கு தொடர்ச்சியாக 12 மணி நேரம் நடைபெறும் தீமிதி திருவிழா இதுவாகும். இதில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து குண்டம் இறங்குவார்கள். குழந்தைகள் பெரியவர்கள் என பலதரப்பு மக்கள் இந்த தீமிதி திருவிழாவில் கலந்து கொள்வார்கள். பக்தர்களை வியக்க வைக்கும் விதமாக கால்நடைகளும் இந்த தீமிதி திருவிழாவில் பங்கு பெறுவதுண்டு.

முதலில் தலைமை பூசாரி அக்னி குண்டத்தில் இறங்கி நடந்து செல்லுவார். பின்பு லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்குவார்கள். காலை 4 மணி முதல் மாலை வரை பக்தர்கள் தொடர்ந்து அக்னி குண்டம் இறங்குவது மிகப் பெரிய பிரம்மாண்டமான மெய்சிலிர்க்கும் காட்சி ஆகும். கடைசியாக ஆடு, மாடு, குதிரை போன்ற கால்நடைகளையும் பக்தர்கள் குண்டம் இறக்கி நடக்க வைப்பார்கள்.

கண் வியாதியை குணப்படுத்தும் கோவில் தீர்த்தம்

பல ஆண்டுகளுக்கு முன், காட்டு இலாகா அதிகாரியாக பணியாற்றிய ஒரு ஆங்கிலேயர் , துப்பாக்கியால் பன்னாரி அம்மன் கோவில் சுவற்றில் சுட்டதால் பிறகு அவரது கண்கள் ஒளி இழந்தன. தவறை உணர்ந்து அம்மனிடம் வேண்டி, கோயிலில் வழங்கப்பட்ட தீர்த்தத்தால் கண் ஒளி பெற்றார். இதனால் தற்போதும், கண்வியாதி உள்ளவர்களுக்கு கோவில் தீர்த்தம் வழங்கப்படுகிறது. இது கண் வியாதியை குணப்படுத்துவதாக மக்களால் நம்பப்படுகிறது.

பிரார்த்தனை

திருமண பாக்கியம், குழந்தைப்பேறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் வருவோர் நம்பிக்கையுடன் திரும்பிச் செல்கின்றனர். மேலும் கேட்டதெல்லாம் தரும் வல்லமை வாய்ந்த அம்மனாக நம்பிக்கை வைத்து, பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.

Read More
செட்டிகுளம் ஏகாம்பரேசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

செட்டிகுளம் ஏகாம்பரேசுவரர் கோவில்

கந்தனுக்கு தன் கையிலிருந்த கரும்பை பரிசாக அளித்த காமாட்சி அம்மன்

பெரம்பலூர் - திருச்சி ரோட்டில் 15 கி.மீ. தூரத்தில் உள்ள ஆலத்தூரிலிருந்து, 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, செட்டிகுளம் ஏகாம்பரேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். இத்தலத்தில் காமாட்சி அம்மன் சன்னதி, தனிக் கோவிலாக உள்ளது. கருவறையில் காமாட்சி அம்மன் நான்கு திருக்கரங்களுடன் அபய, வரத முத்திரையோடு நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை வழிபட்டால் எத்தகைய நற்பலன்கள் கிடைக்குமோ, அத்தகைய நற்பலன்களை இந்த அம்மன் இடத்தில் நாம் வரம் பெறலாம். அன்னை காமாட்சியம்மன், தன் ஆணைக்கு இணங்க அசுரர்களை அழித்த முருகப்பெருமானுக்கு தன் கையில் இருந்த கரும்பை பரிசாக வழங்கி ஆசி வழங்கினார். காமாட்சி அம்மன் அளித்த 11 கணுக்களை உடைய செங்கரும்பினை ஏந்தி, முருகப்பெருமான் கோவிலுக்கு சற்று தொலைவில் உள்ள குன்றின் மேல் தண்டாயுதபாணி சுவாமியாக அருள்பாலிக்கிறார். அன்னை காமாட்சியம்மன் கையில் கரும்பின்றி, நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

Read More
பிட்டாபுரம் அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

பிட்டாபுரம் அம்மன் கோவில்

பிட்டு நைவேத்தியமாக ஏற்கும் பிட்டாபுரத்தி அம்மன்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு வடமேற்கு முனையில் அமைந்துள்ளது பிட்டாபுரத்தி அம்மன் கோவில். இந்த அம்மனுக்கு 'புட்டாத்தி அம்மன்' என்ற பெயரும் உண்டு. இந்த அம்மன் திருநெல்வேலி மாநகரின் எல்லைக் காவல் தெய்வமாக விளங்குகின்றாள்.

கருவறையில் பிட்டாபுரத்தி அம்மன் சுமார் 6 அடி உயரத்தில், 5 அடி அகலத்தில் அழகிய பீடத்தில், வலது காலை பீடத்தின் மேலே ஊன்றி, இடது காலை தொங்க விட்டு வலது கைகளில் அரவு, வேதாளம், வாள், சூலம் ஆகியவற்றையும், இடது கைகளில் தீ, மணி, கேடயம், கபாலம் ஆகியவைகளை தாங்கியும், இருக்கையின் கீழ் வீழ்ந்து கிடக்கும் அரக்கனை வலக்கை சூலத்தால் அழுத்தியபடி காட்சியளிக்கிறாள்.

இந்த அம்மனுக்கு நடைபெறும் இரு நேர பூஜையிலும் பிட்டு படைக்கப்படுவது சிறப்பான ஒன்றாகும். பிட்டு படைப்பதால்தான் இந்த அம்மனுக்கு பிட்டாபுரத்தி அம்மன் என்ற பெயர் வந்துள்ளது. அம்மனுக்கு தீபாராதனை ஆன பின்னர் அலங்காரத்தில் ஏற்படும் குறைகளை சரி செய்ய மாட்டார்கள். அதேபோல் தீபாராதனை முடிந்த பின்னர் மாலைகளோ, பூக்களோ அம்மனுக்கு அணிவிக்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் 64 விதமான நோய்களை குணப்படுத்தும் அம்மன்

குழந்தைகளுக்கு ஏற்படும் நோயை குணப்படுத்துவது இந்த அம்மனின் சிறப்பு அம்சமாகும். இங்கு குழந்தைகளுக்கு ஏற்படும் அறுபத்து நான்கு விதமான நோய்கள், சீர் தட்டுதல் போன்றவற்றிற்கு கைகளில் வேர் கட்டி, நெற்றியில் மையிடப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் சகல நோய்களும் குணமடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பிற மதத்தை சேர்ந்தவர்களும் தங்கள் குழந்தைகளின் நோய் தீர்க்க வழிபடும் அம்மன்

இந்துக்கள் மட்டுமல்லாது பிற மதத்தை சேர்ந்தவர்களும் இக்கோவிலுக்கு தங்கள் குழந்தைகளை கொண்டு வந்து அம்மனை வழிபட்டு வேர் கட்டி, மையிட்டு செல்வது இக் கோவிலின் சிறப்பம்சமாகும். பொதுவாக குழந்தைகள் பிறந்தால் தீட்டு என்றும் பதினாறு நாட்களுக்கு அந்த குடும்பத்தினர் கோவிலுக்கு செல்லக் கூடாது என்பது விதிமுறை. ஆனால் இங்கு பிறந்த குழந்தையை கூட அழைத்து வந்து வேர் கட்டி வழிபடலாம்.

பிரார்த்தனை

இவள் சன்னதியில் தினமும் காலை மற்றும் இரவு பூஜைகளின் போது மந்திரம் ஓதப்பட்ட புனித நீரானது சங்கில் வைத்து பக்தர்களின் மீது தெளிக்கப்படும். இதனால் சகல திருஷ்டிகளும், பீடைகளும், தீய சக்திகளும் நீங்குவதாக நம்பிக்கை. மேலும் மகப்பேறு விரும்பியும், பீடைகள் நீங்கவும், நோய்கள் தீரவும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திரளான பெண்கள் இக்கோவிலுக்கு வந்து அம்மனை வேண்டி செல்கிறார்கள். ராகுகால நேரத்தில் இந்த அம்மனை வழிபடுவது சிறப்பாகும்.

Read More
மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில்

அக்கினியை கிரீடமாக அணிந்திருக்கும் பத்ரகாளி அம்மன்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது மடப்புரம் காளியம்மன் கோவில். ஆயிரம் ஆண்டுகள் பழமையுள்ள சக்திவாய்ந்த இக்கோவில், மதுரையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இங்குள்ள பத்ரகாளியம்மன் அக்கினியை கிரீடமாக கொண்டு காட்சியளிக்கிறாள். அதனால் அம்மனை குளிர்விக்க எலுமிச்சபழ மாலை அம்மனக்கு இந்த கோவிலில் சார்த்துவது வழக்கம்.வலக்கையில் பற்றிய திரிசூலம் கீழ்நோக்கியவாறு அநீதியை அழிப்பதாகவும், தலையில் சூடிய அக்கினி அழித்தவற்றை மீண்டும் எழவிடாமல் சாம்பலாக்குவதாகவும் உள்ளது. காளிக்கு பின்றம் 13 அடி உயர பெரிய குதிரை சிலை ஒன்று உள்ளது. குதிரை காளிக்கு நிழல் கொடுக்கும் விதமாக தன் பின்னங்கால்களை கீழே ஊன்றி முன்னங்கால்களை தூக்கி காளியின் இரு புறங்களில் உள்ள பூதகணங்களின் தோள்கள் மீது வைத்துள்ளன. அம்மனும் குதிரையும் திறந்தவெளியில் இருக்கிறார்கள்.

பிரளய காலத்தில் மதுரை முற்றிலும் அழிந்த போது மீனாட்சி அம்மன், சிவ பெருமானிடம் மதுரையின் எல்லையை வகுக்க கோரியபோது சிவபெருமான் தன் கழுத்திலுள்ள ஆதிசேடனை எடுத்து மதுரையை வளைத்தார். அப்பொழுது வடக்கே திருமாலிருஞ்சோலையும், தெற்கே திருபரங்குன்றமும் மேற்கே திருவேடகமும் மதுரையின் எல்லையாக வகுத்தார். கிழக்கில், மடப்புரத்தில் ஆதிசேடனின் தலையும் வாலையும் இணைத்து எல்லையை காட்டினார். ஆதிசேடனின் விஷ்த்தை உண்டு அம்மன் காளியாக இங்கு எழுந்தருளினாள்.

காசு வெட்டிப் போட்டு முறையிடும் வினோதமான பிரார்த்தனை

கொடுக்கல் வாங்கல் சிக்கல், சொத்து தகராறு, குடும்ப சண்டை போன்றவற்றில் நீதி கிடைக்காது ஏமாந்தவர்கள் குளித்துவிட்டு ஈரத்துணியுடன் வந்து நீதியின் தேவதையாக காளியை கருதி, அவள் முன்னால் காசு வெட்டிப்போட்டு காளியிடம் முறையிடும் பழக்கம் உள்ளது. மதுரை மண்டலத்தில் மடப்புரம் காளி என்ற வார்த்தை கேட்டாலே கொடூரம் செய்பவர்கள், அடுத்தவரை ஏமாற்றுபவர்கள் பயந்து நடுங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கு விசாரணைகள், கோர்ட் விவகாரங்கள் இவைகளுக்கு மடப்புரம் காளியம்மனை வணங்கினால் உடனே கைமேல் பலன் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.

பில்லி,சூனிய,ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை வரம், திருமணம் நடைபெறாமல் தவிப்பவர்கள், மன நிம்மதி இல்லாதவர்கள், ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வேண்டி கொள்கின்றனர்.

ஆடி மாத வெள்ளி, செவ்வாய், ஞாயிறு கிழமைகளில், இத்தலத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்,

Read More
சிறுகரும்பூர்  திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சிறுகரும்பூர் திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில்

நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் சுந்தர காமாட்சி அம்மன்

சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓச்சேரி என்னும் இடத்திலிருந்து 1.5 கி.மீ. தொலைவிலும், காவேரிப்பாக்கத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ளது சிறுகரும்பூர் திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் சுந்தரகாமாட்சி.

அம்பிகை சுந்தரகாமாட்சி பெயருக்கேற்றார்போல், அழகே உருவாய், அருளே வடிவாய் இங்கு ஆட்சிபுரிந்து வருகிறாள். பொதுவாக காமாட்சி அம்மனை நாம் அமர்ந்த கோலத்தில்தான் தரிசித்து இருப்போம். ஆனால் இத்தலத்தில், மங்கலங்களை அருளும் தேவியாய், மனதைக் கவரும் தெய்வீகத் தோற்றத்துடன் சாந்தம் தவழும் விழிகளால், மலர், பாசம் ஏந்தி அபய-வரத முத்திரை அருளி, குண்டலங்கள், ஹார வடங்கள், அணிந்தும் தாமரை மலரில் நின்ற திருக்கோலத்தில் ஒயிலுடன் காட்சி தருகிறாள். இப்படி நின்ற கோலத்தில் காமாட்சி அம்மன் அருள் புரிவது தனிச்சிறப்பாகும். அம்பாளின் எதிரில் ஸ்ரீசக்கரம் உள்ளது.

அம்பிகை சுந்தரகாமாட்சி மரகதப் பச்சைக்கல்லால் ஆனவள் என்கின்றனர். அம்பிகையின் கருவறை சுவர்களும் பச்சைக் கல்லால் ஆனது. பச்சை நிறம் குளிர்ச்சியை தரவல்லது. அதுபோல் பச்சைத் திருமேனி உடைய இந்த அம்மனும் தன்னுடைய பக்தர்களுக்கு வேண்டிய வரம் அளித்து அவர்களது மனதை குளிர்விக்கிறாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பிரார்த்தனை

இத்தலத்தில் வில்வ மரமும், வேப்ப மரமும் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றது. குழந்தைப்பேறு வேண்டுவோர், தம்பதியராக வந்து இந்த மரங்களுக்கு பூஜை செய்தால் மழலைச் செல்வம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
காவேரி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

காவேரி அம்மன் கோவில்

காவேரி அன்னைக்கு நன்றி செலுத்தும் ஆடிப்பெருக்கு விழா

ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப் பதினெட்டாம் பெருக்கு என்று தமிழக மக்கள் விமரிசையாக கொண்டாடுகிறார்கள்.பதினெட்டு என்ற எண் வெற்றியைக் குறிக்கும். மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள் முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன.

தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வரும் விழாக்களில், காவிரிக்கென பிரத்யேகமான விழாவாக ஆடிப்பெருக்கு விழா உள்ளது. பயிர் செழிக்க வளம் அருளும் காவேரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில்தான் இந்த ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகளின் கரைகளில் மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

ஆடிப்பெருக்கன்று காவேரிக்கரையில் இளம் பெண்களும், புதுமண தம்பதிகள் மற்றும் திருமணமான பெண்கள் புத்தாடை உடுத்திக் கொண்டு பழங்கள், அவல், ஊறவைத்த இனிப்பு கலந்த அரிசி, புதிய மாங்கல்ய மற்றும் மஞ்சள் கயிறு, காதோலை கருகமணி ஆகியவற்றை வைத்து மஞ்சள் மற்றும் மணலால் உருவாக்கப்பட்ட பிள்ளையார் முன் படையல் செய்து வழிபடுவார்கள். தாலி பாக்கியம் நிலைக்க சுமங்கலி பெண்கள் ஆடிப்பெருக்கு அன்று புது தாலி மாற்றிக் கொள்வர். இந்த நன்னாளில் புதுமண பெண்ணிற்கு தாலி பிரித்து கோர்ப்பர் . எந்த ஒரு புது மற்றும் நல்ல காரியங்களை ஆடிப்பெருக்கு அன்று ஆரம்பித்தால் , அந்த காரியம் மேலும் மேலும் பெருகும் என்பது ஐதீகம்.

காவேரித் தாயாருக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அளிக்கும் சீர்வரிசைகள்

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் அமைந்துள்ளது காவேரி அம்மன் கோவில். இங்குதான் கீழ் இரு கரங்களில் புனித கலசம் தாங்கி, மேலிரு கரங்களில் அக்கமாலையும் மலர்ச் செண்டும் தாங்கி நின்ற கோலத்தில் அருளுகிறாள் காவேரி அன்னை.

காவேரி அன்னை, ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் தங்கையாக கருதப்படுகிறாள். ஆடியில் காவேரித்தாய் கருவுற்றிருப்பதாக ஐதீகம். எனவேதான் தனது தங்கையான காவேரி யை காண ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சீர்வரிசையுடன் ஆடிப்பெருக்கு அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள படித்துறைக்கு எழுந்தருள்வார். அன்று ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து காவேரித் தாயாருக்கு சீர்வரிசைகளை யானைமீது கொண்டு வருவார்கள். அந்தச் சீர்வரிசைகளில் விதவிதமான மங்கலப் பொருட் கள், மாலைகள், புதிய ஆடைகள் ஆகியவற்றுடன் தாலிப்பொட்டு ஒன்றும் இருக்கும். இதனை அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் முன்னிலையில் அங்குள்ள காவேரித் தாயாருக்குப் படைத்து, காவேரி நதியில் சமர்ப்பிப்பார்கள்.

காவேரிக்கு பெருமாள் சீர்வரிசை அளிக்கும் காட்சியைக் கண்டால் `கோடி புண்ணியம்' கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்பின், பெருமாள் பல்லக்கில் ஏறி கோவிலை நோக்கிச் செல்வது வழக்கம். அன்று அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை விழாக்கோலம் காணும். பெருமாள் கோவிலில் நுழையும்போது, வெளியில் உள்ள ஆண்டாள் சந்நிதிக்கு முன் எழுந்தருள்வார். அங்கே ஸ்ரீஆண்டாளும் பெருமாளும் மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த அற்புதமான காட்சியை ஆடிப் பதினெட்டு அன்று ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும்பொழுது, தம்பதியர் தரிசித்தால் வாழ்வில் வசந்தம் வீசும். கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, காவேரியில் நீராடிய நாள் ‘ஆடிப்பெருக்கு' என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழா

தென்னிந்தியாவில் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது, பவானி கூடுதுறை. இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவில் ஆடிப்பெருக்கு அன்று அதிகாலையில் திறக்கப்படும். கூடுதுறையில் நீராடிவிட்டு பக்தர்கள், இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.

அட்சய திரிதியை தினத்தை விட, ஆடிப்பெருக்கு சிறப்பான நன்னாளாகும். இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். ஒருவர் செய்யும் நற்செயல்களால், எவ்வாறு புண்ணியம் பெருகுகிறதோ, அதுபோல் இந்த நாளில் தொடங்கும் எந்தக் காரியமும் நன்மை அளிக்கும் வகையிலேயே நிறைவு பெறும் என்பது நம்பிக்கை.

Read More
தர்மபுரி  கல்யாண காமாட்சி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

தர்மபுரி கல்யாண காமாட்சி கோவில்

ஆடிமாதம் மூன்றாவது செவ்வாய் மட்டுமே சுயரூப காட்சி தரும் சூலினி ராஜ துர்க்காம்பிகை

தர்மபுரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது கல்யாண காமாட்சி கோவில். தருமர் வழிபட்டதால் இந்த தலத்திற்கு தருமபுரி என்று பெயர். இந்த கோவில், கோட்டை கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இறைவன் திருநாமம் மல்லிகார்ஜுனேஸ்வரர். இறைவியின் திருநாமம் கல்யாண காமாட்சி.

அம்பாள் கல்யாண காமாட்சி கருவறையின் அருகில், அர்த்தமண்டபத்தில் சிறிய தனிச்சன்னதியில் அம்பிகை சூலினியின் இராஜதுர்காம்பிகை வடிவம் கிழக்குநோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பஞ்சபாண்டவர்களில் மூத்தவரான தருமர், இருபத்தேழு மூல மந்திரங்களால் வழிபட்ட துர்க்கை இவள்.

துர்க்கை மகிஷாசுரனை வதம் செய்யும் கோலத்தில் எழுந்தருளி இருந்தால் அவளை சூலினி துர்க்கை என்பார்கள். இத்தலத்தில் துர்க்கை, சூலினி ராஜ துர்காம்பிகையாக சூலம் சங்கு ஏந்தி மகிஷாசுரனை வதம் செய்யும் தோற்றத்தில் அருள்பாலிக்கிறாள். கீழே விழுந்து கிடக்கும் மகிஷனின் கொம்பை இடதுகரத்தால் பிடித்துக்கொண்டு வலதுபாதத்தால் அவன் கழுத்தை மிதித்துக்கொண்டு, காரணம் , காரணி, அதன் பலன் என மூன்று வகையில் மூன்று வகை சூலங்களுடன், சம்கார தோற்றத்தில் காட்சி தருகிறாள். இது தமிழகத்தில் சூலினிக்கான ஒரே கோயிலாகும்.

சூலினி ராஜ துர்காம்பிகையின் முழு தரிசனம், வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நமக்குக் கிட்டும். மற்ற நாட்களில் திரையிடப்பட்டு திருமுக மண்டலத்தை மட்டுமே தரிசிக்க முடியும். சூலினி ராஜ துர்காம்பிகையின் சுய ரூபத்தை, முழு உருவை சந்தனக்காப்பு அலங்காரத்தில் , வருடத்தில் ஆடி மூன்றாவது செவ்வாய்க்கிழமை மதியம் 4.15 முதல் இரவு 9.15 வரை மட்டுமே தரிசிக்க முடியும்.

பிரார்த்தனை

சங்கு சக்ரம் ஏந்தி மகிஷனை வதைக்கும் கோபரூபத்தில் இவள் இருந்தாலும் நாடிவரும் அன்பருக்கு நலங்கள் பல சேர்ப்பவள். ராகு கிரக அதிதேவதையான ஸ்ரீ சூலினி ராஜ துர்கையை, கிருஷ்ணரின் ஆலோசனைப்படி வழிபட்டு தருமர் இழந்த ராஜ்ஜியத்தைப் பெற்றார். செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்து அருளுகிறாள்.

Read More
தேவகோட்டை கோட்டை அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

தேவகோட்டை கோட்டை அம்மன் கோவில்

கருவறையில் விக்கிரகம் இல்லாமல் பீடம் மட்டுமே இருக்கும் அம்மன் தலம்

சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை என்ற ஊரில் கோட்டை அம்மன் கோவில் அமைந்துள்ளது. கோட்டை அம்மன் தேவகோட்டையின் காவல் தெய்வம் ஆகும். கோட்டை என்றால் அரண்மனை என்று பொருள். கோட்டையில் வாழ்பவர்கள் கூட, தம் வாழ்வில் உயர்வதற்கு கோட்டை அம்மனை வழிபட வேண்டும்.

இக்கோவில் கருவறையில் அம்மனின் விக்கிரகம் கிடையாது. பீடம் மட்டும் தான் இருக்கும் அதற்கு தான் தினசரி பூஜை நடைபெறுகிறது. விழா காலங்களில் பீடத்தின் மேல் ஒரு கும்பமும் தேங்காயும் வைத்து, அதை அம்மன் போல் அலங்கரித்து பூஜை செய்வார்கள். இவ்வாலயத்தில் நடைபெறும் திருவிழாவின்போது, அச்சமயத்தில் உருவாக்கப்படும் அம்மன் சிலை, தன் கண்களை ஒரு வாரத்தில் திறக்கும் என்பது ஐதீகம். கோட்டை அம்மனை இச்சமயத்தில் வழிபடுவது அதிஷ்டம். இத்தருணத்தில் நாம் செய்யும் வேண்டுதலின் வலிமை அதிகம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பிரார்த்தனை

இந்த அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள்.நம் வேண்டுதலுடன் தொடர்புடைய பொருட்களை, வெள்ளியில் செய்த வடிவமாக, கோவிலில் வைத்தால் நம் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். குறிப்பாக பணியில் உயர் பதவி கிடைக்க, கோட்டை அம்மன் உதவுவாள். உதாரணத்திற்கு குழந்தை வரம் வேண்டுபவர்கள், குழந்தை வடிவத்தை வைப்பர். வீடு வாங்க விரும்புவோர், வீட்டின் வடிவத்தை வைப்பர். உடல் நல குறைவு ஏற்பட்டால் குணமடைய வேண்டிய உடல் உறுப்பு பகுதிகளின் உருவத்தை வைக்கலாம். இவ்வுருவங்கள் இக்கோவிலின் வாசலிலேயே கிடைக்கும்.

ஆடி மாதத்தின் இரண்டாவது செவ்வாய்க்கிழமை, கோட்டை அம்மனுக்கு மிகவும் விசேஷமாகும். எனவே இந்த நாளில் கோட்டை அம்மனை நாம் வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும் என்பது ஐதீகம்.

Read More
தர்மபுரி  கல்யாண காமாட்சி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

தர்மபுரி கல்யாண காமாட்சி கோவில்

ஸ்ரீசக்கரத்தின் மீதே சன்னதி எழுப்பப்பட்ட தனிச்சிறப்புடைய கல்யாண காமாட்சி

தர்மபுரியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் முதன்மையான இடத்தை பெறுகிறது கல்யாண காமாட்சி கோவில். இந்த கோவில், கோட்டை கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இறைவன் திருநாமம் மல்லிகார்ஜுனேஸ்வரர். இறைவியின் திருநாமம் கல்யாண காமாட்சி. 1300 ஆண்டுகள் பழமையான இக்கோவில், ஒரு தேவார வைப்பு தலமாகும் .

கருவறையில் சுயம்பு மூர்த்தியாக இறைவன் மல்லிகார்ஜுனேஸ்வரர் 36 பட்டிகள் உள்ள சதுர வடிவமான ஆவுடையாரில் எழுந்தருளி இருக்கிறார். இது சிவாகமத்தின் 36 தத்துவங்களை குறிக்கிறது.

அம்பாளின் சன்னதி ஈசனின் சன்னதியை விட உயரமாக உள்ளதால், 18 படிகள் ஏறித்தான் அன்னையை தரிசிக்கவேண்டும். இங்கு அம்பாள் கல்யாண காமாட்சி, சிவசக்தி ஐக்கிய சொரூபமாக , பிரம்மா விஷ்ணு ருத்ரன் மகேஸ்வரன் நான்கு கால்களாக, சதாசிவர் மேற்பலகையாக இருக்கும் பஞ்ச பிரம்ம ஆசனத்தில் கம்பீரமாக நின்றுகொண்டு, நான்கு கரங்களோடு, அபய வரத ஹஸ்த கோலத்தில் அருள் புரிகிறாள். மாங்காட்டில் தபசு காமாட்சியாகவும் , காஞ்சிபுரத்தில் யோக காமாட்சியாகவும் , இத் தகடூரில்( தர்மபுரி) ஐக்கிய காமாட்சியாகவும் காட்சி தருகிறாள்.

பதினெட்டு கல்யாண குணங்களை நாம் கடைபிடித்தால்தான் கல்யாண காமாட்சியின் அருளும் அனுக்கிரகமும் நமக்கு கிடைக்கும் என்பதை இந்த 18 படிகள் உணர்த்துகின்றன. இந்த 18 படிகளையும் மலர்களால் அலங்காரம் செய்து மஞ்சள் குங்குமமும் இட்டு புடவைச்சாத்தி பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

பொதுவாக அம்மன் கோவில்களில், ஸ்ரீசக்கரமானது அம்மன் சிலைக்கு முன்பாகவோ அல்லது அம்மன் சிலைக்கு அடியிலோ பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஆனால் இங்குள்ள அம்மன் சன்னிதியோ, ஸ்ரீசக்கரத்தின் மீதே எழுப்பப்பட்டுள்ளது. இது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இந்த ஸ்ரீசக்கரத்தின் 18 முனைகளின் அடிப்பாகத்தில், சிற்பவடிவில் 18 யானைகள், தங்களின் தலையின் மேல் அம்பாளின் சன்னதியை தாங்கிக் கொண்டு இருக்கின்றன.

அமாவாசையன்று பெண்கள் மட்டுமே நடத்தும் திருப்படி பூஜை

ஒவ்வொரு அமாவாசை தினங்களிலும், பெண்கள்தான் பதினெட்டுத் திருப்படிகளிலும் திருப்படி பூஜை செய்கிறார்கள். அதுமட்டும் இல்லாது அம்மனின் உற்சவ திருமேனியை சுமந்து, திருப்பாதம்தாங்கிகளாக, திருக்குடை ஏந்தியவர்களாக கோவிலினுள்ளே வலம் வருவதும் பெண்கள்தான். இது எந்த கோவிலிலும் நடைமுறையில் இல்லாத தனிச்சிறப்பாகும். இக்கோவிலில் அம்பிகைக்கு முதலிடம் கொடுப்பதாலும், ஆலய அமைப்பு தாய்மையின் பெருமையை உணர்த்துவதாலும், ( தாய்மண், தாய்மொழி என்று கூறுவது போல) தாய்க்கோவில், மாத்ரு மந்திர் என்று போற்றப்படுகிறது.

பிரார்த்தனை

இந்த அம்பிகை, கல்யாண காமாட்சி என்று போற்றப்படுவதற்கான சிறப்பு என்னவென்றால், ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, திருமண வரம் வேண்டுவோர், ஐந்து அஷ்டமி தினங்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால், திருமண பாக்கியம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.

இக்கோவிலில், திருமணத் தடை அகல்வதற்காக ஆண்கள் மற்றும் பெண்களுக்குத் தேய்பிறை அஷ்டமியில் காலை 10 முதல் மதியம் 2.30 மணி வரை கல்யாண மாலை பூஜை செய்து, கால பைரவர் சந்நிதியில் கந்தர்வ ராஜ கல்யாண மாலை தருகிறார்கள்.

Read More
புட்லூர் அங்காள பரமேஸ்வரி  கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

புட்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில்

புற்று வடிவில், நிறைமாதக் கர்ப்பிணி போல் காட்சி தரும் மாரியம்மன்

சென்னையில் இருந்து 38 கி.மீ. தொலைவில், திருவள்ளூர் அருகே அமைந்துள்ளது புட்லூர் புற்று மாரியம்மன் ஆலயமான, அங்காள பரமேஸ்வரி கோவில். மேல்மலையனூரில் அங்காளபரமேஸ்வரி முதல் சக்தி பீடத்தில் அமர்ந்து புற்று ரூபத்தில் பல இடங்களில் கோயில் கொண்டருளி அருள் பாலித்து வருகின்றாள். இங்கே புட்லூரில், பூங்காவனத்தம்மன் என்ற பெயரில் அருள் பாலிக்கின்றாள்.

பொதுவாக அம்மனை நாம் நின்ற திருக்கோலத்திலோ அல்லது அமர்ந்த திருக்கோலத்திலோ தரிசிப்பது வழக்கம். ஆனால் இத்தலத்தில் புற்று வடிவில் எழுந்தருளி இருக்கும் பூங்காவனத்தம்மன், ஓர் கர்ப்பிணிப் பெண் போல, மல்லாந்து காலை நீட்டி படுத்த நிலையில், வயிறு நிறைமாதக் கர்ப்பிணி போல் இருக்க, வாய் பிளந்தபடி அருட்காட்சி தருகிறாள். இந்த சுயம்பு புற்று முழுவதும் மஞ்சளாலும் குங்குமத்தாலும் அலங்கரிக்கப்பட்டு காட்சி தருகின்றாள். இந்த மண்புற்று மாதாவுக்கு அப்பால், அங்காள பரமேஸ்வரி சூலம் தாங்கி கருவறையில் எலுமிச்சை மாலைகள் தாங்கி அருள் பாலிக்கின்றாள்.

பிரார்த்தனை

பொதுவாக, இக்கோவிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், அம்மனைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிலும் அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், தினமும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர்.

திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கோயிலில் நீராடி விட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிரகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வதன் மூலம், அவர்களுடைய பிரார்த்தனை நிறைவேறும்.

அம்மன் அருளால் கர்ப்பம் தரிக்கும் பெண்கள் தங்களுக்கு சீமந்தம் நடப்பதற்கு முன் அம்மனுக்கு முதலில் சீமந்த வழிபாடு நடத்துகின்றனர். ஐந்து, ஏழு, ஒன்பது மாதங்களில் இந்த சீமந்தவழிபாடு நடத்தப்படுகின்றது. இந்த வழிபாட்டில் வளையல், பூச்சூட்டி சடை முடித்து ஏழுவிதமான கலவை சாதங்கள் செய்து அம்மனுக்கு படையல் இடுகின்றனர்.

Read More