திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில்
சிவராத்திரி அன்று மட்டும் தாழம்பூ பூஜைக்குப் பயன்படுத்தப்படும் தேவார தலம்
திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவார தலம் திருப்பாச்சூர். இறைவன் திருநாமம் வாசீஸ்வரர். இறைவியின் திருநாமம் தங்காதலி.
கருவறையில் சிவன் சுயம்பு லிங்கமாக சதுர வடிவ பீடத்தில் காட்சி தருகிறார். சிவலிங்கத்தின் மேல், கோடாரியால் வெட்டப்பட்ட தழும்புகள் காணப்படுகிறது. மேலும் சிவலிங்கம் வெட்டுப்பட்டதால் அதன் மேல் பகுதி மட்டும் இடப்புறத்தில் சற்று நகர்ந்தபடியான கோலத்தில் இருப்பது சிறப்பு. காயம்பட்ட லிங்கம் என்பதால், இந்த சிவலிங்கம் மனித கைகளால் தொடப்படாமல், பூஜை செய்யப்படுகிறது.
மகா விஷ்ணுவும், பிரம்மாவும் சிவபெருமானின் அடி, முடி தேடியபோது, தான் ஈசனின் அடி முடியை கண்டதாக, தாழம்பூவை பொய் சாட்சி சொல்லும்படி பிரம்மா கெஞ்சினார். தாழம்பூவும் ஒத்துக்கொண்டது. அக்னி பேரொளியான சிவபெருமானிடம் சென்ற பிரம்மா, தங்களின் அடி முடியை தான் கண்டதாக கூற, தாழம்பூவும் ஆமாம் என்று பொய் சாட்சி கூறியது.பிரம்மனுக்காக பொய் சொன்ன தாழம்பூவை பூஜைகளில் இருந்து ஒதுக்கி வைத்தார் சிவபெருமான். தாழம்பூ சிவனிடம் தன்னை மன்னித்து பரிகாரம் வேண்டவே, சிவராத்திரி நாளில் மட்டும் தனது பூஜைக்கு பயன்படும்படி சிவபெருமான் வரம் கொடுத்தாராம். இதன் அடிப்படையில் இக்கோவிலில், சிவராத்திரி தினத்தன்று இரவு ஒரு கால பூஜையில் மட்டும் தாழம்பூவை சிவபெருமானின் உச்சியில் வைத்து பூஜை செய்கின்றனர்.