திருவாரூர் தியாகராஜர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருவாரூர் தியாகராஜர் கோவில்

திருவாரூர் கமலாம்பிகை

திருவாரூர் கமலாம்பிகை, முப்பெரும் தேவியரும் இணைந்த அம்சமாகும். கமலாம்பிகை திருநாமத்தில் உள்ள க- கலைமகளையும், ம- மலைமகளையும், ல- அலைமகளையும் குறிக்கின்றது. இந்த அம்பிகையின் சிறப்புகளாலேயே, திருவாரூருக்கு ஸ்ரீபுரம், கமலாபுரி, கமலா நகரம், கமலாலயம் என்ற பெயர்களும் உண்டு.

திருவாரூர் தியாகராஜர் கோவிலில், தனிக்கோயில் கொண்டு, கமலாம்பிகை அருள்பாலிக்கிறார். கமலாம்பாள் ஆலயம், அம்பிகையை பெண்ணின் ஐந்து பருவ நிலைகளில் வைத்து வணங்கப்படும் ஐந்து அக்ஷித்தலங்களுள், இளம் பெண் பருவத்தினைக் குறிக்கின்றது. கருவறையில் கமலாம்பிகை, மூன்றடுக்கு பீடத்தின் மேல் இடக்கால் மீது வலக்காலை அமர்த்தி, இடக்கரம் ஊரு ஹஸ்தமாய் விளங்க, நீலோத்பல மலரை வலக்கரத்தில் பற்றி, வளர்பிறை சந்திரனையும் கங்கையையும் சிரசில் கரண்ட மகுடத்தில் தரித்து, தவ யோக நிலையில், அமர்ந்த கோலத்தில் காட்சித் தருகிறார். தர்மம் தழைத்தோங்கவும், சரஸ்வதி, சசிதேவி எனும் இந்திராணி, மகாலக்ஷ்மி, பூதேவி போன்ற தெய்வங்களும் தேவதைகளும் சர்வ மங்கள செளபாக்கியங்களுடன் வாழவும், சகல உயிர்கள் அனைத்தும் இன்புறவுமே கமலாம்பிகை தவக்கோலம் பூண்டு இருக்கிறார். இக்கோவிலில் உள்ள அக்ஷர சக்தி பீடம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்பீடத்தின் பிரபையில் முன்னும் பின்னும் 51 அக்ஷரங்களும், பீடத்தின் மத்தியில் ஹ்ரீம் எனும் புவனேஸ்வரி பீஜமும் பொறிக்கப்பட்டுள்ளன

லலிதா ஸஹஸ்ரநாமம் பல இடங்களில் கமலாம்பிகையை துதித்துப் போற்றுகின்றது. ஸ்ரீவித்யா எனும் உபாசனையின் யந்திர நாயகி இத்தேவியே ஆவார். முத்துசுவாமி தீட்சிதர் அன்னை கமலாம்பாளைத் துதித்து நவாவரண கீர்த்தனைகளை பாடியிருக்கிறார்.

சக்தி பீடங்களில், கமலாம்பிகை அருள் பாலிக்கும் திருவாரூர், கமலை பீடம் ஆகும்.

Read More
திருச்சேறை சாரநாத பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருச்சேறை சாரநாத பெருமாள் கோவில்

பெருமாளுக்கு மிகவும் பிரியமான திவ்ய தேசம்

காவிரியில் 108 முறை நீராடிய பலன் தரும் தலம்

கும்பகோணம் - திருவாரூர் சாலையில் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்யதேசம், திருச்சேறை. மூலவரின் திருநாமம் சாரநாதப் பெருமாள். தாயாரின் திருநாமம் சாரநாயகித் தாயார், பஞ்சலக்ஷ்மித் தாயார். இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்) நிறைந்ததால், இத்தலத்தின் மூலவர் சாரநாதப் பெருமாள் என்று அழைக்கப்பட்டு இத்தலமும் திருச்சாரம் என்று பெயர் பெற்றது. இதுவே காலப்போக்கில் மருவி திருச்சேறை ஆனது. தனக்கு மிகவும் பிரியமான க்ஷேத்ரம் என்று திருமாலால் அருளப்பட்ட தலம் இது. இத்தலத்து தீர்த்தம் சார தீர்த்தம். இந்தப் புஷ்கரணியின் மேற்குக் கரையில், காவிரித்தாய், ஸ்ரீபிரம்மா, அகத்தியமுனி ஆகியோருக்குச் சந்நிதிகள் அமைந்துள்ளன.

இத்தலத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்று 5 தேவியருடன் அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித் தாய் காட்சி அளிக்கிறாள். இதற்கான பின்னணியை தல வரலாறு விவரிக்கின்றது.

ஒரு முறை காவிரித் தாய், திருமாலிடம், கங்கைக்கு கிடைக்கும் பெருமை தனக்கும் கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து சார புஷ்கரிணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் தவம் இருந்தாள். காவிரித் தாயின் தவத்தை மெச்சி, திருமால் ஒரு குழந்தையின் வடிவில் காவிரித்தாயிடம் வந்து, அவளின் மடியில் அமர்ந்தார். தனக்கு இந்த பெருமை மட்டும் போதாது என்று காவிரித் தாய் கூறியதும், கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாக ஐந்து லட்சுமிகளுடன் தோன்றி திருமால் அருள்பாலித்தார். மேலும் வேண்டும் வரம் அளிப்பதாகவும் உறுதி அளித்தார். காவிரித் தாய் திருமாலிடம், 'தாங்கள் எப்போதும் இதே கோலத்தில் இத்தலத்தில் அருள்பாலிக்க வேண்டும். மேலும் கங்கையிலும் மேன்மையை எனக்கு தந்தருள வேண்டும்' என்று வேண்டினாள். திருமாலும் அவ்வண்ணமே செய்தார். அன்று முதல், கங்கைக்கு நிகராகக் காவிரியும் போற்றப்படலானாள்.

காவிரித் தாய்க்கு பெருமாள் காட்சியளித்த தைமாதம் பூச நட்சத்திரம், இங்கே விமரிசையாகக் கொண்டாடப்பெறுகிறது.

திருச்சேறை பெருமாளை ஒருமுறையேனும் வழிபட்டால், காவிரியில் 108 முறை நீராடிய பலன் கிடைக்கும் என்றும், நம் பாவங்களெல்லாம் தொலையும் என்றும் ஆச்சார்யர்கள் சொல்கிறார்கள்.

Read More
மணக்கால் அய்யம்பேட்டை சேஷபுரீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மணக்கால் அய்யம்பேட்டை சேஷபுரீஸ்வரர் கோவில்

அம்பிகையின் அந்தப்புரமாக விளங்கிய தலம்

திருவாரூர்-கும்பகோணம் பேருந்து சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள மணக்கால் அய்யம்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ளது சேஷபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் அந்தப்புர நாயகி. இத்தலம் முற்காலத்தில் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது, நான்கு (சதுர்) வேதங்களைப் படித்த வேத பண்டிதர்கள் நிறைந்த ஊர் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது.

சிவபெருமான் பார்வதி திருமணத்தோடு இத்தலம் தொடர்புடையது. சிவபெருமானுடன் மீண்டும் இணைவதற்காக, பார்வதி, இத்தலத்துக்கு மிக அருகில் உள்ள பெருவேளூரில் தவம் மேற்கொண்டார். இறுதியில் கரவீரம் என்னும் தலத்தில் சிவபெருமானை மணந்து கொண்டார். சிவன் மற்றும் பார்வதியின் திருமணத்தை இத்தலத்து வேத பண்டிதர்கள் நடத்தினார்கள். திருமணத்திற்குப் பிறகு, அடுத்த நாள் காலை கைலாசத்திற்குச் செல்வதற்கு முன், இத்தலத்திலுள்ள அந்தப்புரத்தில் பார்வதி தங்கினார், எனவேதான் பார்வதிதேவி அந்தப்புர நாயகி என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் எழுந்தருளி உள்ளார். அம்பிகையின் இந்த திருநாமம் தனிச்சிறப்பு உடையது. வேறு எந்த தலத்திலும் அம்பிகைக்கு இந்த திருநாமம் கிடையாது.

பிரார்த்தனை

சிவபெருமான்-பார்வதி திருமணத்துடனான தொடர்பு காரணமாக, திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கும், குழந்தைகளைப் பெற விரும்புபவர்களுக்கும் இது ஒரு பிரார்த்தனை தலமாகும்.

Read More
மணக்கால் அய்யம்பேட்டை சேஷபுரீஸ்வரர் கோவில்

மணக்கால் அய்யம்பேட்டை சேஷபுரீஸ்வரர் கோவில்

பாம்பு ஊர்ந்த தழும்பு கொண்ட சிவலிங்கத் திருமேனி

திருவாரூர்-கும்பகோணம் பேருந்து சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள மணக்கால் அய்யம்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ளது சேஷபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் அந்தப்புர நாயகி. 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தலம். அப்பர் பாடிய தேவார வைப்புத்தலம்.

ஒரு சமயம், திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷன், தனது சாப விமோசனத்திற்காக இத்தலத்து இறைவனான சேஷபுரீஸ்வரரை வணங்கி, விஷேச பூஜைகள் செய்து கடும் தவம் புரிந்து சாபம் நீங்கப் பெற்றான். அதன் காரணமாக இங்குள்ள சிவலிங்கத்தின் பாணத்தில் பாம்பு ஊர்ந்த தழும்பை இன்றும் காணலாம்.

ஆதிசேஷன் வழிபட்ட தலம் என்பதால் ராகு கேது தோஷ நிவர்த்திக்காகவும், நாக தோஷ நிவர்த்திக்காகவும் இத்தலத்தில் பிரார்த்திக்கிறார்கள். இத்தலத்துக்கு வந்து வழிபட்டால், திருமணத் தடை நீங்கும். புத்திர பாக்கியம் கிட்டும்.

Read More
திருவாரூர் தியாகராஜர் கோவில்

திருவாரூர் தியாகராஜர் கோவில்

மார்கழி திருவாதிரை பாத தரிசன விழா

திருவாரூர் தியாகராஜர் கோயில், நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. மூலவர் தியாகராஜரின் முழு மூர்த்தத்தையும் யாரும் கண்டதில்லை. தில்லை இரகசியம் போல, திருவாரூர் இரகசியம் என்பது தியாகராஜ சுவாமியின் திருமேனியாகும். இதை சோமகுல இரகசியம் என்பர். சுவாமியின் மார்பை ஸ்ரீசக்கரம் அலங்கரிப்பதால், தியாகராஜரின் முழு திருமேனியையும் நாம் தரிசிக்க முடியாது. நித்தியப்படி அவரின் திருமுக தரிசனம் மட்டுமே நமக்கு கிட்டும். மற்ற அங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டு, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டும் இருக்கும். தியாகராஜரின் பாதங்களை ஆண்டுக்கு இருமுறை மட்டுமே நாம் தரிசிக்க முடியும். அவை மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும்.

தியாகராஜர் கோவிலில் ஆண்டுதோறும் இரண்டு முறை தியாகராஜர் பாத தரிசன விழா நடைபெறுகிறது. மார்கழி மாத திருவாதிரை அன்று வலது பாத தரிசனம் விழாவும், பங்குனி உத்திரத் திருவிழாவில் பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ரபாத மகரிஷிகளுக்கு இடது பாத தரிசன நிகழ்ச்சி நடைபெறும். ஆருத்ரா தரிசனத்தின்போது இறைவன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இடது பாதத்தையும், திருவாரூரில் வலது பாதத்தையும் காட்டுவதாக ஐதீகம்.

Read More
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில்

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில்

தினந்தோறும் பிரதோஷ பூஜை நடைபெறும் தேவாரத்தலம்

பொதுவாக சிவாலயங்களில் வளர்பிறை திரயோதசி மற்றும் தேய்பிறை திரயோதசி அன்று மட்டும்தான் பிரதோஷ பூஜை நடைபெறும். அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறைதான் பிரதோஷ பூஜை என்பது நடைபெறும். ஆனால் திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலில், தினம் தோறும் மாலை 6:00 மணிக்கு பிரதோஷ பூஜை தொடங்கி நடைபெறும். இதற்கு நித்திய பிரதோஷம் என்று பெயர். உலகத்திலேயே நித்ய பிரதோஷ பூஜை நடைபெறும் ஒரே சிவாலயம் திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில்தான். இந்த பூஜையின் போது தியாகராஜப் பெருமானை முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து வணங்கி தரிசிப்பதாக ஐதீகம்.

இந்த நித்ய பிரதோஷ பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு, கோடி புண்ணியம் கிட்டும். ஈரேழு ஜென்ம பாவமும் விலகும் என்பது நம்பிக்கை.

Read More
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில்

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில்

திருவாரூர் தியாகராஜ சுவாமி திருமேனியின் ரகசியம்

திருவாரூரில் பிறக்க முக்தி என்பது ஆன்றோர் வாக்கு. சைவ சமயத்தினருக்கு கோவில் என்று குறிப்பிட்டால் அது சிதம்பரம் நடராஜர் கோவிலைக் குறிக்கும். அதுபோல பெரிய கோவில், பூங்கோவில், திருமூலட்டானம் என்று குறிப்பிட்டால் அது திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலை குறிக்கும். திருமூலட்டானம் என்றால் இறைவன் உறையும் இடம் என்று பொருள்.

தியாகராஜர் வரலாறு

திருமாலானவர். சிவபெருமானை நோக்கித் தவம் செய்ய, அகமகிழ்ந்த சிவபெருமான் உமையவளுடன் தோன்றியபோது, சிவபெருமானை மட்டும் திருமால் வணங்கியுள்ளார் கோபமடைந்த உமையவள் திருமால் மீது சாபமிட கலங்கி நின்ற திருமால். மீண்டும் சிவபெருமானை வழிபாடு செய்து வந்தார். அதன்பின் மீண்டும் உமையவளுடன் சிவபெருமான் தோன்றியபோது, உரிய முறையில் திருமால் வணங்க, மகிழ்ந்த உமையவள் சாபத்துக்கான விடை தந்தாள். அதைக் கண்டு மகிழ்ந்த திருமால், சோமாஸ்கந்த திருக்கோலத்தில் எழுந்தருளக் கோரி தன் நெஞ்சக் கோயிலில் நிறுத்திக்கொண்டார். திருமாலின் உச்சுவாசித்தால் (மூச்சுக் காற்றை உள்ளிழுத்தலும் வெளிவிடுதலும் பெருமானும் அசைந்தாடி ஆனந்தங் கொண்டு திருமாலுக்குத் திருவருள் தந்தார். இதுவே அஜபா நடனம்.இது ஒரு மந்திரத்தின் பெயர். ஜபா என்றால் ஜெபித்தல். அஜபா என்றால் ஜெபிக்காது இருத்தல் என்று பொருள். அஜபா நடனம் ஆடும் போது மந்திரங்கள் வாய்விட்டு உச்சரிக்கப் படுவதில்லை.

தியாகராஜ சுவாமி திருமேனியின் ரகசியம்

தியாகராஜர் கோயிலின் அர்த்தமண்டபத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்தபடி தியாகராஜர் காட்சியளிக்கிறார். சிதம்பரம் ரகசியம் என்பது போல் திருவாரூர் ரகசியம் என்பது தியாகராஜ சுவாமியின் திருமேனியாகும். இதை சோம குல ரகசியம் என்பார்கள். தியாகராஜரின் திருமார்பை ஸ்ரீ சக்கரம் அலங்கரிப்பதால், அவரது முழு திருமேனியை யாராலும் எப்போதும் காண முடியாது. எனவே நம்மால் அவரின் திருமுகத்தையும், அருகே அமர்ந்துள்ள தேவியின் திருமுகத்தையும் மட்டுமே காண முடியும். மற்ற அங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டு, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அபிஷேகத்தின்போது கரத்தின் ஒரு பகுதியையும், மார்கழித் திருவாதிரையில் இடது பாதத்தையும், பங்குனி உத்திரத்தில் வலது பாதத்தையும் தரிசிக்க முடியும்.

தியாகராஜ பெருமாள் திருமுடியை தலை சீரா என்னும் ஒருவகை அணி அலங்கரிக்கின்றது. சதுர வடிவிலான இந்த அணிகலன், உயர்ந்த வகை ஜாதி கற்கள் பதிக்கப் பெற்றது. சூளாமணி என்ற ஒரு பெயரும் இந்த அணிகலனுக்கு உண்டு.இந்த சூளாமணி அணிகலனை திருநாவுக்கரசர் தமது தமது தேவாரப் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எந்த ஒரு சிவதலத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு திருவாரூர் தலத்திற்கு உள்ளது. கோவில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றி தேவாரப் பாடல்கள் கொண்ட சிறப்பைப் பெற்றுள்ள தலம் இது ஒன்றே ஆகும். திருவாரூர் கோவில் சிதம்பரம் கோவிலைவிட பழமையானது என்பதை குறிக்கும் வகையில், இங்கு பாடப்படும் தேவாரத்தில் திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தை குறிப்பிடப்படுவது இல்லை.

Read More
கோயில் வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் கோவில்

கோயில் வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் கோவில்

சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேஸ்வரர்

தஞ்சையிலிருந்து சாலியமங்கலம் வழியாக நீடாமங்கலம் செல்லும் சாலையில், சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத் தலம் கோயில் வெண்ணி. இறைவன் திருநாமம் வெண்ணிகரும்பேஸ்வரர். இறைவியின் திருநாமம் சௌந்தரநாயகி. கரிகால் சோழன், பாண்டியர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி வாகை சூடிய இடம் என சங்க இலக்கியத்தில் கூறப்படும் 'வெண்ணிப் பரந்தலை' என்ற ஊர் இதுதான்.

கரும்பு கட்டாலான ஈஸ்வரர்

சோழ மன்னன் முசுகுந்த சக்கரவர்த்திதான் தேவேந்திரனிடமிருந்து தியாகராஜ சுவாமியைப் பெற்று வந்து திருவாரூரில் பிரதிஷ்டை செய்தவர். ஒருமுறை திருவாரூரில் இருந்து தஞ்சைக்குச் செல்லும்போது, வழியில் ஓரிடத்தில் இரு முனிவர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டார். ஒரு முனிவர், 'இந்த இடம் கரும்புக் காடாக இருப்பதால், இதன் தல விருட்சம் கரும்பு' என்றும், மற்றொருவர், 'இல்லையில்லை. இது நந்தியாவட்டம் (வெண்ணி) நிறைந்த இடம். எனவே, நந்தியாவட்டம்தான் தல விருட்சம்' என்றும் விவாதித்துக் கொண்டிருந்தனர். இவர்களுடைய விவாதத்தைக் கேட்ட மன்னர், 'இந்த இடத்தில் ஆலயமே இல்லையே. இவர்கள் இருவரும் தல விருட்சம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்களே!' என்று வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் திடீரென ஓர் அசரீரி ஒலித்தது. 'கரும்புக் கட்டுகள் சேர்ந்த கரும்பின் சொரூபமாக நான் இங்கே இருக்கிறேன். இங்கே தல விருட்சம் நந்தியாவட்டம்!' என்று இறைவனின் குரல் ஒலித்தது.சிவலிங்கம் கிடைத்த இடத்தில் உடனே கோயில் கட்ட முடிவு செய்தார் உடனடியாக அந்த இடத்தில் பூமியைத் தோண்டிப் பார்த்தபோது, லிங்க பாணம் வெளிப்பட்டது. அப்படித் தோண்டும்போது மண்வெட்டியால் விழுந்த வெட்டுத் தழும்புதான் இப்போதும் அவருடைய திருமேனியில் காணப்படுகிறது. சக்கரவர்த்தி. லிங்கம் இருந்த இடத்தில், அடியில் தோண்டத் தோண்ட அந்த பாணம் போய்க்கொண்டே இருந்ததாம். எனவே, சிறிது உயரமாகவே கட்டலாம் என நினைத்து, 20 அடி உயரத்தில் இந்தக் கோயிலைக் கட்டியுள்ளார்.

கருவறையில் கரும்பே உருவாய் காட்சி தருகிறார் மூலவர். 'திருமேனி கரும்புக் கட்டுடைத்து' என்று திருமூலர் பாடியுள்ளபடி, கரும்பேஸ்வரர் என்னும் பெயருக்கேற்றாற்போல், கரும்புக் கட்டுகளைச் சேர்த்து வைத்தாற்போன்ற பாண அமைப்பைக் கொண்டவர் இந்த மூலவர். சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது, அந்த வடிவம் நமக்கு நன்றாகப் புலப்படுகிறது. பாணம் அமைந்திருக்கும் ஆவுடை, சதுர் அஸ்த்ர (நான்கு மூலைகளை உடைய சதுர) வடிவமுடையது. இதுபோன்ற திருவடிவம் அபூர்வமானது. மூலவர் கரும்பின் உருவமாக இருப்பதால், கைகளால் வேகமாகத் தேய்க்க முடியாத அமைப்பு என்பதால், அபிஷேகம் கூட மூலவரின் திருமேனியை ஒற்றி எடுப்பதுதானாம்.

சர்க்கரை நோய்க்கான பிரார்த்தனை

சித்தர்கள் பாடல்களில் இந்தக் கோயிலில் சர்க்கரை நோய்க்கான பிரார்த்தனை முறை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாம்பாட்டி சித்தரும் கோயில்வெண்ணி இறைவன் சர்க்கரை நோய் தீர்ப்பது குறித்துப் பாடியுள்ளார். 'ரசமணியோடு வெல்லம் கலந்து, கோயிலை வலம் வந்து, சுவாமிக்கு நிவேதனம் செய்து பிரார்த்தித்தால், குருதியில் சர்க்கரை குறையும்' என்று காகபுஜண்டர் பாடியுள்ளார். ஆனால், இன்றைய விலை வாசியில் ரசமணியை வாங்கிப் படைப்பது என்பது சாத்தியமல்ல. எனவே, மக்கள் தங்களால் இயன்றளவு ரவையை வாங்கி, வெல்லம்/சர்க்கரை கலந்து, படைத்து வழிபடுகின்றனர். எறும்புகளுக்கு அது உணவாகிறது. இறைவன் அதை ஏற்று, சர்க்கரை நோய்க்கு நிவாரணம் அளிப்பதாக நம்பிக்கை.

அமெரிக்காவில் மிக பிரபலமான, இதயநோய் நிபுணர் ஒருவர் சமீபத்தில் இந்தக் கோயிலுக்கு வந்து சுவாமியைத் தரிசித்து சென்றார். அமெரிக்கா சென்றதும் வழக்கமான சுகர் டெஸ்டுக்குச் சென்றிருக்கிறார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவு, வழக்கத்துக்கு மாறாகக் குறைந்திருக்கின்றதென்று ரொம்ப ஆச்சர்யப்பட்டார்களாம். சர்க்கரை அதிகமாக இருப்பவர்கள் கரும்பேஸ்வரரை வழிபட்டால், அவர்களுடைய அதிகப்படியான சர்க்கரையை அவர் எடுத்துக் கொள்கிறார் என்பது நம்பிக்கை.

Read More
திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில்

திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில்

தினமும் பகலில் ஐந்து முறை நிறம் மாறும் அதிசய சிவலிங்கம்

தஞ்சாவூர்-கும்பகோணம் செல்லும் வழியில் பாபநாசத்திற்கு கிழக்கில் 3 கிலோமீட்டர் தூரத்தில் தேவாரப் பாடல் பெற்ற திருநல்லூர் என்னும் தலம் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் கல்யாணசுந்தரேஸ்வரர், பஞ்சவர்ணேஸ்வரர். இறைவி கல்யாணசுந்தரி, திரிபுர சுந்தரி.

இத்தலத்து இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர்,தன் லிங்கத் திருமேனியின் நிறத்தை தினமும் பகல் பொழுதில், 5 முறை மாற்றி காட்சி தருகிறார். லிங்கத் திருமேனியின் நிறம் ஆறு நாழிகைக்கு(144 நிமிடம்) ஒரு முறை மாறுகிறது.முதல் ஆறு நாழிகையில் தாமிர நிறம், அடுத்த 6-12 நாழிகையில் இளம் சிவப்பு, அடுத்த 12-18 நாழிகையில் தங்கம், அடுத்த 18-24 நாழிகையில் நவரத்தின பச்சை, அடுத்த 24-30 நாழிகையில் இன்ன நிறமென்று கூற இயலாத தோற்றத்தில் நிறம் மாறி, மாறி பஞ்சவர்ணமாக காட்சி தருகிறார். இந்த அதிசய சம்பவம் இன்றும் கோவிலில் நடந்து வருகிறது.

சிவபெருமானின் சடாரி சாற்றப்படும் ஆபூர்வ நடைமுறை

பெருமாள் கோவில்களில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு திருமாலின் திருவடியை நினைவுகூரும் விதத்தில்(சடாரி) தலையில் சூட்டுவது வழக்கம். சிவாலயங்களில் இந்த வழக்கம் இல்லை. இருப்பினும் நல்லூரில் சிவபெருமானின் திருவடி பதிக்கப்பெற்ற சடாரியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சூட்டும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.

திருநல்லூா் கோவில் குளத்தின் தனிச் சிறப்பு

சிவபெருமான் வசிக்கும் கயிலை மலைக்கு சமமாக இந்த கோவில் விளங்குகிறது. இதை விளக்கும் வகையில் வடபாற் கயிலையும், தென்பால் நல்லூரும் தம் வாழ்பதியே' என்று திருநாவுக்கரசர் தன் பாடலில் குறிப்பிட்டுள்ளார். கும்பகோணம் மகாமக குளத்துக்கு இணையாக திருநல்லூா் கல்யாண சுந்தரர் கோவிலில் உள்ள சப்தசாகரம் என்ற குளம் மிகவும் சிறப்புடன் விளங்குகிறது. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் இந்த தீர்த்தம் சிறப்பு பெற்று விளங்குவதை, 'மகம் பிறந்தது நல்லூரில், மகாமகம் பிறந்தது கும்பகோணத்தில்' என்ற பழமொழி உணர்த்துகிறது.

Read More
திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவில்

திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவில்

வியக்க வைக்கும் திருவீழிமிழலை வௌவால் நெத்தி மண்டபம்

கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் சாலையில் சென்று தென்கரை என்ற இடத்தில் இருந்து ஒரு கிமீ தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருவீழிமிழலை . இறைவன் திருநாமம் வீழிநாதேஸ்வரர். இறைவியின் திருநாமம் சுந்தரகுசாம்பிகை.

இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இக்கோவில் அம்மன் சன்னதியைச் சுற்றிவிட்டு வெளியே திருச்சுற்று வழியாக வரும்போது ராஜ கோபுரத்தினை அடுத்து, மிகவும் புகழ் பெற்ற வௌவால் நெத்தி மண்டபம் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டு அதிசயங்களில் ஒன்றான, கட்டடக்கலைக்குப் புகழ் பெற்ற மண்டபமாகும். சித்திரை மாதத்தில் இங்குதான் இறைவன் இறைவி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

இம்மண்டபம் 175 அடி நீளமும் 75 அடி அகலமும் கொண்டுள்ளதாகவும், நடுப்பகுதி வௌவால் நெற்றி அமைப்பிலும் உள்ளது. மண்டபத்தின் நடுப்பகுதியில் தூண்கள் கிடையாது. குறுக்கே எந்தவித பிடிமானமும் கிடையாது. நேரே கையை வளைத்து குவித்தார் போல, ஒவ்வொரு கல்லாக ஒட்ட வைத்து, மண்டபத்தின் கூரை உருவாக்கப்பட்டிருக்கிறது. வௌவால் தொங்க முடியாத வகையில் இருப்பதனால், வௌவால் நெத்தி மண்டபம் என்ற பெயர் ஏற்பட்டது. மண்டபத்தின் உள்ளே சென்று பார்க்கும்போது அதன் பிரமிப்பை நாம் உணர முடியும். நம் முன்னோர்கள் கட்டிடக் கலையில் பெற்றிருந்த சிறப்பையும், தொழில் நுட்பத் திறனையும் இந்த மண்டபம் நமக்கு பறை சாற்றுகின்றது.

தமிழகத்தின் அதிசயம் என துறை வல்லுனர்களால் ஒப்புகொள்ளப்பட்டதும், புதிதாக கற்றளி எழுப்பும்போது முற்கால சிற்பிகள் தங்களால் மீண்டும் உருவாக்க முடியாதவை என ஒப்புக்கொண்ட கோவில்/சிற்ப வேலைப்பாடுகள் ஆறு ஆகும். அவை கடாரங்கொண்டான் மதில் , ஆவுடையார் கோவில் கொடுங்கை , தஞ்சை பெரியகோவில் விமானம் , திருவலஞ்சுழி கருங்கல் பலகணி , திருவீழிமிழலை வௌவால் நெத்தி மண்டபம், திருநனிபள்ளி கோடி விட்டம் ஆகியவை ஆகும். முற்கால சிற்பிகள் தங்கள் வேலைக்கான ஒப்பந்தம் எழுதும்போது, மேற்கூறிய ஆறு வேலைப்பாடுகள் தவிர்த்து எந்த வேலைப்பாடும் தங்களால் செய்து தர முடியும் என்று உறுதி கொடுப்பார்களாகும். இதிலிருந்து இந்த வேலைப்பாடுகளின் உன்னதத் தன்மையை நாம் உணரலாம்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

திருவீழிமிழிலை திருத்தலத்து ஆலயத்து படிகளின் சிறப்பு

https://www.alayathuligal.com/blog/5fj3tlcrj9w49dly9czh33fnhdtaag

Read More
சேஷபுரீஸ்வரர் கோவில்

சேஷபுரீஸ்வரர் கோவில்

ராகு – கேது தோஷம் நீக்கும் தேவாரத் தலம்

மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருப்பாம்புரம். இத்தலத்து இறைவன் சேஷபுரீஸ்வரர், பாம்புரநாதர். இறைவி பிரமராம்பிகை.

ஆதிசேஷன் வழிபட்ட தலம்

கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது, இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. அதனால் கோபமடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார். அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல் பட்டன. சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க இறைவனும் மனமிரங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருப்பாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார்.

அவ்வாறே ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் சிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருப்பாம்புரம் பாம்புர நாதரரையும், நான்காம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாப விமோசனம் பெற்றனர்.

விஷம் தீண்டாப் பதி

ஆதிசேஷன் வழிபட்ட கோவில் ஆதலால் இன்றும் இக்கோவிலுக்கே உரிய அதிசயமாக வாரத்தின் மூன்று தினங்களில் கோவிலின் கர்ப்ப கிரகங்களில் நாக பாம்புகள் வந்து இறைவனை தரிசிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகளில் திருப்பாம்புரம் கோவிலுக்குள் மல்லிகையின் மணமோ, தாழம்பூவின் மணமோ வீசுவதாகவும் அச்சமயம் பாம்பு கோவிலுக்குள் எங்கேனும் உலாவிக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் பாம்புகள் யாரையும் கடிப்பது இல்லை என்கிறார்கள். விஷம் தீண்டாப் பதி என்ற சிறப்பு இத்தலத்திற்கு உள்ளது.

ராகு கேது பரிகார தலம்

திருப்பாம்புரம் ஒரு ராகு கேது நிவர்த்தி தலம். குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன் திருப்பாம்புரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்கிறது தல மகாத்மியம். ராகுவும் கேதுவும் ஏக சரீரியாக அதாவது ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக விளங்கிகிறது.

நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டு புத்திர பேறின்மை மற்றும் திருமணமாகா நிலையிலிருப்பவர்கள் இங்கு வந்து பூஜைகள் செய்து வழிபட அந்த தோஷங்கள் தீரும் அதோடு வாழ்வில் இருந்து வந்த காரிய தடைகள் விலகும். ஜாதகத்தில் ராகு- கேது கிரக நிலை சரியில்லாமல் இருப்பவர்கள், அந்த கிரகங்களின் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரே நாளில் காலையில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் வழிபட்டு, மதியம் திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலிலும், மாலை திருப்பாம்புரம் கோவிலில் வழிபட்டு, இரவு நாகூர் நாகேஸ்வரர் கோவிலில் தங்களின் வழிபாட்டை முடிக்க ராகு-கேது கிரகங்களால் தீமையான பலன்கள் ஏதும் ஏற்படாமல் காக்கும்.

போதை பழக்கம் விடுபட, வழிபட வேண்டிய தலம்

போதை பழக்கம் உள்ளவர்கள் ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 - 6 ராகு காலத்தில் இத்தல இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்டால் தீய பழக்கங்களில் இருந்து விடுபடலாம். இவ்வாறு செய்து வந்தால் 264 வகையான பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

Read More
திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில்

எமனுக்கே பாபவிமோசனம் கிடைக்கச் செய்த தேவாரத் தலம்

திருவாரூரிலிருந்து 15 கி.மீ. தூரத்திலுள்ள தேவாரத் தலம் ஸ்ரீவாஞ்சியம். இறைவன் திருநாமம் வாஞ்சிநாதர். இறைவி மங்களநாயகி.

ஒரு சமயம் எமதர்மராஜா, எத்தனையோ நல்ல பதவிகள் இருக்கும் போது, தனக்கு மட்டும் ஏன் உயிர்களை எடுக்கும் பதவியை சிவபெருமான் கொடுத்துள்ளார் என மிகவும் வருந்தினார். திருவாரூர் சென்று தியாகராஜரிடம் தனது குறைபாட்டை தெரிவித்தார். உயிர்வதை தொழிலை செய்யும் தனக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்துள்ளதாகவும், தன்னைக் கண்டு உயிர்கள் அனைத்தும் பயம் கொள்வதாகவும் திருவாரூர் தியாகராஜ பெருமானைக் கண்டுப் புலம்பினார். அதற்கு அப்பெருமான் ஸ்ரீவாஞ்சியம் சென்று வாஞ்சிநாதரை வழிபட்டு உனது தோஷத்தில் இருந்து விடுபட்டுக் கொள் எனக் கூறினார். அவ்வாறே எமதர்மன் ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு வந்து நெடுங்காலம் கடுந்தவம் புரிந்து வாஞ்சிநாதரை வழிபட்டு தனது தோஷத்தில் இருந்து விடுபட்டார். இங்கு எமதர்மராஜன் யோக நிலையில் காட்சி தருகிறார். ஸ்ரீவாஞ்சிநாதர் இத்தலத்தில் முதலில் எமதர்மராஜனை தரிசித்த பின்னரே தன்னை வந்து பக்தர்கள் தரிசிப்பர் எனும் பெரும்பேற்றை எமதர்மனுக்கு வழங்கினார். அதன்படியே இங்கு எமதர்மனுக்கே முதல் வழிபாடு நடைபெறுகிறது.

இங்கு எமதர்மராஜன் யோக நிலையில் காட்சி தருகிறார். அதனால் இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்கும். தெற்கு நோக்கிய சன்னதியில் எமதர்மன் நான்கு கரஙகளுடன் பாசம், கதை, சூலம் ஏந்தி இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டு பாதக்குறடுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு எமதர்மனுக்கு வடை மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு. எமதர்மனை சாந்தி செய்யும் விதத்தில், இங்கு ஆயுள் ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி செய்து வழிபட்டால் நீண்ட ஆயுள் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
தியாகராஜர் கோவில்

தியாகராஜர் கோவில்

கடன் தொல்லைத் தீர்க்கும் ருண விமோசனர்

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ருண விமோசனர், லிங்க வடிவில் தனிச் சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார். ரண் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு கடன் என்று பொருளும் ரண என்ற தமிழ் சொல்லுக்கு காயம் என்ற பொருளும் உண்டு. நெடுநாள் தீராத, வராத கடனையும், தீராத நோய்களையும் இவரை வழிபடும் பக்தர்களுக்கு தீர்த்து வைப்பதால் ரு(ர)ண விமோசனர் என அழைக்கப்படுகின்றார். இந்திரன் தனது உடலில் இருந்த தோல் நோயை நீக்க இத்தலத்திலுள்ள ருண விமோசனரை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றான் என்று தல புராணம் கூறுகின்றது.

இந்த ருண விமோசனரை பதினொரு ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைகளில் அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இவரை அமாவாசை தினத்தன்று அபிஷேகம், உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபடுவது மிகுந்த பலனைக் கொடுக்கும்.

Read More
தியாகராஜர் கோவில்

தியாகராஜர் கோவில்

எமதர்மனுக்கு புதிய வேலைக் கிடைத்த தேவாரத் தலம்

பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் ஒரு சண்டிகேசுவரர் மட்டுமே இருப்பார். ஆனால் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இரண்டு சண்டிகேசுவரர்கள் இருக்கிறார்கள். ஒருவர் ஆதி சண்டிகேசுவரர். மற்றொருவர் எம சண்டிகேசுவரர்.

பிறக்க முக்தி எனும் சிறப்புடையது திருவாரூர் தலம். அதனால் இத்தலத்தில் பிறந்தவரகள் அனைவரும் சிவ கணங்கள் என்னும் தகுதியைப் பெறுகிறார்கள். இக்காரணத்தினால் எமதர்மன் அவர்களை நெருங்க முடியாது. இறைவனே முக்தி பேறு தந்து அவர்களை அழைத்துச் செல்வதால், இத்தலம் முக்தித் தலம் என்றழைக்கப்படுகிறது.ஆதலால் திருவாரூரில் தனக்கு வேலை இல்லையே என்று எமதர்மன் சிவபெருமானிடம் முறையிட்டான். அவன் மனக்குறையைப் போக்குவதறகாக, சிவபெருமான் அவனுக்கு சண்டிகேசுவரர் பதவி கொடுத்தார். இக்கோவிலில் இரண்டாம் பிரகாரத்தில் எமதர்மன் ஒரு காலை ஊன்றி கையில் முகத்தைத் தாங்கி நமக்குக் காட்சி தருகிறார். எமதர்மன் இறைவனை வேண்டி, சண்டிகேசுவரர் பதவி பெற்று தனது வேலையைக் காப்பாற்றிக் கொண்டதால், எமபயமுள்ளவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டால் நன்மை பயக்கும்.

Read More
திருவாரூர் தியாகராஜர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருவாரூர் தியாகராஜர் கோவில்

ரௌத்திர துர்க்கை

ரௌத்திர துர்க்கை திருவாரூர் ஆலயத்தின் தெற்கு பிரகாரத்தில் தனி சன்னதியில் எட்டுக் கரங்களுடன் எருமைத் தலையின் மேல் நின்ற கோலத்தில் வடக்கு முகமாக அருள்பாலிக்கின்றாள். இத்துர்க்கையின் வலது புறத்தில் கிளி அமைந்திருப்பது தனிச் சிறப்பு. இத்துர்க்கைக்கு எரிசின கொற்றவை என்ற பெயரும் உண்டு.

ரௌத்திர துர்க்கை அம்மன், ராகு கால நேரத்தில் தன்னை அர்ச்சனை செய்யும் திருமண வயதை எட்டிய குமரிப்பெண்களுக்கும், ஆண்களுக்கும் அவர்களுடைய திருமணத்தடையை நிவர்த்தி செய்து திருமண பாக்கியத்தை அருளுகின்றாள். ரௌத்திர துர்க்கை சன்னதியில் ராகு காலத்தில் அர்ச்சனை செய்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் முடித்து அம்பிகை அருள்பாலிக்கின்றாள். பிரதி வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் இராகுகால பூஜை செய்வது விசேஷம். பதவி உயர்வு வேண்டுவோரும், பணி மாற்றம் வேண்டுவோரும் இத்துர்க்கையை வழிபடுகின்றனர்.

முதன் முதலில் துர்க்கைக்கென்று தனித் துதிப்பாடல் இயற்றப்பட்டது இந்த துர்க்கைக்குத்தான். தேவாரம் பாடிய மூவருக்கும் முன் வாழ்ந்த ஸ்ரீலஸ்ரீஞானசம்பந்த முனிவர் இயற்றிய

மாயவன் தனக்கு முன்னம் மணிமுடியளித்து ஆருர் தூயனை வணங்கி

ஆங்கு துர்க்கையை விதியினால் தாபித்து ஆய்மலர் தூவி அன்பால்

அர்ச்சனை புரியின் மன்ன! நீ உளந்தனில் இன்று நினைந்தது முடியும்

என்றான்.

கோமகன் அசன் ஆருரில் கொற்றவை தனை ஸ்தாபித்து நமநீர்

உலகமெல்லாம் நன்னலார் வணங்கி ஓம்பி, ஏமுறுங்காதை இதை

இசைப்பவர் இனிது கேட்போர் தாம் மற்றவர் போல் வையந்தனில்

அரசாள்வர் மாதோ.

என்ற பாடல்களிலிருந்து, இந்த துர்க்கையை செவ்வரளி மலர் கொண்டு வழிபடுபவர்களுக்கு அவர்கள் வேண்டிய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்று அறியலாம்.

Read More
தியாகராஜர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

தியாகராஜர் கோவில்

ஐங்கலக் காசு விநாயகர்

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மொத்தம் 84 விநாயகர்கள எழுந்தருளியிர்க்கிறார்கள். அவர்களில் ஒருவரான ஐங்கலக் காசு விநாயகர், தியாகராஜப் பெருமான் சன்னதிக்கும், வன்மீகநாதர் சன்னதிக்கும் நடுவில் தனிச் சன்னதி கொண்டு எழுந்தருளியிருக்கிறார். இவர் அழகிய சோழ மன்னன் தந்த காணிக்கையால் உருவாக்கப்பட்டவர். ஒரு கலம் தங்கம், ஒரு கலம் வெள்ளி, ஒரு கலம் செம்பு, ஒரு கலம் வெண்கலம், ஒரு கலம் பித்தளை ஆகிய ஐந்து மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்டவர்தான் ஐங்கலக் காசு விநாயகர்.

Read More