திருப்பாற்றுறை ஆதிமூலநாதர் கோவில்

திருப்பாற்றுறை ஆதிமூலநாதர் கோவில்

நடனமாடிய கோலத்தில் இருக்கும் வீணை தட்சிணாமூர்த்தி

திருச்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருப்பாற்றுறை. இறைவன் திருநாமம் ஆதிமூலநாதர். இறைவியின் திருநாமம் மேகலாம்பிகை, நித்யகல்யாணி. கொள்ளிடம், காவிரி ஆகிய இரு ஆறுகளுக்கு மத்தியில் இக்கோவில் அமைந்திருக்கிறது.

நந்தியும், பலிபீடமும் கோவில் கோபுரத்திற்கு வெளியே இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

தல வரலாறு

இப்பகுதியை ஆண்ட சோழன், இவ்வழியாக வேட்டைக்கு சென்றபோது தன் படைகளுடன் சற்று நேரம் ஓய்வெடுத்தான். அப்போது அருகிலுள்ள புதரில் இருந்து வெண்ணிற அதிசய பறவை பறந்து சென்றது. மன்னன் அப்பறவையின் மீது ஆசைகொண்டு அம்பு எய்தான். ஆனால், தப்பி விட்டது. சிலநாட்கள் கழித்து மன்னன் மீண்டும் இவ்வழியாக சென்றபோது, முன்பு பார்த்த அதே பறவை பறப்பதைக் கண்டான். புதர் தானே அதன் இருப்பிடம், அங்கு வந்ததும் பிடித்து விடலாம் எனக் கருதி மறைந்திருந்தான். அந்த இடம் முழுதும் பால் மணம் வீசியது. பறவை வரவே இல்லை. சந்தேகப்பட்ட மன்னன் புதரை வெட்டினான். ஒரு புற்று மட்டும் இருந்தது. புற்றை தோண்டியபோது, பால் பீறிட்டது. பயந்த மன்னன் அரண்மனைக்கு திரும்பி விட்டான். அன்றிரவில் அவனது கனவில் அசரீரியாக ஒலித்த சிவன், பால் வெளிப்பட்ட இடத்தில் தான் லிங்க வடிவில் இருப்பதாக கூறினார். அதன்பின் மன்னன் இவ்விடத்தில் கோவில் கட்டி வழிபட்டான். பால் பொங்கிய இடத்தில் இருந்து வெளிப்பட்டதால், சுவாமி ‘பாற்றுறை நாதர்’என்றும், தலம் ‘பாற்றுறை’ (பால்துறை) என்றும் பெயர் பெற்றது.

அற்ப ஆயுள் பெற்றிருந்த மார்க்கண்டேயர், ஆயுள்விருத்திக்காக சிவனை வேண்டி யாத்திரை சென்றார். அவர் இங்கு வந்தபோது லிங்கத்துக்கு பூஜை செய்ய தீர்த்தம் இல்லை. சுற்றிலும் தண்ணீர் கிடைக்காத நிலையில், லிங்கத்தின் தலையில் இருந்து பால் பொங்கி, தானாகவே அபிஷேகமானது.

வீணை தட்சிணாமூர்த்தி

கருவறை சுற்றுச்சுவரில் தட்சிணாமூர்த்தி வீணை வாசிக்கும் கோலத்தில் இருக்கிறார். அவரது இடது கால் சற்றே மடங்கி நளினமாக இருக்கிறது. இதனை, வீணையின் இசைக்கேற்ப நடனமாடிய கோலம் என்கிறார்கள். அருகே சீடர்கள் இல்லை. தட்சிணாமூர்த்தியின் இந்த வித்தியாசமான கோலத்தைக் காண்பது மிகவும் அபூர்வம். இசைக்கலைஞர்கள் இவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

Read More
திருப்புவனம் புஷ்பவனேசுவரர்  கோவில்

திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோவில்

பித்ரு வழிபாட்டிற்கு ஏற்ற ஆடி அமாவாசை

ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும். இந்த மாதத்தில் தினக்கோளான சந்திரன் தனது ராசியான கடகத்தில் சூரியனுடன் சேரும் நாளே ஆடி அமாவாசை. இது சிறப்பு வாய்ந்த முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்ற அமாவாசையாகும். பித்ரு லோகத்தில் இருக்கும் ஆத்மாக்கள், அதாவது முன்னோர்கள், ஆடி அமாவாசை அன்று பூமிக்கு வருகிறார்கள். எனவே, ஆடி அமாவாசை என்று, பித்ருக்களை வழிபாடு செய்து, ஆசி பெறுவது வாழ்வை பல விதங்களில் மேம்படுத்தும். ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பித்ரு காரியம் செய்யவும், வேண்டி விரதம் இருக்கவும் ஏற்ற நாளாகும். ஆடி அமாவாசை அன்று விரதம் இருந்து, முன்னோர்கள் வழிபாடு செய்வது குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக இருந்து வந்த தடைகள் மற்றும் சாபங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதற்காக காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களை நாடுவது வழக்கம். தமிழ்நாட்டில் முன்னோர் வழிபாடு செய்வதற்கு ஏற்ற தலங்கள் சில உள்ளன. அவை, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், திருவள்ளூர் வீரராகவர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், அரன்வாயல் வரமூர்த்தீஸ்வரர் கோவில், திருப்பள்ளிமுக்கூடல் குருவிராமேஸ்வரம் கோவில், பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம் பித்ரு தர்ப்பணம் கொடுக்க ஏற்ற தலமாகும்.

காசியை விட பதினாறு பங்கு அதிகம் புண்ணியம் கிடைக்கும் திருப்புவனம்

பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற 14 தலங்களில் திருப்புவனமும் ஒன்று. இத்தலம் மதுரையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன் திருநாமம் புஷ்பவனேசுவரர். இறைவியின் திருநாமம் சௌந்தரநாயகி. கோவிலுக்கு நேர் எதிரே வைகை ஆற்றின் வடகரையில் பார்வதி தேவியார் தவம் செய்த இடம் உள்ளது, இங்கே வந்த திருஞானசம்பந்தர் வைகை ஆற்றைக் கடக்க முயன்ற போது ஆற்று மணல்கள் எல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சியளித்தன. எனவே திருஞானசம்பந்தர் அங்கிருந்தபடியே தேவாரப் பதிகத்தைப் பாடி இறைவனை வணங்கினார். இறைவன் புஷ்பவனேஸ்வரர் நந்தியை சாய்ந்திருக்கச் சொல்லி அவருக்கு காட்சி அருளினார்.

காசிக்கு செல்ல இயலாதவர்கள் திருப்புவனத்திற்கு வருகை புரிந்து புஷ்பவனேசுவரர் சன்னதி முன் உள்ள வைகை ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு அஸ்தி கரைப்பது, திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் அவர்களது ஆத்மா சாந்தியடையும், அவர்களது ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கு அஸ்தியைக் கரைத்தால் பாவ விமோசனம் கிடைக்கும் என்கிறார்கள். அக்காலத்தில் புகழ்பெற்ற சுச்சோதி மன்னன் முன்னோர்களுக்கு திதி கொடுக்க திருப்புவனம் வந்து வைகையாற்றங்கரையில் வேண்டுதல் செய்துள்ளார். தமிழகத்தில் காசியை விட வீசம் (பதினாறு பங்கு) அதிகம் புண்ணியம் கிடைக்கும் ஒரே தலம் திருப்புவனம் ஆகும். மேலும் இராமேஸ்வரத்தைக் காட்டிலும் ஆறு பங்கு அதிகம்புண்ணியம் அருளும் தலம்.

Read More
சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில்

நமது தேசிய கொடி கோபுரத்தில் ஏற்றப்படும் ஒரே தலம்

ஒவ்வொரு வருடமும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட்15 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒரு விசேஷம் உண்டு. இந்தியாவிலேயே, தில்லை சிதம்பரத்தில் மட்டும் தான் சுதந்திர தினத்தில் நமது தேசிய கொடி கோவிலின் கோபுரத்தின் மீது ராஜ கம்பீரத்துடன் ஏற்றப்படுகிறது.

இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ஆம் தேதி காலையில், சிதம்பரம் நடராசர் கோவிலில் நம் தேசியக் கொடியை ஒரு வெள்ளித் தட்டில் வைத்து, அதை நடராசர் முன் வைத்து பூஜை செய்வார்கள். பின் அக்கொடியை அர்ச்சகர் எடுத்து வர மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று 138 அடி உயரம் உள்ள கோவில் கிழக்கு கோபுரத்தில், ஆலய தீட்சிதர் அக்கொடியை ஏற்றுவார். அப்போது கோவிலுக்கு வருவோர் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்வார்கள். இது வேறெந்த வழிபாட்டுத் தலத்திலும் இல்லாத சிறப்பாகும். பின்னர் கோவிலுக்கு வரும் பொதுமக்களுக்கு லட்டு உள்ளிட்ட இனிப்புகள் வழங்கப்படும்.

Read More
கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில்

கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில்

ஆயிரம் பிரதோஷ தரிசனம் செய்த பலன் தரும் சிவாலயம்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது குறுங்காலீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் குறுங்காலீஸ்வரர், குசலவபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் தர்மசம்வர்த்தினி. சுவாமியும், சுவாமியின் வலப்புறமுள்ள தர்மசம்வர்த்தினி அம்பிகையும் வடக்கு நோக்கி உள்ளனர். மதுரையில் மீனாட்சி வலப்புறம் இருக்கிறாள் , அதுபோல், இத்தலத்திலும் அம்பாள் அதிக மகிமையுடன் உள்ளாள். இவள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி காட்சி தருவது மற்றொரு சிறப்பம்சம். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு விரைந்து வந்து அருள் செய்வதற்காக இவ்வாறு இருக்கிறாள். சுவாமிக்கு வலது பக்கம் இருப்பதால், அம்பாளை வணங்கினால் கல்யாண மாலை தோள் சேரும் என்பது ஐதீகம்.

மூக்கணாங்கயிறுடன் காணப்படும் அபூர்வ நந்தி

இந்தக் கோவிலில் உள்ள நந்திக்கு மூக்கனாங்கயிறு இருக்கின்றது. இப்படிப்பட்ட நந்தியை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.

இத்தலத்தை 'ஆதிபிரதோஷத்தலம்' என்கிறார்கள். ஒரு பிரதோஷ தினத்தில் குறுங்காலீஸ்வரரைத் தரிசித்தால் ஆயிரம் பிரதோஷ தரிசனம் செய்த பலனும், ஒரு சனி பிரதோஷ தரிசனம் செய்தால் கோடி பிரதோஷ தரிசன பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தல வரலாறு

சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே தேரில் சென்றபோது சக்கரம் லிங்கம் மீது ஏறி, ரத்தம் வெளிப்பட்டது. பயந்த மன்னன் பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு, கோயில் எழுப்பினான். தேர்ச்சக்கரம் ஏறியதால் இந்த லிங்கத்தின் பாணம் பாதி புதைந்துவிட்டது. எனவே இங்கு சிவன் குறுகியவராக (குள்ளமானவராக) காட்சி தருகிறார். இதனால் சுவாமிக்கு 'குறுங்காலீஸ்வரர்' என்ற பெயர் உண்டானது. 'குசலவம்' என்றால் 'குள்ளம்' என்றும் பொருள் உண்டு. இதன் அடிப்படையில் இவர் குசலவபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்வர்.

தந்தை ராமனை எதிர்த்துப் போரிட்ட காரணத்தால், லவ குசர்களை பித்ரு தோஷம் பிடித்துக் கொண்டது. அந்த தோஷம் நீங்க லவ-குசர்கள் தாங்கள் போரிட்ட அதே இடத்தில் ஒரு பலாமரத்தின் அடியில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டனர். லிங்கம் பெரியதாக இருந்ததால் சிறுவர்களான லவ-குசர்களால் நிமிர்ந்து நின்று பூசிப்பது சிரமமாக இருந்தது. லவ-குசர்கள் எளிதாய் பூசிக்க ஏற்றவாறு தன் திருமேனியை குறுக்கிக் கொண்டு குறுங்காலீஸ்வரராய் காட்சி அளித்தார். ஈசனின் கருணையைக் கண்டு புளகாங்கிதம் அடைந்த லவ-குசர்கள் தொடர்ந்து வழிபட்டு தோஷ நிவார்த்தி அடைந்தனர். முன்பு குசவபுரிஸ்வரர் என்றும் பின்பு குறுங்காலீஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டார். அவரை நினைத்து வழிபட பித்ருதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

ஞாயிற்றுக்கிழமை ராகு கால சரபேஸ்வரர் வழிபாடு

கோயிலுக்கு முன் பெரிய 16 கால் மண்டபம் உள்ளது. ஒரு தூணில் சரபேஸ்வரர் காணப்படுகிறார். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இவருக்கு பூஜை நடக்கிறது. சரபேஸ்வரர் வழிபாடு இங்கு மிகப் பிரபலம். ஞாயிறுதோறும் மாலை ராகுகால நேரங்களில் பெருந்திரளான மக்கள் கூடி சரபேஸ்வரர் வழிபாடு நடத்துகின்றனர்.

பிரார்த்தனை

இக்கோவில் வடக்கு நோக்கியிருப்பதால், மோட்ச தலமாக கருதப்படுகிறது. பித்ருதோஷம் உள்ளவர்கள் குசலவ தீர்த்தத்தில் பரிகார பூஜைகளும், தர்ப்பணமும் செய்து கொள்கிறார்கள். பெற்றோருக்கு நீண்டநாள் தர்ப்பணம் செய்யாதவர்கள், அவர்கள் மறைந்த திதி, நட்சத்திரம் தெரியாதவர்கள் இங்கு எந்தநாளிலும் தர்ப்பணம் செய்யலாம்.

Read More
சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில்

சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில்

பிரதோஷ காலங்களில், இரண்டு நந்தி சிலைகளுக்கு பூஜை நடத்தப்படும் தலம்

திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவிலுள்ள சர்க்கார் பெரியபாளையம் என்ற ஊரில் அமைந்துள்ளது சுக்ரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆவுடைநாயகி. ராமாயண காலத்தில் ராமபிரானுக்கு உதவி புரிந்த சுக்ரீவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழங்கப்பட்டவர் இத்தல இறைவன். இதன் காரணமாகவே மூலவர் சுக்ரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இதனை மெய்ப்பிக்கும் விதமாக ஆலயத்தின் அர்த்த மண்டபத்தில் சுக்ரீவன், சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக, இந்த ஆலய மூலவரின் கருவறைக்கு நேர் எதிரில் பத்ரகாளி அம்மன் சன்னிதி இடம்பெற்றுள்ளது.

ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு நந்திகள் அமர்ந்திருக்கும் அபூர்வ கோலம்

இந்தக் கோவிலில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இல்லை. ஒரு சமயம், இந்த கோவில் நந்தி அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி, இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து நந்தியின் காதையும், கொம்பையும் வெட்டினார். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்தபோது, கற்சிலையான நந்தியின் காதில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என்பதை அறிந்து இறைவனை வேண்டி மன்னிப்பு கேட்டார்.

பின்னர் தவறுக்கு பிராயச்சித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து அதனை கோவிலில் பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் போனதால், அந்தப் பணியை கைவிட்டு விட்டனர். மறுநாள் வந்து பார்த்தபோது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது. ஆகவேதான் இந்த கோவிலில் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில், இரண்டு நந்தி சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது. இப்படி இரண்டு நந்திகள் ஒன்றன்பின் ஒன்றாக அமர்ந்திருக்கும் கோலத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவில், சிதம்பரம், பேரூர் கோவில்களுக்கு அடுத்து, சிறப்பான வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது.

Read More
வைரவன்பட்டி வளரொளி நாதர் கோவில்

வைரவன்பட்டி வளரொளி நாதர் கோவில்

அனுமனை வணங்கி நிற்கும் ராமரின் அபூர்வ தோற்றம்

காரைக்குடி- திருப்பத்தூர் சாலையில், பிள்ளையார்பட்டியில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது என்.வைரவன்பட்டி திருத்தலம். இறைவன் திருநாமம் வளரொளி நாதர்..இறைவியின் திருநாமம் ஸ்ரீவடிவுடைநாயகி. 13 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனால் நகரத்தார் வசம் ஒப்படைக்கப்பட்ட, ஒன்பது கோவில்களில் இதுவும் ஒன்றாகும். 1874 ஆம் ஆண்டு இக்கோவில் நகரத்தாரால் புனரமைக்கப்பட்டது.

சிவன் கோயிலில் ராமரது சிற்பமும் அனுமனது சிற்பமும் அருகருகில் அமைக்கப்பட்டுள்ளது எந்த சிவ தலத்திலும் காணாத அதிசயம். இங்கு கருவறை சுற்றுப் பிரகாரத்தில் ராமர், விஸ்வரூப ஆஞ்சநேயரை வணங்கி நிற்பது வேறெங்கும் காண முடியாத அதிசயக் கோலம். ராமரது சிலையை விட அனுமனது சிலை சற்று பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது. அனுமான் இலங்கைக்குச் சென்று சீதா தேவி நலமுடன் உள்ளார் என்ற செய்தியைக் கொண்டு வந்து ராமரிடம் சேர்த்தார். அதுகேட்டு மகிழ்ந்த ராமர் நன்றிப் பெருக்குடன் அனுமனை கை கூப்பி வணங்கி நிற்கும் காட்சியே இது. இதனாலேயே ராமரது சிலையை விட அனுமனது சிலை சற்று பெரியதாக உள்ளது.

கண்களையும், மனதையும் கவரும் சிற்பங்கள், உயிரோட்டமுள்ள ஓவியங்கள்

இத்தலம் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது. மகா மண்டபத்தின் முகப்பு வாயிலில் ஆரம்பித்து காணப்படும் எண்ணிலடங்கா சிற்பங்களின் வடிமைப்பு கண்களையும் மனதையும் கவர்கின்றன.

கோயிலின் உள் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்திக்கு அருகில் கண்ணப்ப நாயனாரின் சிற்பம் சிவபிரானுடன் காணப்படுகிறது.தட்சிணாமூர்த்திக்கு முன்பு ஏழிசைத் தூண்கள் இருக்கின்றன.

நடராஜர் சபையின் முன் மண்டப வாயிலில் பாயும் குதிரையை அடக்கி ஆளும் வீரர்களின் சிற்ப அமைப்பு மிகவும் சிறப்பு. வீரர்களின் உடை அலங்காரங்கள், உடலமைப்புகள், முகபாவம் எல்லாம் தத்ரூபமாய் அமைந்து நம்மை வியக்க வைக்கின்றன. ராஜகோபுர வாயில் நிலைகளில் உள்ள கொடிப் பெண்களின் சிற்பங்களும் முகபாவம், உடை, தலை அலங்காரம் எல்லாம் அக்காலத்திய நாகரிகத்தை நமக்குக் காட்டும் கண்ணாடிகளாகத் திகழ்கின்றன.

இக்கோவிலின் உள்ளே கல் மண்டபத்தின் மேற்கூரையில் ஒரு சிறு இடைவெளிகூட இல்லாமல் பல்வேறு வடிவங்கள் வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. எல்லாமே இயற்கை வண்ணங்களால் உருவானவை. அவற்றில் திருமாலின் பத்து அவதாரங்கள், பஞ்ச பாண்டவர்கள், வளரொளிநாதர், வடிவுடையம்மன் ஆகிய ஓவியங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

காண்பவர்களின் நெஞ்சத்தை கொள்ளை கொள்ளும் இந்த அழகிய சிற்பங்களும், ஓவியங்களும் நம் முன்னோர்கள் சிற்பக் கலையிலும் ஓவியக் கலையிலும் அடைந்திருந்த உன்னத நிலையை உலகுக்கு எடுத்துக்காட்டும் சாட்சியங்களாக உள்ளன.

Read More
சிறுகரும்பூர்  திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில்

சிறுகரும்பூர் திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில்

63 நாயன்மார்களை லிங்க வடிவில் சடையில் தரித்த தட்சிணாமூர்த்தி

சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓச்சேரி என்னும் இடத்திலிருந்து 1.5 கி.மீ. தூரத்தில் உள்ளது சிறுகரும்பூர் திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் சுந்தரகாமாட்சி. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அன்னியர்கள் படையெடுப்பின்போது இக்கோவிலை காப்பாற்ற எண்ணிய பக்தர்கள், இதனை மண்ணால் மூடிவிட்டனராம். பின்பு, 1958-ல், அப்போதைய வேலூர் மாவட்ட ஆட்சியாளர் பாஸ்கர தொண்டைமான் ( ‘வேங்கடம் முதல் குமரி வரை’ போன்ற பிரசித்தி பெற்ற ஆன்மீக நூல்களை எழுதியவர்) என்பவரால் ஆலயம் வெளிக் கொணரப்பட்டது.

இறைவனின் கருவறையின் வெளிச் சுற்றுச் சுவரில் பச்சைக் கல்லாலான தட்சிணாமூர்த்தி எழுந்தருளி உள்ளார். இவர் தனது தலையின் சடையில் 63 நாயன்மார்களை சிவலிங்க வடிவில் தரித்துள்ளார். அவருடைய காதுகளில் மகரம் என்னும் அணிகலன்,முதலையின் தலை வடிவில் குண்டலமாக தொங்குகின்றது.

அவர் அமர்ந்திருக்கும் ஆசனத்தில் 27 நட்சத்திரங்கள் வட்ட வடிவ உருவில் அமைந்திருக்கின்றன. இந்த தட்சிணாமூர்த்தியின் தலையின் மேல் கல்லாலமரம் இருக்கின்றது.

தாயின் வயிற்றில் குழந்தையின் நிலையை காட்டும் ஆச்சரியமான சிற்பம்

இக்கோவிலில் அமைந்துள்ள சிற்பங்களின் கலைத்திறனும், நுணுக்க வேலைப்பாடுகளும் நம்மை பிரம்மிக்க வைக்கின்றன. ஒரு தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நிலையை காட்டும் சிற்பமானது மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கின்றது. இந்த சிற்பம், நம் முன்னோர்களின் சிற்பத் திறனை மட்டுமல்லாது, விஞ்ஞான அறிவினையும் உலகத்திற்கு பறைசாற்றுகின்றது.

Read More
வைரவன்பட்டி வளரொளி நாதர்  கோவில்

வைரவன்பட்டி வளரொளி நாதர் கோவில்

திருவோண நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய பைரவர்

காரைக்குடி- திருப்பத்தூர் சாலையில், பிள்ளையார்பட்டியில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது என்.வைரவன்பட்டி திருத்தலம். இறைவன் திருநாமம் வளரொளி நாதர். சிவபெருமான், சித்தர்களுக்கு ஒளி வடிவாய் காட்சி தந்ததால் இந்த பெயர் வந்தது.இறைவியின் திருநாமம் ஸ்ரீவடிவுடைநாயகி. இக்கோவிலில் ஸ்ரீவளரொளி நாதரும், ஸ்ரீவயிரவரும் அருகருகே சந்நிதி கொண்டுள்ளனர். ஸ்ரீபைரவருக்கு வயிரவர், வைரவர் என்ற பெயர்களும் உண்டு. இறைவனுக்கும் இறைவிக்கும் அடுத்து பிரதான தெய்வமாக ஸ்ரீவயிரவரே இங்கு வழிபடப்படுகிறார்.

சம்பகாசுரன் என்னும் அசுரனை அழிக்க, சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர்தான் ஸ்ரீபைரவ மூர்த்தி. சம்பகாசுரனை வதம் செய்த சூலத்தைக் கழுவுவதற்காக ஸ்ரீபைரவர் உருவாக்கிய தீர்த்தம் அவர் சன்னதிக்கு எதிரே உள்ளது. இதை, அஷ்ட வயிரவ சூல தீர்த்தக் குளம் என்று அழைக்கிறார்கள். இந்த பைரவ தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் சகல நோய்களும் தீரும் என்பது ஐதீகம். ஸ்ரீபைரவர் சந்நிதியின் 12 தூண்களும் 12 ராசிகளுக்காகக் கட்டப்பட்டுள்ளன. இந்த 12 ராசிகளையும் கட்டுப்படுத்தும் மூலவராக ஸ்ரீபைரவர் அருள்கிறார் என்பது ஐதீகம்.

குழந்தை வரம் தரும் விருட்சம்

இந்தக் கோயிலுக்கு தொடர்ந்து 3 புதன்கிழமை அல்லது சனிக்கிழமைகள் சென்று அஷ்ட வயிரவ சூல தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீபைரவரை வழிபட்டு, கோயிலின் பின்புறம் உள்ள ஏறு அழிஞ்சில் மரத்தை வலம் வந்து வணங்க, குழந்தை வரம் கிடைக்கும்; இழந்த பணத்தையும் புகழையும் மீண்டும் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்த மரத்துக்கு வேறொரு மகத்துவமும் உண்டு. இறைவனால் உருவாக்கப்பட்ட மனிதன் இறந்ததும் மீண்டும் இறைவனால் ஆட்கொள்ளப்படுகிறான் என்பதை உணர்த்தும் விதமாக, ஏறு அழிஞ்சில் மரத்திலிருந்து கீழே விழும் விதைகள் மீண்டும் மரத்திலேயே ஒட்டிக்கொள்கின்றனவாம். மேலும், மாசி மாதத்தில் இந்த மரத்தில் பூக்கும் சூரிய வெண்மை கொண்ட பூக்களைக் காண்பதே புனிதம் என்று கருதப்படுகிறது.

Read More
வில்லிவாக்கம்  அகத்தீஸ்வரர் கோவில்

வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில்

செவ்வாய்க்கிழமை கோவில் என்ற சிறப்பு பெற்ற தலம்

சென்னை வில்லிவாக்கத்தில் அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்ட அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இறைவியின் திருநாமம் சொர்ணாம்பிகை. இந்த தலத்தில் அகத்தியருக்கு சிவனும், பார்வதியும் திருமண கோலத்தில் காட்சி அளித்தனர்.

முன்பொரு காலத்தில், வில்லிவாக்கம் பகுதியில் வில்வலன், வாதாபி எனும் இரு கொடிய சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் வாதாபியை அகத்தியர் அழித்தார். ஆனால் வில்வலனுக்கு நல்வழி புகட்டி உண்மையான வாழ்க்கையின் பயனை அடையுமாறு செய்தார். வில்வலனைத் திருத்தித் தீய வழியில் இருந்து நல்வழிக்குக் கொண்டு வந்த மையால் இத்தலம் வில்லிவாக்கம் என வழங்கப்படுகிறது.

மார்க்கண்டேயர் அகத்தியருக்கு உணர்த்திய 108 சக்தி திருத்தலத்தினுள் இந்த தலமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ சொர்ணாம்பிகை அமர்ந்த திருத்தலம் இத்தலமாகும். வில்வ மரங்கள் செறிந்த இத்திருத்தலத்தில் தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும் செவ்வாய்க்கிழமைதோறும் நடு இரவில் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.

ஆடி செவ்வாய்க்கிழமைகளில் சுவாமி, அம்பாளுக்கு விசேஷ வழிபாடு

நவக்கிரகங்களில் அங்காரகன் (செவ்வாய்) தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, தீர்த்தம் உண்டாக்கி சிவனை வழிபட்ட தலம் இது. எனவே இது செவ்வாய் தோஷ பரிகார தலமாக திகழ்கிறது. அங்காரகன் உண்டாக்கிய தீர்த்தம் கோயிலுக்கு வெளியே இருக்கிறது. தீர்த்தக் கரையிலுள்ள அரசமரத்தடியில் அங்காரகன் காட்சி தருகிறார்.

பக்தர்கள் இக்கோயிலை, 'செவ்வாய்க்கிழமை கோயில்' என்றே அழைக்கிறார்கள். அகத்தியருக்கு சிவன், ஒரு ஆடி மாத செவ்வாய்க்கிழமையன்று காட்சி தந்ததாக ஐதீகம். எனவே இங்கு ஆடி செவ்வாய்க்கிழமைகளில் சுவாமி, அம்பாளுக்கு விசேஷ வழிபாடு நடக்கிறது.

சிவன் கோவிலான இங்கு செவ்வாய்க்கிழமைகளில் குவியும் பக்தைகள் கூட்டம் அம்மன் கோவில்களில் திரளும் கூட்டத்தையும் மிஞ்சுவதாக உள்ளது. அதனால்இந்த அகத்தீஸ்வரர் கோவில் செவ்வாய்க்கிழமை கோவில் என்ற புகழை பெற்றுள்ளது. ஆடி செவ்வாய்க்கிழமைகளில் இக்கோவிலில் பக்தைகள் கூட்டம் நிரம்பி வழியும்.

ஆண்டுக்கு ஆண்டு இந்த தலத்தில் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் குவியும் பக்தைகள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத செவ்வாய்க்கிழமை, சிறப்பு மிக்க வருடாந்திர திருவிழா நடத்தப்படுகிறது. 5 வாரங்களும் சுவாமி அம்பாளுக்கு விசேஷ சிறப்பு அலங்காரமும் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெறும்.

பிரார்த்தனை

இந்த ஆலயத்தில் உள்ள அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை அருள்மிகு அகத்தீஸ்வர பெருமானை ஆடி மாத செவ்வாய்கிழமை அன்று தரிசித்தால் பலன் கிடைக்கும். குறிப்பாக அனைத்துவிதமான தோஷங்களும் விலகி, நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் பெறலாம். ஆடி மாதச் செவ்வாய்க் கிழமைகளில் நீராடி விரதம் இருப்போர் புத்திரதோஷம் நீங்கப் பெறுவர். செவ்வாய் தோஷம் நீங்கித் திருமணம் செய்து கொள்வர். திருமணம் ஆகாதவர்கள் இந்தத் தீர்த்தத்தில் நீராடி விரதமிருந்து வழிபட்டால் தங்களுக்குரிய வாழ்க்கைத் துணையைப் பெறுவர்.

Read More
திருக்கொடியலூர் அகத்தீஸ்வரர் கோவில்

திருக்கொடியலூர் அகத்தீஸ்வரர் கோவில்

மங்கள சனீஸ்வர பகவானும், எமதர்மராஜனும் அவதரித்த தலம்

திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவிலின் அருகில் அமைந்துள்ள தலம் திருக்கொடியலூர். இறைவன் திருநாமம் அகத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. அகத்தியர் ஸ்ரீலலிதாம்பிகையை தரிசித்து நவரத்தின மாலையை பாடி அம்பாளின் பேரருளை பெற்றபின், இத்தலத்துக்கு வந்து இறைவனையும் இறைவியையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார்.

சூரிய பகவான், அவர் மனைவியர்களான உஷாதேவி, சாயாதேவி ஆகிய மூலரும் கூடி ஈசனை ஆராதித்த தலம் இது என்பதால் திருக்கூடியலூர் என்றானது. அதுவே பின்னர் திருக்கொடியலூர் என்று மருவியது. இத்தல இறைவனை வேண்டி உஷாதேவி எமதர்மராஜனையும், சாயாதேவி சனீஸ்வர பகவானையும் பெற்றெடுத்தனர். இரு சகோதரர்களும் ஒருங்கே அவதரித்த தலம் இதுவாகும். இக்கோவிலில், தென் புறத்தில் எமதர்மராஜனும், வடப்புறத்தில் சனி பகவானும் அமைந்திருப்பது மற்ற எந்த ஒரு கோவிலிலும் இல்லாத தனிச்சிறப்பாகும்.

பிரார்த்தனை

இத்தல இறைவனை வேண்டி உஷாதேவியும், சாயாதேவியும் புத்திரபேறு பெற்ற காரணந்தால் இத்தலம் குழந்தைப்பேறு வழங்கும் சிறப்புத் தலமாகவும் கருதப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு வந்து எள்ளு தீபம், நல்லெண்ணெய் விளக்கேற்றினால் அனைத்து தோஷங்களும் அகலும்.

வியாழக்கிழமைதோறும் எமதர்மனுக்கும், சனிக்கிழமை தோறும் சனீஸ்வரருக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

சனி பகவான் இத்தலத்தில் அபய ஹஸ்தத்துடன், அனுக்கிரக மூர்த்தியாக எழுந்தருளி இருப்பதால் அவர் மங்கள சனீஸ்வர பகவான் என்று அழைக்கப்படுகிறார். சனிக்கிழமைகளில் பக்தர்கள் இத்தலத்தின் தென்புறம் உள்ள தேவர் தீர்த்தத்தில் நீராடி, அகத்தீஸ்வரரை வழிபட்டு அபிஷேக தீர்த்தத்தை தங்கள் மீது தெளித்து கொண்டு பகவானுக்கு எள் தீபம் ஏற்றி அபிஷேகம் ஆராதனை செய்து வழிபடுதல், எள்சாதம் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு அன்னதானம் வழங்குதல், ஆகியவற்றால் சனிதோஷம் நீங்கப் பெறலாம்.

இத்தலத்தில், எமதர்மராஜாவிடம் பக்தர்கள் ஆயுள் நீடிக்க வேண்டிக் கொள்கிறார்கள். எமதர்மர் நீதிக்கு அதிபதியாக இருப்பதால் ஏமாற்றப்பட்டவர்கள், பொருளை திருட்டு கொடுத்தவர்கள், தலத்திற்கு அதிகளவில் வருகை தந்து பகவானை வணங்கி செல்கின்றனர். தங்கள் கோரிக்கையை பேப்பரில் எழுதி அதனை எமதர்மர் சந்நிதியில் வைத்து பூஜித்து வருகின்றனர். இவ்வாறு வேண்டுதல் வைக்கப்பட்ட சில நாட்களில் பொருட்கள் திரும்பக் கிடைத்துவிடுகிறது என்பதால், பக்தர்கள் தலத்திற்கு அதிகளவில் வருகை தந்து பூஜை செய்து செல்கின்றனர். இப்பூஜையினை எமதர்மரிடம் படிக்கட்டுதல் என்கிறார்கள். சனிக்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் (மதியம் 1:30 - 3:00 மணி) க்கு, இங்கு ஆயுள்விருத்தி ஹோமம் செய்யப்படுகிறது.

Read More
திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்

அபூர்வக் கோலத்தில் வீற்றிருக்கும் யோக பைரவர்

மதுரை-காரைக்குடி சாலையில், 62 கிமீ தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில். இறைவன் திருநாமம் திருத்தளி நாதர். இறைவியின் திருநாமம் சிவகாமி. இத்தலத்திலுள்ள பைரவர் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்தத் தலத்தின் திருத்தளிநாதரைத் தரிசிக்க வந்த காசி பைரவரே, இங்கு யோக பைரவராக அருள்கிறார் என்பது ஐதீகம். ஆக, இவரை ஆதி பைரவர் என்றும் போற்றுகிறார்கள். நம் நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் அருளும் பைரவ மூர்த்திகளும் இவரிடமிருந்தே தோன்றியதாக திருத்தளிநாதர் கோவில் தல வரலாறு சொல்கிறது.

இவரை, குலதெய்வமாகக் கொண்ட மருது சகோதரர்கள், எப்போது போருக்குச் சென்றாலும் இந்த யோக பைரவரை வழிபட்ட பிறகுதான் செல்வார்களாம்.

இக்கோவிலில் தனிச் சன்னதியில் யோகா பைரவர் எழுந்தருளி இருக்கிறார். இவர் வலக்கரத்தில் சிவலிங்கத்தை வைத்து, கால்கட்டை விரலை தரையில் ஊன்றியபடி யோகநிலையில் காட்சி தருகிறார். பொதுவாக பைரவர் கையில் சூலத்துடனும், நாய் வாகனத்துடனும், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே மரபு. ஆனால் இங்குள்ள பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில் காணப்படுகின்றார். அதனால் 'யோக பைரவர்' என்று அழைக்கப்படுகின்றார். யோக நிலையில் இருப்பதால் இவருக்கு நாய் வாகனம் கிடையாது. இவருக்கு வெண்ணிற பட்டாடை அணிவித்து அலங்கரிப்பது விசேஷம். இந்த பைரவர் மிக உக்ரமானவர். அவர் தம் உக்ரத்தைக் குறைக்க, வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பாக, அவரை சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளதே இதற்குச் சான்று.

பிரார்த்தனை

தேய்பிறை அஷ்டமி அன்று இவருக்கு வடை மாலை சாற்றி வழிபடுகின்றனர். ராகுகாலம் போன்ற நேரங்களிலும் இவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகின்றது. சத்ரு தொல்லை, ஏவல், பில்லி, சூனியம், காரியத்தடை, திருமண எதிர்ப்பு போன்றவை விலக இவரை வழிபடுதல் சிறப்பு. அதற்காக சிறப்பு ஹோமங்களும் அர்ச்சனை வழிபாடுகளும் இவ்வாலயத்தில் செய்யப்படுகின்றன.

நவகிரகங்கள் பைரவரின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. அதனால், கிரக தோஷங்கள் நீங்க நவக்கிரக தலங்களுக்கு செல்ல முடியாவிட்டாலும், இங்குள்ள யோக பைரவரை வணங்கினால் போதும். 'ஆபத்துத்தாரண பைரவர்' என்று அழைக்கப்படும் இவர் எல்லா தோஷங்களையும் நீக்குவார் என்பது ஐதீகம். தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்கு வாசனைப் பொருட்கள் வைத்து வழிபடுகிறார்கள்.

மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல், திருமணத்தடை போன்ற பிரச்னைகளை நீக்கும் வரப் பிரசாதியாகவும் திகழ்கிறார். இந்த யோக பைரவர். வெண் பூசணி, தேங்காய் போன்றவற்றில் நெய் தீபம் ஏற்றிவைத்து இவரை வழிபட்டால், எதிரிகள் பணிந்து போவார்கள். பங்காளிச் சண்டை முடிவுக்கு வரும். அதேபோல், ஒரு துணியில் மிளகு சுற்றி முடிந்து வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் பிரச்னைகள் முடிவுக்கு வரும். கண் திருஷ்டிகளும் விலகும்.

Read More
தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவில்

ராஜராஜ சோழனுக்கு தஞ்சை பெரிய கோவில் கட்ட இடம் காட்டிய வராகி அம்மன்

சப்தகன்னியரில் ஒருவரான வராகி அம்மன், திருமாலின் வராக அம்சமாக கருதப்படுகிறார். இவர் வராகமெனும் பன்றி முகத்தையும், எட்டு கரங்களையும் உடையவர்.

மாமன்னர் ராஜராஜ சோழனின் குலதெய்வம் வராகி அம்மன். தஞ்சை பெரிய கோவின் தெற்கு பிரகாரத்தில் வராகி அம்மனுக்கு தனிக் கோவில் இருக்கிறது. வராகி அம்மன்,வலது கையில் உலக்கையுடனும், இடது கையில் கலப்பையுடனும் காட்சி தருகிறார்.

ராஜராஜ சோழன் போருக்கு செல்லும் முன்பு வராகி அம்மனை வணங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் இந்த அன்னையின் அருள் பெற்றுதான் எந்த செயலையும் தொடங்குவார். ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு பல இடங்களை தேர்வு செய்தார். ஆயினும் இறைவனிடமிருந்து உத்தரவு கிடைக்க தாமதமானது. அப்போது ஒரு நாள் வேட்டைக்குச் சென்றபோது, ஒரு இடத்தில் மன்னருக்கு முன்பு ஒரு பன்றி எதிர்த்து நின்றது. அதனை துரத்திச் சென்றபோது போக்கு காட்டி பல இடங்களுக்கு சென்று ஒரு பெரிய திடலில் சுற்றி சுற்றி வந்து படுத்துக்கொண்டது . இது ராஜராஜ சோழனுக்கு வியப்பை அளித்தது. வராகமாக இருப்பதனால் அதனை கொல்லாமல் துரத்தினார். ஆனால் அது எழுந்து நின்று தன் காலால் தரையை உதைத்து பூமியை தோண்டியது. அரண்மனை திரும்பிய ராஜராஜ சோழன் ஜோதிடரை அழைத்து விவரம் கேட்டார். கோவில் கட்ட அந்த இடத்தினை வராகி தேவி தேர்ந்தெடுத்து கொடுத்து இருப்பதை தெரிவித்தார் ஜோதிடர் .அந்த இடத்தில் பெரிய கோவில் கட்டும் முன்பு வெற்றி தேவதை வராகிக்கு சிறிய தனித்த ஒரு சன்னதியை அக்னி மூலைக்கு அருகில் அமைத்து வழிபட்டு பின்னர் பணியை தொடங்கினார். அந்த வராஹி தேவியின் அருளால் உலகம் போற்றும் ஆலயமாக பெரிய கோவில் மாறி நிற்கிறது. ராஜ ராஜ சோழன் கடைபிடித்த முறையிலேயே தற்போதும் எந்த ஒரு நிகழ்ச்சியை தொடங்குவதானாலும் முதலில் வராகி அம்மனுக்கு பூஜை செய்த பின்னரே தொடங்கும் வழக்கம் பெரிய கோவிலில் உள்ளது.

பிரார்த்தனை

பஞ்சமி திதியில் வராகி அம்மனை வழிபட்டால் வறுமை, பிணி, பில்லி, செய்வினைகள் அகலும். எதிரிகள் விலகுவர் என்பது ஐதீகம். வழக்குகளிலிருந்து விடுபட வராகியின் அருள் கட்டாயம் தேவை. வராகி உபாசனை செய்பவருடன் வாதாடாதே என வழக்கு மொழியே உள்ளது.

Read More
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில்

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில்

தினந்தோறும் பிரதோஷ பூஜை நடைபெறும் தேவாரத்தலம்

பொதுவாக சிவாலயங்களில் வளர்பிறை திரயோதசி மற்றும் தேய்பிறை திரயோதசி அன்று மட்டும்தான் பிரதோஷ பூஜை நடைபெறும். அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறைதான் பிரதோஷ பூஜை என்பது நடைபெறும். ஆனால் திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலில், தினம் தோறும் மாலை 6:00 மணிக்கு பிரதோஷ பூஜை தொடங்கி நடைபெறும். இதற்கு நித்திய பிரதோஷம் என்று பெயர். உலகத்திலேயே நித்ய பிரதோஷ பூஜை நடைபெறும் ஒரே சிவாலயம் திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில்தான். இந்த பூஜையின் போது தியாகராஜப் பெருமானை முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து வணங்கி தரிசிப்பதாக ஐதீகம்.

இந்த நித்ய பிரதோஷ பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு, கோடி புண்ணியம் கிட்டும். ஈரேழு ஜென்ம பாவமும் விலகும் என்பது நம்பிக்கை.

Read More
சனி மகா பிரதோஷம்

சனி மகா பிரதோஷம்

சனி மகா பிரதோஷ வழிபாட்டின் சிறப்புகள்

மாதம் தோறும் திரியோதசி அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். வழக்கமாக ஒரு மாதத்தில் வளர்பிறையில் ஒன்று, தேய்பிறையில் ஒன்று என இரண்டு பிரதோஷங்கள் வரும். நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே ஆனந்த நடனமாடி தேவர்களுக்கு சிவப் பெருமான் காட்சி கொடுத்து, அருள் செய்த காலம் தான் பிரதோஷ காலமாகும்.

சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு, கண்டத்தில் நிறுத்தி, நீலகண்டனாகி தேவர்களையும் உலக உயிர்களையும் காத்தருளினார். அவர் பதினொன்றாம் பிறையாகிய ஏகாதசியில் விஷம் உண்டார். பன்னிரண்டாம் பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். பதிமூன்றாம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும். இதனால்தான் சனி பிரதோஷம், சனி மகா பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.

பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன், ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் வேத பாராயணமும், இரண்டாம் சுற்றில் திருமுறை பாராயணமும் , மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையும் நடைபெறும்.

ஒரு சனிப் பிரதோஷ விரதமானது, ஆயிரம் சாதாரண பிரதோஷ விரதத்திற்கு சமமானது. இந்தப் பிரதோஷ காலத்தில் நந்திக்கும் சிவனுக்கும் விளக்கேற்றி வழிபட்டால், சனி பகவானால் ஏற்படும் சகல துன்பங்களும் நீங்கும். நந்திக்கும் சிவனுக்கும் திராட்சை மாலை, வில்வ மாலை அணிவிப்பது இன்னும் சிறந்தது.

ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டமச் சனி மற்றும் சனி தசை, புத்தி நடப்பவர்களுக்கு சனியினால் வரும் துன்பங்கள், சனி பிரதோஷ வழிபாட்டால் விலகும். சனி பிரதோஷத்தன்று கோயிலுக்குச் சென்றால் 120 வருடம் பிரதோஷத்திற்குக் கோவிலுக்குச் சென்ற பலன் கிடைக்கும் என்கிறது சிவாகமம் என்னும் நூல். கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவனருள் கிடைத்து பரிபூரணமாய் வாழலாம். எனவே இந்த நாளில் சிவ தரிசனம் செய்வது மிகவும் விசேஷம்.

Read More
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில்

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில்

திருவாரூர் தியாகராஜ சுவாமி திருமேனியின் ரகசியம்

திருவாரூரில் பிறக்க முக்தி என்பது ஆன்றோர் வாக்கு. சைவ சமயத்தினருக்கு கோவில் என்று குறிப்பிட்டால் அது சிதம்பரம் நடராஜர் கோவிலைக் குறிக்கும். அதுபோல பெரிய கோவில், பூங்கோவில், திருமூலட்டானம் என்று குறிப்பிட்டால் அது திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலை குறிக்கும். திருமூலட்டானம் என்றால் இறைவன் உறையும் இடம் என்று பொருள்.

தியாகராஜர் வரலாறு

திருமாலானவர். சிவபெருமானை நோக்கித் தவம் செய்ய, அகமகிழ்ந்த சிவபெருமான் உமையவளுடன் தோன்றியபோது, சிவபெருமானை மட்டும் திருமால் வணங்கியுள்ளார் கோபமடைந்த உமையவள் திருமால் மீது சாபமிட கலங்கி நின்ற திருமால். மீண்டும் சிவபெருமானை வழிபாடு செய்து வந்தார். அதன்பின் மீண்டும் உமையவளுடன் சிவபெருமான் தோன்றியபோது, உரிய முறையில் திருமால் வணங்க, மகிழ்ந்த உமையவள் சாபத்துக்கான விடை தந்தாள். அதைக் கண்டு மகிழ்ந்த திருமால், சோமாஸ்கந்த திருக்கோலத்தில் எழுந்தருளக் கோரி தன் நெஞ்சக் கோயிலில் நிறுத்திக்கொண்டார். திருமாலின் உச்சுவாசித்தால் (மூச்சுக் காற்றை உள்ளிழுத்தலும் வெளிவிடுதலும் பெருமானும் அசைந்தாடி ஆனந்தங் கொண்டு திருமாலுக்குத் திருவருள் தந்தார். இதுவே அஜபா நடனம்.இது ஒரு மந்திரத்தின் பெயர். ஜபா என்றால் ஜெபித்தல். அஜபா என்றால் ஜெபிக்காது இருத்தல் என்று பொருள். அஜபா நடனம் ஆடும் போது மந்திரங்கள் வாய்விட்டு உச்சரிக்கப் படுவதில்லை.

தியாகராஜ சுவாமி திருமேனியின் ரகசியம்

தியாகராஜர் கோயிலின் அர்த்தமண்டபத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்தபடி தியாகராஜர் காட்சியளிக்கிறார். சிதம்பரம் ரகசியம் என்பது போல் திருவாரூர் ரகசியம் என்பது தியாகராஜ சுவாமியின் திருமேனியாகும். இதை சோம குல ரகசியம் என்பார்கள். தியாகராஜரின் திருமார்பை ஸ்ரீ சக்கரம் அலங்கரிப்பதால், அவரது முழு திருமேனியை யாராலும் எப்போதும் காண முடியாது. எனவே நம்மால் அவரின் திருமுகத்தையும், அருகே அமர்ந்துள்ள தேவியின் திருமுகத்தையும் மட்டுமே காண முடியும். மற்ற அங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டு, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அபிஷேகத்தின்போது கரத்தின் ஒரு பகுதியையும், மார்கழித் திருவாதிரையில் இடது பாதத்தையும், பங்குனி உத்திரத்தில் வலது பாதத்தையும் தரிசிக்க முடியும்.

தியாகராஜ பெருமாள் திருமுடியை தலை சீரா என்னும் ஒருவகை அணி அலங்கரிக்கின்றது. சதுர வடிவிலான இந்த அணிகலன், உயர்ந்த வகை ஜாதி கற்கள் பதிக்கப் பெற்றது. சூளாமணி என்ற ஒரு பெயரும் இந்த அணிகலனுக்கு உண்டு.இந்த சூளாமணி அணிகலனை திருநாவுக்கரசர் தமது தமது தேவாரப் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எந்த ஒரு சிவதலத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு திருவாரூர் தலத்திற்கு உள்ளது. கோவில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றி தேவாரப் பாடல்கள் கொண்ட சிறப்பைப் பெற்றுள்ள தலம் இது ஒன்றே ஆகும். திருவாரூர் கோவில் சிதம்பரம் கோவிலைவிட பழமையானது என்பதை குறிக்கும் வகையில், இங்கு பாடப்படும் தேவாரத்தில் திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தை குறிப்பிடப்படுவது இல்லை.

Read More
சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் ஆனித் திருமஞ்சனம்

அபிஷேகப் பிரியரான நடராஜருக்கு மார்கழி திருவாதிரை, ஆனி உத்திரம், சித்திரை திருவோணம், ஆவணி வளர்பிறை சதுர்த்தசி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி, மாசி வளர்பிறை சதுர்த்தசி ஆகிய நாட்கள் என‌ வருடத்திற்கு ஆறு முறை அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த ஆறு நாட்களில் மார்கழி திருவாதிரையும், ஆனி உத்திரமும் சிறப்பு வாய்ந்தவை.

இந்த ஆறு அபிஷேகங்களில், மூன்று அபிஷேகங்கள் திதி அடிப்படையிலும், ஏனைய மூன்று அபிஷேகங்கள் நட்சத்திரங்களின் அடிப்படையிலும் நடைபெறும். மானுடர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்பது கணக்கு. இதன் வகையில், ஒருநாளைக்கு பெருமானுக்கு ஆறு கால பூஜைகள் செய்து தேவர்கள் மகிழ்கின்றனர் என்ற அடிப்படையில், நடராஜருக்கு வருடத்திற்கு ஆறு அபிஷேகங்கள் செய்யப் பெறுகின்றன.

பொதுவாக சந்தியா காலங்களில் செய்யப்பெறும் வழிபாடுகளுக்கு சிறப்பான பலன்கள் உண்டு. இதில் ஆனி மாதம் என்பது தேவர்களுக்கு மாலைப் பொழுதாகும். எனவே, இந்த மாதத்தில் செய்யப்பெறும் அபிஷேகம் தேவர்களின் மாலைநேரத்திய வழிபாட்டினை ஒட்டியதாக அமைவதால், `ஆனித் திருமஞ்சனம்' மிகவும் சிறப்பித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

விரதம் இருந்து ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால், பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள். தம்பதிகளுக்கு சுகமான வாழ்வு கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும். நாடெல்லாம் நல்ல மழை பெய்து விவசாயம் சிறக்கவும் இந்த விழா நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு ஆனித் திருமஞ்சனம் 26.06.2023 திங்கட்கிழமையன்று நடைபெறுகின்றது.

Read More
விளமல் பதஞ்சலி மனோகரர் கோவில்

விளமல் பதஞ்சலி மனோகரர் கோவில்

சிவபெருமானின் பாதம் அமைந்துள்ள தேவாரத்தலம்

திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில், திருவாரூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் விளமல் இறைவனின் திருநாமம் பதஞ்சலி மனோகரர் . இறைவியின் திருநாமம் யாழினும் மென்மொழியம்மை.

இக்கோவில் கருவறையில் லிங்கம், அதற்கு பின்புறம் நடராஜர், முன்புறம் சிவன் பாதம் என, ஒரே சன்னதியில் சிவனின் மூன்று வடிவங்களைத் தரிசிக்கலாம். இத்தகைய அமைப்பு வேறு எந்த தலத்திலும் கிடையாது.

திருவாரூரில் தியாகராஜரின் முகத்தையும், இத்தலத்தில் சிவபாதத்தையும் ஒரே நாளில் தரிசித்தால், பிறவாநிலை கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோவில் மூலவர் பதஞ்சலி மனோகரர் மணல் லிங்கமாக காட்சி தந்தாலும், அவருக்கு தீபாராதனை காட்டும்போது, லிங்கம் ஜோதி சொரூபமாகக் காட்சியளிக்கிறது.

தல வரலாறு

தில்லையில் மகாசிவனின் ஆனந்த நடனத்தை கண்ட பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாத முனிவரும் சிவபெருமானிடம் 'தங்கள் அஜபா நடனத்தையும், ருத்ர தாண்டவத்தையும் என்றென்றும் காண விரும்புகிறோம். தங்களின் திருவடி தரிசனத்தையும் எல்லோரும் காண வழி செய்ய வேண்டும்' என கேட்டுக்கொண்டனர். அதற்கு சிவபெருமான், நீங்கள் இருவரும் திருவாரூர் செல்லுங்கள். அங்கே எம் நடனங்களையும், எம் திருவடி தரிசனத்தையும் காண்பீர்கள் என்று கூறினார். சிவபெருமானின் ஆணையின்படி பதஞ்சலியும், வியாக்ரபாதரும் திருவாரூர் வந்தார்கள். திருவாரூரில் எங்கெங்கும் சிவலிங்கமாகவே இருக்க, பதஞ்சலி தன் உடலை பாம்பாகவும், வியாக்ரபாதர் தன் உடலை புலிக்காலாகவும் மாற்றிக்கொண்டு அன்னை கமலாம்பாளை வணங்கினர்.

அம்பாள். மண்ணால் லிங்கத்தைப் பிடிக்க உத்தரவிட்டாள். விமலாக்க வைரம் என்ற அந்த தேவலோக மண்ணில் விளமர் என்ற அந்த இடத்தில் பதஞ்சலி லிங்கத்தைப் பிடித்தார். அப்போது சிவபெருமான் தோன்றி அஜபா நடனம் ஆடியதோடு, தியாக முகம் காட்டி தன் ருத்ர பாதத்தை காட்டினார். மகாவிஷ்ணு, பிரம்மதேவர், முசுகுந்த சக்கரவர்த்தி, தேவாதி தேவர்கள் எல்லாம் புடைசூழ நின்று கண்டுகளித்தார்கள்.

இதையொட்டி, இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று ருத்ர பாத தரிசனம் காட்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. மேலும், சிவபெருமான் காட்டிய ருத்ர பாதத்திற்கு தினமும் பூஜைகள் நடைபெறுகின்றன. இத்தலத்தில் வடகிழக்கு முகமாக நந்தி வீற்றிருக்கிறது. இவ்வாறு நந்தி வடகிழக்கு முகமாக உள்ளதை வேறு எந்த தலத்திலும் காணமுடியாது.

பிரார்த்தனை

இக்கோவிலில் வந்து வழிபாடு செய்தால் நோய்கள் நிவர்த்தியாகும். ஆயுள் விருத்தியாகும். திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும். முக்தி கிடைக்கும். கல்வியில் சிறப்பு பெறலாம் என்கிறார்கள். மேலும் இங்கு ஒரு பிடி அன்னதானம் செய்தால், பல அசுவமேத யாகம் செய்த பலனை பெறலாம் என்பதும் ஐதீகம்.

Read More
மூவலூர் மார்க்க சகாயேசுவரர் கோவில்

மூவலூர் மார்க்க சகாயேசுவரர் கோவில்

யானை. மான், ரிஷபம், சிம்மம் ஆகியவற்றின் மேல் வீற்றிருக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி

மயிலாடுதுறைக்கு மேற்கே 6 கி.மீ தூரத்தில், மூவலூர் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் மார்க்க சகாயேசுவரர். இந்த ஆலயத்தில் சவுந்திர நாயகி, மங்களாம்பிகை என்ற இரண்டு அம்பிகைகள் எழுந்தருளியிருக்கிறார்கள்.

பொதுவாக சிவாலயங்களில், இறைவன் கருவறையின் சுற்றுச்சுவரில் எழுந்தருளியிருக்கும் தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன் இருக்க, சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் என நான்கு சீடர்களுடன் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில் தட்சிணாமூர்த்தியின் காலடியில் யானை முகம், மான், ரிஷபம், சிம்மம் ஆகியவற்றோடு முயலகனும், சனகாதி முனிவர்களும் இருப்பது ஒரு வித்தியாசமான அமைப்பாகும். இத்தகைய தட்சிணாமூர்த்தியின் தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

Read More
திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோவில்

திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோவில்

பாலாபிஷேகத்தின்போது நீல நிறமாக காட்சி தரும் சிவலிங்கம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாடானை, தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் காரைக்குடியில் இருந்து 42 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் ஆதிரத்தினேசுவரர். இறைவியின் திருநாமம் சிநேகவல்லி. ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதத்தின் பிற்பகுதியில் இத்தலத்தின் மூலவர் மற்றும் அன்னை திருமேனிகளில் சூரிய கிரணங்கள் படுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

தல வரலாறு

ஒரு சமயம், சூரியன் தானே மிகுந்த ஒளி உடையவன் என்று மிகவும் கர்வத்துடன் இருந்தான். அதன் காரணமாக நந்தியால் அவனது ஒளி ஈர்க்கப்பட்டு, சூரியன் ஒளி குன்றினான். பிரம்மதேவர் கூறியபடி சூரியன் இத்தலத்துக்கு வந்து தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி, நீல ரத்தினக்கல்லால் ஆவுடையார் மற்றும் லிங்கம் அமைத்து, ரத்தினமயமான அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு தனது ஒளியை மீண்டும் பெற்றான். ஆதி என்னும் பெயர் கொண்ட சூரியன், நீல ரத்தினக்கல் கொண்டு ஆவுடை அமைத்து வழிபட்டதால், இத்தல இறைவனுக்கு 'ஆதிரத்தினேசுவரர்' என்று பெயர். இன்றும் உச்சிக்காலத்தில் பாலாபிஷேகம் செய்யும்போது இறைவன் நீல நிறமாக காட்சி காட்சியளிக்கின்றார்.

சுக்ரனுக்குரிய பரிகாரத்தலம்

இத்தல நாயகியான சிநேகவல்லி அம்மன், சுக்ரனுக்குரிய அதிதேவதை ஆவார். எனவே இந்த ஆலயம் சுக்ரனுக்குரிய பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது. அம்மனுக்கு விசேஷ சுக்ர ஹோமம் செய்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். சுக்ரதிசை, சுக்ர புத்தி நடப்பவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பானது. சுவாமி ஆதிரத்தினேசுவரரை வணங்கினால் முன் செய்த தீவினை நீங்கும்.

Read More
குன்னத்தூர் கோதபரமேசுவரன் கோவில்

குன்னத்தூர் கோதபரமேசுவரன் கோவில்

மூலவரும், பரிவார தேவதைகளும் ராகு அம்சத்தோடு திகழும் அபூர்வத் தலம்

திருநெல்வேலி - மேலத்திருவேங்கடநாதபுரம் செல்லும் வழியில், 11கீ.மீ தூரத்தில் உள்ளது குன்னத்தூர் என்கிற கீழத்திருவேங்கடநாதபுரம். இறைவன் திருநாமம் கோதபரமேசுவரன். இறைவியின் திருநாமம் சிவகாமி அம்பாள். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நவகைலாய தலங்களில் ராகு பரிகார தலம் இது. இந்த ஊர் செங்காணி எனவும் அழைக்கப்படுகிறது. காணி என்றால் நிலம், செங்காணி என்றால் செம்மண் பொருந்திய நிலம் எனப்பொருள்படும். இக்கோவில் 900 ஆண்டுகள் பழமையானது.

இங்கே சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த ரோமச முனிவர், ராகுவை நினைத்து வழிபாடு செய்ததால், ராகு தோஷம் நீக்கும் பரிகாரத் தலமாவும் இக்கோவில் திகழ்கிறது. மூலவர் லிங்கம் மார்பில் சர்ப்பம் போல் முத்திரை காணப்படுகின்றது. மூலவர் கோதபரமேசுவரன் மட்டுமின்றி, இங்கே தனித் தனிச் சந்நிதிகளில் அருளும் தட்சிணாமூர்த்தி, பைரவர்,ஆறுமுகநயினார், கன்னி விநாயகர், நந்தீஸ்வரர் ஆகிய தெய்வங்களின் திருமேனியிலும் ராகு இருப்பதைக் காண முடியும். இப்படி அனைத்து தெய்வங்களும் ராகு தோஷம் நீக்கும் வல்லமையோடு திகழ்வது இந்த தலத்தின் தனிச்சிறப்பாகும்.

சிவகாமி அம்பாளின் திருமேனி முழுவதும், ருத்ராட்சம் போன்று அமைக்கப்பட்டு இருப்பது சிறப்பு. இவரை வழிபட, குழந்தை பாக்கியம் தாமதமாகும் தம்பதியருக்கு அந்தப் பாக்கியம் விரைவில் கிடைக்கும்; மாங்கல்ய தோஷம் நீங்கும். இக்கோவிலின் வெளிபிரகாரத்தில் ஒரே கல்லி்ல் வடிவமைக்கப்பட்ட திருவாச்சியுடன் கூடிய ஆறுமுகநயினார் சந்நிதி உள்ளது.

பிரார்த்தனை

இத்தலமானது ராகுவின் தாக்கத்தால் பாதிக்கப்படுவோர் பரிகாரம் செய்ய வேண்டிய தலமாகும். இத்தலத்து இறைவனை வழிபடுதல் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் சிவபெருமானை வழிபடுதலுக்குச் சமமான ஒன்று. மேலும் திருமணத்தடை, குழந்தை பாக்கியம்,காலதோஷம்,நாகதோஷம் ஆகியவற்றிற்கும் பரிகாரத் தலமாகும். இத்தலத்தை வழிபட்டால் வயிற்றுக்கோளாறு, மனநோய், மூலநோய் நீங்கும். மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.

Read More