காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில்

வலது கரத்தில் ஒரு விரலையும், இடது கரத்தில் இரண்டு விரல்களையும் உயர்த்தி அபூர்வ கோலத்தில் காட்சி தரும் பெருமாள்

108 வைணவ திவ்ய தேசங்களில், காஞ்சிபுரம் திருஊரகம் உலகளந்த பெருமாள் கோவில் 50-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. மூலவரின் திருநாமம் உலகளந்த பெருமாள், திரிவிக்கிரமப் பெருமாள். தாயாரின் திருநாமம் அமுதவல்லி நாச்சியார், ஆரணவல்லி, அம்ருதவல்லி.

கருவறையில் உலகளந்த பெருமாள், 35 அடி உயரமும் 24 அடி அகலமும் கொண்டு, நெடிய திருமேனியுடன் தனது வலது காலை தரையில் ஊன்றி, இடதுகாலை விண்ணோக்கி தூக்கியும், வலது கரத்தில் ஒரு விரலை உயர்த்தியும், இடது கரத்தில் இரண்டு விரல்களை உயர்த்தியும், மேற்கு நோக்கி திரிவிக்கிரம வடிவத்தில் காட்சியளிக்கிறார். இப்படி நெடிதுயர்ந்த திருமேனி கொண்டு, இரு கைகளிலும் விரல்களை உயர்த்திய நிலையில் காட்சி தரும் பெருமாளை நாம் வேறு எங்கும் தரிசிக்க முடியாது. பெருமாளின் இத்தகைய கோலத்திற்கு பின்னணியில் ஒரு வரலாறு உண்டு.

பிரகலாதனின் பேரனும், அசுரர்களின் அரசனுமான மகாபலி, தேவலோக பதவி அடைய வேண்டும் என்பதற்காக யாகம் ஒன்றை நடத்தினான். அப்போது பெருமாள், வாமன ரூபத்தில் வந்து அவனிடம் மூன்றடி நிலம் கேட்டார் .

மகாபலியும் இதற்கு உடன்பட்டு தேவையான அளவு இடத்தை எடுத்துக் கொள்ளக் கூறினான். உடனே திருமால், திரிவிக்கிரம வடிவம் எடுத்து, வானத்திற்கும் பூமிக்கும் வளர்ந்து நின்று, தன்னுடைய ஒரு திருவடியால் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்தார். இத்தலத்தில் பெருமாள் தனது இடது கரத்தில் இரண்டு விரல்களை உயர்த்தி காட்டுவது, பூலோகத்தையும், விண்ணுலகையும் அளந்ததை சுட்டிக் காட்டுவதாகவும், வலது கையில் ஒரு விரலை உயர்த்தி இருப்பது மூன்றாவது அடிக்கு எங்கே தனது திருவடியை வைக்க வேண்டும் என்பது போல் அமைந்துள்ளது.

மூன்றாவது அடிக்கு இடமில்லை என மகாபலியிடம் வாமனர் கூற, அதற்கு மகாபலி அடியேனின் சிரசு இருக்கிறது என்று கூறி தனது தலையைக் கொடுத்தான். திரிவிக்கிரமர் தன் பாதத்தை மகாபலியின் தலையில் வைத்து அழுத்தி அவனை பாதாள லோகத்தில் கொண்டு சேர்த்தார். மீண்டும் மூன்று லோகத்தையும் இந்திரனிடம் இருக்குமாறு செய்தார்.

அப்போது மகாபலி, பகவான் திருக்கோலத்தை முழுமையாகக் காண இயலவில்லை என்றெண்ணி பாதாள உலகத்தில் பெருமாளை நோக்கித் தவம் செய்தான். தவத்துக்கு மகிழ்ந்த பெருமாள், இந்தத் தலத்திலேயே மகாபலிக்கு, உலகளந்த திருக்கோலத்தை மறுபடியும் காட்சியாகத் தந்தார்.

திரு ஊரகத்தான்

மகாபலியோ நிரந்தரமாக, தான் அந்த உருவை தரிசித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று பேராவல் கொண்டதால், பாதாள உலகத்து ஜீவன்களில் ஒன்றான ஐந்து தலை நாகமாக காட்சி தந்தார் திருமால். இந்த நாகத் தோற்றத்தைத் தான் இந்த கோவில் வளாகத்தில், திரு ஊரகத்தானாக (திவ்ய தேசப் பெருமாளாக) தரிசிக்கிறோம்.

தெற்கு நோக்கி காட்சிதரும் திரு ஊரகத்தானுக்கு பால் பாயசம் நிவேதித்தால் திருமணத் தடை நீங்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும், ராகு கேது தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

இக்கோவிலின் பிரகாரத்திலேயே நீரகம், காரகம், கார்வானம் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இப்படி ஒரே இடத்தில் 4 திவ்ய தேச பெருமாளைக் காணலாம். இது மிகவும் சிறப்பான ஒன்றாகும். வேறு எங்கும் இதைப்போல் ஒரே கோவிலில் 4 திவ்ய தேசங்களைக் காண முடியாது.

 
Previous
Previous

அந்தியூர் செல்லீஸ்வரர் கோவில்

Next
Next

செட்டிகுளம் ஏகாம்பரேசுவரர் கோவில்