திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில்

திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில்

தினமும் பகலில் ஐந்து முறை நிறம் மாறும் அதிசய சிவலிங்கம்

தஞ்சாவூர்-கும்பகோணம் செல்லும் வழியில் பாபநாசத்திற்கு கிழக்கில் 3 கிலோமீட்டர் தூரத்தில் தேவாரப் பாடல் பெற்ற திருநல்லூர் என்னும் தலம் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் கல்யாணசுந்தரேஸ்வரர், பஞ்சவர்ணேஸ்வரர். இறைவி கல்யாணசுந்தரி, திரிபுர சுந்தரி.

இத்தலத்து இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர்,தன் லிங்கத் திருமேனியின் நிறத்தை தினமும் பகல் பொழுதில், 5 முறை மாற்றி காட்சி தருகிறார். லிங்கத் திருமேனியின் நிறம் ஆறு நாழிகைக்கு(144 நிமிடம்) ஒரு முறை மாறுகிறது.முதல் ஆறு நாழிகையில் தாமிர நிறம், அடுத்த 6-12 நாழிகையில் இளம் சிவப்பு, அடுத்த 12-18 நாழிகையில் தங்கம், அடுத்த 18-24 நாழிகையில் நவரத்தின பச்சை, அடுத்த 24-30 நாழிகையில் இன்ன நிறமென்று கூற இயலாத தோற்றத்தில் நிறம் மாறி, மாறி பஞ்சவர்ணமாக காட்சி தருகிறார். இந்த அதிசய சம்பவம் இன்றும் கோவிலில் நடந்து வருகிறது.

சிவபெருமானின் சடாரி சாற்றப்படும் ஆபூர்வ நடைமுறை

பெருமாள் கோவில்களில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு திருமாலின் திருவடியை நினைவுகூரும் விதத்தில்(சடாரி) தலையில் சூட்டுவது வழக்கம். சிவாலயங்களில் இந்த வழக்கம் இல்லை. இருப்பினும் நல்லூரில் சிவபெருமானின் திருவடி பதிக்கப்பெற்ற சடாரியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சூட்டும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.

திருநல்லூா் கோவில் குளத்தின் தனிச் சிறப்பு

சிவபெருமான் வசிக்கும் கயிலை மலைக்கு சமமாக இந்த கோவில் விளங்குகிறது. இதை விளக்கும் வகையில் வடபாற் கயிலையும், தென்பால் நல்லூரும் தம் வாழ்பதியே' என்று திருநாவுக்கரசர் தன் பாடலில் குறிப்பிட்டுள்ளார். கும்பகோணம் மகாமக குளத்துக்கு இணையாக திருநல்லூா் கல்யாண சுந்தரர் கோவிலில் உள்ள சப்தசாகரம் என்ற குளம் மிகவும் சிறப்புடன் விளங்குகிறது. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் இந்த தீர்த்தம் சிறப்பு பெற்று விளங்குவதை, 'மகம் பிறந்தது நல்லூரில், மகாமகம் பிறந்தது கும்பகோணத்தில்' என்ற பழமொழி உணர்த்துகிறது.

Read More
தேப்பெருமாநல்லூர் விசுவநாத சுவாமி கோவில்

தேப்பெருமாநல்லூர் விசுவநாத சுவாமி கோவில்

பழைய சோற்றை நிவேதனமாக ஏற்றுக் கொள்ளும் அன்னதான தட்சிணாமூர்த்தி

கும்பகோணத்திற்கு அருகே, சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலம் தேப்பெருமாநல்லூர். இறைவன் திருநாமம் விசுவநாத சுவாமி. இறைவியின் திருநாமம் வேதாந்த நாயகி. யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர்கள்தான் இக்கோவிலுக்கு வரமுடியும்; சுவாமியைத் தரிசிக்க முடியும் என்பது நம்பிக்கை.

இக்கோவிலின் தெற்குப் பகுதியில் உள்ள சந்நிதியில் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். இவர் காலடியில் முனிவர்கள் இல்லை. அதற்கு பதில் நாகம் ஒன்று படம் எடுத்திருக்கும் காட்சியை தரிசிக்கலாம். இவரை அன்னதான தட்சிணாமூர்த்தி என்பர். இவரை தரிசித்தால் சாபங்கள் நீங்கும்; கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க லாம். இவருக்கு பழைய சோறு (அதாவது முதல் நாள் சமைத்து இரவு தண்ணீர் ஊற்றிய அன்னம்) நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. இவரை மனதார வழிபட்டால் பசித்த நேரத்தில் உணவு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

1. நந்தியெம்பெருமான் வலதுக்காது மடங்கி இருக்கும் அபூர்வத் தோற்றம்

https://www.alayathuligal.com/blog/8b87el97d7m4g5rnrjpx7l82wtsxy2

2. சிவபெருமானுக்கு ருத்ராட்ச மணி கவசம் சாத்தப்படும் தலம்

https://www.alayathuligal.com/blog/lc5e8xag9et35fe4jwj8llpwtt9f85

Read More
வைத்தீஸ்வரன் கோவில்

வைத்தீஸ்வரன் கோவில்

செவ்வாய் தோஷம் நீக்கும் பரிகாரத் தலம்

சிதம்பரத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள தேவாரத் தலம் வைத்தீஸ்வரன் கோயில். இறைவன் திருநாமம் வைத்தீஸ்வரன். இறைவியின் திருநாமம் தையல்நாயகி. வைத்தீசுவரன் என்பது தமிழில் மருத்துவக் கடவுள் என்ற பொருளை உணர்த்துவது ஆகும். இக்கடவுளை வழிபடுவோர் நோய்நொடி நீங்கி வாழ்வர் என்பது ஐதீகம்.

பொதுவாக, சிவாலயங்களில் சிவ சன்னதிக்கு முன் இடது பக்கமாக நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இக்கோயிலில் நவக்கிரகங்கள் நேர்க்கோட்டில் வக்கிரமில்லாமல், வரிசையாக ஈஸ்வரன் சன்னதிக்கு பின்புறம் தத்தம் நோய் தீர ஒரே வரிசையில் நேர்க்கோட்டில் நின்று வேண்டி பிரார்த்தித்திருக்கும் காட்சியைக் காணலாம். முன்னொரு காலத்தில் அங்காரகனுக்கு வெண்குஷ்ட நோய் வந்தது. அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது. வைத்தீசுவரன் கோயில் சென்று ஒரு மண்டலம் சித்தாமிர்த குளத்தில் குளித்து விட்டு வைத்தியநாத சுவாமியை வணங்கினால் ரோகம் குணமாகிவிடும் என்று கேட்டது. இதை அடுத்து அங்காரகனும் இங்கு வந்து வழிபட்டு நோய் குணமானது. இந்த வைத்தியத்துக்கு சுவாமி மருந்து தயார் செய்த போது பார்வதி தைல பாத்திரம் கொண்டு வந்ததால் அம்பாளுக்கு தைலநாயகி என்று பெயர் வந்தது.அங்காரகனின் வெண்குஷ்டநோயைத் தீர்த்தபடியால் அங்காரகத் தலமாயிற்று. அங்காரகன் இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். குஷ்ட நோயினால் அவதியுற்ற அங்காரகனுக்கு சிவ பெருமான் வைத்தியராக வந்திருந்து, நோய் நீக்கிய தலம் என்பதால் இக்கோயில் வைத்தீஸ்வரன் கோயில் என்றாயிற்று.

செவ்வாய் தோஷமுள்ளவர்கள், செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து தரிசித்தாலே தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும் என்பது ஐதீகம். அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்து, துவரை அன்னம் நைவேத்தியம் செய்து வழிபடுவது இன்னும் வளமும் பலமும் தந்தருளும். இதனால் தோஷம் நீங்கும். குறிப்பாக, செவ்வாய் தோஷம் நீங்கும். திருமணத் தடைகள் அகலும். கல்யாண வரம் கைகூடி வரும்.

வரம் தரும் அங்காரக ஸ்தோத்திரம் :

பூமிபுத்ரோ மஹாதேஜா ஜகதாம் பயக்ருத்ஸதா

வ்ருஷ்டிக்ருத் வ்ருஷ்டி ஹாதாச பீடாம் ஹரதுமே குஜ;

இதை, தினமும் சொல்லி வந்தாலே தோஷங்கள் விலகிவிடும். செவ்வாய் பகவானின் பலத்தையும் அருளையும் பெற்றுவிடலாம். முக்கியமாக, செவ்வாய்க்கிழமைகளில் அங்காரகனை, முருகப்பெருமானை வழிபட்டு வந்தால், விரைவில் கல்யாண வரன் தேடி வரும்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

 1. முருகப்பெருமானும் யானையும் விளையாடும் நரி ஓட்டம் நிகழ்ச்சி

 https://www.alayathuligal.com/blog/la2rny36apf65rfnws4fzwcbfkpk6r

 2. தையல்நாயகி அம்மன்

https://www.alayathuligal.com/blog/gchp68lgler8gnn79yt582zf62s6wr

Read More
திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவில்

திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவில்

வியக்க வைக்கும் திருவீழிமிழலை வௌவால் நெத்தி மண்டபம்

கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் சாலையில் சென்று தென்கரை என்ற இடத்தில் இருந்து ஒரு கிமீ தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருவீழிமிழலை . இறைவன் திருநாமம் வீழிநாதேஸ்வரர். இறைவியின் திருநாமம் சுந்தரகுசாம்பிகை.

இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இக்கோவில் அம்மன் சன்னதியைச் சுற்றிவிட்டு வெளியே திருச்சுற்று வழியாக வரும்போது ராஜ கோபுரத்தினை அடுத்து, மிகவும் புகழ் பெற்ற வௌவால் நெத்தி மண்டபம் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டு அதிசயங்களில் ஒன்றான, கட்டடக்கலைக்குப் புகழ் பெற்ற மண்டபமாகும். சித்திரை மாதத்தில் இங்குதான் இறைவன் இறைவி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

இம்மண்டபம் 175 அடி நீளமும் 75 அடி அகலமும் கொண்டுள்ளதாகவும், நடுப்பகுதி வௌவால் நெற்றி அமைப்பிலும் உள்ளது. மண்டபத்தின் நடுப்பகுதியில் தூண்கள் கிடையாது. குறுக்கே எந்தவித பிடிமானமும் கிடையாது. நேரே கையை வளைத்து குவித்தார் போல, ஒவ்வொரு கல்லாக ஒட்ட வைத்து, மண்டபத்தின் கூரை உருவாக்கப்பட்டிருக்கிறது. வௌவால் தொங்க முடியாத வகையில் இருப்பதனால், வௌவால் நெத்தி மண்டபம் என்ற பெயர் ஏற்பட்டது. மண்டபத்தின் உள்ளே சென்று பார்க்கும்போது அதன் பிரமிப்பை நாம் உணர முடியும். நம் முன்னோர்கள் கட்டிடக் கலையில் பெற்றிருந்த சிறப்பையும், தொழில் நுட்பத் திறனையும் இந்த மண்டபம் நமக்கு பறை சாற்றுகின்றது.

தமிழகத்தின் அதிசயம் என துறை வல்லுனர்களால் ஒப்புகொள்ளப்பட்டதும், புதிதாக கற்றளி எழுப்பும்போது முற்கால சிற்பிகள் தங்களால் மீண்டும் உருவாக்க முடியாதவை என ஒப்புக்கொண்ட கோவில்/சிற்ப வேலைப்பாடுகள் ஆறு ஆகும். அவை கடாரங்கொண்டான் மதில் , ஆவுடையார் கோவில் கொடுங்கை , தஞ்சை பெரியகோவில் விமானம் , திருவலஞ்சுழி கருங்கல் பலகணி , திருவீழிமிழலை வௌவால் நெத்தி மண்டபம், திருநனிபள்ளி கோடி விட்டம் ஆகியவை ஆகும். முற்கால சிற்பிகள் தங்கள் வேலைக்கான ஒப்பந்தம் எழுதும்போது, மேற்கூறிய ஆறு வேலைப்பாடுகள் தவிர்த்து எந்த வேலைப்பாடும் தங்களால் செய்து தர முடியும் என்று உறுதி கொடுப்பார்களாகும். இதிலிருந்து இந்த வேலைப்பாடுகளின் உன்னதத் தன்மையை நாம் உணரலாம்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

திருவீழிமிழிலை திருத்தலத்து ஆலயத்து படிகளின் சிறப்பு

https://www.alayathuligal.com/blog/5fj3tlcrj9w49dly9czh33fnhdtaag

Read More
கொட்டையூர்  கோடீஸ்வரர் கோவில்

கொட்டையூர் கோடீஸ்வரர் கோவில்

நவக்கிரகங்கள் தங்கள் வாகனங்களுடன் எழுந்தருளியிருக்கும் தேவாரத் தலம்

கும்பகோணம் - திருவையாறு சாலையில், கும்பகோணத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில், சுவாமிமலை செல்லும் வழியில் உள்ள தேவாரத்தலம் திருக்கொட்டையூர். இறைவன் திருநாமம் கோடீஸ்வரர். இறைவியின் திருநாமம் பந்தாடுநாயகி. இத்தலத்தில் நவக்கிரக நாயகர்கள் தங்களுக்கே உரித்தான வாகனங்களுடன் காட்சி தருகிறார்கள. நவக்கிரகங்களின் இந்த அரிதானத் தோற்றத்தை நாம் ஒரு சில தலங்களில் மட்டுமே தரிசிக்க முடியும்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

கால் பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ள பந்தாடுநாயகி அம்பாள்

https://www.alayathuligal.com/blog/cddc7ew72pt4xthkmmge3jjj8ncynw

Read More
கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்

கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்

அயல்நாட்டில் கல்வி பயிலும் யோகம் அருளும் அஷ்ட தட்சிணாமூர்த்தி தலம்

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள கீழமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது காளஹஸ்தீஸ்வரர் கோவில். இந்தக் கோவிலில் அஷ்ட தட்சிணாமூர்த்திகள் அருள் புரிகிறார்கள்.

இவர்களில் ஸ்ரீஞான தட்சிணாமூர்த்தி கிழக்குத் திசையிலும், ஸ்ரீயோக பட்டாபிராம தட்சிணாமூர்த்தி வட கிழக்கிலும், ஸ்ரீசக்தி தட்சிணாமூர்த்தி தென்கிழக்கிலும், ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தி தெற்கிலும், ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி தென்மேற்கிலும், ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி மேற்கிலும், ஸ்ரீஆசிந தட்சிணாமூர்த்தி(பரசுராமருக்கு வில்லும் அம்பும் வழங்கியவர்) வடமேற்கிலும், ஸ்ரீவர தட்சிணாமூர்த்தி (வேதத்துக்கு குரு) வடக்கிலும் எழுந்தருளியிருக்கிறார்கள்.

படிப்பில் மந்த நிலையில் உள்ளவர்கள், ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்கள், அதிக மதிப்பெண் எடுத்து உயர் கல்வியில் சேரத் துடிப்பவர்கள், மேலை நாடுகளுக்குச் செல்ல எண்ணுவோர் இந்தத் தலத்துக்கு வந்து, அஷ்ட தட்சிணாமூர்த்தியரையும் வணங்கினால், உரிய பலன் கிடைக்கும்.

கோயிலின் ஞான கங்கை தீர்த்தக்குளத்தில் 11 வியாழக் கிழமைகள் நீராடி, அஷ்ட தட்சிணாமூர்த்திகளுக்கும் 11 வகை அபிஷேகங்கள் செய்து, எட்டு நெய்த் தீபங்கள் ஏற்றி வைத்து, மஞ்சள் பட்டு மற்றும் மஞ்சள் அரளிப்பூ சார்த்தி வழிபட, தடைப்பட்ட கல்விச் செல்வம் தங்குதடையின்றிக் கிடைக்கும்; விரும்பிய பாடப் பிரிவில் சாதனை படைக்கலாம் என்கின்றனர். தேர்வில் அதிக மதிப்பெண் பெற, அஷ்ட தட்சிணாமூர்த்தியருக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர். அஷ்ட தட்சிணாமூர்த்தியரின் அருளால் வெளிநாட்டில் கல்வி பயிலும் யோகமும் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

1. வருடத்திற்கு நான்கு முறை அன்னாபிஷேகம் செய்யப்படும் தலம்

https://www.alayathuligal.com/blog/8aksam98depeyt9nx7nyan3nc728lh

2. இரவும், பகலும் இடைவிடாமல் சிவ பூஜை செய்யும் அம்பிகை

https://www.alayathuligal.com/blog/t638e9awnfbxrh8k2wyt4ha975ee4w

Read More
தேப்பெருமாநல்லூர் விசுவநாத சுவாமி கோவில்

தேப்பெருமாநல்லூர் விசுவநாத சுவாமி கோவில்

நந்தியெம்பெருமான் வலதுக்காது மடங்கி இருக்கும் அபூர்வத் தோற்றம்

கும்பகோணத்திற்கு அருகே, சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலம் தேப்பெருமாநல்லூர். இறைவன் திருநாமம் விசுவநாத சுவாமி. இறைவியின் திருநாமம் வேதாந்த நாயகி.

இக்கோவிலின் மகா மண்டபத்திலிருந்து கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால் நந்தியெம்பெருமான் காட்சி தருகிறார். இங்குள்ள நந்தி பெருமானுக்கு ஒரு பக்க காது சிறியதாகக் காட்சியளிக்கின்றது. பிரளய காலத்தில் உலகமே மூழ்கியபோது இத்தலம் மட்டும் தண்ணீரில் மூழ்காமல் வெளியே தெரிந்தது. அப்போது பிரம்மா இத்தலத்தில் இறங்கிப் பார்த்தார். அங்கே விசுவநாத சுவாமி எழுந்தருளியிருப்பதைக் கண்டு வழிபட்டார். ஈசன் அப்போது ஜோதிர்லிங்கமாய் காட்சி கொடுத்தார்.

இந்த நிலையில் பிரளயத்தில் சிக்கிக் கொண்ட நந்தி இறைவனைத் தேடி இத்தலத்திற்கு வேகமாக வந்தது. அப்போது அது கால் சறுக்கி ஒரு பக்கமாக விழுந்துவிடவே, அதன் வலதுக்காது மடங்கி உள்நோக்கிச் சென்று விட்டது. இதனால் வருந்திய நந்தி இறைவனை நோக்க, நந்தியின் உள்ளப் போக்கை அறிந்த இறைவன், 'நந்தியே! வருந்தாதே. யார் ஒருவர் தங்கள் குறைகளை உன் வலக் காது இருந்த பக்கம் சொல்கிறார்களோ, அதனை நான் உடனே நிவர்த்தி செய்வேன்' என்று ஆறுதல் கூறினார். அதன்படி, இந்த நந்தியின் வலக்காதுப் பக்கம் தங்கள் குறைகளைக் கூறினால் அது நிவர்த்தி ஆகி விடுகிறது என்கிறார்கள்.

ருத்திராட்சம் பிரசாதமாகத் தரப்படும் தலம்

இக்கோவிலில் மாதம்தோறும் நடைபெறும் பிரதோஷ வழிபாடு பிரசித்தி பெற்றதாகும். நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. பிரதோஷ காலங்களில் சிவபெருமான் ருத்ராட்சக் கவசம் சாற்றப்பட்டு காட்சி அளிப்பது பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக அமைகின்றது எனப் பக்தர்கள் கூறுகின்றனர். மேலும் பிரதோஷ தினங்களிலும், மகா சிவராத்திரி போன்ற விசேஷ தினங்களிலும் ருத்திராட்சம் பிரசாதமாகத் தரப்படுவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

சிவபெருமானுக்கு ருத்ராட்ச மணி கவசம் சாத்தப்படும் தலம்

https://www.alayathuligal.com/blog/lc5e8xag9et35fe4jwj8llpwtt9f85

Read More
தலத்தின் தனிச்சிறப்பு

தலத்தின் தனிச்சிறப்பு

பெரிய கருவறை உடைய சிவாலயங்கள்

பொதுவாக கோவில்களில் கருவறையானது ஒரிரு அர்ச்சகர்கள் நின்று தெய்வத்தை பூஜிக்கும் அளவிற்குத்தான் அமைந்திருக்கும். ஆனால், தேவாரப் பாடல் பெற்ற தலங்களான கும்பகோணத்திற்கு அருகே உள்ள இன்னம்பரிலும், பூம்புகார் அடுத்த உள்ள புஞ்சையிலும் ஒரு யானை உள்ளே சென்று வழிபடக் கூடிய அளவில் கருவறை உள்ளது.இத்தகைய பெரிய கருவறை வேறு எந்த சிவாலயத்திலும் இல்லை என்பது இந்தத் தலங்களின் தனிச் சிறப்பாகும். யானை சென்று வழிபடும் அளவு கருவறையை உருவாக்கியது, சோழர்களின் பார்போற்றும் கட்டிடகலை சிறப்பாகும்.

Read More
எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோவில்

எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோவில்

சனி மற்றும் ராகு தோஷத்தை ஒரு சேர நீக்கும் தலம்

புதுக்கோட்டை, அறந்தாங்கியிலிருந்து, 5 கி.மீ தூரத்திலுள்ளது எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோவில். இது 2000 ஆண்டுகள் பழமையானது. இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. இக்கோவில் தொண்டை நாட்டு மன்னன் காளிங்கராயனால் கட்டப்பட்டது.

ஒரு சமயம் அகஸ்திய முனிவர், காசி விஸ்வநாதரை தரிசித்து விட்டு, எட்டியத்தளி கிராமத்துக்கு வந்தார். அப்போது மன்னன் காளிங்கராயன் தனது அஷ்டம சனி தோஷம் நீங்க, திருநள்ளாறு சனி ஆலயம் செல்வதற்கு, இவ்வழியாக வந்தான். அகஸ்தியர், மன்னன் காளிங்கராயனிடம் இக்கோவிலை அமைக்கச் சொன்னார்.பின், நவகிரகங்களை அமைக்கச்சொன்னார். அதன் பின் காளிங்கராய மன்னன் இக்கோவிலை அமைத்ததாக இத்தல வரலாறு கூறுகிறது. திருநள்ளாறு சனிபகவானை விட இவர் அருள் வழங்குவதில் பலமடங்கு சக்தி மிக்கவர் என்று கூறப்படுகிறது. அதனால், இத்திருத்தலத்தில் சனி பகவானின் சக்தி இங்கு அதிகம்.

பொதுவாக, கோயில்களில் சனீஸ்வரருக்கு இடது புறம் ராகுவும், வலது புறம் கேதுவும் இருப்பார்கள். ஆனால் இந்த ஆலயத்தில் சனி பகவானின் வலதுபுறம் ராகு பகவானும், இடதுபுறம் கேது பகவானும் உள்ளனர். அதனால் ராகுவின் பார்வை சனி பகவானின் மீது படுகிறது. எனவே, இங்கு வந்து வழிபட்டால், சனி தோஷமும், ராகு தோஷமும் நீங்குகிறதாம். மேலும் ஜாதகத்தில் களத்தரன், செவ்வாய் தோஷமுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் குறைகள் நீங்கி திருமண பாக்கியம் கிட்டும்.

Read More
தருமபுரம்  யாழ்மூரிநாதர் கோவில்

தருமபுரம் யாழ்மூரிநாதர் கோவில்

காவி ஆடை அணியும் தட்சிணாமூர்த்தி

புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் தருமபுரம். இறைவன் திருநாமம் யாழ்மூரிநாதர். இறைவியின் திருநாமம் தேனாமிர்தவல்லி, மதுர மின்னம்மை.

ஒரு சமயம் சிவபெருமான் யாழ் இசைத்தபோது, அவரது அம்சமான தெட்சிணாமூர்த்தி இசையை விரும்பிக் கேட்டார். இசையில் மகிழ்ந்த அவர் தன்னையும் அறியாமல் வியப்பில் பின்புறம் சாய்ந்தாராம். இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள தட்சிணாமூர்த்தி பின்புறம் சற்றே சாய்ந்தவாறு இருக்கிறார்.பொதுவாக மஞ்சள் நிற வஸ்திரம்தான் தட்சிணாமூர்த்திக்கு அணிவிப்பார்கள். ஆனால், இங்கு அவருக்கு காவி நிற வஸ்திரம் சாத்தி பூஜைகள் செய்கிறார்கள். மணம் முடிக்காமல், குரு அம்சமாக இருப்பதால் தட்சிணாமூர்த்திக்கு காவி ஆடை அணிவிப்பதாக சொல்கிறார்கள்.தட்சிணாமூர்த்தியின் இந்த கோலத்தை மற்றத் தலங்களில் காண்பது அபூர்வம்.

இங்கு சிவபெருமான் தன் கையில் யாழ் இசைத்த கோலத்தில் காட்சி தருகிறார்.

Read More
ஆவூர்  பசுபதீஸ்வரர் கோவில்

ஆவூர் பசுபதீஸ்வரர் கோவில்

பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்யும் பஞ்ச பைரவர்கள்

கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத் தலம் ஆவூர். இங்கு பசுபதீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இறைவன் திருநாமம் பசுபதீஸ்வரர். இத்தலத்தில் பங்கஜவல்லி , மங்களாம்பிகை என்ற திருநாமம் தாங்கி இரண்டு அம்பிகைகள் அருள் புரிகிறார்கள்.

இந்தக் கோவிலின் முக்கிய சிறப்பம்சமாக பஞ்ச பைரவ மூர்த்திகள் உள்ளனர். ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள். இக்கோவிலில் மங்களாம்பிகை அம்மனை பிரதிஷ்டை செய்யும்போது, ஹோமத்திலிருந்து பஞ்ச பைரவர்கள் வெளிப்பட்டனர். அவர்களையும் பிரதிஷ்டை செய்து ஆராதனைகள் செய்தால் பித்ருசாபம் நீங்கப் பெறும் என அசரீரி ஒலித்துள்ளது. அதன்படி பஞ்ச பைரவர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். பஞ்ச பைரவர்களை வழிபட்டதன் மூலம் தசரத மன்னனின் பித்ரு சாபம் விலகியது. எனவே இத்தலம் பித்ரு சாப நிவர்த்தித் தலமாக விளங்குகின்றது.

பிதுர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பஞ்ச பைரவர்களை வழிபாடு செய்து வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும் .ஒரு சிலர் நிறைய சம்பாதிப்பார்கள். இருந்தாலும் கடன் தீராது. இன்னும் சிலருக்கு நல்ல திறமைகள் இருக்கும். ஆனால் சரியான வேலையும் வாய்ப்புகளும் அமையாமல் வருமானம் இன்றி இருப்பார்கள். பல பேர் அனைத்து செல்வங்களையும் பெற்று இருப்பார்கள். ஆனால் வாழ்வில் நிம்மதி இருக்காது. அப்படிப்பட்டவர்களின் அந்த நிலைக்கு பிதுர் தோஷம் தான் காரணம். அவர்கள் அனைவரும் இத்தல பஞ்ச பைரவர்களை வழிபட்டு பிதுர் தோஷத்தை போக்கி வாழ்வில் வளம் பெறலாம். இவர்களை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கும். குறைவான வருமானம் கடன் சிக்கல்கள், வேலைவாய்ப்பின்மை, திருமண சிக்கல்கள் போன்றவைகள் பிதுர் தோஷ காரணத்தினால் கூட ஏற்படலாம். அதனை இந்த தலத்தில் உள்ள பஞ்ச பைரவர்களை வழிபாடு செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

Read More
நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்

நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்

குபேரன் மற்றும் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் தலம்

குபேரன் புதல்வர்கள் பொன் வில்வ சாரரத்தால் வழிபட்ட தலம்

திருச்சியிலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ளது நன்னிமங்கலம். இத்தலத்தில் அமைந்துள்ளகு, 1200 ஆண்டுகள் பழமையான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் சுந்தரேஸ்வரர். இறைவியின் திருநாமம் மீனாட்சி. இந்த ஆலயத்தை பக்தர்கள் சென்னி வாய்க்கால் கோயில் என்றே அழைக்கின்றனர். பிரம்மா இங்கு சிவனை தன் தலைகளால் (சென்னி) வணங்கி வரம் பெற்றதால் இத்தல இறைவன் சென்னி சிவம் என்றே அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் இதுவே சென்னி வளநாடு எனப் பெயர்கொண்டு, தற்போது சென்னிவாய்க்கால் கோயில் என்றானது. கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர், ஐந்தடி உயர லிங்கத்திருமேனியில், கரும்பச்சை நிறத்தில் மரகத மேனியராய் ஜொலிக்கிறார். இவர் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

பொன்னாலாகிய மூன்று தளத் தொகுதியுடைய பொன் வில்வ சாரம், யோக தவ ஜப சக்திகளைப் பெற்றிருப்பவர்களைத் தவிர வேறு எவர் கண்களுக்கும் தென்படாது. மகிமைமிக்க பொன்வில்வ சாரத்தை சிவபெருமான் குபேரனிடம் அளித்தார். குபேரன் இதை தன் குமாரர்களான மணிக்ரீவன், நளகூபன் இருவரிடமும் அளித்து பூலோகத்தில் உள்ள சுயம்பு லிங்க மூர்த்திகளில் வைத்து வழிபட்டு அதன் மகிமையை அறிந்துவரும்படி கட்டளையிட்டார்.

அவ்வாறே அவர்கள் வழிபட, அந்த பொன்வில்வசாரம் பல இடங்களில் பசுமையாக சாதாரண வில்வ தளம் போல் காட்சி தர, சில இடங்களில் மறைந்து விட்டது. பிரபஞ்சத்தின் தெய்வீக மையமாகத் திகழும் திருவண்ணாமலை வந்தடைந்தனர். பௌர்ணமி அன்று கிரிவலம் வந்து பொன்வில்வ சாரத்தை அண்ணாமலை ஆண்டவன் பாதங்களில் வைத்து 'ஓம் நமசிவாய' மந்திரத்தை ஓதினர். அண்ணாமலையாரிடம் வில்வதளம் சுவர்ணமாகப் பிரகாசித்தது. சென்னிவளநாடு செல்லும்படி அவர்களுக்கு அண்ணாமலையார் அசரீரியாய் அருள் வழிகாட்டினார்.

அதன்படி இருவரும் திருத்தவத்துறை என்ற தற்போதைய லால்குடியில் உள்ள சப்தரீஷிஸ்வரர் ஆலயத்திற்கு வந்தனர். அங்கிருந்த சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி நீராடிய அவர்கள் அருகில் வேறொரு ஆலயம் இருப்பதைக் கண்டனர். அதேசமயம் தங்கள் கரத்திலிருந்த பொன்வில்வசாரம் மறைந்தது கண்டு பதறினர். உடனே அந்த ஆலய கருவறை நோக்கிச் சென்றனர். அங்கே கரும்பச்சை வண்ணத்தில் மரகதமாய் ஜொலிக்கும் சுயம்பு லிங்கத்திருமேனியில் தாங்கள் கொண்டு வந்த பொன்வில்வசாரம், பன்மடங்காகப் பெருகி மணம் வீசக்கண்டனர்.

அவை ஸ்வர்ணவில்வ தளங்களாக மஞ்சள் நிறத்தில் ஜொலித்தன. இருவரும் மெய் சிலிர்த்து 'ஓம் நமசிவாய' என ஓதி அர்ச்சிக்க, அது மேலும் பொங்கிப் பெருகியது. இருவரும் மன பூரிப்போடு தேவலோகம் சென்றனர். தன் புதல்வர்கள் பொன்வில்வ சாரத்தின் மகிமையையும் தேவரகசியத்தையும் உணர்ந்ததை அறிந்த குபேரன் மனம் மகிழ்ந்தார். சென்னி வளநாட்டிற்கு வந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டார்.

பௌர்ணமி அன்று இத்தலவிருட்சமான பொன்வில்வ மரத்திற்கு அரைத்த சந்தனம் மஞ்சள் குங்குமம் சாத்தி, அடிப்பிரதட்சனம் செய்து இறைவன் இறைவியை வழிபட்டால் குபேரன் மற்றும் லட்சுமி தேவியின் அருளைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

Read More
தலத்தின் தனிச்சிறப்பு

தலத்தின் தனிச்சிறப்பு

ஒரே சிவாலயத்தில் இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் திருவாரூர், திருப்புகலூர், திருமீயச்சூர் ஆகிய மூன்று தலங்களுக்கும் ஒரு தனித்துவம் உண்டு.இந்த மூன்று தலங்களில் தான் ஒரு கோயிலுக்குள்ளேயே இரண்டு வெவ்வேறு சிவன் சன்னதிகள் தேவாரப் பாடல்கள் பாடப் பெற்றுள்ளன.

இதில் திருவாரூர் தலத்தில் வன்மீகநாதர் மற்றும் அசலேஸ்வரர், திருப்புகலூர் தலத்தில் அக்னிபுரீஸ்வரர் மற்றும் வர்த்தமானீஸ்வரர், திருமீயச்சூர் தலத்தில் மேகநாதர் மற்றும் சகலபுவனேஸ்வரர் ஆகிய மூலவர்கள் மேல் தேவாரப் பாடல் பாடப்பட்டிருக்கிறது.

Read More
கழுகுமலை வெட்டுவான் கோவில்

கழுகுமலை வெட்டுவான் கோவில்

மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தி

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. பாண்டியர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட, 1200 ஆண்டு பழமையான இக்கோவில், கோவில்பட்டியிலிருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

தென் தமிழகத்தின் எல்லோரா

பொதுவாக ஒரு கோயிலோ அல்லது வீடோ கட்டும் போது அஸ்திவாரம் போட்டு கீழிருந்து மேலாக கட்டுவார்கள், ஆனால் இந்த குடை வரை கோயில் மலையை குடைந்து கட்டப்பட்டுள்ளதால், மேலிருந்து கீழாக கட்டப்பட்டுள்ளது. அதாவது முதலில் கோபுரம், பின்னர் அப்படியே கீழாக சென்று சிற்பங்கள், கருவறை, அடித்தளம் போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த ஒற்றைக் கற்றளி கோவில் , தனி ஒரு பாறையை மேலிருந்து கீழ்நோக்கி செதுக்கி அமைக்கப்பட்டுள்ளது. மரபுச் சின்னம் எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயில் போன்று, கடினமான பாறை அடுக்குகளால் ஆன ஒரு பெரிய மலைப்பாறையில், 7.50 மீட்டர் ஆழத்திற்குச் சதுரமாக வெட்டியெடுத்து அதன் நடுப்பகுதி பாறையை கோயிலாக செதுக்கியுள்ளனர். இதை வெட்டுவான் கோயில் என அழைக்கின்றனர். ஒரு தனிக் கோயில் எப்படியெல்லாம் கருவறை, அர்த்தமண்டபம் என்று அமைக்கப்படுமோ, அதேபோன்று ஒற்றைப் பாறையிலே எழுப்பப்பட்ட அதிசயம் இந்தக் கோயில். தென் தமிழகத்தின் எல்லோரா என்று போற்றப்படும் இக்கோயிலை வெளிநாட்டினர் ஏராளமானோர் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

இந்த மலை தமிழக அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. விமானத்தின் முதல் தளத்தில் தட்சிணாமூர்த்தி, திருமால், விசாபகரணர், அக்கமாலையை கையில் ஏந்தி சன்னவீரம் தரித்த முருகன், சந்திரன், சூரியன் சிற்பங்கள் உள்ளன. கிரீடத்தில் உமா மகேஸ்வரர், மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தி, நரசிம்மர், பிரம்மா உள்ளனர்.

மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தி

இந்தியக் கோயில்களில், இந்தக் கோயிலில் மட்டுமே மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது. அவர் தமது முன் இடக்கரத்தில் மிருதங்கத்தைப் பிடித்திருக்கும் நிலையிலும், முன் வலக்கரத்தின் விரல்களால் மிருதங்கததை இசைக்கும் பாவனையிலும் அருள்புரிகிறார். மிருதங்கம் நடனத்துடன் தொடர்புடையது ஆதலால் இங்கே தட்சணாமூர்த்தி நடனக் கலையின் சிறப்பாய் உள்ளார்.

இங்குள்ள கழுகுமலை முருகன் கோயிலும் ஒரு குடைவரைக் கோயிலாகும்.

கழுகுமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

முருகப்பெருமான் ராஜபோகமாக வீற்றிருக்கும் தலம்

https://www.alayathuligal.com/blog/pgadjte6w3sdjygdbbkmwr56wnx5cr?rq

Read More
கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்

கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்

வருடத்திற்கு நான்கு முறை அன்னாபிஷேகம் செய்யப்படும் தலம்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே கீழமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது காளஹஸ்தீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் காளஹஸ்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை.

பொதுவாக சிவாலயங்களில் ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு நான்கு முறை அன்னாபிஷேகப் பெருவிழா நடைபெறுகிறது. இக்கோவிலில், ஒவ்வொரு வருடமும் தமிழ் ஆண்டு வருடப் பிறப்பு, சித்திரை பெளர்னமி, ஐப்பசி மாதப் பிறப்பு, ஐப்பசி பெளர்னமி ஆகிய நான்கு தினங்களில் மூலவர் காளஹஸ்தீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது தனிச் சிறப்பாகும்.

அன்னாபிஷேக தரிசன பலன்

அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம்.

அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.

இத்தலம் தூத்துக்குடி நகரிலிருந்து சுமார் 42 கி.மீ. தொலைவில் உள்ள பசுவந்தனையில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது.

Read More
நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவில்

நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவில்

தினம்தோறும் அன்னாபிஷேகம் செய்யப்படும் தலம்

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் கபினி ஆற்றின் கரையில் உள்ள நஞ்சன்கூடு என்ற தலத்தில் அமைந்துள்ளது நஞ்சுண்டேஸ்வரர் கோவில் . இறைவன் திருநாமம் நஞ்சுண்டேஸ்வரர். இறைவியின் திருநாமம் பார்வதி.

அனைத்து சிவன் கோவில்களிலும் சிவபெருமானுக்கு ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறும். ஆனால் இந்த கோவிலில் இருக்கும் லிங்கத்திற்கு தினம்தோறும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. விஷத்தன்மை கொண்ட அசுரன் ஒருவனை விழுங்கிய காரணத்தால் சிவபெருமான் இங்கு உக்கிரமான நிலையில் இருப்பதாகவும், அந்த உக்கிரத்தை தணிக்க தினம்தோறும் அன்னாபிஷேகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இத்திருத்தலத்தில் சுக்கு, வெண்ணெய், சர்க்கரை இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து 'சுகண்டித சர்க்கரை' என்ற பெயரில் பிரசாதமாக, சிவபெருமானுக்கு நைவேத்தியம் செய்து, பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. நோய்களை குணப்படுத்தும் சக்தியானது இந்த சுகண்டித சர்க்கரைக்கு உள்ளதால் இந்த சிவபெருமானை 'ராஜ வைத்தியர்' என்ற மற்றொரு பெயர் கொண்டும் அழைக்கிறார்கள்.

இத்தலம் மைசூர் நகரத்திலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ளது.

Read More
தலத்தின் தனிச்சிறப்பு

தலத்தின் தனிச்சிறப்பு

திருமண தடை நீக்கும் 'மாப்பிள்ளைசாமி' தலங்கள்

மயிலாடுதுறைக்கு அருகே அமைந்துள்ள திருமணஞ்சேரி , கோனேரிராஜபுரம், திருவீழிமிழலை ஆகிய மூன்று சிவத்தலங்களிலும் உள்ள இறைவனை 'மாப்பிள்ளைசாமி' என்று அழைக்கின்றனர். இவற்றில் அருள் புரியும் இறைவனையும் அம்பாளையும் ஒரே நாளில் தரிசித்தால் தடைப்பட்ட திருமணம் நிச்சயம் நடக்கும் என்பது நம்பிக்கை.

கும்பகோணம் - காரைக்கால் பாதையில் எஸ். புதூரில் இறங்கி கோனேரிராஜபுரம் செல்ல வேண்டும். பிறகு மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் பூந்தோட்டத்தில் இறங்கி அங்கிருந்து, திருவீழிமிழலைக்குச் செல்ல வேண்டும். நிறையாக கும்பகோணம் மயிலாடுதுறை பாதையில் குத்தாலத்தில் இறங்கி, அங்கிருந்து திருமணஞ்சேரிக்குச் சென்று தரிசித்து வர வேண்டும்.

Read More
கோனேரிராஜபுரம் பூமீஸ்வரர் கோவில்

கோனேரிராஜபுரம் பூமீஸ்வரர் கோவில்

வெள்ளை ஆடை அணிந்த சனிபகவான்

திருவிடைமருதூரில் இருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் கோனேரிராஜபுரம். இறைவன் திருநாமம் உமா மஹேஸ்வரர், பூமீஸ்வரர். இறைவியின் திருநாமம் தேகசௌந்தரி.

இக்கோவிலில் சனிபகவான் மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். நளனும் அவனது மனைவி தமயந்தியும் திருநள்ளாறு செல்லும் முன் இத்தலத்தில் வழிபாடு செய்து அனுக்கிரகம் பெற்றுள்ளனர். எனவே மற்ற தலங்களில் கருப்பு ஆடை அணிந்திருக்கும் சனி, இங்கு மட்டும் வெள்ளை ஆடை அணிந்து அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு வெள்ளை எள்ளால் ஆன எண்ணையில் தீபம் போட வேண்டும். சனி தோஷத்தில் பாதிக்கபட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

மனிதரைப் போல ரோமம், மச்சம், ரேகை, நகம் ஆகிய அம்சங்கள் உடைய நடராஜர்

https://www.alayathuligal.com/blog/y4hp9sx9mja22exzhw7rmkdrdc4wk3

Read More
தாருகாபுரம் மத்தியஸ்வரர் கோவில்

தாருகாபுரம் மத்தியஸ்வரர் கோவில்

நவக்கிரக தோஷம் அகற்றும் தட்சிணாமூர்த்தி

தென்காசி அருகே உள்ள வாசுதேவ நல்லூரில் இருந்து தலைவன் கோட்டை செல்லும் சாலையில் 2 கி.மீ. தொலைவில் உள்ள தாருகாபுரம் எனும் ஊரில் அமைந்துள்ளது மத்தியஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் மத்தியஸ்வரர். இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி.

இக்கோவிலிலுள்ள தட்சிணாமூர்த்தி, தனது காலடியில் ஒன்பது நவக்கிரகங்களையும் அடக்கி அதன் மேல் அமர்ந்து அருள்பாலிக்கிறார். எனவே இங்கு நவக்கிரகங்களுக்கு என்று தனி சன்னிதி இல்லை. நவக்கிரக பீடத்தில் அமர்ந்து இருக்கும் தட்சிணாமூர்த்தியை வணங்கினாலே அனைத்து கிரகங்களையும் வணங்கியதற்கு சமமாகும்.

சத்ரு சம்ஹார பைரவர்

இக்கோவிலில் உள்ள பைரவர் சிறப்பு அம்சம் மிக்கவர். இவர் தலையில் சூரிய சின்னம் உள்ளது. இவரை 'சத்ரு சம்ஹார பைரவர்' என்று அழைக்கிறார்கள். தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்கினால் தீராத பிரச்சினைகளும் தீர்ந்து விடும். இந்த பைரவரை தரிசிக்க நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்து வந்ததன் காரணமாக, ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசிக்கும் வகையில், ஆள் உயர கண்ணாடி ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் வழியாகவும் பைரவரை தரிசிக்க முடியும்.

Read More
வில்வவனேஸ்வரர் கோயில்

வில்வவனேஸ்வரர் கோயில்

திருஞானசம்பந்தர் பதிகம் பாடி ஓடம் செலுத்திய தேவாரத் தலம்

கும்பகோணத்தில் இருந்து தெற்கே 20 கி.மீ. தூரத்தில் உள்ள தேவாரத் தலம், திருக்கொள்ளம்புதூர் . கும்பகோணத்திலிருந்து கொரடாச்சேரி செல்லும் வழியில் செல்லூரில் இறங்கி சுமார் ஒரு கி.மீ.. சென்றால் இத்தலத்தை அடையலாம். இறைவன் திருநாமம் வில்வாரண்யேஸ்வரர். இறைவி சௌந்தரநாயகி. இத்தலத்தில் திருஞானசம்பந்தர் அடியவரோடு ஓடம் ஏறி அதனைப் பதிகம் பாடிச் செலுத்தி மறுகரை அடைந்தார். இங்கு ஆற்றின் எதிர்க்கரையில் திருஞானசம்பந்தருக்கு திருக்கோயில் அமைந்துள்ளது.

பல சிவத்தலங்களை தரிசித்து பாடி வந்த திருஞானசம்பந்தர், இத்தலம் வரும் போது வழியில் உள்ள வெட்டாறில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஓடம் ஓட்டுபவர்களால் ஓடம் செலுத்த முடியாமல் ஆற்றின் கரையிலேயே ஓடத்தை விட்டு சென்றனர். ஆனால் சிவனை தரிசிக்காமல் செல்ல கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார் சம்பந்தர். எனவே ஆற்றின் கரையில் இருந்த ஓடம் ஒன்றை அவிழ்க்க செய்து அதன் மீது தன் அடியவர்களுடன் ஏறினார். தமது நாவையே ஓடக்கோலாக கொண்டு, "கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டமாடிய நம்பனை யுள்கச் செல்வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறரு ணம்பனே' எனும் திருப்பதிகம் பாடினார். இறைவனின் திருவருளால் ஓடம் ஆற்றின் மறுகரையை அடைந்தது. திருஞான சம்பந்தர் கோயிலை அடைந்து மீதி பதிகங்ளை பாடி இறைவனை வழிபட்டு, அங்கேயே தங்கினார் என்பது வரலாறு.

ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் நடக்கும் ஓடத்திருவிழா

ந்த ஓடத்திருவிழா ஆண்டு தோறும் ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் சிறப்பாக நடக்கிறது. இந்த ஆற்றை மக்கள் வழக்கில் ஓடம்போக்கி ஆறு என்று வழங்குகின்றன ர்.ஐந்து நிலை கோபுர வாயில் வழியே நுழைந்ததும் காணும் மண்டபத்திலுள்ள வலப்பக்க கற்தூணில் சம்பந்தர் ஓடம் ஏறிச் செலுத்தும் சிற்பம் உள்ளதைக் காணலாம்.

சித்த சுவாதீனம் உள்ளவர்கள் இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபாடு செய்வது சிறப்பு. துலா மாதத்தில் அமாவாசை உதித்த முதல் பாதத்தில் நீராடி வழிபட்டால் வேண்டும் சித்திகளையும், வலிமையையும் பெறுவர்.

Read More