திருவாரூர் தியாகராஜர் கோவில் - திருவாரூர் அரநெறி

தஞ்சாவூர் பெரிய கோவில் விமானத்துக்கு மாதிரியாக திகழ்ந்த சன்னதி விமானம்

நமிநந்தி அடிகள் நாயனாருக்காக, சிவபெருமான் தண்ணீரில் விளக்கெரிய செய்த அற்புதம்

தேவாரப் பாடல் பெற்ற 276 தலங்களில், மூன்று தலங்களில் மட்டும் தான் இரண்டு சன்னதிகள் தனித்தனியே தேவார பாடல்கள் பெற்றுள்ளன. அவை திருவாரூர், திருப்புகலூர், திருமீயச்சூர் ஆகியவை ஆகும். திருவாரூர் தியாகராஜர் கோவிலில் புற்றிடம் கொண்ட நாதர் சன்னதியும், அசலேசுவரர் சன்னதியும் தனித்தனியே தேவாரப் பாடல்களில் போற்றப்பட்டுள்ளன. ஒரு மன்னருடைய வேண்டுகோளின்படி இறைவன் சலியாது எழுந்தருளி இருப்பதால், அசலேசுவரர் எனப் பெயர் பெற்றார்.

இந்த அசலேசுவரர் சன்னதி தியாகராஜர் கோவில் வளாகத்தின் அக்னி மூலை (தென்கிழக்கு) பகுதியில் அமைந்துள்ளது. அசலேசுவரர் கருவறை, அர்த்த மண்டபம், வெளியிலுள்ள கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகிய பகுதிகளே திருவாரூர் அரநெறி என்ற தேவாரத் தலமாக கருதப்படுகிறது. இந்த சன்னதியின் விமானம் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் கட்டிட வடிவமைப்பை மாதிரியாக கொண்டுதான், பிரகதீஸ்வரர் கோவில் விமானம் அமைக்கப்பட்டது. அசலேசுவரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழாது.

நமிநந்தியடிகள் நாயனார் என்பவர், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். சிவபெருமானின் தீவிர பக்தர். அனுதினமும் திருவாரூர் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுவார்.

ஒரு நாள் அவர் இக்கோவிலுக்குச் சென்றபோது, அதில் எண்ணெய்/நெய் இல்லாததால் விளக்குகள் அணையப் போவதைக் கண்டார். தொலைவில் வசிப்பதால், விளக்கு எரிய வைக்க எண்ணெய்க்காக பக்கத்து வீடுகளை அணுகினார். அக்கம்பக்கத்தினர், வித்தியாசமான சமய நம்பிக்கை கொண்டவர்கள். உங்களுடைய சிவபெருமான் பெரிய கடவுளாக இருந்தால் இந்த விளக்குகளை தண்ணீர் கொண்டு எரிய வைக்க முடியும் என்று கேலி செய்தார்கள். ஏமாற்றமடைந்த நமிநந்தியடிகள் மீண்டும் கோவிலுக்குச் சென்று, இறைவன் முன் கதறி அழுதார். சிவபெருமான், நமிநந்தியடிகள் முன் தோன்றி, கோவில் குளத்திலிருந்து தண்ணீரை எடுத்து விளக்கேற்றச் சொன்னார். அடிகளார் அவ்வாறு தண்ணீரை நெய்க்குப் பதிலாகப் பயன்படுத்தியபோது, முன்னெப்போதையும் விட கோவில் விளக்குகள் பிரகாசித்தன. இச்சம்பவத்தையும், அடிகளாரின் பக்தியையும் கேள்விப்பட்ட சோழ மன்னன், அடிகளாரை ஆலய நிர்வாகத் தலைவராக்கியதுடன், இக்கோவிலுக்கு ஆதரவாக பல மானியங்களையும் வழங்கினார்.

நமிநந்தி அடிகள் நாயனார் இத்தலத்தில் தண்ணீரால் விளக்கேற்றிய செய்தியை தனது தேவாரத்தில் திருநாவுக்கரசர் குறிப்பிட்டுள்ளார்.

தஞ்சாவூர் பெரிய கோவில் விமானத்துக்கு மாதிரியாக திகழ்ந்த சன்னதி விமானம்

நமிநந்தியடிகள்

 
Previous
Previous

திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோவில்

Next
Next

ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோவில்