
திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோவில்
பள்ளியறை இல்லாத, பள்ளியறை பூஜை நடைபெறாத தேவார தலம்
சீர்காழியில் இருந்து 14 கி.மீ. தொலைவில் வங்கக் கடலோரம் அமைந்துள்ள தேவாரத் தலம், திருமுல்லைவாசல். இறைவன் திருநாமம் முல்லைவனநாதர், மாசிலாமணீசர். இறைவியின் திருநாமம் அணிகொண்ட கோதையம்மை. சத்தியானந்த சவுந்தரி.
எல்லா பெரிய சிவத்தலங்களிலும் பள்ளியறை உண்டு. தினமும் அதிகாலை வேளையிலும், இரவு வேளையிலும் பள்ளியறை பூஜை நடப்பது வழக்கம். ஆனால் இக்கோவிலில் பள்ளியறை இல்லை. பஞ்சாட்சர மந்திரம் பற்றி அறிந்து கொள்ள இங்குள்ள முல்லைவன நாதரை அம்பாள் வழிபட்டதால், சிவபெருமான் குருவாக இருந்து அம்பாளுக்கு உபதேசித்தார். எனவே இத்தலத்தில் சிவபெருமான் குருவாக வீற்றிருக்கிறார். உமாதேவி வழிபட்டுத் தட்சிணாமூர்த்தியிடம் ஐந்தெழுத்து உபதேசம் பெற்ற தலமாதலால், இங்கு பள்ளியறை பூஜையும் நடத்துவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இது மற்ற சிவன் கோவிலில் இருந்து மாறுபட்ட நடைமுறையாகும். சூரிய, சந்திர கிரகணம், அமாவாசை காலங்களில் இங்கு வந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு மறு பிறப்பில்லை என்பது ஐதீகம்.

திருவாரூர் தியாகராஜர் கோவில் - திருவாரூர் அரநெறி
தஞ்சாவூர் பெரிய கோவில் விமானத்துக்கு மாதிரியாக திகழ்ந்த சன்னதி விமானம்
நமிநந்தி அடிகள் நாயனாருக்காக, சிவபெருமான் தண்ணீரில் விளக்கெரிய செய்த அற்புதம்
தேவாரப் பாடல் பெற்ற 276 தலங்களில், மூன்று தலங்களில் மட்டும் தான் இரண்டு சன்னதிகள் தனித்தனியே தேவார பாடல்கள் பெற்றுள்ளன. அவை திருவாரூர், திருப்புகலூர், திருமீயச்சூர் ஆகியவை ஆகும். திருவாரூர் தியாகராஜர் கோவிலில் புற்றிடம் கொண்ட நாதர் சன்னதியும், அசலேசுவரர் சன்னதியும் தனித்தனியே தேவாரப் பாடல்களில் போற்றப்பட்டுள்ளன. ஒரு மன்னருடைய வேண்டுகோளின்படி இறைவன் சலியாது எழுந்தருளி இருப்பதால், அசலேசுவரர் எனப் பெயர் பெற்றார்.
இந்த அசலேசுவரர் சன்னதி தியாகராஜர் கோவில் வளாகத்தின் அக்னி மூலை (தென்கிழக்கு) பகுதியில் அமைந்துள்ளது. அசலேசுவரர் கருவறை, அர்த்த மண்டபம், வெளியிலுள்ள கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகிய பகுதிகளே திருவாரூர் அரநெறி என்ற தேவாரத் தலமாக கருதப்படுகிறது. இந்த சன்னதியின் விமானம் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் கட்டிட வடிவமைப்பை மாதிரியாக கொண்டுதான், பிரகதீஸ்வரர் கோவில் விமானம் அமைக்கப்பட்டது. அசலேசுவரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழாது.
நமிநந்தியடிகள் நாயனார் என்பவர், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். சிவபெருமானின் தீவிர பக்தர். அனுதினமும் திருவாரூர் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுவார்.
ஒரு நாள் அவர் இக்கோவிலுக்குச் சென்றபோது, அதில் எண்ணெய்/நெய் இல்லாததால் விளக்குகள் அணையப் போவதைக் கண்டார். தொலைவில் வசிப்பதால், விளக்கு எரிய வைக்க எண்ணெய்க்காக பக்கத்து வீடுகளை அணுகினார். அக்கம்பக்கத்தினர், வித்தியாசமான சமய நம்பிக்கை கொண்டவர்கள். உங்களுடைய சிவபெருமான் பெரிய கடவுளாக இருந்தால் இந்த விளக்குகளை தண்ணீர் கொண்டு எரிய வைக்க முடியும் என்று கேலி செய்தார்கள். ஏமாற்றமடைந்த நமிநந்தியடிகள் மீண்டும் கோவிலுக்குச் சென்று, இறைவன் முன் கதறி அழுதார். சிவபெருமான், நமிநந்தியடிகள் முன் தோன்றி, கோவில் குளத்திலிருந்து தண்ணீரை எடுத்து விளக்கேற்றச் சொன்னார். அடிகளார் அவ்வாறு தண்ணீரை நெய்க்குப் பதிலாகப் பயன்படுத்தியபோது, முன்னெப்போதையும் விட கோவில் விளக்குகள் பிரகாசித்தன. இச்சம்பவத்தையும், அடிகளாரின் பக்தியையும் கேள்விப்பட்ட சோழ மன்னன், அடிகளாரை ஆலய நிர்வாகத் தலைவராக்கியதுடன், இக்கோவிலுக்கு ஆதரவாக பல மானியங்களையும் வழங்கினார்.
நமிநந்தி அடிகள் நாயனார் இத்தலத்தில் தண்ணீரால் விளக்கேற்றிய செய்தியை தனது தேவாரத்தில் திருநாவுக்கரசர் குறிப்பிட்டுள்ளார்.

திருவையாறு ஐயாரப்பர் கோவில்
எமபயத்தை நீக்கும் ஆட்கொண்டார்
நாட்பட்ட வியாதிகளை தீர்க்கும் ஆட்கொண்டார் வழிபாடு
தஞ்சாவூருக்கு வடக்கே 15 கி மீ தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருவையாறு. இறைவன் திருநாமம் ஐயாரப்பர். இறைவியின் திருநாமம் தர்ம சம்வர்த்தினி, அறம் வளர்த்த நாயகி.
தெற்கு கோபுர வாசலில் இடது புறமாக ஆட்கொண்டார் சன்னதியும், வலது புறமாக உய்யக்கொண்டார் சன்னதியும் இருக்கின்றன. திருக்கடவூர் கால சம்ஹாரமூர்த்தியைப் போல, திருவையாறு ஆட்கொண்டாரை வழிபாடு செய்தாலும் நீண்ட ஆயுள் கிட்டும். கூடவே நாட்பட்ட வியாதிகளைக்கூட இத்தல ஆட்கொண்டார் வழிபாடு தீர்த்துவிடுவதாக ஐதீகம். இந்த ஆட்கொண்டேசரே, திருவையாறு மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறார்.
ஆட்கொண்டார் எமபயத்தை போக்கி அருள் புரிபவர். முன்னொரு காலத்தில் சுசரிதன் என்ற அந்தணச் சிறுவன் தந்தையும், தாயும் இறந்தபின் மிக்க வருத்தம் கொண்டு, தல யாத்திரை மேற்கொண்டான். அப்போது வழியில் திருப்பழனம் என்ற ஊரில் தங்கியிருந்தான். ஒருநாள் இரவு அவனது கனவில் யமன் தோன்றி 'இன்றைக்கு ஐந்தாம் நாள் உன் உயிரை நான் பறித்து விடுவேன்' என்று உணர்த்தினார். அதைக் கேட்டு அச்சிறுவன் அஞ்சி வசிஷ்ட முனிவரை அணுக, அவரது அறிவுரையின்படி திருவையாறு சென்று சிவதரிசனம், பஞ்சாக்கர ஜபம் முதலியன செய்து வரலானான். வசிஷ்ட முனிவரும் சிறுவனுக்காக ஜபம் செய்யலானார். யமன் ஐந்தாம் நாள் சிறுவன் முன் தோன்றினான். ஐயாற்று எம்பெருமான் துவாரபாலகரை ஏவி அந்தணச் சிறுவனைக் காக்குமாறு பணித்தார். அஞ்சாது எதிர்த்த யமனை துவாரபாலகர்கள் அடக்கினர். பின் சிவபெருமானும் தெற்கு வாயிலின் மேற்புறத்தே தோன்றி சுசரிதனுக்கு ஆயுள் அருளி, எமனையும் சிறுவனின் உயிரை பறிக்க கூடாது என்று உத்தரவிட்டார்.
இவ்விதம் சிறுவனுக்கு எம பயம் தீர்த்த இந்த மூர்த்தியே ஆட்கொண்டேசப் பெருமான் ஆவார். தனது காலின் கீழ் எமனை மிதித்தவாறு அருளும் அவரது திருவுருவம் அற்புதமானது.
இந்தச் சம்பவம் நடந்தது ஒரு கார்த்திகை மாத அஷ்டமி அன்று ஆகும். இந்தப் புராண வரலாற்றின் அடிப்படையில் ஒவ்வோராண்டும் கார்த்திகை மாத காலாஷ்டமி தினத்தன்று காலை காவிரியில் தீர்த்தவாரியும், ஆட்கொண்டார் சந்நிதியில் விசேஷ அபிஷேகங்கள், எண்ணற்ற அளவில் வடை மாலை சாத்துதல் போன்ற வைபவங்களும், இரவு எம் வாகனத்தில் ஆட்கொண்டார் உற்சவர் திருவீதி உலாவும் நடைபெறும்.
ஆட்கொண்டார் எமபயத்தை நீக்குபவர் என்பதால், சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் போன்ற சாந்தி நிகழ்ச்சிகளை இவ்வாலயத்தில் நடத்திக் கொள்வது மிகவும் சிறப்பானது.

திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில்
கால்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் காட்சி தரும் காளி அம்மன்
திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவார தலம் திருப்பாச்சூர். இறைவன் திருநாமம் வாசீஸ்வரர். இறைவியின் திருநாமம் தங்காதலி. இத்தலம் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
இக்கோவிலில் காளி அம்மன் தனி சன்னதியில் தன் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் காட்சி தருகிறாள். இதன் பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.
ஒருமுறை குரும்பன் என்ற உள்ளூர் தலைவன், சோழ மன்னன் கரிகாலனுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தத் தவறினான். குரும்பன், காளி தேவியின் தீவிர பக்தன். நிலுவைத் தொகையை மீட்பதற்காக மன்னன் தன் பகுதிக்கு படையெடுத்த போது, அரசனையும் அவனது படையையும் தோற்கடிக்க உதவும்படி காளியிடம், குரும்பன் வேண்டிக் கொண்டான். சோழ மன்னன் கரிகாலன், சிவபக்தனாக இருந்ததால் சிவபெருமானிடம் உதவிக்காக வேண்டினான். சிவபெருமான் காளியை கட்டுப்படுத்தவும், கட்டவும் நந்தியை அனுப்பினார். நந்தி காளியை தோற்கடித்து அவளை தங்கச் சங்கிலியால் கட்டினார். இந்த சம்பவத்தை எடுத்துரைக்கும் வகையில், இந்தக் கோவில் காளி தேவியின் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் உள்ளன. இவள் சொர்ண காளி என்று அழைக்கப்படுகிறாள்.

திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவில்
தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் பிரம்மாண்டமான நெற்களஞ்சியம்
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பாபநாசத்தை அடுத்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருப்பாலைத்துறை. இறைவன் திருநாமம் பாலைவனநாதர்.இறைவியின் திருநாமம் தவளவெண்ணகையாள்.
இந்தக் கோவிலின் ராஜகோபுரத்தை ஒட்டி 1640ம் ஆண்டு கட்டப்பட்ட நெற்களஞ்சியம் ஒன்று உள்ளது. இந்த அபூர்வ நெற்களஞ்சியம் (நெற்குதிர்) தஞ்சையை ஆட்சி செய்த அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர் போன்ற நாயக்க மன்னர்களின் ஆட்சியின் போது அமைச்சராக திகழ்ந்த கோவிந்த தீட்சிதர் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் கீழ்ப்பகுதி கருங்கல்லிலும், மேற்பகுதி செங்கற்களாலும் காணப்படுகிறது. மேல் பகுதி ஒரே கூம்பு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெற்களஞ்சியம் வட்ட வடிவம் கொண்டது. இதன் உயரம் 35 அடி, சுற்றளவு 80 அடி. பலத்த மழை பெய்தாலும் உள்ளே வெள்ள நீர் புகாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இந்த நெற்களஞ்சியம், நம் முன்னோர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
நெற்களஞ்சியத்தின் அடிப்பகுதி, மேற்பகுதி, நடுப்பகுதி என மொத்தம் 3 பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வாயில் என மூன்று வாயில்கள், நெல்லை உள்ளே கொட்டுவதற்கும், வெளியே எடுத்து வருவதற்கும் வசதியாக களஞ்சியத்தின் சுவரில் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் அடிப்பகுதியில் உள்ள வாயில் வழியாக நெல்லை கொட்டுவார்கள். அந்த வாயில் பகுதி வரை நெல் நிரம்பியவுடன், அதை அடைத்துவிட்டு, 2-வது வாயில் வழியாக நெல்லை கொட்டுவார்கள். அந்த வாயில் பகுதியும் நிரம்பியவுடன், 3-வது வாயில் வழியாக நெல்லை கொட்டுவார்கள். 3 வாயில்களும் நிரம்பினால் நெற்குதிர் நிரம்பி விடும். சுமார் 3 ஆயிரம் டன் வரையிலான நெல்லை இந்த குதிரில் சேமிக்கலாம்.
தானியங்கள் விஷ பூச்சிகளுக்கு, இரையாகாமல் பாதுகாப்பதற்கு ஏற்ற தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட இந்த நெற்களஞ்சியம் வரலாற்று சின்னமாகவே கோயிலுக்கு வரும் பக்தர்கள் பார்க்கிறார்கள்.

திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில்
சிவராத்திரி அன்று மட்டும் தாழம்பூ பூஜைக்குப் பயன்படுத்தப்படும் தேவார தலம்
திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவார தலம் திருப்பாச்சூர். இறைவன் திருநாமம் வாசீஸ்வரர். இறைவியின் திருநாமம் தங்காதலி.
கருவறையில் சிவன் சுயம்பு லிங்கமாக சதுர வடிவ பீடத்தில் காட்சி தருகிறார். சிவலிங்கத்தின் மேல், கோடாரியால் வெட்டப்பட்ட தழும்புகள் காணப்படுகிறது. மேலும் சிவலிங்கம் வெட்டுப்பட்டதால் அதன் மேல் பகுதி மட்டும் இடப்புறத்தில் சற்று நகர்ந்தபடியான கோலத்தில் இருப்பது சிறப்பு. காயம்பட்ட லிங்கம் என்பதால், இந்த சிவலிங்கம் மனித கைகளால் தொடப்படாமல், பூஜை செய்யப்படுகிறது.
மகா விஷ்ணுவும், பிரம்மாவும் சிவபெருமானின் அடி, முடி தேடியபோது, தான் ஈசனின் அடி முடியை கண்டதாக, தாழம்பூவை பொய் சாட்சி சொல்லும்படி பிரம்மா கெஞ்சினார். தாழம்பூவும் ஒத்துக்கொண்டது. அக்னி பேரொளியான சிவபெருமானிடம் சென்ற பிரம்மா, தங்களின் அடி முடியை தான் கண்டதாக கூற, தாழம்பூவும் ஆமாம் என்று பொய் சாட்சி கூறியது.பிரம்மனுக்காக பொய் சொன்ன தாழம்பூவை பூஜைகளில் இருந்து ஒதுக்கி வைத்தார் சிவபெருமான். தாழம்பூ சிவனிடம் தன்னை மன்னித்து பரிகாரம் வேண்டவே, சிவராத்திரி நாளில் மட்டும் தனது பூஜைக்கு பயன்படும்படி சிவபெருமான் வரம் கொடுத்தாராம். இதன் அடிப்படையில் இக்கோவிலில், சிவராத்திரி தினத்தன்று இரவு ஒரு கால பூஜையில் மட்டும் தாழம்பூவை சிவபெருமானின் உச்சியில் வைத்து பூஜை செய்கின்றனர்.

திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோவில்
சிற்ப நுட்ப, கலைத் திறன் கொண்ட கருங்கல் பலகணி
கருங்கல்லால் ஆன வேலைப்பாடுடன் கூடிய உயரமான குத்துவிளக்குகள்
கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள திருவலஞ்சுழி என்னும் சிற்றூரில் அமைந்துள்ள வலஞ்சுழிநாதர் கோவில் என்று அழைக்கப்படுகின்ற, தேவாரப்பாடல் பெற்ற, சிவன் கோவில் வளாகத்தில் வெள்ளை விநாயகர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் கடல் நுரையாலான வெள்ளை நிற பிள்ளையார் எழுந்தருளி உள்ளார். வெள்ளை நிற பிள்ளையார் சன்னதி தேர் வடிவில் அமைந்துள்ளது. தேர்ச்சக்கரம் சற்றே புதைந்த நிலையில் காணப்படுகிறது. அந்த வாயிலின் மேலே விதானத்தில் கருங்கல்லால் ஆன வேலைப்பாடு அழகாக உள்ளது. சுற்றிவரும்போது வேலைப்பாடுடன் கூடிய கொடுங்கையைக் காணமுடியும்.
வெள்ளை விநாயகர் கோவிலின் தூண் மண்டபமும், கருவறையும் அழகான வேலைப்பாடுகளுடன் காண்போரைக் கவரும் வகையில் அமைந்துள்ளன. சித்திரத் தூண்களும், கல்குத்துவிளக்கும் கொண்ட அழகான மண்டபமாக இது விளங்குகிறது.இந்த சன்னதியில் உள்ள சிற்பத் தூண்களும், சிற்ப நுணுக்கம் மிகுந்த அடைவுகளும் உலகச் சிறப்பு வாய்ந்தன. தூண்களின் அமைப்பு வித்தியாசமாகக் காணப்படுகிறது. தூண்களைக் கடந்து உள்ளே போகும்போது கருங்கல்லால் ஆன வேலைப்பாடுடன் கூடிய உயரமான குத்துவிளக்குகள் காணப்படுகின்றன. இந்த குத்துவிளக்குகள் இச்சன்னதியின் தனித்துவங்களில் ஒன்றாகும்.
புகழ்பெற்ற கருங்கல் பலகணி
வெள்ளை விநாயகர் சன்னதியின் எதிரில், புகழ்பெற்ற திருவலஞ்சுழி கருங்கல் பலகணி (கருங்கல் ஜன்னல்) இங்கே உள்ளது. கோஷ்டங்களில் காணப்படும் கருங்கல்லால் ஆன ஜன்னல்களும் பார்ப்பவர் மனதை ஈர்க்கும் வகையில் உள்ளன. அக்காலத்தில் கோவில் கட்டுவதற்கு சிற்பிகள் எழுதித்தரும் ஒப்பந்தப் பத்திரத்திற்கு முச்சிளிக்கா என்று பெயர். அதில் அவர்கள் முக்கிய நிபந்தனையாக விதிப்பது என்னவென்றால், திருவலஞ்சுழி கோவில் பலகணி, ஆவுடையார் கோயில் கொடுங்கை, கடாரம் கொண்டான் கோவில் மதில், தஞ்சைப் பெரிய கோபுரம், திருவீழிமிழலை கோவிலுள் உள்ள வௌவால்நத்தி மண்டபம் போன்ற வேலைப்பாடுகள் தவிர, வேறு எந்த வேலைப்பாடும் செய்து தர முடியும் என்று குறிப்பிடுவார்களாம். இவ்வாறாக நிபந்தனை விதிக்கும் அளவு மிகவும் நுட்பமான வேலைப்பாடுகளைக் கொண்டதாக அந்த வேலைப்பாடுகள் அமைந்திருக்கின்றன.
சிற்ப நுட்ப, கலைத் திறன் கொண்ட திருவலஞ்சுழி கருங்கல் பலகணி 9 அடி உயரமும், 7 அடி அகலமும் கொண்டுள்ளது. இந்த கருங்கல் பலகணி மிகச் சிறந்த தத்துவங்களை உள்ளடக்கியது. இந்தப் பலகணியில் 4 தூண்களும், 111 கண்களும், 49 மலர்களும், 24 கர்ண துவாரங்களும், 10 யாளிகளும் உள்ளன. மூன்று பாகங்களாக குறுக்குவாட்டில் ஒரே கல்லினாலும், நெடுக்குவாட்டில் ஒன்றன் மீது ஒன்றாக மூன்று கற்களினாலும் அமைக்கப்பட்டுள்ளது.
நெடுக்குவாட்டு கற்கள் மும்மூர்த்திகளையும், மூன்று தத்துவங்களையும், 4 தூண்கள் 4 யுகங்களையும், 111 கண்கள் மந்திரங்களையும், 49 மலர்கள் ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றையும், 24 கர்ண துவாரங்கள் அஷ்ட மூர்த்திகள், அஷ்ட ஐஷ்வர்ய சித்திகள் மற்றும் எட்டு வசுக்களையும், 10 யாளிகள் எட்டு திசைகளுடன் பாதாளம் மற்றும் ஆகாசம் என 10 திக்கு நாயகர்களையும் குறிப்பதாக உள்ளன.

திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோவில்
தலையில் குண்டலினி சக்தியுடன் காட்சியளிக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
நாடிஜோதிடம் துவங்கிய கோவில்
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து 13 கி.மி. தெற்கே, அமைந்த தேவார தலம் திருக்காரவாசல். இறைவன் திருநாமம் கண்ணாயிரநாதர். இறைவியின் திருநாமம் கைலாச நாயகி. இக்கோவில் சப்தவிடங்க தலங்களுள் ஆதி விடங்கத் தலம். திருவாரூர், திருக்கோளிலி, திருமறைக்காடு, திருவாய்மூர், திருநள்ளாறு, திருநாகைக்காரோணம் ஆகியவை மற்ற சப்தவிடங்கத் தலங்களாகும். இங்குள்ள தியாகராஜர் சன்னதி விசேஷம். இவரது நடனம் 'குக்குட நடனம்' என்று வழங்கப்படுகிறது. அதாவது சேவல் அசைந்து செல்வது போல் இருக்கும்.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி 'ஞான தட்சிணாமூர்த்தியாக' அருள்பாலிக்கிறார். அவர், தலையில் குண்டலினி சக்தியுடன் காட்சியளிப்பது அபூர்வமான ஒன்று. ஞானமகாகுருவின் எதிரில் அகத்தியர் சுவடி படிக்கும் காட்சி அமைந்திருக்கிறது. அதனால் நாடிஜோதிடம் துவங்கிய கோவில் இது என்று கருதப்படுகிறது.

திருசோபுரம் சோபுரநாதர் கோவில்
தட்சிணாமூர்த்தியின் திருமேனியைத் தட்டினால் மரத்தை தட்டின ஒலி எழும் அதிசயம்
மஞ்சள் வஸ்திரத்திற்கு பதிலாக வித்தியாசமாக வெள்ளை வஸ்திரம் அணியும் தட்சிணாமூர்த்தி
கடலூர் – சிதம்பரம் சாலையில், 18 வது கி.மீ. தொலைவில் உள்ள ஆலப்பாக்கம் என்ற ஊரில் இருந்து இரண்டு கி.மீ.தூரத்தில் உள்ள தேவார தலம் திருச்சோபுரம். இறைவன் திருநாமம் சோபுரநாதர், மங்களபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் சோபுர நாயகி, தியாகவல்லியம்மை.கோயில் உள்ள பகுதி திருச்சோபுரம் என்றும், பக்கத்தில் உள்ள பகுதி தியாகவல்லி என்றும்
அழைக்கப்படுகிறது. திரிபுவனச் சக்கரவர்த்தி முதல் குலோத்துங்கனின் பட்டத்து மனைவியான தியாகவல்லியால் திருப்பணி செய்யப்பட்ட காரணத்தால், இத்தலம் தியாகவல்லி என்று பெயர் பெற்றது.
இத்தலத்து தட்சிணாமூர்த்தி சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். வழக்கமாக வலது கையில் நாகமும், இடது கையில் அக்னியும் ஏந்தியிருக்கும் தட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் இடது கையில் நாகம், வலது கையில் அக்னி என மாற்றி வைத்துள்ளார். மேலும் அவர், இத்தலத்தில் இசையின் வடிவமாக அருளுகிறார். கருங்கல்லாலான இவரது திருமேனியை தட்டிப் பார்த்தால், மரத்தை தட்டினால் எந்த ஓசை எழுமோ, அந்த ஓசை கேட்கிறது. இத்தகைய தட்சிணாமூர்த்தியை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இவர் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு ஞானத்தை அருள்வதால், இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவிக்காமல், வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுவது மற்றுமொரு சிறப்பம்சம்.
இசையில் வல்லமை பெற விரும்புபவர்கள், இசையின் வடிவமாக விளங்கும் இவருக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக் கொள்கின்றனர்.

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்
திருவண்ணாமலை மகாதீபத்தின் சிறப்புகள்
பஞ்சபூதங்களுக்குரிய தலங்களில் நெருப்புக்குரியது திருவண்ணாமலை. இத்தலத்தை நினைத்தாலே முக்தி தரும். இங்கு சிவபெருமானே மலையாக அமர்ந்திருப்பதாக ஐதீகம். அதனால் தான் மலையை கிரிவலமாக வந்து வழிபடுவது, சிவபெருமானை வலம் வந்து வணங்குவதற்கு இணையாகக் கருதப்படுகிறது.
திருவண்ணாமலையின் சிறப்புகளுக்கு முதன்மையானதாக இருப்பது திருக்கார்த்திகை அன்று மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபம் தான். இது போல் மலை உச்சியில் தீபம் ஏற்றி வழிபடும் வழக்கம் வேறு எந்த கோவிலிலும் கிடையாது. திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்ற பயன்படுத்தும் கொப்பரை சுமார் 2 ஆயிரம் லிட்டர் நெய் பிடிக்கும் அளவு கொண்டது. மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளி சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு தெரியும். இந்த தீபம் சுமார் 11 நாட்கள் தொடர்ந்து எரியும் என்பது குறிப்பிடத்தக்கது..
திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்கள் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.
திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து நமசிவாய சொன்னால் அந்த மந்திரத்தை 3 கோடி முறை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும்.
திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் போது மலைக்கு உள் பகுதியிலும், பூஜைகள் நடக்கும் ஒலி கேட்டதாக ரமணர், சேஷாத்திரி சுவாமிகள் உள்பட பல அருளாளர்கள் கூறியுள்ளனர்.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு அதைப் பார்த்து வணங்கிய படி கிரிவலம் வந்தால், அந்த ஜோதியின் கதிர்கள் நம் உடம்பில் பட்டு ஆன்மசக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
தீபத் திருநாளில் 5 முறை (மொத்தம் 70 கி.மீ. தூரம்) கிரிவலம் வந்தால், அவர்கள் எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும், அவற்றில் இருந்து முழுமையான விமோசனம் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
மலை மீது தீபம் ஏற்றப்படும் போது,'தீப மங்கள ஜோதி நமோ !நம' என்ற பாடலை பாடி வழிபட்டால் வாழ்வில் மங்களம் பெருகும்.
கார்த்திகைத் தீபத்துக்கு மூன்றாவது நாள் மலையை பஞ்ச மூர்த்திகளும் வலம் வருவது மிகச்சிறப்பாக நடைபெறும். அப்போது நாமும் கிரிவலம் வருவது மிகப் பெரிய புண்ணிய பலனை தரும்.
கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செல்பவர்களுக்கு ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
கார்த்திகை தீபம் தினத்தன்று சிவலிங்கம் முன்பு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், அவர்களது வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்பது நம்பிக்கை.
கார்த்திகை தீபம் ஏற்றப்படும் காட்சியை நேரில் பார்த்து வழிபடுபவர்களுக்கு, சகல தானம் கொடுப்பதால் கிடைக்கும் புண்ணியங்கள் கிடைக்கும்.
கார்த்திகை மாதம்,கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலை தலத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

திருசோற்றுத்துறை ஓதவனேஸ்வரர் கோவில்
பக்தர்களின் பசியைப் போக்கிய பரமன்
சிவபெருமான், காசிக்கு அடுத்தபடியாக அட்சய பாத்திரம் கொடுத்த தலம்
தஞ்சாவூரில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருசோற்றுத்துறை ஓதவனேஸ்வரர் கோவில். இத்தல இறைவனுக்கு சோற்றுத்துறை நாதர் என்ற பெயரும் உண்டு. இறைவியின் திருநாமம் அன்னபூரணி, ஒப்பிலா அம்மை.
‘சோறு' என்றால் 'முக்தி' என்ற பொருளும் உண்டு. பசிப்பிணி போக்கியதால் இத்தலத்து மூலவர் 'ஓதனவனேஸ்வரர்' என்று அழைக்கப்படுகின்றார். 'ஓதனம்' என்றால் 'அன்னம்' என்று பொருள். இத்தல இறைவனை வழிபடும் அடியார்களின் பசிப்பணி தீர இறைவன் சோறு வழங்குபவன் என்னும் பொருளைத் தருவதுடன், உயிரைப் பற்றிய பிறவிப் பிணி தீர வீடுபேறு தருபவன் என்ற பொருளும் உண்டு. அம்பிகையை மனதார வழிபட்டால், வறுமையும் பிணியும் விலகி விடும். திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில், இத்தலம் மூன்றாவது தலமாகும்.
ஒரு முறை திருச்சோற்றுத்துறை பகுதியில் பஞ்சம் ஏற்பட்டு மக்கிள் பசியால் வாடினர். இத்தலத்தில் வசித்து வந்த அருளாளர் என்ற சிவபக்தரும் பஞ்ச காலத்தில் பசியால் அவதிப்பட்டார். வருந்திய அருளாளன் இத்தல இறைவனிடம், பஞ்சத்தை தீர்த்து உணவு வழங்குமாறு முறையிட்டார். திடீரென்று மழை பொழிய ஊரே வெள்ளக் காடானது. அப்போது ஒரு பாத்திரம் வெள்ளத்தில் மிதந்து வந்தது. இதைப்பார்த்த அருளாளர் அதை கையில் எடுக்க, இறைவன் 'அருளாளா! இது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம். இதை வைத்து அனைவருக்கும் சோறு போடு' என்று அசரீரியாக குரல் கொடுத்து அருள் செய்தார். அருளாளன், இந்த பாத்திரத்தை கையில் வைத்தபடி ஊராருக்கு சோறும், நெய்யும், குழம்புமாக போட்டு அவர்களின் பசி தீர்த்தார். அள்ள அள்ளக் குறையாமல் அன்னம் வழங்கிய சிவபெருமானுக்கு தொலையாச்செல்வர் என்ற பெயரும் உண்டு. இத்தலம் காசிக்கு அடுத்தபடியாக அட்சய பாத்திரம் கொடுத்த தலமாகும்.
இறைவன் அருளால் மக்களின் பசியைப் போக்கிய அருளாளருக்கும், அவர் மனைவிக்கும் இத்தலத்தில் கருவறை அர்த்த மண்டபத்திற்கு வெளியே சிலை உள்ளது. சப்தஸ்தான விழாவில் ஏழூர்வலம் வரும் அடியார்களுக்கு இங்கு அன்ன தானம் நடைபெறுகிறது.

இரும்பை மாகாளேசுவரர் கோவில்
நவக்கிரகங்கள் தங்கள் மனைவியுடன் காட்சி அளிக்கும் தனிச்சிறப்பு
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வானூர் வட்டத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம், இரும்பை மாகாளேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மதுரசுந்தர நாயகி. இத்தலம் திண்டிவனத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
பொதுவாக சிவாலயங்களில் நவக்கிரகங்கள் ஒரு மண்டபத்தில் அமைந்துள்ள பீடத்தின் மேல், நடுவில் இருக்கும் சூரியனைச் சுற்றி தனியாக எழுந்தருளி இருப்பார்கள். ஆனால் ஒரு சில தலங்களில் தான் தங்கள் மனைவியுடனும் அல்லது வாகனத்துடனும் காட்சி அளிப்பார்கள். ஆனால் இத்தலத்தில் நவக்கிரகங்கள் தங்கள் மனைவியுடன் எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும்.

திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோவில்
நாகங்களை திருமேனியில் தரித்திருக்கும் அபூர்வ சர்ப்ப கால பைரவர்
திருச்சி – தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள துவாக்குடி என்ற ஊரிலிருந்து, நான்கு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் நெடுங்களம். இறைவன் திருநாமம் நித்திய சுந்தரேசுவரர், திருநெடுங்களநாதர், இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி.
இந்தத் தலத்தில் சேத்திர பைரவர், சர்ப்ப கால பைரவர் என்று இரண்டு பைரவர்கள் அருள் பாலிக்கிறார்கள். சேத்திர பைரவர் வாகனத்துடனும் தற்பகால பைரவர் வாகனம் இல்லாமலும் எழுந்தருளி இருக்கிறார்கள். சர்ப்ப கால பைரவர் தனது கையில் ஒரு நாகத்தையும், வலது கால் மற்றும் இடது கால் இரண்டிலும் நாகங்கள் சுற்றத் தொடங்கி, திருமேனி முழுவதும் படர்ந்து இருக்கின்றன. இப்படி திருமேனி முழுவதும் சர்ப்பங்கள் பின்னி படர்ந்திருக்கும் காலபைரவரை வேறு தலத்தில் நாம் தரிசிப்பது அரிது.
இந்த சர்ப்ப கால பைரவரை வழிபட்டால், கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை விலகும். பாம்பு சம்பந்தப்பட்ட கெட்ட கனவுகள் நின்று விடும். தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாட்டுக்கு உகந்த நாள். அதிலும் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி, காலபைரவாஷ்டமி என்று போற்றப்படுகிறது. பைரவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மலர்கள் சமர்ப்பித்து, செவ்வாழைப் பழம் நைவேத்தியம் வைத்து, தேங்காய் அல்லது பூசணிக்காயில் நெய் தீபமேற்றி வழிபாடு செய்ய, துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் பெருகும். பைரவரை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், யம பயம் இருக்காது, திருமணத் தடை அகலும். சந்தான பாக்கியம் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள்.

திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோவில்
திருஞானசம்பந்தருக்கு சிவபெருமான் முத்துச் சிவிகை, முத்துக் குடை அளித்த தலம்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் இருந்து, 25 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி.
திருஞானசம்பந்தர் சீர்காழியில் உமையம்மை கையால் ஞானப்பால் பெற்று பதிகம் பாடி, சைவ சமயத்தை சிறப்பிக்க சிவபெருமான் குடிகொண்டிருக்கும் தலங்களுக்கெல்லாம் திருயாத்திரை தொடங்கினார். சம்பந்தர் சிறு பாலகனாக இருந்ததால் அவருடைய தந்தையார், சம்பந்தரைத் தூக்கிக்கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது.
திருதூங்காணைமாடம் சிவத்தலத்தை தரிசித்து திருவட்டத்துறை நோக்கிச் செல்லும்போது, தந்தை தோள்மீது எழுந்தருள்வதை விட்டு நடந்தே சென்றார். சம்பந்தர் தன் சிற்றடிகள் நோக நடந்து செல்வதைக் கண்டு யாவரும் வருந்தினர். திருவட்டத்துறை செல்லும் வழியில் மாறன்பாடி என்ற இடத்தில் இரவு தன் அடியார்களுடன் சம்பந்தர் தங்கினார்.
அன்றிரவு, திருவட்டத்துறையிலிலுள்ள அடியார்கள், மற்றும் கோவில் பணியாளர்கள் கனவில் இறைவன் தோன்றி சம்பந்தர் கால்கள் நோகாமல் இருக்க தான் முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னங்கள் அளிப்பதாகவும், அவற்றை சம்பந்தரிடம் சேர்த்து அவரை ஆலயத்திற்கு அழைத்து வரும்படியும் ஆணையிட்டார். இதேபோன்று, சம்பந்தர் கனவிலும் தோன்றி இவ்விவரங்களைக் கூறி, முத்துச் சிவிகையில் ஏறிக்கொண்டு தன்னை தரிசிக்க வருபடியும் ஆணையிட்டார்.
மறுநாள் காலை, திருவட்டத்துறை அடியார்கள், கோவில் பணியாளர்கள் ஆலயத்தை திறந்து பார்க்க அங்கு முத்துச் சிவிகை, முத்துக் குடை, முத்துச் சின்னங்கள் ஆகியவை இருக்கக் கண்டு, இறைவனை கைகளைக் கூப்பி வணங்கினர். பின்னர் அவற்றை எடுத்துக்கொண்டு மாறன்பாடி சென்று சம்பந்தரிடம் கொடுத்து, அவரை முத்துச் சிவிகையில் உட்கார வைத்து, முத்துக் குடை நிழலில் திருவட்டத்துறை ஆலயம் அழைத்து வந்தனர். சம்பந்தரும் ஆலயம் வந்து இறைவனைத் தொழுது தேவாரப் பதிகம் பாடி வணங்கினார்.

இரும்பை மாகாளேசுவரர் கோவில்
மூன்று பாகங்களாக பிளந்து, மூன்று முகங்களுடன் இருக்கும் அபூர்வ சிவலிங்கம்
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வானூர் வட்டத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம், இரும்பை மாகாளேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மதுரசுந்தர நாயகி. இத்தலம் திண்டிவனத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது
முற்காலத்தில் மகாகாளர் எனும் மகரிஷி சிவதல யாத்திரையின் போது வடக்கே உஜ்ஜயினியில் ஒரு லிங்கமும், தெற்கே மயிலாடுதுறைக்கு அருகே அம்பர் மாகாளத்தில் ஒரு லிங்கமுமாக பிரதிஷ்டை செய்து வணங்கினார் அவர் கிழக்கே வந்தபோது இத்தலத்தின் மகிமையை அறிந்து இங்கேயும் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வணங்கினார். சுவாமியும் 'மகாகாளநாதர்' என்ற பெயர் பெற்றார்.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறையில் சிவலிங்கம் மூன்று பாகங்களாக பிளந்து மூன்று முகங்களுடன் இருக்கிறது இம்மூன்று பாகங்களையும் ஒரு செம்பு பட்டயத்தில் கட்டி வைத்து பூஜைகள் செய்கின்றனர் இம்முகங்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூரத்திகளை குறிப்பிடுகின்றன. சிவபெருமானின் இந்த மும்மூர்த்தி தரிசனம் மிகவும் அபூர்வமானது.

திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோவில்
சனி, செவ்வாய் தோஷங்களுக்கான பரிகார தலம்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் இருந்து, 25 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
ஒருமுறை, சனி பகவானும் செவ்வாய் பகவானும், சூரிய சந்திரர்களால் சபிக்கப்பெற்று, அதன் காரணமாக எலும்புருக்கி நோய்க்கு செவ்வாய் பகவானும், பெருநோய்க்கு சனி பகவானும் ஆளாகினர். செவ்வாய், சனி இருவரும் பிரம்மாவிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்ட நிலைக்கு விமோசனம் கிடைக்க வழி கூறும்படி கேட்டனர். பிரம்மாவின் அறிவுரைப்படி, இருவரும் பூலோகம் வந்து பல சிவத்தலங்களில் சிவபெருமானை வழிபட்டனர். இறுதியாக இத்தலம் வந்து கடும் தவம் புரிந்து இறைவனை வழிபட்டு தங்கள் தோஷமும், சாபமும் நீங்கப் பெற்றனர்.
சனி பகவானும் செவ்வாய் பகவானும் தங்கள் தோஷம் நீங்க இத்தலத்தில் சிவ பூஜை செய்து வழிபட்டதால், சனி தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இத்தலத்து தீர்த்தங்களில் நீராடி ஈசனை வழிபட்டால், அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். இத்தல விருட்சமான ஆலமரம் மக நட்சத்திரத்துக்கு உரிய மரமாகும். ஆகவே, மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தல இறைவனை வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
கலை நயம் மிக்க நுணுக்கமான சிற்பங்கள் கொண்ட திருப்பரங்குன்றம் கோவில்
மதுரைக்கு தென்மேற்கில் 8 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகும். முருகன் தெய்வானையை திருமணம் புரிந்த தலம் இது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில், ஆன்மீக பக்தர்களுக்கு மட்டுமல்லாமல், சுற்றுலா பயணிகளுக்கும் ஒரு முக்கிய ஈர்ப்பு தலமாகும். இக்கோவிலில் கலை நயம் மிக்க நுணுக்கமான சிற்பங்கள் பார்ப்பவர்களின் கண்ணுக்கு விருந்தாக அமைகின்றது.
கோவில் வாயிலை அடுத்து உள்ளே அமைந்துள்ளது ஆஸ்தான மண்டபம். இம்மண்டபம் சுந்தர பாண்டியன் மண்டபம் என்றும் வழங்கப்படுகிறது. அழகிய கண்கவர் கலை நயம் கொண்ட சிற்பங்களுடன், 48 தூண்களுடன் இம்மண்டபம் இராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது..
மண்டபத் தூண்களில் யாளிகள், குதிரை வீரர்கள், பத்திரகாளி, துர்க்கை, நர்த்தன விநாயகர், வீரபாகு, சிவனார் திரிபுரம் எரிக்கும் காட்சி, திருமால் மற்றும் மகா லட்சுமியின் சிற்பங்கள் அற்புத வேலைப்பாடுகளுடன் செதுக்கப் பெற்றுள்ளன.
பிரம்மன் வேள்வி வளர்த்துத் திருமணச் சடங்குகள் நடத்த, இந்திரன் தேவயானையை முருகனுக்குத் தாரை வார்த்துக் கொடுக்க, தேவயானையைக் கைத்தலம் பற்றிய பெருமிதத்துடன், அதே வேளையில் நாணம் கலந்த மகிழ்ச்சியுடன் இருப்பது போன்று முருகப் பெருமானின் திருமணக் கோலம் எழிலுற வடிவமைக்கப் பெற்றுள்ளது.
இக்கோவிலில் திருவாட்சி மண்டபம் என்னும் பெரிய கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்திற்கு ஆறுகால் மண்டபம் என்ற பெயரும் உண்டு. இம்மண்டபத்தின் முன் புறம் ஏறும் படிகளின் இரு பக்கங்களிலும் தேர் இழுக்கும் இரு குதிரைகள் உள்ளன. இவை ஒரே கல்லில் செய்யப்பட்டு கலை நயத்துடன் விளங்குகின்றன. இந்த குதிரைகளின் உடலில் காணப்படும் அணிகலன்கள் மிகுந்த நுணுக்கத்துடன் செய்யப்பட்டுள்ளன.
இம்மண்டபத்தின் தூண்களில் மீனாட்சி அம்மனின் திக்விஜயம், ஹயக்ரீவர், நரசிம்மர், ஆஞ்சநேயர், மன்மதன், ஆலவாய் அன்னல், வராகிஅம்மன் என்று பல்வேறு அழகிய, தெய்வீக சிற்ப சிலைகள் உள்ளன.
இறைவன் சத்தியகிரீசுவரர் சந்நிதி வாயிலிலுள்ள துவாரபாலர்களின் உருவங்களில் காணப்படும் ஆடை மடிப்பு கலையம்சங்களும், இதர சிற்ப அம்சங்களும் பிரமிக்கத்தக்கவையாக உள்ளன.

திருமாகாளம் மாகாளேசுவரர் கோவில்.
மறுபிறவியை தவிர்க்கும் அம்மனின் நெய்க்குளம் தரிசனம்
திருமணத்தடை நீங்க அரளி மாலை வழிபாடு
திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் என்னும் ஊருக்கு அருகில் உள்ள தேவார தலம் திருமாகாளம் மாகாளேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் பட்சயாம்பிகை (அச்சம் தவிர்த்த நாயகி). காளி அம்பன், அம்பாசூரன் என்னும் அசுரர்களை வதைத்த தோஷம் நீங்க இத்தலத்து இறைவனை வழிபட்டதால், அவருக்கு மாகாளநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் தான் சோமாசிமாற நாயனார் சோம யாகம் செய்தார்.
மாகாளம் என்ற பெயர் பெற்ற சிவதலங்கள் இந்தியாவில் மூன்று இடங்களில் இருக்கின்றன. அவை வட இந்தியாவிலுள்ள உஜ்ஜயனி மாகாளம், தொண்டை நாட்டுத் தலமான இரும்பை மாகாளம், மற்றும் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான அம்பர் மாகாளம் என்ற இத்தலம்.
இத்தலத்து அம்பாள் பட்சயாம்பிகை (அச்சம் தவிர்த்த நாயகி), பக்தர்களின் மன துயரத்தையும், மனதில் உள்ள அச்சத்தையும் தீர்க்கும் நாயகியாக போற்றப்படுகிறார்.
இத்தலத்தில் அம்பாள் அச்சம் தீர்த்த நாயகிக்கு நெய் குளம் தரிசனமும் அன்ன பாவாடை சேவையும் மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது. கருவறைக்கு முன்பாக 15அடி நீளத்திற்கு வாழை இலையை பரப்பி அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர். அத்துடன் புளி சாதம், தயிர்சாதம் போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைக்கப்படும். சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம் போல அமைத்து அங்கே இரண்டரை டின் தூய நெய்யைக் கொண்டு நிரப்புவர்.
அதன் பின்னர் கருவறையின் திரையை விலக்கினால் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உருவம் நெய் குளத்தில் பிரதிபலிக்கும். இதனை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது. இதனால் இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் இத்தலம் வந்து சிவப்பு அரளிப்பூ மாலைகள் இரண்டு தொடுத்து அதை இறைவன், இறைவிக்கு சார்த்தி ஐந்து வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டு, பின்பு ஒரு மாலையைப் பெற்று கழுத்தில் அணிந்து கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது இக்கோவிலின் தனி சிறப்பாகும்.

திருக்காட்டுப்பள்ளி அக்னீசுவரர் கோவில்
சிவபெருமான் கயிலாயத்தில் அம்பிகைக்கு உபதேசித்த கோலத்தில் காட்சி தரும் யோக தட்சிணாமூர்த்தி
திருவையாறு – கல்லணை சாலையில் திருவையாற்றுக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள தேவார தலம் திருக்காட்டுப்பள்ளி அக்னீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் சௌந்தரநாயகி.
இத்தலத்து இறைவனை அக்னி பகவான் வழிபட்டதால், கோயிலுக்கு 'அக்னீசுவரம்' என்று பெயர் வந்தது. மூலவர் அக்னீசுவரர் கருவறை, தரை மட்டத்திலிருந்து கீழே ஒரு தாழ்வான பகுதியில் இருக்கிறது. பிரம்மாவுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய தலம் இது. அக்கினீசுவரர் சந்நிதிக்கு இடது பக்கத்தில் பிரம்மாவுக்குத் தனி சந்நிதி அமைக்கப்பட்டிருக்கிறது.
மூலவரைச் சுற்றிவரும் பிராகாரத்தில் கோஷ்ட மூர்த்தமாக யோக தட்சிணாமூர்த்தி விளங்குகின்றார். சிவபெருமான் கயிலாயத்தில் அம்பிகைக்கு சிவாகமங்களை உபதேசித்த போது இருந்த அதே கோலத்தில், இங்கே யோக தட்சிணாமூர்த்தியாக எழுந்து அருளி இருப்பது தனிச்சிறப்பாகும். இதனால் இந்த யோக தட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவர் குரங்காசனத்தில் அமர்ந்து, இரண்டு திருக்கரங்களுடன் கழுத்தில் மகரகண்டி, ருத்ராட்சம் அணிந்து, திருச்சடையில் சூரிய, சந்திரன் அணிந்து, தன் கையில் சிவாகம நூல் ஏந்தி யோக குருவாகக் காட்சி தருவது சிறப்பு. இவரை அப்பர் தன்னுடைய தேவாரத்தில், ஞான நாயகன் என்று போற்றுகின்றார். இவரை வாரந்தோறும் வியாழக்கிழமையில் ஐந்து நெய்தீபம் ஏற்றி முல்லைப் பூவால் வழிபட்டால், திருமணம், கல்வி, செல்வம் யோகத்தை அடையலாம். வழக்குகளில் நம் பக்கம் நியாயம் இருந்தால், எல்லா தடைகளும் நீங்கி வெற்றி பெறலாம்.
இத்தலத்திலுள்ள இரண்டாம் பிராகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி எனப்படுகிறார். சிலா வடிவிலுள்ள இவரின் அடிப்பகுதியில் உள்ள துவாரம் வழியே, கருவறை கோஷ்டத்தில் உள்ள யோக தட்சிணாமூர்த்தியைப் பார்க்கலாம். இந்த அமைப்பும், இரண்டு குரு பகவான்கள் எழுந்தருளி இருப்பதும் இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

அம்பல் பிரம்மபுரீசுவரர் கோவில்
மூலவருக்கு பின்புறம் சோமாஸ்கந்தமூர்த்தி அமைந்திருக்கும் அரிய காட்சி
மயிலாடுதுறை - திருவாரூர் சாலை மார்க்கத்தில் 23 கி.மீ. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவார தலம் அம்பல் பிரம்மபுரீசுவரர் கோவில். இத்தலத்திற்கு திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில் என்ற பெயரும் உண்டு. இறைவியின் திருநாமம் பூங்குழல்நாயகி, சுகந்த குந்தளாம்பிகை.
அம்பன், அம்பரன் என்ற இரு அசுரர்கள் இத்தல இறைவனை பூசித்து இறவா வரம் பெற்றனர். அவர்கள் வழிபட்டதால் இத்தலம் அம்பர் எனப் பெயர் பெற்றது. பிரம்மா, இத்தல இறைவனை வழிபட்டு தான், அன்ன வடிவம் பெற்ற சாபத்தை நீங்க பெற்றார். அதனால் இத்தல இறைவனுக்கு பிரம்மபுரீசுவரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமாற நாயனார் அவதரித்த திருத்தலம் இது.
பொதுவாக சிவாலயங்களில், சிவபெருமான் கருவறையில் லிங்க வடிவில் எழுந்தருளி இருப்பார். சில தலங்களில் சிவபெருமானும், பார்வதியும் மூலவருக்கு பின்புறம் திருமணக் கோலத்தில் எழுந்தருளி இருப்பார்கள். இத்தலத்தில், கர்ப்ப கிரகத்தில் சுயம்பு மூர்த்தியாக விளங்கும் பிரம்மபுரீசுவரருக்குப் பின்னால், சோமாஸ்கந்தமூர்த்தி (சிவன் + முருகன் + பார்வதி) அமைந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இத்தகைய காட்சியை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.