குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில்

தன் சிலையைத் தானே வடிவமைத்த அம்மன்

உலகப் புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலகப் புகழ்பெற்றதாகும். பக்தர்கள் இத்திருவிழாவிற்காக, சுமார் ஒரு மண்டல காலம் விரதம் இருந்து, தசரா திருவிழாவன்று பல்வேறு வேடங்களை அணிந்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம்.

தன் சிலையைத் தானே வடிவமைத்த அம்மன்

குலசேகரப்பட்டினம் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் பாதையில் 76 கி.மீ. தொலைவில் உள்ளது. 150 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில், முத்தாரம்மனை முதலில் சுயம்பு வடிவிலேயே பக்தர்கள் வழிபட்டு வந்தனர். பின்னர் அம்மனுக்கு விக்கிரகம் அமைக்க விரும்பினர்.

கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன், கன்னியாக்குமரி அருகே மைலாடி என்றொரு சிற்றூர் உள்ளது. அங்கு சென்றால் உங்கள் விருப்பம் நிறைவேறும் என்று கூறினாள். மைலாடி பகுதியில் அதிக அளவில் பாறைகள் உண்டு. சிலை செய்யும் சிற்பிகளும் அதிகம் பேர் உண்டு. அவர்களில் ஒருவரான சுப்பையா ஆசாரி என்பவர் மிகவும் திறமைசாலி. .அவரது கனவிலும் முத்தாரம்மன் தோன்றி, குலசேகரப்பட்டினத்தில் தான் சுயம்புவாக இருப்பதாகவும், பக்தர்கள் தனக்கு விக்கிரகம் அமைக்க விரும்புவதையும் கூறினாள்.

பின்னர், சுவாமியுடன் ஆசாரிக்குக் காட்சி அளித்த அன்னை, தங்களை நன்கு உற்று நோக்குமாறும், தென் திசையில் உள்ள ஆண் பெண் பாறையில் ஒரே கல்லில், ஒரே பீடத்தில் தங்கள் திருவுருவச் சிலையை வடித்துக் கொடுக்குமாறும் உத்தரவிட்டாள். அந்தக் கற்சிலையை தன் சுயம்பு மேனிக்கு அருகில் நிறுவ வேண்டும் என்றும் கட்டளையிட்டாள்.

சுப்பையா ஆசாரி, முத்தாரம்மன் தனக்கிட்ட ஆணையை நிறைவேற்ற முடிவு செய்தார். குலசேகரப்பட்டினம் எங்கிருக்கிறது என்று விசாரித்து அறிந்து கொண்டார். அதன்பிறகு தன் மனதில் திடமாகப் பதிந்திருந்த அம்பாள் மற்றும் சுவாமியின் திருமேனியை அப்படியே கற்களில் சிலையாக வடித்தார்.

முத்தாரம்மன் கனவில் கூறியபடி குலசை அர்ச்சகர் மைலாடி சென்றார்.சுப்பையா ஆசாரி பற்றி விசாரித்து அறிந்து அவரைச் சந்தித்தார். சுப்பையா ஆசாரி ஏற்கனவே ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் சிலையை செய்து வைத்திருந்ததைப் பார்த்தார். பக்தர்கள், அம்மனின் திருவிளையாடலை எண்ணி மெய்சிலிர்த்தனர்.

இந்த அம்மன்தான் குலசேகரன்பட்டினத்தில், இன்றும் காட்சியளிக்கிறாள். ஒரே பீடத்தில், முத்தாரம்மன் அருகே சுவாமி ஞானமூர்த்தி வீற்றிருப்பது இந்த ஆலயத்தின் முக்கியச் சிறப்பாகும். இப்படி அம்பாளும், சிவனும் ஒரே பீடத்தில் வீற்றிருப்பது வேறு எந்த தலத்திலும் இல்லை

Read More
குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில்

ராமாயண காலத்தோடு தொடர்புடைய கோவில்

திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் அமைந்து உள்ள தென்திருப்பேரை என்ற ஊரில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்து உள்ளது குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில். கருவறையில் முத்துமாலை அம்மன் நான்கு திருக்கரங்களோடு, கையில் கிளி ஏந்தியபடி காட்சி தருகிறாள்.

மிகவும் பழமையான இக்கோவில் ராமாயண காலத்தோடு தொடர்புடையது. ராவணன், சீதாதேவியை சிறைபிடித்துச் சென்றான். சீதாதேவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட ராமனுக்கு வானரங்கள் உதவின. இலங்கைக்குச் செல்ல ராமபிரான் தன் வானரச் சேனையை அணிவகுத்து நிற்கச் செய்த இடம் இது. குரங்குகள் அணிவகுத்து நின்றதால் இவ்வூர் 'குரங்கணி' எனப் பெயர் பெற்றது.

சீதாதேவி தான் சென்ற வழியை ராமனுக்கு அடையாளம் காட்ட தன் கழுத்தில் கிடந்த முத்து மாலையை கழற்றி வீசினாள். புஷ்பக விமானத்தில் இருந்து வீசப்பட்ட முத்து மாலை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள குரங்கணியில் விழுந்தது. முத்து மாலை கிடந்த இடமானதால் இங்கு அமைக்கப்பட்ட அம்மனுக்கு முத்துமாலையம்மன் என்று பெயரிட்டனர்.

ஆங்கிலேய அதிகாரி கூப்பிட்ட குரலுக்கு பதில் அளித்த முத்துமாலை அம்மன்

ஆங்கிலேய அதிகாரி கோவிலுக்கு தந்த இரண்டு மண் குதிரைகள்

பல ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை ஆண்டுகொண்டிருந்த நவாப், தாமிரபரணி ஆற்றின் கரையை நேராக அமைக்க எண்ணினார். அதற்கு கோவிலின் சுற்றுச்சுவர் இடையூறாக இருப்பதாக நினைத்த அவர், ஆங்கிலேய அதிகாரி ஒருவரை அனுப்பி கோவில் சுற்றுச்சுவரை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி ஒரு ஆங்கிலேய அதிகாரி இக்கோவிலுக்கு குதிரையில் வந்தார். கோவில் சுற்றுச்சுவரை இடிக்க முயற்சித்தார். அவருடைய செயலை அவ்வூரைச் சேர்ந்தவகள் தடுத்தனர். அப்போது அந்த அதிகாரி 'இந்த அம்மனுக்கு சக்தி இருக்குமானால், நான் கூப்பிடுகிறேன். அது பதில் சப்தம் தருமா? என கேட்க, அதற்கு அவர்கள் 'நிச்சயம் தரும்' என்றனர்.

ஆங்கிலேய அதிகாரி,'முத்துமாலை அம்மன், முத்துமாலை அம்மன்' என மூன்று முறை கூப்பிட்டார். 'என்ன?' என்ற சப்தம் இடி போன்று கோவில் கருவறைக்குள் இருந்து கேட்டது. சப்தத்தை கேட்ட அதிர்ச்சியில் அந்த அதிகாரி மயங்கி கீழே விழுந்தார். உடன் குதிரையும் மயங்கி விழுந்தது. கூடி இருந்தவர்கள் பயபக்தியுடன் நின்றார்கள். அம்மன் தீர்த்தம் தெளித்து எழுப்பியதும் அதிகாரிக்கும், குதிரைக்கும் சுய உணர்வு வந்தது. கோவிலை இடிக்காமல் விட்ட அதிகாரி, இரண்டு மண் குதிரைகள் செய்து கோவிலில் வைக்க உத்தரவிட்டார். அந்த குதிரைகளை இன்றும் கோவிலில் பெரிய சுவாமி சன்னிதியில் காணலாம்.

இக்கோவிலில் ஆனி பெருந்திருவிழா, தைத் திருமாலை பூஜை விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். ஆனி மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை முத்துமாலை அம்மனுக்கு சொக்கத் தங்கத்தால் திருமேனி அலங்காரம் செய்யப்படும். ஆனி பெருந்திருவிழாவின் போது, வானில் கருடன் வட்டமிடும் அதிசய காட்சி இன்றும் நடைபெற்று வருகிறது.

Read More
நதிக்கரை முருகன் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

நதிக்கரை முருகன் கோவில்

திருச்செந்தூர் முருகனைப் போன்ற திருக்கோலத்துடன் எழுந்தருளி இருக்கும் முருகன் கோவில்.

திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் சாலையில், புதுக்குடியையும் ஶ்ரீவைகுண்டத்தையும் இணைக்கும் பாலத்துக்குக் கீழ், தாமிரபரணியின் கரையில் அமைந்துள்ளது நதிக்கரை முருகன்.

இக்கோவில் மூலவரான முருகன், திருச்செந்தூர் முருகனைப் போன்ற திருக்கோலத்துடன் இருக்கின்றார். திருச்செந்தூரில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி, தவநிலையிலும், சிவனைப் பூஜிக்கும் தன்மையுடனும் திகழ்வதாக ஐதிகம். அதனால் அங்கே, கருவறையில் செந்தில் ஆண்டவரின் இடப்புறத்தில் சிவலிங்கம் உண்டு. திருச்செந்தூரைப் போன்றே இங்கும் கருவறையில் முருகன் அருகில் சிவலிங்கத் திருமேனி உண்டு. இங்கு ஶ்ரீசுப்ரமணியர், ஶ்ரீசண்முகப் பெருமான் என்று இரண்டு உற்சவர்கள். இருவருமே தேவியருடன் தனிச் சந்நிதியில் அருள்கிறார்கள்.

திருச்செந்தூரில் கடற்கரையில் நிகழும் சூரசம்ஹாரம், இங்கே நதிக்கரையில் நிகழ்வது சிறப்பம்சம் ஆகும். திருச்செந்தூர் முருகன் போன்ற உருவ ஒற்றுமையுடன் நதிக்கரை மூலவர் அருள்வதால், இங்கு நடைபெறும் சூரசம்ஹாரத் திருவிழாவில் கலந்து கொண்டு விரதம் இருந்து வழிபட்டால், திருச்செந்தூரில் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆகவே, கந்த சஷ்டியை ஒட்டி திருச்செந்தூருக்குச் செல்ல முடியாத பக்தர்கள், இந்தக் கோவிலில் விரதம் இருந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

திருமண பாக்கியம் அருளும் விருட்ச கல்யாண வழிபாடு

இந்தக் கோவிலின் விசேஷங்களில் ஒன்று விருட்ச கல்யாணம். இந்தக் கோவிலின் தல விருட்சமாக அரசும், வேம்பும் பின்னிப் பிணைந்தபடி திகழ்கின்றன. இவற்றின் அடியில் நாக சிலைகள் உள்ளன. திருமணத் தடை உள்ளவர்கள், தோஷங்களின் காரணமாக கல்யாண நடப்பதில் தாமதம் ஏற்பட்டு அதனால் வருந்தும் அன்பர்கள், எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையாதவர்கள், இங்கு வந்து இந்த விருட்சங்களுக்குச் சிறப்பு வழிபாடு செய்கிறார்கள். ஶ்ரீவைகுண்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இந்த முருகனுக்கு வேண்டிக்கொண்டு, கல்யாணம் நிச்சயம் ஆனதும், இந்தக் கோவிலுக்கே வந்து திருமணம் செய்துகொள்கிறார்கள்.

Read More
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்

கந்த சஷ்டி கவசம் இயற்ற அருளிய செந்தில் முருகன்

நோய்,நொடி இல்லாமலும், அழிவு நேராமலும் காக்க வேண்டும் என்று உடலின் ஒவ்வொரு உறுப்பின் பெயராகச் சொல்லி 'காக்க' இறைவனை வேண்டுவது காப்புக் கவசமாகும். இறைவனைத் தலையால் வணங்குவது முறையாதலால், உறுப்புக்கள் தலையிலிருந்து வரிசைப்படுத்தப்பட்டு இவ்வேண்டுதல் அமையும். இவ்வாறு பாடி இறைவனை வேண்டும் கவசங்கள் ஆறு 1. சிவ கவசம். 2. கந்த சஷ்டி கவசம், 3. சண்முக கவசம், 4. சத்தி கவசம், 5. விநாயகர் அகவல் 6. நாராயண கவசம். இந்தக் கவசங்களில் உலகம் முழுமைக்கும் உள்ள ஆன்மீக அன்பர்கள் பெரிதும் பாடி, வேண்டும் கவசம் கந்த சஷ்டி கவசமாகும். இதனை இயற்றியவர் பால தேவராய சுவாமிகள் என்ற ஒரு தமிழ் புலவர். இவர் 1857 இல் தொண்டை நாட்டு வல்லூரில் வாராச்சாமி பிள்ளை என்பவருக்கு மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் தேவராயன். இவர் கணக்கர் வேலை பார்த்துவந்தார்.

பால தேவராய சுவாமிகள் ஒரு சமயம் தீராத வயிற்று வலியால் அவதிபட்டார். எவ்வளவு மருத்துவ சிகிச்சை செய்தும் வயிற்றுவலி குணமாகாததால், கடைசியாக திருச்செந்தூர் முருகனிடம் வேண்டிவிட்டு சாகலாம் என முடிவெடுத்து, திருச்செந்தூர் வந்தார். திருச்செந்தூரில் முருகப்பெருமான் அவருக்கு காட்சி அளித்து ஒரு பதிகம் இயற்றுமாறும், அது அவர் நோயினை மட்டுமல்ல, உலக மக்கள் அனைவருடைய நோயினையும் தீர்க்கும் பாடலாக அமையும் என்றும், யாரெல்லாம் அந்தப் பதிகத்தைபடிக்கின்றார்களோ அவர்கள் நோயும், அவர்கள் வேண்டுவோரின் நோயும் தீரும் என்று அருளாசி தந்தார்.

அப்போது திருச்செந்தூர் கோவிலில் பால தேவராய சுவாமிகள் மட்டுமல்ல, இன்னும் ஏகப்பட்ட நோயாளிகள் இருந்தனர். தேவராயருக்கு வயிற்றில் வலி என்றால், மற்ற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோய். தலையில் கட்டி, கன்னத்தில் புற்று, கழுத்தில் கழலை, எலும்புருக்கி நோய், வயிற்றுவலி, மூலம், தொடையில் புண் , கணுக்கால் வலி என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோய். இது போல பேய் , பில்லி சூன்யம், சித்தபிரம்மை, வறுமை இவற்றால் பாதிக்கப்பட்டோரும் அங்கு இருந்தனர். அந்த மொத்த மக்களின் குரலாக, முருகனிடம் எல்லா பிணிகளும், நோய்களும் தீர முருகன் சொன்னபடி பாலதேவராயர் பாடினார். எல்லா பக்தரையும் முருகன் எக்காலமும் காக்கும்படி பாடினார்.

பால தேவராயர்,திருச்செந்தூர் முருகன் சன்னதியில் இருந்து பாட தொடங்கினார். அவர் பாடி முடிக்கவும், அவரின் கொடும் நோய் அகன்றது, அந்த மகிழ்ச்சியில் அறுபடை வீடெல்லாம் சென்று அந்தப் பாடலை தொகுத்து முடித்தார். அதுதான் கந்த சஷ்டி கவசம்.

சஷ்டி என்றால் ஆறு, கவசம் என்றால் பாதுகாப்பு. நோய், பில்லி சூன்யம், வறுமை, வம்ச விருத்தி சிக்கல், மனநலம், தீரா கவலை உட்பட 6 வகையான கொடும் பிணிகளில் இருந்து கந்தன் மக்களை காக்கும் பாடலாக அது கொள்ளப்பட்டது. அக்காலத்தில் நோய்கள் பரவும் காலத்தில் இல்லம் தோறும், ஆலயம் தோறும் அதைப் பாடுவார்களாம்.

ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு வேல் பெயரை சொல்லி, காவல்தேடும் பாடல் அது. ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு உறுப்பையும் அதன் இயக்கத்தையும் காத்தருள வேண்டும் பாடலாக உள்ளது.

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க

கதிர்வேலிரண்டும் கண்ணினைக் காக்க

விதிசெவியிரண்டும் வேலவர் காக்க

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

முப்பத்திருபல் முனைவேல் காக்க

செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க

என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க

மார்பை ரத்தின வடிவேல் காக்க……

Read More
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்

செந்தில் ஆண்டவருக்கு எதிரே நந்தியும், இரண்டு மயில்களும் நிற்கும் அபூர்வ காட்சி

முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின்போது மட்டுமே திருச்செந்தூரில் முழுதாகத் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடி விடுவார்கள்.

கருவறையில் முருகன் இடது கையில் தாமரை மலருடன் ஜடாமுடி கொண்டு சிவயோகி போல காட்சிதருகிறார். முருகனின் சிலைக்கு பின்னால் இடதுபுற சுவரில் போரில் வெற்றிபெற்று வந்த முருகன் பூசை செய்ததாக சொல்லப்படும் லிங்கம் ஒன்று இருக்கிறது. அதற்கு முதலில் பூசை செய்தபிறகே முருகனுக்கு பூசை செய்யப்படுகிறது. திருச்செந்தூர் கடற்கரையில் சூரபத்மனை அழித்த போது, முருகப்பெருமானுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடிக்கிறது. அப்போது அகத்தியர் வழிகாட்டுதலின் கீழ், பஞ்ச லிங்கங்களை மணலிலே பிடித்து வழிபாடு செய்து தோஷங்கள் நீங்க பெறுகிறார். இந்த அபூர்வமான வழிபாட்டிற்கு பார்த்திபலிங்க பூஜை என்று பெயர்.

முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு. மாங்கனி வேண்டி உலகைச் சுற்றி வர உதவிய மயில், மந்திர மயில். சூரசம்ஹாரத்திற்கு முன்புவரை இந்திரனே முருகனுக்கு மயில் வாகனமாக இருந்தான். சூரசம்ஹாரத்தின்போது இந்திரன் மயிலாகி முருகனைத் தாங்கினான். இது தேவ மயில். பின் சூரனை இருகூறாக்கியதில் வந்த மயில்தான் அசுர மயில். ஏற்கனவே இருந்த மயிலோடு, இந்த மயிலும் (சூரன்) சேர்ந்து வந்து திருச்செந்தூரில் இரண்டு மயில்களாக நின்றுவிட்டன. முருகன் சூரனை வென்றபின் இந்திரனுக்கு தேவலோக தலைமை பதவியை கொடுத்து அனுப்பிவிட்டு, மயிலாக மாறிய சூரனையே தன் வாகனமாகக் கொண்டார். பஞ்சலிங்ககளை வைத்து முருகன் பூஜை செய்யும் கோலத்தில் சிவனுடன் இருக்கிறார். எனவே, சிவனுக்குரிய நந்தி, இரண்டு மயில்களுடன் சேர்ந்து கருவறைக்கு எதிரே இருக்கிறது. இப்படி ஒரு அமைப்பை, நாம் வேறு எந்த முருகத் தலத்திலும் காண முடியாது.

Read More
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்

உற்சவர் சண்முகருக்கு முகத்தில் ஏற்பட்ட அம்மைத் தழும்பு

திருச்செந்தூர் உற்சவமூர்த்தி சண்முகர் முதலில் திருவனந்தபுரத்தில் தான் எழுந்தருளி இருந்தார். திருவனந்தபுரத்தில் மார்த்தாண்ட மகாராஜா அரசாண்ட சமயம் அது. திருச்செந்தூரில் வசித்து வந்த திரிசுதந்திர முக்காணி பிரமணர்களுக்கும், திருவனந்தபுரம் முக்காணி பிராமணர்களுக்கும், திருமண வழியில் நெருங்கிய உறவு இருந்தது. அதனால் திருவனந்தபுரம் சென்று வந்து கொண்டிருந்த திருச்செந்தூர் திருசுதந்திரர்கள் சண்முகரை அங்கு கண்டனர் . அவர்களுக்கு சண்முகரை எப்படியாவது திருச்செந்தூர் கோவிலுக்கு எடுத்துச் சென்று உற்சவமூர்த்தி ஆக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. முருகப்பெருமானும், தன்னுடைய சண்முகர் திருமேனியை திருச்செந்தூருக்கு எடுத்துச் செல்ல அவர்களுக்கு உத்தரவிட்டார். இந்தக் காரியத்தை நிறைவேற்ற திருசுதந்திரர்கள், அப்போது திருவனந்தபுரத்தில் வியாபாரத்தில் மிகவும் செல்வாக்கு பெற்ற பரக்க செட்டிமார் உதவியை நாடினார்கள். அவர்கள் மகிழ்வுடன் உதவ முன் வந்தனர். ஓர் இரவு சண்முகரின் விருப்பதிற்கிணங்க முருகரை எடுத்து இரவோடு இரவாக ஒரு மூங்கில் கம்பில் துணியை கட்டி ஊஞ்சல் பல்லக்கு செய்து அதில் சண்முகரை கிடத்தி, துணியை வைத்து மூடி திருச்செந்திலம்பதி எனும் திருச்செந்தூரை நோக்கி புறப்படலாயினர். அவர்களும் மகிழ்வுடன் உதவ முன் வந்தனர். ஓர் இரவு சண்முகரின் விருப்பதிற்கிணங்க, முருகரை எடுத்து இரவோடு இரவாக ஒரு மூங்கில் கம்பில் துணியை கட்டி ஊஞ்சல் பல்லக்கு செய்து அதில் சண்முகரை கிடத்தி, துணியை வைத்து மூடி திருச்செந்தூரை நோக்கி புறப்படலாயினர். சண்முகத்தை தூக்கிக்கொண்டு சென்ற திரிசுதந்திர்களையும், பரக்கசெட்டிமார்களையும் வழியில் திருவிதாங்கூர் சுங்கச்சாவடியில் காவலர்கள் தடுத்தனர். அவர்களிடம் குழந்தைக்கு அம்மை போட்டு இருக்கிறது. அதனால் பாண்டி நாட்டுக்கு வைத்தியம் பாக்க கொண்டு போகிறோம் என்று கூறினார்கள். காவலர்கள் அம்மை என்ற உடன் திறந்து பார்க்கக்கூட அச்சப்பட்டு, அந்த கூட்டத்தை காவலர்கள் விரைவில் அனுப்பி விட்டார்கள். காவலரிடம் இருந்து தப்பித்த அடியவர்கள் மேலும் விரைவாக நடக்கலாயினர் .

அதேசமயம் சண்முகர் சிலையை காணவில்லை என்று திருவனந்தபுரத்தில் மார்த்தாண்ட மகாராஜா மிகவும் பதட்டம் அடைந்தார். நாலாபுறமும் ஆட்களை அனுப்பி சிலையை தேட உத்தரவிட்டார். அன்று இரவு மகாராஜா கனவில் வந்த சண்முகர், என் குழந்தைகள் என் விருப்பப்படி தான் என்னை திருச்செந்தூருக்கு அழைத்து செல்கிறார்கள். எனவே, நீ பதட்டப்பட வேண்டாம். என்னைக் காண இனி திருச்செந்தூர் வா என்று கட்டளை இட்டார்.

சண்முகரை சுமந்து செல்லும் அடியவர்கள், கடற்க்கரை ஒட்டிய வனாந்திர காட்டுப்பகுதிக்கு வந்தபோது, காலைப்பொழுது விடிந்துவிட்டது. அந்த இடத்தில் சண்முகருக்கு ஜல அபிஷேகம் செய்து, அவர் பசிக்கு நிவேதனம் செய்ய ஏதாவது கிடைக்குமா என்று தேடினார்கள். அந்தக் காட்டுப் பகுதியில், குடிசையில் ஒரு வயதான பெண் வசித்து வந்தாள். அவள் காலை உணவு தயாரிக்க புளித்த மாவும், பயறு கஞ்சியும் வைத்திருந்தாள். உடனே இந்த சண்முகரின் அடியவர் கூட்டம் அந்த பெண்மணியிடம் வேண்டி, சண்முகருக்கு புளித்த தோசையும், கஞ்சியும் நைவேத்தியமாக படைத்து பூஜை செய்தார்கள். அந்த நிவேதனம்தான், திருச்செந்தூர் கோவில் உதயமார்தாண்ட கட்டளையில், இன்று வரை ஒரு நாள் முன்பே அரைத்த புளித்த தோசை, பயறு கஞ்சி என சண்முகருக்கு தினமும் நிவேதனம் செய்கிறார்கள். அந்த அம்மைத் தழும்புதான் இன்றும் உற்சவர் சண்முகர் முகத்தில் உள்ளது.

Read More
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்

படிக்காதவரையும் தல புராணம் எழுத வைத்து பாவலராக்கிய செந்திலாண்டவன்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மடைப்பள்ளியில் பணியாற்றிய ஒரு பக்தர், முருகப்பெருமான் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார். முதுமையின் காரணமாக, நைவேத்தியத்திற்குண்டான நேரத்திற்கு அவரால் நைவேத்ய உணவு தயாரித்துக் கொடுக்க முடியவில்லை. இதனால் ஆலய அர்ச்சகர்கள் பலமுறை அவரிடம் கோபம் கொண்டு ஏசினர். முதியவர் முருகனிடம் தன் நிலை குறித்து புலம்பி அழுதார்.

ஒரு நாள், அவர் மிகவும் தாமதமாக உணவு சமைத்துக் கொடுக்கவே, ஒரு அர்ச்சகர் கோபத்தில் அவரை கடுமையாகத் திட்டி விட்டார். இதனால் மனம் வருந்திய முதியவர், தன் உயிரை மாய்த்து விடுவதே சரி என்றெண்ணி கடலுக்குள் இறங்கினார். அப்போது, நில்லுங்கள்!, என குரல் கேட்க சமுத்திரத்தில் நின்றவாறு திரும்பிப் பார்த்தார். கரையில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். அவன் முதியவரிடம் முதலில் கரைக்கு திரும்பி வாருங்கள் என அழைத்தான். கரைக்கு திரும்பிய அவரிடம், கடலில் மூழ்கி உயிரை விடும் அளவிற்கு உங்களுக்கு அப்படியென்ன கஷ்டம் வந்து விட்டது என்றான் அச்சிறுவன். முதியவர், அவனிடம் தன் கவலைகள் அனைத்தையும் சொல்லி அழுதார். இதற்காகவா உயிர் துறப்பார்கள்!, என்று சிறுவன் சிரித்தான். உங்களுக்கு வேறு பணி இருக்கும்போது எதற்காக மடப்பள்ளியில் வேலை பார்க்கிறீர்கள்? என்றான்.

முதியவர், எனக்கு சமையலைத் தவிர வேறு பணி எதுவும் தெரியாது குழந்தாய் என வருத்தத்துடன் சொன்னார். நீங்கள் திருச்செந்தூரில் பல காலமாக இருக்கிறீர்களே!, இந்த தலத்தின் தல புராணத்தை எழுதினால் என்ன? என்றான் சிறுவன். முதியவர், ' பள்ளிக்கூடம் போகாத

எனக்கு, கல்வியறிவு கொஞ்சமும் கிடையாதே!, என்னால் இது எப்படி சாத்தியமாகும்?' என்றார். மனத்தால் நினைத்தால் இதெல்லாம் சாத்தியமாகும். மேலும், நீங்கள்தான் தலபுராணத்தை எழுத வேண்டும் என்று செந்திலாண்டவனும் விரும்புகிறான். இதோ, அதற்கான ஊதியத்தை பிடியுங்கள் என்று ஒரு துணிமுடிப்பை அவர் கையில் வைத்தான். சிறுவனிடம் கைநீட்டி ஊதியத்தைப் பெற்றுக் கொண்டார் முதியவர். இனிமேல் நீங்கள் சமையல் பணியாளர் அல்ல!, இன்று முதல் 'வென்றிமாலை கவிராசர்' என்று அழைக்கப்படுவீர்கள் என்று சொல்லிப் போய் மறைந்தான் அச்சிறுவன்.

முதியவர் ஒன்றும் புரியாமல் நின்றார். முதியவருக்கு குழப்பமாக இருந்தது. வந்த சிறுவன் முருகனோ? உயிர் மாய்ப்பதை நிறுத்தவே முருகன் வந்து மறைந்தானோ? மனத்தெளிவு அடைந்த முதியவர், கிருஷ்ண சாஸ்திரி என்பவரைப் போய் பார்த்தார். அவரிடம் செந்திலாண்டவன் தல புராணத்தைச் சொல்லும்படி விவரமாகக் கேட்டார். பின், அதனை நூலாக எழுதினார். அதனை அரங்கேற்றம் செய்ய அர்ச்சகர்களை நாடினார். முருகன் தனக்கு காட்சி தந்ததையும், அவர் சொல்லியபடி நூல் இயற்றியதையும் அர்ச்சர்களிடம் கூறினார். அங்கிருந்த அர்ச்சகர்கள் யாவரும் இதை நம்பவில்லை. மாறாக அவரைக் கேலி செய்து கோவிலிலிருந்து ஓட விரட்டி விட்டனர். கோவிலை விட்டு வெளியேறிய கவிராசர், மனம் குமுறி, தான் இயற்றிய நூலை கடலில் வீசிவிட்டார்.

கடலில் விழுந்த, கவிராசர் நூல், அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு, திருச்செந்தூரிலிருந்து, அடுத்த கிராமத்துக் கடற்கரையில் கரை ஒதுங்கிக் கிடந்தது. அடுத்த ஊரில் அங்கு வசித்த வந்த அறிஞர் ஒருவர் காலாற கடற்கரையில் நடந்து வந்தபோது, அவரின் கண்களில் இந்நூல் காணப்பட்டன. அதை எடுத்துப் பிரித்துப் படித்தார் அவர். வியப்படைந்து போனார். எவ்வளவு சிறப்பான நூல் இது. கடலில் கிடந்து கசங்குகிறதே!, என்று அந்நூலை செந்திலாண்டவன் கோவிலுக்குள் கொண்டு சென்று அர்ச்சகர்கள் முன்பு படித்துக் காட்டினார். நூலின் முடிவில் நூலை எழுதியது *வென்றிமாலை கவிராயர்* என குறிப்பு இருந்ததைப் பார்த்து அர்ச்சகர்கள் அனைவரும் வியந்து போயினர். கவிராயரை தேடிக் கண்டு அழைத்து வந்தனர் அர்ச்சகர்கள். உங்களிடம் அவமதிப்புடன் நடந்து கொண்டதற்கு, முதலில் எங்களை பெருந்தன்மையுடன்

மன்னிக்க வேண்டும் என கேட்டு, தகுந்த மரியாதையையும் செய்தனர். பின்பு, செந்திலாண்டவன் முன்னிலையில் திருச்செந்தூர் தல புராண அரங்கேற்றம் சிறப்பாக நடந்தது.

Read More
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்

மும்மூர்த்திகளின் அம்சமாய் விளங்கும் செந்தில் ஆண்டவன்

முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர். அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர். சூரனை சம்ஹாரம் செய்து, பின் மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர். மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர். இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவராக இருக்கிறார். இதனை உணர்த்தும்விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின்போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். விழாவின் 7ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8ம்நாள்) அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார்.

முருகன் அசுரர்களை வதம் செய்தவர் என்பதால் தீய ஆவி பாதிப்பு கொண்டவர்கள், பில்லி சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் இக்கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

Read More
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்

திருச்செந்தூர் கோவிலின் சிறப்புகள்

திருச்செந்தூர் கோவில் பல சிறப்புகளைக் கொண்டது. அவற்றில் சிலவற்றை இப்பதிவில் நாம் காணலாம்.

கடல் மட்டத்தை விட தாழ்வாக அமைந்துள்ள கருவறை

கோவில் கருவறை கடல் மட்டத்தை விட தாழ்வாக அமைந்துள்ளது. ஆனால் சுனாமியின்போது கூட இக்கோவிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

கருவறையின் பின்புறமாக அமைந்த ராஜகோபுரம்

திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும்.

பிரகாரம் இல்லாத மூலவர் சன்னதி

சூரனை சம்ஹாரம் செய்ய வந்த முருகன், இத்தலத்தில் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் வலது கையில் மலர் வைத்து, சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருப்பது சிறப்பான அமைப்பு. இவரது தவம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக, இவருக்கு பிரகாரம் கிடையாது.

நான்கு உற்சவர்கள்

பொதுவாக கோவில்களில் ஒரு தெய்வத்துக்கு, ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோயிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு.

மூலவருக்கு வெண்ணிற ஆடை

மூலவருக்கு எப்போதும் வெண்ணிற ஆடை மட்டுமே சார்த்தப்படும் ஒரே முருகதலமும் திருச்செந்தூர்தான்.

வீரபாகு தேவருக்கு முதல் வழிபாடு

முருக தலங்களிலேயே, முருகனின் தளபதியான வீரபாகு தேவருக்கு வழிபாடு நடத்தப்பட்ட பின்பே, மூலவருக்கு வழிபாடு நிகழ்த்தப்படும் ஒரே தலம் திருச்செந்தூர்தான். கோவிலின் காவல்தெய்வமாக வீரபாகுதேவர் உள்ளதால், வீரபாகுபட்டினம் என்ற சிறப்புப்பெயரும், இத்தலத்திற்கு உண்டு.

ஒன்பதுகால பூஜை

மார்கழி மாதம் மட்டும் பத்துகால பூஜையும், இதர மாதங்களில் ஒன்பதுகால பூஜையும், நடத்தப்படும் ஒரே முருகதலம் திருச்செந்தூர்தான்.

ஆறுமுக அர்ச்சனை

முருகதலங்களிலேயே, ஆறுமுக அர்ச்சனை நடைபெறும் ஒரேதலம் இதுதான். அப்போது, ஆறுமுகங்களுக்கும், ஆறுவகை உணவுகள் படைக்கப்படுகின்றன.

புளி, காரம் சேர்க்கப்படாத நைவேத்தியம்

மூலவர் தவ கோலத்தில் இருப்பதால், மூலவருக்குரிய உணவில், புளி, காரம் சேர்க்கப்படாத ஒரே முருக தலம் திருச்செந்தூர்தான்.

மூலவரின் எதிரில் நந்தியும் இரண்டு மயில்களும் அமையப் பெற்ற தலம்

முருகதலங்களிலேயே, கருவறைக்கு எதிரே, நந்தி, இருமயில்கள் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள ஒரே தலம் திருச்செந்தூர்தான்.

உப்புத்தன்மை இல்லாத நாழிக்கிணறு

முருகன் தனது படைவீரர்களின் தாகம் தீர்க்க, தனது வேலால் கிணறு ஒன்றினை உருவாக்கினார். அக்கிணறே நாழிக்கிணறு என்று அழைக்கப்படுகிறது. ஒரு சதுர அடி பரப்பும் ஏழு அடி ஆழமும் உள்ள இந்தத் தீர்த்தம், உவர்ப்பு அற்ற நன்னீராகத் திகழ்கிறது.

வள்ளி குகை

கடற்கரைப் பகுதியில், சந்தன நிறத்தில் காட்சி தரும் மலையில் அமைந்துள்ளது வள்ளி குகை. தம்பி முருகப்பெருமானுக்காக அண்ணன் விநாயகர் யானையாக வந்து, வள்ளியிடம் நின்றதும் பயந்து போன வள்ளி, இந்த குகைக்குள் ஓடி ஒளிந்து கொண்டாள்.

இங்கு வந்து வள்ளிதேவியை வணங்கினால், விரைவில் தாலி பாக்கியம் கிடைக்கும். கல்யாணம் இனிதே நடந்தேறும் என்பது ஐதீகம்.

கங்கை பூஜை

தினமும் உச்சிக்கால பூஜை முடிந்தபின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, 'கங்கை பூஜை'' என்கின்றனர்.

Read More
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்

தீபாவளிக்கு இந்திரன், தன் மருமகன் முருகப்பெருமானுக்கு புத்தாடை வழங்கும் தலம்

அறுபடை வீடுகள் எனப்படும் முருகப்பெருமானின் சிறப்புக்குரிய கோயில்கள் தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை என ஆறு ஊர்களில் அமைந்திருக்கின்றன. இவ்வாறு கோயில்களில் ஐந்து கோயில்கள் மலை மீது அமைந்திருக்க திருச்செந்தூர் மட்டும் கடற்கரையை ஒட்டி அமையப் பெற்ற சிறப்பை கொண்டிருக்கிறது. முருகப்பெருமானுடன் அவரது தளபதி வீரபாகு மற்றும் படைவீரர்கள் தங்கியிருந்த படைவீடுதான் திருச்செந்தூர் ஆகும்

வால்மீகி ராமாயணத்தில் இத்தலம் கபாடபுரம் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதிலிருந்து இக்கோவிலின் பழமையை நாம் அறியலாம். இங்கிருக்கும் முருகப்பெருமான் செந்திலாண்டவர் என அழைக்கப்படுகிறார். இங்கு சூரபத்மனை போரில் ஜெயித்ததால் முருகன் 'செயந்தியாண்டவர்' என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் 'செந்திலாண்டவர்' என மருவியது. அது போல் இக்கோவில் இருக்கும் ஊரும் 'திருசெயந்தியூர்' என்பதிலிருந்து 'திருச்செந்தூர்' என்று மாறியது.

திருச்செந்தூர் கோவிலில் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தாடை அணிவிக்கப்படுகிறது. அன்று அதிகாலையில் இக்கோவிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தன காப்பு செய்யப்படுகிறது. பின் புத்தாடைகளை வெள்ளி பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று, அணிவிக்கின்றனர். இதை, தெய்வானையை, முருகன் மணம் முடிக்க காரணமாக இருந்த தலம் என்பதால், தெய்வயானையின் தந்தையான இந்திரன் இத்தலத்தில் மருமகன் முருகப்பெருமானுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு புத்தாடை எடுத்து தருவதாக ஐதீகம்.

கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

Read More
கருங்குளம் மார்த்தாண்டேஸ்வரர் கோவில்

கருங்குளம் மார்த்தாண்டேஸ்வரர் கோவில்

கல்யாண நவக்கிரக தலம் - நவக்கிரகங்கள் தங்கள் மனைவியர் சகிதமாக எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி

திருநெல்வேலியில் திருச்செந்தூர் சாலையில், 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது கருங்குளம் மார்த்தாண்டேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் குலசேகர நாயகி.

ஒரு காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில், கேரளா அரசர் மார்த்தாண்டவர்மன் என்னும் மன்னன் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து மலையைச் சுற்றி அருமையான ஊர் ஒன்றை அமைத்தார். ஊருக்காகக் குளங்களை வெட்டினார். மரங்களின் நிழல்கள் பட்ட காரணத்தினால் எப்போதுமே குளங்கள் கருமையான நிறத்தில் காணப்பட்டது. எனவே இந்த ஊரை கருங்குளம் என அழைத்தனர். மார்த்தாண்ட மன்னன் இந்த ஊரை அமைத்த காரணத்தினால் மார்த்தாண்டேஸ்வர கருங்குளம் என இந்த ஊர் அழைக்கப்பட்டது. இதற்கிடையில் குலசேகரன்பட்டினத்தைத் ஆண்டு வந்த குலசேகர மன்னன், தாமிரபரணி ஆற்றில் நீராடி விட்டுச் செல்லும்போது, அம்பிகை இல்லாத மார்த்தாண்டேஸ்வர சிவனைக் கண்டு வணங்கி அங்கு ஒரு அம்பிகையைப் பிரதிஷ்டை செய்தார். குலசேகர நாதர் பிரதிஷ்டை செய்த அன்னைக்குக் குலசேகர நாயகி என்று பெயர். இதற்கிடையில் இந்த பகுதியில் முனிவர் பெருமக்களும், ரிஷிகளும் வந்திருந்து மார்த்தாண்டேஸ்வரரையும், இக்கோவிலுக்கு அருகில் உள்ள வகுளகிரி என்ற மலைமீது எழுந்தருளி இருக்கும் வெங்கடாசலபதியையும் வணங்கி நின்றனர். அப்பொழுது நவக்கிரகங்கள் அங்கே தம்பதி சகிதமாக காட்சியளித்தனர். அதைக் கண்டு முனிவர்களும், ரிஷிகளும் தங்களுக்குக் காட்சி தந்ததைப் போல மக்களுக்கும் தம்பதி சகிதமாக காட்சி தர வேண்டும் என்று வேண்டி நின்றனர். அதன்பின் இங்கு நவக்கிரகங்கள் தம்பதி சகிதமாக காட்சி தருகின்றனர். அதனால் இத்தலம், கல்யாண நவக்கிரக தலம் என்று அழைக்கப்படுகிறது.

இக்கோயிலில் நவக்கிரகங்கள் தங்கள் மனைவியர் சகிதமாக எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இதுபோன்ற அமைப்பு தமிழகத்தில் ஒரு சில இடங்களிலேயே அமைய பெற்றுள்ளது.

இக்கோயிலில் நவகிரகங்கள் தங்கள் மனைவியர் சகிதமாக எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இதுபோன்ற அமைப்பு தமிழகத்தில் ஒரு சில இடங்களிலேயே அமைய பெற்றுள்ளது.

பிரார்த்தனை

கணவன் மனைவியோடு இங்கு வருபவர்களுக்குக் கேட்ட வரங்கள் கிடைக்கின்றன. தாமிரபரணி நதிக்கரையில் நீராடி விட்டு இந்த சிவனை வணங்கி அதன்பின் வகுளகிரி வெங்கடாசலபதியை வணங்கினால் தடைப்பட்ட திருமணம் நடைபெறும், குழந்தை பேறு கிடைக்கும், நீண்ட ஆயுள் கிடைப்பதுடன், அடைபடாத கடன்கள் அடைபடும். தீராத வழக்குகள் நமக்குச் சாதகமாகும்.

Read More
முறப்பநாடு கைலாசநாதர் கோவில்

முறப்பநாடு கைலாசநாதர் கோவில்

நவகைலாய தலங்களில் குரு தலம்

திருநெல்வேலி - தூத்துக்குடி சாலையில், 15 கி.மீ தொலைவில் உள்ள தலம் முறப்பநாடு. இறைவன் திருநாமம் கைலாசநாதர். இறைவியின் திருநாமம் சிவகாமி அம்மன்.

இந்தியாவில் கங்கை நதியும், முறப்பநாடு தலத்தில் தாமிரபரணி நதியும் மட்டுமே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடுகின்றது. இதனால் இவ்விடம் தட்சிண கங்கை என்று போற்றப்படுகிறது. முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் குளித்தால் காசியில் குளித்த புண்ணியம் கிட்டும்.

முறப்பநாடு, திருநெல்வேலி/ தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நவகைலாய தலங்களில் ஐந்தாவது இடத்தை (நடுக் கைலாயம்) பெறுகின்றது. இந்த கோவில், நவக்கிரகத்தில் குருபகவான் ஆட்சி பெற்று ஏழாவது இடத்தை பெறுகிறது. சிவபெருமானே தட்சிணாமூர்த்தியாக, குருவாக, தென்முகக் கடவுளாக வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். இங்கு கைலாசநாதர், குரு அம்சமாக இருப்பதால் அவருக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, கொண்டைக்கடலை நைவேத்யம் படைத்து வழிபடும் வழக்கம். எனவே, குருபகவானின் அருள் பெற நாம் வழிபட வேண்டிய திருத்தலம் முறப்பநாடு ஆகும்.

வியாழ பகவானின் அனைத்து சக்திகளையும் இத்தலம் பெற்றிருப்பதால், பக்தர்கள் இந்த கோவிலில் வித்தியாசமான முறையில் தக்ஷிணாமூர்த்தி முன்பும், சனி பகவான் முன்பும் ஒன்பது முறை சுற்றி வழிபாடு செய்கிறார்கள். இப்படிச் செய்தால், நவகிரகங்களையும் சுற்றி வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இரட்டை பைரவர்

கோவிலின் வடகிழக்கு பகுதியில் தனிச்சந்நிதியில் இரண்டு பைரவர்கள் அருள்பாலிக்கின்றனர். நாய் வாகனத்துடன் காட்சி தரும் பைரவர் கால பைரவர் என்றும், வாகனம் இன்றி காட்சி தரும் மற்றொரு பைரவர் வீர பைரவர் என்றும் அழைக்கின்றனர். இது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.

தனுசு, மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்

குருவின் ஆதிக்கம் பெற்ற ராசி/நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம் இது. கையில் பணம் தங்குவதில்லை என வருந்துபவர்களும், வீட்டில் சுப காரியங்கள் நடப்பதில்லை என வருந்துபவர்களும் சென்று வணங்க வேண்டிய கோவில் இது தான். இது வியாழனுக்குரிய பரிகார தலம் என்பதால், திருமண தடை உள்ளவர்கள் இக்கோவிலில் சென்று வணங்கினால், சுப காரிய தடை

Read More
கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்

கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்

சகல தோஷங்களையும் விலக்கும் ஞானபைரவர்

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் காளஹஸ்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஸ்ரீஞானாம்பிகை.

காசி, காளஹஸ்தி, திருக்கைலாயம் போன்ற ஸ்தலங்களுக்கு சமமான தலம்தான் இந்த கீழமங்கலம் சிவாலயம் . சனி பகவானுக்கு குருவாக இருந்து உபதேசித்த ஞானபைரவர் காசியில் உள்ளார். அது போல இத்தலத்திலுள்ள ஞானபைரவர் எட்டு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் சிவாகமத்தை கையில் வைத்து சனி பகவானுக்கு உபதேசம் செய்யும் கோலத்தில் உள்ளார். இங்கு மேற்கு திசையை நோக்கி சனி பகவான், கூப்பிய கைகளுடன் நின்ற கோலத்தில் தனது வலது காதால் தனது குரு, ஞானபைரவர் உபதேசத்தை கேட்டுக் கொண்டு இருக்கிறார். இந்த தலத்திற்கு வந்து வணங்கினால் காலத்திற்கும் சனியினால் வரக்கூடிய தீமைகள் வராது. என்றும் நன்மையே விளையும். ஏனெனில் இங்கு சனி பகவான் தனது குருவின் ஆணையை மீறி சிவபக்தர்களை தொந்தரவு செய்யமாட்டார். இத்தலத்தில் நித்திய சிவ அக்கினியுடன், ஜோதியுடன் இருப்பவர் பைரவர் மட்டுமே. அதனால் முதல் தீபம் இவருக்கு ஏற்றிய பிறகுதான் மூலஸ்தான சன்னதி மூர்த்திகளுக்கு தீபம் ஏற்ற வேண்டும். மடப்பள்ளியில் பிரசாதம் செய்வதற்கும் பைரவரிடம் இருந்துதான் அக்கினி எடுத்து செல்லவேண்டும். இந்த ஆலயத்தில் உள்ள ஞான பைரவர் சம கலைச் சந்திரனைச் சூடி இருப்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும். மேலும் அனைத்து கிரக தோஷங்களும் இத்தல ஞான பைரவரை வழிபட்டால் விலகும் என்பதால், இத்தலம் எல்லா தோஷத்திற்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகின்றது.

ஞானபைரவருக்கு ராகு காலம், எமகண்டம், தேய் பிறை அஷ்டமி போன்ற நாட்களிலும் சிறப்பு அபிசேகமும், சிறப்பு அலங்கார தீப ஆராதனையும் வெகு விமரிசையாக நடக்கிறது. அன்று மட்டும் சுமார் ஆயிரம் பக்தர்கள் வந்து, இத்திருக் கோவிலில் அருள் கடாட்சம் கொடுக்கும் ஞான பைரவரை வணங்கி நல்லருள் பெற்றுச் செல்கின்றனர்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

1. வருடத்திற்கு நான்கு முறை அன்னாபிஷேகம் செய்யப்படும் தலம்

https://www.alayathuligal.com/blog/8aksam98depeyt9nx7nyan3nc728lh

2. இரவும், பகலும் இடைவிடாமல் சிவ பூஜை செய்யும் அம்பிகை

https://www.alayathuligal.com/blog/t638e9awnfbxrh8k2wyt4ha975ee4w

3. அயல்நாட்டில் கல்வி பயிலும் யோகம் அருளும் அஷ்ட தட்சிணாமூர்த்தி தலம்

https://www.alayathuligal.com/blog/yxaj24gw2t24a2hp7wxemwy49y2zs5

Read More
கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்

கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்

அயல்நாட்டில் கல்வி பயிலும் யோகம் அருளும் அஷ்ட தட்சிணாமூர்த்தி தலம்

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள கீழமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது காளஹஸ்தீஸ்வரர் கோவில். இந்தக் கோவிலில் அஷ்ட தட்சிணாமூர்த்திகள் அருள் புரிகிறார்கள்.

இவர்களில் ஸ்ரீஞான தட்சிணாமூர்த்தி கிழக்குத் திசையிலும், ஸ்ரீயோக பட்டாபிராம தட்சிணாமூர்த்தி வட கிழக்கிலும், ஸ்ரீசக்தி தட்சிணாமூர்த்தி தென்கிழக்கிலும், ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தி தெற்கிலும், ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி தென்மேற்கிலும், ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி மேற்கிலும், ஸ்ரீஆசிந தட்சிணாமூர்த்தி(பரசுராமருக்கு வில்லும் அம்பும் வழங்கியவர்) வடமேற்கிலும், ஸ்ரீவர தட்சிணாமூர்த்தி (வேதத்துக்கு குரு) வடக்கிலும் எழுந்தருளியிருக்கிறார்கள்.

படிப்பில் மந்த நிலையில் உள்ளவர்கள், ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்கள், அதிக மதிப்பெண் எடுத்து உயர் கல்வியில் சேரத் துடிப்பவர்கள், மேலை நாடுகளுக்குச் செல்ல எண்ணுவோர் இந்தத் தலத்துக்கு வந்து, அஷ்ட தட்சிணாமூர்த்தியரையும் வணங்கினால், உரிய பலன் கிடைக்கும்.

கோயிலின் ஞான கங்கை தீர்த்தக்குளத்தில் 11 வியாழக் கிழமைகள் நீராடி, அஷ்ட தட்சிணாமூர்த்திகளுக்கும் 11 வகை அபிஷேகங்கள் செய்து, எட்டு நெய்த் தீபங்கள் ஏற்றி வைத்து, மஞ்சள் பட்டு மற்றும் மஞ்சள் அரளிப்பூ சார்த்தி வழிபட, தடைப்பட்ட கல்விச் செல்வம் தங்குதடையின்றிக் கிடைக்கும்; விரும்பிய பாடப் பிரிவில் சாதனை படைக்கலாம் என்கின்றனர். தேர்வில் அதிக மதிப்பெண் பெற, அஷ்ட தட்சிணாமூர்த்தியருக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர். அஷ்ட தட்சிணாமூர்த்தியரின் அருளால் வெளிநாட்டில் கல்வி பயிலும் யோகமும் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

1. வருடத்திற்கு நான்கு முறை அன்னாபிஷேகம் செய்யப்படும் தலம்

https://www.alayathuligal.com/blog/8aksam98depeyt9nx7nyan3nc728lh

2. இரவும், பகலும் இடைவிடாமல் சிவ பூஜை செய்யும் அம்பிகை

https://www.alayathuligal.com/blog/t638e9awnfbxrh8k2wyt4ha975ee4w

Read More
கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்

இரவும், பகலும் இடைவிடாமல் சிவ பூஜை செய்யும் அம்பிகை

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில். இக்கோவில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி செய்த உக்கிரபாண்டியனால் கட்டப்பட்டதாகும். இறைவன் திருநாமம் காளஹஸ்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஸ்ரீஞானாம்பிகை. தேவர்களுக்கு பரப்பிரம்ம தத்துவத்தை உபதேசம் செய்ததால் இந்த அம்பிகைக்கு ஸ்ரீஞானாம்பிகை என்ற திருநாமம் உணடாயிற்று.

கீழமங்கலம் கோவிலில் உள்ள ஸ்ரீஞானாம்பிகை வர, அபய கைகளுடன் சூட்சுமத்தில் வலது கையில் தாமரை மலர், இடது கையில் நீலோற்பலம் மலருடன், ஜடாமகுடத்துடன், சமமான சந்திரகலையுடன், மூன்று கண்களுடன், பத்மத்தின் மேல் நின்ற கோலத்தில் அருட்காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறாள். நீலோற்பலம் மலர் என்பது ஒரு வகை தாமரையை சேர்ந்தது. இம்மலர் இரவில்தான் மலரும். அம்பிகை ஒரு கையில் நீலோற்பலம் வைத்திருப்பது, அம்பிகை இரவில் சூட்சுமமாக சிவபெருமானை பூஜிப்பதையே உணர்த்துகிறது. பகவானுடைய வலது கண் சூரியன், இடது கண் சந்திரனின் அம்சமாகும். அதனால்தான் சூரியனால் தாமரையும், சந்திரனால் நீலோற்பலமும் (நீல நிறத்தாமரையும்) மலர்கின்றன. நீலோற்பலத்திற்கு ஒரு வருடம் வரை நிர்மால்ய தோஷம் கிடையாது. துளசி, வில்வத்திற்கு கூட 6 மாதம்தான் நிர்மால்ய தோஷம் கிடையாது. எனவே நீலோற்பலம் மிகச் சிறந்தது.

.திருவானைக்கோவிலில் அருள்பாலிக்கும் அம்பிகை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி இரண்டு கைகளிலும் தாமரை மலர் உள்ளது. இது பகலில் மலரும் மலராகும். அதனால்தான் திருவானைக்கோவிலில் பகலில் உச்சிக் காலத்தில் அம்பிகை சிவ பூஜை செய்யும் வழக்கம் இன்றும் உள்ளது. இங்கு கீழமங்கலத்தில் ஸ்ரீ ஞானாம்பிகை வலக்கையில் தாமரையும், இடக்கையில் நீலோற்பலமும் வைத்திருப்பதால், அம்பிகை இரவும், பகலும் இடைவிடாமல் சிவ பூஜை செய்து கொண்டும், வரமும், அபயமும் எப்போதும் வழங்குவேன் என்று வர, அபய முத்திரைகளுடன் காட்சி கொடுத்து, அருள் பாலிக்கிறாள்.

ஸ்ரீ ஞானாம்பிகை சூடியிருக்கும் சந்திரன் மூன்றாம்பிறைச் சந்திரன் ஆகும். அதாவது 'சம கலை சந்திரன்'. இது கோணலான பிறைச் சந்திரன் கிடையாது. ஸ்ரீ ஞானம்பிகைக்கே உள்ள அதிவிசேஷம் இது. 'சம கலை சந்திரனைச்' சூடிய அம்பிகை என்பதால், 'என்னால் அழிவு கிடையாது. ஆக்கமும் ஆற்றலும் மட்டுமே. ஞானத்திற்கு என்றுமே அழிவு கிடையாது' என்பதையே வலியுறுத்துகிறாள்.

இந்த அம்பிகையை தரிசனம் செய்தவர்கள் , மீண்டும் மீண்டும் தரிசனம் செய்யவே ஆசைப்படுவார்கள். அந்த அளவிற்கு பக்தர்களை மெய் மறக்கச் செய்யும், மீண்டும் மீண்டும் தரிசனம் செய்யத் தூண்டும் அளவிற்கு ஞான வசீகரத் தோற்றம் உடையவள் ஸ்ரீஞானாம்பிகை.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

வருடத்திற்கு நான்கு முறை அன்னாபிஷேகம் செய்யப்படும் தலம்

https://www.alayathuligal.com/blog/8aksam98depeyt9nx7nyan3nc728lh

Read More
திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில்

இழந்த சொத்துக்களை மீட்டுத் தரும் திவ்ய தேசம்

ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருக்கோளூர், திருநெல்வேலியிலிருந்து 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், மூலவராக வைத்தமாநிதி பெருமாளும், அவரின் வலதுபுறத்தில் குமுதவள்ளியும், இடதுபுறம் கோளூர்வல்லி தாயாரும் அருள்பாலிக்கிறார்கள்.

ஒரு சமயம், பார்வதியால் குபேரனுக்கு சாபம் உண்டாயிற்று .இதனால் குபேரனிடம் இருந்து நவநிதிகளான, சங்கநிதி, பதுமநிதி, மகரநிதி, கச்சபநிதி, மகுடநிதி, நந்தநிதி, நீலநிதி, கர்வநிதி மற்றும் மஹாபதுமநிதி ஆகிய ஒன்பது வகைச் செல்வங்களும் விலகிச் சென்றன. அந்த நவநிதிகள் பெருமாளிடம் சென்றடைந்தன. பெருமாள் இந்த நவநிதிகளின் மீது சயனம் கொண்டு அவற்றை பாதுகாத்து வைத்திருந்ததால் அவருக்கு வைத்தமாநிதி பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது. பெருமாள், இத்தலத்தில் தனது வலது தோளுக்கு கீழ் நவநிதிகளை பாதுகாத்து வருவதாக ஐதீகம் இத்தலத்து பெருமானை வழிபட்டு குபேரன், மீண்டும் நவநிதிகள் பெற்றதாக தல புராணங்கள் கூறுகின்றன. குபேரனுக்கு காட்சியளித்து சாபவிமோசனமருளியதுடன், அவன் இழந்த நிதிகளில் ஒரு பகுதியை மரக்காலால் அளந்து குபேரனுக்கு திருப்பி அளித்தார். பெருமாள் நவநிதிகளை பாதுகாத்து வருவதை இன்றும் நாம் தரிசிக்கலாம். கருவறையில் வைத்தமாநிதி பெருமாள், ஆதிசேஷன் மீது புஜங்க சயனத்தில், வலக்கையை நீட்டியவாறு, குபேரனுக்கு செல்வங்களை அளந்து கொடுத்த மரக்காலைத் தன் தலைக்கு வைத்தும், கையில் அஞ்சனம், மை தடவி நிதி எங்கு எவ்வளவு உள்ளது என கணக்குப் பார்க்கும் கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

செவ்வாய் கிரக தோஷ நிவர்த்தி தலம்

பாண்டிநாட்டு நவ திருப்பதியில் இது மூன்றாவது திருப்பதி. சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரக தலங்களுக்கு ஒப்பாக இப் பாண்டிநாட்டு நவதிருப்பதிகள், நவகிரக தலங்களாக போற்றப்படுகிறது. நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ தலங்களில் உள்ள பெருமாளை, நவ கிரகங்களாக கருதப்பட்டு வழிபடப்படுகிறது.

நவக்கிரகத்தில் இது செவ்வாய் ஸ்தலமாகும். செவ்வாய் கிரகத்தால் தோஷம் உள்ளவர்கள் இங்கு சென்று வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும்.

ஒவ்வொரு மாசி மாதத்தில் வரும் வளர்பிறையில் சுவாதி நட்சத்திரத்தன்று குளித்து, பெருமாளை முழுமனதுடன் வேண்டினால் இழந்த சொத்துக்கள், தோஷ நிவர்த்திகள் விலகும் என்பது ஐதீகம். இந்த நட்சத்திர நாளில்தான் குபேரன் திருப்பதிக்கு கடன் கொடுத்ததாக வரலாறு கூறுகிறது.

நீராஞ்சனம் விளக்கு வழிபாடு

அனைத்து மாதங்களிலும் செவ்வாய் மற்றும் சனி கிழமைகளில் நீராஞ்சனம் எனும் விளக்கு ஏற்றப்படுகிறது. இந்த விளக்கானது அரிசி, தேங்காய் மற்றும் நெய் ஆகிய 3-ம் சேர்ந்து உருவாக்கப்பட்டதாகும். இவ்வாறாக 3 வாரம் தொடர்ந்து ஏற்றினால் வேண்டிய வரங்கள் கிடைப்பதால் அனைத்து பக்தர்களும் அதனை திரளாக செய்து வருகின்றனர். கன்னிப்பெண்கள் திருமண வரம் வேண்டியும், மணமுடித்தவர்கள் குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் அமைதி நிலவவும், சொத்துக்கள் அதிக அளவில் கிடைக்கவும் வேண்டி இவ்வாறாக விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர்.

Read More
கழுகுமலை வெட்டுவான் கோவில்

கழுகுமலை வெட்டுவான் கோவில்

மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தி

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. பாண்டியர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட, 1200 ஆண்டு பழமையான இக்கோவில், கோவில்பட்டியிலிருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

தென் தமிழகத்தின் எல்லோரா

பொதுவாக ஒரு கோயிலோ அல்லது வீடோ கட்டும் போது அஸ்திவாரம் போட்டு கீழிருந்து மேலாக கட்டுவார்கள், ஆனால் இந்த குடை வரை கோயில் மலையை குடைந்து கட்டப்பட்டுள்ளதால், மேலிருந்து கீழாக கட்டப்பட்டுள்ளது. அதாவது முதலில் கோபுரம், பின்னர் அப்படியே கீழாக சென்று சிற்பங்கள், கருவறை, அடித்தளம் போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த ஒற்றைக் கற்றளி கோவில் , தனி ஒரு பாறையை மேலிருந்து கீழ்நோக்கி செதுக்கி அமைக்கப்பட்டுள்ளது. மரபுச் சின்னம் எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயில் போன்று, கடினமான பாறை அடுக்குகளால் ஆன ஒரு பெரிய மலைப்பாறையில், 7.50 மீட்டர் ஆழத்திற்குச் சதுரமாக வெட்டியெடுத்து அதன் நடுப்பகுதி பாறையை கோயிலாக செதுக்கியுள்ளனர். இதை வெட்டுவான் கோயில் என அழைக்கின்றனர். ஒரு தனிக் கோயில் எப்படியெல்லாம் கருவறை, அர்த்தமண்டபம் என்று அமைக்கப்படுமோ, அதேபோன்று ஒற்றைப் பாறையிலே எழுப்பப்பட்ட அதிசயம் இந்தக் கோயில். தென் தமிழகத்தின் எல்லோரா என்று போற்றப்படும் இக்கோயிலை வெளிநாட்டினர் ஏராளமானோர் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

இந்த மலை தமிழக அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. விமானத்தின் முதல் தளத்தில் தட்சிணாமூர்த்தி, திருமால், விசாபகரணர், அக்கமாலையை கையில் ஏந்தி சன்னவீரம் தரித்த முருகன், சந்திரன், சூரியன் சிற்பங்கள் உள்ளன. கிரீடத்தில் உமா மகேஸ்வரர், மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தி, நரசிம்மர், பிரம்மா உள்ளனர்.

மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தி

இந்தியக் கோயில்களில், இந்தக் கோயிலில் மட்டுமே மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது. அவர் தமது முன் இடக்கரத்தில் மிருதங்கத்தைப் பிடித்திருக்கும் நிலையிலும், முன் வலக்கரத்தின் விரல்களால் மிருதங்கததை இசைக்கும் பாவனையிலும் அருள்புரிகிறார். மிருதங்கம் நடனத்துடன் தொடர்புடையது ஆதலால் இங்கே தட்சணாமூர்த்தி நடனக் கலையின் சிறப்பாய் உள்ளார்.

இங்குள்ள கழுகுமலை முருகன் கோயிலும் ஒரு குடைவரைக் கோயிலாகும்.

கழுகுமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

முருகப்பெருமான் ராஜபோகமாக வீற்றிருக்கும் தலம்

https://www.alayathuligal.com/blog/pgadjte6w3sdjygdbbkmwr56wnx5cr?rq

Read More
கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்

கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்

வருடத்திற்கு நான்கு முறை அன்னாபிஷேகம் செய்யப்படும் தலம்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே கீழமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது காளஹஸ்தீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் காளஹஸ்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை.

பொதுவாக சிவாலயங்களில் ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு நான்கு முறை அன்னாபிஷேகப் பெருவிழா நடைபெறுகிறது. இக்கோவிலில், ஒவ்வொரு வருடமும் தமிழ் ஆண்டு வருடப் பிறப்பு, சித்திரை பெளர்னமி, ஐப்பசி மாதப் பிறப்பு, ஐப்பசி பெளர்னமி ஆகிய நான்கு தினங்களில் மூலவர் காளஹஸ்தீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது தனிச் சிறப்பாகும்.

அன்னாபிஷேக தரிசன பலன்

அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம்.

அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.

இத்தலம் தூத்துக்குடி நகரிலிருந்து சுமார் 42 கி.மீ. தொலைவில் உள்ள பசுவந்தனையில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது.

Read More
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்

கண்ணாடியில் தெரியும் முருகப்பெருமானின் பிம்பத்திற்கு அபிஷேகம்

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் ஆறாம் நாளன்று வள்ளி, தெய்வானை இல்லாமல் முருகப்பெருமான் (உற்சவர் ஜெயந்திநாதர்) தனித்து கடற்கரைக்கு எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்வார். அதன்பின் வெற்றி வீரனாக வள்ளி, தெய்வயானை சகிதமாக ஜெயந்திநாதர் கோவில் யாக சாலைக்குத் திரும்புவார்.

அப்போது ஜெயந்திநாதரின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர் கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். 'சாயா' என்றால் 'நிழல்' எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக அபிஷேகம் நடக்கும். இதை முருகப்பெருமானே கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப்பின் முருகன் சன்னதிக்கு திரும்புவார். அத்துடன் சூரசமஹாரம் நிகழ்ச்சி முடிவடையும்.

சென்ற ஆண்டு கந்தசஷ்டி ஆறாம் நாளன்று வெளியான பதிவு

கடத்தப்பட்ட தன் விக்ரகத்தை கடலில் கண்டெடுக்க உதவிய கந்தப் பெருமான்

https://www.alayathuligal.com/blog/4j4mmh5t7prma3y4ahpf9a68zyh9ex.

Read More
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்

தீபாவளிக்கு இந்திரன், தன் மருமகன் முருகப்பெருமானுக்கு புத்தாடை வழங்கும் தலம்

அறுபடை வீடுகள் எனப்படும் முருகப்பெருமானின் சிறப்புக்குரிய கோயில்கள் தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை என ஆறு ஊர்களில் அமைந்திருக்கின்றன. இவ்வாறு கோயில்களில் ஐந்து கோயில்கள் மலை மீது அமைந்திருக்க திருச்செந்தூர் மட்டும் கடற்கரையை ஒட்டி அமையப் பெற்ற சிறப்பை கொண்டிருக்கிறது. முருகப்பெருமானுடன் அவரது தளபதி வீரபாகு மற்றும் படைவீரர்கள் தங்கியிருந்த படைவீடுதான் திருச்செந்தூர் ஆகும்

வால்மீகி ராமாயணத்தில் இத்தலம் கபாடபுரம் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதிலிருந்து இக்கோவிலின் பழமையை நாம் அறியலாம். இங்கிருக்கும் முருகப்பெருமான் செந்திலாண்டவர் என அழைக்கப்படுகிறார். இங்கு சூரபத்மனை போரில் ஜெயித்ததால் முருகன் 'செயந்தியாண்டவர்' என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் 'செந்திலாண்டவர்' என மருவியது. அது போல் இக்கோவில் இருக்கும் ஊரும் 'திருசெயந்தியூர்' என்பதிலிருந்து 'திருச்செந்தூர்' என்று மாறியது.

திருச்செந்தூர் கோவிலில் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தாடை அணிவிக்கப்படுகிறது. அன்று அதிகாலையில் இக்கோவிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தன காப்பு செய்யப்படுகிறது. பின் புத்தாடைகளை வெள்ளி பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று, அணிவிக்கின்றனர். இதை, தெய்வானையை, முருகன் மணம் முடிக்க காரணமாக இருந்த தலம் என்பதால், தெய்வயானையின் தந்தையான இந்திரன் இத்தலத்தில் மருமகன் முருகப்பெருமானுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு புத்தாடை எடுத்து தருவதாக ஐதீகம்.

கந்தசஷ்டி விழா

கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

Read More