சென்னிமலை சுப்ரமணியசுவாமி கோவில்

செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்யும் சென்னிமலை முருகன்

வள்ளி-தெய்வானை தேவியர் இருவரும், ஒரே கல்லில் பிரபையுடன் வீற்றிருக்கும் தனிச் சிறப்பு

ஈரோட்டில் இருந்து 27 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள திருப்புகழ் தலம் சென்னிமலை. மலைக்கு மேலே செல்ல, 1320 படிக்கட்டுகளும், 4 கி.மீ. நீளம் உள்ள தார் சாலையும் உள்ளது. 3000 ஆண்டுகள் பழமையானது இக்கோவில். கந்தசஷ்டி கவசம் பாடல் அரங்கேறிய திருத்தலம் இது.

இங்கு முருகன் அக்னி மூர்த்தியாக (இரண்டு தலைகளைக் கொண்ட முருகப்பெருமான்) காட்சியளிக்கிறார். முருகப்பெருமான் செவ்வாய் அம்சமாகவே அருள்பாலிப்பதால், இத்தலம், செவ்வாய் பரிகார தலமாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உடையவர்கள், இத்தலத்தில் முருகனுக்கு நெய்தீபம் ஏற்றி, வழிபட்டால், செவ்வாய் தோஷத்துக்கான காரணிகள் நீங்கி, நல்ல வாழ்க்கையை அடைவார்கள். சூரசம்ஹாரத்தின் போது குரு பரிகார தலமான திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட்டால், குரு தோஷம் நிவர்த்தி பெறும். அது போல கந்தசஷ்டியின் போது சென்னிமலை முருகனை வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும்.

இத்தலத்தில் மூலவரே செவ்வாய் அம்சமாக விளங்குவதால், அவரைச் சுற்றி நவக்கிரகங்களின் மற்ற எட்டு கிரகங்களும் அமைந்து அருள்பாலிக்கிறார்கள். இங்கு மூலவர் சென்னிமலை ஆண்டவரை வலம் வந்து வணங்கினாலே, நவக்கிரகங்களையும் வழிபட்ட பலன் உண்டு. இங்கு முருகப்பெருமானுக்கு பால், தயிர் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தயிர், புளிப்பதில்லை என்பது இந்த ஆலயத்தின் அதிசய நிகழ்வாகும்.

இங்கு வள்ளி-தெய்வானை தேவியர் இருவரும், ஒரே கல்லில் பிரபையுடன் வீற்றிருக்கும் தனிச் சந்நிதி வேறு எங்கும் காண முடியாத சிறப்பாகும்.

 
Previous
Previous

மேலச்செவல் நவநீத கிருஷ்ணன் கோவில்

Next
Next

மரண தண்டனையை மாற்றிய முருகன் பாடல்