விளமல் பதஞ்சலி மனோகரர் கோவில்

சிவபெருமானின் பாதம் அமைந்துள்ள தேவாரத்தலம்

திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில், திருவாரூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் விளமல் இறைவனின் திருநாமம் பதஞ்சலி மனோகரர் . இறைவியின் திருநாமம் யாழினும் மென்மொழியம்மை.

இக்கோவில் கருவறையில் லிங்கம், அதற்கு பின்புறம் நடராஜர், முன்புறம் சிவன் பாதம் என, ஒரே சன்னதியில் சிவனின் மூன்று வடிவங்களைத் தரிசிக்கலாம். இத்தகைய அமைப்பு வேறு எந்த தலத்திலும் கிடையாது.

திருவாரூரில் தியாகராஜரின் முகத்தையும், இத்தலத்தில் சிவபாதத்தையும் ஒரே நாளில் தரிசித்தால், பிறவாநிலை கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோவில் மூலவர் பதஞ்சலி மனோகரர் மணல் லிங்கமாக காட்சி தந்தாலும், அவருக்கு தீபாராதனை காட்டும்போது, லிங்கம் ஜோதி சொரூபமாகக் காட்சியளிக்கிறது.

தல வரலாறு

தில்லையில் மகாசிவனின் ஆனந்த நடனத்தை கண்ட பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாத முனிவரும் சிவபெருமானிடம் 'தங்கள் அஜபா நடனத்தையும், ருத்ர தாண்டவத்தையும் என்றென்றும் காண விரும்புகிறோம். தங்களின் திருவடி தரிசனத்தையும் எல்லோரும் காண வழி செய்ய வேண்டும்' என கேட்டுக்கொண்டனர். அதற்கு சிவபெருமான், நீங்கள் இருவரும் திருவாரூர் செல்லுங்கள். அங்கே எம் நடனங்களையும், எம் திருவடி தரிசனத்தையும் காண்பீர்கள் என்று கூறினார். சிவபெருமானின் ஆணையின்படி பதஞ்சலியும், வியாக்ரபாதரும் திருவாரூர் வந்தார்கள். திருவாரூரில் எங்கெங்கும் சிவலிங்கமாகவே இருக்க, பதஞ்சலி தன் உடலை பாம்பாகவும், வியாக்ரபாதர் தன் உடலை புலிக்காலாகவும் மாற்றிக்கொண்டு அன்னை கமலாம்பாளை வணங்கினர்.

அம்பாள். மண்ணால் லிங்கத்தைப் பிடிக்க உத்தரவிட்டாள். விமலாக்க வைரம் என்ற அந்த தேவலோக மண்ணில் விளமர் என்ற அந்த இடத்தில் பதஞ்சலி லிங்கத்தைப் பிடித்தார். அப்போது சிவபெருமான் தோன்றி அஜபா நடனம் ஆடியதோடு, தியாக முகம் காட்டி தன் ருத்ர பாதத்தை காட்டினார். மகாவிஷ்ணு, பிரம்மதேவர், முசுகுந்த சக்கரவர்த்தி, தேவாதி தேவர்கள் எல்லாம் புடைசூழ நின்று கண்டுகளித்தார்கள்.

இதையொட்டி, இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று ருத்ர பாத தரிசனம் காட்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. மேலும், சிவபெருமான் காட்டிய ருத்ர பாதத்திற்கு தினமும் பூஜைகள் நடைபெறுகின்றன. இத்தலத்தில் வடகிழக்கு முகமாக நந்தி வீற்றிருக்கிறது. இவ்வாறு நந்தி வடகிழக்கு முகமாக உள்ளதை வேறு எந்த தலத்திலும் காணமுடியாது.

பிரார்த்தனை

இக்கோவிலில் வந்து வழிபாடு செய்தால் நோய்கள் நிவர்த்தியாகும். ஆயுள் விருத்தியாகும். திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும். முக்தி கிடைக்கும். கல்வியில் சிறப்பு பெறலாம் என்கிறார்கள். மேலும் இங்கு ஒரு பிடி அன்னதானம் செய்தால், பல அசுவமேத யாகம் செய்த பலனை பெறலாம் என்பதும் ஐதீகம்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்கள்

1. அமாவாசைதோறும் அன்னாபிஷேகம் நடைபெறும் தேவாரத் தலம்

https://www.alayathuligal.com/blog/1s9xnyp77i599iiqa8p0n7m7zzg40c

2. குளிர்ச்சியான நெற்றிக்கண் உடைய அம்பிகை

பேச்சு குறைபாட்டை தீர்க்கும் அபிஷேகத் தேன்

திருமணத் தடை நீக்கும் ஸ்ரீவித்யா சக்தி பூஜை

https://www.alayathuligal.com/blog/1s9xnyp77i599iiqa8p0n7m7zzg40c-reb55

சிவபெருமானின் பாதம்

 
Previous
Previous

ஆவராணி அனந்த நாராயண பெருமாள் கோவில்

Next
Next

மூவலூர் மார்க்க சகாயேசுவரர் கோவில்