திருவாடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருவாடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில்

அம்பாள் பசுவின் வடிவில் சிவபெருமானை வழிபட்ட தலம்

பிரிந்திருக்கும் தம்பதியரை மீண்டும் இணைக்கும் அணைத்திருந்த நாயகர்

மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் 20 கி.மீ., தொலையில் அமைந்துள்ள தேவார தலம் திருவாடுதுறை. இறைவன் திருநாமம் கோமுக்தீஸ்வரர், மாசிலாமணீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஒப்பிலாமுலையம்மை.

ஒருசமயம் கைலாயத்தில் சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிவனே தொடர்ந்து வெற்றி பெற்றதாக தன்னை அறிவித்துக் கொண்டார். அம்பாள் கோபம் கொள்ளவே, சிவன் அவளைப் பசுவாக பிறக்கும்படி சபித்து விட்டார். அவள் தன் வடிவம் நீங்கி மன்னிப்பு தரும்படி சிவனிடம் வேண்டினாள்.

இத்தலத்தில் தம்மை வழிபட்டுவர சாபம் நீங்கப்பெறும் என்றார் சிவன். அதன்படி அம்பாள் பசுவின் வடிவில் இங்கு வந்து, சிவனை வேண்டித் தவமிருந்தாள். சிவன் அவளுக்கு காட்சி தந்து, தன்னுடன் அணைத்துக்கொண்டு, விமோசனம் கொடுத்தார்.'கோ' வாகிய பசுவிற்கு விமோசனம் தந்தவர் என்பதால், 'கோமுக்தீஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.

பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சன்னதியில், சிவபெருமான் பார்வதியை அணைத்திருக்கும் கோலத்தில் காட்சி தரும் 'அணைத்தெழுந்த நாயகர்' உற்சவராக இருக்கிறார். இவர் அணைத்த கோலத்தில் இருந்தாலும், அம்பாள் மீது கைகள் படாதவாறு சிலை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம். இவர் இங்கு வரப்பிரசாதியாக திகழ்கிறார். பிரிந்திருக்கும் தம்பதியர் இவரிடம் வேண்டிக்கொண்டால் மீண்டும் இணைவர் என்பது நம்பிக்கை.

இங்கு அம்பாள் ஒப்பிலாமுலையம்மை நின்ற திருக்கோலத்தில் ஒப்பில்லாத அருளும் கருணையும் கொண்டு அழகே உருவாக காட்சி தருகிறார். இங்கு நவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் அருட்காட்சி தருகிறார் ஒப்பிலாமுலையம்மை. விசேஷ நாட்களில் சந்தன காப்பு அலங்காரத்தில் ஒப்பிலா முலையம்மையின் அழகை காண கண் கோடி வேண்டும். மாங்கல்ய பாக்கியம் நிலைத்திருக்க, தம்பதியர்கள் ஒற்றுமையுடன் இருக்க, புத்திர பாக்கியம் கிடைக்க இங்கு அம்பாள் சந்நிதியில் வேண்டிக்கொள்கிறார்கள்.

Read More
திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோவில்

திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோவில்

சுவாமி கருவறையின் மேல் இரட்டை விமானம் இருக்கும் அபூர்வ வடிவமைப்பு

கருவறையில் சிவபெருமானுடன் பார்வதி அருவமாக இருக்கும் ஒரே தலம்

திருச்சி – தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள துவாக்குடி என்ற ஊரிலிருந்து, நான்கு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் நெடுங்களம். இறைவன் திருநாமம் நித்திய சுந்தரேசுவரர், திருநெடுங்களநாதர், இறைவியின் திருநாமம் ஒப்பிலாநாயகி.

பொதுவாக சிவாலயங்களில் சுவாமி, அம்பிகை சன்னதியின் கருவறையின் மேல் விமானம் இருக்கும். ஆனால் இத்தலத்திலோ சுவாமி விமானத்தின் மேல் இரட்டை விமானம் இருக்கும் வடிவமைப்பு வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாது. மேலும் சிவபெருமானின் லிங்கத் திருமேனியானது கருவறையின் வலது பக்கம் சற்று ஒதுங்கி இருக்கும். இதற்கு காரணம், இறைவன் தனது இடது பக்கத்தில் அருவமாக இருக்கும் பார்வதி தேவிக்கு இடம் கொடுத்திருக்கிறார். சுவாமி, அம்பாளுக்கு தனித்தனி விமானம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான், இந்த கருவறையின் மேல் இரட்டை விமானம் இருக்கின்றது. தமிழகத்தில், இப்படி இரட்டை விமானம் கருவறையின் மேல் இருக்கும் அமைப்பு, வேறு எந்த கோவிலிலும் இல்லை என்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

Read More
திருச்சுழி திருமேனிநாதர் கோவில்

திருச்சுழி திருமேனிநாதர் கோவில்

பச்சிலை மூலிகையால் உருவாக்கப்பட்ட அபூர்வ நடராஜர்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை என்ற ஊரிலிருந்து, 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருச்சுழி. பாண்டிய நாட்டில் உள்ள 14 தேவார தலங்களில் இத்தலமும் ஒன்று. இறைவன் திருநாமம் திருமேனிநாதர். இறைவியின் திருநாமம் துணைமாலையம்மை. இத்தலத்தில் பிரளய வெள்ளம் ஏற்பட்டபோது, ஒரு அம்பினால் சுழித்து அந்த வெள்ளத்தை பாதாளத்திற்குள் செலுத்தியதால், இந்த ஊர் 'திருச்சுழியல்' என்று அழைக்கப்பட்டது. ரமண மகிரிஷி பிறந்த இடம் இது.

இந்தத் தலத்தில் உள்ள நடராஜரின் திருமேனி கொள்ளை அழகுடன் திகழ்கின்றது. மிக மிக தத்ரூபமாக வடிக்கப்பட்ட இந்த நடராஜரின் விக்கிரகம் பச்சிலை மூலிகையால் உருவாக்கப்பட்டது என்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு. இப்படிப்பட்ட பச்சிலை மூலிகையால் உருவான நடராஜரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

Read More
திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோவில்

திருமணத்தடை நீக்கும் வராகி அம்மன்

கோவில் உரலில், விரலி மஞ்சள் இடித்து, வராகி அம்மனுக்கு செய்யப்படும் அபிஷேகம்

திருச்சி – தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள துவாக்குடி என்ற ஊரிலிருந்து, நான்கு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் நெடுங்களம். இறைவன் திருநாமம் நித்திய சுந்தரேசுவரர், திருநெடுங்களநாதர். இறைவியின் திருநாமம் ஒப்பிலாநாயகி. திருநெடுங்களம் என்றால் 'சமவெளியில் அமைந்த பெரிய ஊர்' என்று பொருள்.

இறைவன் கருவறையின் வெளிச்சுற்றில் சப்த கன்னியர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். சப்த கன்னியரில் ஐந்தாவதாக விளங்கும் வராகி அம்மன் சிறந்த வரப்பிரசாதி. மனித உடலும், பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள் வராகி அம்மன்.

இத்தலத்து வராகி அம்மன் தடைகளை நீக்கி திருமணம் வரம் கைகூட அருள்பவள். சப்த கன்னியரின் அருகிலேயே, அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட சோழர் காலத்து உரல் ஒன்று உள்ளது.

வராகி அம்மனுக்கு வாரத்தில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், ராகு காலத்தின்போது சிற்ப உரலில், விரலி மஞ்சளை இடித்து அபிஷேகம் செய்தால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் கைகூடும். இந்த வழிபாட்டு முறை இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். திருமண வரம் வேண்டும் ஆண், பெண் என இருபாலரும், பெரும் அளவில், இத்தலத்தில் இந்த வழிபாட்டை மேற்கொள்கிறார்கள்.

பிரார்த்தனை

வளர்பிறை பஞ்சமி திதியில் வராகி அம்மனை வழிபடுவது மிகுந்த நற்பலன்களை தரும். பகை, வறுமை, பிணி, தடைகள் அகலும். பில்லி, சூன்யம், மாந்திரீகம் விலகி ஓடும். எதிரிகள் ,பகைவர்கள், தீயோர் விலகிடுவர்.

Read More
திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோவில்

திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோவில்

சண்டிகேசுவரர் தனது மனைவி பவித்ரையுடன் எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி

திருவாரூரில் இருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருப்புகலூர். இறைவன் திருநாமம் அக்னிபுரீஸ்வரர், கோணபிரான். இறைவியின் திருநாமம் கருந்தார் குழலி, சூளிகாம்பாள்.

பொதுவாக சிவாலயங்களில் இறைவனின் கருவறையை சுற்றி வரும்போது, கருவறை அபிஷேக நீர் விழும் கோமுகி அருகில் சிறு சந்நிதியில் இருக்கும் சண்டிகேசுவரர் எப்போதும் தியானத்தில் இருப்பவர், சிவபெருமானுக்கு படைக்கப்படும் பொருள்கள், சண்டிகேசுவரரின் பெயரால் கணக்கு வைக்கப்படுகின்றன. "சிவன் சொத்து குலநாசம்' என்பர். அதனால், சிவாலயத்திலிருந்து எந்தவொரு பொருளையும் தாங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை என்பதைத் தெரிவிக்கவே, இறுதியாக அவர் சந்நிதிக்கு வந்து இரு கைகளையும் தட்டிவிட்டு வணங்கும் வழக்கம் வந்ததாகக் கூறுவர். இவ்வாறு செய்தால் இவரது தியானம் கலைந்து விடும் அதனால் அவர் முன்பு கை தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குவதே சரியானது. சண்டிகேஸ்வரரை வணங்கினால் மன உறுதியும், ஆன்மிக பலமும், சிவாலய தரிசன பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில் சண்டிகேசுவரர் தனது மனைவி பவித்ரையுடன் எழுந்தருளி இருக்கிறார். இது நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத ஒரு அரிய காட்சியாகும்.

Read More
திருவையாறு ஐயாறப்பர் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

திருவையாறு ஐயாறப்பர் கோவில்

குகனுக்காக, வில்லும் அம்பும் ஏந்தி ராமராக காட்சியளித்த முருகப்பெருமான்

தஞ்சாவூரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் காவிரிக் கரையில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருவையாறு. இறைவன் திருநாமம் ஐயாறப்பர். இறைவியின் திருநாமம் தர்ம சம்வர்த்தினி.

இக்கோவிலில் அமைந்துள்ள வேலவன் கோட்டம் என்ற சன்னதியில் முருகப்பெருமான் வில்லும் அம்பும் ஏந்தி, தனுசு சுப்பிரமணியயராக வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். இப்படி இவர் ராமர் போல், வில்லும் அம்பும் ஏந்தி காட்சி அளிப்பதற்கு, இராமாயண காலத்து நிகழ்ச்சி ஒன்றுதான் காரணம். ராவணனிடம் இருந்து சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய ராமர், அங்கு பட்டாபிஷேகம் செய்து கொண்டு அயோத்தியை ஆளத் துவங்கினார். அப்போது தன்னுடைய சொந்த ஊரான சிருங்கிபேரபுரத்தில் தங்கி இருந்த குகனுக்கு, ராமருடைய பிரிவை தாங்கிக் கொள்ள முடியவில்லை. ராமரைக் காண வேண்டும் என்று முருகரிடம் குகன் பிரார்த்திக்க, முருகர் கோதண்ட ராமனாகவும், வள்ளி சீதையாகவும், தெய்வயானை லட்சுமணராகவும் காட்சி கொடுத்தனராம்.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார்.

Read More
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்

தட்சிணாமூர்த்தி உற்சவராக தேரில் வரும் தலம்

கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் ஆலங்குடி. இறைவன் திருநாமம் ஆபத்சகாயேஸ்வரர். இறைவியின் திருநாமம் ஏலவார்குழலி என்ற சுக்ரவார அம்பிகை. இக்கோவில் 1900 ஆண்டுகள் பழமையானது.

நவக்கிரகத் தலங்களில், ஆலங்குடி குரு தலமாக விளங்குகிறது. இத்தலத்து தட்சிணாமூர்த்தி மிகவும் விசேடமானவர். இவருக்கு குரு தட்சிணாமூர்த்தி என்ற சிறப்பு பெயரும், இத்தலத்துக்கு தட்சிணாமூர்த்தித் தலம் என்ற பெயரும் உண்டு. தட்சிணாமூர்த்தி உற்சவராக தேரில் பவனி வருவது தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான்.

பிரார்த்தனை

14 ஜன்மங்களில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே, ஆலங்குடிக்கு ஒருவர் வரக்கூடும் என்பது நம்பிக்கை. பொதுவாக எல்லா ராசி அன்பர்களும் குரு பெயர்ச்சிக்கு பரிகாரமாக ஆலங்குடி சென்று குருவுக்கு பிரீதி செய்வது வழக்கம். குரு தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்தும், 24 நெய் தீபங்கள் ஏற்றியும் வழிபட குரு தோஷங்கள் நீங்கி நன்மை பெறலாம். முல்லை மலரால் அர்ச்சனை, மஞ்சள் வஸ்திரம் சாற்றுதல், கொண்டைக் கடலைச் சுண்டல், சர்க்கரைப் பொங்கல் நிவேதனங்களுடன், சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பாலாபிஷேகம், குரு ஹோமம் செய்ய சகல தோஷங்களும் நிவர்த்தியாகும். வாரந்தோறும் வியாழக்கிழமை, தினசரி வரும் குரு ஹோரை மற்றும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்கள் மற்றும் அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் குரு பகவானை வழிபடுதல் சிறந்தது.

இவரை வழிபடுவதால், ஆயுள், ஆரோக்கியம், சந்தானப் பேறு, புகழ், ஐஸ்வரியம் ஆகிய யாவும் குறைவிலாது கிட்டும் என்பது நம்பிக்கை.

Read More