சங்கரநாராயணர் கோவில்

கோமதி அம்மனின் ஆடித்தபசு

மதுரையிலிருந்து சுமார் 120 கி.மீ. தூரத்திலுள்ள சங்கரன்கோவில் என்னும் ஊரில் அமைந்துள்ளது சங்கரநாராயணர் கோவில். இறைவன் சங்கரலிங்கசுவாமி. இறைவி கோமதி அம்மன். கோ என்றால் பசுக்கள். மதி என்றால் நிலவு போன்ற முகம் கொண்டவர் என்று பொருள்.

கருவறையில் கோமதி அம்மன் அழகே உருவானவளாக ஸ்ரீசக்ர பீட பஞ்ச பிரம்மாசனத்தின் மேல் வலது இடை நெளிந்து, வலது கையில் மலர்பாணம் மற்றும் பூச்செண்டு எந்தியவளாக, இடது கையை பூமியை நோக்கி தளரவிட்டவளாக இளமங்கை கோலத்தில் புன்னகை பூத்த முகத்துடன் சர்வாலங்கார பூஷிதையாக கருணை பொங்க காட்சி தருகிறாள்.

கோமதி அம்மன் ஆடித்தபசு மேற்கொண்டதின் பின்னணி

சங்கரன் கோவிலில் அன்னை கோமதியை பிரதானப்படுத்தி நடக்கும் திருவிழா ஆடித்தபசு விழா ஆகும். மக்களுக்காக கோமதி அம்மன் ஊசி முனையில் தவம் இருந்தார். அரியும் ஹரனும் இணைந்து சங்கர நாராயணராக ஆடி மாதத்தின் உத்திராட நாளில் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித்ததை நினைவுகூரும் வகையில் ஆடி மாதத்தில் தபசு விழா கொண்டாடப்படுகிறது.

சங்கன், பதுமன் என்ற இரு நாக வம்சத்து அரசர்களுக்கு இடையே ஒரு போட்டி இருந்தது. சங்கன் சிவனை வணங்குபவர். பதுமன் நாராயணரை வணங்குபவர். சங்கன் தன் கடவுளான சிவனே அதிக ஆற்றல் உள்ளவர் என்றும் பதுமன் தன் விருப்பக் கடவுளான திருமாலே அதிக ஆற்றல் உடையவர் என்றும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் அம்மனிடன் சென்று முறையிட்டனர். சங்கன், பதுமன் மட்டுமின்றி, இறைவனின் முழு வடிவத்தை உலக மக்கள் உணர வேண்டும் என அம்மன் சிவனிடம் வேண்டி, தன் தோழியர்கள் பசுக்கூட்டங்களாக உடனிருக்க ஆவுடை நாயகியாக ஒற்றைக்காலில் ஊசி முனையில் இறைவனை நோக்கி தவம் இருந்தாள். அம்மனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், சங்கரநாராயணராகக் (சங்கரன்-சிவன்; நாராயணன்-திருமால்) காட்சியளித்தார். ஒரு புறம் சிவப்பு, மறு புறம் சியாமளம் ஒரு புறம் கங்கை சந்திரன் சடைமுடி, மறு புறம் வஜ்ர மாணிக்க மகுடம் ஒரு புறம் மழு, மறு புறம் சங்கு ஒரு புறம் புலித்தோல், மறு புறம் பீதாம்பரம், ஒரு புறம் ருத்திராட்சம், மறு புறம் துளசி மாலை , ஒரு புறம் வைணவன் பத்மன், ஈசனுக்குக் குடை பிடிக்கிறான்; மறு புறம் சைவச் சங்கன் பெருமாளுக்குக் குடை பிடித்து நிற்க அரிஹரனாய் காட்சி தந்தார் இறைவன்.

கடவுளர் இருவருமே சமம் என்றும், அன்பினாலும் தியாகத்தாலும் மட்டுமே இவர்களை அடைய முடியும் என்றும், சிவனும் திருமாலும் இணைந்த சங்கரநாராயணர் தோற்றத்தால் உணர்த்தப்பட்டது. பசுக்களுடன் அன்னை தவம் இருந்ததால் கோமதி என்று அழைக்கப்பட்டார்.நாகர் இருவரும் இறைவனை வழிபட்டு, கோமதி அம்மனுடன் தங்கினர்.

பிரதான பிரசாதமாக புற்று மண்

சங்கரன்கோவில் பாம்புகள் சங்கன்,பதுமன் வழிபட்ட கோவில் என்பதால் இங்கு புற்று இருக்கிறது. புற்று மண்தான் பிரதான பிரசாதம். நோயுள்ளவர்கள் இந்த மண்ணை நீரில் கரைத்து சாப்பிடுகின்றனர். இதனால் சரும நோய்கள் நீங்குகின்றன. மேலும் வீடுகளில் பூச்சி, பல்லி, வயல்களில் பாம்புத் தொல்லை இருந்தால், மூலவர் சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அந்தந்த பூச்சிகளின் உருவங்களை வாங்கி உண்டியலில் காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும். ஆடித்தபசு நாளில் அம்பிகையையும், சங்கரலிங்கரையும், சங்கரநாராயணரையும் வழிபட நன்மைகள் நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாகும்.

ஆலயத்துளிகள் இணையதளத்தில் 

வரலட்சுமி விரதம் பற்றிய சென்ற ஆண்டு பதிவு

https://www.alayathuligal.com/blog/mrmzkcz96fc6h7wpdtd82ahs6p6le6

 
Previous
Previous

ஏரி காத்த ராமர் கோவில்

Next
Next

கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோவில்