தான்தோன்றீஸ்வரர் கோவில்

தான்தோன்றீஸ்வரர் கோவில்

நவக்கிரகங்கள் தம் மனைவியருடனும், வாகனத்துடனும் இருக்கும் ஆபூர்வக் காட்சி

திருச்சி மாநகரின் ஒரு பகுதியான உறையூர் தலத்தில், சுமார் 1800 ஆண்டுகள் பழமையான குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

பொதுவாக சிவாலயங்களில் நவக்கிரகங்கள் ஒரு பீடத்தின் மேல் நின்ற கோலத்தில் வக்கரித்த நிலையில் காட்சி தருவார்கள். மேலும் சில தலங்களில் தம்பதி சமேதராகவோ அல்லது தம் வாகனத்துடனோ காட்சி தருவார்கள். ஆனால் இக்கோவிலில் நவக்கிரகங்கள் தம்பதி சமேதராய் தம் வாகனத்துடன் எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

இக்கோவிலில் குங்குமவல்லி தேவிக்கு, ஒவ்வொரு ஆண்டும் வளையல் காப்புத் திருவிழா ஆடிப்பூரம் மற்றும் தை மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் மூன்று நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் இந்த வளையல் காப்புத் திருவிழா வெகு பிரசித்தம்.

Read More
ராமநாதீஸ்வரர் கோவில்

ராமநாதீஸ்வரர் கோவில்

சிவனே குருவாக இருந்து ராமருக்கு வழிகாட்டிய தலம்

ராமநாதீஸ்வரர் கோவில் , சென்னை போரூர் சந்திப்புக்கு அருகில் அமைந்து இருக்கிறது. இக்கோவில் மிகவும் பழமையானது.

ராமர் சீதையை தேடி வனத்தில் அலைந்து திரிந்து செல்லும் வேளையில் ஒரு நெல்லி மரத்தின் வேர் ராமரின் காலை இடர, ராமர் உள்ளுணர்வால் வேரின் உள்ளே சிவலிங்கம் இருக்கிறது என்பதை உணர்கிறார்.சிவனின் தலைமீது கால்பட்டதால்,உண்டான தோஷத்தை போக்க ,அங்கேயே தவத்தில் இருந்தார்,நாள் ஒன்றிற்கு ஒரு நெல்லிக்கனியை மட்டுமே உணவாக உண்டு 48 நாட்கள் தவம் மேற்கொண்டார்.முடிவில் வேரின் அடியில் இருந்த லிங்கம் பூமியை பிளந்துகொண்டு வந்து வெளிப்பட,சிவபெருமான் ராமருக்கு விஸ்வரூப தரிசனம் தருகிறார். பரவசத்தில் ராமர் சிவபெருமானை கட்டியணைக்க உடனே சிவலிங்கம் ஆறு அடி உயர அமிர்தலிங்கமாக மாறுகிறது. ராமர் சீதையை தேட வழிகேட்க, 'ராமேஸ்வரம் நோக்கி செல்' என்ற அசரீரி கேட்கிறது.

சிவபெருமான் ராமருக்கு காட்சி அளித்தமையால், இங்குள்ள மூலவர் ஸ்ரீராமநாதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மிகப்பெரிய லிங்கவடிவில் 6 அடி அமைப்பும் மிக அழகிய அலங்காரத்துடனும் கிழக்கு நோக்கி அருள்பலிக்கிறார். இந்த பிரும்மாண்ட லிங்கம் சுயம்புவாக தோன்றியவர். அம்பிகை சிவகாமசுந்தரி தனி சன்னதியில் தெற்கு நோக்கி அருளுகிறார். சிவனே வந்து வழிகாட்டிய காரணத்தால் அவரே குருவாகிறார் . ஆகவே தனியாக குருச்சன்னதி கிடையாது . குருவருள் பெறவும் ,வியாழன் கோள் சம்பந்தமான எந்தவித தோஷத்தையும் போக்கும் தலமாக விளங்குகிறது.

ராமேஸ்வரம் செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து ராமேஸ்வரத்தில் செய்யும் பரிகாரங்களை செய்கிறார்கள். ராமேஸ்வரத்தில் செய்யும் பலன், இத்தலத்திலேயே கிடைப்பதாக நம்பப்படுகிறது. ஆகவே இந்த கோவில் உத்திரராமேஸ்வரம் என்றும் கூறப்படுகிறது.

தீர்த்தம் தந்து, சடாரி வைக்கும் சிவன் கோவில்

பொதுவாக பெருமாள் கோவிலில் மட்டுமே பிரசாதமாக கிடைக்கும் தீர்த்தம் , சடாரி போன்றவை சிவன் கோவிலான இங்கும் கிடைக்கும். தீர்த்தம் தந்து, சடாரியும் வைக்கும் சிவன் கோவில் என்பதால் இத்தலம் தனிச் சிறப்பைப் பெறுகிறது. இங்கு சுவாமிக்கு திராட்சை மாலை சாத்தி வழிபடுவது மிகவும் விசேக்ஷம். இங்கு பிரசாதமாகத் தரப்படும் நெல்லிக்கனியை உண்டால் ஆயுள் விருத்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
நம்புநாயகி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

நம்புநாயகி அம்மன் கோவில்

நம்பி வந்தவர்களைக் காக்கும் அம்மன்

ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் சாலையில் 5 கீ.மீ. தொலைவில் நம்புநாயகி அம்மன் கோவில் உள்ளது. இத்தலத்தில் அம்மன் நம்புநாயகி என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறாள். அம்மனை நம்பி வந்து வேண்டுவது நடப்பதால், நம்பு நாயகி அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். இப்பகுதி மக்களின் கண் கண்ட தெய்வமாக விளங்குகின்றாள். நம்பு என்பது ராமேஸ்வரம் தீவை சுற்றி மிகவும் பொதுவான மற்றும் பிரபலமான வார்த்தை.அதனால் இப்பகுதி மக்களின் பெயர் நம்பு குமார், நம்பு லட்சுமி, நம்பு ராஜன் என்று இந்த அம்மனின் பெயரை இணைத்துதான் இருக்கும்.

நம்புநாயகி அம்மன் கோவில் தல வரலாறு

ஒரு சமயம் இத்தலத்தில் தட்சிணத்துருவன், பச்சிமத்துருவன் என்ற இரண்டு முனிவர்கள் ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மனை நோக்கி கடுமையான தவம் மேற்கொண்டிருந்தனர். அவர்களது தவத்தை கண்டு மெச்சிய அம்மன் அவர்களுக்கு காளி தேவியாக காட்சி கொடுத்தாள். அன்றிலிருந்து இரண்டு முனிவர்களும் அந்த காட்டிலேயே காளியை வழிபட்டு வந்ததாகவும், அவளின் அருளால் பிணியுற்றவர்களுக்கு நோய் போக்கும் பணியை செய்து வந்ததார்கள். இரண்டு முனிவர்களும் குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு கற்பகோடி காலம் கண்டவர்களாய் இப்பகுதியிலேயே ஆழ்ந்த நிஷ்டையில் சமாதியிலிருந்து வருவதாகவும் நம்பப்படுகிறது. இப்பகுதியை ஆண்டு வந்த சூலோதரன் என்ற மன்னன் இந்த காளியை நம்பி வேண்டி தன் நோய் நீங்கி நலமடைந்தான். அம்மனை நம்பி குணமடைந்ததால் அம்மன் நம்பு நாயகி என அழைக்கப் பெற்றாள்.

சர்வரோக நிவாரண தீர்த்தங்கள்

இக்கோயிலை சுற்றிலும் அமைந்துள்ள நண்ணீர் தடாகங்கள் பல்வேறு நோய்களை போக்கும் தன்மையுடையதாக விளங்குவதால் இவைகள் சர்வரோக நிவாரண தீர்த்தங்கள் என்று அழைக்கப்படுகிறது. அம்பிகையே தீர்த்தங்கள் வடிவில் அருள்கிறாள். தீராத நோய்களை உடையவர்களும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் இக்கோயிலிலேயே மாதக்கணக்கில் தங்கி சர்வரோக நிவாரண தீர்த்தத்தில் தினமும் நீராடி குணமடைகிறார்கள். மஞ்சள் தூள் இந்த கோவிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

திருமண வரம், மழலைச் செல்வம் அளிக்கும் அம்மன்

திருமணத்தடை உள்ள பெண்களும், கணவனால் கைவிடப்பட்டவர்களும், குழந்தை வரம் வேண்டுவோரும் விரதமிருந்து செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் நம்பு நாயகியை வழிபட்டால் பிரார்த்தனை விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
புஷ்பவனநாதர் கோவில்

புஷ்பவனநாதர் கோவில்

ஆடி அமாவாசையன்று பதிமூன்று கங்கைகள் பொங்கும் கிணறு

தஞ்சாவூரில் இருந்து திருக்கண்டியூர் வழியாக 13 கி.மீ. தூரத்திலுள்ள தேவாரத் தலம் திருப்பூந்துருத்தி. இறைவன் திருநாமம் புஷ்பவனநாதர். இறைவி சௌந்தர்யநாயகி. இரண்டு ஆறுகளுக்கு நடுவே அமைந்துள்ள ஊர் ஆனது துருத்தி என அழைக்கப்படுகிறது. இத்தலமானது காவிரிக்கும், குருமுருட்டிக்கும் இடையில் அமைந்துள்ளதால் திருப்பூந்துருத்தி எனப்பெயர் பெற்றது.

ஒரு முறை முனிவர்கள் பலர் ஒன்று கூடி பேசிக் கொண்டிருந்தனர். 'ஆடி அமாவாசை தினத்தில் வேதாரண்யம், தனுஷ்கோடி, சங்கமுகம், திரிவேணி சங்கமம், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, காவிரி, சிந்து, பிரம்மபுத்ரா, தாமிரபரணி, ராமேஸ்வரம் ஆகிய பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடினால் பெரும் புண்ணியம் கிடைக்கும். பித்ரு சாபங்கள் விலகும். எனவே இந்த 13 புனித தீர்த்தங்களிலும் ஆடி அமாவாசை தினத்தில் நீராடி ஈசனை வழிபட வேண்டும் என்கின்றன புராணங்கள். ஆனால் யாரால் இது சாத்தியமாகும்?' என ஏக்கத்தில் பரிதவித்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்த காசிப முனிவர், 'ஏன் முடியாது? நான் ஆடி அமாவாசை அன்று இந்த பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடி, பிதுர் தர்ப்பணம் முடித்துக் காட்டுகிறேன்' என்றார். பின்னர் அவர், ஈசனை வேண்டி தவம் இயற்றி பல சிவத்தலங் களுக்கு சென்று வழிபட்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக திருப்பூந்துருத்தி வந்தடைந்தார். அங்கும் சிவபெருமானை வேண்டி தவம் இருந்தார். அவரது தவத்தை மெச்சிய இறைவன், ஆடி அமாவாசை அன்று காசிபருக்கு காட்சி கொடுத்தார். மேலும் 13 புனித தீர்த்தங்களையும், ஒரே இடத்தில் (திருப்பூந்துருத்தியில்) பாயும்படிச் செய்தார். அந்தத் தீர்த்தம் தற்போது, காசிப தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. காசிபர் அந்த புனித நீரில் நீராடி, சிவபெருமானையும், அம்பாளையும் அபிஷேகம் செய்து வழிபட்டார். அதன்காரணமாக அவருக்கு சிவபெருமானுடன் ஐக்கியமாகும் முக்திநிலை கிடைத்ததாக தலபுராணம் கூறுகிறது.

இத்தலத்தில் சோமாஸ்கந்த மண்டபத்தை அடுத்துள்ள பகுதியில், தென்கிழக்கு மூலையில் கிணறு வடிவில் உள்ளது காசிப தீர்த்தம்.

ஆடி அமாவாசை நாளில் வழிபடுவதால் ஏற்படும் நற்பலன்கள்

ஆடி அமாவாசை நாளில் இத்தலத்தை கிரிவலம் வந்தால், பித்ரு சாபங்கள் நீங்கும். செல்வ வளம் பெருகும்.தடைகள் அகலும். தீவினைகளும் விலகும் என்பது ஐதீகம். ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று, இவ்வாலயத்தில் திருவிழா நடத்தப்படுகிறது. அன்றைய தினம் இத்தல காசிப தீர்த்தத்தில் நீராடினால் 13 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய முழுப் பலனும் கிடைக்கும். மேலும் இத்தலத்தை ஆடி அமாவாசை அன்று 18 முறை கிரிவலமாக வந்து ஈசனையும், அம்பிகையையும் வழிபட்டால், பித்ரு சாபங்கள் தீர்வதுடன், குல தெய்வத்தின் அருளும் பரிபூரணமாய் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

பித்ரு தோஷம் ஒருவரது ஜாதகத்தில் இருக்குமேயானால் ,அவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமலும்,நீண்ட நாள் திருமணம் ஆகாமல் இருப்பதற்கும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அவ்வாறு உள்ளவர்கள், இத்தலத்திற்கு வந்து அமாவாசை நாட்களில்,இறைவன் புஷ் வனநாதரையும், அம்பாள் சௌந்தர்யநாயகியையும் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் தடைகள் நீங்கி நன்மையே நடக்கும் என்பது ஐதீகம்.

இத்தலத்து முருகனை புகழ்ந்து அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.

Read More
பள்ளிகொண்ட பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

பள்ளிகொண்ட பெருமாள் கோவில்

மூன்று வாயில்கள் வழியாக தரிசனம் தரும் பெருமாள்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து கிள்ளுக்கோட்டை வழியாகச் சென்றால் 17 கி.மீ. தொலைவில் மலையடிப்பட்டி பள்ளிகொண்டபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடைவரைக் கோவிலாகும்.

அர்த்த மண்டபத்தில் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத புண்டரீகாட்சப் பெருமாள், ஹயக்ரீவர், நரசிம்ம மூர்த்தி, அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத வைகுண்டநாதன் ஆகியோர் காட்சியளிக்கின்றனர். கருவறையில் இரு தூண்கள் உள்ளன. இதை ஹரி நேத்திர தூண்கள் என்கிறார்கள். இதன் மூலம் சிருஷ்டி, ஸ்திதி, லயம் என்ற மூன்று வாயில்கள் வழியாக பள்ளி கொண்ட பெருமாளை, நாம் தரிசிக்கலாம்.

பெருமாளை சுற்றி இறக்கை விரித்த கருடன், இட்ச, கின்னர, கிம்புருடர்கள், தும்புரு, நாரதர், வித்யாதரர், இந்திரன், வருணன், வாயு, குபேரன், பிரம்மா, அக்கினி, சூரியன், சந்திரன், யமன், காமதேனு, கற்பகவிருட்சம், அட்சயபாத்திரம், மது-கைடபர் ஆகியோர் பெருமாளை வழிபட்டபடி காட்சியளிக்கின்றனர். பெருமாள் தனது வலது கரத்தால் திவாகர மகரிஷிக்கு ஆசி வழங்குகிறார். பூமாதேவி பெருமாளுக்கு பாத சேவை செய்கிறார். பெருமாளின் பாதங்களை தாமரை மலர் தாங்கியுள்ளதால் அந்தப் பாத தரிசனம் மிகுந்த செல்வத்தை அளிக்கும் என்பது பெரியோர் வாக்கு.

கண் சம்பந்தப்பட்ட நோய்கள், கண் திருஷ்டி நிவர்த்தியடையும் தலம்

'கண் நிறைந்த பெருமாள்' என்றழைக்கப்படும் இந்த மூலவர், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமிக்கு நிகரானவர் என்கிறார்கள். கண் சம்பந்தப்பட்ட நோய்கள், கண் திருஷ்டி எல்லாம், இப்பெருமாளின் அருளால் நிவர்த்தியடைகின்றன. ஏராளமான பக்தர்கள் கண் பார்வை பெற்றுள்ளனர். இத்தலத்து குளத்தில் நீராடி, கண் நிறைந்த பெருமாளுக்கு அபிஷேகம் செய்து சந்தனம், குங்குமமிட்டு பூஜித்து ஆரத்தி காட்ட அறுவை சிகிச்சை செய்து பார்வை சரிவர கிடைக்காதவர்களுக்கும் பரிபூரண பார்வை கிட்டும் என்பது அனுபவ நம்பிக்கை.

பித்ரு சாபம், தோஷங்கள் போக்கும் பெருமாள்

முன்மண்டபத்திலுள்ள 5 குழிகளில் வலது கை ஐந்து விரல்களை வைத்து இடது முழங்கையை தரையில் ஊன்றி மண்டியிட்டு ஹரிநேத்திர தூண்கள் இடையே மூன்று வாயில்கள் வழியாக பள்ளி கொண்ட பெருமாளை தரிசிப்பதன் மூலம் ஏழு பிறவிகளில் ஏற்பட்ட பித்ரு சாபம் உள்ளிட்ட தோஷங்கள் அனைத்தும் அறவே நீங்கும் என்பது உறுதி.

பொதுவாக கண் மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்காக வேண்டிக்கொண்டு தரிசனம் செய்வதும் சரியானவுடன் தரிசனம் செய்து காணிக்கைப் பிரார்த்தனை செய்து விட்டுச் செல்வதும் இங்கு மரபாக உள்ளது. செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும், ஏகாதசி மாதப்பிறப்பு நாட்கள், சிரவணம், ஆகிய நாட்களிலும் தரிசனம் செய்தால் அல்லல் நீங்கி குபேர சம்பத்துக் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
ஆலந்துறைநாதர் கோயில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

ஆலந்துறைநாதர் கோயில்

அழகும், கம்பீரமும் மிகுந்த துர்க்கையம்மன்

கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் ஐயம்பேட்டையைத் தாண்டி, கண்டியூர் செல்லும் பேருந்துச் சாலையில் சென்றால் தேவாரத் தலமான பசுபதி கோயிலை அடையலாம். இத்தலத்தின் புராணப்பெயர் புள்ளமங்கை. இறைவன் திருநாமம் ஆலந்துறைநாதர். இறைவி அல்லியங்கோதை. இத்தலம் சப்தமாதர்களும், சப்த ரிஷிகளும் வழிபட்ட சப்தஸ்தான தலங்களுள் ஒன்றாகும்.

இக்கோவிலின் வடக்குப் பிரகாரத்திலுள்ள துர்க்கையம்மனின் மகிஷாசுரமர்த்தினி உருவம் தனிச் சிறப்புடையதாகத் திகழ்கின்றது. இந்த துர்க்கையம்மனின் அழகும், கம்பீரமும் பார்ப்பவரை பிரமிக்க வைக்கும். கருங்கல் குடை நிழலில், எட்டுக் கைகளுடன்,எருமைத் தலைமீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். தன் கைகளில் சங்கு சக்கரம், வாள், வில், கதை, சூலம், கேடயம், அங்குசம் முதலிய ஆயுதங்களை ஏந்தியிருக்கிறாள். துர்க்கையம்மனின் வாகனங்களான சிம்மம் வலதுபுறமும், கலைமான் இடதுபுறமும் இருக்கின்றன. துர்க்கையம்மனின் வாகனங்ககளின் கீழே இரு வீரர்கள் கத்தியால் தலையை அரிந்து தருவதுபோலவும், தொடையைக் கிழித்து இரத்த பலி தருவது போலவும் காட்சித் தருகிறார்கள். துர்க்கையம்மன் திரிபங்கியாய் ஒரு கையில் வில்லேந்தி, மற்றது அபயகரமாக மோதிர விரல் மடக்கிய முத்திரையுடன் இருக்க, பின்புறம் அம்பறாத்தூணி, அம்புகளும் விளங்க துர்கையம்மன் நின்றிருக்கும் கோலம், நேரிலேயே அவளைப் பார்க்கும் சிலிர்ப்பைத் தரும்.

திருநாகேஸ்வரம், பட்டீச்சுரம், திருப்புள்ளமங்கை ஆகிய இம்மூன்று தலங்களிலும் உள்ள துர்க்கையம்மன்கள் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை என்றும், இம்மூன்றுமே மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது.

Read More
தியாகராஜர் கோவில்

தியாகராஜர் கோவில்

கடன் தொல்லைத் தீர்க்கும் ருண விமோசனர்

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ருண விமோசனர், லிங்க வடிவில் தனிச் சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார். ரண் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு கடன் என்று பொருளும் ரண என்ற தமிழ் சொல்லுக்கு காயம் என்ற பொருளும் உண்டு. நெடுநாள் தீராத, வராத கடனையும், தீராத நோய்களையும் இவரை வழிபடும் பக்தர்களுக்கு தீர்த்து வைப்பதால் ரு(ர)ண விமோசனர் என அழைக்கப்படுகின்றார். இந்திரன் தனது உடலில் இருந்த தோல் நோயை நீக்க இத்தலத்திலுள்ள ருண விமோசனரை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றான் என்று தல புராணம் கூறுகின்றது.

இந்த ருண விமோசனரை பதினொரு ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைகளில் அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இவரை அமாவாசை தினத்தன்று அபிஷேகம், உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபடுவது மிகுந்த பலனைக் கொடுக்கும்.

Read More
தியாகராஜர் கோவில்

தியாகராஜர் கோவில்

எமதர்மனுக்கு புதிய வேலைக் கிடைத்த தேவாரத் தலம்

பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் ஒரு சண்டிகேசுவரர் மட்டுமே இருப்பார். ஆனால் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இரண்டு சண்டிகேசுவரர்கள் இருக்கிறார்கள். ஒருவர் ஆதி சண்டிகேசுவரர். மற்றொருவர் எம சண்டிகேசுவரர்.

பிறக்க முக்தி எனும் சிறப்புடையது திருவாரூர் தலம். அதனால் இத்தலத்தில் பிறந்தவரகள் அனைவரும் சிவ கணங்கள் என்னும் தகுதியைப் பெறுகிறார்கள். இக்காரணத்தினால் எமதர்மன் அவர்களை நெருங்க முடியாது. இறைவனே முக்தி பேறு தந்து அவர்களை அழைத்துச் செல்வதால், இத்தலம் முக்தித் தலம் என்றழைக்கப்படுகிறது.ஆதலால் திருவாரூரில் தனக்கு வேலை இல்லையே என்று எமதர்மன் சிவபெருமானிடம் முறையிட்டான். அவன் மனக்குறையைப் போக்குவதறகாக, சிவபெருமான் அவனுக்கு சண்டிகேசுவரர் பதவி கொடுத்தார். இக்கோவிலில் இரண்டாம் பிரகாரத்தில் எமதர்மன் ஒரு காலை ஊன்றி கையில் முகத்தைத் தாங்கி நமக்குக் காட்சி தருகிறார். எமதர்மன் இறைவனை வேண்டி, சண்டிகேசுவரர் பதவி பெற்று தனது வேலையைக் காப்பாற்றிக் கொண்டதால், எமபயமுள்ளவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டால் நன்மை பயக்கும்.

Read More
ரணபலி முருகன் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

ரணபலி முருகன் கோவில்

முருகன் உருவம் பொறித்த அபூர்வமான சத்ரு சம்ஹார வேல்

ராமநாதபுரம் அருகே பெருவயல் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிவ சுப்ரமணிய சுவாமி என்ற ரணபலி முருகன் கோவில் உள்ளது. ராமநாதபுரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில், தேவிபட்டினம் செல்லும் வழியில், பெருவயல் விலக்கு எனற இடத்தில் இருந்து மேற்கே 3 கி.மீ. தொலைவில் பெருவயல் கிராமத்தில் ரண பலி முருகன் கோவில் உள்ளது. ரணபலி முருகன் கோவிலுக்கு பெருமை சேர்ப்பது முருகன் உருவம் பொறித்த சத்ரு சம்ஹார வேல் ஆகும். இத்தகைய வேலை நாம் வேறு எந்தத் தலத்திலும் காண முடியாது.

முருகன் சுட்டிக் காட்டி கிடைத்த சத்ரு சம்ஹார வேல்

இராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களில் ஒருவரான கிழவன் சேதுபதியின் தளபதியாக விளங்கியவர் தளவாய் வயிரவன் சேர்வை. முருகபக்தரான இவர் அடிக்கடி திருச்செந்தூர் முருகன் கோவில் சென்று வழிபட்டு வருவது வழக்கம்.

ஒருநாள் அவர் கனவில் முருகன் தோன்றி, என்னை வழிபட இனி திருச்செந்தூர் வர வேண்டாம். தேவிப்பட்டினம் கடலில் நவபாஷாண கற்கள் இருக்கும் இடத்துக்குக் கிழக்கில் கண்ணாமுனை என்ற இடத்தில் மேலே கருடன் வட்டமிடும். அதற்குக் கீழே கடலில் மாலையும் எலுமிச்சம் பழமும் மிதக்கும். அந்த இடத்தில் கடலுக்கு அடியில் வள்ளி-தெய்வானை சமேதராக சத்ரு சம்ஹார வேலுடன் நான் இருப்பேன். என்னை எடுத்துச் சென்று உங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடு என்று கூறினார்.

இதே போன்று கனவு அருகில் உள்ள திரு உத்திரகோச மங்கை என்னும் தலத்தைச் சேர்ந்த ஆதிமங்களேஸ்வர குருக்களுக்கும் தோன்றியதால், இருவரும் மறுநாள் சந்தித்து, முருகன் கனவில் சொன்ன அடையாளங்களின்படி ஆட்களை விட்டு கடலுக்குள் முருகன் சிலையைத் தேடினார்கள். பல மணி நேரம் தேடியும் சிலை கிடைக்கவில்லை. கடைசியில் வயிரவன் சேர்வையே கடலுக்குள் மூழ்கி அந்த சிலையையும் வேலையும் எடுத்து வந்தார். கடலுக்குள் இறங்கி முருகன் சிலையை எடுக்க முற்பட்ட பலருக்கு உடல் முழுவதும் ரணம்(காயம்) ஏற்பட்டதால் மூலவர் சிவ சுப்ரமணிய சுவாமி, ரணபலி முருகன் என்றும் அழைக்கப்படுகிறார்.

விஷயம் அறிந்த ராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி, தன் அரண்மனையில் 'ராமலிங்க விலாசம்' என்ற தர்பார் மண்டபம் கட்டுவதற்காக வைத்திருந்த பொருட்களைத் தந்து பெருவயல் ஊரணிக்கரையில் முருகனுக்கு ஆலயம் அமைக்க நிலங்களையும் தானமாக கொடுத்து உதவினார். அதன் பின்னர் ஆலயத்திருப்பணிகள் வேகமாக நடைபெற்று, கடலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

தளபதி வயிரவன் சேர்வை ராமேஸ்வரத்தில் உள்ள இராமநாத சுவாமி, பர்வத வர்த்தினி அம்மன் மீதும் தீவிர பக்தி உடையவராதலால் இருவருக்கும் இங்கு சன்னதி அமைத்துள்ளார்.

பக்தர்களின் உள்ள ரணத்தை ஆற்றும் முருகன்

பக்தர்களின் உள்ளத்தில் ரணத்தை ஏற்படுத்தும் கடன், பிணி, சத்ரு ஆகிய துன்பங்களையெல்லாம் பலி செய்து, அவர்களுக்கு சகல நன்மைகளும் அருள்வதால், ரணபலி முருகன்' என்ற பெயர் இவருக்கு மிகப் பொருத்தமான பெயராகும். முருகன் உருவம் பொறித்த சத்ரு சம்ஹார வேலை பிரம்மோற்சவம், சூரசம்ஹாரம் போன்ற கோவில் விழா நாட்களில்தான் நாம் தரிசிக்க முடியும். இந்த வேலைத் தரிசித்தவர்களுக்கு எதிரிகள் தொல்லை நீங்கி சகல செளபாக்கியஙகளும் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் இங்கு முருகன் ராகு கேதுக்களுடன் தனியாக காட்சி தருகிறார் இவரை வழிபட்டால் ராகுதோஷம் நீக்குவார் என்பது ஐதீகம்..

இத்தலத்துக்கு வந்த பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் திரு.கிருபானந்த வாரியார் அவர்கள், இங்குள்ள முருகனின் திரு உருவம் பொறிக்கப்பட்ட வேல் போல் எங்கும் கண்டதில்லை என இத்தலத்தின் சிறப்பை பற்றி கூறியதை இங்கு அவரது புகைப்படத்துடன் செய்தியாக வைத்துள்ளார்கள்.

இக்கோவில் கட்டிய தளபதி வயிரவன் சேர்வையின் சமாதிக்கோவிலும் இங்கு உள்ளது. அங்கு சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது.

Read More
பாபநாசநாதர் கோவில்

பாபநாசநாதர் கோவில்

பக்தனின் தாம்பூல எச்சிலை அணியாக ஏற்ற உலகம்மை

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் எனும் ஊரில் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் நமச்சிவாயக் கவிராயர். இவர் சிங்கை உலகம்மை பிள்ளைத் தமிழ், சிங்கை உலகம்மை கலித்துறை அந்தாதி, சிங்கை உலகம்மை கொச்சகக் கலிப்பா, சிங்கை உலகம்மை பதிற்றுப்பத்து அந்தாதி, சிங்கை உலகம்மை சந்த விருத்தம், சிங்கை சிலேடை வெண்பா ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

நமச்சிவாயக் கவிராயர் பாபநாசத்தில் எழுந்தருளியிருக்கும் பாபநாசநாதர் மற்றும் உலகம்மை மீது பெரும் பக்தியும் பேரன்பும் செலுத்தி வந்தார். குறிப்பாக உலகம்மை மீது அளவு கடந்த அன்பு கொண்டிருந்தார்.

இவர் தினந்தோறும் அர்த்தசாமத்தில் பாபநாசத் கோவிலுக்குச் சென்று உலகம்மையைத் தொழுதுவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது பரவசத்தில் பக்திப் பாடல்களைப் பாடிகொண்டே வருவார். ஒரு நாளிரவு இவர் பாடியவாறே வீடு திரும்பும்போது உலகம்மை இவர் பாடல்களைக் கேட்டவாறே இவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்தார். கவிராயர் தரித்திருந்த தாம்பூலத்தின் எச்சில் அவர் பாடி வரும்போது, வாயிலிருந்து தெரித்து அம்பிகையின் ஆடையின் மீது பட்டது. அக்கோலத்துடனேயே அம்பிகையும் கோயிலுக்கு எழுந்தருளினாள். மறுநாள் காலை அர்ச்சகர் அம்பாள் ஆடையில் படிந்திருந்த தாம்பூல எச்சில் திவலைகளைக் கண்டு மனம் வருந்தி, மன்னனிடம் முறையிட, அரசனும் பிராயச்சித்தம் செய்யப் பணித்து, இப்பாதகச் செயலைச் செய்தவரைத் தண்டிப்பதாகக் கூறினான்.

அன்றிரவு மன்னன் கனவில் அம்பிகை தோன்றி, நடந்ததைக் கூறினாள். கவிராயரின் தாம்பூல எச்சிலைத் தான் அணியாக ஏற்றுக் கொண்டதாகக் கூறி மறைந்தாள்.விழித்த மன்னன் மறுநாள் காலை கவிராயரை அழைத்து வரச்செய்து, அவருடைய பக்தியை அளவிட எண்ணி, அம்பாளின் கரத்தில் தங்கப் பூச்செண்டு ஒன்றை வைத்துப் தங்க கம்பிகளால் சுற்றிக் கட்டச் சொன்னான். மன்னன், நமச்சிவாயக் கவிராயரிடம், தாங்கள் அம்பிகைதாசர் என்பது உண்மையானால்,இதோ உலகம்மை கையிலிருக்கும் தங்கப் பூச்செண்டு, தாங்கள் பாடப் பாட அப்பூச்செண்டை சுற்றியிருக்கும் தங்க நார்கள் அறுந்து, இப்பூச்செண்டு தானாய் உங்கள் கையில் வந்து விழ வேண்டும் என்றான். அவரும் உலகம்மை அந்தாதி எனும் நூலை இயற்றிப் பாடினார். 'அபிராமி அந்தாதி'யைப் போல் இந்த நூலும் மிகுந்த சிறப்புடையது. அந்தாதி பாடப்பாட அம்மையின் கரத்துள்ள பூச்செண்டின் தங்க நார்கள் ஒவ்வொன்றாய் அறுந்து விழுந்தன.

'விண்டல நின்ற சரற்கால சந்திர சுவேதமுக

மண்டலமும் கையில் மலரொடும் தோளில் வழிந்த ரத்ன

குண்டலமும் பொலி வாலப் பிராய குமாரத்தியாய்

செண்டலர் செங்கை உலகாள் என் நாவில் சிறந்தவளே'

எனும் பாடலை பாடி முடித்த சமயம் படபடவென்று அனைத்து தங்க நாரும் அறுந்து, தங்கச் செண்டு உலகம்மையின் கையிலிருந்து நமச்சிவாய கவிராயர் கரத்திற்குத் தாவி வந்தது. மன்னன் முதற் கொண்டு அனைவரும் நமச்சிவாய கவிராயர் பாதத்தில் விழுந்து வணங்கினர். மன்னன் அவருக்குப் பல பரிசுகள் கொடுத்து கௌரவித்தான். இன்றும் அந்த தங்கப் பூச்செண்டை நாம் உலகம்மையின் கையில் காணலாம்.

இந்நிகழ்ச்சியின் காரணமாக நமச்சிவாயக் கவிராயரின் பெண் வழிச் சந்ததியினர் பாபநாசம் கோவிலுக்குச் சென்றால் அர்ச்சகர்கள் உலகம்மையின் கையிலிருக்கும் பூச்செண்டை எடுத்து அவர்களுக்கு தருவது வழக்கமாக இருந்தது.

மஞ்சள் பிரசாத மகிமை

உலகம்மை சன்னதி முன்பு ஒரு உரல் இருக்கிறது. இதில் பெண்கள் விரலி மஞ்சளை இட்டு அதனை இடிக்கின்றனர். இந்த மஞ்சளாலேயே அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடக்கிறது. அபிஷேகிக்கப்படும் மஞ்சள் தீர்த்தத்தை சிறிது அருந்தினால், திருமண, புத்திர பாக்கியங்கள் கிடைக்கும், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர் என்பது நம்பிக்கை. மேலும் இத்தீர்த்தம் சகல ரோக நிவாரணியாகவும் இருக்கிறது.

Read More
மகாலிங்கேசுவரர் கோவில்

மகாலிங்கேசுவரர் கோவில்

ராஜ அலங்காரத்தில் தன் மனைவியுடன் தட்சிணாமூர்த்தி இருக்கும் அபூர்வக் காட்சி

பொதுவாக சிவாலயங்களில் சிவபெருமானின் அம்சமான தட்சிணாமூர்த்தி, சுவாமி சன்னதியின் சுற்றுச் சுவரில் தென்திசையை நோக்கியபடி புன்னகை பூக்கும் முகத்துடன் வலது காலைத் தொங்கவிட்டு அதன்மீது இடது காலை மடக்கி வைத்து, வலது பாதம் முயலகனை மிதித்தவாறு அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். அவருடைய காலடியில் சனகாதி முனிவர்கள் நால்வரும் ஞானோபதேசம் கேட்டபடி அமர்ந்திருப்பார்கள்.

கும்பகோணத்தில் இருந்து 9 கி..மீ.தொலைவில், மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் தேவாரத்தலமான திருவிடைமருதூரில் அம்பிகையுடன் ராஜ அலங்காரத்தில் தட்சிணாமூர்த்தி, ராஜ சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார்.

இவருக்கு 'சாம்ப தட்சிணாமூர்த்தி' என்று பெயர். மகாலிங்கசுவாமி சன்னதியின் முன் மண்டபத்தில் இவர் சுதை சிற்பமாக விளங்குகிறார். இத்தகைய ராஜ அலங்கார கோலத்தில் துணைவியுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியை நாம் வேறு எந்தத் தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது.

Read More
புழுங்கல் வாரிப் பிள்ளையார் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

புழுங்கல் வாரிப் பிள்ளையார் கோவில்

புழுங்கல் வாரிப் பிள்ளையார் என்று பெயர் ஏற்பட்ட வரலாறு

திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலின் ஈசான திசையில் காட்சி தருகிறார் புழுங்கல் வாரிப் பிள்ளையார். ஒரு சந்தர்ப்பத்தில் கோவில் நைவேத்யத்திற்குப் புழுங்கல் அரிசி தட்டுப்பாடு ஏற்படவே, இவர், புழுங்கல் அரிசியை மழை போல் வாரித் தந்தவராம் இவர். அதனால் இவருக்கு புழுங்கல் வாரிப் பிள்ளையார் என்று பெயர் வந்தது.

முன்னொரு காலத்தில் திருவில்லிப்புத்தூர் பகுதியில் கடும் வறட்சி நிலவியது. மக்கள் வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்தனர். ஊரில் எஞ்சிய சில மக்களுக்கும் சமைக்க அரிசி கிடைக்கவில்லை. தங்களுக்குக் கிடைத்த சிறிதளவு வரகரிசியையே சமைத்து உண்டனர்.அப்போது அங்கிருந்த பெரியவர் ஒருவர், தனக்கு உணவு கிடைக்காத நிலையிலும், பிள்ளையாரின் நைவேத்தியத்திற்கு அரிசி கிடைக்கவில்லையே என்று மனம் வருந்தினார். அதனால் ஊர் மக்களிடம் நைவேத்தியத்திற்காக அரிசி தருமாறு வேண்டினார். ஆனால் மக்களோ, தாங்களே உணவிற்கு வரகரிசியைத்தான் உபயோகப்படுத்தும்போது பிள்ளையாருக்கு எப்படி அரிசி அளிக்க முடியும் என்று வினவினர்.இதனால் மனம் வருந்திய பெரியவர் பிள்ளையாரிடம் கண் கலங்கி நின்றார். பெரியவருக்காக மனமிரங்கிய பிள்ளையார், இரண்டு மரக்கால் புழுங்கல் அரிசியை சன்னதியில் வைத்து அருளினார். இதைக் கண்ட பெரியவர் பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்து விட்டு, தானும் உண்டு மகிழ்ந்தார்.

இதைக் கணட ஊர் மக்கள் அவருக்கு எப்படி பஞ்ச காலத்தில் புழுங்கல் அரிசி கிடைத்தது என்று வினவினார்கள். பிள்ளையார் தனக்கு அருளியதைச் சொல்ல விரும்பாத பெரியவர் மௌனம் சாதித்தார். இதனால் கோபமடைந்த மக்கள் அவரைக் கட்டி வைத்து துன்புறுத்தத் தொடங்கினார்கள்.

தன் பக்தரைக் காப்பாற்ற விரும்பிய பிள்ளையார், அன்றிரவு ஊர் பெரியவர்களின் கனவில் தோன்றி தான்தான் அரிசி வழங்கியதாகவும், அந்தப் பெரியவர் எந்தத் தவறும் இழைக்கவில்லை என்று கூறியருளினார். இதையறிந்த ஊர் மக்கள் மனம் வருந்தி, பெரியவரிடம் மனினிப்புக் கேட்டார்கள்.அவரையே பிள்ளையாருக்கு தினமும் பூஜை செய்யுமாறும் கேட்டுக் கொண்டனர்.அவர் பரம்பரையினரே இன்றும் இக்கோவிலில் பூஜை செய்கின்றார்கள். அன்றிலிருந்து இப்பிள்ளையார் புழுங்கல் வாரிப் பிள்ளையார் என்றும் புழுங்கல் அரிசிப் பிள்ளையார் என்றும் அழைக்கப்படுகிறார்.

Read More
வாழைமர பாலசுப்பிரமணியர் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

வாழைமர பாலசுப்பிரமணியர் கோவில்

பக்தனுக்காக வாழை மரத்தில் எழுந்தருளிய முருகன்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெம்பக்கோட்டை என்ற இடத்திற்கு அருகில் துலுக்கன்குறிச்சி என்ற இடத்தில் வாழைமர பாலசுப்பிரமணியர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வாழை மரத்துடன் முருகப்பெருமான் அருள்பாலிப்பது விசேஷமானதாகும். சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் தல விருட்சமாகவும் வாழைமரமே உள்ளது.

19–ம் நூற்றாண்டில் துலுக்கன்குறிச்சி கிராமத்தில் வேலாயுதம் என்ற முருக பக்தர் வாழ்ந்து வந்தார். முருகனை வணங்கிய பின்பே அன்றாட பணிகளை செய்யத் தொடங்குவார். அவர், தனது நிலத்தில் வாழை மரங்களை நட்டு வைத்து அதனை கண்ணும், கருத்துமாக பராமரித்து வந்தார். மேலும் அவர்,தன்னுடைய ஊரில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று, அங்குள்ள முருகப்பெருமானை தினமும் வழிபட்டு வருவார். அந்த ஆலயம் வெம்பக்கோட்டை என்ற இடத்திற்கு அருகில் வனமூர்த்திலிங்கபுரம் என்ற ஊரில் இருந்தது.

ஒரு நாள் அவர் கனவில் முருகப்பெருமான் தோன்றி, 'பக்தனே! நீ தினமும் என்னைக் காண வெம்பக்கோட்டை வர வேண்டாம். நானே உன்னைத் தேடி வந்துவிட்டேன். நீ மிகவும் ஆசையாக பராமரிக்கும் வாழை மரங்களில், இப்பொழுது எந்த வாழை மரத்தில் குலை தள்ளியிருக்கிறதோ, அந்த மரத்தில் நான் இருக்கிறேன்'என்று கூறி மறைந்தார். கனவில் இருந்து விழித்தெழுந்த முருக பக்தர், தன் மீது இறைவன் கொண்டிருக்கும் அன்பை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

இந்த நிலையில் அந்தக் கிராமத்திற்கு அருகில் உள்ள செவல்பட்டி ஜமீன்தாரின் கணக்குப் பிள்ளையின் மகனுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. திருமண வீட்டின் வாசலில் வைக்க குலை தள்ளிய வாழை மரம் தேவைப்பட்டது. பணியாட்கள் பல ஊர்களில் தேடியும் எங்குமே, குலை தள்ளிய வாழை மரம் கிடைக்கவில்லை. துலுக்கன்குறிச்சி கிராமத்தில், முருக பக்தர் வேலாயுதம் வீட்டு தோட்டத்தில் குலை தள்ளிய வாழை மரம் இருப்பதை அறிந்து, அவரிடம் வந்து கேட்டனர்.

அதற்கு வேலாயுதம், 'இந்த மரத்தில் முருகன் குடியிருக்கிறார். அவரை நான் தினமும் வழிபட்டு வருகிறேன். எனவே என்னால் அந்த மரத்தை உங்களுக்கு தர முடியாது' என்று கூறி மறுத்தார்.

இதனை பணியாட்கள் ஜமீன்தாரிடமும், அவரது கணக்குப்பிள்ளையிடமும் தெரிவித்தனர். இதைக் கேட்டதும் கணக்குப்பிள்ளையின் மகனான மாப்பிள்ளை, 'நானே சென்று அந்த மரத்தை கொண்டு வருகிறேன்' என்று கூறிவிட்டு, முருக பக்தரின் தோட்டத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் வேலாயுதத்திடம் மரத்தை தரும்படி கேட்டார். வேலாயுதம் மீண்டும், 'இது மரமல்ல, நான் வணங்கும் தெய்வம். அதனால் இதனை வெட்டக்கூடாது. அதற்கு மேல் உங்கள் விருப்பம்’ என்று கூறிவிட்டார்.

வாழைமரத்திலிருந்து பீறிட்ட ரத்தம்

வேலாயுதம் பேச்சைக் கேட்காமல், கணக்குப்பிள்ளையின் மகன் அரிவாளால், முருகப்பெருமான் குடியிருந்த வாழைமரத்தை வெட்டினார். மரத்தை வெட்டியதும் அதில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. மேலும் அந்த இடத்தில் நாகப்பாம்பு ஒன்று தோன்றி, கணக்குப்பிள்ளையின் மகனை தீண்டியது. ஜமீன்தாரும், கணக்குப்பிள்ளையும் இந்தச் செய்தியை அறிந்து பதறித் துடித்து ஓடி வந்தனர். இறந்து கிடந்த தன் மகனைப் பார்த்து கணக்குப்பிள்ளை கண்ணீர் வடித்தார். 'மணக்கோலத்தில் பார்க்க வேண்டிய பிளளையை, பிணக்கோலத்தில் பார்க்கிறேனே' என்று கதறி அழுதார்.

கணக்குப்பிள்ளை மகன் உயிர்ப்பித்து எழுந்த அதிசயம்

பின்னர் கணக்குப்பிள்ளை தன் மகனை உயிர்ப்பித்து தரும்படி, வேலாயுதத்திடம் வேண்டினார். அதற்கு அவர் தன் கையில் எதுவும் இல்லை. முருகப்பெருமானின் கருணையால் அவர் உயிர் பிழைப்பார் என்று கூறினார். பிறகு ஒரு பிரம்புக் குச்சியை எடுத்து இறைவனை நினைத்து, 'முருகா.. முருகா..' என்று மூன்று முறை கூறிக் கொண்டு சடலத்தின் மீது தடவினார். கணக்குப்பிள்ளையின் மகன், ஏதோ உறக்கத்தில் இருந்து எழுந்ததுபோல் எழுந்தார். அனைவரும் முருக பக்தரிடம் மன்னிப்புக் கேட்டனர்.

ஜமீன்தார் முருகபக்தரிடம், ‘உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். என்ன வேண்டும் என்று கேளுங்கள்’ என்றார். அதற்கு அவர், 'நான் வணங்கும் வாழை மர பாலசுப்பிரமணியரை சுற்றி, நான்கு கம்புகள் ஊன்றி மேற்கூரை போட்டுத் தாருங்கள்' என்று கேட்டார். அவரும் அவ்வாறே செய்து கொடுத்தார். வாழை மர பாலசுப்பிரமணியரின் சக்தியை அறிந்து கொண்ட அக்கம் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள் பலரும், இங்கு வந்து வழிபாடு செய்யத் தொடங்கினர். பிற்காலத்தில் பக்தர்களின் வசதிக்காக ஆலயம் புதுப்பிக்கப்பட்டது.

கோவிலில் நடத்தப்படும் பூஜைகள்

மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில், யாகம் வளர்க்கப்பட்டு, சிறப்பு பூஜையும், அபிஷேகமும் ஆராதனையும் செய்யப்படுகிறது. மார்கழி மாதம் நித்திய பூஜையும், மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று பூஜையும், வருடம் தோறும் வைகாசி விசாகத்தன்று சிறப்பு பூஜையும், பால்குட ஊர்வலமும், அன்னதானமும் வழங்கப்படுகிறது.

இந்த வாழை மர பாலசுப்பிரமணியரை வழிபட்டால் குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும். திருமண வரம், குழந்தை பாக்கியம் போன்றவை வந்து சேரும்.

Read More
கைலாசநாதர் கோவில்

கைலாசநாதர் கோவில்

மூன்று கொம்புகள் முளைத்த அதிசயத் தேங்காய்

திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 35 கி. மீ தொலைவில் உள்ளது தென்திருப்பேரை. சுவாமி கைலாசநாதர். இறைவி அழகிய பொன்னம்மை. சோழ தேசத்தில் திருச்சி அருகில் திருப்பேரை என்ற தலம் உள்ளது. அதே போல் தெற்கே பாண்டியநாட்டில் இருந்த இந்தத் தலமான திருப்பேரை 'தென்திருப்பேரை' என்று அழைக்கப்பட்டது. இத்தலம் நவ கைலாயங்களுள் ஏழாவது தலமாகும்.

மூன்று கொம்புகள் முளைத்த தேங்காய்

அம்பாள் சன்னிதியில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று இருக்கிறது. முற்காலத்தில் ஆங்கிலேய கலெக்டராக இருந்த கேப்டன் துரை என்பவர் ஒரு சமயம், இந்தத் தென்திருப்பேரை பகுதிக்கு வந்தார். தனக்கு குடிக்க இளநீர் கொண்டு வரச் சொல்லித் தன் சேவகர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். கலெக்டரின் உத்தரவை ஏற்றச் சேவகர், அருகில் உள்ள ஒரு தென்னந்தோப்பிற்கு சென்று இளநீர் பறிக்க முற்பட்டார். அங்கிருந்த விவசாயியோ அந்தத் தோப்பில் விளையும் இளநீர் சுவாமி கைலாசநாதரின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தக்கூடியது என்று சொல்லி இளநீரை பறிக்க விடாமல் தடுத்தார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கேப்டன் துரை கோபத்துடன் தோப்பிற்கு வந்து, 'இந்தத் தோப்பிலுள்ள இளநீருக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு? இப்போ பறிச்சு போடப்போறியா இல்லையா' என்று விவசாயியை அதட்டினார். கலெக்டரின் உத்தரவைத் தட்ட முடியாத விவசாயி, ஒரு இளநீரை பறித்துப் போட்டார். என்ன ஆச்சர்யம்! அந்த இளநீரில் மூன்று கொம்புகள் முளைத்திருந்தன. அதனை கண்ட கலெக்டர் பயந்து விட்டார். உடனே கோயிலுக்குச் சென்று இறைவனிடம் மன்னிப்பு கேட்டதோடு மட்டும் அல்லாமல், தினசரி பூஜைக்காக, ஆறரை துட்டு என்று அழைக்கப்பட்ட 26 சல்லி பைசாவை காணிக்கையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த முக்கொம்பு தேங்காய், ஒரு கொம்பு ஒடிந்து, தற்போது இரண்டு கொம்புகளுடன் மட்டுமே காட்சித் தருகிறது.

சுவாமி கைலாசநாதரை வணங்கினால் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று வாழலாம்.

கிழக்கு நோக்கிய தனி கருவறையில் அழகிய பொன்னம்மை ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மற்றொரு கரத்தைக் கீழே தொங்கவிட்டபடியும் நின்ற கோலத்தில் காட்சித் தருகிறாள். இந்த அம்மையை வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

Read More
கோட்டை வாசல் விநாயகர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

கோட்டை வாசல் விநாயகர் கோவில்

கோவிலை இடிக்க உத்தரவிட்ட ஆங்கிலேய அதிகாரியை மிரட்டிய விநாயகர்

ராமநாதபுரம் அரண்மனையைச் சுற்றியிருந்த கோட்டைக்கு வெளியே அமைந்துள்ளது கோட்டை வாசல் விநாயகர் கோவில். மிகவும் பழமை வாய்ந்தது இக்கோவில். இத்தலத்து விநாயகர் ராமநாதபுரம் மன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். ராமநாதபுரம் மன்னர்கள் எந்தவொரு முக்கிய செயலையும் இவரை பூஜை செய்தபின்தான் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். கருவறையில் கோட்டை வாசல் விநாயகர் வல்லபையை தமது மடியில் இருத்தி கொண்டு நமக்குக் காட்சி தருகிறார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கோட்டை வாசல் பிள்ளையாருக்கு ஏராளமான ஆன்மீக பக்தர்கள் இருப்பதைக் கண்டு எரிச்சல் அடைந்த ஆங்கிலேய அதிகாரி ஒருவர், இக்கோயிலிலிருந்து அபிஷேக தீர்த்தம் வெளியேறும் கோமுகம் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகப் பொய்யான ஒரு குற்றச்சாட்டைக் கூறி, அந்த கோட்டை வாசல் விநாயகர் கோவிலை உடனடியாக இடித்து விட வேண்டும் என உத்தரவிட்டார்.

அன்று இரவே ஆங்கிலேய அதிகாரியின் உறக்கத்தின் பொழுது, கனவில் யானை உருவத்தில் கோட்டை வாசல் விநாயகர் தோன்றி ஏறி மிதிப்பது போல மிரட்டி உள்ளாராம். விடியற்காலையில் ஆங்கில அதிகாரி கோவிலை இடிக்கும் உத்தரவை நிறுத்தி உள்ளார்.

தெய்வ சக்தியை உணர்ந்த அந்த அதிகாரி, தன் தவறை உணர்ந்து கோவிலுக்கு வந்து கோட்டை வாசல் விநாயகரை வணங்கி மன்னிப்பும் கேட்டுச் சென்றாராம். அதோடு மட்டும் அல்லாமல் இந்த ஆலயத்தை அரண்மனைக்கு எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றார் என்பது வரலாறு.

இவரை வழிபடுபவர்களின் கோரிக்கைகளை இவர் நிறைவேற்றித் தருவதால், இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் சிதறு தேங்காய் போடுவதும், விநாயகருக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Read More
கைலாசநாதர் கோவில்

கைலாசநாதர் கோவில்

சூரியன்,சந்திரன், குரு பகவான், சுக்கிரன் குதிரை வாகனத்தில் காட்சி தரும் அபூர்வக் கோலம்

தென்திருப்பேரை கைலாசநாதர் கோயில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் கைலாசநாதர் என்றும், அம்மன் அழகிய பொன்னம்மை என்றும் அழைக்கப்படுகின்றார். இச்சிவாலயம் தமிழகத்தின் நவ கைலாயங்களுள் ஏழாவது தலமாகும். நவக்கிரகங்களில் புதன் வழிபட்டத் தலமாகும்.

தமிழகத்தின் நவ கைலாயங்கள் என்பவை தமிழ்நாட்டின் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஒன்பது சிவாலயங்கள் உள்ள ஊரைக் குறிப்பதாகும்.இந்த தலங்களைத் தரிசித்தால் செய்த பாவங்களிலிருந்து விடுபட்டு முக்தி அடையலாம் என்று கூறப்படுகிறது. இந்தத் தலங்களை மகாசிவராத்திரியன்று பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

குதிரை வாகனத்தில் சூரியன்,சந்திரன், குரு பகவான், சுக்கிரன்

நவகிரகங்களில் சூரியனுக்குரிய வாகனம் குதிரை ஆகும்.. ஆனால் இங்குள்ள நவக்கிரக சந்நிதியில் காட்சி தரும் சூரியன், சந்திரன், குரு பகவான், சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களுமே குதிரை வாகனத்தில் எழுந்தருளியிருப்பது சிறப்பம்சம் ஆகும். சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரிலும், குரு பகவானும், சுக்கிர பகவானும் எட்டு குதிரைகள் பூட்டிய தேரிலும், சந்திர பகவான் பத்து குதிரைகள் பூட்டிய தேரிலும் காட்சியளிக்கின்றனர். இது வேறு எந்தத் தலத்திலும் காணமுடியாத சிறப்பம்சம் ஆகும்.

ஆறு கரங்களுடன் காட்சி தரும் பைரவர்

இங்குள்ள பைரவருக்கு ஆறு கரங்களுடன் காட்சி தருவது மற்றுமொரு சிறப்பம்சம் ஆகும். இவர் ஆறு கைகளில் ஆயுதம் ஏந்தியும், நாய் வாகனம் இல்லாமலும் காட்சி தருகிறார்.சிறப்பு வாய்ந்த இந்தப் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி திதியில் பூஜை செய்தால் தொழில் விருத்தி ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

புதன் தோஷ நிவர்த்தித் தலம்

தங்கள் ஜாதகத்தில் புதன் தோஷம் உள்ளவர்களும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்புவர்களும் சுவாமிக்கு பச்சை நிற வஸ்திரம் சாத்தி வழிபடுகின்றனர்.

Read More
மகாலிங்கேசுவரர் கோவில்

மகாலிங்கேசுவரர் கோவில்

திருவிடைமருதூர் மூகாம்பிகை அம்மன்

கும்பகோணத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் தேவாரத்தலமான திருவிடைமருதூர் இருக்கிறது. இறைவன் திருநாமம் மகாலிங்கேசுவரர். இக்கோவிலில் அம்பாள் சன்னதிக்குத் தெற்குப் பக்கம் மூகாம்பிகை அம்மன் சன்னதி உள்ளது. இந்தியாவில் இரண்டு இடங்களில்தான் மூகாம்பிகைக்கு சிறப்பு வாய்ந்த சன்னிதி உள்ளது. ஒன்று கர்நாடக மாநிலம் கொல்லூர், மற்றொன்று திருவிடைமருதூர்.

மகாலிங்கேசுவரரை கரம் பிடித்த மூகாம்பிகை அம்மன்

கொல்லூர் மூகாம்பிகை அம்மன் மூகாசுரனை வதம் செய்ததால் ஏற்பட்ட உக்கிரம் தணியவும், பிரம்மஹத்தி தோஷம் விலகவும், அவள் திருவிடைமருதூர் தலத்திற்கு வந்து மகாலிங்கேசுவரரை நோக்கித் தவம் இயற்றத் தொடங்கினாள். மேலும் அவள் மகாலிங்கேசுவரர் மேல் கொண்ட மோகத்தினால், அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதும் அவளது தவத்தின் நோக்கமாக இருந்தது. அவளது தவத்தை மெச்சிய மகாலிங்கேசுவரர், மூகாம்பிகை அம்மனின் தோஷத்தை நிவர்த்தி செய்து, அவளை பிரகத் சுந்தரகுஜாம்பிகை என்ற திருநாமத்தடன் திருமணம் செய்து கொண்டார். இதனால்தான் இத்தலத்து அம்பாள் பிரகத் சுந்தரகுஜாம்பிகை நமக்கு திருமணக் கோலத்தில் தரிசனம் தருகிறாள்.

இத்தலத்து மூகாம்பிகை அமமனின் சன்னதி வட இந்திய கோயிற் கோபுர அமைப்பில் அமைந்து விளங்குகிறது. கருவறையில் மூகாம்பிகை அம்மன் கோரைப் பற்களுடன், கபாலம்,அங்குசம்,பாசம் முதலியவற்றைக் கரங்களிலேந்தி பத்மாசனத்தில் அமர்ந்து சாந்த சொரூபியாய் தவக் கோலத்தில் நமக்குக் காட்சி தருகின்றாள்.

அம்மனின் முன் மிகவும் சக்தி வாய்ந்த மகா மேரு ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பாஸ்கரராயர் எனும் அம்பாள் உபாசகர், தான் ஸ்ரீலலிதா ஸகஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதிய 'சௌபாக்கிய பாஸ்கரம்' என்னும் நூலை இந்த மூகாம்பிகை அம்மனின் முன்தான் அரங்கேற்றினார்.

மழலை வரம் அருளும் அம்மன்

கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் கோயிலில் உள்ள மூகாம்பிகையைப் போலவே இத்தலத்தில் வீற்றிருக்கும் திருவிடைமரூதூர் மூகாம்பிகையும் சிறப்பும் கீர்த்தியும் வாய்ந்தவள். அவளை வேண்டினால் தங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்பதால், பக்தர்கள் பெருமளவில் இங்கு வந்து வழிபடுகின்றனர். இந்த அம்மனை மனமுருக பிரார்த்தனை செய்யும் திருமணம் ஆன பெண்கள், தங்களுக்கு பிரச்சினை ஏதும் இல்லாத வகையில் கர்ப்பம் தரிக்க வேண்டுகின்றனர். அதற்காக அவர்கள் இத்தலத்தில் தொட்டில் கட்டி தங்களுக்கு மழலை வரம் வேண்டுகிறார்கள். அதுபோல் திருமண வரம் வேண்டியும், சுகப் பிரசவம் அடைவதற்காக கர்ப்பிணி பெண்களும் ஏராளமானோர் பிரார்த்திக்கிறார்கள்.

Read More
ஏழைப் பிள்ளையார் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

ஏழைப் பிள்ளையார் கோவில்

ஏழு இசை ஸ்வரங்கள் சாப விமோசனம் பெற்ற தலம்

திருச்சி மலைக்கோட்டை என்றாலே நம் நினைவுக்கு வருவது உச்சிப் பிள்ளையார்தான்.ஆனால் மலைக்கோட்டையை கிரிவலம் வரும்போது, உச்சிப் பிள்ளையாரையும் சேர்த்து 12 விநாயகர் கோயில்களை தரிசிக்கலாம். இதில் ஏழாவதாகக் காட்சி தருபவரே வடக்கு ஆண்டார் தெருவில் வீற்றிருக்கும் ஏழாவது பிள்ளையார். இவரே நாளடைவில் மருவி ஏழைப் பிள்ளையார் என்றானார். ஏழு ஸ்வரங்கள் இணைந்து இவரை வணங்கி அருள் பெற்றன என்றும் அதனால் ஏழிசை விநாயகர் என்ற திருநாமம் ஏற்பட்டு பின்னர் அது ஏழைப் பிள்ளையார் என்று மருவியது என்ற கருத்தும் உண்டு. இவர் ஸப்தபுரீஸ்வரர் என்றும் போற்றப்படுகிறார்.

ஏழு இசை ஸ்வரங்கள் சாப விமோசனம் பெற்ற தலம்

ஏழு இசை ஸ்வரங்களும் தாங்களே சிறந்தவர்கள் என்ற ஆணவத்தால், சிவபூஜையில் அபசுரமாக ஒலித்த காரணத்தால் கலைமகளால் சாபம் பெற்றன . இதனால் அவை ஊமையாகி விட்டன. சாபவிமோசனம் வேண்டி, ஈசனைத் துதிக்க, அவரும் 'பூலோகம் சென்று, தென் கயிலாயம் எனப்படும் திருச்சிராப்பள்ளி மலை மீது அருளும் உச்சிப் பிள்ளையாரை வழிபட்டு, அந்த மலையை வலம் வந்து, அந்த பாதையில் ஏழாவதாக எழுந்தருளி இருக்கும் விநாயகரை வழிபட்டால் உங்கள் சாபம் நீங்கும். மீண்டும் சப்தஸ்வரங்களை ஒலிக்கும் சக்தியைப் பெறுவீர்கள். அந்த ஆலயமும் உங்கள் நினைவாக ஏழிசைப் பிள்ளையார் என்ற பெயர் கொண்டு விளங்கும்' என்று அருளினார். அதேபோல் ஏழு ஸ்வரங்களும் இங்கு வந்து கணபதியை பிரதிஷ்டை செய்து, தொழுது சாப விமோசனம் பெற்றன என்று ஆலய புராணம் கூறுகிறது.

மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகள் குணமடைய அருளும் பிள்ளையார்

இசைக் கலைஞர்கள் குரல் வளம் சிறப்பாக, பேச்சுத் திறமை உண்டாக, செல்வச் செழிப்பு உண்டாக, குழந்தைகளுக்கு ஏற்படும் பேச்சு சம்பந்தமான குறைகள் தீர, தொண்டை சம்பந்தமான நோய்கள் நீங்க இங்குள்ள விநாயகரைப் பிரார்த்திக்கிறார்கள். படிப்பில் கவனம் குறைந்த குழந்தைகளும், மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகளும் இவரை வணங்கினால் நல்ல முன்னேற்றம் அடைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

யம பயம் போக்கும் பிள்ளையார்

ஏழைப் பிள்ளையார் தெற்கு திசை நோக்கி அருள்புரிவதால் இவரை வணங்குபவர்களுக்கு யம பயமோ, யம வாதனையோ இல்லை என்பது ஆன்றோர் கூற்று. திருச்சிராப்பள்ளி மலை மீது எழுந்தருளியிருக்கும் தந்தையான ஈசனையும் தாயான அம்பிகையையும் பார்த்த வண்ணம் இருப்பதால், இந்த கணபதியை வணங்கினால் குடும்ப ஒற்றுமையும் அமைதியும் நிலைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த கணபதியை தரிசித்தாலே மலை மீது ஏறி உச்சிப் பிள்ளையாரை தரிசித்த பலனும் கிட்டும் என்கிறார்கள்.

Read More
வானமாமலை பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

வானமாமலை பெருமாள் கோவில்

கருவறையில் உள்ள மூர்த்தஙகள் அனைத்தும் சுயம்புவாகத் தோன்றிய திவ்ய தேசம்

திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 32 கி.மீ. தொலைவில் உள்ள திவ்ய தேசம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில்.

கோயிலின் கருவறையில் மூலவர் வானமாமலை என்கின்ற தோதாத்ரி நாதர், தனது இடது காலை மடித்துக்கொண்டும், வலதுகாலை தொங்கவிட்டு தரையில் படும்படியும் ஆதிசேஷன் குடைபிடிக்க , பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக ராஜதர்பார் கோலத்தில் அமர்ந்திருப்பது இந்த திவ்ய தேசத்தில் மட்டும்தான். அவ்வாறு வீற்றிருக்கின்ற காரணத்தினாலேயே, இக்கோவில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. ஊர்வசி, திலோத்தமா ஆகிய இருவரும் சாமரம் வீசிக் கொண்டும், சூரியன், சந்திரன், பிருகரிஷி, மார்க்கண்டேய ரிஷி முதலானோர் மூலவர் தோதாத்ரி நாதரின் இருபுறமும் வீற்று இருக்கிறார்கள்.

இத்தலத்தில் பெருமாள் ஒரு கையை பாதத்தை நோக்கியபடியும், மற்றொரு கையை மடியில் வைத்தும் காட்சி அளிக்கிறார். யார் தன் பாதத்தை சரணடைகிறார்களோ அவர்களுக்குத் தன் மடியில் இடம் உண்டு என்பதுதான் இதன் பொருள். இத்தகைய பெருமாள் கோலத்தை வேறு எந்தத் தலத்திலும் காண முடியாது.

சில தலங்களில் மூலவர் மட்டும் சுயம்புவாக எழுந்தருளியிருப்பார். ஆனால் இத்தலத்தில் கருவறையிலுள்ள தோதாத்ரி நாதர், பூதேவி, ஸ்ரீதேவி, சூரியன், சந்திரன், பிருகரிஷி, மார்க்கண்டேய ரிஷி, ஊர்வசி, திலோத்தமா ஆகிய ஒன்பது பேரும், அர்த்த மண்டப்பத்திலுள்ள கருடாழ்வாரும், விஷ்வக்சேனரும் ஆக 11 மூர்த்தங்களும் சுயம்புவாக உருவானவர்கள். இப்படி கருவறையில் உள்ள அனைத்து மூர்த்தஙகளும் சுயம்புவாக எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

Read More
காரைக்கால் அம்மையார் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

காரைக்கால் அம்மையார் கோவில்

சிவபெருமானால் 'அம்மையே' என்று அழைக்கப்பட்ட பெண் நாயன்மார்

புதுச்சேரி மாநிலத்திலுள்ள காரைக்காலில் அமைந்துள்ளது காரைக்கால் அம்மையார் கோவில். சேக்கிழார் இயற்றிய பெரியபுராணத்தில் கூறப்பட்டுள்ள 63 நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் ஒருவர்தான் பெண் இனத்தைச் சேர்ந்தவர். சிவபெருமானால் 'அம்மையே' என்று அழைக்கப்பட்டச் சிறப்புக்குரியவர். இசைத் தமிழால் இறைவனைப் பாடியவர். சிவபெருமானால் மாங்கனி தந்து அவர் ஆட்கொள்ளப்பட்ட வரலாறு, அவர்தம் பக்தியின் சிறப்பை நமக்கு உணர்த்துகின்றது. அதைப் பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் மாங்கனி திருவிழா காரைக்காலம்மையார் கோவிலில் நடைபெறுவது வழக்கம்.

சிவபெருமான் மாங்கனி தந்து காரைக்கால் அம்மையாரை ஆட்கொண்ட வரலாறு

காரைக்காலிலுள்ள குலத்தைச் சேர்ந்த தனதத்தன் என்பவருக்கு மகளாக பிறந்தவர்காரைக்கால் அம்மையார். இவர் இயற் பெயர் புனிதவதி. சிறுவயது முதல் சிவ பக்தியிலும், சிவனடியார்களுக்கு தொண்டு புரிவதிலும் சிறந்தவர். புனிதவதி வளர்ந்து திருமண வயதை அடைந்ததும், பரமதத்தன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.திருமணத்துக்கு பிறகும் புனிதவதி சிவனடியார்களுக்கு தொண்டு செய்து வந்தார். ஒரு நாள் பரமதத்தனுக்கு தனக்கு கிடைத்த மாங்கனிகளை தனது வேலையாட்கள் மூலம் வீட்டிற்கு கொடுத்து அனுப்பினான். அப்போது சிவபெருமான், ஒரு சிவனடியார் வேடத்தில் அங்கு வந்தார் சிவன். தாம் பசியுடன் இருப்பதாகவும், உண்ண ஏதாவது உணவு தருமாறும் புனிதவதியை வேண்டினார். அப்போது உணவு தயாரகவில்லை என்பதால் தனது கணவன் கொடுத்து அனுப்பிய மாங்கனிகளில் இருந்து ஒன்றை எடுத்து சிவனடியாருக்கு உண்ணக்கொடுத்தார். அதனை உண்ட சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமானும் புனிதவதியை வாழ்த்தி மறைந்தார். மதிய உணவு உண்பதற்காக வீட்டிற்கு பரமதத்தன், தனது மனைவி புனிதவதியிடம் மாங்கனிகளை எடுத்து வா என்று கேட்டார். புனிதவதியோ, சிவனடியாருக்கு கொடுத்த ஒரு மாங்கனி போக மீதம் இருந்த மற்றொரு மாங்கனியை தன் கணவனிடம் கொண்டு வந்து கொடுத்தார். அக்கனியை உண்ட பரமதத்தன், இரண்டாவது மாங்கனியையும் எடுத்து வருமாறு கூறினார்.

வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த புனிதவதியோ,சமைக்க சற்று தாமதமாகும் காத்திருங்கள் என்று கூறினார்.அப்போது புனிதவதியாருக்கு தனது கணவன் கொடுத்து அனுப்பிய மாங்கனிகளில் இருந்து ஒன்றை எடுத்து சிவனடியாருக்கு உண்ணக்கொடுத்தார். அதனை உண்ட சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமானும் புனிதவதியை வாழ்த்தி மறைந்தார். மதிய உணவு உண்பதற்காக வீட்டிற்கு பரமதத்தன், தனது மனைவி புனிதவதியிடம் மாங்கனிகளை எடுத்து வா என்று கேட்டார். புனிதவதியோ, சிவனடியாருக்கு கொடுத்த ஒரு மாங்கனி போக மீதம் இருந்த மற்றொரு மாங்கனியை தன் கணவனிடம் கொண்டு வந்து கொடுத்தார். அக்கனியை உண்ட பரமதத்தன், இரண்டாவது மாங்கனியையும் எடுத்து வருமாறு கூறினார்.

சிவபெருமான் கொடுத்த மாங்கனி

இதைக் கேட்ட புனிதவதி, பூஜை அறைக்கு சென்று சிவபெருமானிடம் மாம்பழம் கொடுத்து அருளுமாறு வேண்டினார். சிவனும் உடனே புனிதவதிக்கு மாங்கனியை அருளினார். அதனை பெற்றுக் கொண்ட புனிதவதி, தன் கணவன் பரமதத்தனிடம் மாங்கனியை கொடுத்தாள். அக் கனியை உண்ட பரமதத்தனுக்கு தான் முன்பு சாப்பிட்ட மாங்கனியை விட இரண்டாவது கனி மிகவும் சிறப்பான சுவையுடன் இருந்ததால், புனிதவதியிடம் மாங்கனி சுவையின் வேறுபாடு பற்றி கேட்டான். கணவனின் கேள்விக்கு பொய் சொல்ல விரும்பாத புனிதவதி நடந்தவற்றை மறைக்காமல் தனது கணவனிடம் தெரிவித்தாள். இதனைக் கேட்ட பரமதத்தன், அப்படியானால் சிவபெரு மானிடம் இருந்து இன்னொரு மாங்கனி பெற்றுத் தருமாறு வேண்டினான். புனிதவதியும் சிவபெருமானை வேண்ட இன்னொரு மாங்கனியும் கிடைத்தது. இதனைக் கண்ட பரமதத்தன் தன் மனைவி ஒரு தெய்வம் என்று எண்ணி அவளது காலில் விழுந்து வணங்கினார். தன் மனைவியை விட்டு விலகி பாண்டிய நாடு வந்த பரமதத்தன், குலசேகரன் பட்டிணத்தில் தங்கி வணிகம் செய்ய ஆரம்பித்தான். பிறகு அங்கேயே ஒரு பெண்ணை மணந்து வாழ்ந்து வந்தான். அந்த பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு தனது முதல் மனைவியின் பெயரான புனிதவதி என்று பெயரிட்டு அழைத்து வந்தான். இந்த தகவலை அறிந்த புனிதவதியார் குலசேகரன்பட்டிணம் வந்து, ஊர் எல்லையில் உள்ள ஒரு மண்டபத்தில் அமர்ந்து கொண்டு கணவனுக்கு அழைப்பு விடுத்தார். தனது இரண்டாவது மனைவி, மகளுடன் வந்து முதல் மனைவியான காரைக்கால் அம்மையார் காலில் விழுந்து வணங்கி, அங்கு கூடியிருந்த மக்களையும் வணங்க வைத்தான்.

சிவபெருமானிடம் பெற்ற வரம்

காரைக்கால் அம்மையார் குலசேகரபட்டினத்தில் கணவருடன் சேர நினைத்து அது இயலாமல் போகவே, கணவனுக்கு தேவையற்ற இந்த இளமையும், அழகும், தனக்கு வேண்டாம் என இறைவனிடம் கூறி துறவறத்திலேயே யாரும் துணியாத நிலையான பேய் வடிவினை வரமாகக் கேட்டுப் பெற்றார். காரைக்கால் சென்று அம்மை அப்பரை வணங்கிய பின்னர் அங்கிருந்து கயிலாயம் புறப்பட்டுச் சென்றார். காலால் நடப்பது குற்றம் என்று எண்ணிய புனிதவதியார், தனது தலையாலேயே கயிலாயத்தில் நடந்து சென்றார். அப்போது இறைவன், 'அம்மையே! நலமாக வந்தனையோ? நம்மிடம் வேண்டுவது யாது?'' என்று புனிதவதியை நோக்கி கேட்டார். அதற்கு அம்மையார்,'இறைவா! உன்மீது என்றும் நீங்காத அன்போடு நான் இருக்க வேண்டும். பிறவாமை வேண்டும், மீண்டும் பிறந்தால் உம்மை என்றும் மறவாமை வேண்டும். அனுதினமும் உன் திருவடியின் கீழ் இருந்து என்றும் உன் திருநாமத்தை பாடிக் கொண்டிருக்கும் வரம் வேண்டும்' என்று கேட்டார். உடனே சிவபெருமான், 'அம்மையே! நீவீர் பூலோகத்தில் உள்ள திருவாலங்காட்டில் எனது திருவடியின்கீழ் இருந்து பாடும் வரம் தந்தோம்' என்று அருளினார். அதன்படி இன்றும் திருவாலங்காட்டில் உள்ள நடராஜப் பெருமானின் ரத்தின சபையில் காரைக்கால் அம்மையார் அமர்ந்து சிவபெருமானின் நடனத்தை கண்டு மகிழ்கிறார் என்பது ஐதீகம். 63 நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார்தான் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

சிவபெருமானைத் துதித்து, காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி, திருஇரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்தத்திருப்பதிகம் போன்ற நூல்களைப் பாடியுள்ளார்.

பிள்ளை வரம் தரும் மாங்கனித் திருவிழா

இந்த ஆண்டு மாங்கனி திருவிழா ஜூலை மாதம்10 முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 10-ந் தேதி மாப்பிள்ளை அழைப்பும், 11-ந் தேதி திருக்கல்யாணமும், 13-ந் தேதி சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் பவளக்கால் சப்பரத்தில் வீதியுலாவும் நடக்கிறது. வீதியுலாவின்போது பக்தர்கள், தங்கள் நேர்த்திக்கடனை தீர்க்கும் வகையில், மாங்கனிகளை வாரி இறைப்பார்கள். அப்போது மக்கள் உயரமான இடத்திலிருந்து வீதியில் மாங்கனிகளை வீசுவர். மாடிகளிலிருந்து இறைக்கப்படும் மாம்பழங்கள் வானத்திலிருந்து மாம்பழ மழை பொழிவதைப் போல் தெரியும். இந்த மாங்கனிகளை பிடித்து சாப்பிட்டால் திருமணம் கை கூடும் என்பதும், குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதும் ஐதீகம் . குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாங்கனிகளை தங்களது சேலையில் தாங்கி பிடித்துக் கொள்வர்.ஜூலை 14-ந் தேதி, அம்மையாருக்கு, சிவபெருமான் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

பிள்ளை வரம் வேண்டி காரைக்கால் அம்மையார் கோயிலுக்கு வந்து மாங்கனி திருவிழாவின்போது மாங்கனிகளை படைத்து வழிபட்டால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

Read More