மானாமதுரை வீர அழகர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

மானாமதுரை வீர அழகர் கோவில்

மானாமதுரை சித்திரைத் திருவிழா

மதுரை கள்ளழகரை போல், வைகை ஆற்றில் இறங்கும் மானாமதுரை வீர அழகர்

மதுரையிலிருந்து ராமேசுவரம் செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 49 கி.மீ. தொலைவில் உள்ள மானாமதுரை என்ற ஊரில் அமைந்துள்ளது வீர அழகர் கோவில். இத்தலத்தில் பெருமாள், மதுரை அழகர் கோவிலைப் போலவே ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சுந்தரராஜப் பெருமாள் என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார். தாயார் திருநாமம் சௌந்தரவல்லி.

தல வரலாறு

900 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலை மாவலி வானாதிராயர் என்ற மன்னர் கட்டினார். மன்னர் மாவலி வாணாதிராயருக்கு மதுரை அழகர்கோவில் சுந்தரராஜப்பெருமாளிடத்தில் மிருந்த பக்தி உண்டு. இந்த பெருமாளை பார்க்காமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய மாட்டார். ஒரு நாள் மன்னருக்கு அழகர்கோவில் சுந்தரராஜப்பெருமாளை பார்க்க செல்ல முடியாத அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. பெருமாளை பார்க்க இயலாததால் மன்னர் மிகுந்த வேதனைப் பட்டார். உடனே பெருமாள் மன்னரின் கனவில் நோன்றி, "மன்னா, நீ இருக்கும் இடத்தில் வைகை ஆற்றின் கிழக்கு கரையில் எனக்கு ஒரு கோயில் கட்டி அதில் பெருமாளை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வா. இதனால் உனக்கு மதுரை அழகர்கோவிலில் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என கூறி மறைத்தார். மன்னனும் பெருமாள் கூறியபடி கோவில் கட்ட நினைத்தான. ஆனால் எந்த இடத்தில் கோவில் கட்டுவது என குழம்பினான். பெருமாள், மன்னனின் குழப்பம் தீர, ஒரு எலுமிச்சம்பழத்தை ஆற்றில் விடு. அந்த எலுமிச்சம்பழத்தின் ஒரு பகுதி எந்த இடத்தில் விழுகிறதோ அங்கு கோவிலையும், மறுபாதி விழும் இடத்தில் கோவிலுககாள் குளத்தையும் வெட்டுமாறு ஆணையிட்டு மறைந்தார். எனவே தான் கோவிலிலிருந்து குளம் 4 கி.மீ. தூரத்தில் உள்ளது.

மானாமதுரை வீர அழகர் சித்திரை திருவிழா

மதுரை அழகர் கோவிலை போலவே, இக்கோவிலில் சித்திரை மாதம் 10 நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. நான்காம் நாள் எதிர்சேவையும், ஐந்தாம் நாள் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மதுரையில் மீனாட்சி என்றால் மானாமதுரையில் ஆனந்தவல்லி. அங்கு சொக்கநாதர் என்றால் இங்கு சோமநாதர். திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளி சகோதரியின் திருமணத்தைக் காண வருகிறார் கள்ளழகர். அவரைப்போலவே மானாமதுரையில் வீர அழகர், சகோதரி ஆனந்தவல்லியின் திருமணத்தைக் காண எழுந்தருள்கிறார். வீர அழகருக்கு எதிர் சேவை, திரி எடுத்து சாமியாடுவது, பீச்சாங்குழல் சேவை என அனைத்தும் மதுரையில் நடப்பதுபோலவே இப்பகுதி மக்களாலும் செய்யப்படுகிறது. அழகர் கோவில் கள்ளழகரை போல், மானாமதுரை வீர அழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது எந்த வண்ண பட்டுடை உடுத்தி வருகிறாரோ, அந்த உடையின் நிறத்திற்கு ஏற்றார் போல் அந்த ஆண்டு பலன் இருக்கும்.

இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவில், இன்று (23.04.2024) செவ்வாய்க்கிழமை, மானாமதுரை வீர அழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.

Read More
ராமேசுவரம் கோதண்டராமர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ராமேசுவரம் கோதண்டராமர் கோவில்

ராமர், சீதை, லட்சுமணனுடன் விபீஷணர் இருக்கும் அபூர்வ காட்சி

ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது கோதண்டராமர் கோவில். கருவறையில் ராமர், சீதை மற்றும் லட்சுமணர் காட்சி தருகின்றனர். ராமர் கையில் கோதண்டத்துடன் (வில்) இருப்பதால், 'கோதண்டராமர்' என்றும், தலம் 'கோதண்டம்' என்றும் அழைக்கப்படுகிறது. அருகில் பரிந்துரைந்த ஆஞ்சநேயர் இருக்கிறார். இலங்கையிலிருந்து சீதையை மீட்டு திரும்பிய ராமர், உடன் வந்த விபீஷணருக்கு இலங்கையின் அரசனாக பட்டாபிஷேகம் செய்த புனித தலமாக இப்பகுதி கருதப்படுகிறது. இராமரை ஆஞ்சநேயர் வணங்கும் காட்சியை எல்லாக் கோவில்களிலும் காண முடியும். ஆனால், இங்கு ராமரின் அருகில் விபீஷணன் வணங்கியபடி காட்சியளிக்கிறார். இது ஒரு அபூர்வமான காட்சியாகும்.

விபீஷணன் தன் சகோதரன் இராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், சீதையை இராமரிடமே ஒப்படைக்கும்படியும் புத்திமதி கூறினார். இராவணன் அதை ஏற்க மறுக்கவே, விபீஷணன் இராமருக்கு உதவி செய்வதற்காக ராமேசுவரத்தில் இராமபிரானிடம் அடைக்கலம் பெற்றார் என்பது ஐதீகம்.

ராமர் விபீஷணனுக்கு இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்த தலம்

விபீஷ்ணன் ராமபிரானைத் தேடி வந்தபோது, ராமருடன் இருந்த வானரப்படையினர். விபீஷணன் மீது சந்தேகம் கொண்டு அடைக்கலம் தரக்கூடாது என்றனர் ஆனால் ஆஞ்சநேயர் ராமனிடம் விபீஷணனின் நடவடிக்கைகளை தான் இலங்கையில் கவனித்து வந்ததாகவும், அவனது சிறப்பியல்புகளையும் எடுத்துக் கூறி அவனை ராமசேவைக்கு அனுமதிக்கும்படி பரிந்துரைத்தார். இதனால் ஆஞ்சநேயர், பரிந்துரைந்த ஆஞ்சநேயர் என பெயர் பெற்றார். இவரிடம் நமது நியாயமான கோரிக்கைகளை தெரிவித்தால், அதை ராமரிடம் பரிந்துரைத்து நிறைவேற்றி வைப்பார் என்பது நம்பிக்கை. விபீஷணர் பட்டாபிஷேகம் ஆனி மாத வளர்பிறை நவமியன்று நடக்கிறது.

பிரார்த்தனை

குறுக்கு வழியில் தலைமைப் பதவி அடைய நினைப்போரை ஒடுக்கி வைப்பவர் இந்த ராமர். தரம் கெட்ட ராவணனுக்குப் பதிலாக ஒழுக்கத்தைக் கடைபிடித்த விபீஷணரை இத்தலத்தில் பதவியில் அமர்த்தியதால், நியாயமான வழியில் தலைமைப்பதவி கிடைக்க இவரை வணங்கலாம். தீயவர் சேர்க்கையிலிருந்து விடுபடவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

கோதண்டராம சுவாமி கோவிலின் சுவர்கள், ராமாயணக் கதையைச் சித்தரிக்கும் அற்புதமான ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

Read More
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில்

வலது கரத்தில் ஒரு விரலையும், இடது கரத்தில் இரண்டு விரல்களையும் உயர்த்தி அபூர்வ கோலத்தில் காட்சி தரும் பெருமாள்

108 வைணவ திவ்ய தேசங்களில், காஞ்சிபுரம் திருஊரகம் உலகளந்த பெருமாள் கோவில் 50-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. மூலவரின் திருநாமம் உலகளந்த பெருமாள், திரிவிக்கிரமப் பெருமாள். தாயாரின் திருநாமம் அமுதவல்லி நாச்சியார், ஆரணவல்லி, அம்ருதவல்லி.

கருவறையில் உலகளந்த பெருமாள், 35 அடி உயரமும் 24 அடி அகலமும் கொண்டு, நெடிய திருமேனியுடன் தனது வலது காலை தரையில் ஊன்றி, இடதுகாலை விண்ணோக்கி தூக்கியும், வலது கரத்தில் ஒரு விரலை உயர்த்தியும், இடது கரத்தில் இரண்டு விரல்களை உயர்த்தியும், மேற்கு நோக்கி திரிவிக்கிரம வடிவத்தில் காட்சியளிக்கிறார். இப்படி நெடிதுயர்ந்த திருமேனி கொண்டு, இரு கைகளிலும் விரல்களை உயர்த்திய நிலையில் காட்சி தரும் பெருமாளை நாம் வேறு எங்கும் தரிசிக்க முடியாது. பெருமாளின் இத்தகைய கோலத்திற்கு பின்னணியில் ஒரு வரலாறு உண்டு.

பிரகலாதனின் பேரனும், அசுரர்களின் அரசனுமான மகாபலி, தேவலோக பதவி அடைய வேண்டும் என்பதற்காக யாகம் ஒன்றை நடத்தினான். அப்போது பெருமாள், வாமன ரூபத்தில் வந்து அவனிடம் மூன்றடி நிலம் கேட்டார் .

மகாபலியும் இதற்கு உடன்பட்டு தேவையான அளவு இடத்தை எடுத்துக் கொள்ளக் கூறினான். உடனே திருமால், திரிவிக்கிரம வடிவம் எடுத்து, வானத்திற்கும் பூமிக்கும் வளர்ந்து நின்று, தன்னுடைய ஒரு திருவடியால் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்தார். இத்தலத்தில் பெருமாள் தனது இடது கரத்தில் இரண்டு விரல்களை உயர்த்தி காட்டுவது, பூலோகத்தையும், விண்ணுலகையும் அளந்ததை சுட்டிக் காட்டுவதாகவும், வலது கையில் ஒரு விரலை உயர்த்தி இருப்பது மூன்றாவது அடிக்கு எங்கே தனது திருவடியை வைக்க வேண்டும் என்பது போல் அமைந்துள்ளது.

மூன்றாவது அடிக்கு இடமில்லை என மகாபலியிடம் வாமனர் கூற, அதற்கு மகாபலி அடியேனின் சிரசு இருக்கிறது என்று கூறி தனது தலையைக் கொடுத்தான். திரிவிக்கிரமர் தன் பாதத்தை மகாபலியின் தலையில் வைத்து அழுத்தி அவனை பாதாள லோகத்தில் கொண்டு சேர்த்தார். மீண்டும் மூன்று லோகத்தையும் இந்திரனிடம் இருக்குமாறு செய்தார்.

அப்போது மகாபலி, பகவான் திருக்கோலத்தை முழுமையாகக் காண இயலவில்லை என்றெண்ணி பாதாள உலகத்தில் பெருமாளை நோக்கித் தவம் செய்தான். தவத்துக்கு மகிழ்ந்த பெருமாள், இந்தத் தலத்திலேயே மகாபலிக்கு, உலகளந்த திருக்கோலத்தை மறுபடியும் காட்சியாகத் தந்தார்.

திரு ஊரகத்தான்

மகாபலியோ நிரந்தரமாக, தான் அந்த உருவை தரிசித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று பேராவல் கொண்டதால், பாதாள உலகத்து ஜீவன்களில் ஒன்றான ஐந்து தலை நாகமாக காட்சி தந்தார் திருமால். இந்த நாகத் தோற்றத்தைத் தான் இந்த கோவில் வளாகத்தில், திரு ஊரகத்தானாக (திவ்ய தேசப் பெருமாளாக) தரிசிக்கிறோம்.

தெற்கு நோக்கி காட்சிதரும் திரு ஊரகத்தானுக்கு பால் பாயசம் நிவேதித்தால் திருமணத் தடை நீங்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும், ராகு கேது தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

இக்கோவிலின் பிரகாரத்திலேயே நீரகம், காரகம், கார்வானம் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இப்படி ஒரே இடத்தில் 4 திவ்ய தேச பெருமாளைக் காணலாம். இது மிகவும் சிறப்பான ஒன்றாகும். வேறு எங்கும் இதைப்போல் ஒரே கோவிலில் 4 திவ்ய தேசங்களைக் காண முடியாது.

Read More
திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோவில்

தாயார் வெள்ளி கருடி வாகனத்தில் எழுந்தருளும் திவ்ய தேசம்

நாகப்பட்டினம் சௌந்தரராஜ பெருமாள் கோவில், சோழ நாட்டு திவ்யதேசங்களில் ஒன்று. மூலவரின் திருநாமம் நீலமேகப்பெருமாள். தாயாரின் திருநாமம் சௌந்தர்யவல்லித்தாயார். ஆதிசேஷன் தவம் புரிந்து பெருமாளின் சயனமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தலம். ஆதிசேஷன் வழிபட்ட காரணத்தாலேயே இவ்வூர் நாகன்பட்டினம் என்றாகி, பின்னர் நாகப்பட்டினம் என மாறியது.

கருவறையில் நின்ற கோலத்தில், நெடியோனாக மார்பில் பெரிய பிராட்டியாருடன், சங்கு, சக்கரம், கதை தாங்கி தான முத்திரையுடன் எழிலாக, மந்தகாச புன்னகையுடன் திருமங்கையாழ்வாரை மயக்கிய 'நாகை அழகியாராக' நீலமேகப்பெருமாள் சேவை சாதிக்கின்றார். தங்க கவசத்தில் பெருமாளை சேவிக்க ஆயிரம் கண் வேண்டும். இவர் இடையை இத்திருத்தலத்திற்கே உரித்தான சிறப்பான தசாவதார ஒட்டியாணம் அலங்கரிக்கின்றது. நின்ற, இருந்த, கிடந்த என்ற மூன்று திருக்கோலச் சேவையும் இத்தலத்தில் உண்டு. மூலவர் நின்ற திருக்கோலம். “வீற்றிருந்த பெருமாள்” என்று அமர்ந்த திருக்கோலமும், பள்ளி கொண்ட திருக்கோலத்தில் அரங்கநாதனும் இங்கு காட்சி தருகின்றனர். நாகராஜனுக்கு மூன்று திருக்கோலங்களிலும் எம்பெருமான் சேவை சாதித்ததாக ஐதீகம் .

ஸ்ரீசௌந்தரராஜப்பெருமாள் ஆலயத்தில் மட்டுமே, ஸ்ரீசௌந்தர்யவல்லி தாயாருக்கு 'கருடி வாகனம்'(பெண் கருட வாகனம்) இருப்பது வேறு எந்த திவ்ய தேசத்திலும் இல்லாத தனிச்சிறப்பாகும். இத்திருக்கோயிலில் கருடபகவானை ஸ்ரீசௌந்தரராஜ பெருமாளே வீற்றிருக்கச் செய்ததால், இந்த சந்நிதியில் மட்டும் கருடபகவானுடன் கருடியும் வாகனமாக சேர்ந்து எழுந்தருளி உள்ளார். ஆகையால், பெருமாள் கருடவாகனத்திலும், தாயார் கருடிவாகனத்திலும் சேர்ந்துஎழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதிப்பர். அதன் படி, ஸ்ரீசௌந்தர்யவல்லித் தாயாரின் ஆனி பிரம்மோற்சவத்தின் நான்காம் திருநாள் மாலை 6 மணிக்கு உற்சவர் ஸ்ரீசௌந்தர்யவல்லித் தாயார், வெள்ளி கருடி வாகனத்திலும், ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் வெள்ளி கருட வாகனத்திலும் எழுந்தருளி , கோவில் நந்தவனத்தில் வலம் வந்து சேவை சாதிக்கின்றனர். பெருமாள் கருட வாகனத்தின் சிறகுகள் மேல் நோக்கிய நிலையில் உள்ளன. தாயார் கருடி வாகனத்தின் சிறகுகள் கீழ் நோக்கிய நிலையில் உள்ளன.

இக்கோவில் ஆடிப்பூர பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் மாலை, சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாள், வெள்ளிக் கருடி வாகனத்தில் மாடவீதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள் .

Read More
ராமர் கோவில் தாசரதி கல்யாணராமர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ராமர் கோவில் தாசரதி கல்யாணராமர் கோவில்

திருமணத்தடை நீங்க சீதா தேவிக்கு மஞ்சள் கிழங்கு மாலை

சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் தொடர்வண்டி பாதையில், கடம்பத்தூரை அடுத்த செஞ்சி பானம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது ராமர் கோவில் என்னும் ஊர். இந்த ஊரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான தாசரதி கல்யாணராமர் அமைந்துள்ளது.

ராமரும் அவரது வானரப் படையினரும் சீதையைத் தேடிக் கொண்டிருந்தபோது இத்தலத்துக்கு வந்தனர். அப்போது குஸஸ்தலை ஆற்றங்கரை ஓரத்தில் வானரப்படைகளுக்காக உணவு சமைத்திட மடம் அமைத்து சமைக்கும் பணி நடந்தது. அந்த மடம் அமைந்த இடம் மடத்து குப்பம் என்று இன்று அழைக்கப்படுகிறது. சீதையைத் தேடுவது குறித்து சற்றுத் தொலைவில் கவலையுடன் ராமர் ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தார். அவ்வாறு ராமர் நின்ற இடமே இன்று ஊராகி, ராமர் கோவில் என வழங்கப்படுகிறது.

ராமாவதாரம் நிறைவடைந்து கிருஷ்ணர் அவதரிக்க வேண்டிய காலம் வந்தது. விசுவாமித்திரர் மற்றும் சப்தரிஷிகள் ராமனின் திருக்கல்யாணக் காட்சியைக் காண விரும்பினர். அதற்காக குஸஸ்தலை ஆற்றின் கரையில் ஒரு பெரிய யாக வேள்வி நடத்தினர். ராமனும் சீதையும் திருமணக் கோலத்தில் காட்சிதர, அருகில் லட்சுமணன் துணை நிற்க, அனுமன் கைபொத்தி வணங்க, அங்கிருந்த அனைவருக்கும் காட்சி தந்தனர். பின்னர் உலக மக்கள் அனைவரும் வழிபட வேண்டி, இத்தலத்திற்கு அருகில் பர்ணசாலையில் தவம் செய்து கொண்டிருந்த சாலிஹோத்ர மஹரிஷி, ஸ்ரீலட்சுமணன் உடனுறை சீதாதேவி சமேத தாசரதி கல்யாணராமர் பிரதிஷ்டை செய்து கோவிலை உருவாக்கினார். முன்பு ராமன் நின்ற அந்த இடம், திருமணக்கோல ராமன் காட்சி தந்த அந்த கிராமமே,பின்பு ராமன் கோவில் என்று ஆனது.

கருவறையில் மூலவராக, ஸ்ரீ ராமர், ஸ்ரீலட்சுமணன், சீதாபிராட்டி, அனுமன் ஆகியோர் உள்ளனர். ஆனால் மற்ற ராமர் கோவில்களில் உள்ளது போல் இல்லாமல், இங்கே சீதை ராமனுக்கு வலது புறத்திலும், லட்சுமணன் இடது புறத்திலும், அனுமன் ராமருக்கு இடதுபுறத்தில் தெற்கு நோக்கி அஞ்சலி ஹஸ்தத்துடன் இருக்கிறார். வலது புறத்தில் சீதையுடன் கல்யாணக்கோலத்தில் நின்றதால் தந்தை பெயருடன் சேர்த்து தாசரதி கல்யாணராமன் சந்நிதி என்று அழைக்கிறனர்.

பிரார்த்தனை

இக்கோவிலில் ஒவ்வொரு புனர்பூச நட்சத்திரத்தன்றும் நடைபெறும் திருமஞ்சனத்தில் கலந்து கொள்வோருக்கு திருமணம் கைகூடும். திருமணத் தடை, குடும்பத்தில் கணவன் மனைவியரிடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு இங்கு சீதைக்கு மஞ்சள் கிழங்கு மாலை சாற்றி பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். கருவறையில் உள்ள பால ஆஞ்சநேய சுவாமிக்கு செந்தூரக்காப்பு பிராத்தனை செய்து கொண்டால், வெகு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
வேளச்சேரி யோக நரசிம்மர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

வேளச்சேரி யோக நரசிம்மர் கோவில்

மூலவர் நரசிம்மருக்கு எதிரில் கருடாழ்வாருக்கு பதிலாக பிரகலாதன் இருக்கும் அபூர்வ காட்சி

சென்னை வேளச்சேரி பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்மர் கோவில். மூலவரின் திருநாமம் யோக நரசிம்மர். தாயாரின் திருநாமம் அமிர்தபாலவல்லி. சோழர் காலத்தைச் சேர்ந்த இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சதுர்வேதிமங்கலம் /வேதநாராயணபுரம், அதாவது நான்கு வேதங்களும் சொல்லிக் கொடுக்கப்பட்ட இடம் இத்தலம் ஆகும். வேள்விகள் நிறைய நடந்ததால் வேதஸ்ரேணி, வேள்விச்சேரி என்ற பெயர் கொண்ட இந்த இடம், பிற்காலத்தில் வேளச்சேரி என மறுவியதாம்.

மூலவர் யோக நரசிம்மர் மிக அழகாக கம்பீரமான தோற்றத்துடன், நான்கடி உயர திருமேனி உடையவராய். நான்கு கரத்துடன் யோக நிலையில் அருள் செய்கிறார் . இரண்டு கைகளில் சங்கு மற்றும் சக்கரம் வைத்துள்ளார் , மற்ற இரு கைகளையும் தன் கால்களின் முட்டியின் மீது வைத்துள்ளார். இங்கு மூலவர் யோக நரசிம்மர், சிறுவன் பிரகலாதனுடன் உரையாடுவதற்கு வசதியாக, சந்நிதிக்கு எதிரே கருடாழ்வாருக்கு பதிலாக பிரகலாதன் நிற்கிறார். இப்படி மூலவருக்கு எதிரே பிரகலாதன் எழுந்தருளி இருப்பது, வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்.

இங்குள்ள வேதநாராயணப் பெருமாள் தன கையில் உள்ள சுதர்சன சக்கரத்தை, அசுரர்களின் மீது வீசுவதற்கு தயார் நிலையில் வைத்திருப்பதும் ஒரு அரிய காட்சியாகும். இக்கோவிலில் தனிச் சன்னதியில் எழுந்தருளியுள்ள ராமபிரானின் உற்சவ மூர்த்திக்கு, வில்லில் பூ முடிந்து வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

Read More
பொன்மார் தியாக வினோதப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

பொன்மார் தியாக வினோதப் பெருமாள் கோவில்

பொன்மார் பெருமாள் சக்கரத்தை பிரயோகிக்கும் நிலையில் எழுந்தருளி இருக்கும் அபூர்வ கோலம்

சென்னை மேடவாக்கத்தில் இருந்து மாம்பாக்கம் செல்லும் சாலையில், 9 கி.மீ. தொலைவில் உள்ள பொன்மார் கிராமத்தில் அமைந்துள்ளது தொலைவில் தியாக வினோதப் பெருமாள் கோவில். இத்தலம் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. விஜயநகர மன்னர்களின் காலத்தில் இவ்வூரானது 'ஜெயங்கொண்ட சோழமண்டலத்து புலியூர் கோட்டத்து கால்வாய் நாட்டு தியாக வினோத நல்லூரான பொன்மாறு' என்று வழங்கப்பட்டதாக, கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

இத்தலத்தில் வேறெங்கும் இல்லாத வகையில் பெரியதிருவடி எனும் கருடாழ்வார் நான்கு திருக்கரங்களோடு காட்சி தருகிறார். மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரத்தை ஏந்தியும், வலது கீழ் கரத்தினை அபய ஹஸ்த நிலையிலும், இடது கீழ் திருக்கரத்தில் சர்ப்பத்தை ஏந்தியும் காட்சி தருவது சிறப்பானது.

கருவறையை அடைய 10 படிக்கட்டுகளைக் கடக்க வேண்டும். கருவறையில் தியாக வினோதப் பெருமாள் பெருமாள், சதுர்புஜனாக தனது திருக்கரங்களில் சங்கும், சக்கரமும் தாங்கி, ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக காட்சி அளிக்கிறார். பெருமாளின் திருக்கரத்தில் உள்ள சக்கரமானது பிரயோக நிலையில் உள்ளது. இதன் பின்னணியில் ஒரு புராண வரலாறு இருக்கின்றது.

முன்பொரு காலத்தில் அம்பரீஷன் என்ற மன்னன் தீவிர பெருமாள் பக்தனாக இருந்தான். இவர் ஏகாதசி விரதத்தை தன் உயிர் போலக் கருதி தவறாமல் கடைப்பிடித்து வந்தார். ஒரு முறை அவர் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்த சமயத்தில், துர்வாசரின் கோபத்திற்கு ஆளானார். துர்வாசர் அம்பரீஷனை அழிக்க பூதம் ஒன்றை ஏவினார். அக்கணமே தன் பக்தனைக் காக்க திருமால் தன் பிரயோக சக்கரத்தை ஏவ, அந்த சக்கரம் பூதத்தை அழித்து, பின்னர் துர்வாசரைத் துரத்தத் தொடங்கியது. தன் உயிரைக் காத்துக் கொள்ள துர்வாசர், திருமாலிடம் சரணடைந்தார். ஆனால் திருமாலோ, அம்பரீஷனிடம் சரணடையச் சொல்ல, அதன்படியே அம்பரீஷ மன்னனிடம் சென்று, தன்னை மன்னித்துவிடும்படி துர்வாசர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து சீறி வந்த பிரயோக சக்கரம், தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டு பெருமாளின் திருக்கரங்களைச் சென்றடைந்தது. தன் பக்தர்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் விதமாகத்தான், பெருமாளின் சக்கரம் பிரயோக நிலையில் இருப்பதாக ஐதீகம்.

கருடாழ்வார் சங்கு, சக்கரம், சர்ப்பம் ஏந்தி இருக்கும் அரிய காட்சி

இத்தலத்தில் கருடாழ்வார் நான்கு திருக்கரங்களோடு, மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரத்தை ஏந்தியும், வலது கீழ் கரத்தினை அபய ஹஸ்த நிலையிலும், இடது கீழ் திருக்கரத்தில் சர்ப்பத்தை ஏந்தியும் காட்சி தருவது ஒரு தனிச்சிறப்பாகும்.

பிரார்த்தனை

இத்தல பெருமாளை வழிபடுபவர்களுக்கு, துன்பங்கள் உடனடியாக விலகும். திருமணத் தடை அகலும், உடல் ஆரோக்கியம் மேம்படும்.

Read More
துத்திப்பட்டு பிந்து மாதவர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

துத்திப்பட்டு பிந்து மாதவர் கோவில்

பிரம்மஹத்தி தோஷம் போக்கும் பிந்து மாதவப் பெருமாள்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆம்பூர் பேர்ணாம்பட்டு மாநில நெடுஞ்சாலை மார்க்கத்தில், ஆம்பூர் நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள துத்திப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதேவி பூதேவி சமேத பிந்து மாதவர் கோவில். தாயார் திருநாமம் ஸ்ரீ குமுதவல்லி பெருந்தேவியார். கருவறையில் ஆறடி உயர திருமேனியுடன் பிந்து மாதவப் பெருமாள் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் கதாயுதத்தை கையில் பிடித்தபடி அருள்பாலிக்கிறார். அவருடைய நான்கு கரங்களில், மேல் இரு கரங்கள் சங்கும், சக்கரமும் தாங்கி இருக்கின்றன. கீழ் இடது கரம் கதாயுதத்தை ஏந்தியுள்ளது. கீழ் வலதுகரம் அபய முத்திரையை அளிக்கிறது.

பஞ்ச மாதவ தலங்கள்

மாதவனைக் காண்பதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு. இந்திரன் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விமோசனம் பெற்றிட இவ்வுலகில் ஐந்து மாதவப் பெருமாள்களை ஐந்து திவ்ய திருத்தலங்களில் ஸ்தாபித்தான்.

முதலில் வடநாட்டில் அலகாபாத் நகரின் பிரயாகையில் வேணி மாதவரையும், இரண்டாவதாக ஆந்திர மாநிலம் பித்தாபுரத்தில் குந்தி மாதவரையும், மூன்றாவதாக தமிழகத்தில் ஆம்பூருக்கு அருகே துத்திப்பட்டில் பிந்து மாதவரையும், நான்காவதாக கேரளம் திருவனந்தபுரத்தில் சுந்தர மாதவரையும், ஐந்தாவதாக ராமேசுவரத்தில் சேது மாதவரையும் ஸ்தாபித்து, வழிபட்டு பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி அடைந்தான் என்பது ஐதீகம். அதோடு, இந்த பஞ்ச மாதவப் பெருமாள் கோவில்களுக்கு யாரெல்லாம் தலயாத்திரை செல்கிறார்களோ, அவர்களின் எல்லாவித பாப, சாப தோஷங்களும் நீங்க வேண்டுமென பெருமாளிடம் வேண்டிக்கொண்டான். அதற்கு பெருமாளும் அருள் பாலித்தார்.

மாங்கல்ய தோஷம், நாகதோஷம் நீக்கும் தலம்

வாழ்நாளில் ஒரு முறை பஞ்ச மாதவப் பெருமாள் தலங்களை தரிசனம் செய்தாலே, செய்தவர்களுக்கு சொர்க்கமும், மோட்சமும் நிச்சயம் கிட்டும் என்பது புராண வரலாறு. புத்திர பாக்யம் இல்லாதவர்கள் விரதம் இருந்து இந்த மாதவர்களில் யாரையாவது ஒரு வரை தரிசனம் செய்தால் புத்திர பாக்யம் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோவிலில் அமாவாசை, பௌர்ணமி, சனிக்கிழமை, ரோகிணி- திருவோணம் -சுவாதி நட்சத்திரங்கள் ,பிரதி மாத ஏகாதசி திதிகளில் சிறப்பு பூஜைகள் உண்டு. மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள். இத் திருதலத்தில் உள்ள நாக கன்னிகைகளுக்கு தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமை அபிஷேகம் செய்து, ஐந்தாவது வெள்ளிக்கிழமை மாங்கல்யம் சாத்தி வழிபட்டால் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். நாக தோஷம் உள்ளவர்கள் தொடர்ந்து 21 நாட்கள் நாக கன்னிகைக்கு நெய் தீபம் ஏற்றி, ஏழுமுறை கோவிலை சுற்றி வலம் வர வேண்டும். பின் பிந்து மாதவரை சென்று வணங்கினால் தோஷம் நீங்கி விடும்.

Read More
அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில்

இரு புறமும் சிங்கங்கள் இருக்க காட்சியளிக்கும் அபூர்வ மூல கருடன்

காரைக்குடியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மிகப் பிரபலமான கோவில், அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில். தாயார் திருநாமம் அலர்மேல் மங்கை தாயார்.. இங்கு வழிபடுதல், திருமலையில் வழிபடுவதற்கு சமம் என்பதால் இத்தலம் தென்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. திருவரங்கத்தில் இராமாநுஜர் ஆராதித்த பெருமாள் விக்கிரம், திருப்பதியிலிருந்து கொண்டு வந்த ஸ்ரீசடாரி, திருமயம் ஸ்ரீசத்தியமூர்த்தி ஆலபத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அக்னி ஆகிய மூன்றும் இக்கோயிலில் நிறுவப்பட்டுள்ளன.

அனைத்து வைணவ ஆலயங்களிலும் வெளிப் பிரகார மதில் சுவர்களின் மூலையில் சிறகுகளை விரித்த நிலையில் அமர்ந்த கோலக் கருடனின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். திருக்கோவிலைக் கருட பகவான் காவல் காப்பதாக ஐதீகம். இத்தலத்தின் ஈசானிய மூலையில் எழுந்தருளியுள்ள கருடன் விசேஷமாக ஆராதிக்கப்படுகின்றார். திருமதில் சுவரில் ஈசான்ய மூலையில் அமைந்திருப்பதால் இவர் 'மூலைக் கருடன், மூல கருடன், மதில் கருடன்' என்றெல்லாம் அழைக்கப்படுகின்றார். இவர் கோபுரத்துடன் கூடிய தனி சந்நிதியில், இரு புறமும் சிங்கங்கள் இருக்க காட்சியளிப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று இவருக்கு 108 குடங்களில் திருமஞ்சனமும் பூஜைகளும் சிறப்பாக நடைபெறுகின்றன. ஆடி மாத மஹா சுவாதி அதி விசேஷம்.

மூல கருடனுக்கு சுவர் மீது சிதறு தேங்காய்களை உடைக்கும் வித்தியாசமான நடைமுறை

பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கும் இவருக்குப் பக்தர்கள் சிதறு தேங்காய்களை தரையில் உடைப்பதில்லை. வானில் வீசி உடைப்பது போலச் சுவர் மீது உயர வீசி உடைக்கின்றார். இவரைத் தரிசித்து வழிபட்டால், ஏவல் பில்லி சூனியம், மன வியாதி அகலும். சத்ருபயம் நீங்கி வளம் பெருகும். நினைத்த காரியம் நிறைவேறும். பெரும்பாலான எல்லாக்‌ காணிக்கைகளும்‌ இந்த மூலக்‌ கருடனுக்கே செலுத்தப்படுகிறது.

Read More
தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில்

நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட, உயிரோட்டமுள்ள அபூர்வ சிற்பங்கள்

திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில், 15 கி.மீ. தொலைவில் உள்ளது தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில். தாயாரின் திருநாமம் கல்யாண சௌந்தரவல்லி.

தாயார் சன்னதியின் முன் உள்ள மண்டபத்தில் 14 தனித்தனி தூண்களும், 2 இசை தூண்களும் உள்ளன. இந்த மண்டபம் சிற்பக்கலைக் கூடமாக திகழ்கின்றது. இங்குள்ள தூண்கள் யாவும் சிறந்த சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. இந்த தூண்கள் ஒரே கல்லினால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தூண்களில் உலகளந்த பெருமாள், நரசிம்மர், வைகுண்டநாதர், வேணு கோபாலர், கருடன் மீது அமர்ந்த பெருமாள், ராமரை தோளில் சுமந்த ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஊர்த்துவதாண்டவர், ஊர்த்துவகாளி, அகோர வீரபத்திரர், ரதி, மன்மதன், கார்த்தவீரியார்ஜூனன் உள்ளிட்ட தெய்வங்களின் சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. தூணில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களின் நுண்ணிய வேலைப்பாடுகள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும். சிற்பங்களில் தெரியும் நகத்தின் நுனி, தசைப்பிடிப்பு, நரம்பு ஓட்டம், இமைகள் என்று ஒவ்வொரு அங்கமும் சிற்பங்களில் மிக ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில் செதுக்கப்பட்டுள்ளன. சுருங்கச் சொன்னால் இந்த சிற்பங்கள் கல்லினால் செதுக்கப்பட்ட வையா அல்லது உயிரோட்டமுள்ள உருவங்களா என்று நம்மை வியப்பில் ஆழ்த்தும். இரண்டு இசைத் தூண்களையும் தட்டினால் ஏழு ஸ்வரங்கள் எதிரொலிக்கிறது.

Read More
கிருஷ்ணாபுரம் அபய ஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கிருஷ்ணாபுரம் அபய ஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில்

ஆறடி உயர திருமேனியுடன், கண்களில், ஒளிர் விடும் பிரகாசத்துடன் தோற்றமளிக்கும் ஆஞ்சநேயர்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ளது அபய ஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில். . இராமர் இத்தலத்தில் யாகம் செய்ததால், இத்தலத்தில் எங்கு தோண்டினாலும் வெண் சாம்பல் போன்ற திருமண் கிடைக்கிறது. இக்கோவிலில் தனிச் சன்னதியில் ஆறடி உயர திருமேனியுடன் அபய ஹஸ்த ஆஞ்சநேயர் மிக கம்பீரமாக எழுந்தருளி இருக்கிறார். அவரது திருப்பாதங்கள் பக்தர்களை நோக்கி ஆசிகள் வழங்க வருவது போல் உள்ளது. வலது திருக்கரம் 'அபய முத்திரை' காட்டி, பக்தர்களுக்கு பயத்தை போக்குகிறது. இடுப்பின் இடதுபுறத்தில் அவரது இடது திருக்கரம் பதிந்துள்ளது. மார்பினை மூன்று மணிமாலைகள் அலங்கரிக்கின்றன. அவற்றில் ஒன்றில் பதக்கம் உள்ளது. காதுகளை மணிகுண்டலங்களும், காதில் மேல்பகுதியில் அணிகலமும் அணிந்திருக்கிறார். அவரது வால் தலைக்கு மேல் சென்று, நுனி சற்றே வளைந்து, சிறிய மணியுடன் காணப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அவரது கண்களில், ஒளிர் விடும் பிரகாசம், தரிசிப்பவரை பரவசத்தில் ஆழ்த்தும்.

பிரார்த்தனை

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள குளத்தின் படியில் படிப்பாயாசம் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம்.

Read More
திருவண்ணாமலை  பூதநாராயணப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருவண்ணாமலை பூதநாராயணப் பெருமாள் கோவில்

பால பருவத்து கிருஷ்ணன், பூதாகரமாக பெரிய உருவத்துடன் காட்சியளிக்கும் அபூர்வ தோற்றம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் வடக்கு மாட வீதியில் அமைந்துள்ளது பூதநாராயணப் பெருமாள் கோவில். கருவறையில் எழுந்தருளி இருக்கும் பெருமாள் பால பருவத்து கிருஷ்ணராக இருந்தாலும், பூதனையிடம் பால் அருந்தியதால் பூதாகரமாக பெரிய உருவத்துடன் காட்சியளிக்கிறார். இடது காலை மடித்து வலது காலை குத்திட்டு அமர்ந்திருக்கிறார். வலது கையில் சங்கு மட்டும் உள்ளது. இடது கையை பக்தர்களுக்கு அருள் தரும் அபய முத்திரையாக வைத்திருப்பது தனிச்சிறப்பாகும்.

தல வரலாறு

வாசுதேவர், தேவகிக்கு எட்டாவது குழந்தையாக ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தார். அக்குழந்தையால் தனது உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்த கம்சன் அதனைக் கொல்லப் பல வழிகளில் முயற்சித்தான். பூதகி எனும் அரக்கியை அழைத்து, குழந்தையை கொல்லுமாறு கட்டளையிட்டான். அதன்படி சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்று பூதகி கிருஷ்ணனைத் தனியாக அழைத்துப் பாலூட்டினாள். வந்திருப்பது யாரென்பதை அறிந்து கொண்ட மாயக்கண்ணன் பூதகியின் விஷப்பாலை அருந்துவது போல் பாவித்து, அவளைக் கொன்றான். பின்பொரு சமயம் அரக்கியை வதஞ்செய்த கிருஷ்ணாவதாரக் கோலத்தைத் தனக்கு காட்டியருளுமாறு பிருகு முனிவர், திருமாலிடம் வேண்டினார். அவ்வேண்டுதளுக்குச் செவி சாய்த்து, திருமால் திருவண்ணாமலையில் பூதநாரயணப் பெருமாளாகக் காட்சியளித்து அர்ச்சாரூபமாய் எழுந்தருளினார். காலமாற்றத்தால் அப்பெருமாளை மணல் மூடிற்று. வெகு நாட்களுக்குப் பிறகு அப்பகுதியில் வாழ்ந்து வந்த ஒரு முனிவரின் கனவில் திருமால் தோன்றி, அருகில் உள்ள மணல் புற்றை முழுவதுமாக அகற்றுகையில், திருமாலின் அர்ச்சாரூபம் அங்கு உள்ளதைக் கண்டு, அதை கோவில் கட்டி பிரதிஷ்டை செய்து வணங்கி வரலாயினர்

பிரார்த்தனை

இந்த ஆலய இறைவனை வேண்டிக்கொண்டால், அறிவும், ஞானமும் கிடைக்கும். மேலும் குழந்தைகளுக்கு உள்ள தீராத நோய், கண் திருஷ்டி போன்றவை அகலும். குணமுள்ள குழந்தை பிறக்க, பிறந்த குழந்தைகள் அறிவுப்பூர்வமாக இருக்க இவருக்கு வெண்ணெய், கல்கண்டு படைத்து, துளசி மாலை அணிவித்து வழிபடுகிறார்கள்

Read More
வரகூர் வெங்கடேச பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

வரகூர் வெங்கடேச பெருமாள் கோவில்

துளசி, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், ஜாதிக்காய் மற்றும் கிராம்பு பொடிக் கலவை பிரசாதமாக தரப்படும் பெருமாள் கோவில்

தஞ்சையிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும், திருவையாற்றிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள வரகூர் என்னும் ஊரில் இருக்கின்றது வெங்கடேச பெருமாள் கோவில். ஒருகாலத்தில், பூபதிராஜபுரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் வரகூர் என்றானது. மூலவர் ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள். இடது மடியில் மகாலட்சுமித் தாயாரை அமர்த்திக்கொண்டு, காட்சி தருகிறார். உற்சவர் ஸ்ரீவெங்கடேசப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் காட்சி தருகிறார். துளசி, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், ஜாதிக்காய் மற்றும் கிராம்பு முதலான மூலிகைகளைக் கொண்டு இடித்துச் செய்த பொடியானது, பெருமாளின் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த மூலிகை பொடி பிரசாதமானது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்

வெண் பன்றியாக வந்து பக்தருக்கு தன் கோவிலை காட்டி அருளிய பெருமாள்

ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் நாராயண தீர்த்தர்(1650-1745). இசையிலும், நாட்டியத்திலும் பாண்டித்யம் பெற்றிருந்தார். ஸ்ரீமத் பாகவத்தை எல்லோருக்கும் போதித்து வந்தார். ஒருமுறை நாராயண தீர்த்தருக்கு தீராத வயிற்றுவலி வந்தது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கச் சென்றார். அங்கே, திருப்பதி தலத்தில், 'திருவையாறுக்கு அருகில் பூபதிராஜபுரத்துக்குச் செல்வாயாக. உன் வயிற்று வலி தீரும்' என அசரீரி கேட்டது. இதன் பின்னர், நடுக்காவிரி எனும் பகுதியை அடைந்தார். இனி எந்தப் பக்கம் செல்வது, எப்படிச் செல்வது என்று தெரியவில்லை அவருக்கு. கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என அங்கே மரத்தடியில் இளைப்பாறினார். சிறிது நேர இளைப்பாறலுக்குப் பின்னர், ஒரு அசரீரி கேட்டது. 'விடியும்போது வெண்பன்றி ஒன்று உனக்கு முன்னே வரும். வழிகாட்டும்' எனக் கேட்டது. அதன்படி மறுநாள். விடிந்தது. வெண்பன்றி வந்தது. அந்தப் பன்றி செல்லும் வழியில், பன்றியைப் பின் தொடர்ந்து பயணித்தார் நாராயண தீர்த்தர். ஒவ்வொரு கிராமமாகக் கடந்து வந்து, ஓரிடத்தில் பெருமாள் கோவிலுக்குள் சென்றது. அவரும் சென்றார். அங்கே அந்த வெண்பன்றி, சந்நிதிக்குள் சென்றது. மறைந்தது. அங்கே பெருமாள் தன் திருக்கோலத்தைக் காட்டியருளினார். நாராயண தீர்த்தரின் வயிற்று வலி காணாமல் போனது. சிலிர்த்துப் போன நாராயண தீர்த்தர், அங்கேயே, அந்தத் தலத்திலேயே தங்கினார். கிருஷ்ண பகவானின் லீலைகளை விவரிக்கும் வகையிலான 'ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி' எனும் இசையும் நாட்டியமும் கலந்த நாடகத்தை அரங்கேற்றினார்.

இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியின் போது நடைபெறும் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தம். அப்போது பத்துநாள் திருவிழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் பெருமாள் ஒவ்வொரு விதமான கோலத்தில் காட்சி தருவார். உறியடி உற்சவத் திருநாளன்று, வெண்ணெய்த்தாழிக் கோலத்தில் பவனி வருவார். கிருஷ்ண ஜயந்தி விழாவின் போது, சுவாமியின் மடியில் குழந்தை கிருஷ்ணரை கிடத்துவதும் பெருமாளையே, யசோதையாக அலங்கரிப்பதும் வேறு எந்தத் தலத்திலும் காணக் கிடைக்காத ஒன்று.

பிரார்த்தனை

தீராத வியாதியால் அவதிப்படுபவர்கள், எவ்வளவு மருந்து சாப்பிட்டும் குணமாகவில்லையே என்று வருந்துவோர், வரகூர் பெருமாளை வந்து தரிசித்துச் சென்றால், விரைவில் குணமாகிவிடுவார்கள். திருமண தடை உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் . இங்கே, பெருமாள் சந்நிதியில், வெள்ளிக்காப்பு வைத்து பிரார்த்தனை செய்துகொண்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Read More
தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில்

திருமணத் தடை நீக்கும் ரதி மன்மத பூஜை

திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில், 15 கி.மீ. தொலைவில் உள்ளது தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில். தாயாரின் திருநாமம் கல்யாண சௌந்தரவல்லி.

திருமண தடை நீக்கும் தலங்களில் மிகவும் சிறப்பான தனித்துவம் கொண்ட தலமாக தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோவில் திகழ்கிறது. இங்குள்ள தாயார் சன்னதி மண்டபத்தில், ரதி மன்மதன் சிலைகள் உள்ளன. திருமணத் தடை நீங்கி, மாங்கல்ய பாக்கியம் கிடைப்பதற்கு பிரதி வியாழக்கிழமைதோறும் ரதி மன்மதன் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜைக்கான சங்கல்பம், காலை முதல் நண்பகல் வரை, சூடிக் கொடுத்த சுடர் கொடியாளான ஆண்டாள் உற்சவர் திருமேனி முன் செய்யப்படுகிறது. ரதி, மன்மதன் ஆகிய இருவரின் கைகளிலும் ஐந்து விதமான மலர் கணைகள் உள்ளதால், தொடர்ந்து ஐந்து வியாழக்கிழமை பூஜையில் முழு சிரத்தையோடு பங்கேற்றால் திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. ஆண்கள் தங்களின் திருமண தடை நீங்குவதற்கு ரதி தேவிக்கும், பெண்கள் தங்களின் திருமண தடை நீங்குவதற்கு மன்மதனுக்கும் பூஜை செய்கிறார்கள்.

ஆண்களுக்கு ரதி பூஜை

திருமணமாகாத ஆண்கள் ரதிக்கு ஐந்து-வியாழக்கிழமைகள் தொடர்ந்து.முதலில் ரதியின் சிற்பத்தினைக் தண்ணீரால் கழுவி, பின்னர் மஞ்சளை குழைத்து சிற்பம் முழுவதும் பூசி குங்குமப் பொட்டு வைத்துப் பின்பு, ஒரு மலையைச் சிற்பத்தின் கழுத்திலும் மற்றொரு மாலையைக் கையில் போட்டும்,தேங்காய், பழம், சூடம், பத்தி வைத்து பூஜை செய்து, சிற்பத்தின் கையில் உள்ள மாலையை பூஜை செய்பவர் தன் கழுத்தில்போட்டுக் கொண்டு, பெருமாள் சன்னதியில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து, வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் ஆகும் . அடுத்து வரும் வாரங்களில் ஒரு மாலை கொண்டு சென்றால் போதும்.

பெண்களுக்கு மன்மதன் பூஜை

திருமணம் தாமதமாகும் பெண்கள் மன்மதனுக்கு மேற்கண்ட பூஜையை செய்ய வேண்டும். திருமணமாகத கன்னி பெண்கள் மன்மதனுக்கு ஐந்து வியாழக்கிழமைகள் தொடர்ந்து, முதலில் தண்ணீரால் சிற்பத்தினைக் கழுவி, பின்னர் மஞ்சளைக் குழைத்து சிற்பம் முழுவதும் பூசி, குங்குமப் பொட்டு வைத்துப் பின்பு, ஒரு மாலையைச் சிற்பத்தின் கழுத்திலும் மற்றொரு மாலையைக் கையில் போட்டும்,தேங்காய், பழம், சூடம், பத்தி வைத்து பூஜை செய்து, சிற்பத்தின் கையில் உள்ள மாலையை பூஜை செய்பவர் தன் கழுத்தில்போட்டுக் கொண்டு, பெருமாள் சன்னதியில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து, வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் ஆகும்.

திருமணமானவுடன் புதுமணத் தம்பதியர் வந்து பெருமாளை வணங்க வேண்டும். இக்கோவிலில் நடைபெறும் திருமண தடை நீக்கும் ரதி, மன்மதன் பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது. பல வெளி ஊர்களில் இருந்தும் திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் வந்து இந்த பூஜையில் கலந்து கொள்கிறார்கள்.

Read More
திண்டுக்கல் அபயவரத ஆஞ்சநேயர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திண்டுக்கல் அபயவரத ஆஞ்சநேயர் கோவில்

மார்பில் சிவலிங்கமும், கால்களில் பாதரட்சையும், இடுப்பில் கத்தியும் கொண்டு காட்சி தரும் அபூர்வ ஆஞ்சநேயர்

திண்டுக்கல் நகரில், மலைக்கோட்டையின் ஒரு பகுதியாக, 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அபயவரத ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. மூலவர் அபயவரத ஆஞ்சநேயரின் இதயப் பகுதியில் சிவலிங்கம் செதுக்கப்பட்டுள்ளது. கால்களில் பாதரட்சை அணிந்து, இடுப்பில் கத்தி செருகிக் கொண்டு போர்க்கோலத்தில் இவர் காட்சியளிக்கிறார்.

முற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சிற்றரசன் ஒருவன் ஆஞ்சநேயரின் பக்தனாக இருந்தான். போருக்குச் செல்லும் போது இந்த ஆஞ்சநேயரை வழிபட்டு அவர் செல்வார். அவருக்கு இங்கு ஆஞ்சநேயர் கோயில் கட்ட வேண்டும் என்கிற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. ஆனால் கோயில் கட்டுவதற்கான சரியான இடம் எது என்பது தெரியாமல் தவித்தார். அந்த மன்னரின் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர் இந்த மலைக் கோட்டையை பகுதியை சுட்டிக் காண்பித்து, அங்கு தனக்கு கோயில் கட்டுமாறு கூற, அதன்படி மன்னன் இங்கு கோயில் கட்டி ஆஞ்சநேயருக்கு சிலை வடித்து, இங்கே பிரதிஷ்டை செய்தார்.

ராமாவதாரத்தின் போது, விஷ்ணுவின் அவதாரமான ராமருக்கு சிவபெருமானே ஆஞ்சநேயர் உருவில் அவதரித்து, சேவை செய்தார். இதை உணர்த்தும் விதமாக இங்கிருக்கும் ஆஞ்சநேயர் சிலையின் இதயப் பகுதியில் சிவலிங்கம் செதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆஞ்சநேயர் வழிபாட்டிற்குரிய சிறந்த தினமாக சனிக்கிழமை கருதப்படுகிறது. ஆனால் இங்கிருக்கும் ஆஞ்சநேயர் சிவபெருமானின் அம்சம் என்பதால் வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். தட்சணாமூர்த்தி சிவபெருமானின் ஒரு வடிவம் என்பதாலும் இத்தகைய வழிபாடு செய்யப்படுகிறது.

கிரக தோஷ நிவர்த்திக்காக இளநீர் கட்டி வழிபாடு

தை அமாவாசையன்று சுவாமிக்கு செந்தூரக்காப்பு செய்யப்பட்டு, விசேஷ பூஜை செய்யப்படுகிறது. பல ஆஞ்சநேயர் கோயில்களில் மட்டைத் தேங்காய் கட்டி வழிபாடு செய்யும் முறை இருக்கிறது. இங்கே ஜாதகத்தில் கிரக தோஷ நிவர்த்திக்காக, இளநீர் கட்டி வேண்டும் முறை கடைபிடிக்கப்படுகிறது. இளநீரின் மேற் பகுதியில் ஜாதகரின் பெயர், நட்சத்திரம் மற்றும் ராசியை குறிப்பிட்டு அர்ச்சகரிடம் கொடுத்து விடுகின்றனர். அர்ச்சகர் அந்த இளநீரை அபயவரத ஆஞ்சநேயரின் வாலில் கட்டி விடுகிறார். ஆஞ்சநேயருக்கு வாலில் வலிமை அதிகம். தனது தாயாக கருதும் சீதைக்கு துன்பம் விளைவித்த ஒரு ஊரையே ஆஞ்சநேயர் எரித்தது போல், நமக்கு ஏற்படும் கிரக தோஷங்களையும் தனது வாலால் பொசுக்கி விடுவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.

Read More
சிந்துப்பட்டி வேங்கடேச பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

சிந்துப்பட்டி வேங்கடேச பெருமாள் கோவில்

துளசி, தீர்த்தம் ஆகியவற்றோடு விபூதியும் பிரசாதமாக தரப்படும் பெருமாள் தலம்

திருமங்கலம்- உசிலம்பட்டி சாலையில், 18 கி.மீ. தொலைவில் உள்ள சிந்துப்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது வேங்கடேச பெருமாள் கோவில். 1000 ஆண்டுகள் பழமையானது. இந்தக் கோவிலில் மூலவர் ஸ்ரீவேங்கடாசலபதி. தாயார் அலர்மேல் மங்கை. திருப்பதியில் உள்ளது போன்ற அமைப்புடன் இக்கோவில் விளங்கினாலும்,. பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவி என உபயநாச்சிமாரோடு காட்சி தருகிறார். இக்கோவிலில் துளசியும், தீர்த்தமும் பிரசாதமாக கொடுப்பதோடு விபூதியும் பிரசாதமாக தருவது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.

வெங்கடேச பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளிய வரலாறு

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு, கிருஷ்ணதேவராயரின் மறைவுக்குப் பிறகு, திருப்பதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சந்திரகிரிக் கோட்டை பகுதி,சுல்தான்கள் வசமானது. அப்பகுதி மக்கள் சுல்தான்களால், பல்வேறு கொடுமைகளை அனுபவித்தனர். பெண்களை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து, அந்தப்புரத்தில் தள்ளினார்கள். சுல்தான்களின் அந்தப்புரத்தில் அவதியுறுவதை விரும்பாத சில குடும்பங்கள், இரவோடு இரவாக நாட்டை விட்டுக் கிளம்பி தெற்கு நோக்கிச் சென்றன. அப்போது, தாங்கள் பூஜித்து வந்த வேங்கடாசலபதி பெருமான், ஸ்ரீதேவி- பூதேவி விக்கிரகங்களையும் தங்களுடன் எடுத்துச் சென்றனர். வைகை ஆற்றையும் தாண்டி தொலைவுக்குச் சென்றுவிட வேண்டும் என்பது அவர்கள் எண்ணம். வழியில், ஒரு கிராமத்தில் அன்று இரவு தங்க நேர்ந்தது. தாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களை ஓர் இடத்தில் வைத்தனர்.

பொழுது விடிந்ததும், பெருமாள் உற்சவ விக்கிரகங்களை வைத்திருந்த பெட்டிகளை தூக்க முயன்றனர். ஆனால், அந்தப் பெட்டிகளை கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல், பெட்டிகளை அங்கேயே வைத்துவிட்டு அங்கேயே தங்கினர். அன்று இரவு, அந்தக் குழுவிலிருந்த பெரியவர் ஒருவரின் கனவில் பெருமாள் காட்சி தந்தார். ''நீங்கள் யாரும் பயம் கொள்ள வேண்டாம். இந்தப் பகுதி மக்கள் உங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள். நான் உங்களைக் காப்பேன். நாளை காலை பெட்டியிலிருந்து ஓர் அங்கவஸ்திரத்தை கருடன் தூக்கிச் சென்று கண்மாய்க்குக் கீழ்ப்புறத்தில் உள்ள ஒரு புளிய மரத்தில் போட்டுவிட்டு, மூன்று முறை குரல் எழுப்பிச் செல்லும். அந்த இடத்தில் என் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்புங்கள்' என்று சொல்லி மறைந்தார். பெரியவர், தனது கனவு பற்றி அருகில் இருந்தவர்களிடம் சொல்ல, எல்லோரும் பெருமாளின் திருவருளை வியந்து போற்றி விடியலுக்காகக் காத்திருந்தனர்.

மறுநாள் காலையில், கனவில் பெருமாள் சொன்னது போல், வானத்தில் வட்ட மிட்ட கருடன், பெட்டியில் இருந்த அங்கவஸ்திரத்தைத் தூக்கிச் சென்று, சற்று தொலைவில் இருந்த புளிய மரத்தில் போட்டது. அந்த இடத்திலேயே விக்கிரகத்தை வைத்து, தேவியர் சகிதராக பெருமாள் மூலவரையும் பிரதிஷ்டை செய்து, கோவிலும் எழுப்பினர். புளியம்பழத்தை தெலுங்கில் சித்தப்பண்டு என்பர். புளிய மரத்தின் அருகே கோவில் அமைந்ததாலும், அங்கவஸ்திரம் புளியமரத்தில் விழுந்து இடத்தைக் காட்டிக் கொடுத்ததாலும், அந்த இடத்தை சித்தப்பண்டூர் என்றார்களாம். அதுவே பின்னாளில் சிந்துப்பட்டி என்றானது. மேலும், இங்குள்ளோர் பெருமாள் மீது சிந்துப் பாடல்கள் நிறைய பாடியிருக் கிறார்களாம். அதனாலும் சிந்துப்பட்டி என்று பெயர் வந்திருக்கலாம் என்கிறார்கள்.

கொடிமரமும் விபூதி பிரசாதமும்

கோவில் கொடிமரம் சற்று வித்தியாசமாக அமைந்துள்ளது. பொதுவாக பெருமாள் கோவில்களில், கருடக் கொடியுடனும், கொடி மர உச்சியில் கூப்பிய கரங்களுடன் கருடன் இருப்பது போலும்தான் கொடிமரம் இருக்கும். ஆனால் இங்கே, கொடிமரத்தில் கருப்பண்ணசாமி ஆவாகனம் செய்யப்பட்டுள்ளார். அதனால், இந்தக் கொடிமரத்தின் கீழே விபூதி பிரசாதம்தான் கொடுக்கப்படுகிறது. பக்தர்கள் இந்தக் கொடிமரத்துக்கு திருமஞ்சனம் செய்விப்பதாக வேண்டிக் கொண்டு, தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறப் பெறுகிறார்கள். இதற்கு 'கம்பம் கழுவுதல்' என்று பெயர். விளக்கெண்ணெய் மற்றும் தயிர் கலந்து, கொடிமரத்தின் மேல் உச்சியில் இருந்து தடவி, அதற்கு திருமஞ்சனம் நடக்கிறது. பிறகு, கொடி மரத்துக்கு மிகப் பெரிய வஸ்திரம் சார்த்தி, விபூதி அர்ச்சனை செய்யப்படுகிறது. அதுவே பிரசாதமாக வழங்கப்படுகிறது.

பிரார்த்தனை

திருப்பதி வேங்கடாசலபதிக்கு நேர்ச்சை செய்வதாக வேண்டிக் கொள்பவர்கள், ஏதாவது அசௌகரியத்தால் திருப்பதி செல்ல முடியாமல் போனால், அதை இங்கே நிறைவேற்றிக் கொள்ளலாம். பெருமாளும் திருப்பதி பகுதியில் இருந்து வந்தவர் என்பதால், இந்தத் தலம் தென்திருப்பதி என்றே போற்றப்படுகிறது. பெருமாளை அங்கப் பிரதட்சிணம் செய்து, இந்திரன் சாப விமோசனம் பெற்றதால், இங்கே அங்கப்பிரதட்சிணம் செய்து, தங்கள் பாவங்கள் நீங்க பிரார்த்திக்கிறார்கள் பக்தர்கள். கம்பத்துக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால், குழந்தைப் பேறு உண்டாகும்; தடைபெற்ற திருமணம் நடந்தேறும்; தொலைந்துபோன பொருள்கள் உடனே கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு. புதுமணத் தம்பதியர், அந்த வருடத்தில் வரும் விஜயதசமித் திருநாளில் இங்கே வந்து, நோன்பு எடுத்து, அர்ச்சனை செய்து, பெருமாள்,தாயாரை வழிபட்டு செல்கிறார்கள். இதை மகர் நோன்பு என்கிறார்கள். இந்தப் பழக்கம் இப்போதும் பரம்பரையாக இந்தப் பகுதிகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.

Read More
கந்தர்வகோட்டை கோதண்டராமர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கந்தர்வகோட்டை கோதண்டராமர் கோவில்

சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் மூன்று தினங்கள் ராமபிரானை வழிபடும் அபூர்வ காட்சி

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வ கோட்டை எனும் ஊரில் அமைந்துள்ளது கோதண்டராமர் கோவில். 1000 ஆண்டுகள் பழமையானது. பல சிவாலயங்களை கட்டிய கண்டராதித்த சோழ மன்னன், ராமாயண நாம கீர்த்தனை கேட்டு, அதனால் ராமபிரான் மேல் பக்திக் கொண்டு கட்டிய கோயில் இது.

கருவறையில் ஸ்ரீ கோதண்ட ராமர் சீதா தேவி, லட்சுமணர் சமேதராக காட்சியளிக்கிறார். சில கோவில்களில் சூரிய பகவான் வருடத்தின் ஒரு சில நாட்களில் மட்டும் கோவில் மூலவரை வழிபடுவது போல் அமைத்திருப்பார்கள். ஆனால் இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும் வரும் 21, 22, 23 ஆகிய தேதிகளில் காலையில் சூரியனின் ஒளி கோதண்ட ராமரின் காலை தொட்டு செல்கிற செல்கிற முறையில் சோழர்கள் காட்டியுள்ளது, இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

பிரார்த்தனை

இந்த ராமரை தரிசித்தாலே நமது பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இக்கோவிலில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றி வழிபட்டால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். இங்குள்ள ஆஞ்சநேயருக்கு தொடர்ந்து 11 சனிக்கிழமைகள் நெய்விளக்கேற்றி, திருமஞ்சனம் செய்து தயிர் சாதம் அல்லது வடைமாலை சாற்றி வழிபடுவதால் அனைத்து தோஷங்களும் நீங்கும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கி, வாழ்வில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்.

Read More
தாடிக்கொம்பு  சௌந்தரராஜ பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில்

சகல செல்வங்களையும் தந்தருளும் சொர்ண ஆகர்ஷண பைரவர்

திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில், சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில். தாயாரின் திருநாமம் கல்யாண சௌந்தரவல்லி.

அஷ்ட பைரவர்களில், சொர்ண ஆகர்ஷண பைரவரும் ஒருவர். இந்தக் கோவிலில், சிவப்பெருமானின் ஒரு அவதாரமாக இருப்பவர் பைரவர். பெரும்பாலும் வைணவ திருத்தலங்களில் பைரவர் எழுந்தருள்வது கிடையாது. ஆனால் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வடகிழக்கு மூலையில் பெருமாளின் பொக்கிஷ காவலராகவும், சேத்திர பாலகராகவும் சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்றால் பொன்னை இழுத்து தருபவர் என்று பொருளாகும். இவரை வணங்கினால், நமக்குச் செல்வங்களைத் தந்தருள்வார். நமது பொருளாதாரப் பிரச்னைகள் யாவும் நீங்கி, வீட்டில் சகல செல்வங்களும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்திலும், ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலையில் ராகு கால நேரத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு வழிபடுவதன் மூலம் வராக்கடன்கள் வரப்பெறுவதுடன், இழந்த சொத்துகள் மீளபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடைபெறும் பூஜையில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் திரளாக வந்து வழிபாடு செய்கின்றனர். அந்த நாளில் பால், இளநீர், பன்னீர், பச்சரிசி மாவு, தேன் ஆகியவற்றால் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு அபிஷேகங்கள் செய்து, செவ்வரளி மாலை சார்த்தி, சிவப்பு வஸ்திரம் அணிவித்து வழிபட்டால், சனிக் கிரக தோஷத்தில் இருந்து விடுபடலாம்; தொல்லைகள் நீங்கி, வாழ்வில் முன்னேறலாம். தேய்பிறை அஷ்டமி நாளில், பைரவருக்கு ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. அப்போது ஆயிரம் லிட்டர் அளவில் பாலபிஷேகம் சிறப்புற நடைபெறும். அந்த நாளில், தீபமேற்றி அவரை வழிபட்டால், சொத்துப் பிரச்னைகளில் சாதகமான தீர்வு கிடைக்கும்.

Read More
நாகர்கோவில் நாகராஜ கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

நாகர்கோவில் நாகராஜ கோவில்

பாம்பையே மூலவராக கொண்ட அபூர்வ கோவில்

நிறம் மாறும் கருவறை மண் பிரசாதம்

பாம்பையே மூலவராக கொண்ட ஒரே கோயில் நாகர்கோவில் நாகராஜ கோவில் தான். இந்த ஊருக்கு நாகர்கோவில் என்று பெயர் வர காரணமாக அமைந்தது இந்த கோவில் தான். இங்கே கருவறையில் நாகமே மூலவராக உள்ளது. இக்கோவிலில் புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கருவறையில் நாகராஜா இருக்கும் இடம் மணல் திட்டாக உள்ளது. மேலும் வயல் இருந்த இடம் என்பதால் எப்போதும் இவ்விடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. இந்த நீருடன் சேர்ந்த மணலையே, கோவில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த மண் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் மாறிக் கொண்டே இருப்பது அதிசயிக்கத்தக்க ஒன்றாகும்.

முற்காலத்தில் இந்தப் பகுதி வயல்கள் சூழ்ந்த பகுதியாக இருந்தது. வயலில் அரிவாளை வைத்து நெற்கதிர்களை அறுத்துக்கொண்டிருந்த ஒரு பெண், ஒரு நெற்கதிரை அறுக்கும்போது அதிலிருந்து ரத்தம் வந்தது. இதைக் கண்டு பதறிய அப்பெண் இதுகுறித்து அருகிலிருந்தவர்களிடம் கூற அவர்கள் ரத்தம் வந்த இடத்தை பார்த்தபோது அங்கு ஒரு பாறையின் மேல் ஐந்து தலையுடன் கூடிய நாகர் உருவம் இருந்தது. அந்த நாகர் சிலையின் மேற்பகுதியிலிருந்துதான் ரத்தம் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து அந்த நாகர் சிலைக்குப் பொதுமக்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டதும் ரத்தம் வருவது நின்றுவிட்டது. பின்னர் அப்பகுதி மக்கள் நாகர் சிலைக்கு ஓலையால் வேய்ந்த குடிசை அமைத்து, நாகர் சிலையை வைத்து வழிபட்டு வந்தனர். இன்றும் கருவறை மட்டும், அமைக்கப்படுகின்றது. நாகங்கள் வசிப்பதற்கேற்ப ஓலைக் கூரையாலேயே அமைக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதத்தில் இந்த கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்களே ஓலைக்கூரையைப் பிரித்து மீண்டும் புதிய கூரை வேய்கின்றனர்.இந்த கோயிலை நாகங்களே பாதுகாக்கின்றன.

ஆமை உருவம் இருக்கும் வித்தியாசமான கொடிமரம்

இக்கோவிலின் மூலவர் நாகராஜா என்றாலும் அனந்தகிருஷ்ணன் சன்னதி எதிரில் தான் கொடிமரம் உள்ளது. பொதுவாக பெருமாள் கோவில்களில் கொடி மரத்தின் உச்சியில் கருடன் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு ஆமை உள்ளது. பாம்பும், கருடனும் பகைவர்கள் என்பதால், இத்தல பெருமாள் சன்னிதியின் கொடி மரத்தில் ஆமை இருப்பதாக ஐதீகம் கூறப்படுகிறது. விழாக்களில் வாகனமாகவும் ஆமையே இருக்கிறது.

வழிபாட்டின் சிறப்பு

நாகராஜா கோவிலில் ஆயில்ய நட்சத்திர தினத்தன்று வழிபாடு செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. எல்லா மாதமும் ஆயில்ய நாளில் விசேஷ பூஜைகள் நடக்கிறது. ஆயில்ய நட்சத்திர தினத்தன்று முறைப்படி வழிபாடு செய்தால் எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் தீரும் என்பது நம்பிக்கை. பொதுவாக செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்கள் நாக வழிபாட்டிற்கு ஏற்றது. ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை வழிபாடு, மேலும் சிறப்பு பெற்றது. ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து, வழிபட்டு செல்கிறார்கள். ஆவணி ஞாயிறு விரதமிருந்து புற்றுக்கு பால் ஊற்றி வழிபட்டால் நாகதோஷம் நீங்கும், சருமவியாதிகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஜாதகத்தில் இருக்கும் நாகதோஷம் இங்கு வழிபடுவதன் மூலமாக தோஷம் நீங்குகிறது என்பது ஐதீகம்.

Read More
பாப்பாரப்பட்டி அபீஷ்ட வரதராஜர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

பாப்பாரப்பட்டி அபீஷ்ட வரதராஜர் கோவில்

பெண் வடிவில் நவக்கிரகங்கள் இருக்கும் அபூர்வ காட்சி

தருமபுரியில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள பாப்பாரப்பட்டி எனும் ஊரில் அமைந்துள்ளது அபீஷ்ட வரதராஜர் கோவில். இக்கோவில் 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. பொதுவாக நவக்கிரகங்கள் சிவாலயங்களில் மட்டுமே எழுந்தருளி இருப்பார்கள். பெருமாள் கோவில்களில் அவர்களை நாம் தரிசிக்க முடியாது. ஆனால் இந்தப் பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் எழுந்தருளி இருப்பது சிறப்பாகும். அதோடு அந்த நவக்கிரகங்கள் பெண் வடிவில் காட்சி தருவதும் ஆச்சரியமான ஒன்றாகும்.. வேறு எந்த தலத்திலும் நாம் பெண் வடிவிலான நவக்கிரகங்களை தரிசிக்க முடியாது.

Read More