
சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில்
முப்பெரும் தேவியராக காட்சி தரும் பகவதி அம்மன்
கேரள மாநிலம், எர்ணாகுளம் என்ற இடத்திலிருந்து 16 கி.மீ.தொலைவில் இருக்கிறது புகழ்பெற்ற சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில். பகவதி அம்மனின் வலது புறம் உள்ள மகாவிஷ்ணுவை, 'அம்பே நாராயணா..தேவி நாராயணா..லஷ்மி நாராயாணா..பத்ரி நாராயணா' என அழைத்து வழிபடுவது இந்த கோவிலின் சிறப்பாகும்.
சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் துர்க்கா தேவியாகவும், மாலையில் நீல நிற ஆடையில் லட்சுமி தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.
இந்த ஆலயத்தில் அம்பாள் ‘பந்தீரடி’ எனப்படும் காலை பூஜையின் போது மிகுந்த சக்தியுடன் திகழ்கிறாள். இந்தப் பூஜை முடிந்தே, பகவதி அம்மன் மூகாம்பிகையாகக் கொல்லூர் செல்வதாக ஐதீகம். அதனாலேயே மூகாம்பிகை கோவில் நடை திறக்கும் முன்னரே, பகவதி அம்மன் கோவிலின் நடை திறக்கப்பட்டுவிடும். முதலில் பகவதி அம்மன் கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் அம்மன், பின்னர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வதாக ஐதீகம். இந்த காலை பூஜையின் போதே கெட்ட ஆவிகள் பிடித்தவர்கள், மனநோய் பிடித்தவர்கள் அன்னையின் அருளால் குணமடைகிறார்கள். இந்த ஆலயத்தில் நெய் பாயாசம் நைவேத்தியம் பெருமை பெற்றது.
திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய, நல்ல கணவர் கிடைக்க, குழந்தை வரம் கிடைக்க பகவதி அம்மனை தேடி பல பக்தர்கள் குறிப்பாக பெண்கள் அதிகம் இந்த கோவிலுக்கு வருகின்றனர்.
மாசி மாதத்தில் நடைபெறும் ஆராட்டுவிழாவும், நவராத்திரி விழாவும் இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில்
மாசி அமாவாசை மயானக் கொள்ளை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து வடக்கு திசையில் 20 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில். அங்காள பரமேஸ்வரிக்கு பல ஆலயங்கள் உள்ளன என்றாலும், அவளுக்கு மேல்மலையனூர் ஆலயமே முக்கியமான ஆலயம். இக்கோவிலில் மாசி மாத அமாவாசையன்று நடைபெறும் மயானக் கொள்ளை பிரசித்தி பெற்றது. மயானக் கொள்ளை விழா நடக்கும்போது, பக்தர்கள் அங்கு பலதரப்பட்ட தானியங்களைக் கொண்டு வந்து உணவு சமைத்து அதை அங்காள பரமேஸ்வரிக்கு அர்பணிக்கின்றார்கள். அங்கு மயானத்தில் அவளை ஆராதிக்கின்றார்கள்.
மயானக் கொள்ளை விழா உருவான பின்னணி வரலாறு
பிரம்மன் தனக்கு ஐந்து தலை உள்ளது என்ற காரணத்தால் அகந்தை கொண்டான். எனவே பிரம்மனின் ஒரு தலையை காலபைரவர் மூலம் கொய்து வரச் சொன்னார் சிவபெருமான். ஆனால் ஒரு தலையைக் கிள்ளியவுடன் மற்றொரு தலை அங்கே தோன்றியது. சிவபெருமானே தலையைக் கொய்யச் சென்றார். ஆனால், ஒவ்வொன்றாகக் கிள்ள, அது முளைத்துக்கொண்டே இருந்தது. விஷ்ணுவின் ஆலோசனைப்படி 1000வது தலையைக் கிள்ளியவுடன் கீழே போடாமல் வைத்துக்கொண்டார். ஆனால் நெடுநேரமாகியும் கீழே போடாததால் அந்த பிரம்மனின் கபாலம் கையிலேயே ஒட்டிக்கொண்டது. சரஸ்வதி தேவியின் சாபத்தால் சிவன் பிச்சாடண வடிவம் கொண்டு அலைந்தார். ஊர் ஊராகப் பித்தனைப் போல் பிச்சை எடுத்துத் திரியலானார். ஆனால் அவ்வாறு எடுக்கும் பிச்சையையும் பிரம்ம கபாலம் விழுங்கிவிடும்.
பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்வதற்குக் காரணமாக இருந்த பரமேஸ்வரியை "நீ கந்தலாடையுடன் ராட்சஸ உருவுடன் அலைவாய்' என சாபமிட்டாள் சரஸ்வதி. அதன்படி பரமேஸ்வரி,பல இடங்களில் அலைந்து திரிந்து, இறுதியில் மேல்மலையனூரில், மயான பூமியிலே ஒரு புற்றினுள்ளே பாம்புருவில் வாழ்ந்து வந்தாள்.வந்து அமர்ந்தாள் . மகாவிஷ்ணுவின் ஆலோசனைப்படி, உமையவள் புற்றிலிருந்து வெளியேறி பெண்ணுறு கொண்டு சிவபெருமானுக்கு உணவு சமைத்தாள். பிச்சை எடுக்க ஈசன் வந்ததும் அன்னபூரணியான அன்னை அவள் சமைத்த உணவை மூன்று கவளங்கலாக்கி கபாலத்தில் இடத் துவங்கினாள். முதல் கவளம் இட்டதும் கபாலம் உண்டது. இரண்டாவது கவளம் இட்டதும் கபாலமே உண்டது. உணவின் ருசியில் மயங்கியது. மூன்றாவது கவளத்தை அன்னை கபாலத்தில் இடாமல் சூறையாக வீசினாள். அதை உண்ண கபாலம் கீழே இறங்கியது. ஆவேச வடிவம் கொண்டு அன்னை கீழே இறங்கிய கபாலத்தை காலில் மிதுத்து சுக்கு நூறாக்கினாள். அப்போதே சிவனைப் பிடித்திருந்த பிரும்மஹத்தி தோஷம் நீங்கியது.
ஈஸ்வரி மூன்றாம் கவளத்தை இறைத்து பிரும்ம கபாலத்தை பூமிக்குள் அழுத்திய நாள் மாசி அமாவாசை. அந்நாளே மயானக் கொள்ளையாகக் கொண்டாடப்படுகிறது. மாசி மாத சிவ ராத்திரிக்கு மறுநாள் அமாவாசை தினத்தன்று அங்காளி தனது முழு பூரண பலத்தோடும் வலுவோடும் இருப்பாள். அனைத்துக்கும் மூலாதார சக்தியாக விளங்கும் அங்காளி அன்று சுடுகாட்டில் ஆவிகள், ஆன்மாக்கள் அனைத்துக்கும் உணவை சூரை இடும் நாளே 'மயானக் கொள்ளை'. அவ்வாறு சூரையிட்ட அங்காளியை, விஷ்ணு பூமிக்குள் தள்ளிவிட்டதாகவும், பின்னர் பூமிக்கு மேல் சுயம்புவாக புற்று உருவாக அங்காளி தோன்றினாள் எனவும், மீண்டும் சிவனின் அங்கத்தில் ஆட்கொண்ட பரமேஸ்வரியை அங்காளம்மன் என அழைத்ததாகவும் வரலாறு. அம்பிகையும் ஆவேசம் தனிந்து நான்கு திருக்கரத்துடன் சூலம், கத்தி, உடுக்கை, கபாலத்துடன் எழுந்து அமர்ந்தாள்.அங்கேயே அங்காள பரமேஸ்வரி என்ற திருநாமம் கொண்டு காட்சி கொடுத்தாள். அதுவே மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசையன்று அனைத்து அங்காளம்மன் கோயிலிலும் மயான கொள்ளையானது நடைபெறுகிறது. அம்பிகை பிரம்ம கபாலத்திற்காக சூரையிட்ட மாசி அமாவாசையன்று மயானத்தில் இன்றும் சூரையிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.அன்னை அனைத்து பேய், பிசாசுகளுக்கும் அன்று உணவை சூரையிடுகிறாள் என்பது ஐதீகம். அதை உண்டு அவற்றால் தன் மக்களுக்கு எவ்வித தீங்கும் வரக்கூடாது என்பதற்காக சூரை இடப்படுகிறது.
பிரார்த்தனை
கணவனை பிரிந்திருப்பவர்கள் மற்றும் கணவனின் தொந்தரவுக்கு ஆளாகி இருப்பவர்கள் இங்கு வந்து அங்காளபரமேஸ்வரியை வழிபட்டால் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை.

வளையாத்தூர் வளவநாதீஸ்வரர் கோவில்
சிவபெருமானை போல் நெற்றிக்கண் உடைய அம்பாள்
வேலூர்- சென்னை நெடுஞ்சாலையில் , 24 கி.மீ., தூரத்திலுள்ள ஆற்காடு சென்று, அங்கிருந்து பிரியும் சாலையில் 17 கி.மீ., தொலைவில் உள்ளது வளையாத்தூர். இறைவன் திருநாமம் வளவநாதீஸ்வரர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இறைவன், மக்களின் பிரார்த்தனைகளுக்கேற்ப வளைந்து கொடுத்து அருள் செய்பவர் என்பதால்,, அவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. முற்காலத்தில் இப்பகுதியில்,விவசாயம் செழித்து மக்கள் வளத்துடன் வாழ்ந்ததால் அவருக்கு 'வளவநாதீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர்.
கோவிலில் நுழைந்ததும் நாம், நின்ற நிலையில், நான்கு கைகளுடன் எழுந்தருளியிருக்கும் பெரியநாயகி அம்பாளை, தரிசிக்கலாம். இந்த அம்பாளின் நெற்றியில் சிவனுக்கு உள்ளதுபோல் நெற்றிக்கண் உள்ளது.சிவபெருமான் சூரியன், சந்திரன், அக்னி என மூவரையும் கண்களாகக் கொண்டவர். சிவனின் சக்தி வடிவமே அம்பிகை என்பதால், அவளும் முக்கண் உடையவள் ஆகிறாள். இதை உணர்த்தும் விதமாக அம்பிகை, இக்கோயிலில் நெற்றிக்கண்ணுடன் காட்சியளிக்கிறாள். சிவராத்திரியன்று இரவில் இவளுக்கு பூஜையும் உண்டு. இவளது நான்கு கைகளிலுள்ள சுண்டு விரல்களிலும் மோதிரம் அணிந்திருப்பது மேலும் ஒரு தனிச்சிறப்பாகும். இந்த அம்பாள் மாங்கல்ய வரபிரசாதியாகத் திகழ்கின்றாள். இந்த அம்பாளை வேண்டிக்கொண்டால் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அம்பாளுக்கு சிவராத்திரியன்று சிறப்பு பூஜை
பெரியநாயகி அம்பாள் நெற்றிக்கண்ணுடன் இருப்பதால், இவளை சிவபெருமானாகவே கருதி, சிவராத்திரியன்று இரவில் பூஜை செய்கிறார்கள். இது வேறு எந்த தலத்திலும் பின்பற்றாத நடைமுறையாகும்.
கிரக தோஷ நிவர்த்தி தலம்
வளவநாதீஸ்வரர் சதுர வடிவ பீடத்தில், இடப்புறமாக சற்றே வளைந்த நிலையில், நவாம்ச மூர்த்தியாகக் காட்சி தருவதாக ஐதீகம். இந்த ஒன்பது நிலைகளும் நவக்கிரகங்களைக் குறிப்பதாகவும் சொல்வர். இதனால், எந்த கிரகத்தால் ஏற்பட்ட தோஷத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள், தோஷ நிவர்த்திக்காக இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.
இத்தலத்தில் முருகன் கையில் சிவனுக்குரிய சின்முத்திரை காட்டியபடி இருப்பது விசேஷமான அமைப்பு. மேலும், இங்குள்ள சப்தகன்னியரின் பீடத்தில் அவர்களுக்குரிய வாகனங்கள் வடிக்கப்பட்டுள்ளதுமேலும் ஒரு தனிச் சிறப்பாகும்.

பெரியபாளையம் பவானி அம்மன் கோவில்
மாங்கல்ய பலம் அருளும் பவானி அம்மன்
சென்னையில் இருந்து செங்குன்றம், ஊத்துக்கோட்டை வழியாக திருப்பதி செல்லும் நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து இருந்து சுமார் 45 கி. மீ. தொலைவில் பெரியபாளையம் உள்ளது. பெரியபாளையம் என்றால் பெரிய படை வீடு என்று பொருள். பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்மன் சக்தி வாய்ந்தவராக திகழ்கிறார்.மூலஸ்தானத்தில், பவானி அம்மன், மேலிரண்டு கைகளில் சங்கு, சக்கரங்கள் தரித்தும், கீழிரண்டு கைகளில் வாள் மற்றும் அமிர்த கலசத்துடனும் காட்சியளிக்கிறார். இக்கோவிலில் குங்குமம் மற்றும் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மனித உடலில் பல நோய்களை குணப்படுத்தக்கூடியது.
பவானி அம்மனை கிருஷ்ண பரமாத்மாவின் தங்கையாக பாவிக்கிறார்கள். துவாபர யுகத்தில், குழந்தை வடிவிலிருந்த அம்மன், தன்னை கொல்ல முயன்ற கம்சனின் (அசுரக்குல அரசன்) கோரப்பிடியிலிருந்து தப்பிக்கும் போது, அவனுக்கு தனது தமையனான கிருஷ்ண பரமாத்மாவால் ஏற்படப் போகும் துர்மரணம் பற்றி முன் கூட்டியே எச்சரித்தப் பிறகு, ஸ்ரீபவானி என்ற பெயரில், இத்தலத்தில் குடியேற முடிவு செய்தார்.
ஆலய வரலாறு
முற்காலத்தில் ஆந்திரப்பகுதியில் இருந்த வளையல் வியாபாரிகள் பலரும் இங்கு வந்து வியாபாரம் செய்து வந்தனர். ஒரு முறை வளையல் வியாபாரி ஒருவர் தன்னுடைய வியாபாரத்தை முடித்துக் கொண்டு ஆந்திராவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால், பெரியபாளையத்தில் ஒரு வேப்பமரத்தடியில் அவர் ஓய்வெடுத்தார். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது, அவருடைய வளையல் மூட்டையைக் காணவில்லை. சுற்றும் முற்றும் தேடியபோது ஒரு புற்றுக்குள் வளையல் மூட்டை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் பயத்துடன் ஊருக்குத் திரும்பினார். அன்று இரவு வளையல் வியாபாரியின் கனவில் தோன்றிய அம்மன், 'நான் ரேணுகாதேவி. பெரியபாளையத்தில் பவானி அம்மனாக அமர்ந்திருக்கிறேன். அங்குள்ள புற்றில் நான் சுயம்புவாக இருக்கிறேன். எனக்கு கோவில் அமைத்து வழிபட்டு வா' என்று கூறி மறைந்தார்.
மறுநாள் பெரியபாளையம் வந்த வளையல் வியாபாரி, கடப்பாரையால் புற்றை உடைத்தார். அப்போது சுயம்பு அம்மனின் மீது கடப்பாரை பட்டு ரத்தம் பீறிட்டது. இதனைக் கண்டு பயந்த வளையல் வியாபாரி, தன்னிடம் இருந்த மஞ்சளை எடுத்து ரத்தம் வந்த இடத்தில் வைத்து தேய்த்தார். உடனே ரத்தம் நின்று போனது. இதையடுத்து புற்றை முழுமையாக நீக்கி விட்டு, அம்மனுக்கு அலங்காரம் செய்து தினமும் வழிபட்டு வந்தார். பிற்காலத்தில் அம்மனுக்கு கோவில் அமைக்கப்பட்டது. சுயம்புவாக உள்ள அம்மனுக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டிருக்கும். கவசத்தை நீக்கும் போது, சுயம்பு அம்மனின் மீது கடப்பாரை பட்ட தழும்பு இருப்பதைக் காண முடியும்.
பிரார்த்தனை
வார இறுதி நாட்கள், ஆடி மற்றும் ஆவணி மாதங்களில், பக்தர்கள் ஆயிரக்கணக்கில் அம்மனை தரிசிக்க வருகிறார்கள். உடல் நலம் பெறவும், நீண்ட ஆயுளை ஆரோக்கியத்துடன் அடையவும், பெரிய பாளையத்து அம்மனை நினைத்தப்படி வருபவர்கள் அதிகம். இத்தல அன்னையிடம் மாங்கல்ய பலம் வேண்டி வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகமானது. பெண்கள், கணவன் நோய்வாய்பட்டிருந்தால், தங்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்க அம்மனை வேண்டி கொள்கிறார்கள். பக்தர்கள் மொட்டை அடித்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும், வேப்பிலையை ஆடையாக அணிந்தும், பொங்கல் படைத்தும் மற்றும் கரகம் எடுத்தும் என பல வழிகளில் அம்மனுக்கு தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துகிறார்கள்.

மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயில்
குடிசையில் வீற்றிருந்து சகல வளங்களையும் அள்ளித்தரும் அம்மன்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வடக்கே, அரை கிலோ மீட்டர் தொலைவில், மிகவும் தொன்மை வாய்ந்த முண்டகக்கண்ணி அம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு நாளும் ஏராளமான பக்தர்கள் வழிபடும் மகிமை வாய்ந்த புண்ணிய திருத்தலம் இதுவாகும். அனைத்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோயில், திருவிழாக் கோலம் பூண்டு விடும்.
சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் இருக்கும் இடத்தில் ஒரு குளம் இருந்துள்ளது. அந்த குளக்கரையில் பல நூறு ஆண்டு வயதுடைய மிகப் பெரிய ஆலமரம் இருந்தது. ஒரு நாள் அந்த ஆலமரத்தடியில் அப்பகுதி மக்கள் அமர்ந்து இருந்தபோது, அம்மன் தன்னை சுயம்புவாக வெளிப்படுத்தி காட்சி தந்தாள் என்கிறது இத்தலத்தின் வரலாறு. மேலும் தாமரை மொட்டு வடிவத்திலேயே, தன்னை அம்மன் சுயம்புவாக வெளிப்படுத்திக் கொண்டதாக இக்கோவில் புராணம் கூறுகிறது. முண்டகம் என்றால் தாமரை என்றும் பொருள் உண்டு. அம்மன் விரிந்த பெரிய விழிகளைக் கொண்டவள் என்ற பொருளில் 'முண்டகக் கண்ணியம்மன்' என்கின்றனர். அம்பிகை, தாமரை போன்ற கண்ணுடையாள் என்றும் கொண்டாடுகின்றனர்.
முண்டகக்கண்ணி அம்மன். வேறு எந்த தலத்திலும் இல்லாதபடி,எளிமைக்கு இலக்கணமாக ஓலைக் குடிசையில் எழுந்தருளியிருக்கிறாள். இக்கோவிலுக்கு ராஜகோபுரம் இருந்தாலும், அன்னை வீற்றிருக்கும் கருவறையை அலங்கரிப்பதோ எளிமையான தென்னங்கீற்றால் வேயப்பட்ட கொட்டகைதான். தங்களுக்கு கேட்ட வரம் கொடுத்து அருள் பாலிக்கும் அன்னைக்கு, கருவறை கட்டிடம் கட்ட அவளின் பக்தர்கள் முயன்றபோது, அதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டதாகவும், தனக்கு தென்னங்கீற்றால் அமைந்த கூரை மட்டுமே விருப்பம் என பக்தர்களின் கனவில் அம்பாள் சொன்னதாகவும் கூறப்படுகிறது. மேலும் தல வரலாறும் தனது மக்களை வெம்மையில் இருந்து காக்கவே, அன்னை இவ்வாறு குடிகொண்டிருப்பதாக தெரிவிக்கிறது. சுயம்புவாக அம்மன் தலையில் நாக கிரீடம் அணிந்து கொண்டு நடுவில் சூல வடிவம் கொண்டு இரண்டு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றாள். இடதுபுறமாக உற்சவர் சிம்ம வாகனத்தில் கம்பீரமாக காட்சி தருகின்றாள். முண்டகக்கண்ணி அம்மனை கருவறை என்பதும் குளிர்ச்சியாகவே வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் அடிக்கடி நீர் ஊற்றி ஈரமாகவே வைத்துள்ளனர். வெள்ளி கவசம் சாத்திய பெரிய சந்திரபிரபை கீழ் சுயம்பு அம்மன் ஆனந்தமாய் விற்றிருக்கிறாள்.
கருவறையின் பின்புறம் தல மரமான, ஆலம் விழுதுகள் இல்லாத, அபூர்வ மரமான கல்லால மரமும், புற்றுடன் மூன்றடி உயர கல் நாகமும் அமைந்துள்ளன. பின்புறம் உள்ள புற்றில் வாழும் நாகம், நாள்தோறும் இரவில் அன்னையை வணங்கி வழிபட்டு செல்கிறாள் என்பது ஐதீகம். இதனால் இத்தலத்தை ராகு கேது பரிகார தலம் என்று சொல்வார்கள் .
பிரார்த்தனைகள்
இக்கோவிலில் அம்பாளுக்கு பூஜித்த வேப்பிலை, மஞ்சள், எலுமிச்சை மற்றும் தீர்த்தமே பிரதான பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. அம்மை நோய், தீராப்பிணி, திருமணத்தடை, கல்வி, மகப்பேறு, வீடு வாகன வசதிகள் என வேண்டுவோர் வேண்டியதை வேண்டியவாறுக் கொடுக்கும் கற்பகத்தரு முண்டகக்கண்ணி அம்மன். ராகு – கேது தோஷம் உள்ளவர்கள் இந்த அம்மனை வழிபட, அவற்றிலிருந்து முழுமையாக விடுபடலாம். நாகதோஷம் இருப்பவர்கள், முண்டகக்கண்ணி அம்மனை வழிபட்டு, நாககன்னி சிலையை பிரதிஷ்டை செய்வதாக வேண்டிக்கொள்கிறார்கள். அதன்பிறகு, 48 நாள்களுக்கு நீரிலேயே நாககன்னியை வைத்திருந்து, பின் அதனை ஆலயத்தின் முகப்பில் இருக்கும் மரத்தடியில் பிரதிஷ்டை செய்து, அதற்கு அபிஷேகமும் செய்து வழிபடுகிறார்கள். கண் தொடர்பான நோய்கள் தீர முண்டகக்கண்ணியை வழிபட விரைவில் தீரும்.

தாயமங்கலம் முத்துமாரியம்மன கோவில்
தாலி பாக்கியம் தந்தருளும் தாயமங்கலம் முத்துமாரியம்மன்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே இருக்கிறது தாயமங்கலம் முத்துமாரியம்மன கோயில். இந்தப் பகுதியிலிருக்கும் 22 கிராம மக்களுக்கும், தாயாகவும், மாங்கல்ய பாக்கியம் தந்து மங்கல வரம் அருளும் நாயகியாகவும் திகழ்கின்றாள் முத்துமாரியம்மன. இந்த ஊர் 'தாய்மங்கலம்' என்றே அழைக்கப்பட்டு, காலப்போக்கில் தாயமங்கலம் என மருவியது. இங்குள்ள தெய்வம் கன்னித்தெய்வமாக இருப்பதால், திருமண வரம் வேண்டுபவர்கள், தாலிப்பொட்டினை அம்மன் காலடியில் சமர்ப்பித்து, வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தக் கோயிலில் அம்பாள் நின்ற கோலத்தில், நான்கு கரங்களுடன் கேட்கும் வரங்களை வழங்கும் கற்பக விருட்சமாகத் திகழ்கின்றார்.
தல வரலாறு
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், முத்து செட்டியார் என்ற ஒரு வியாபாரி சிவகங்கையில் வசித்து இருந்தார். அவர் மதுரை மீனாட்சியம்மன் மீது மாறாத பக்திகொண்டவர். அவருக்கு நெடுநாள்களாகவே குழந்தை இல்லை. ஒவ்வொரு முறையும் மதுரைக்கு வியாபார நிமித்தமாக செல்லும் அவர், தவறாமல் மீனாட்சியம்மையையும், சொக்கநாதரையும் வழிபட்டு, குழந்தை வரம் வேண்டுவார்.
அப்படி ஒருமுறை, அவர் மதுரையிலிருந்து தனது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவர் வந்த வழியில், சிறுமியான ஒரு பெண்குழந்தை பாதை தெரியாமல் அழுதுகொண்டிருந்தது. இதைப் பார்த்த அவருக்கோ மனம் மிகவும் வேதனைப்பட்டது. சிறுமியிடம் ''உன்னுடைய பெயர் என்னம்மா? ஏன் எவரும் இல்லாத இந்தக் காட்டு வழியில் அழுது கொண்டிருக்கிறாய்'' என விசாரித்தார். தனது பெயர் முத்துமாரி என்றும், தனது தாய் தந்தையிடமிருந்து பிரிந்துவிட்டேன் என்றும் எங்கு போவதென வழிதெரியவில்லை என்றும் கூறி தேம்பினாள். ''கவலைப்படாதே அம்மா! உன்னை நான் பத்திரமாகப் பார்த்துக்கொள்கின்றேன்,' எனக்கூறி அந்தச் சிறுமியை தன்னுடன் அழைத்துப்போனார். மதுரை மீனாட்சியே இந்தக் குழந்தையை தனக்குத் தந்ததாக எண்ணினார்.
அவர்கள் சென்ற வழியில் ஆறு ஒன்று குறுக்கிட்டது. பயணக்களைப்பாக இருந்ததால், சிறுமியை கரையில் உட்கார வைத்துவிட்டு ஆற்றில் இறங்கி குளிக்கப் போனார். ஆனால், குளித்து முடித்துவிட்டு கரைக்கு வந்து பார்த்தால், குழந்தையைக் காணவில்லை. இதனால் ரொம்பவே மனம் வெறுத்துப்போன அந்த வணிகர் தன் மனைவியிடம் நடந்ததையெல்லாம் கூறி வருந்தினார். இரவு உணவைகூட சாப்பிடாமல், படுக்கப்போனவர் அப்படியே கண்ணயர்ந்து விட்டார். அவரது கனவில், 'சிறுமியாக வந்தது நான்தான் என்றும் ஊருக்கு அருகாமையிலிருக்கும் கள்ளிக்காட்டில், நான் உறைய இருக்கிறேன் என்றும் கோயில் கட்டி வழிபடுபவர்களுக்கு, வேண்டும் வரங்களை அருளுவேன் என்றும் கூறி மறைந்தாள் முத்துமாரி. படுக்கையில் இருந்து எழுந்த வியாபாரி, தன் மனைவியிடம் எல்லாவற்றையும் கூறினார். மறுநாள் பொழுது விடிந்ததும் முதல் வேலையாக ஆற்று மணலில் அம்மன் சிலையை அமைத்து வழிபடத்தொடங்கினார். இவரைத் தொடர்ந்து ஊர் மக்களும் வழிபட்டனர். நாளடைவில் அந்தப்பகுதி மக்களின் கண்கண்ட தெய்வமானாள் முத்து மாரியம்மன்.
அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், செவ்வாய் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலுக்கு வந்து வணங்கி இங்கிருந்து தீர்த்தம் பெற்றுச்சென்றால் நோய் குணமாகும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இதுதவிர திருமண வரம், குழந்தைபாக்கியம் வேண்டியும் ஏராளமான பக்தர்கள் வருவதையும், பிரார்த்தனை நிறைவேறி நேர்த்திக்கடன் செலுத்துபவர்களையும் இங்கு காணலாம்.

கஞ்சாம் நிமிஷாம்பாள் கோவில்
எதிரி பயம் போக்கும் நிமிஷாம்பாள்
கர்நாடக மாநிலம் மைசூரு அருகிலுள்ள கஞ்சாம் நிமிஷாம்பாள் கோயிலில் ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று விரதமிருந்து வழிபட்டால் பயம் நீங்கும். நிமிஷாம்பாள் 'என்பதற்கு கண நேரத்தில் வரம் அளிப்பவள்' என்பது பொருள். 'கிருஷ்ண சிலா' என்னும் கருப்பு சிலையாக இருக்கும் அம்பாளின் கைகளில் சூலம், உடுக்கை உள்ளது. தர்மத்தை நிலைநாட்டும் விதத்தில் அம்மனின் தலைமீது தர்ம சக்கரம் குடையாக நிற்கிறது.
பயம் போக்கும் நிமிஷாம்பாள் பௌர்ணமி விரதம்
முன்னொரு காலத்தில், முக்தராஜன் என்னும் அம்மன் பக்தன் இப்பகுதியை ஆட்சி செய்தான். ஜானு சுமண்டலன் என்னும் அசுரன் முக்தராஜனைத் துன்புறுத்தினான். அவனை அரசனால் அடக்க முடியவில்லை. தன் இஷ்ட தெய்வமான பராசக்தியை நோக்கி தவத்தில் ஆழ்ந்தான்.
பராசக்தி மன்னனின் கோரிக்கையை ஏற்று, அசுரனை அழிக்கப் புறப்பட்டாள். அசுரனின் முன் நின்று கண்களை இமைத்தாள். நிமிஷ நேரத்தில் அவன் சாம்பல் ஆனான். தனக்கு அருள் செய்த அம்பிகைக்கு கோயில் கட்டி 'நிமிஷாம்பாள்' என பெயரிட்டான்.
கஞ்சாம் நிமிஷாம்பாள் கோயிலில் பவுர்ணமி விரதமிருந்து வழிபட்டால் எதிரி பயம் நீங்கும். திருமணத் தடைகளால் பாதிப்புற்ற பிள்ளையையோ, பெண்ணையோ இந்தக் கோயிலுக்கு அழைத்து வந்து, வேண்டிச் சென்றால் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியம் உண்டாகவும் விரதம் மேற்கொள்கின்றனர். துர்க்கையின் அம்சமாக நிமிஷாம்பாள் இருப்பதால் ராகுகாலம், அஷ்டமியன்று பாலபிஷேகம் செய்கின்றனர்.

சமயபுரம் மாரியம்மன் கோவில்
ஆங்கிலேய படைத்தளபதி சுட்ட தோட்டாக்களைப் பூக்களாக ஏற்றுக் கொண்ட சமயபுரம் மாரியம்மன்
பதினெட்டாம் நூற்றாண்டில், திருச்சி நகரை கைப்பற்றுவதில் பிரஞ்ச் படைகளுக்கும், ஆங்கிலேய படைகளுக்கும் இடையே போர் மூண்டது. ஆங்கிலப் படைகளுக்கு ராபர்ட் கிளைவ் தலைமை ஏற்று நடத்தினார். ராபர்ட் கிளைவ் தலைமையின்கீழ் டால்டன், லாரன்ஸ், ஜின் ஜின் என்ற தளபதிகள் பணியாற்றினர். ஆங்கிலப் படை தாங்கள் கொண்டு வந்திருந்த ஆயுதங்கள், வெடிமருந்துகள், போர் தளவாடங்கள் ஆகியவற்றை சமயபுரத்தில் ஒரு கொட்டகை அமைத்து பாதுகாத்தனர். அதனால் இரவு நேரத்தில், ஊர் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்று தடை உத்தரவு போட்டனர். அப்போது ராபர்ட் கிளைவ் அம்மை நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததால், தளபதி ஜின் ஜின், நள்ளிரவில் ஆயுதக் கிடங்கை பாதுகாக்க சுற்றி வந்து கொண்டு இருந்தான்.
அப்போது மஞ்சள் ஆடை உடுத்தி, ஒரு பெண் இரண்டு கைகளிலும் தீச்சட்டி ஏந்தி நடந்து சென்று கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த ஜின் ஜின் நிற்குமாறு கட்டளையிட்டான். ஆனால், அந்தப் பெண்ணோ நிற்காமல் தொடர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தாள். உடனே அந்தப் பெண்ணை நோக்கி தன் கைத் துப்பாக்கியால் சுட்டான். ஆனால் என்ன ஆச்சரியம் ! அவன் கை துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்ட தோட்டாக்கள் எல்லாம் பூக்களாக மாறி அந்தப் பெண்ணின் தலை மீது விழுந்தது. துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்த ஊர் மக்கள்,'நீங்கள் சுட்டது எங்கள் தெய்வம் சமயபுரம் மாரியம்மனைத்தான். நீங்கள் பெரிய தெய்வ குற்றத்தை இழைத்து விட்டீர்கள்' என்றார்கள்.அதற்கு ஜின் ஜின், ' வந்தது உங்கள் தெய்வம் மாரியம்மன் என்றால் கோவிலுக்குள் இப்போது அந்த தெய்வம் இருக்க முடியாது. வாருங்கள் கோவிலுக்குள் சென்று பார்ப்போம்' என்று ஊர் மக்களை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வந்தான். அப்போது கருவறையில் அம்மனின் உருவத்தைக் காண முடியவில்லை. திடீரென ஒரு பேரொளி கருவறையை நிரப்பியது. அதன்பின்னர் மக்களால் அம்மன் உருவத்தைப் பார்க்க முடிந்தது. மக்கள் அனைவரும் சமயபுரம் மாரியம்மனை விழுந்து வணங்கினார்கள். தளபதி ஜின் ஜினுக்கு உடனே கண் பார்வை பறி போனது. பின்னர் ஊர் மக்களின் அறிவுரையை கேட்டு, ராபர்ட் கிளைவும், ஜின் ஜினும் சமயபுரம் மாரியம்மனிடம் மன்னிப்புக் கேட்டு வணங்கினர். மூன்று நாள் கழித்து தளபதி ஜின் ஜினுக்கு கண்பார்வை மீண்டும் கிடைத்தது. ராபர்ட் கிளைவிற்கு அம்மை நோயும் நீங்கியது.
இந்த நிகழ்விலிருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கோலாப்பூர் மகாலக்ஷ்மி கோவில்
சகல செல்வங்களையும் தந்தருளும் மகாலட்சுமி
கோலாப்பூர் மகாலட்சுமி கோவில், மகாராட்டிர மாநிலத்தில் கோலாப்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. கரவீரபுரம் என்பது இந்த தலத்தின் முந்தைய பெயர். இந்த இடத்தில் மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த கோலாசுரனை, தேவி மகாலட்சுமியாக வந்து அழித்தாள். அவன் இறக்கும் தருவாயில், இந்த இடம் தன் பெயரால் அழைக்கப்பட வேண்டும் என்று விண்ணப்பிக்க அதன்படி கோலாப்பூர் ஆயிற்றாம். லக்ஷ்மி அஷ்டோத்திரத்தில் ‘நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி..’ என்று குறிப்பிடப்படுவது, இத்தருணத்தில் நினைவு கூறத்தக்கது. பாரதத்தில் பற்பல இடங்களில் நிறுவியுள்ள சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த சக்தி பீடம் இந்துக்களுக்கு மிகவும் சிறப்பு பெற்ற ஆறு சக்தி பீடங்களில் ஒன்றாகும்.
இந்த இடத்தின் சிறப்பு, இங்கே ஒருவன் வந்து மகாலட்சுமியை வழிபடுவதால் அவன், அவனுடைய விருப்பங்கள் அனைத்தையும் துறந்து, இறைவனடி அடைந்து முக்தி பெறுவான் அல்லது அவனது அனைத்து விருப்பங்களையும் அன்னை மகாலட்சுமி நிறைவேற்றி வைப்பாள் என்று இந்துக்கள் நம்புவதே ஆகும்.
இக்கோவில் கன்னடத்து சாளுக்கிய மன்னர்களால் சுமார் 1300 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது.
கருவறையில் மகாலட்சுமி, நான்கு கரங்களுடன், மகுடம் தரித்து, மூன்று அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.மகாலட்சுமியின் பின்புறம்,அவள் வாகனமான சிங்கத்தின் உருவச்சிலை இருக்கிறது. மகாலட்சுமியின் மகுடத்தில் சேஷ நாகத்தின்(இறைவன் விஷ்ணுவின் நாகப் பாம்பு) உருவமும் செதுக்கப் பெற்றுள்ளது. மகாலட்சுமியின் நான்கு கரங்களில், கீழ் வலது கரத்தில் ஒரு கிச்சிலி பழத்தையும், வலது மேல் கரத்தில் கௌமோதகி என்ற தண்டாயுதம் ஒன்றையும், இடது மேல் கரத்தில் கேடகம் என்ற கவசத்தையும் மற்றும் கீழ் இடதுகரத்தில் பானபாத்திரம் என்ற கிண்ணத்தையும் வைத்துக் காணப்படுகிறாள்.
மகாலட்சுமியை சூரிய பகவான் வழிபடும் கிரண் உற்சவம்
பொதுவாக கோவில்களில் மூலவர் வடக்கு அல்லது கிழக்கு முகமாக அமைந்திருக்கும். இந்தக் கோவிலில், தேவியின் உருவச்சிலை மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மேற்கு சுவர்ப்பகுதியில் ஒரு திறந்த ஜன்னல் அமைந்துள்ளது, அதன் வழியாக கதிரவனின் ஒளிக்கீற்று வருடத்தில் இரு முறை தேவியின் பாதங்களை தொட்டு திருமுகத்தை பளிச்சிடும். சூரியனின் ஒளிக் கீற்றுக்கள் இந்த ஜன்னல் வழியாக தேவியின் பாதங்களை தொட்டு வணங்கி, பின்னர் மறைவது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும். அம்பாளின், பாதம், மார்பு, திருமுகம் ஆகிய மூன்று பகுதிகளிலும் சூரியனின் ஒளிக் கீற்றுக்கள் விழுவது, இங்கு கிரனோத்ஸவ்('கிரண் உற்சவம்') என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் 31 ஜனவரி, 1 பிப்ரவரி, 2 பிப்ரவரி, 9 நவம்பர், 10 நவம்பர், 11 நவம்பர் ஆகிய நாட்களில், இந்த விழா கொண்டாடுகிறார்கள். ஜனவரி 31 மற்றும் நவம்பர் 9 ஆம் தேதிகளில் சூரியனின் ஒளி, மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் படுகிறது. பிப்ரவரி 1 மற்றும் நவம்பர் 10 தேதிகளில் சூரியனின் கதிர்கள் மகாலட்சுமி தாயாரின் மார்பின் மீது படுகின்றன. பிப்ரவரி 2 மற்றும் நவம்பர் 11 தேதிகளில் தாயாரின் முழு உருவத்தின் மீதும் சூரியனின் ஒளி கதிர்கள் விழுகின்றன. மகாலட்சுமி விக்ரகத்தின் மீது சூரியனின் ஒளி படும் போது அவரை வணங்குவது மிகுந்த நன்மை தரும்.
சகல செல்வங்களையும் தரும் இக்கோவிலுக்கு சென்று வந்தால், வாழ்வில் சுபிட்சம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அரியமங்கலம் வைத்தியநாத சுவாமி கோவில்
சிறுமி ரூபத்தில் வந்து ரயில் விபத்தை தடுத்த தையல்நாயகி
திருச்சி - தஞ்சாவூர் சாலையில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அரியமங்கலம். இத்தலத்து இறைவனின் திருநாமம் வைத்தியநாத சுவாமி. இறைவியின் திருநாமம் தையல்நாயகி. கருவறையில் நின்ற கோலத்தில் தையல்நாயகி நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். அம்பிகை மேல் இரு கரங்களில் தாமரை மலரைத்தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருள்கிறாள்.
பக்தனுக்காக வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து அரியமங்கலம் வந்து எழுந்தருளிய தையல்நாயகி
சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர், அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் திருச்சி ரயில்வேயில் இஞ்சின் டிரைவராக பணி புரிந்து வந்தார். அவர் மயிலாடுதுறையின் அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் எழுந்தருளியிருக்கும் தையல்நாயகி மேல் தீராத பக்தி கொண்டவர். வாரம் தவறாமல் வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று தையல் நாயகி அம்மனை வழிபட்டு வருவார்.
அவர் ஒரு நாள், என்ஜின் ஓரம் அமர்ந்து, எதிரே உள்ள ரயில் பாதையைப் பார்த்துக் கொண்டே ரயிலை ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே சற்று தொலையில் தண்டவாளத்தின் அருகே, யாரோ நிற்பது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. ரயிலின் வேகத்தைக் குறைத்தார். தண்டவாளத்தின் அருகே ஒரு சிறுமி, சிவப்பு துணி ஒன்றை கையில் வைத்து அசைத்தப்படி நின்று கொண்டிருந்தாள். அவர் அவசரம் அவசரமாக ரயிலை நிறுத்தினார். அந்தச் சிறுமியின் அருகே வந்ததும் ரயில் நின்றது. உடன் கீழே இறங்கினார் அவர். அந்தச் சிறுமி நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகே, தண்டவாளம் உடைந்து வளைந்து அலங்கோலமாகக் கிடந்தது.ரயில் நின்றதும் பயணிகள் பலரும் இறங்கி ஓடி வந்தனர். நடக்க இருந்த விபரீதம் அனைவருக்கும் புரிந்தது. ரயில் அந்த இடத்தை கடந்திருந்தால் பல பெட்டிகள் கவிழ்ந்திருக்கும். பல உயிர்கள் பலியாகியிருக்கும். கூட்டத்தினர் டிரைவரின் சாமர்த்தியத்தைப் பாராட்டினர். மனதாரப் புகழ்ந்தனர். சிறிது நேரத்தில் டிரைவர், பயணிகள் உள்பட பலரும் விபத்து தவிர்க்கப்பட காரணமான அந்தச் சிறுமியை கூட்டத்தில் தேடினர். சிறுமி காணவில்லை. அன்று இரவு அவர் கனவில் வந்தாள் அந்தச் சிறுமி. 'நான் வேறு யாருமில்லை. நீ வணங்கும் தையல் நாயகிதான்' என்றாள் அந்தச் சிறுமி.
மனம் சிலிர்த்த அந்த டிரைவர் கண்ணீர் வடித்தார். கரங்கூப்பி வணங்கினார். 'தாயே நான் என்ன செய்ய வேண்டும் சொல்' என்றார். 'எனக்கு இங்கே ஓர் ஆலயம் கட்டு' என்றாள் அந்த சிறுமி. 'அப்படியே செய்கிறேன் தாயே. ஒரு சிலை செய்து உன்னை இங்கே பிரதிஷ்டை செய்து ஆலயம் கட்டுகிறேன்.'
'வேண்டாம். நீ எனக்காக சிலை செய்ய வேண்டாம். நீ நேராக மாட்டு வண்டியில் கொல்லிமலை செல். போகும்போது உன்னுடன் நெல் மூட்டையை கொண்டு செல். அங்குள்ள சித்தரிடம், பணத்திற்கு பதில் நெல் மூட்டையைக் கொடு. அவர் தரும் சிலையை உன்னுடன் வண்டியில் கொண்டு வா. வரும் வழியில் உன் மாட்டு வண்டியின் அச்சு முறியும். எந்த இடத்தில் அச்சு முறிகிறதோ அதே இடத்தில் என்னை பிரதிஷ்டை செய்' என்று கூறியவாறு சிறுமி மறைந்தாள். அவர் கனவு கலைந்து விழித்தார்.
மறுநாளே தான் கண்ட கனவின்படி அவர் கொல்லிமலைக்குப்புறப்பட்டார். அந்தச் சிறுமி சொன்னபடியே எல்லாம் நடந்தது. வனப்பகுதியாக இருந்த ஒரு இடத்தில் அச்சு முறிந்தது. அந்த இடத்தில் அம்மனை பிரதிஷ்டை செய்து, தகரக் கொட்டகையில் ஆலயம் அமைத்தார். அந்த ஆலயமே தற்போது அரியமங்கலத்தில் உள்ள அருள்மிகு தையல்நாயகி அம்மன் ஆலயம் ஆகும்.
பிரார்த்தனை
மாத பௌர்ணமி நாட்களில் மாலையில் தையல்நாயகியின் சன்னதியில் நடைபெறும் கும்ப பூஜை இங்கு மிகவும் பிரபலம். மூன்று கலசம் அமைத்து, அதில் மஞ்சள் கலந்த நீரை நிரப்பி பூஜை செய்வார்கள். பூஜை முடிந்தபின் அந்த கலச நீரை தீர்த்தமாக பக்தர்களுக்குத் தருவார்கள். அந்த தீர்த்த நீரைக் கொண்டு போய் வீட்டிலும், வியாபார நிலையங்களிலும் தெளித்தால் கண் திருஷ்டி, ஏவல் போன்றவை விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. முகப்பரு நீங்க அன்னைக்கு முன் மகாமண்டபத்தில் உள்ள தனியிடத்தில் பக்தர்கள் உப்பு, மிளகு காணிக்கை செலுத்துகின்றனர். உடம்பில் கட்டி ஏதாவது வந்தால், அன்னைக்கு வெல்லக் கட்டிகளை காணிக்கை செலுத்துகின்றனர். இவ்வாறு 5 செவ்வாய்க் கிழமைகள் பிரார்த்தனை செய்தால் பூரண குணம் பெறுவது நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள்.

பேரங்கியூர் திருமூலநாதர் கோவில்
பத்ம பீடத்தில் எழுந்தருளியிருக்கும் விஷ்ணு துர்க்கையின் அபூர்வ கோலம்
விழுப்புரத்திலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ள பேரங்கியூர் என்னும் கிராமத்தில் மிகவும் தொன்மை வாய்ந்த கோவில் ஒன்று அமைந்துள்ளது. இத்தலத்து இறைவனின் திருநாமம் திருமூலநாதர் . இறைவியின் திருநாமம் அபிராமி அம்மை.
கி.பி. 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை, பராந்தகச் சோழன் கட்டியதாக கல்வவெட்டுக் குறிப்புகள் சொல்கின்றன. மேலும் ராஜராஜ சோழன், ராஜேந்திரச் சோழன், குலோத்துங்கன் ஆகியோரது கல்வெட்டுகளும் இங்கு காணப்படுகிறது. இக்கோவிலில் முற்காலச் சோழர்களின் எழில்மிகு சிற்பங்கள் அமைந்துள்ளன. அவை தனிச்சிறப்புடையவை. அதனால், இக்கோவில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பராமரிப்பின் கீழ், மரபுச் சின்னமாக உள்ளது..
பொதுவாக சிவாலயங்களில் துர்கை அம்மன், மகிஷாசுரன் தலையின் மேல் நின்ற வண்ணம் காட்சி தருவாள். ஆனால் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் விஷ்ணு துர்க்கை, மகிஷனற்று பத்ம பீடத்தில் நின்றவண்ணம், பின்னிரு கரங்களில் எறிநிலை சக்கரமும், சங்குமேந்தி முன்னிடக்கரம் தொடையிலிருத்தி வலது கரத்தில் அருள் புரியும் கோலத்தில் காட்சி தருகிறாள். இது விஷ்ணு துர்க்கையின் ஓர் அபூர்வ தோற்றமாகும்

முனுகப்பட்டு பச்சையம்மன் கோவில்
சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் துவாரபாலகர்களாக விளங்கும் அபூர்வக் கோவில்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி – செய்யாறு வழித் தடத்தில், 11 கி.மீ. தொலைவில் முனுகப்பட்டு அமைந்துள்ளது. இத்தலத்திலுள்ள பச்சையம்மன் கோவில், உலகெங்கும் அமைந்துள்ள பச்சையம்மன் ஆலயங்களுக்கு பிரதான கோவிலாக அமைந்துள்ளது. சிவபெருமான் மனித வடிவம் கொண்ட கோவில், அன்னை பார்வதி வாழைப்பந்தல் அமைத்து வரம் பெற்ற பூமி, சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் துவாரபாலகர்களாக விளங்கும் அபூர்வக் கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாக விளங்குகிறது, முனுகப்பட்டு பச்சையம்மன் ஆலயம்.
சிவபெருமானின் உடலில் சரி பாதியை பெற வேண்டி பார்வதி தேவி தவம் இருக்க தேர்ந்தெடுத்த இடம்தான், வாழை மரங்கள் நிறைந்த இயற்கை எழில் சூழ்ந்த இன்றைய முனுகப்பட்டு. அன்னை அங்கேயே வாழை மரங்களால் பந்தல் அமைத்து தவமிருக்க முடிவு செய்தாள். லிங்கம் அமைக்க, தவமிருக்க தண்ணீர் தேவைப்பட்டது. உடனே தன் புதல்வர்களான விநாயகரையும், முருகனையும் தண்ணீர் கொண்டு வரப் பணித்தாள். அதன்படி விநாயகர் சற்றுத் தொலைவில் உள்ள மலையில் முனிவர் தவமிருப்பதையும், அவர் அருகே கமண்டலத்தில் நீர் இருப்பதையும் அறிந்து, அதனைத் தன் வாகனமான மூஞ்சுறுவின் உதவியால் கவிழ்த்தார். கமண்டல நீர், கமண்டல நாக நதியாகி, அன்னை தவம் இருந்த இடத்தை நோக்கிப் பாய்ந்தது. முருகப்பெருமான் தொலைவில் உள்ள மலை மீது தன் வேலைப் பாய்ச்சி நீர் வரச்செய்து ஆறாக்கியதால், அது சேயாறு ஆனது. இதற்குள் அன்னை தன் பிரம்பினை பூமியில் அடித்து நீர் வரச் செய்தாள். அது பிரம்பக நதி என்று பெயர் பெற்றது. இந்த மூன்று நதிகளும் ஒன்று சேரும் ஊரான முனுகப்பட்டில் அமைந்த இடத்தை முக்கூட்டு என்றும், இங்குள்ள சிவனை 'முக்கூட்டு சிவன்' என்றும் அழைக்கின்றனர்.
அன்னையின் தவத்தினைக் கலைக்க அசுரர்கள் சிலர் முயன்றனர். இதனை முறியடிக்க சிவன் வாழ்முனியாகவும், விஷ்ணு செம்முனியாகவும் அவதாரம் எடுத்து அன்னையின் தவம் நிறைவுபெற உதவினர். இதன்பின் திருவண்ணாமலையில், பார்வதி தேவி சிவபெருமானிடம் சரிபாதி உடலைப் பெற்றாள் என தலபுராணம் கூறுகிறது.
பச்சை நிற குங்கும பிரசாதம்
இத்தல இறைவன் மண்ணால் உருவானவர் என்பதால், ஈசனுக்கு 'மண் லிங்கேஸ்வரர்' என்ற பெயர் வந்தது. இந்த பெயர் மருவி தற்போது 'மன்னார்சாமி' என்ற பெயர் நிலைத்து விட்டது. இறைவன் சிவபெருமானை லிங்க வடிவிற்கு பதிலாக மனித வடிவில், சிலா ரூபத்தில் காண முடிவது இத்தலத்தின் சிறப்பாகும். சிவபெருமான் நான்கு கரங்களோடு, கீழ் வலது கரத்தில் சூலம், கீழ்இடது கரத்தில் கபாலம், மேல் வலது கரத்தில் மழு, மேல் இடது கரத்தில் மான் தாங்கியுள்ளார். இவரே மன்னார் ஈஸ்வரன் எனும் மன்னார்சாமி ஆவார். இவரையடுத்து நடுநாயகமாக பச்சையம்மன் சன்னிதி இருக்கிறது. இந்த ஆலயத்தின் துவாரபாலகர்களாக, வலதுபுறம் சிவபெருமானும், இடதுபுறம் மகாவிஷ்ணுவும் காட்சி தருவது அபூர்வ அமைப்பாகும்.
இக்கோவில் கருவறையில் நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் இரு பச்சையம்மன்கள் காட்சி தருகின்றனர். நின்ற அம்மன் கற்சிலையாகவும், அமர்ந்த அம்மன் சுதைவடிவிலும் அமைந்துள்ளது. அன்னையின் கீழ் வலது கரம் பிரம்பையும், கீழ் இடது கரம் கபாலத்தையும், மேல் வலது கரம் அங்குசத்தையும், மேல் இடது கரம் பாசத்தையும் தாங்கி அருள்கின்றது. இரண்டு அம்மன்களுக்கும் அலங்காரம், தீபாராதனை நடத்தப்படுகிறது. ஆனால் நின்ற கோலத்தில் இருக்கும் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. பச்சை அம்மன் ஆலயம், அம்மன் ஆலயமாக இருந்தாலும், இங்குள்ள மன்னார்சாமியே பிரதானமாகத் திகழ்கிறார். இதனால் அம்மனுக்கு திங்கட்கிழமையே உகந்த நாளாக போற்றப்படுகிறது. இது தவிர ஞாயிற்றுக்கிழமையிலும் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். இக்கோவிலில் பிரசாதமாக வேப்பிலையும், பச்சை நிற குங்குமமும் வழங்கப்படுவது ஒரு தனிச் சிறப்பாகும்.
எண்ணற்ற குடும்பங்களுக்கு முனுகப்பட்டு பச்சையம்மன் குலதெய்வமாக விளங்குகின்றாள். இந்த அம்மன், மணப்பேறு, மகப்பேறு வழங்கும் தெய்வமாக விளங்குவது தனிச்சிறப்பு. மகப்பேறு வேண்டுதல் நிறைவேறியவர்கள் 5 அல்லது 7–வது மாதத்தில் அம்மனுக்கு வளையல் சாத்தி வழிபட்டுச் செல்கின்றனர். இங்கு பில்லி, சூனியம், கண் திருஷ்டி, சொத்துப் பிரச்சினை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் காலில் எலுமிச்சை பழத்தை நசுக்கி, எதிரில் உள்ள முனிகளுக்கு நடுவில் உள்ள கருங்கல்லில், தேங்காயை வீசி சிதறச் செய்கின்றனர். இதனால், அனைத்துப் பிரச்சினைகளும் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி அம்மன் கோவில்
ஆதிகாமாட்சி அம்மன் கோவில் - அபூர்வ அர்த்தநாரீஸ்வர லிங்கம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு அருகிலேயே, குமரக்கோட்டம் கோவிலையும் ஒட்டினாற்போல், கம்மாளத்தெருவில் அமைந்துள்ளது ஆதிகாமாட்சி அம்மன் கோவில். இந்த அம்மனுக்கு ஆதிபரமேசுவரி, ஆதிகாளிகாம்பாள் என்ற திருநாமங்கள் உண்டு.
தேவர்களுக்கு தொல்லை தந்த அசுரர்களை காளியாக உருவெடுத்து வதம் செய்தாள் அன்னை. அதனால் இத்தலம் காளி கோட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக அம்பிகையின் சன்னதி முகப்பில் துவாரபாலகியர்தான் இருப்பார்கள். ஆனால் இக்கோவிலில் முன் மண்டபத்தில் துவார பாலகர்களும், அர்த்த மண்டபத்தில் துவாரபாலகியரும் இருக்கின்றனர்.
கருவறையில் ஆதிகாமாட்சி தென் திசை நோக்கி பத்மாசனத்தில் அமர்ந்து இருக்கிறாள். அவளுடைய நான்கு கரங்களில், மேற் கரங்களில் பாசமும் அங்குசமும் ஏந்தியிருக்கிறாள். வலது கரத்தில் அபய முத்திரையும், இடது கரத்தில் கபாலமும் ஏந்தி காட்சி தருகிறாள். காலுக்கு கீழே மூன்று அசுரர்களின் தலை இருக்கிறது.
ஆதிகாமாட்சி சன்னதியின் முன் மண்டபத்தில் சக்தி லிங்கம் இருக்கிறது. இந்த லிங்கத்தின் பாணத்தில் அம்பிகையின் வடிவம் இருக்கிறது. இது ஒரு அபூர்வமான சிவலிங்கம் ஆகும். இதை 'அர்த்தநாரீஸ்வர லிங்கம்' என்றும் அழைக்கின்றனர். கன்னிப்பெண்கள் நல்ல வரன் அமைய, வெள்ளிக்கிழமை காலை 10.30- 12 மணிக்குள் (ராகு காலம்) சக்தி லிங்கத்திற்கும், ஆதிகாமாட்சிக்கும் அபிஷேகம் செய்து தீபமேற்றுகின்றனர். பிரிந்த தம்பதியர் மீண்டும் இணையவும், திருமணமானவர்கள் ஒற்றுமையுடன் வாழவும் சக்தி லிங்கத்திற்கு இனிப்பு நைவேத்யம் செய்து வணங்குகின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
பக்தனுக்காக மடப்பள்ளியில் சமையல் செய்த மீனாட்சி அம்மன்
மிகவும் பழைமை வாய்ந்த மதுரை மாநகரில், இறைவன் சொக்கநாதரும் அன்னை மீனாட்சியும் எழுந்தருளியிருக்கும் ஆலயம் குறித்த செய்திகள் பலவும், புராணங்களிலும் வரலாற்றிலும் காணப்படுகின்றன. மதுரை நகரைப் பற்றி 3000 ஆண்டுகளுக்கு முன் படைக்கப்பட்ட வால்மீகி இராமாயணத்தில் குறிப்பு உள்ளது. 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மகாவம்சம் என்ற நூலிலும் மதுரை பற்றிய தகவல் உள்ளது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ரோமாபுரியை ஆண்ட அகஸ்டசிடம் தம் தூதரை அனுப்பிய வரலாறு உள்ளது.
அன்னை மீனாட்சியால் நடந்த அற்புதங்கள் ஏராளம். அந்த அற்புத நிகழ்வுகளுக்குச் சான்றாக இப்போதும் பல பொருள்கள், இடங்கள் உள்ளன. அனைவருக்கும் நம்பிக்கைக்குரிய நலமளிக்கும் தெய்வமாகவே அன்னை மீனாட்சி அருள்பாலிக்கிறார். தன் பக்தனுக்காக மீனாட்சி அம்மன் மடப்பள்ளியில் சமையல் செய்த அற்புத நிகழ்வை இப்பதிவில் காணலாம்.
ஒருகாலத்தில், மீனாட்சியம்மன் கோயில் மடப்பள்ளியில் ஸ்ரீநிவாசன் என்பவர் பணி புரிந்தார். மீனாட்சி அம்மன் மேல் தீவிர பக்தி கொண்டவர். அம்பிகைக்கு சமர்பிக்கப்படும் தினசரி நைவேத்திய உணவுகளை தயாரிப்பது அவர் வழக்கம். அன்னையின் அருளால், நைவேத்தியம் சமைப்பதைப் போலவே, அருந்தமிழில் கவிதை சமைக்கவும் திறன் பெற்றிருந்தார். அங்கயற்கண்ணியின் மீது அருந்தமிழில் பாடல்கள் இயற்றினார். ஒருநாள் இரவு உறங்கப்போவதற்கு முன் அவர், மறுநாள் அதிகாலையில் சமைக்க வேண்டியிருந்ததால், மீனாட்சி அம்மனை நோக்கி, 'என்னை சீக்கிரம் எழுப்பிவிடம்மா' என்று சொல்லிவிட்டுப் படுக்கச் சென்றார். அயர்ந்து உறங்கிவிட்டார். உழைத்த களைப்பில் உறங்கும் குழந்தையை எழுப்ப எந்த அன்னைக்கு மனம் வரும்? ஸ்ரீநிவாசனை எழுப்பாமல், மீனாட்சி அம்மனே நைவேத்தியங்களை அவருக்கு பதிலாகச் சமைத்து வைத்தார். இரவில் சமைக்க வெளிச்சம் வேண்டுமல்லவா, அதற்காகத் தன் மூக்குத்தியை, கழற்றிவைத்தவள், உலகத்தவருக்கு ஸ்ரீநிவாசனின் பக்தியின் பெருமையை உணர்த்த அந்த மூக்குத்தியை தடயமாக அதை விட்டுப் போனாள்.
மறுநாள் காலையில் கோவில் சிப்பந்திகள் எழுப்பி விட்ட பிறகுதான் ஸ்ரீநிவாசன் எழுந்தார். தாம் பிரசாதங்கள் தயாரிக்காமல் உறங்கி விட்டோமே என்று பதைப்புடன் எழுந்தவருக்கு அங்கு பிரசாதங்கள் தயார் நிலையில் இருப்பதைப் பார்த்து ஆச்சரியமும் குழப்பமும் அடைந்தார்.
பின்னர் நைவேத்திய உணவு பொருட்கள் மீனாட்சி அம்மன் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு நெய்வேத்தியம் ஆனது. அதன் பின்னர் கற்பூர ஆரத்தி நடக்கும் போதுதான் அம்மனின் முகத்தில் மாணிக்க மூக்குத்தி இல்லாததைக் கண்டு கவலையும் பதட்டமும் அடைந்தார்கள். தொலைந்த மூக்குத்தியை தேடத் தொடங்கினார்கள். அப்போது அம்மன் சன்னதியில் ஒரு அசரீரி கேட்டது. 'யாரும் கவலைப்பட வேண்டாம். என் மகன் ஸ்ரீநிவாசன் உடல் அசதியால் என்னை எழுப்பச் சொல்லி விட்டு உறங்கச் சென்றான். அவனை காலையில் எழுப்பி விட நானே சென்றேன். அவன் அயர்ந்து உறங்குவதை கண்டு, அவனை எழுப்ப மனமில்லாமல் நான் மடப்பள்ளிக்குச் சென்றேன். மடப்பள்ளியில் வெளிச்சம் இல்லாததால் சமைப்பதற்கு வெளிச்சம் வேண்டுமே என்று எனது மூக்குத்தியை கழற்றி வைத்துவிட்டு அதன் வெளிச்சத்தில் எனது நைவேத்தியங்களை நானே சமைத்தேன். குழந்தை உறங்குவதை கண்ட தாய் அவனை எழுப்புவாளோ? அவனால் செய்ய வேண்டிய பணி என்னால் முடிக்கப்பட்டது. மடப்பள்ளிக்கு சென்று பாருங்கள். அங்கு எனது மூக்குத்தி இருக்கும்' என்று அசரீரி ஒலித்தது. மீனாட்சி அம்மனின் திருவிளையாடலை நினைத்து அங்கிருந்த அனைவரும் பரவசம் அடைந்தனர்.

பவானி சங்கமேஸ்வரர் கோவில்
அம்பிகைக்கு தந்தக் கட்டில் காணிக்கையாக அளித்த ஆங்கிலேய கலெக்டர்
ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவிலும், சேலத்தில் இருந்து 56 கிமீ தொலைவிலும் உள்ள தேவாரத் தலம் பவானி சங்கமேஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் சங்கமேஸ்வரர். இறைவியின் திருநாமம் வேதநாயகி. பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் சிறந்த பரிகாரத்தலங்களில் ஒன்றாகும். பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது. . பரிகார ஸ்தலமாக சிறப்பு பெற்று விளங்கும் கூடுதுறையில், ஆண்டு தோறும் பக்தர்கள் தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களுக்கு திதி, தர்பணம், கரும காரியம் போன்றவைகளை செய்து செல்கின்றனர். பவானி கூடுதுறையில் மூழ்கினால் எக்காலத்திலும் பயன் கிடைக்கும். ஆயினும், ஆடி 18, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினங்கள் கூடுதல் சிறப்பு. இங்கு கோபுரமே இலிங்கமாக வழிபடப்படுவதால், கோபுரத்திற்கு வெளியே நந்தி உள்ளது.
இத்தலத்து அம்மனுக்கு பவானி, சங்கமேஸ்வரி, வேதநாயகி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி என்ற பெயர்கள் உண்டு. இந்த அம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடப்பட்டுள்ளது.
இக்கோவிலின் அம்பிகை வேதநாயகிக்கு, ஆங்கிலேயர் ஒருவர் தந்தக் கட்டில் காணிக்கையாக அளித்திருக்கிறார். அதன் பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் உள்ளது. சுமார் 220 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டு வந்த காலத்தில், வில்லியம் காரோ என்பவர் பவானி பகுதிக்கு கலெக்டராக இருந்தார். அம்பிகை வேதநாயகியின் பெருமையையும் அழகையும் மக்கள் வியந்து பேசுவது கண்ட வில்லியம் காரோ தாமும் அம்பிகையைக் காண விரும்பினார். இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்லலாம் என்பதால், மதில் சுவரில் சாளரம் போன்று மூன்று துளைகளைச் செய்து வில்லியம் காரோ அதன் மூலம் அம்பிகையைக் காண வழி செய்தனர். வில்லியம் காரோவும் அம்பிகையை அச்சாளரத்தின் மூலம் தினந்தோறும் கண்டு வழிபட்டு வந்தார். அந்தத் துளைகள் இன்றும் உள்ளன.ஒரு முறை வில்லியம் காரோ தனது இல்லத்தின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்த போது அம்பிகை வேதநாயகியைப் போன்று வடிவுடைய பெண் ஒருத்தி அவரைத் தட்டி எழுப்பி கையைப் பற்றி விரைவாக வெளியே அழைத்துச் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டு, திடுக்கிட்டு விழித்து எழுந்த வில்லியம் காரோ பரபரப்புடன் மாடியிலிருந்து கீழே ஓடினார். அடுத்த நிமிடமே வில்லியம் காரோ குடியிருந்த இல்லத்து மாடி இடிந்து கீழே விழுந்தது. தான் பிழைத்தது அம்பிகையின் அருள் என்று போற்றி, அம்பிகைக்கு தந்தத்தால் ஆன கட்டில் செய்து காணிக்கையாக அம்பிகைக்கு அளித்தார். அதில் தனது கையொப்பமும் இட்டார். இச்சம்பவம் நடந்தது 1804ம் வருடம் ஜனவரி மாதம் 11ம் நாள் ஆகும்.

திருக்கோகர்ணம் கோகர்ணேஸ்வரர் கோவில்
தொலைந்த பொருளை மீட்டுத் தரும் அரைக்காசு அம்மன்
புதுக்கோட்டை-திருச்சி சாலையில், புதுக்கோட்டை நகரத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ளது திருக்கோகர்ணம். இறைவன் திருநாமம் கோகர்ணேஸ்வரர். இறைவியின் திருநாமம் பிரகதாம்பாள் (அரைக்காசு அம்மன்). குடைவரைக்குகைக் கோயிலான இக்கோயில் பல்லவ அரசனான முதலாவது மகேந்திர வர்மன் காலத்தைச் சேர்ந்தது.
புதுக்கோட்டை மன்னர்களில் சிலர் திருக்கோகர்ணம் கோவிலில் உள்ள அன்னை பிரகதாம்பாளைக் குலதெய்வமாகவும், பலர் இஷ்ட தெய்வமாகவும் வணங்கிவந்தனர். அதனால் புதுக்கோட்டையை ஆண்ட அரசர்களின் பெயரில் அடைமொழியாக ஸ்ரீ பிரகதாம்பாதாஸ் என்ற சொல் சேர்க்கப்பட்டது.
அந்நாளில் பிரகதாம்பாள் அம்பிகைக்கு நவராத்திரி விழாவினை, புதுக்கோட்டை மன்னர்கள் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். அப்போது அன்றைய தினத்திற்கு மட்டுமல்லாமல், பல நாட்களுக்கும் அன்னம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரிசி, வெல்லம் போன்ற பொருட்களையும், அம்மன் பொறிக்கப்பட்ட, அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த அரைக்காசு ஒன்றையும் சேர்த்து மக்களுக்கு அவர்கள் தானம் செய்து வந்தனர். புதுக்கோட்டை மன்னர்களால் வெளியிடப்பட்ட அந்த அரைக்காசு நாணயம், புதுக்கோட்டை அம்மன் காசு அல்லது அம்மன் சல்லி என அழைக்கப்பட்டது. அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் பிரகதாம்பாள் அம்மனின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான் மன்னர் ஒருவரின் முக்கியமான பொருள் ஒன்று தொலைந்துவிட்டது. எங்கு தேடியும் கிடைக்காத அந்தப் பொருள் கிடைக்க வேண்டும் என்று திருக்கோகர்ணம் பிரகதாம்பாளிடம் பிரார்த்தனை செய்தாராம் மன்னர். தான் வணங்கும் இந்த அரைக்காசு அம்மனே அதனை மீட்டுத் தர வேண்டும் என்று கூறி பிரார்த்தனையை தீவிரப்படுத்தினார். அவர் பிரார்த்தனை பலித்து, தேடிய பொருள் கைக்கு வந்தது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வெல்லத்தைப் பிடித்து வைத்து பூஜை செய்துள்ளார். பின்னர் அந்த வெல்லப் பிரசாதத்தைத் தானும் உண்டு, பக்தர்களுக்கும் வழங்கினார். அதனால் அரைக்காசு அம்மனை வேண்டினால் தொலைந்த பொருள் கிடைக்கும் என்ற செய்தி நாடு முழுவதும் பரவியது. அந்த பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.
பத்திரம், நகை, எந்த பொருள் தொலைந்தாலும் இந்த அம்மனை வேண்டிக் கொண்டு காசு எடுத்து வைத்தால் அந்தப் பொருள் கிடைத்து விடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.

கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்
இரவும், பகலும் இடைவிடாமல் சிவ பூஜை செய்யும் அம்பிகை
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில். இக்கோவில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி செய்த உக்கிரபாண்டியனால் கட்டப்பட்டதாகும். இறைவன் திருநாமம் காளஹஸ்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஸ்ரீஞானாம்பிகை. தேவர்களுக்கு பரப்பிரம்ம தத்துவத்தை உபதேசம் செய்ததால் இந்த அம்பிகைக்கு ஸ்ரீஞானாம்பிகை என்ற திருநாமம் உணடாயிற்று.
கீழமங்கலம் கோவிலில் உள்ள ஸ்ரீஞானாம்பிகை வர, அபய கைகளுடன் சூட்சுமத்தில் வலது கையில் தாமரை மலர், இடது கையில் நீலோற்பலம் மலருடன், ஜடாமகுடத்துடன், சமமான சந்திரகலையுடன், மூன்று கண்களுடன், பத்மத்தின் மேல் நின்ற கோலத்தில் அருட்காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறாள். நீலோற்பலம் மலர் என்பது ஒரு வகை தாமரையை சேர்ந்தது. இம்மலர் இரவில்தான் மலரும். அம்பிகை ஒரு கையில் நீலோற்பலம் வைத்திருப்பது, அம்பிகை இரவில் சூட்சுமமாக சிவபெருமானை பூஜிப்பதையே உணர்த்துகிறது. பகவானுடைய வலது கண் சூரியன், இடது கண் சந்திரனின் அம்சமாகும். அதனால்தான் சூரியனால் தாமரையும், சந்திரனால் நீலோற்பலமும் (நீல நிறத்தாமரையும்) மலர்கின்றன. நீலோற்பலத்திற்கு ஒரு வருடம் வரை நிர்மால்ய தோஷம் கிடையாது. துளசி, வில்வத்திற்கு கூட 6 மாதம்தான் நிர்மால்ய தோஷம் கிடையாது. எனவே நீலோற்பலம் மிகச் சிறந்தது.
.திருவானைக்கோவிலில் அருள்பாலிக்கும் அம்பிகை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி இரண்டு கைகளிலும் தாமரை மலர் உள்ளது. இது பகலில் மலரும் மலராகும். அதனால்தான் திருவானைக்கோவிலில் பகலில் உச்சிக் காலத்தில் அம்பிகை சிவ பூஜை செய்யும் வழக்கம் இன்றும் உள்ளது. இங்கு கீழமங்கலத்தில் ஸ்ரீ ஞானாம்பிகை வலக்கையில் தாமரையும், இடக்கையில் நீலோற்பலமும் வைத்திருப்பதால், அம்பிகை இரவும், பகலும் இடைவிடாமல் சிவ பூஜை செய்து கொண்டும், வரமும், அபயமும் எப்போதும் வழங்குவேன் என்று வர, அபய முத்திரைகளுடன் காட்சி கொடுத்து, அருள் பாலிக்கிறாள்.
ஸ்ரீ ஞானாம்பிகை சூடியிருக்கும் சந்திரன் மூன்றாம்பிறைச் சந்திரன் ஆகும். அதாவது 'சம கலை சந்திரன்'. இது கோணலான பிறைச் சந்திரன் கிடையாது. ஸ்ரீ ஞானம்பிகைக்கே உள்ள அதிவிசேஷம் இது. 'சம கலை சந்திரனைச்' சூடிய அம்பிகை என்பதால், 'என்னால் அழிவு கிடையாது. ஆக்கமும் ஆற்றலும் மட்டுமே. ஞானத்திற்கு என்றுமே அழிவு கிடையாது' என்பதையே வலியுறுத்துகிறாள்.
இந்த அம்பிகையை தரிசனம் செய்தவர்கள் , மீண்டும் மீண்டும் தரிசனம் செய்யவே ஆசைப்படுவார்கள். அந்த அளவிற்கு பக்தர்களை மெய் மறக்கச் செய்யும், மீண்டும் மீண்டும் தரிசனம் செய்யத் தூண்டும் அளவிற்கு ஞான வசீகரத் தோற்றம் உடையவள் ஸ்ரீஞானாம்பிகை.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
வருடத்திற்கு நான்கு முறை அன்னாபிஷேகம் செய்யப்படும் தலம்
https://www.alayathuligal.com/blog/8aksam98depeyt9nx7nyan3nc728lh

கொட்டையூர் கோடீஸ்வரர் கோவில்
கால் பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ள பந்தாடுநாயகி அம்பாள்
கும்பகோணம் - திருவையாறு சாலையில், கும்பகோணத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில், சுவாமிமலை செல்லும் வழியில் உள்ள தேவாரத்தலம் திருக்கொட்டையூர். இறைவன் திருநாமம் கோடீஸ்வரர். இங்கே அம்பாள் பந்தாடுநாயகி என அழைக்கப்படுகிறாள். அம்பாள் சிலையின் ஒரு கால், பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது. செய்த பாவங்களை தன் காலால் எட்டி உதைத்து அருள்செய்பவள் என்ற பொருளில் இவ்வாறு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. "கொட்டையூரிற் செய்த பாவம் கட்டையோடே" என்பது பழமொழி. இத்தலத்தில் பாவம் செய்தவர்கள் கால் வைத்தால் அந்தப் பாவம் கோடி அளவு பெருகிவிடும். அதே போல புண்ணியம் செய்தவர்கள் கால் வைத்தால் புண்ணியம் கோடி அளவு கூடிவிடும்.
விளையாட்டில் உன்னத நிலையை அடைய அருளும் அம்பிகை
விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள், அத்துறையில் உன்னத நிலையை அடையவும், பரிசுகள் பெறுவதற்காகவும் இந்த பந்தாடுநாயகி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்
அகிலாண்டேஸ்வரி ஸ்ரீசக்கர தாடகங்களின் சிறப்பு
திருச்சிராப்பள்ளி நகரில் அமைந்துள்ள தேவாரத் தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் பஞ்சபூதத் தலங்களில் அப்புத்(நீர்) தலமாகும். இறைவன் திருநாமம் ஜம்புகேஸ்வரர் . இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி.
ஆதி சங்கரர் திருவானைக்கா தலத்துக்கு வந்தபோது அங்கு அன்னை உக்கிர ரூபத்தோடு காட்சியளித்தாள், அன்னையின் உக்கிரம் தணிக்க, ஆதி சங்கரர் ஸ்ரீசக்கரத்தை தாடகங்கமாகச் செய்து அணிவித்தார். இதனால் அன்னை மனம் குளிர்த்து சாந்த சொரூபியாக, வரப்பிரசாதியாக அருள்பாலித்தார். அன்னையின் தாடகங்கள் ஸ்ரீசக்கர ரூபமாக அமைந்ததால் அதை தரிசனம் செய்வது மிக விசேஷமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக திருமணம் ஆகாத பெண்கள், குழந்தை வரம் வேண்டும் பெண்கள், அம்பிகையின் தாடகங்களையே உற்று நோக்கி வணங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.
இத்தலத்தில் அம்பாள் முப்பெரும் தேவியராகக் காட்சிகொடுக்கிறாள். அகிலாண்டேஸ்வரி ஒருநாளில், காலையில் லட்சுமிதேவியாகவும் உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதி தேவியாகவும் அருள்பாலிக்கிறாள். மூன்று வேளையிலும் அம்பிகையை தரிசித்து வழிபட செல்வம், வீரம், கல்வி ஆகிய மூன்றும் கிடைக்கும் என்கின்றன வேத சாஸ்திரங்கள்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன்
https://www.alayathuligal.com/blog/p2ltlykayf5sm29zff7943xcfb47l8

நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
அம்பிகை மெட்டி அணிந்திருக்கும் அபூர்வக் கோலம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டத்திலுள்ள நன்னிமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில். இத்தலம் திருச்சியிலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன் திருநாமம் சுந்தரேஸ்வரர். இறைவியின் திருநாமம் மீனாட்சி.
இக்கோவில் மகாமண்டபத்தின் இடதுபுறம், இறைவி மீனாட்சியின் சந்நதி உள்ளது. அம்பிகை முன்கை அபய முத்திரை காட்ட, மறு கையில் மலர் ஏந்தி நின்ற கோலத்தில், தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். அம்பிகையின் கால்கட்டை விரல்களில் மெட்டி அணிந்திருப்பது ஓர் அபூர்வமான காட்சி ஆகும். திருமணத்துக்காகக் காத்திருக்கும் இளம் வயதினர், அம்பிகையின் மெட்டி தரிசனம் கண்டால் வெகுவிரைவில் அந்த பாக்கியம் அருளப் பெறுகிறார்கள்.