சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவில்

சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவில்

கையில் பாம்பை பிடித்தபடி இருக்கும் சர்ப்ப பைரவர்

தென்காசியில் இருந்து சுமார் 45 கி மீ தொலைவில் உள்ளது சங்கரன்கோவில். இறைவனின் திருநாமம் சங்கரலிங்கசுவாமி. இறைவியின் திருநாமம் கோமதி அம்மன்.

பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். சிவபெருமானின் சொரூபங்களில் சரபேசரும், பைரவரும் பக்தர்களின் கோரிக்கைகளை கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவர். பைரவர், சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர். இவர் காவல் தெய்வம் என்பதால் பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது.

ஆனால் பைரவர், சங்கரன்கோவில் ஸ்ரீசங்கர நாராயணர் கோவிலில், நின்ற திருக்கோலத்தில் தனது இடது மேற்கரத்தில், செங்குத்தாக பாம்பை கையில் ஏந்தியபடி காட்சி தருகிறார். இவரை 'சர்ப்ப பைரவர்' என்கிறார்கள். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் இந்த பைரவரை வணங்கினால், அரளி மலர்கள் சார்த்தி, மிளகு வடை மாலையோ வெண் பொங்கலோ நைவேத்தியம் படைத்து வணங்கி வழிபட்டால், எல்லா செளபாக்கியங்களும் தடையின்றித் தந்தருள்வார். சர்ப்ப தோஷம் முதலான சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.

சதய நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சர்ப்ப பைரவர்

27 நட்சத்திரக்காரர்களும், அவரவர்க்குரிய பைரவரை வழிபட்டால் நற்பலன்கள் கூடும். அந்த வகையில், சதயம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய பைரவர், சர்ப்ப பைரவர் ஆவார்.

Read More
குற்றாலம் சித்திரசபை கோவில்

குற்றாலம் சித்திரசபை கோவில்

சித்திர வடிவில் இறைவனை வழிபடும் ஒரே தலம்

குற்றாலம் சித்திர சபை, பாண்டிய நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற 14 தலங்களில் ஒன்றான குற்றால நாதர் கோவிலுக்குப் அருகில் தனிக்கோவிலாக உள்ளது. குற்றாலத்தின் மெயினருவி போவதற்கான வளைவைத் தாண்டி, ஐந்தருவி போகும் வழியில், தேர் நிலைக்கு பக்கத்தில் அமைந்துள்ளது குற்றால சித்திர சபை. சித்திரசபை பிரமிடுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்கூரை தாமிரத் தகடுகளால் உருவாக்கப்பட்டுள்ளது.

நடராசப் பெருமான் திருத்தாண்டவம் ஆடியுள்ள ஐந்து சபைகளில் ஒன்றுதான் குற்றாலம் சித்திரசபை.

மற்ற நான்கு சபைகள்:

சிதம்பரம் நடராசர் கோவில் - கனகசபை

திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோவில் - இரத்தினசபை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் - வெள்ளிசபை

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் - தாமிரசபை

பொதுவாக கோவில்களில் விக்கிரக வழிபாடுதான் பிரதானமாக இருக்கும். ஆனால் சித்திர வடிவில் இறைவனை வழிபடுவது உலகிலேயே குற்றாலம் சபையில் மட்டும்தான். சித்திரசபையில் நடராஜப் பெருமான் தேவியுடன் ஓவியமாக எழுந்தருளியிருக்கிறார். பலவகை தாண்டவங்களில் ஒன்றாகிய திரிபுரதாண்டவம் இந்த சபையில் நடைபெற்றதாக திருப்பத்தூர் புராணம் கூறுகிறது.

சித்திரசபையில் இறைவன் திருநடனம் புரியும் காட்சியைக் கண்டு பிரம்மதேவன் ஆதி சிவனின் சொரூபங்களைச் சுவரில் எழுதிவைத்தார். இதனால் வியாசர் முதலியோர் இதனைச் சித்திரசபை என்று அழைத்ததாக புராணங்கள் கூறுகிறது. தேவர்கள் தினமும் வந்து சித்திரசபையை தரிசித்து செல்கின்றனர் என்பது நம்பிக்கையாகும். நடராஜப் பெருமான், வடக்கே உள்ள திருவாலங்காட்டை விட்டு தெற்கே குற்றாலத்தை நோக்கி வந்தது இங்கு வீசும் தென்றல் காற்றில் இளைப்பாறவும், தீந்தமிழை அனுபவிக்கவும் என்று பரஞ்ஜோதி முனிவர் கூறுகியிருக்கிறார்.

சித்திரசபையின் உட்சுவற்றில் மதுரை மீனாட்சி கல்யாண வைபவம், முருகரின் அவதாரங்கள், விநாயகர், துர்க்கையின் பல்வேறு வடிவங்கள், வீரபத்திரர், கஜேந்திரமோட்சம், திருவிளையாடற்புராண வரலாறுகள், அறுபத்துமூவர் உருவங்கள், பத்மநாபரின் கிடந்த கோலம், இரணிய சம்ஹாரம், பைரவரின் பல்வேறு உருவங்கள், சனிபகவான், ரதி - மன்மதன் ஆகியவை வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன.

மார்கழி மாதம் திருவாதிரை விழா இங்கு விமர்சையாக நடைபெறும். மார்கழி திருவாதிரை திருவிழாவின்போது முதலில் சித்திரசபையில் பூஜைகள் நடைபெற்ற பின்னரே, குற்றாலநாதர் கோவிலில் பூஜைகள் நடத்தப்படும்.

நடராஜருக்கு வருடத்துக்கு 6 அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதில், மார்கழி திருவாதிரையும், ஆனி திருமஞ்சனமும் முக்கியமான திருவிழாக்கள். இதில் குறிப்பாக, ஆனி மாத உத்திர நட்சத்திர நாளில், தேவர்கள், நடராஜப் பெருமானுக்குப் பூஜைகள் செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனி மாதத்தில், எல்லா சிவாலயங்களிலும் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் உத்திர நட்சத்திர நாளில் நடைபெறும். இதுவே ஆனித் திருமஞ்சனம் என்று போற்றப்படும்.

ஆனித் திருமஞ்சனம் இன்று (12.07.2024) நடைபெறுகின்றது.

Read More
தென்காசி காசி விசுவநாதர் கோவில்

தென்காசி காசி விசுவநாதர் கோவில்

கோபுர வாசலில் இரண்டு எதிர் திசைகளில் காற்று வீசும் அதிசயம்

தென்காசி நகரில் அமைந்துள்ளது காசி விசுவநாதர் கோவில். இறைவியின் திருநாமம் உலகம்மை.

இந்தக் கோவில் ராஜகோபுரம் நம் முன்னோர்களின் கட்டிடக்கலை திறனுக்கும், பொறியியல் தொழில்நுட்பத் திறனுக்கும் ஒரு சான்றாக விளங்குகின்றது. ஒன்பது நிலையும் 175 அடி உயரமும் கொண்ட இக்கோவில் கோபுரம், கி.பி.1456-ல் பராக்கிரம பாண்டிய மன்னரால் கட்ட ஆரம்பிக்கபட்டு, கி.பி.1462-ல் குலசேகர பாண்டியரால் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த கோபுர வாசல் வழியில் எப்பொழுதும் காற்று வீசி கொண்டே இருக்கும். பொதிகை மலையில் இருந்து ஆரியங்காவு கணவாய் வழியாக வரும் காற்று கோவிலுக்குள் நுழையும் பக்தர்களை வரவேற்பது போல், மேற்கிலிருந்து கிழக்காக, அதாவது கோபுர வாசலுக்குள் நுழையும் பக்தர்களுக்கு எதிராக, வீசுகின்றது. கோபுர வாசலை கடந்து உள்ளே போகும் போது, கோபுர வாசலில் இருந்து இறங்கும் இடத்தில், காற்று சுழன்று சுற்றி வீசுவது போல ஒரு அனுபவம் ஏற்படும். தொடர்ந்து உள்ளே செல்லும் போது, காற்று, கிழக்கில் இருந்து மேற்காக வீசும் . அதாவது பக்தர்களின் பின்புறத்தில் இருந்து கோவிலுக்குள் தள்ளுவது போல, காற்று வீசுகிறது.

காற்றை எதிர் திசையில் திருப்புவதற்கு எந்த தடுப்பும் இல்லாத நிலையில், ஒரே நேர்கோட்டில் காற்று, இரண்டு எதிர் திசையில் வீசும்படி கோபுரத்தை அமைத்திருப்பது, நம் முன்னோர்களின் மதிநுட்பத் திறனை எடுத்துக் காட்டுகின்றது. இப்படி, கோவில் கோபுரத்தினுள் நுழையும் போது கோவிலுக்குள்ளிருந்தும், பாதி பகுதி நுழைந்தபின் நம் முதுகுக்குப் பின்னிருந்தும் (கோவிலுக்கு வெளியிலிருந்தும்) தென்றல் காற்று வீசும் சிறப்பானது வேறெந்த கோவிலிலும் கிடையாது.

Read More
கிருஷ்ணாபுரம் அபய ஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கிருஷ்ணாபுரம் அபய ஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில்

ஆறடி உயர திருமேனியுடன், கண்களில், ஒளிர் விடும் பிரகாசத்துடன் தோற்றமளிக்கும் ஆஞ்சநேயர்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ளது அபய ஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில். . இராமர் இத்தலத்தில் யாகம் செய்ததால், இத்தலத்தில் எங்கு தோண்டினாலும் வெண் சாம்பல் போன்ற திருமண் கிடைக்கிறது. இக்கோவிலில் தனிச் சன்னதியில் ஆறடி உயர திருமேனியுடன் அபய ஹஸ்த ஆஞ்சநேயர் மிக கம்பீரமாக எழுந்தருளி இருக்கிறார். அவரது திருப்பாதங்கள் பக்தர்களை நோக்கி ஆசிகள் வழங்க வருவது போல் உள்ளது. வலது திருக்கரம் 'அபய முத்திரை' காட்டி, பக்தர்களுக்கு பயத்தை போக்குகிறது. இடுப்பின் இடதுபுறத்தில் அவரது இடது திருக்கரம் பதிந்துள்ளது. மார்பினை மூன்று மணிமாலைகள் அலங்கரிக்கின்றன. அவற்றில் ஒன்றில் பதக்கம் உள்ளது. காதுகளை மணிகுண்டலங்களும், காதில் மேல்பகுதியில் அணிகலமும் அணிந்திருக்கிறார். அவரது வால் தலைக்கு மேல் சென்று, நுனி சற்றே வளைந்து, சிறிய மணியுடன் காணப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அவரது கண்களில், ஒளிர் விடும் பிரகாசம், தரிசிப்பவரை பரவசத்தில் ஆழ்த்தும்.

பிரார்த்தனை

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள குளத்தின் படியில் படிப்பாயாசம் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம்.

Read More
சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவில்

தெற்குவாசி துர்க்கை

தென்காசியில் இருந்து சுமார் 45 கி மீ தொலைவில் உள்ளது சங்கரன்கோவில். இறைவனின் திருநாமம் சங்கரலிங்கசுவாமி.இறைவியின் திருநாமம் கோமதி அம்மன். பாண்டிய நாட்டின் பஞ்சபூத தலங்களில் சங்கரன்கோவில், பிரித்திவி(மண்) தலமாக விளங்குகின்றது.

பொதுவாக சிவத்தலங்களில் சுவாமியின் கருவறை சுற்றுச்சுவரில், வடக்கு நோக்கி துர்க்கை எழுந்தருளி இருப்பாள். ஆனால் இக்கோவிலில் தெற்கு முகமாக எழுந்தருளி இருக்கும் துர்க்கையைக் காணலாம். அதனால் இந்த துர்க்கையை 'தெற்குவாசி துர்க்கை' என்று அழைக்கின்றனர். தெற்கு என்பது எமதர்மனின் திசையாகும். எனவே, தெற்கு பார்த்தபடி வீற்றிருக்கிற துர்க்கையை, ராகுகாலவேளையில் வணங்கினால், கணவனின் ஆயுள் நீடிக்கும். தாலி பாக்கியம் நிலைக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக, வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில், எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவது சிறப்பு.

நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் இருக்கும் இந்த துர்க்கைக்கு, நவராத்திரி நாட்களில் செய்யப்படும் சிறப்பு அலங்காரங்கள், பார்ப்பவரை பரவசமடையச் செய்யும்.

Read More
குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோவில்

லட்சுமி, சரசுவதி தேவியருடன் இணைந்து அருள் பாலிக்கும் செண்பகாதேவி அம்மன்

குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. அகத்திய மாமுனிவர் செண்பகாதேவி அம்மனை பிரதிஷ்டை செய்துள்ளார். செண்பகாதேவியானவள், துர்க்கை அம்மனின் பிறப்பாக பராசக்தி வடிவில் அருள்பாலிக்கிறார். குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் செயல்பட்டு வருகிறது. செண்பகாதேவி அம்மன் கோயில் பெருமையை குற்றால தல புராணத்தில் சிறப்பாக பாடப்பட்டுள்ளது.

இக்கோவில் செண்பகாதேவி அருவி அருகில் அமைந்துள்ளது. இங்கு செண்பகாதேவி அம்மன் கோவில் இருப்பதாலேயே இங்குள்ள அருவிக்கு செண்பகாதேவி அருவி எனப் பெயர் பெற்றது. இந்த ஆலயத்தில் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் என்ற அமைப்புகளுடன் உள்ளது. இங்கு லட்சுமி, சரசுவதி தேவியருடன் இணைந்து செண்பகாதேவி அம்மன் கருவறையில் காட்சியளிக்கின்றனர். செண்பகாதேவி அம்மன் திருக்கோயிலை சுற்றி விநாயகர் அகத்தியர் உள்ளிட்ட சித்தர்களின் சிலை மற்றும் பாறையில் செதுக்கப்பட்ட நந்தி சிவலிங்கம் போன்றவையும் உள்ளது. இங்குள்ள அம்மனுக்கு ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமி அன்று திருவிழா சிறப்பாக நடைபெறும். சித்திரை மாதம் பௌர்ணமி பூஜையின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

Read More
ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

பாயாச நிவேதனத்தை சிறுவர்கள் உருவில் வந்து ஏற்கும் முருகன்

தென்காசியிலிருந்து சுரண்டை செல்லும் சாலையில் 5 கிமீ தொலைவில் உள்ள நான்முனைச் சாலையின் வலப்புறத் திருப்பத்தில் இருந்து 6 கிமீ தூரத்தில் ஆய்க்குடி கிராமம் உள்ளது. மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி, பாலகனாக ஒரு முகத்துடனும் நான்கு கரங்களுடனும் பத்மபீடத்தில் தாமரைப் பூவின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவர் அருகில் உள்ள மயிலின் முகம் இடப்புறம் பார்த்தபடி உள்ளது. மூலவருக்கு ஹரிராம சுப்பிரமணியர் என்ற பெயரும் உண்டு. மூலவரைப் போலவே அமைந்த உற்சவர் முத்துக்குமார சுவாமி மயில் வாகனத்தில் நின்ற கோலத்தில் உள்ளார்.

படிப்பாயசம் நிவேதனம்

மதுரையில் வாழ்ந்த பட்டு வணிகர் ஒருவர் குழந்தை வரம் வேண்டிப் பல கோவில்களுக்குச் சென்று, இறுதியாக ஆய்க்குடிக் கோவிலுக்கு வந்து பாலசுப்பிரமணிய சுவாமியைத் தனக்குக் குழந்தை பிறந்தால் முருகனுக்கு வைரவேல் சாற்றுவதாக வேண்டிக் கொண்டார். அவருக்குக் குழந்தைப் பேறு கிடைத்தது. ஆனால் அவர் தனது வேண்டுதலை மறந்து போனார். முருகன் வணிகரின் மனைவியின் கனவில் தோன்றி வேண்டுதலை மறந்து போனதை நினைவுறுத்தினார். தன் மறதிக்கு வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கோரிய வணிகர் தன் வேண்டுதலை நிறைவேற்றும் முகமாக, வைரவேலை முருகருக்குச் சாற்றி ஆண்டுதோறும் படிப்பாயசம் நிவேதனம் செய்தார்.

குழந்தை பேறு வேண்டுவோர் இங்கு வந்து வழிபட்டால் விரைவில் மழலை பேறு கிட்டும். தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பிறகு, பாயாசத்தை நிவேதனமாக படைத்து அதனை கோவிலுக்கு அருகில் ஓடும் அனுமன் நதிக்கரையில் உள்ள படியில் ஊற்றி சிறுவர்களை அருந்த சொல்கிறார்கள். இதனை படிப்பாயாச நிவேதனம் என்கிறார்கள். சிறுவர்கள் உருவில் முருகனே வந்து பாயாச நிவேதனத்தை ஏற்பதாக பக்தர்களின் நம்பிக்கை.

Read More
கீழப்பாவூர் நரசிம்மர்  கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கீழப்பாவூர் நரசிம்மர் கோவில்

திரிபங்கி நிலையில் காட்சியளிக்கும் விசித்திர வடிவ நரசிம்மர்

திருநெல்வேலி - தென்காசி சாலையில் உள்ள பாவூர்சத்திரத்தில் இருந்து சுரண்டை செல்லும் வழியில் இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது, பிரசித்தி பெற்ற கீழப்பாவூர் நரசிம்மர் கோவில். 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், மூர்த்தி, தலம், தீர்த்தம் மட்டுமின்றி பல்வேறு சிறப்புகள் நிறைந்தது. இந்தியாவில் மூன்று இடங்களில்தான் 16 திருக்கரங்களுடன் கூடிய நரசிம்மர் கோவில் உள்ளது. ஒன்று ராஜஸ்தான் மாநிலத்திலும், மற்றொன்று பாண்டிச்சேரி அருகே சிங்ககிரி என்னும் சிறு குன்றிலும் உள்ளன. மூன்றாவதாக, கீழப்பாவூரில் மட்டுமே சமதளப் பகுதியில் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் இரண்டு சன்னிதிகள் உள்ளன. வடக்கு பார்த்த தனிச் சன்னிதியில் அலர்மேல் மங்கா பத்மாவதி சமேத ஸ்ரீ பிரசன்ன வேங்கடாஜலபதி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இதனை ஒட்டி பின்புறத்தில் மேற்கு நோக்கிய தனிச் சன்னிதியில் நரசிம்மர் தரிசனம் தருகிறார். தமிழகத்தில் இத்தலத்தில் மட்டும்தான், திரிபங்க நிலையில் பதினாறு திருக்கரங்களுடன் இரணியனை மடியில் கிடத்தி வதம் செய்யும் கோலத்தில் அபூர்வ வடிவ சிறப்புடன் காட்சி தருகிறார். சூரியனும் சந்திரனும் வெண் சாமரங்கள் வீசி சாந்தப்படுத்திக் கொண்டிருக்க, வெண் கொற்றக் குடையுடன் தியானத்தபடி கம்பீரமாக வீற்றிருக்கிறார் நரசிம்மர். பிரகலாதன், அவனுடைய தாய், நாரதர், காசி மன்னன் ஆகியோர் அருகில் நின்று நரசிம்மரை துதித்துக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் நரசிம்ம அவதாரம் எடுத்ததால் அவரது உக்கிரகத்தைத் தணிக்க அவரது சன்னிதி முன்பு மாபெரும் தெப்பக்குளம் உள்ளது சிறப்பு. இது நரசிம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு நீராடினால் சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

தல வரலாறு

மகாவிஷ்ணு, இரணியனிடமிருந்து பிரகலாதனைக் காக்க நரசிம்ம அவதாரம் எடுத்தார். அந்த நரசிம்ம அவதார காலம் இப்பூவுலகில் (அகோபிலத்தில் ) இரண்டு நாழிகைகள் மட்டுமே நீடித்திருந்தது. 'மற்ற அவதாரங்களைப் போல், நரசிம்ம அவதாரம் நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லையே' என்ற எண்ணம் மகாவிஷ்ணுக்கு ஏற்பட்டது. அந்த எண்ணத்தை பூர்த்தி செய்வதற்கும்,தன்னை நோக்கி தவமிருந்த ரிஷிகளுக்கு நரசிம்ம தரிசனம் தருவதற்காகவும் இத்தலத்தில், கிருதயுகத்தில் அகோபிலத்தில் எடுத்த நரசிம்ம அவதாரத்தை ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடனுடன் எடுத்து, மகா உக்கிர மூர்த்தியாக பதினாறு திருக்கரங்களுடன் காட்சியளித்தார்.

தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம் மற்றும் கீழப்பாவூரில் அமைந்துள்ள நரசிம்மர் தலங்கள் தனித்துவம் கொண்டவை. ஒரு காலத்தில் இந்த இரு ஆலயங்களில் இருந்து அடிக்கடி சிங்கம் கர்ஜிப்பது போல நரசிம்மர் ஆவேசமாக குரல் எழுப்பியதாக புராணங்களில் பதிவுகள் உள்ளன.

பிரார்த்தனை

இந்த ஆலயத்தில் நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திரம் அன்று சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நரசிம்மருக்கு மிகவும் பிரியமான பானகம் படைத்து வணங்கினால் அவருடைய முழு அருளுக்குப் பாத்திரமாகலாம். நரசிம்மரை தியானம் செய்பவர்கள் தம் பகைவர்களை சுலபமாக வெல்லும் திறன் பெறுவர். அஷ்ட திக்குகளிலும் புகழ் பெற்று விளங்குவர். நீண்ட கால துன்பங்கள் நீங்கும். நரசிம்மரை வழிபடுவதற்கு செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களும் மாலை வேளையும் உகந்ததாகும்.

கீழப்பாவூர் நரசிம்மரை வழிபட்டால் அறிந்தும் அறியாமலும், போன, இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும். உலகியலான இன்பமும் கிடைக்கும்.

Read More
சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவில்

கையில் பாம்பை ஏந்தியவாறு காட்சி தரும் சர்ப்ப விநாயகர்

தென்காசியில் இருந்து சுமார் 45 கி மீ தொலைவில் உள்ளது சங்கரன்கோவில். இறைவன் சங்கரலிங்கசுவாமி. இறைவி கோமதி அம்மன்.

இக்கோவிலின் சங்கரலிங்கசுவாமி சன்னதியின் கன்னி மூலையில் சர்ப்ப விநாயகர் வீற்றிருக்கிறார். இவர் 6 அடி உயர திருமேனியுடன் சர்ப்பத்தின் மேல் அமர்ந்து காட்சியளிக்கிறார். தனது இடது கையால் சர்ப்பத்தின் தலையை பிடித்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவரை வழிபாடு செய்பவர்கள் சர்ப்ப தோஷத்திலிருந்து விடுபட்டு, திருமணத்தடை நீங்கி வாழ்க்கையில் மேன்மை அடைகின்றனர் என்பது இக்கோவிலின் ஐதீகம். இந்த சர்ப்ப விநாயகரை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் ராகு, கேது போன்ற சர்ப்ப கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். இராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இவருக்கு ஞாயிற்றுக்கிழமை இராகு காலத்தில், பாலபிஷேகம் செய்து, பால் பாயசம் படைத்து வேண்டிக் கொள்கிறார்கள். குழந்தைகள், விஷப்பூச்சிகளால் பாதிக்கப்படாமல் இருக்க, இவருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வேண்டிக் கொள்கின்றனர். இவரை வழிபட்டால் புத்திர தோஷம் நீங்கி மழலைச் செல்வம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
இலத்தூர் மதுநாதீசுவரர் கோவில்

இலத்தூர் மதுநாதீசுவரர் கோவில்

சனி பகவானை வலம் வந்து வணங்கக்கூடிய சிறப்பு பரிகாரத் தலம்

தென்காசியிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சுமார் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இலத்தூர் மதுநாதீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் மதுநாதீசுவரர். இறைவியின் திருநாமம் அறம்வளர்த்த நாயகி.

பொதுவாக சிவாலயங்களில் சனி பகவானுக்கு தனி சன்னதி இருந்தாலும் அவை கோயில் பிரகாரத்தை ஒட்டி

இருப்பதால் நாம் வலம் வந்து சனி பகவானை வழிபட முடியாது. ஆனால் இத்தலத்தில் தெற்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் சனிபகவானை நாம் வலம் வந்து வழிபட முடியும். இது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். மேலும் அவர் கைகளை அபயஹஸ்த நிலையில் வைத்து எழுந்தருளி இருப்பதால், சனி சம்பந்தப்பட்ட எந்த வித தோஷமும் இங்கு வந்து வணங்கினால் விலகிப்போகும்.

அவர் இங்கு பொங்கு சனியாக அருள்பாலிப்பதால், இது ஒரு சனி பரிகாரத் தலமுமாகவும் திகழ்கின்றது. ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டகச் சனி நடைபெறுபவர்கள் இங்குவந்து மதுநாதீசுவரையும், சனீஸ்வரரையும் வழிபாடு செய்தால், இன்னல்கள் நீங்கி இனிய வாழ்வு பெறலாம்.

சர்க்கரை வியாதியை குணமாக்கும் தலம்

சனி பகவானுக்கு தண்மை (குளிர்ச்சி) என்ற காரகத்துவமும் உண்டு. நீர்க்கிரகமான சனியை இலத்தூரில் வழிபட்டால் சர்க்கரை வியாதி பறந்தே போய்விடும் என்பது இங்குவரும் பக்தர்களின் நம்பிக்கை.

Read More
புளியரை சதாசிவ மூர்த்தி கோவில்

புளியரை சதாசிவ மூர்த்தி கோவில்

சிவபெருமானுக்கும் நந்தி தேவருக்கும் இடையே தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக்கும் அபூர்வ அமைப்பு

தென்காசி மாவட்டத்தில், செங்கோட்டையிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தலம் புளியரை. இறைவன் திருநாமம் சதாசிவ மூர்த்தி. இறைவியின் திருநாமம் சிவகாமி. புளிய மரத்தடியில் சிவபெருமான் காட்சி அளித்ததால், இத்தலம் புளியரை என அழைக்கப்பட்டது. இந்த ஊர் சின்ன சிருங்கேரி என்ற சிறப்பையும் பெற்றது.

கோவிலுக்கு செல்ல 27 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 27 படிக்கட்டுகள் 27 நட்சத்திரங்களாகப் பார்க்கப்படுகின்றது. நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து 27 படிகள் வழியாக ஏறி சிவனை பூஜித்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

பொதுவாக சிவன் கோவிலில் தட்சிணாமூர்த்தி, தெற்கு திசை பார்த்து அமர்ந்திருப்பார். ஆனால் இங்கு மூலவர் சதாசிவ மூர்த்தி லிங்கத்திற்கும், வாசலில் உள்ள நந்திக்கும் இடையே தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கின்றார். சிவனாருக்கும் நந்திதேவருக்கும் இடையே ஸ்ரீ யோக தட்சிணாமூர்த்தி எழுந்தருளியிருப்பது வேறெந்த தலத்திலும் இல்லாத விசேஷ அம்சமாகும். நேர்க்கோட்டில் அமர்ந்து அருள்பாலிக்கும் மூவரையும் ஏக காலத்தில் ஒரே இடத்தில் இருந்தபடி தரிசிக்கலாம் என்பது மேலும் ஒரு சிறப்பாகும்.

மூலவராக சதாசிவ மூர்த்தி விளங்கினாலும், தட்சிணாமூர்த்திக்கே சிறப்புத் தலமாக பார்க்கப்படுகின்றது. யோக தட்சிணாமூர்த்தியின் திருப்பாதத்தின் அருகில் சதுரக்கல் ஒன்றில் ஒன்பது ஆவர்த்த பீடங்கள், கட்டங்கள் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. அத்தனைக் கிரகங்களும் தென்முக தெய்வத்துக்குக் கட்டுப்பட்டு இங்கே இருப்பதாக ஐதீகம். எனவே, இங்கே வந்து இவரை வழிபட சகல தோஷங்களும் நீங்கும். தாலி பாக்கியம் கிட்டும், தார தோஷம் நிவர்த்தியாகும், குழந்தைப்பேறு, தொழில் வளம் முதலான சகல வரங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Read More
கடையநல்லூர் நீலமணிநாத சுவாமி  கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கடையநல்லூர் நீலமணிநாத சுவாமி கோவில்

இரட்டை சிம்ம வாகனத்தில் அருள்பாலிக்கும் சக்கரத்தாழ்வார்

தென்காசியில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள கடையநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது நீலமணிநாத சுவாமி கோவில். அர்ஜுனன் வழிபட்ட தலம் என்பதால் இவ்வூருக்கு, 'அர்ஜுனபுரி க்ஷேத்திரம்' என்ற பெயரும் உண்டு.

கருவறையில் நீலமணிநாத சுவாமி என்ற கரியமாணிக்கப்பெருமாள் ஸ்ரீ பூமி, நீளா தேவியருடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். திருப்பதி வெங்கடாஜலபதியைப் போன்ற கோலத்தில் இவர் காட்சி தருவது சிறப்பு. திருப்பதியில் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு முடிக்காணிக்கை செலுத்தி, நேர்த்திக் கடன்களை நிவர்த்தி செய்து கொள்கிறார்கள். திருமண, புத்திர தோஷம் இருப்பவர்கள் சுவாமிக்கு, திருவோண நட்சத்திர தினத்தில் கறிவேப்பிலை சாதம், பாயாசம் நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் தோஷங்கள் நீங்குவதாக நம்புகின்றனர்.

இக்கோயிலில் உள்ள சக்கரத்தாழ்வார் தனி சன்ன தியில் 16 கைகளுடன் இருக்கிறார். இவரது பீடத்திற்கு கீழே இரண்டு சிங்கங்கள் சக்கரத்தாழ்வாரையும், அவருக்கு பின்புறம் இருக்கும் யோக நரசிம்மரையும் தாங்கியபடி இருக்கிறது. நரசிம்மருக்கு கீழே ஐந்து தலை நாகம் ஒன்று இருக்கின்றது. சக்கரத்தாழ்வாரின் இந்தத் தோற்றம் மற்ற இடங்களில் இல்லாத அபூர்வக் கோலமாகும். சக்கரத்தாழ்வாரின் இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. இவருக்கு சுதர்சனஹோமம் செய்து வழிபட்டால், பயம் நீங்கி, எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
குற்றாலநாதர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

குற்றாலநாதர் கோவில்

குற்றாலம் குழல்வாய்மொழி அம்மன்

தென்காசி மாவட்டம்., தென்காசி நகரிலிருந்து மேற்கே சுமார் 5 கி. மீ தொலைவில். ஸ்ரீகுற்றாலநாதர் உடனுறை ஸ்ரீகுழல்வாய்மொழி ஆலயம் அமையப்பெற்றுள்ளது.

இங்குள்ள அம்பிகை குழல்வாய்மொழி. வடமொழியில் வேணுவாக்வாகினி என்றும் அழைக்கப்படுகிறாள். இதற்கு, மூங்கிலால் செய்யப்பட்ட புல்லாங்குழலில் இருந்து எழும் இசையை காட்டிலும் இவளுடைய குரல் இனிமை வாய்ந்தது என்று பொருள்.

உயரமான கருவறையில் அம்பிகை நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறாள். வலக்கரத்தில் மலர் ஏந்தியும், இடக்கரத்தை கீழே தொங்கவிட்டபடியும் புன்முறுவல் பூத்த முகத்தவளாய் காட்சிதருகிறாள்.

தரணி பீடம்

அம்பிகையின் சக்தி பீடங்களுள் இத்தலம் 'தரணி பீடம்' என்று சிறப்பிக்கப்படுகிறது. அகத்தியர் இங்கு திருமால் தலத்தை, சிவத்தலமாக மாற்றியபோது திருமாலுக்கு வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி, குழல்வாய்மொழிநாயகியாகவும், பூதேவி, பராசக்தியாகவும் மாற்றினாராம். பராசக்தி, இங்கு ஸ்ரீசக்ர அமைப்பிலுள்ள பீடத்தின் வடிவில் காட்சி தருகிறாள். பூமாதேவியாக இருந்து மாறிய அம்பிகை என்பதால் இந்த பீடத்திற்கு, 'தரணி பீடம்' (தரணி – பூமி) என்று பெயர். ஒன்பது அம்பிகையரின் அம்சமாக இந்த பீடம் இருப்பதாக ஐதீகம். எனவே, பவுர்ணமியன்று இரவில் 'நவசக்தி' பூஜை செய்கின்றனர். அப்போது, பால், வடை பிரதானமாக படைக்கப்படும். இவள் உக்கிரமாக இருப்பதால், இவளுக்கு எதிரே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்துள்ளனர். இவர், 'காமகோடீஸ்வரர்' என்றழைக்கப்படுகிறார். பவுர்ணமி, நவராத்திரி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரணி பீடத்திற்கு, பன்னீர் கலந்த குங்கும அர்ச்சனை செய்து, விசேஷ பூஜை செய்து வழிபட்டால் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் அம்பாளுக்கு சந்தனக்காப்பு செய்யப்படுகிறது.இரவு எண்ணைய் தீப விளக்குகளின் ஒளியில் அம்பிகையின் தரிசனம் பார்ப்பவரை பரவசம் அடையச் செய்யும்.

ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி நான்காம் நாளன்று வெளியான பதிவு

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்

https://www.alayathuligal.com/blog/wl7ltlrte5zw89gr4xkt4kns3e974y

Read More
சங்கரநாராயணர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சங்கரநாராயணர் கோவில்

கோமதி அம்மனின் ஆடித்தபசு

மதுரையிலிருந்து சுமார் 120 கி.மீ. தூரத்திலுள்ள சங்கரன்கோவில் என்னும் ஊரில் அமைந்துள்ளது சங்கரநாராயணர் கோவில். இறைவன் சங்கரலிங்கசுவாமி. இறைவி கோமதி அம்மன். கோ என்றால் பசுக்கள். மதி என்றால் நிலவு போன்ற முகம் கொண்டவர் என்று பொருள்.

கருவறையில் கோமதி அம்மன் அழகே உருவானவளாக ஸ்ரீசக்ர பீட பஞ்ச பிரம்மாசனத்தின் மேல் வலது இடை நெளிந்து, வலது கையில் மலர்பாணம் மற்றும் பூச்செண்டு எந்தியவளாக, இடது கையை பூமியை நோக்கி தளரவிட்டவளாக இளமங்கை கோலத்தில் புன்னகை பூத்த முகத்துடன் சர்வாலங்கார பூஷிதையாக கருணை பொங்க காட்சி தருகிறாள்.

கோமதி அம்மன் ஆடித்தபசு மேற்கொண்டதின் பின்னணி

சங்கரன் கோவிலில் அன்னை கோமதியை பிரதானப்படுத்தி நடக்கும் திருவிழா ஆடித்தபசு விழா ஆகும். மக்களுக்காக கோமதி அம்மன் ஊசி முனையில் தவம் இருந்தார். அரியும் ஹரனும் இணைந்து சங்கர நாராயணராக ஆடி மாதத்தின் உத்திராட நாளில் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித்ததை நினைவுகூரும் வகையில் ஆடி மாதத்தில் தபசு விழா கொண்டாடப்படுகிறது.

சங்கன், பதுமன் என்ற இரு நாக வம்சத்து அரசர்களுக்கு இடையே ஒரு போட்டி இருந்தது. சங்கன் சிவனை வணங்குபவர். பதுமன் நாராயணரை வணங்குபவர். சங்கன் தன் கடவுளான சிவனே அதிக ஆற்றல் உள்ளவர் என்றும் பதுமன் தன் விருப்பக் கடவுளான திருமாலே அதிக ஆற்றல் உடையவர் என்றும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் அம்மனிடன் சென்று முறையிட்டனர். சங்கன், பதுமன் மட்டுமின்றி, இறைவனின் முழு வடிவத்தை உலக மக்கள் உணர வேண்டும் என அம்மன் சிவனிடம் வேண்டி, தன் தோழியர்கள் பசுக்கூட்டங்களாக உடனிருக்க ஆவுடை நாயகியாக ஒற்றைக்காலில் ஊசி முனையில் இறைவனை நோக்கி தவம் இருந்தாள். அம்மனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், சங்கரநாராயணராகக் (சங்கரன்-சிவன்; நாராயணன்-திருமால்) காட்சியளித்தார். ஒரு புறம் சிவப்பு, மறு புறம் சியாமளம் ஒரு புறம் கங்கை சந்திரன் சடைமுடி, மறு புறம் வஜ்ர மாணிக்க மகுடம் ஒரு புறம் மழு, மறு புறம் சங்கு ஒரு புறம் புலித்தோல், மறு புறம் பீதாம்பரம், ஒரு புறம் ருத்திராட்சம், மறு புறம் துளசி மாலை , ஒரு புறம் வைணவன் பத்மன், ஈசனுக்குக் குடை பிடிக்கிறான்; மறு புறம் சைவச் சங்கன் பெருமாளுக்குக் குடை பிடித்து நிற்க அரிஹரனாய் காட்சி தந்தார் இறைவன்.

கடவுளர் இருவருமே சமம் என்றும், அன்பினாலும் தியாகத்தாலும் மட்டுமே இவர்களை அடைய முடியும் என்றும், சிவனும் திருமாலும் இணைந்த சங்கரநாராயணர் தோற்றத்தால் உணர்த்தப்பட்டது. பசுக்களுடன் அன்னை தவம் இருந்ததால் கோமதி என்று அழைக்கப்பட்டார்.நாகர் இருவரும் இறைவனை வழிபட்டு, கோமதி அம்மனுடன் தங்கினர்.

பிரதான பிரசாதமாக புற்று மண்

சங்கரன்கோவில் பாம்புகள் சங்கன்,பதுமன் வழிபட்ட கோவில் என்பதால் இங்கு புற்று இருக்கிறது. புற்று மண்தான் பிரதான பிரசாதம். நோயுள்ளவர்கள் இந்த மண்ணை நீரில் கரைத்து சாப்பிடுகின்றனர். இதனால் சரும நோய்கள் நீங்குகின்றன. மேலும் வீடுகளில் பூச்சி, பல்லி, வயல்களில் பாம்புத் தொல்லை இருந்தால், மூலவர் சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அந்தந்த பூச்சிகளின் உருவங்களை வாங்கி உண்டியலில் காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும். ஆடித்தபசு நாளில் அம்பிகையையும், சங்கரலிங்கரையும், சங்கரநாராயணரையும் வழிபட நன்மைகள் நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாகும்.

Read More
திருமலை முத்துக்குமார சுவாமி கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

திருமலை முத்துக்குமார சுவாமி கோவில்

திருமலை உச்சிப்பிள்ளையார்

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகரில் இருந்து வடமேற்கில் 10 கிலோமீட்டர் தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரிலுள்ள திருமலை என்ற சிறிய குன்றின் மீது திருமலை முத்துக்குமார சுவாமி கோவில் அமைந்துள்ளது.

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் போல திருமலைக் குனறின் மீதும் ஒரு உச்சிப்பிள்ளையார் எழுந்தருளியிருக்கிறார். இந்தக் குன்றில் மூன்று விநாயகர் சன்னதிகள் உள்ளன. மலையடிவாரத்தில் வல்லப கணபதி, மலைப்பாதையின் நடுவில் நடுவட்ட விநாயகர், மலையுச்சியில் மூலவர் முத்துக்குமார சுவாமி சன்னதி அருகில் உச்சிப்பிள்ளையார் என மூன்று சன்னதிகள் அமைந்திருக்கின்றன.. உச்சிப்பிள்ளையார் சன்னதிக்குச் செல்ல 16 படிக்கட்டுக்கள் உள்ளன. இந்த 16 படிகளை ஏறி இவரை வணங்குபவர்தளுக்கு 16 வகை செல்வங்களும் சேரும் என்பது ஐதீகம்.

Read More
திருமலை முத்துக்குமார சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

திருமலை முத்துக்குமார சுவாமி கோவில்

விசாக நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகரில் இருந்து வடக்கு திசையில் 8 கிலோமீட்டர் தொலைவில் பண்பொழி (பைம்பொழில்) என்ற ஊர் உள்ளது. இந்த ஊருக்கருகில் மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடரின் ஒரு சிறிய குன்றில் திருமலை முத்துக்குமார சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவார வைப்புத் தலமான இந்தக் கோவிலுக்கு வாகனங்கள் சென்று வர மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலில் முத்துக்குமார சுவாமி, நான்கு கரங்களுடன் மேல்நோக்கிய வலது கையில் சக்தி ஆயுதம், இடது கையில் வச்சிராயுதம் தாங்கியும், கீழ்நோக்கிய வலது கையில் அபயக்கரம், இடது கையில் சிம்ம கர்ண முத்திரையும் காட்டி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

இத்தலத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு, பார்வதிதேவி தன் வாயால் அருளிச் செய்த 'தேவி பிரசன்ன குமார விதி'ப்படி எட்டுக்கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இக்கோவிலில் மற்ற கோவில்கள் போன்று பள்ளி யறையில் சுவாமியைப் பாதுகை செய்வது இல்லை. மூலவருக்குப் பால், பழம், ஊஞ்சலுடன் சயனப் பூஜை மட்டுமே செய்யப்படுகிறது.

விசாக நட்சத்திரக்காரர்கள், வாழ்வில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய தலம்

முருகப்பெருமான் அவதரித்த விசாக நட்சத்திரக்காரர்கள் கோவிலாக திருமலை முத்துக்குமரசுவாமி கோவில் உள்ளது.;வி; என்றால் 'மேலான' என்றும், 'சாகம்' என்றால் 'ஜோதி' என்றும் பொருள்படும். விசாக நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக்கிரகணங்களைக் கொண்டது. இந்த கிரகணங்கள் அனைத்தும் இம்மலையில் படுவதால், விசாக நட்சத்திரத்தினர் இங்கு சென்று வழிபட்டு வந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படும்.

பித்ரு தர்ப்பணம் செய்ய உகந்த தலம்

இந்த மலைப்டிகள் ஸ்கந்த கோஷ்டப் பித்ருக்கள் வசிக்கும் தேவ படிக்கட்டுக்கள் எனச் சொல்லப்படுகிறது. ஆகையால், இந்த தலத்திற்கு வந்து முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால், நம் சந்ததிகளுக்கு நல்ல சிறப்பான வாழ்வு அமையும். நல்ல வாரிசுகள் உருவாகும் என்பது ஐதீகம்.

அருணகிரிநாதர் திருப்புகழில் திருமலை முருகனைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

Read More