திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில்

தினமும் குழந்தை, இளம்பெண், பெண் என மூன்று வித தோற்றங்களில் காட்சி தரும் அம்பிகை

கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருநாகேஸ்வரம். இறைவன் திருநாமம் நாகநாதசுவாமி. இத்தலத்தில் கிரிகுஜாம்பிகை மற்றும் பிறையணிவாள் நுதல் அம்மை என இரண்டு அம்மன்கள் அருள்பாலிக்கிறார்கள்.

கிரிகுஜாம்பாள் அம்பிகை தனிச் சன்னதியில் தவக்கோலத்தில் காட்சியளிக்கின்றாள். கிரிகுஜாம்பிகையின் வலதுபுறம் வீணையைக் கையில் தாங்கி சரஸ்வதியும், இடதுபுறம் கரங்களில் தாமரை மலரைத் தாங்கி லட்சுமிதேவியும் இருக்கின்றனர் . கிரிகுஜாம்பிகை காலையில் சிறுமியாகவும், மதியத்தில் இளம் பெண்ணாகவும், மாலையில் தேவியாக, பெண்ணாகவும் அலங்கரிங்கப்படுகிறார்.

கிரிகுஜாம்பிகையின் திருவடிவம் சுதையால் ஆனது என்பதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகுச் சட்டம் மட்டுமே சார்த்துகிறார்கள். மார்கழி மாதத்தில் 48 நாட்கள் புனுகு சட்டம் மட்டுமே சாற்றுவது வழக்கம். அந்நாட்களில் அம்பிகையை தரிசிக்க முடியாது. இந்நாட்களில் அம்பிகையின் சன்னதி முன்புள்ள திரைச்சீலைக்கே பூஜை நடக்கிறது. தை மாதத்தில் அம்பாளுக்கு, புனுகு காப்புத் திருவிழா நடைபெறும். தை கடைசி வெள்ளியன்று அம்மனது சன்னதி முன்மண்டபத்தில் அன்னம், காய்கறி, பழங்கள் போன்றவற்றை படைத்து சிறப்பு பூஜை நடைபெறும்.

இங்கு முத்தேவியரை வணங்கி, இவர்களை வழிபட குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை. இத்தலம் ராகுவிற்கான பரிகார தலமாகவும் விளங்குகிறது.

Read More
திருச்சி பைரவ நாத சுவாமி கோவில்

திருச்சி பைரவ நாத சுவாமி கோவில்

திருச்சி மலைக்கோட்டையின் காவல் தெய்வம்

சிவபெருமானுடைய ஐந்து குமாரர்கள் விநாயகர், முருகன், சாஸ்தா, வீரபத்திரர், பைரவர் ஆகியோர் ஆவர். இவர்களை பஞ்ச குமாரர்கள் என்று அழைப்பர். இத்தகைய சிறப்பு வாய்ந்த பைரவருக்கு தமிழ்நாட்டில் ஒரு சில தலங்களில் தான் தனி கோவில்கள் உள்ளன. அப்படி பைரவருக்கு அமைந்த அபூர்வ கோவில்களில் ஒன்றுதான் திருச்சி மாநகர பெரிய கடை வீதியில் உள்ள பைரவ நாத சுவாமி கோவில். காசியில் கங்கையை பார்த்தபடி வீற்றிருக்கும் பைரவருக்கு நிகரான சக்தி வாய்ந்தவராக, இந்த பைரவ நாத சுவாமி நம்பப்படுவதால் இத்தலத்தை திருச்சியின் காசியாகவே கருதி வழிபட்டு வருகிறார்கள். இங்கு மூலவராக அருள் பாலிக்கும் பைரவர் மலைக்கோட்டையின் காவல் தெய்வமாக விளங்குகிறார்.

வழக்கமாக உக்கிரமான முகத்துடன் விளங்கும் பைரவர் இங்கு சிரித்த முகத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கருவறை முன் ஒளிவிட்டு சுடர் விடும் தீபம் 'பைரவ தீபம்' என அழைக்கப்படுகிறது. பகல், இரவு என நாள் பூராவும் இந்த தீபம் எரிந்து கொண்டேயிருக்கிறது. கருவறையின் முன், பைரவரின் வாகனம் சுவானம் (நாய்). உள்ளது. நாய்க்கு துன்பம் விளைவித்தவர்கள் அதனால் தோஷம் ஏற்படாமல் இருக்க, இங்குள்ள சுவானத்திற்கு பால் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கி, சுக வாழ்வு பெறலாம்.

மாதந்தோறும் வரும் வளர்பிறை அஷ்டமியில், பைரவருக்கு பள்ளய பூஜை எனும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அன்று பைரவரை பூக்களாலேயே அலங்காரம் செய்வர். இங்கு மூலவரை வழிபடுவதாலும் ஹோமத்தில் கலந்து கொள்வதாலும் பக்தர்கள் இழந்த பொருளை மீண்டும் பெறுவதுடன், கடன் தொல்லை, பில்லி, சூனியம், பகைகளில் இருந்து மீள முடியும்.

Read More
 திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில்

காணும் பொங்கலன்று மாட்டு வண்டியில் வீதி உலா வரும் திருத்தணி முருகன்

திருத்தணி முருகன் கோவிலின் உற்சவர் காணும் பொங்கலன்று, வள்ளி, தெய்வானையுடன் மலைக்கோவிலில் இருந்து படிகள் வழியாக இறங்கி வருவார். பின்னர் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் உற்சவ பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தர நகர வீதிகளில் உலா வருவார். திருவீதி உலா வரும் தெருக்களில் வண்ணக்கோலங்கள் போட்டு, கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து பக்தர்கள் முருகனை வழிபடுவர். பொதுவாக காணும் பொங்கல் அன்று பக்தர்கள் கோவிலுக்கு இறைவனை தரிசிக்க செல்வது வழக்கம். ஆனால், திருத்தணியில்

பக்தர்களுக்கு தரிசனம் தர, முருகப்பெருமானே மலையில் இருந்து இறங்கி வருவது தனிச்சிறப்பாகும்.

காணும் பொங்கல் சிறப்புகள்

பொங்கல் பண்டிகையை நான்கு நாட்கள் கொண்டாடுவது வழக்கம். பொங்கலுகக்கு முந்தைய நாளும், மார்கழி மாதத்தின் கடைசி நாளும் ’போகி’ பண்டிகை கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல்நாள் தைப்பொங்கல் கொண்டாடாப்படுகிறது. இடண்டாவது நாளில் உழவுக்கு உதவும் மாடுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடுகிறோம். நான்காவது நாள்தான் காணும் பொங்கல். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். காணும் பொங்கல் (கன்னி பொங்கல்) அன்று திருமணம் ஆகாத கன்னி பெண்கள் தமக்கு நல்ல கணவர் கிடைக்க வேண்டுமென்று மார்கழி மாதம் முழுவதும் விரதம் எடுத்து பொங்கல் வைத்து வழிபாடு செய்வது கன்னி பொங்கலாகும்.

காணும் பொங்கல் அன்று செய்த சாதத்தை உடன் பிறந்தவர்களின் நன்மைகாக, காக்கா குருவிக்கு அன்னமிடவேண்டும் என்பதே சம்பிரதாயமாகும். ஆற்றங்ரையிலோ அல்லது வீட்டு மொட்டைமாடியிலோ ,மஞ்சள் அல்லது வாழை இலைகளை கிழக்கு முகமாய் பார்த்து 5 வகையான சாதங்களை வைக்கவேண்டும். முதல் நாள் பொங்கிய சாத்தில் மஞ்சள் பொடி, கொஞ்சம் குங்குமம் தூவி, பால் சேர்த்து , சக்கரைப் பொங்கல், தயிர் சேர்த்த சாதத்தை காகத்திற்கும் ,குருவிக்கும் படையல் வைக்க வேண்டும். 'காக்காப்பிடி வச்சேன் கணுப்பிடி வச்சேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணம். கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம். கூடப்பிறந்த சகோதர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய் வாழணும்' என்றுச் சொல்லி படையல் வைக்க வேண்டும்.

காணும் பொங்கலன்று உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் பெரும்பாலோரின் நடைமுறையாக உள்ளது. முக்கியமான பண்டிகை ஆகும். இந்நாள் பெண்களுக்கு, பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.டக்கும்.

Read More
தஞ்சைப் பெரிய கோவில்

தஞ்சைப் பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவில் நந்திக்கு மாட்டுப் பொங்கலன்று நடைபெறும் சிறப்பு பூஜை

உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீட்டர், நீளம் 7 மீட்டர், அகலம் 3 மீட்டர் ஆகும். இதன் எடை 20 டன் ஆகும். இந்த நந்தியம் பெருமான், ஆந்திர மாநிலத்தில் உள்ள லேபாக்ஷி கோவில் நந்திக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே 2வது பெரிய நந்தி ஆவார். ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கல் தினத்தில், நந்தியம் பெருமானுக்கு பூஜைகள் மிகவும் சிறப்பாக நடக்கும். அப்போது 108 பசுக்களுக்கு 'கோ' பூஜை செய்யப்படும். பெருந்திரளான பக்தர்கள் இந்த பூஜையில் கலந்து கொள்கிறார்கள். மிகவும் விஷேசமான இந்த பூஜையையொட்டி, நந்திககு ஒரு டன் எடையில் காய்கறிகள், பழங்கள், பலவகை இனிப்புகள், பலகாரங்கள் உள்ளிட்டவைகளால் அலங்கரித்து பெருவுடையாருக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடத்தப்படும். இந்த பூஜையில் கலந்துகொண்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
திருத்தெளிசேரி பார்வதீசுவரர் கோவில்

திருத்தெளிசேரி பார்வதீசுவரர் கோவில்

சிவனும், பார்வதியும் உழவராக பணிபுரிந்து பஞ்சம் தீர்த்த தேவாரத்தலம்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நகரின் ஒரு பகுதியாக விளங்கும் தேவார தலம் திருத்தெளிசேரி. இறைவன் திருநாமம் பார்வதீசுவரர், இறைவியின் திருநாமம் பார்வதியம்மை.

ஒரு சமயம் உணவு பஞ்சம் சோழநாட்டில் சரிவர மழை பெய்யாததால் உணவு பஞ்சம் ஏற்பட்டது. நாட்டு மக்கள் பசியால் வாடினர். சோழ மன்னன் இத்தல இறைவனிடம் வேண்டினான். இதையேற்ற சிவபெருமான், பார்வதிதேவியுடன் உழவன் வேடத்தில் வந்து, நிலங்களில் விதை தெளித்துச் சென்றார். பயிர் சிறப்பாக விளைந்து பஞ்சம் நீங்கியது. இறைவனே விதை தெளித்து சென்றதால் இத்தலம் 'திருத்தெளிசேரி' ஆனது. இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் விதத்தில் இத்தலத்தில் ஆனி மாதம் விதை தெளிவு உற்சவம் நடைபெறுகின்றது. இறைவனும் இறைவியும் கோவிலுக்கு எதிரே உள்ள சூரிய தீர்த்தத்திற்கு எழுந்தருளி விதை தெளிக்கும் வைபவம் நடைபெறும். அதன் பின்னரே, விவசாயிகள் தங்கள் நிலத்தில் விதை தெளிப்பார்கள்.

பங்குனி மாதம் நடைபெறும் சூரிய பூஜை

சூரியபகவான் தனது துணைவியான சாயா தேவியிடம் அன்பு செலுத்தாத காரணத்தினால், அவள் மிகுந்த வருத்தமடைந்தாள். இதனை நாரதர் மூலம் அறிந்த அவளது தந்தை, சூரியனை சபித்து விட்டார். இதனால், சூரியன் தனது ஒளியை இழந்து வருந்தி இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி பார்வதீசுவரரை வழிபட்டான். இவனது வழிபாட்டிற்கு மகிழ்ந்த இறைவன் சாபத்தை நீக்கி அருளினார். சூரியன் வழிபட்டதால், இதனை 'பாஸ்கரத்தலம்' என்கின்றனர். . இறைவனை வழிபட்டு சூரிய பகவான் சாபம் நீங்கப் பெற்றதால், ஆண்டு தோறும் பங்குனி மாதம் 13ம் தேதி முதல் 19ம் தேதி வரை சூரிய பூஜை வெகு விமரிசையாக இங்கு கொண்டாடப்படுகிறது. அந்த நாட்களில், அஸ்தமனச் சூரியன் தன் பொன் நிறக்கதிர்களால் இறைவனை ஆராதனை செய்யும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

Read More
பிரமனூர் கைலாசநாத சுவாமி கோவில்

பிரமனூர் கைலாசநாத சுவாமி கோவில்

அபூர்வமான ஆறடி உயரமுள்ள சூரியபகவான்

மதுரையில் இருந்து 23 கிமீ தூரத்தில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்திலுள்ள பிரமனூரில் அமைந்துள்ளது கைலாசநாத சுவாமி கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி. பிரம்மதேவன் சிவனால் ஏற்பட்ட சாபம் நீங்க இத்தலத்துக்கு வந்து வழிபட்டதால், இந்த ஊருக்கு (பிரமன்+ஊர்) பிரமனூர் என பெயர் ஏற்படடது.

பல நூறு ஆண்டுகள் பழமையான கோவிலில் உள்ள சூரியபகவான் சிலை மிகவும் அபூர்வமானது. சுமார் 6 அடி உயரமுள்ள இந்த சூரியபகவான் இறைவனை பார்த்த வண்ணம், சுவாமியின் இடப்பாகம் எழுந்தருளி உள்ளார்.

பொதுவாக சூரிய பகவான், சூரியபகவான் இறைவனின் வலப்பாகத்தில் தான் இருப்பார். இத்தகைய சூரிய பகவானை, இந்தியாவின் வேறு எந்த தலத்திலும் நாம் காண்பது அரிது.

மகர சங்கராந்தி

சூரிய பகவான் மகர ராசிக்குள் பிரவேசிக்கும் தினமே மகர சங்கராந்தி ஆகும். சூரியபகவான் வான்வெளியில் வடக்கு நோக்கி தனது பயணத்தை திருப்புகின்ற நாள் தான் மகர சங்கராந்தி. சமசுகிருதத்தில் 'சங்கரமண' என்றால், 'நகரத் துவங்கு' என்று பொருள். இதுவே இவ்விழா சங்கராந்தி என அழைக்கப்பட காரணமாயிற்று. தமிழகத்தில் இந்நாள், பொங்கல் பண்டிகை எனவும், இந்தியாவின் பிற பகுதிகளில் சூரிய வழிபாடு எனும் மகர சங்கராந்தி என்ற பெயரிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் இது தானிய அறுவடையோடு ஒன்றுவதால், அறுவடை திருவிழாவாகவும், சூரியனுக்கு வரவேற்பும், நன்றியும் தெரிவிக்கும் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

Read More
திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோவில்

மயூர வாகன சேவன விழா

சென்னை திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பாம்பன் சுவாமிகள் கோவில். அருணகிரிநாதரைத் தன் ஞானகுருவாக ஏற்றுக்கொண்டு அவர் வழியில் முருகன் துதிபாடியவர் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள். ராமேசுவரத்திற்கு அருகில் உள்ள பாம்பன் என்ற ஊரில் 1850 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் அப்பாவு. சிறுவயது முதலே முருகப்பெருமானின் மீது தீவிர பக்திக் கொண்டிருந்தார். அருணகிரிநாதரைத் தன் ஞானகுருவாக ஏற்றுக்கொண்டு, அவர் வழியில் முருகன் துதிபாடியவர் பாம்பன் சுவாமிகள். இவர் முருகன் மேல் இயற்றிய பாடல்களின் மொத்த எண்ணிக்கை 6666. இவர் தமிழ் உயிர் எழுத்துக்கள்(12), மெய்யெழுத்துக்கள்(18) எண்ணிக்கையை ஒன்றிணைத்து, இயற்றிய 30 பாடல்கள் கொண்ட 'சண்முகக்கவசம்', முருக பக்தர்களுக்கு இடையே மிகவும் பிரசித்தி பெற்றது.

இவர் வாழ்க்கையில் முருகன் புரிந்த திருவிளையாடல்கள் அநேகம். அவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மருத்துவர்கள் எலும்பு கூடாது என்று காலை அகற்ற நினைத்திருந்த தருணத்தில் முருகப்பெருமான் அவருக்கு காட்சியளித்து குணப்படுத்தியது பெரிய அதிசய நிகழ்வாகும். இந்த நிகழ்ச்சியை பற்றிய ஆதாரப்பூர்வமானபதிவுகளை, இன்றளவும் நாம் சென்னை பொது மருத்துவமனையில் (ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை) பார்வையிடலாம்.

பாம்பன் சுவாமிகளுக்கு, அரசு மருத்துவமனையில் முருக தரிசனம்

சென்னை தம்புச் செட்டித் தெருவில், 27-12-1923 நாளன்று பாம்பன் சுவாமிகள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, வேகமாக வந்த ஒரு குதிரை வண்டி சுவாமிகளின் மீது மோதியதால், அவரின் இடது கால் கணுக்கால் எலும்பு முறிந்து விட்டது. இந்த விபத்தைக் கண்ணுற்ற சுவாமிகளின் அன்பர், சுவாமிகளைச் சென்னை அரசு பொது மருத்துவமனையில் 11ம் எண்ணுள்ள மன்றோ வார்டில் சேர்ந்தார். சுவாமிகள் 73 வயதுக்கு மேற்பட்டவர் என்பதாலும், உப்பு, புளி, காரம் அற்ற உணவையே உண்பவர் என்பதாலும் அவர்களின் முறிந்த எலும்பு ஒன்று சேராது என்றும், அதனால் அறுவை சிகிச்சை செய்து காலை அகற்ற வேண்டும் என்றும் ஆங்கிலேய மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.அது கேட்ட அன்பர்கள் மிகவும் வருந்தினர். மருத்துவமனையில் சேர்ந்த 11ம் நாள் இரவில் முருகப் பெருமானின் பெரிய மயில் ஒன்று தனது தோகையை நல்ல வட்ட வடிவமாக விரித்து, அழகிய வானை மறைத்தும், அதன் இடப்பக்கத்தில் உடன் வந்த மற்றொரு மயிலுடன் சேர்ந்து நடனமாடிய அழகிய காட்சியைச் சுவாமிகளுக்கு முருகப்பெருமான் காட் டியருளினான். மயில்களின் கால்கள், தரையில் பதியவில்லை. அவை பொன்மய பச்சை நிறமாக இருந்தன. முருகன் மயில்கள் மீது அமர்ந்து வரும் அரிய மயூரவாகன சேவனக்காட்சியை சுவாமிகள் கண்டு களித்தார். இந்நிகழ்ச்சியை சுவாமிகள் 'அசோகசாலவாசம்' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்:

அம்மயூரவாகனக் காட்சியானது தன்னை விட்டு மறைதலைக் கண்டு, மீண்டும் இது போன்றொரு காட்சி எவ்வாறு கிடைக்கும் என்று நினைத்து சுவாமிகள் அழுதார். அவர் மனம் மகிழுமாறு ஓர் இரவில் முருகப்பெருமான், ஒரு சிவந்த நிறக் குழந்தை வடிவில் தோன்றி சுவாமிகள் படுத்திருந்த படுக்கையிலேயே தானும் தலை வைத்துக் காலை நீட்டிப் படுத்திருந்தான். அத்திருக்காட்சியைக் கண்ட சுவாமிகள், குழந்தையாக வந்தவன் முருகப் பெருமானே என்று உணர்ந்ததும் முருகப்பெருமான் மறைந்துவிட்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர்,அவரது முறிந்த கால் எலும்பு கூடிவிட்டது. பெரிய மருத்துவரான ஆங்கிலேயர் இவரை சோதித்து, 'உணவில் உப்பை முற்றிலும் நீத்த தங்களின் கால் குணமாகியது பெரும் வியப்பாக உள்ளது' என்று அன்புடன் கூறினார். இது தெய்வச் செயல் என்று அறிந்து அடிகளாரை வணங்கினார். இரு வாரங்களில் சுவாமிகள் முழுமையாக குணமடைந்தார்.

முருகப்பெருமான் திருவருளால், 11ம் நாள் இரவு (6-1-1924) வளர்பிறைப் பிரதமை திதியும், பூராட நட்சத்திரமும் சேர்ந்த நன்னாளில், சுவாமிகள் மயில் வாகனக் காட்சி கண்டு, அறுவை சிகிச்சை இல்லாமலே பூரண குணம் பெற்றார். பின் சுவாமிகளின் வேண்டுகோளின்படி, இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் அவர் அடியார்கள், ஒவ்வொரு ஆண்டும் மயூர வாகன சேவன விழாவை நடத்தி வருகின்றார்கள்.

பாம்பன் குமரகுருதாச சுவாமிகளுக்கு மயிலும், முருகப்பெருமானும் காட்சிக் கொடுத்த 100-வது ஆண்டு மயூர வாகன சேவன விழா, 10.1. 2024 முதல் 12.1.2024 வரை, மூன்று நாட்கள் திருவான்மியூர், பாம்பன் குமரகுருபர சுவாமி கோவிலில் கொண்டாடப்பட்டது..

Read More
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்

கவியரசர் கம்பருக்காக ஸ்ரீஆண்டாள் நடத்திய திருவிளையாடல்

பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒரே பெண், ஆண்டாள் நாச்சியார். அவர் அவதரித்த நட்சத்திரம் பூரம். ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இவளை வடமாநிலங்களில் கோதாதேவி என்று அழைப்பர். பெருமாளின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமி பிராட்டியின் அம்சமாக அவதரித்தவர்ஆண்டாள் நாச்சியார். ஸ்ரீரங்கம் ரங்கநாதனுக்கு சூட்ட வேண்டிய பூமாலையை தானே சூடிக் கொண்டு ஆடியில் அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள்.

இக்கோவிலில் நடைபெறும் 'மார்கழி நீராடல்' உற்சவத்தின் ஆறு மற்றும் எட்டாம் நாட்களில் நடக்கும் சவுரித் திருமஞ்சனம் விசேஷமானது. அப்போது ஒரு நாள், மூக்குத்தி சேவை நடைபெறும். ஸ்ரீ ஆண்டாளின் மூக்கருகே, தங்க மூக்குத்தியைக் கொண்டு சென்றதும், அது தானாகவே ஆண்டாளின் மூக்குடன் ஒட்டிக் கொள்கிறது.

கவிச்சக்ரவர்த்தி கம்பர் ஒரு முறை 'மார்கழி நீராடல்' உற்சவத்தைக் காண ஸ்ரீவில்லிப்புத்தூருக்குக் கிளம்பினார். ஆனால், குறித்த நேரத்துக்குள் அவரால் திருமுக்குளத்துக்கு வந்து சேர இயலவில்லை. நீராடல் வைபவத்தை தரிசிக்க முடியாதோ' என்ற ஆதங்கத்துடன் உற்சவ மண்டபத்துக்கு வந்து சேர்ந்த கம்பருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதுவரை விழா ஆரம்பமாகவில்லை. காரணத்தை கம்பர் கேட்டபோது, 'எண்ணெய்க் காப்பு நீராடல் முடிந்ததும். ஸ்ரீஆண்டாளுக்கு வைர மூக்குத்தி சேவை நடைபெறும். அந்த மூக்குத்தியைக் காணோம்' என்று பதில் அளித்தனர்.

உடனே, கம்பர் தன் கையிலிருந்து மூக்குத்தி ஒன்றை எடுத்து அவர்களிடம் காட்டி, 'இதுவா பாருங்கள்?' என்றார். எல்லோருக்கும் ஆச்சரியம். 'ஸ்ரீஆண்டாளின் வைர மூக்குத்தி கம்பரிடம் எப்படி வந்தது?' எனக் கேட்டனர். கம்பர். 'திருமுக்குளம் கரை ஏறியபோது ஏதோ ஒன்று மின்னியதைக் கண்டு எடுத்து வந்தேன்!' என்றார். நீராடல் வைபவத்தைக் கம்பர் காண வேண்டும் என்பதற்காக ஸ்ரீஆண்டாள் நடத்திய திருவிளையாடலே இது என்று அனைவரும் உணர்ந்தனர்.

கூடாரவல்லித் திருநாள்

மார்கழி மாதம் 26 நாட்க பாவை நோன்பிருந்த ஆண்டாள், அரங்கநாதனின் திருவுளப்படி மார்கழி மாதத்தின் இருபத்து ஏழாவது நாளில் அவருடன் இரண்டறக் கலந்தாள்.

Read More
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் சிறப்புகள்

தமிழகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில். 1500 ஆண்டுகள் பழமையானது. நாமக்கல் கோட்டைக்கு கீழே, நரசிம்மர், நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆஞ்சநேயர் விக்கிரகங்களில் இதுவும் ஒன்று. அவரது திருமேனி, பீடத்திலிருந்து 22 அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது. இந்த ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. வெட்டவெளியில் மழையிலும், வெயிலிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

ராமாயண காலத்தில், சஞ்சீவி மலையில் உள்ள மூலிகையைப் பெறுவதற்காக ஆஞ்சநேயர், இமயத்தில் இருந்து மலையைப் பெயர்த்து எடுத்து வந்தார். பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார். அவ்வாறு வருகையில் அங்கிருந்து ஒரு பெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்து வந்தார். அந்த நேரத்தில் சூரியன் உதயமானதால் வான்வழியாக வந்துகொண்டிருந்த ஆஞ்சநேயர், தமது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சூரிய நமஸ்காரம் செய்தார். மீண்டும் வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார். ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை. அப்போது ராமனுக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல் என்று அசிரீரி ஒலி கேட்க, ஆஞ்சநேயரும் அங்கேயே விட்டு விட்டு கிளம்பினார். ராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் அங்கே வந்தார். ஆஞ்சநேயர் விட்டுப் போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க, ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

குழந்தைகள் நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் அவர்களுக்கு அறிவு, வீரம், ஞாபகசக்தி, சுறுசுறுப்பு, நல்ல ஒழுக்கம், நற்பண்புகள் ஆகிய நற்பலன்கள் கிடைக்கும்.

Read More
கருப்பத்தூர் சிம்மபுரீசுவரர் கோவில்

கருப்பத்தூர் சிம்மபுரீசுவரர் கோவில்

பக்தர்களின் கோரிக்கைகளை கேட்பதற்காக ஒரு காது பெரிதாக உள்ள நந்தி

சிம்மபுரீசுவரர் கோயில் என்பது கரூர் மாவட்டத்திலுள்ள கருப்பத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சிம்மபுரீசுவரர் என்றும், அம்பிகை குந்தாளம்பாள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

கரூர் மாவட்டம் திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில், குளித்தலையிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது கருப்பத்தூர் சிம்மபுரீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் சிம்மபுரீசுவரர். இறைவியின் திருநாமம் குந்தாளம்பாள். நரசிம்மர் பூஜை செய்து பாவம் விலகப்பெற்ற தலம் கருப்பத்தூர். இங்குள்ள இறைவன் நரசிம்மபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டு பின் சிம்மபுரீஸ்வரர் என அழைக்கப்படலானார்

இத்தலத்து நந்தியம் பெருமான் ஒரு காதில் பெரிய துவாரமும், மற்றொரு காதினை மூடியவாறும் இருக்கிறார். இவரிடம், பக்தர்கள் தங்களின் குறைகளைச் சொன்னால், இறைவனிடம் அக்கோரிக்கைகளை நந்தி கூறுவார். இரணியனை கொன்ற பாவம் நீங்க, நரசிம்மர் இத்தலத்துக்கு வந்து வழிபட்டார். சிவபெருமான் நரசிம்மரைப் பார்த்து, 'இரணியவதம் செய்ததால் ஏற்பட்ட ரத்தக்கறை, பாவம் இரண்டும் நீங்கப் பெற வேண்டும் என நந்தியின் காது வழியே கூறு. அவைகள் நீங்கிப் பெறுவாய் ' எனக் கூற அதன்படியே நந்தியின் காதில் நரசிம்மர் கூறி, பின் பாவ விமோசனம் அடைந்தார். எனவேதான், பக்தர்கள் இத்தலத்து நந்தியின் மூலம், தங்கள் கோரிக்கைகளை இறைவனிடம் சமர்ப்பிக்கிறார்கள்.

Read More
அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி கோவில்

பாலகனாக, ஆண்டி கோலத்தில் காட்சி தரும் முத்துக்குமாரசாமி

திருப்பூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி கோவில். கொங்கு நாட்டின் புகழ்பெற்ற முருகன் தலங்களில் இதுவும் ஒன்று. 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் மிகவும் ரம்மியமான இயற்கை சூழலில் அமைந்துள்ளது. இந்த மலைக்கோவிலுக்கு, நடந்து செல்ல 300 படிக்கட்டுகள் உள்ளன. வாகனத்தில் செல்ல சாலை வசதியும் உண்டு. அலகு என்றால் 'மூக்கு' என்பது பொருள். மூக்கின் வடிவம் போல் இந்த மலை அமைந்து உள்ளதால் 'அலகு மலை' என்று அழைக்கப்படுகிறது.

கோவில் கருவறையில், முருகன் நான்கரை அடி உயர திருமேனியுடன் பாலகனாக, பழனி மலையில் இருப்பது போல் ஆண்டி கோலத்தில், சிறிது குஞ்சம் போன்று முடியுடன் வலது கையில் தண்டாயுதத்தை தாங்கியபடி காட்சி அளிக்கின்றார். மூலவர் முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கண்களை சற்றே தாழ்த்திய நிலையில் ஞானகுருவாக அருள்புரிகிறார். வள்ளியும், தெய்வானையும் தனி சந்ததியில் காட்சி தருகிறார்கள்.

முருகனின் அறுபடை வீடுகளுக்கான தனிச் சன்னதிகள் இக்கோவிலில் உள்ளன. ஆறுபடை வீடுகளில் முருகப்பெருமான் எந்தக்கோலத்தில் உள்ளாரோ, அதே போன்று இந்த சன்னிதிகளிலும் காட்சி தருவது சிறப்பம்சமாகும்.

சிவபெருமான் கேள்விக்கு முருகன் அளித்த சமயோசித பதில்

ஒரு முறை திருகயிலாயத்தில் பாலகனான முருகப்பெருமான் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பார்வதிதேவியும், கங்காதேவியும் தன் அருகில் வருமாறு அழைத்தனர். ஆனால் முருகப்பெருமான், அவர்கள் அருகில் செல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிவபெருமான், முருகனின் அருகில் சென்று, 'இங்கே உள்ள இரண்டு தாய்மார்களில் உனக்கு கங்காதேவியை பிடிக்குமா? பார்வதிதேவியை பிடிக்குமா?' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு முருகப்பெருமான், 'அறன் மாதாவின் மீதுதான் எனக்கு மிகுந்த ஆசை' என்று முருகப்பெருமான் சமயோசிதமாக பதில் கூறினார். அதாவது 'அறன்மாதா' என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. 'அறம் வளர்த்த நாயகி' என்பது ஒரு பொருள். அறம் வளர்த்த நாயகி என்றால் பார்வதி தேவியை குறிக்கும். மேலும் 'உயிர்களை காக்கும் நீர்' என்ற பொருளும் உண்டு. இது கங்காதேவியை குறிப்பதாகும். இவ்வாறு முருகப்பெருமான் ஒரு வார்த்தையில் இரண்டு அன்னையரையும் பிடிக்கும் என்று கூறினார்.

திருமணம் கைகூட முருகனுக்கு தேன் கலந்த அன்னாசி அபிஷேகம்

திருமணத்திற்கு காலதாமதம் ஆகும் ஆண் பெண்கள், இந்த முருகனுக்கு தேன் கலந்த அன்னாசி அபிஷேகம் செய்தால், நல்ல மணவாழ்க்கை அமையும். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு, அதை நிறைவேற்றும் தெய்வமாக இந்த பாலமுருகன் திகழ்கிறார்.

Read More
நல்லாத்தூர் பொன்னம்பலநாதர் கோவில்

நல்லாத்தூர் பொன்னம்பலநாதர் கோவில்

சாளரத்தின் வழியாக மட்டுமே தரிசனம் தரும் சிவபெருமான்

கடலூர் மாவட்டம் நல்லாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது பொன்னம்பலநாதர் என்கிற சொர்ணபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சாளரக் கோவில் வகையைச் சேர்ந்தது. இத்தகைய கோவில்களில் கருவறைக்கு எதிரில் வாசல் கிடையாது. மூலவரை பலகணி என்னும் கருங்கல் ஜன்னல் (சாளரம்) வழியாகத்தான் தரிசிக்க முடியும். சாளர சக்கரத்திற்கு கீழ் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள் உள்ளடக்கிய சர்ப்ப யந்திரம் உள்ளது. துவாரபாலகர்களை எந்த ஒரு கோவிலிலும் வலம் வர முடியாது. ஆனால், இங்கே வலம் வரலாம். மகாமண்டபமான சொக்கட்டான் மண்டபத்தில் 24 இதழ்களுடன் கூடிய மூன்றடுக்கு தாமரை கவிழ்ந்த நிலையில் அமைந்திருப்பது சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது.

பலகணி வழியாகப் பார்க்கின்ற சிவலிங்கங்கள், அக்னியின் சொரூபம் என்று சொல்லப்படுகிறது. இவரை நேரடியாக தரிசிப்பதற்கான உடல் வலிமை பக்தனுக்கு இருக்காது. எனவே பலகணி வழியாக வழிபாடு செய்தால், அவரவர் உடல் நிலைக்கு தகுந்தாற் போல் தீக்கதிர்கள் இறைவனிடமிருந்து வெளிப்பட்டு உடல் பலமும் மனபலமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

ஆங்கிலேய கலெக்டர், தன் மகளுக்கு கண்பார்வை கிடைத்ததற்கு, காணிக்கையாக கொடுத்த ஆலயமணி

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 120 ஆண்டுகளுக்கு முன்னர், கடலூர் (அப்போதை தென்னாற்காடு மாவட்டம்) கலெக்டராக பணிபுரிந்தவர் பகோடா என்பவர். அவரது மகள் கண்பார்வையற்று இருந்தார். இவ்வாலயத்தில் தரிசனம் செய்ததால் அந்த சிறுமிக்கு கண்பார்வை கிடைத்தது. இதனால் மகிழ்ந்த ஆங்கிலேய கலெக்டர் பகோடா நஞ்சை நிலங்களை ஆலயத்திற்கு வழங்கினார். பின்னர் இங்கிலாந்து நாட்டில் உருவாக்கப்பட்ட அற்புத ஓசையுடன் கூடிய ஆலயமணியை 1907ம் ஆண்டு இந்த கோவிலுக்கு வழங்கினார். இந்த மணியின் ஓசை குறைந்தது 3 கி.மீ தொலைக்கு கேட்கும் என்பது கூடுதல் சிறப்பு.

பிரார்த்தனை

இத்தலத்தில் 5 நிமிடம் வழிபாடு செய்தால் பல்லாண்டு வழிபட்ட பலன் கிடைக்கும். சுவாசம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தட்சிணாயண (ஆடி), உத்ராயண (தை) புண்ய காலங்களில் சூரியனுக்குரிய ஆரஞ்சு நிற ஆடை, கோதுமை வகை உணவுகளை தானமாக கொடுத்து வழிபடுவது நல்ல பலன் தரும். பிதுர் தோஷத்திற்கான பரிகார தலம் இது.

Read More
நல்லாட்டூர் வீர மங்கள ஆஞ்சநேயர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

நல்லாட்டூர் வீர மங்கள ஆஞ்சநேயர் கோவில்

குழந்தை வடிவில் இருக்கும் ஆஞ்சநேயர்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகாவில் உள்ள நல்லாட்டூர் கிராமத்தில், குசஸ்தலை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது வீர மங்கள ஆஞ்சநேயர் கோவில். இக்கோவில் பால ஆஞ்சநேயர் கோவில் என்று பிரசித்தி பெற்றுள்ளது. கிருஷ்ணதேவராயரின் குருவாக இருந்த துறவி ஸ்ரீ வியாசராஜ சுவாமிகளால், 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இவர் எழுநூற்று முப்பத்திரண்டு ஆஞ்சநேயர் கோவில்களை தென்னிந்தியாவின் பல பகுதிகளில் கட்டியுள்ளார்.

ஒரு சமயம், துறவி ஸ்ரீ வியாசராஜ சுவாமிகள், தனது வியாச பூஜை மற்றும் சதுர் மாச விரதத்தைக் கடைப்பிடிப்பதற்காக திருப்பதிக்குச் சென்று கொண்டிருந்தார். அங்கு வீர ஆஞ்சநேயர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்காக, தன்னுடன் அந்த சிலையை எடுத்துச் சென்றார். ஆனால் குசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அவரால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. அதனால், ஸ்ரீ வியாசராஜ சுவாமிகள் நல்லாட்டூர் கிராமத்தில், குசஸ்தலை ஆற்றின் கரையில் ஸ்ரீ வீர ஆஞ்சநேய சிலையை நிறுவினார்,

கருவறையில் எழுந்தருளி இருக்கும் மூலவர், வீர மங்கள ஆஞ்சநேயரின் தோற்றம், சிறு குழந்தையின் உருவத்தை ஒத்திருப்பதால் அவர் பால ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார். அவர்,திருப்பதி வேங்கட நாதன் வீற்றிருக்கும் வடக்கு திசையை நோக்கி நடக்கும் பாவனையில் இருக்கின்றார். அவரது வலதுகரம் அபயமுத்திரை தாங்கியும், இடது கரம் தாமரை மலர் ஏந்தியும் காணப்படுகிறது. நரசிம்மரைப் போல் இவருக்கும் கோரப்பற்கள் உள்ளன. தலைக்கு மேல் செல்லும் அவரது வாலின் முனையில் ஒரு மணி தொங்குகிறது.

ஓட்டல் நிர்வாகியின் மூலம் தன் கோவிலை சீரமைத்த ஆஞ்சநேயர்

துறவி ஸ்ரீ வியாசராஜ சுவாமிகளால் நிர்மாணிக்கப்பட்ட இக்கோவில், பல ஆண்டுகளுக்குப் பின்னர் சிதிலமடைந்தது. 1997-ம் ஆண்டு, தென்னகத்தில் பிரபலமாக விளங்கும் ஒரு ஹோட்டல் குழுமத்தின் நிர்வாகியின் கனவில் ஆஞ்சநேயர் தோன்றி, கோவிலை சீரமைக்கும்படி உத்தரவிட்டார். தன் நிர்வாகப் பணியிலே கவனம் செலுத்தி வந்த அவருக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இல்லாமல் இருந்தது. ஆனால் ஆஞ்சநேயரின் இந்த உத்தரவு அவருக்கு வியப்பளித்தது. அவருடைய முயற்சியால் கோவில் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோவிலின் முகப்பில் ஆஞ்சநேயரின் மிகப்பெரிய சுதை சிற்பம் நிறுவப்பட்டது.

பிரார்த்தனை

இந்த ஆலயத்தின் நடைபெறும் வருடாந்திர ஸ்ரீ சீதா திருக்கல்யாண உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த வைபவத்தின் பிரதான அம்சமே ராமர்- சீதை இருவரும் தம்பதி சமேதகர்களாக காப்புக் கயிறு கட்டிக் கொள்வதுதான். திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலாரும் இங்கு வந்து ராம-சீதை திருமணத்தன்று வழங்கப்படும் காப்புக் கயிற்றைக் கட்டிக் கொண்டால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நீண்ட கால நம்பிக்கை ஆகும்.

Read More
அயோத்தியாபட்டணம் கோதண்டராமர்  கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

அயோத்தியாபட்டணம் கோதண்டராமர் கோவில்

ராமரும் சீதையும் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் அபூர்வ கோலம்

சேலத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது, அயோத்தியாபட்டணம் கோதண்டராமர் கோவில். ராவணனை வதம் செய்து, சீதையை மீட்டுக் கொண்டு, அயோத்திக்கு முடி சூட்டிக்கொள்ள திரும்பும் வழியில், ராமர் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தந்த தலம் இது.

ராமபிரான், பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளின்படியும், விபீஷ்ணனின் பிரார்த்தனையை ஏற்றும் இந்த இடத்தில், சீதாபிராட்டியுடன் சேர்ந்து பட்டாபிஷேகக் கோலத்தை காட்டியருளினார். ஆக, அயோத்தியில் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருவதற்கு முன்பாகவே, இங்கு முதன்முதலாக பட்டாபிஷேகக் கோலத்தில் காட்சி தந்ததால்தான் இவ்வூர் அயோத்தியா பட்டணம் என்று அழைக்கப்படுகின்றது.

கருவறையில் ராமரும் சீதையும் கால் மேல் கால் போட்டு அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கின்றனர். அவர்களின் இத்தகைய தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது. பொதுவாக ராமரின் வலது புறத்தில் எழுந்தருளும் சீதாபிராட்டி, இத்தலத்தில் இடதுபுறம் வீற்றிருப்பது மேலும் ஒரு சிறப்பாகும். ராமர் மற்றும் சீதைக்கு பரதன், லட்சுமணன், சத்ருக்னன் ஆகியோர் சேவை சாற்றியபடியும், அங்கதன், சுக்ரீவன், ஆஞ்சநேயர் ஆகியோர் ராமபிரான்-சீதாதேவியை சேவித்தபடியும் உள்ளனர்.

இக்கோவில் சிற்பங்கள் மிக்க கலை நயமும், அபார அழகும் கொண்டவையாக இருக்கின்றன. இக்கோவில் சிற்ப வேலைப்பாடுகள், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், திருச்செங்கோடு முருகன் கோவில் ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ள அழகிய சிற்ப வேலைப்பாடுகளுக்கு இணையாக உள்ளன. இங்கு இடம்பெற்றுள்ள இசைத் தூண்கள், ராமர் பட்டாபிஷேக சிற்பம், குதிரை, யானை, யாழி, சிங்கம் சிற்பங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

பிரார்த்தனை

இந்த ஆலயத்துக்கு வந்து கோதண்ட ராமசுவாமியை வணங்கினால், திருமணத் தடை உள்ளவர்களுக்குத் தடை நீங்கி, தாலி பாக்கியம் கிடைக்கும்; ராகு கேது தோஷம் நிவர்த்தி ஆகும்; வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்; சொத்துத் தகராறுகள் நிவர்த்தி ஆகும்; குடும்பப் பூசல்கள் நீங்கும்; குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில்

முப்பெரும் தேவியரும் ஒன்றாய் இணைந்திருக்கும் கோட்டை மாரியம்மன்

திருப்பூர் பிச்சம் பாளையம் பகுதியில் அமைந்துள்ளது கோட்டை மாரியம்மன் கோவில். இக்கோவில் திருப்பூர் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. தாயாய் இருந்து இந்தப் பகுதி மக்களை காப்பதால், இக்கோவிலுக்கு தாய்மை கோவில் என்ற பெயரும் உண்டு. விஜயநகரப் பேரரசு காலத்தில் இங்கு கோட்டை கட்டப்பட்டதாகவும், அதையடுத்து கோட்டைக்குள் அம்மனின் விக்கிரகத்தைப் பிரதிட்டை செய்து கோவில் அமைத்ததாகவும், அதனால் அம்மனுக்கு ஸ்ரீகோட்டை மாரியம்மன் எனத் திருநாமம் அமைந்ததாகவும் சொல்கின்றனர்.

ஸ்ரீதுர்கை, ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி ஆகிய மூன்று தேவியரும் ஒருங்கே இணைந்து காட்சி தரும் திருக்கோலத்தில் அமைந்திருக்கிறாள் கோட்டை மாரியம்மன். திருமுகத்தில் லட்சுமி கடாட்சம் பொங்க, யோக நிலை ஸ்ரீசரஸ்வதி தேவியின் அம்சமாகவும், ஆயுதம் ஏந்திய நிலை ஸ்ரீதுர்கையை நினைவூட்டுவதாகவும் இந்த அம்மனின் தோற்றம் விளங்குகின்றது.

பிரார்த்தனை

திருமணத் தடை, தொழிலில் நஷ்டம், குடும்பத்தில் பிரச்னை எனத் தவிப்பவர்கள், செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளிலும், மாதாந்திர அஷ்டமி நாட்களிலும் தொடர்ந்து 12 வாரங்கள் வந்து, அம்மனுக்குத் திரிசதி அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வழிபட்டால், கல்யாண வரம், பிள்ளை பாக்கியம் கைகூடும். தொழில் சிறக்கும். குடும்பத்தில் இருந்த கவலைகள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்! கோவிலில் உள்ள நாகர் சந்நிதி மிகவும் சக்தி வாய்ந்தது . வெள்ளிக்கிழமை ராகு கால வேளையில், இங்கு வந்து நாகருக்குப் பாலபிஷேகம் செய்து வேண்டிக் கொண்டால், நாக தோஷம் விலகும். மார்கழி முழுவதும் வந்து அம்மனைத் தரிசித்தால், நிம்மதி தேடி வரும் என்பது ஐதீகம்.

Read More
அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோவில்

அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோவில்

காசிக்கு இணையான காலபைரவர் தலம்

கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோவில். சப்தரிஷிகளான மரீசி, அத்திரி, புலத்தியர், பிருகு, ஆங்கிரசர், வசிஷ்டர், பரத்வாஜர் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டதால், இத்தல சிவபெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. ருத்ராட்சப் பந்தலின் கீழ் இறைவன் அமைந்துள்ளார். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில், இக்கோவிலும் ஒன்றாகும்.

புண்ணியத் தலமான காசியை காலபைரவர் க்ஷேத்திரம் என்று புராணங்கள் கூறுகின்றன. காசியில் வாழ்பவர்கள், இறைவன் திருவடியை அடையும்போது அவர்கள் எமவாதம் இன்றி முக்தியடைகின்றனர் என்பது புராணங்கள் உணர்த்தும் உண்மையாகும். ஏனெனில், காசியை அதன் எட்டுத்திக்கிலும் எட்டு விதமான பைரவர்கள் காத்து அருள்வதாக ஐதீகம். இதனால் காசி, காலபைரவர் க்ஷேத்திரம் என்று வணங்கப்படுகின்றது. 'காசிக்கு இணையான தலம் காசினி(பூமி)யில் இல்லை' என்ற முதுமொழிக்கும் இதுவே காரணமாகும்.

காசியைப் போலவே கோவில் நகரமான கும்பகோணத்தையும் எட்டு பைரவர்கள் காத்து அருள்வதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த வரிசையில் அம்மாசத்திரம் என்ற இத்தலத்தில் அருள்பாலிக்கும் காலபைரவர்,காசிக்கு இணையான பெருமையும் முக்கியத்துவமும் வாய்ந்த சக்தி வாய்ந்த மூர்த்தமாகும்.

பவிஷ்யோத்தர புராணம், காசியில் உள்ளோரின் பாவங்களையும் போக்கும் சக்தி கொண்டவராக இத்தல காலபைரவரைக் குறிப்பிடுகின்றது.

இங்கு பைரவரின் வாகனத்தின் முகம் வடக்கு நோக்கி இருப்பதால் பிதுர் தோஷங்கள் நீங்கும் என்பதும், தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பதும் ஐதீகம். மனநிலை பாதிப்பு, தீயசக்தியால் பாதிப்பு, செய்வினை தோஷங்கள், அமைதியின்மை முதலான பல துன்பங்களுக்கு தேய்பிறை அஷ்டமியில் இத்தல பைரவருக்கு வழிபாடு செய்வது நிவர்த்தி தரும்.

Read More
வாணியம்பாடி அதிதீசுவரர் கோவில்

வாணியம்பாடி அதிதீசுவரர் கோவில்

ஊமையாக இருந்த வாணி (சரசுவதி) பாடிய தலம்

வேலூர் - ஆம்பூர் - கிருஷ்ணகிரி சாலையில், வேலூரில் இருந்து 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் வாணியம்பாடி. இத்தலத்து இறைவன் திருநாமம் அதிதீசுவரர். இறைவி பெரியநாயகி.இக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. காசியப முனிவரின் மனைவி அதிதி வழிபட்டதால் இத்தல இறைவனுக்கு அதிதீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோவிலில் சரசுவதி தனி சன்னதியில் அமர்ந்த திருக்கோலத்தில், மடியில் வீணையுடன், வலது காலைத் தொங்க விட்டு, இடது காலை மடித்து ஒய்யாரமாக வீற்றிருக்கிறாள்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மனுக்கு ஒரு சமயம் கர்வம் ஏற்பட்டது. மும்மூர்த்திகளில் தானே உயர்ந்தவன் என்று தனது மனைவியான சரசுவதி தேவியிடம் தெரிவித்தார்.அதைக் கேட்டு சரசுவதி தேவி, அவரது எண்ணம் தவறு என்று சுட்டிக் காட்டி அவரை பரிகாசம் செய்தாள். அதனால் கோபமுற்ற பிரம்மதேவன், தனது மனைவி சரசுவதியை ஊமையாகும்படி சாபமிட்டார். அதனால் வருத்தமுற்ற சரசுவதி, தனது சாபம் தீர சிருங்கேரி பகுதியில் தவம் மேற்கொண்டதாகத் தல வரலாறு கூறுகிறது.

வாணியை பிரிந்த பிரம்மா, தேவர்களைத் திருப்திப் படுத்தி யாகம் செய்து, அவர்கள் மூலம் மனைவியைக் கண்டுபிடிக்க முற்பட்டார். ஆனால், மனைவி இல்லாமல் செய்யும் யாகத்தின் பலனைத் தங்களால் பெற முடியாது என தேவர்கள் சொல்லி விட்டனர். எனவே பலதிசைகளிலும் தேடி, சிருங்கேரியில் அவளைக் கண்டுபிடித்தார். அவளை சமரசம் செய்து அழைத்துச் சென்றார். செல்லும் வழியில், இக்கோவிலில் தங்கி சிவனையும், பார்வதியையும் வழிபட்டனர். கலைவாணி தானே மானுடப் பெண் வடிவில் உணவு சமைத்து, அதிதியாக வந்த சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் உணவளித்து உபசரித்தாள். இதனால் மகிழ்ந்த சிவனும்,பார்வதியும் வாணிக்கு அருள் செய்து அவளைப் பாடும்படி கூறினர். வாணியும் பேசும் சக்தி பெற்று இனிய குரலில் பாடினாள். வாணி ஊமைத் தன்மை மாறி, உரக்கப் பாடிய இடம் வாணி பாடி என்று அழைக்கப் பெற்று பின்னாளில் மருவி வாணியம்பாடி என மாறியது.

புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்

காசிப முனிவரின் மனைவி அதிதி, புனர்பூசம் நட்சத்திரம்தோறும் இத்தலத்தில் விரதமிருந்து வழிபட்டு தேவர்களைப் பெற்றாள் என புராணங்கள் கூறுகிறது. புனர்பூச நட்சத்திரம் மற்றும் மாத பவுர்ணமி தோறும் இங்கு சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகமும், சரசுவதி தேவிக்கு வெண்ணிற நறுமணப் பூக்களால் பூச்சொரியலும் நிகழ்த்துதல் சிறப்பானதாகும். எனவே இக்கோவில் புனர்பூசம் நட்சத்திரக்காரர்களின் பரிகார தலமாக விளங்குகின்றது. புனர்பூசம் நட்சத்திரத்தில் மளிகை சாமான்கள் வாங்கினால் தானிய விருத்தி அதிகரிக்கும். அன்ன தோஷம் விலக,ஓட்டல் தொழில் செய்பவர்கள், வியாபார விருத்திக்காக அதிதீஸ்வரரை வழிபட்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறார்கள். வாணி வழிபட்டு அருள் பெற்ற தலமாதலால், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு, இங்குள்ள சரசுவதியை வழிபடுவது சிறப்பு..

Read More
தக்கோலம் ஜலநாதீசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

தக்கோலம் ஜலநாதீசுவரர் கோவில்

பிரயோக நிலையில் சக்கரத்தை ஏந்தி இருக்கும் அபூர்வ துர்க்கை

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் தக்கோலம். இறைவன் திருநாமம் ஜலநாதீசுவரர். இறைவி கிரிராஜ கன்னிகை.

இக்கோவில் பிரகாரத்தில் எழுந்தருளி இருக்கும் துர்க்கை நான்கு திருக்கரங்களுடன், ஸ்ரீ திரிபங்கி நிலையில் காட்சித் தருகின்றாள். திரிபங்கி நிலை என்பது தலை, இடை, கால்கள் என உடலின் மூன்று பகுதிகளும், வளைவுகளுடன் மிகவும் ஒய்யாரமாக நிற்கும் நிலையாகும். தலையில் சிம்மமுகத்துடன் கூடிய கரண்டமகுடமணிந்துள்ளார். கண்களில் தாய்மை. இதழ்களில் ஒரு புன்னகை. காதுகளில் மகர குண்டலமும், கழுத்தில் அணிகளன்களுடன் கூடிய சரப்பளிகளை நாம் காணலாம். கையில் சங்கு, சக்கரத்துடன் காணப்படுகிறாள். வலது கையில் இருக்கும். பின் இரு கரங்களில் சங்கு, சக்கரத்தை ஏந்தி இருக்கின்றாள். வலது பின்கையில் உள்ள சக்கரம், பிரயோக நிலையில் இருக்கின்றது. இப்படி பிரயோக சக்கரத்தை ஏந்தி இருக்கும் துர்க்கையை நாம் காண்பது அரிது. இடது முன்கையை எந்த ஒரு முத்திரையும் காண்பிக்காமல் இடது தொடையின் மேல் வைத்துள்ளாள். மார்பில் சன்னவீரம், கொடி இடை, புலிக்கச்சுடன் கூடிய இடை ஆடை. கால்கள் வளைந்த நிலையில் ஸ்வஸ்திகத்தில் உள்ளன. பூத வரியில், பறவை முதற்கொண்டு தலைகீழாக தொங்கும் பூதங்கள், மத்தளம், ஒருகண் சிறுபறை முழக்கும் பூதம், கையில் தாளம் போடும் பூதம், இசை பாடும் பூதம் முதலியவை இருக்கின்றன. துர்க்கை அணிந்திருக்கும் அணிகலன்களின் வேலைப்பாடு நம்மை பிரமிக்க வைக்கின்றது.

துர்க்கை காயத்ரி

துர்க்கை என்றால் துக்கங்களையெல்லாம் போக்குபவள் என்று அர்த்தம். நம் துக்கங்களையெல்லாம் போக்கும் பணியை மேற்கொள்ளும் தேவதைகளில் துர்க்கைக்கு தனியிடம் உண்டு. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவதும் ராகுகாலத்தில் தீபமேற்றி வழிபடுவதும் எண்ணற்ற பலன்களை வழங்கவல்லது. அதேசமயம், தினமும் கீழ்க்கண்ட துர்க்கை காயத்ரியை 11 முறை அல்லது 24 முறை அல்லது 54 முறை சொல்வது நல்ல பலனை கொடுக்கும்.

ஓம் காத்யாயனய வித்மஹே

கன்யாகுமாரி தீமஹி

தந்நோ துர்கி ப்ரசோதயாத்

அதாவது, காத்யாயன மகரிஷியின் மகளாக அவதரித்தவளே. நித்திய குமரியாக திகழ்பவளே. உன்னை வணங்கித் தொழுவதால், என்னுடைய மனதை தெளிவுபடுத்துவாயாக. குழப்பமில்லாத மனதையும் அறிவையும் மேம்படுத்துவாயாக. நற்பலன்களை வாரி வழங்கும் உன்னுடைய பாதங்களைப் பணிகிறேன் என்று அர்த்தம்.

Read More
மும்பை மஹாலக்ஷ்மி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

மும்பை மஹாலக்ஷ்மி கோவில்

சகல செல்வங்களையும் அருளும் மகாலட்சுமி

மும்பையின் மஹாலக்ஷ்மி பகுதியில் அமைந்துள்ளது மகாலட்சுமி கோவில். மும்பை மகாலட்சுமி கோவிலில் மகாகாளி, மகாசரஸ்வதி, மஹாலக்ஷ்மி ஆகிய மூன்று தேவியரும் எழுந்தருளி இருக்கின்றனர். முப்பெருந்தேவியரில் மஹாலக்ஷ்மி நடுநாயகமாக வீற்றிருக்கின்றாள். அதனால் இக்கோவில் அவரது பெயரால் அழைக்கப்படுகிறது. மூன்று தேவியரும் கைகளில் தங்க வளையலும், தங்க மூக்குத்தியும், கழுத்தில் முத்து மணி மாலையும் அணிந்து காட்சி தருகிறார்கள்.

முற்காலத்தில் அன்னியர் படையில் இருந்து காப்பாற்றுவதற்காக, மூன்று தேவிகளின் சிலைகளை வொர்லி சிற்றோடைக்கு (Worli Creek) அருகில் கடலில் போட்டுவிட்டார்கள். பின்னர், பிரிட்டிஷ் ஆட்சியின் போது, ​​கவர்னர் வில்லியம் ஹார்ன்பி (Governor Lord Horneby ) என்பவர் வொர்லி-மல்பார் ஹில் ஆகிய இரண்டு தீவுகளையும் இணைக்க முடிவு செய்தார். இந்தத் தீவுகளை இணைக்கும் பணி ஸ்ரீ ராம்ஜி சிவ்ஜி பிரபு என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தீவுகளை இணைக்க இரு வழி சாலை திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் கடல் அலைகள் காரணமாக, அவர்கள் எழுப்பிய தடுப்பு சுவர் சரிந்து விழுந்து திட்டத்தை அவர்களால் முடிக்க முடியவில்லை.

ஒரு நாள் இரவு ஸ்ரீ மகாலக்ஷ்மி தேவி, ஸ்ரீ ராம்ஜி சிவ்ஜி பிரபுவின் கனவில் தோன்றி, வோர்லி சிற்றோடையில் மூழ்கியுள்ள மூன்று தேவிகளின் சிலைகளையும் வெளியே எடுத்து மலையின் உச்சியில் வைக்கும்படி கூறினார். அவற்றைக் கடலிலிருந்து வெளியே எடுத்து வந்து குன்றின் மேல் கோவில் கட்டி வைப்பதாக தேவியிடம் வாக்குக் கொடுத்தார்.

அதன்படி, வொர்லி சிற்றோடை மற்றும் மல்பார் மலை சிற்றோடையை இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த குழுவினர், வொர்லி சிற்றோடையிலிருந்து மூன்று தேவிகளின் சிலைகளையும் வெளியே எடுத்தனர். அதன் பிறகுதான் அவர்களால் இரண்டு சிற்றோடைகளையும் இணைக்க முடிந்தது. இந்த வேலை முடிந்ததும், பொறியாளர் ஸ்ரீ ராம்ஜி சிவ்ஜி பிரபு ஆங்கிலேய ஆட்சியாளரிடமிருந்து பரிசாக மலையின் மீது நிலத்தைப் பெற்றார். பின்னர் அவர் மலையின் உச்சியில் ரூ.80,000/- செலவில், 1761 A.D. - 1771 A.D க்கு இடைபட்ட காலத்தில், மகாலட்சுமி கோவிலைக் கட்டினார்.

Read More
வேலாயுதம்பாளையம்  பாலசுப்ரமணியசுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

வேலாயுதம்பாளையம் பாலசுப்ரமணியசுவாமி கோவில்

முருகனுக்கு வேலை நேர்த்திக்கடனாக செலுத்தும் திருப்புகழ் தலம்

கரூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது புகழூர். இங்கிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள, வேலாயுதம்பாளையம் என்ற ஊரில் இருக்கும் புகழிமலையின் மேல் அமைந்துள்ளது, பாலசுப்ரமணியசுவாமி கோவில். கோவிலுக்கு செல்ல 315 படிக்கட்டுகள் உள்ளன. இக்கோவில் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் பெற்ற தலமாகும். சமணர்களுக்குப் புகலிடம் தந்த காரணத்தால் இந்த மலை புகலி மலை என்று அழைக்கப்பட்டு, புகழி மலை என மாறிப் பின்னர் புகழூர் என பெயர் பெற்றது. இம்மலை மைசூர் எல்லையாக இருந்த காலகட்டத்தில்தான், இக்கோவில் கட்டப்பட்ட தாகவும், அதன் அடிப்படையிலேயே இங்கு மைசூர் கோவில்களின் கட்டட பாணியில் கோபுரம் அமைந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

கருவறையில்,பாலசுப்ரமணிய சுவாமி கையில் வேலேந்தி நின்ற கோலத்தில் காட்சிதருகிறார். ஒரு கையில் வேலும் மற்றொரு கையில் சேவல் கொடியும் கொண்டு, நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். வஜ்ஜிரம், சக்தி ஆகிய படைக்கலன்களையும் அபயம், வரதம் ஆகிய நான்கு கரங்களுடன் பாலசுப்பிரமணியராக காட்சி நல்குகிறார். முருகனுக்குப் பின்புறம் இடது புறம் தலை சாய்த்தபடி தேவ மயில் உள்ளது. மற்ற திருக்கோயில்களில் உள்ளதைப் போன்று இல்லாமல், இந்தக் கோவிலின் மயில் வாகனத்தின் தலை இடப்புறமாகவும், தோகை வலப்புறமாகவும் திகழ்கிறது. இத்தகைய அமைப்பு சூரசம்ஹாரத்துக்கு முற்பட்ட முருகனின் திருக்கோலத்தை குறிக்கும். இதிலிருந்து இந்தக் கோவிலின் புராதனத்தை அறியமுடிகிறது.

பிரார்த்தனை

இங்கே முருகனுக்கு நேர்த்திக்கடனாக வேல் செலுத்தி வழிபடும் வழக்கம் பிரசித்தம். தொடர்ந்து 12 வாரம் செவ்வாய்க்கிழமைகளில் செவ்வரளிப் பூ மற்றும் செவ்வாழைப் பழம் படைத்து வழிபட்டால், திருமணத்தடை விலகி இல்லற வாழ்க்கை விரைவில் கைகூடும். சஷ்டி விரதமிருந்து முருகப் பெருமானைத் தரிசித்தால், குழந்தை பாக்கியம் கிட்டும். இத்தலத்து விஷ்ணு, துர்க்கையை 12 வாரம் வேண்டிக்கொண்டு எலுமிச்சம்பழ விளக்கு ஏற்றி வணங்கினால் கல்யாணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

Read More