நதிக்கரை முருகன் கோவில்

திருச்செந்தூர் முருகனைப் போன்ற திருக்கோலத்துடன் எழுந்தருளி இருக்கும் முருகன் கோவில்.

திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் சாலையில், புதுக்குடியையும் ஶ்ரீவைகுண்டத்தையும் இணைக்கும் பாலத்துக்குக் கீழ், தாமிரபரணியின் கரையில் அமைந்துள்ளது நதிக்கரை முருகன்.

இக்கோவில் மூலவரான முருகன், திருச்செந்தூர் முருகனைப் போன்ற திருக்கோலத்துடன் இருக்கின்றார். திருச்செந்தூரில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி, தவநிலையிலும், சிவனைப் பூஜிக்கும் தன்மையுடனும் திகழ்வதாக ஐதிகம். அதனால் அங்கே, கருவறையில் செந்தில் ஆண்டவரின் இடப்புறத்தில் சிவலிங்கம் உண்டு. திருச்செந்தூரைப் போன்றே இங்கும் கருவறையில் முருகன் அருகில் சிவலிங்கத் திருமேனி உண்டு. இங்கு ஶ்ரீசுப்ரமணியர், ஶ்ரீசண்முகப் பெருமான் என்று இரண்டு உற்சவர்கள். இருவருமே தேவியருடன் தனிச் சந்நிதியில் அருள்கிறார்கள்.

திருச்செந்தூரில் கடற்கரையில் நிகழும் சூரசம்ஹாரம், இங்கே நதிக்கரையில் நிகழ்வது சிறப்பம்சம் ஆகும். திருச்செந்தூர் முருகன் போன்ற உருவ ஒற்றுமையுடன் நதிக்கரை மூலவர் அருள்வதால், இங்கு நடைபெறும் சூரசம்ஹாரத் திருவிழாவில் கலந்து கொண்டு விரதம் இருந்து வழிபட்டால், திருச்செந்தூரில் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆகவே, கந்த சஷ்டியை ஒட்டி திருச்செந்தூருக்குச் செல்ல முடியாத பக்தர்கள், இந்தக் கோவிலில் விரதம் இருந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

திருமண பாக்கியம் அருளும் விருட்ச கல்யாண வழிபாடு

இந்தக் கோவிலின் விசேஷங்களில் ஒன்று விருட்ச கல்யாணம். இந்தக் கோவிலின் தல விருட்சமாக அரசும், வேம்பும் பின்னிப் பிணைந்தபடி திகழ்கின்றன. இவற்றின் அடியில் நாக சிலைகள் உள்ளன. திருமணத் தடை உள்ளவர்கள், தோஷங்களின் காரணமாக கல்யாண நடப்பதில் தாமதம் ஏற்பட்டு அதனால் வருந்தும் அன்பர்கள், எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையாதவர்கள், இங்கு வந்து இந்த விருட்சங்களுக்குச் சிறப்பு வழிபாடு செய்கிறார்கள். ஶ்ரீவைகுண்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இந்த முருகனுக்கு வேண்டிக்கொண்டு, கல்யாணம் நிச்சயம் ஆனதும், இந்தக் கோவிலுக்கே வந்து திருமணம் செய்துகொள்கிறார்கள்.

 
Previous
Previous

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்

Next
Next

நரிக்குடி எமனேஸ்வரர் கோவில்