வைரவன்பட்டி வளரொளி நாதர் கோவில்

அனுமனை வணங்கி நிற்கும் ராமரின் அபூர்வ தோற்றம்

காரைக்குடி- திருப்பத்தூர் சாலையில், பிள்ளையார்பட்டியில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது என்.வைரவன்பட்டி திருத்தலம். இறைவன் திருநாமம் வளரொளி நாதர்..இறைவியின் திருநாமம் ஸ்ரீவடிவுடைநாயகி. 13 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனால் நகரத்தார் வசம் ஒப்படைக்கப்பட்ட, ஒன்பது கோவில்களில் இதுவும் ஒன்றாகும். 1874 ஆம் ஆண்டு இக்கோவில் நகரத்தாரால் புனரமைக்கப்பட்டது.

சிவன் கோயிலில் ராமரது சிற்பமும் அனுமனது சிற்பமும் அருகருகில் அமைக்கப்பட்டுள்ளது எந்த சிவ தலத்திலும் காணாத அதிசயம். இங்கு கருவறை சுற்றுப் பிரகாரத்தில் ராமர், விஸ்வரூப ஆஞ்சநேயரை வணங்கி நிற்பது வேறெங்கும் காண முடியாத அதிசயக் கோலம். ராமரது சிலையை விட அனுமனது சிலை சற்று பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது. அனுமான் இலங்கைக்குச் சென்று சீதா தேவி நலமுடன் உள்ளார் என்ற செய்தியைக் கொண்டு வந்து ராமரிடம் சேர்த்தார். அதுகேட்டு மகிழ்ந்த ராமர் நன்றிப் பெருக்குடன் அனுமனை கை கூப்பி வணங்கி நிற்கும் காட்சியே இது. இதனாலேயே ராமரது சிலையை விட அனுமனது சிலை சற்று பெரியதாக உள்ளது.

கண்களையும், மனதையும் கவரும் சிற்பங்கள், உயிரோட்டமுள்ள ஓவியங்கள்

இத்தலம் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது. மகா மண்டபத்தின் முகப்பு வாயிலில் ஆரம்பித்து காணப்படும் எண்ணிலடங்கா சிற்பங்களின் வடிமைப்பு கண்களையும் மனதையும் கவர்கின்றன.

கோயிலின் உள் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்திக்கு அருகில் கண்ணப்ப நாயனாரின் சிற்பம் சிவபிரானுடன் காணப்படுகிறது.தட்சிணாமூர்த்திக்கு முன்பு ஏழிசைத் தூண்கள் இருக்கின்றன.

நடராஜர் சபையின் முன் மண்டப வாயிலில் பாயும் குதிரையை அடக்கி ஆளும் வீரர்களின் சிற்ப அமைப்பு மிகவும் சிறப்பு. வீரர்களின் உடை அலங்காரங்கள், உடலமைப்புகள், முகபாவம் எல்லாம் தத்ரூபமாய் அமைந்து நம்மை வியக்க வைக்கின்றன. ராஜகோபுர வாயில் நிலைகளில் உள்ள கொடிப் பெண்களின் சிற்பங்களும் முகபாவம், உடை, தலை அலங்காரம் எல்லாம் அக்காலத்திய நாகரிகத்தை நமக்குக் காட்டும் கண்ணாடிகளாகத் திகழ்கின்றன.

இக்கோவிலின் உள்ளே கல் மண்டபத்தின் மேற்கூரையில் ஒரு சிறு இடைவெளிகூட இல்லாமல் பல்வேறு வடிவங்கள் வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. எல்லாமே இயற்கை வண்ணங்களால் உருவானவை. அவற்றில் திருமாலின் பத்து அவதாரங்கள், பஞ்ச பாண்டவர்கள், வளரொளிநாதர், வடிவுடையம்மன் ஆகிய ஓவியங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

காண்பவர்களின் நெஞ்சத்தை கொள்ளை கொள்ளும் இந்த அழகிய சிற்பங்களும், ஓவியங்களும் நம் முன்னோர்கள் சிற்பக் கலையிலும் ஓவியக் கலையிலும் அடைந்திருந்த உன்னத நிலையை உலகுக்கு எடுத்துக்காட்டும் சாட்சியங்களாக உள்ளன.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

திருவோண நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய பைரவர்

https://www.alayathuligal.com/blog/jjb3lqdzn8x4ons6kwz46pus5kxxkf

அனுமனை வணங்கி நிற்கும் ராமர்

ஏழிசைத் தூண்கள்

 
Previous
Previous

தேவகோட்டை கோட்டை அம்மன் கோவில்

Next
Next

தர்மபுரி கல்யாண காமாட்சி கோவில்