பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவில்

தமிழக சாமுண்டீஸ்வரி அம்மன்

நீடாமங்கலம்- மன்னார்குடி சாலையில் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவில். இக்கோவிலில் ராஜராஜேஸ்வரி, கற்பகவல்லி என்று இரண்டு அம்பிகைகள் அருள்பாலிக்கிறார்கள். இத்தலத்தில் சிவபெருமான், ராஜராஜேஸ்வரி அம்பிகையை சதுரங்க ஆட்டத்தில் வென்று மணம் புரிந்தார். அதனால் இத்தல இறைவனுக்கு சதுரங்க வல்லபர் என பெயர். சதுரங்கத்தில் 64 சதுர கட்டங்களானது இறைவனின் 64 வடிவங்களையும், 64 நாட்டிய நிலைகளையும் குறிக்கின்றது என்பதனை அம்பிகை மூலம் இறைவன் உணர்த்தி உள்ளார்.

மைசூர் நந்திமலையில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு தனிக் கோவில் உள்ளது. இத்தலத்திலும் சாமுண்டீஸ்வரி அம்மன் தனிச் சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் போல் இந்த அம்மனும் வடக்கு நோக்கி எழுந்தருளி இருக்கின்றாள். இவள் தமிழக சாமுண்டீஸ்வரி அம்மன் என்று போற்றப்படுகின்றாள்.இந்த அம்மன் விசேஷமான சக்தி உடையவள். சாமுண்டேஸ்வரி அம்மனிடம் பெண்கள் பிரார்த்தனை சீட்டு கட்டி வேண்டிக் கொள்கிறார்கள். அந்த பிரார்த்தனையானது 90 நாட்களில் நிறைவேறும் என்பது நம்பிக்கை. கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, திருமண தடை, குழந்தை பாக்கியம் ஆகியவற்றுக்கும் இந்த அம்மனை வழிபடுகிறார்கள்.

எலிக் கடியினாலும், பிற விஷக் கடியினால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். இத்தலத்தில்தான் அகஸ்தியர் போகருக்கு விஷக்கடி நிவர்த்திக்கான மூலிகை வைத்திய முறைகளை போதித்துள்ளார். அனைத்து சித்த வைத்தியர்களும் அகஸ்தியருக்கு பூஜை செய்து வழிபட வேண்டிய தலம் இது. ஞாயிற்றுக்கிழமை தோறும் விஷக்கடி நிவர்த்தி செய்ய, அகத்தியர் பிரானின் ஆசியோடு, சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதி முன் மூலிகை வேர் ரட்சை கட்டப் பெறுகின்றது. இங்குள்ள தீர்த்தங்களில் கோயிலின் பின்புறம் உள்ள 'கிருஷ்ண குஷ்டஹரம்' தீர்த்தம், கருங்குஷ்டம் போக்கும் தன்மையுடையது.

சர்க்கரை பாவாடை விழா

ஆடி மாதத்தில் அம்மனுக்கு சர்க்கரை பாவாடை போடப்பட்டு நிவேதனம் செய்ப்படுகிறது அப்போது அம்மனின் முகம் அந்த சர்க்கரை பாவாடையில் தெரியும்போது தீபாராதனை நடக்கிறது. அவ்விழாவின் போது சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசிக்க பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

 
Previous
Previous

கொடுமுடி மகுடேசுவரர் கோவில்

Next
Next

முறப்பநாடு கைலாசநாதர் கோவில்