மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில்

ஸ்ரீரங்கம் கோவில் உருவாகக் காரணமான உச்சிப்பிள்ளையார்

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பிள்ளையார் தலங்களில் முதன்மையானது, திருச்சி மாநகரில் அமைந்துள்ள மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் ஆகும். பொதுவாக சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி மாநகரின் மத்தியில் 275 அடி உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இது, ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது. இந்த மலையானது தென்தமிழகத்தின் கைலாயம் என்று போற்றப்படுகின்றது. மலைக்கோவிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் உள்ளன.

இந்த மலைக் கோவிலை கிழக்கிலிருந்து பார்த்தால், விநாயகர் போன்றும், வடக்கிலிருந்து பார்த்தால் தோகை விரித்தாடும் மயில் போன்றும், மேற்கிலிருந்து பார்த்தால் நங்கூரம் பாய்ச்சிய கப்பல் மற்றும் சிவலிங்கம் போலவும், தெற்கிலிருந்து பார்த்தால் தலை உயர்த்தி அமர்ந்திருக்கும் ரிஷபம் அல்லது யானை மேல் அம்பாரி இருப்பது போலவும் தோற்றம் அளிக்கும்.உச்சிப் பிள்ளையார் கோவிலிலிருந்து கீழே நோக்கினால், படிக்கட்டுகளும், மலையின் தோற்றமும், விநாயகரின் தும்பிக்கை போல் தோற்றமளிக்கும்.

தல வரலாறு

இராவணனுடன் நடந்த போரில் வெற்றி பெற்று அயோத்தி திரும்பிய ராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அதில் இராவணனின் சகோதரன் விபீசணனும் கலந்து கொண்டார். போரில் தனக்கு உதவியதற்காக ராமர், விபீசணனுக்கு ரங்கநாதர் சிலை ஒன்றை பரிசளித்தார். விபீசணன் ராமருக்கு உதவிய போதிலும், அவர் அசுரன் என்ற காரணத்தால் அச்சிலையை அவர் கொண்டு செல்வதில் விருப்பமில்லாத தேவர்கள், அதை தடுக்க வேண்டுமென விநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவர்களது வேண்டுகோளை விநாயகரும் ஏற்றார்.

விபீசணன் இலங்கைக்கு திருச்சி வழியே செல்லும் போது, அங்கு ஓடும் காவிரி ஆற்றில் குளிக்க விரும்பினார். ஆனால், ரங்கநாதர் சிலையை ஒரு முறை தரையில் வைத்து விட்டால் அதை அங்கிருந்து நகர்த்த முடியாது என்ற காரணத்தால் செய்வதறியாமல் திகைத்தார். அப்போது அங்கு இருந்த ஒரு சிறுவனிடம் அச்சிலையைக் கொடுத்து, தான் குளித்து விட்டு வரும் வரையில் அதைத் தாங்கி பிடித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து குளிக்கச் சென்று விட்டார். சிறுவன் வேடத்தில் இருந்த விநாயகர், ரங்கநாதர் சிலையை தரையில் வைத்து விட்டார். இதைக் கண்ட விபீசணன் கோபங்கொண்டு அச்சிறுவனைத் துரத்தி மலை உச்சியில் பிடித்து, கோபத்தில் அவனது தலையில் குட்டினார். அப்பொழுது விநாயகர் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தினார். பின்பு, அவ்விடத்திலேயே உச்சிப்பிள்ளையார் கோயில் எழுப்பப்பட்டது.

விபீசணன் குட்டியதால் ஏற்பட்ட வீக்கத்தை இங்குள்ள விநாயகர் சிலையின் தலையில் காணலாம்.

ரங்கநாதரின் சிலை வைக்கப்பட்டிருந்த இடம் நீண்ட காலமாக தீவு பகுதியான அடர்ந்த காடுகளுக்குள் மூடப்பட்டிருந்தது. பல நூற்றாண்டுகள் கடந்து ஒரு சோழ மன்னன் கிளியைத் தேடிக் கொண்டு வரும் போது தற்செயலாக அந்த சிலை இருந்ததைக் கண்டுபிடித்தார்‌. பின்னர் பிரம்மாண்டமான ஸ்ரீரங்கம் கோவிலை கட்டினார்

விநாயகர் சதுர்த்தி விழா - 75 கிலோ கொழுக்கட்டை நைவேத்தியம்

விநாயக சதுர்த்தியன்று மலைக்கோட்டை கீழ் சன்னதியில் உள்ள மாணிக்க விநாயகர் மற்றும் மலைக்கோட்டை மேல் எழுந்தருளி இருக்கும் உச்சிப் பிள்ளையார் ஆகிய இரு சன்னதிகளுக்கும் தலா 75 கிலோ கொழுக்கட்டை என 150 கிலோ மெகா கொழுக்கட்டை படைக்கப்படுவது வழக்கம். இதற்காக கோவில் மடப்பள்ளி பணியாளர்கள் ஒருநாள் முன்பே கொழுக்கட்டை தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். பச்சரிசி, மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள், நெய், தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, பின்னர் அவற்றை இருபங்காக பிரித்து துணியில் கட்டி பெரிய பாத்திரத்தில் வைத்து தொடர்ந்து 24 மணிநேரம் ஆவியில் வேக வைப்பார்கள். இந்தக் கொழுக்கட்டை சிவாச்சார்யர்களால் மேளதாளங்கள் முழங்க தொட்டிலில் வைத்து கொண்டுவரப்படும். பின்னர் இரண்டு விநாயகருக்கும் நைவேத்தியமாக படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

Read More
மாகாளிக்குடி (சமயபுரம்) உஜ்ஜயினி மாகாளி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மாகாளிக்குடி (சமயபுரம்) உஜ்ஜயினி மாகாளி கோவில்

மூலவர் அம்பிகை அர்த்தநாரீசுவரியாக எழுந்தருளியிருக்கும் அபூர்வ தோற்றம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு கிழக்கே அரை கீ.மீ. தொலைவில் அமைந்துள்ளது மாகாளிக்குடி உஜ்ஜயினி மாகாளி கோவில். இக்கோவில் சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உபகோவிலாகும். இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் அம்மன்கள் ஆனந்தசௌபாக்கிய சுந்தரி, உஜ்ஜைனி காளியம்மன் ஆகியோர் ஆவார்.

சிவனும் சக்தியும் எவ்வித வேறுபாடும் இல்லாதவர்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அர்த்தநாரீசுவர வடிவம் அமைந்தது. பார்வதிதேவி தனக்கும் சிவனைப்போலவே பூசைகள் நடக்கவேண்டும் எனக் கேட்டதன் விளைவாக, மாகாளிக்குடியில் அம்பாளுக்குள் சிவன் அடங்கும் விதத்தில் அம்பிகை ஆனந்த சௌபாக்கிய சுந்தரியாக எழுந்தருளினாள்.

பொதுவாக அர்த்தநாரீசுவர கோலத்தில், சிவபெருமான் வலதுபுறமும், பார்வதிதேவி இடதுபுறமும் காட்சியளிப்பார்கள். ஆனால் இக்கோவிலில், பார்வதிதேவி வலதுபுறமும் சிவபெருமான் அவருக்கு இடதுபுறமும் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும். ஆனந்த சௌபாக்கிய சுந்தரிக்கு மூன்று கைகளே உள்ளன. பொதுவாக அம்மனுக்கு இரண்டு, நான்கு, எட்டு என்ற விதத்தில் கைகள் இருக்கும். ஆனால் ஒற்றைப்படையாக மூன்று கைகள் உள்ள அம்மன் இங்கு மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கையில் கபாலமும், மற்றொரு கையில் சூலமும், இன்னொரு கையில் தீச்சுடரும் ஏந்தியுள்ளார். அசுரனை வதம் செய்யும் கோலத்தில் இருந்தாலும் முகத்தில் சாந்தம் தவழ்கிறது. கோரப்பல் எதுவும் இல்லை. எனவே இவளை 'ஆனந்த சௌபாக்கிய சுந்தரி' என்கிறார்கள்.

விக்கிரமாதித்த மகாராஜா வழிபட்ட உஜ்ஜயினி காளியம்மன்

மத்திய பிரதேசம் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தவர் விக்ரமாதித்தன்மகாராஜா. காட்டில் ஆறு மாதமும், நாட்டில் ஆறு மாதமும் ஆட்சி செய்வது வழக்கம். இவரது குலதெய்வம் உஜ்ஜயினி மாகாளி.

ஒரு சமயம் காட்டில் ஆட்சி செய்ய, காவிரிக்கரையிலுள்ள மகாகாளிகுடி காட்டுக்கு, தான் வழிபட்ட உஜ்ஜயினி காளி சிலையுடன் வந்தார். இங்கே தங்கிப் பூசை செய்து கொண்டிருந்தார். அவர் நாடு திரும்பும்போது, தான் வழிபட்ட சிலையை எடுக்க முயன்றார். முடியவில்லை. அம்பாளைத் தன்னுடன் வரும்படி எவ்வளவோ கெஞ்சினார். அப்போது அவர் முன் தோன்றிய காளி, இந்த இடத்திலும் தனது சக்தி தங்கும் என்று கூறி விட்டாள். அதைத் தொடர்ந்து காளியம்மனுக்கு இத்தலத்தில் கோவில் கட்டி வழிபட்டார்.

இத்தலத்தில், விக்கிரமாதித்தனுடன் வந்த வேதாளத்திற்கும், விக்கிரமாதித்தனின் மதியுக மந்திரியான கழுவனுக்கும் சிலைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. வேறு எந்த தலத்திலும் வேதாளத்திற்கு சிலை கிடையாது.

பிரார்த்தனை

பௌர்ணமி, அஷ்டமி, அமாவாசை ஆகிய தினங்களில் இங்குள்ள சக்தி தீர்த்தத்தில் குளித்து உஜ்ஜயினி காளியம்மனை வழிப்பட்டால், தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம். செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் உஜ்ஜயினி காளியம்மனை வழிப்பட்டு வந்தால் நினைத்தக் காரியங்கள் கைக்கூடும் என்று வரலாறு கூறுகிறது. அஷ்டமி நாளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து வழிபட்டு மேன்மை அடைந்து வெற்றிப் பெற்றவர்கள் ஏராளம்.

சண்டிஹோமம் வேள்வித்தீயில் தோன்றிய மாகாளியம்மன்

இக்கோவிலின் கும்பாபிஷேகம் இந்த வருடம் ஜனவரி மாத இறுதியில் நடைபெற்றது. அதன்பின்னர் நாற்பத்தி எட்டு நாட்கள் மண்டலாபிஷேக பூஜை நடைபெற்று, இறுதியாக சண்டிஹோமம் 16.03.2023 அன்று நடைபெற்றது. அன்று, சண்டிஹோமம் வேள்வித்தீயில் மாகாளியம்மன் தோன்றியது, அப்பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது.

Read More
லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில்

நித்தியகல்யாணியாக மடிசார் புடவையுடன் காட்சி தரும் அம்பாள்

திருச்சியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள தலம் லால்குடி. இறைவனின் திருநாமம் சப்தரிஷீஸ்வரர். ஏழு முனிவர்கள் வழிபட்டு பூஜைகள் செய்த திருத்தலம் என்பதால், இங்கே உள்ள ஈசனுக்கு சப்தரிஷீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது. இறைவியின் திருநாமம் பெருதிருப்பிராட்டியார், ஸ்ரீப்ரவிருத்தஸ்ரீமதி.

அம்பாள் மேற்கு நோக்கியவாறு மாலை மாற்றும் வடிவில் அருள்பாலிக்கிறாள். காதுகளில் ஸ்ரீசக்கர தாடங்கம்(காதணி) அணிந்திருக்கிறாள். எப்போதும், மடிசார் புடவையுடன், நித்திய கல்யாணியாக காட்சி தருகிறாள். இவள் லட்சுமிக்கே லட்சுமி கடாட்சம் தந்த அம்பாள்.

மகாலட்சுமி தாயார், இங்கு இந்தத் தலத்தில் கடும் தவம் புரிந்து மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்துகொண்டாள் என்கிறது தல புராணம். எனவே இந்தத் தலத்துக்கு வந்து, சப்தரிஷீஸ்வரரை தரிசனம் செய்து பிரார்த்தனை செய்துகொண்டால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்.

இங்கு, அம்பாள், சரஸ்வதி, மகாலட்சுமி தாயார், துர்கை முதலானோருக்கு புடவை சார்த்தி வேண்டிக்கொண்டால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். தாலி பாக்கியம் நிலைக்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்துவிளங்குவார்கள். கடன் முதலான தொல்லையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம். இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் குடிகொள்ளும் என்கிறார்கள்.

Read More
திருவாசி  மாற்றுரைவரதீஸ்வரர் கோவில்

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவில்

பாம்பின் மேல் தாண்டவமாடும் நடராஜப் பெருமானின் அபூர்வக் கோலம்

திருச்சியிலிருந்து முசிறி செல்லும் சாலையில் 15 கி.மீ தூரத்தில் உள்ள தேவாரத்தலம் திருவாசி. இறைவன் திருநாமம் மாற்றுரைவரதீஸ்வரர். இறைவியின் திருநாமம் பாலாம்பிகை. இந்தக் கோவிலில் சிவன் சன்னிதிக்கு முன்பாக உள்ள மண்டபத்தில் தெற்கு நோக்கிய சன்னிதியில் நர்த்தனமாடும் நடராஜ பெருமான் வீற்றிருக்கிறார். எல்லா சிவாலயங்களிலும் முயலகன் மேல் காலை ஊன்றி தாண்டவமாடும் நடராஜப் பெருமானின் கோலத்தைத்தான் நாம் தரிசித்து இருப்போம். ஆனால் இத்தலத்தில், சர்ப்பத்தைக் காலடியில் போட்டு அதன்மேல் நின்று நடராஜப் பெருமான் ஆனந்தக் கூத்தாடும் கோலம், இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

முன்னொரு காலத்தில், மழவ நாட்டைச் சார்ந்த இப்பகுதியை ஆண்டு வந்த கொல்லிமழவன் என்ற மன்னனின் மகளுக்கு வலிப்பு நோய் எனும் தீராத நோயிருந்தது. மன்னன் எவ்வளவோ வைத்தியம் செய்துபார்த்தும் மகளை குணப்படுத்த முடியவில்லை. எனவே, பெரியவர்களின் ஆலோசனைப்படி, சிவபெருமான் அருள்புரியும் கோவிலில் அவளைக் கிடத்தி, அவள் பிணியை குணப்படுத்தும் பொறுப்பை சிவபெருமானிடமே விட்டுவிட்டுச் சென்றான். அச்சமயத்தில் திருஞானசம்பந்தர் பல தலங்களை தரிசனம் செய்துகொண்டு, இத்தலத்திற்கு எழுந்தருளினார். இதையறிந்த மன்னன் அன்புடன் சம்பந்தரை வரவேற்றுத் தன் மகளின் நோயை நீக்கியருள வேண்டினான். திருஞான சம்பந்தர், 'மங்கையை வாடவிடாதே, தையலை வாடவிடாதே, பைந்தொடியை வாடவிடாதே' என்ற ரீதியில் உள்ளத்தை உருக்கும் விதமாக பதிகங்களைப் பாடினார். அவர் சிவபெருமானை வேண்டி, 'துணிவளர் திங்கள் துலங்கி விளங்க...' எனும் பதிகம் பாடி, இத்தல இறைவனை வணங்க, வலிப்பு நோய் நீங்கி மன்னனின் மகள் குணமடைந்தாள்.

சிவபெருமான், மன்னன் மகளின் வலிப்பு நோயை ஒரு பாம்பாக மாற்றி, அதன் மீது நின்று ஆடினார். இதன் அடிப்படையில், இங்குள்ள நடராஜர் காலுக்கு கீழே முயலகன் உருவம் இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால் நடராஜப் பெருமான் தனது திருவடியின் கீழ்

முயலகனுக்கு ப் பதிலாக, சர்ப்பத்தின் மீது நடனமாடுகின்றார். நரம்புத் தளர்ச்சி, வாதநோய், வலிப்பு நோய், சர்ப்ப தோஷம், மாதவிடாய் பிரச்னைகள் முதலியன இத்தல இறைவனை வழிபட குணமாகும். தொடர்ந்து 48 நாட்கள் இத்தலத்திலுள்ள சர்ப்பத்தின்மீது ஆடும் நடராஜருக்கு அர்ச்சனை செய்து, அந்த விபூதியை பூசி வந்தால் நரம்பு சம்பந்தமான நோய்கள் நீங்கப் பெறலாம்.

Read More
ஸ்ரீரங்கம் தசாவதார கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீரங்கம் தசாவதார கோவில்

மூலஸ்தானத்தில் தசாவதார கோலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வடமேற்கே சுமார் 1 கி.மீ. தூரத்தில், கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ளது தசாவதார கோவில்.

ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரம், திருமதில்சுவர் உட்பட கோயில் கட்டுமானப்பணிகளை திருமங்கையாழ்வார் முன்னின்று நடத்தினார். அவருடைய பணியை பாராட்டி, ரெங்கநாதர் திருமங்கையாழ்வாரின் கோரிக்கையை எறறு, பத்து அவதாரத்தில் (தசாவதாரம்) திருமங்கையாழ்வாருக்கு காட்சியளித்த இடம்தான் கொள்ளிடம் ஆற்றங்கரையிலுள்ள தசாவதாரம் கோவிலாகும்.இக்கோவில் மூலஸ்தானத்தில் பெருமாள் தசாவதார கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார். இந்தத் தோற்றத்தில் மச்ச, கூர்ம, வராக, நரசிம்மர் ஆகிய அவதாரங்கள் ஆயுதங்கள் இல்லாமல் சங்கு சக்கரத்துடனும், வாமன அவதாரம் கையில் குடையுடனும், பரசுராம அவதாரம் கையில் கோடாரியுடனும், ராம அவதாரம் வில் அம்புடனும், பலராமன் அவதாரம் கலப்பையுடனும், ஸ்ரீகிருஷ்ண அவதாரம் நர்த்தன கிருஷ்ணணாக ஒரு கையில் வெண்ணையுடனும், நாட்டிய பாவனையிலும் கல்கி அவதாரம்,குதிரைவாகனத்தில், கேடயம் கத்தியுடனும் காட்சியளிக்கிறார்கள். மச்ச (மீன்) கூர்ம (ஆமை) அவதாரங்கள் அவதார நிலையிலேயே மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ளன. இங்குள்ள உற்சவ மூரத்தி லெட்சுமி நாராயணர். இவர் ஆழ்வார்களாலேயே பூஜை செய்யப்பட்டவர்.

பொதுவாக கோவில்களில் ஒரு மூலவருக்கு பல உற்சவர் இருப்பதை காணலாம். ஆனால் இங்கு பத்து மூலவருககு ஒரே ஒரு உற்சவர் மட்டுமே இருப்பது தனிசிறப்பாகும். பத்து அவதாரங்களுக்கும் ஒரு கலசம் வீதம், விமானத்தில் பத்து கலசங்கள் காணப்படுகின்றன. கருவறை விமானம் செவ்வக வடிவில் இருப்பதும் ஒரு தனிச் சிறப்பாகும்.

கிரக தோஷ நிவர்த்தி தலம்

இங்குள்ள ஒவ்வொரு அவதாரமும், ஒவ்வொரு கிரகத்தின் தலைவராகக் கருதப்படுகிறது. குறிப்பாக மச்ச-கேது, கூர்ம-சனீஸ்வரர், வராக-ராகு, நரசிம்மா-செவ்வாய், வாமன-குரு, பரகராம-சுக்கிரன், ராம-சூரியன், கிருஷ்ணன்-சந்திரன், பலராமன்-மாந்தி, கல்கி-புதன் ஆகிய கிரக தோஷங்களை நிவர்த்தி செய்கின்றனர். அதனால், கிரக தோஷமுடையவர்கள் தங்கள் நட்சத்திர தினத்தில் இக்கோவிலை வழிபட்டு பலன் பெறலாம்.

Read More
நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்

நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்

குபேரன் மற்றும் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் தலம்

குபேரன் புதல்வர்கள் பொன் வில்வ சாரரத்தால் வழிபட்ட தலம்

திருச்சியிலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ளது நன்னிமங்கலம். இத்தலத்தில் அமைந்துள்ளகு, 1200 ஆண்டுகள் பழமையான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் சுந்தரேஸ்வரர். இறைவியின் திருநாமம் மீனாட்சி. இந்த ஆலயத்தை பக்தர்கள் சென்னி வாய்க்கால் கோயில் என்றே அழைக்கின்றனர். பிரம்மா இங்கு சிவனை தன் தலைகளால் (சென்னி) வணங்கி வரம் பெற்றதால் இத்தல இறைவன் சென்னி சிவம் என்றே அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் இதுவே சென்னி வளநாடு எனப் பெயர்கொண்டு, தற்போது சென்னிவாய்க்கால் கோயில் என்றானது. கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர், ஐந்தடி உயர லிங்கத்திருமேனியில், கரும்பச்சை நிறத்தில் மரகத மேனியராய் ஜொலிக்கிறார். இவர் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

பொன்னாலாகிய மூன்று தளத் தொகுதியுடைய பொன் வில்வ சாரம், யோக தவ ஜப சக்திகளைப் பெற்றிருப்பவர்களைத் தவிர வேறு எவர் கண்களுக்கும் தென்படாது. மகிமைமிக்க பொன்வில்வ சாரத்தை சிவபெருமான் குபேரனிடம் அளித்தார். குபேரன் இதை தன் குமாரர்களான மணிக்ரீவன், நளகூபன் இருவரிடமும் அளித்து பூலோகத்தில் உள்ள சுயம்பு லிங்க மூர்த்திகளில் வைத்து வழிபட்டு அதன் மகிமையை அறிந்துவரும்படி கட்டளையிட்டார்.

அவ்வாறே அவர்கள் வழிபட, அந்த பொன்வில்வசாரம் பல இடங்களில் பசுமையாக சாதாரண வில்வ தளம் போல் காட்சி தர, சில இடங்களில் மறைந்து விட்டது. பிரபஞ்சத்தின் தெய்வீக மையமாகத் திகழும் திருவண்ணாமலை வந்தடைந்தனர். பௌர்ணமி அன்று கிரிவலம் வந்து பொன்வில்வ சாரத்தை அண்ணாமலை ஆண்டவன் பாதங்களில் வைத்து 'ஓம் நமசிவாய' மந்திரத்தை ஓதினர். அண்ணாமலையாரிடம் வில்வதளம் சுவர்ணமாகப் பிரகாசித்தது. சென்னிவளநாடு செல்லும்படி அவர்களுக்கு அண்ணாமலையார் அசரீரியாய் அருள் வழிகாட்டினார்.

அதன்படி இருவரும் திருத்தவத்துறை என்ற தற்போதைய லால்குடியில் உள்ள சப்தரீஷிஸ்வரர் ஆலயத்திற்கு வந்தனர். அங்கிருந்த சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி நீராடிய அவர்கள் அருகில் வேறொரு ஆலயம் இருப்பதைக் கண்டனர். அதேசமயம் தங்கள் கரத்திலிருந்த பொன்வில்வசாரம் மறைந்தது கண்டு பதறினர். உடனே அந்த ஆலய கருவறை நோக்கிச் சென்றனர். அங்கே கரும்பச்சை வண்ணத்தில் மரகதமாய் ஜொலிக்கும் சுயம்பு லிங்கத்திருமேனியில் தாங்கள் கொண்டு வந்த பொன்வில்வசாரம், பன்மடங்காகப் பெருகி மணம் வீசக்கண்டனர்.

அவை ஸ்வர்ணவில்வ தளங்களாக மஞ்சள் நிறத்தில் ஜொலித்தன. இருவரும் மெய் சிலிர்த்து 'ஓம் நமசிவாய' என ஓதி அர்ச்சிக்க, அது மேலும் பொங்கிப் பெருகியது. இருவரும் மன பூரிப்போடு தேவலோகம் சென்றனர். தன் புதல்வர்கள் பொன்வில்வ சாரத்தின் மகிமையையும் தேவரகசியத்தையும் உணர்ந்ததை அறிந்த குபேரன் மனம் மகிழ்ந்தார். சென்னி வளநாட்டிற்கு வந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டார்.

பௌர்ணமி அன்று இத்தலவிருட்சமான பொன்வில்வ மரத்திற்கு அரைத்த சந்தனம் மஞ்சள் குங்குமம் சாத்தி, அடிப்பிரதட்சனம் செய்து இறைவன் இறைவியை வழிபட்டால் குபேரன் மற்றும் லட்சுமி தேவியின் அருளைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

Read More
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்

அகிலாண்டேஸ்வரி ஸ்ரீசக்கர தாடகங்களின் சிறப்பு

திருச்சிராப்பள்ளி நகரில் அமைந்துள்ள தேவாரத் தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் பஞ்சபூதத் தலங்களில் அப்புத்(நீர்) தலமாகும். இறைவன் திருநாமம் ஜம்புகேஸ்வரர் . இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி.

ஆதி சங்கரர் திருவானைக்கா தலத்துக்கு வந்தபோது அங்கு அன்னை உக்கிர ரூபத்தோடு காட்சியளித்தாள், அன்னையின் உக்கிரம் தணிக்க, ஆதி சங்கரர் ஸ்ரீசக்கரத்தை தாடகங்கமாகச் செய்து அணிவித்தார். இதனால் அன்னை மனம் குளிர்த்து சாந்த சொரூபியாக, வரப்பிரசாதியாக அருள்பாலித்தார். அன்னையின் தாடகங்கள் ஸ்ரீசக்கர ரூபமாக அமைந்ததால் அதை தரிசனம் செய்வது மிக விசேஷமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக திருமணம் ஆகாத பெண்கள், குழந்தை வரம் வேண்டும் பெண்கள், அம்பிகையின் தாடகங்களையே உற்று நோக்கி வணங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.

இத்தலத்தில் அம்பாள் முப்பெரும் தேவியராகக் காட்சிகொடுக்கிறாள். அகிலாண்டேஸ்வரி ஒருநாளில், காலையில் லட்சுமிதேவியாகவும் உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதி தேவியாகவும் அருள்பாலிக்கிறாள். மூன்று வேளையிலும் அம்பிகையை தரிசித்து வழிபட செல்வம், வீரம், கல்வி ஆகிய மூன்றும் கிடைக்கும் என்கின்றன வேத சாஸ்திரங்கள்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன்

https://www.alayathuligal.com/blog/p2ltlykayf5sm29zff7943xcfb47l8

Read More
பொன்மலை விஜயராகவப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

பொன்மலை விஜயராகவப் பெருமாள் கோவில்

தம்பதியர் குறை தீர்க்கும் பெருமாள்

திருச்சிராப்பள்ளி நகரில், பொன்மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது விஜயராகவப் பெருமாள் திருக்கோவில். கருவறையில் ராமபிரான், 'விஜயராகவப் பெருமாள் என்ற திருநாமத்தில் சேவை சாதிக்கிறார். பெருமாளின் இடது கரத்தில் வில்லும், வலது கரத்தில் அம்பும் உள்ளன. ராமபிரானின் வலதுபுறம் சீதா பிராட்டியாரும், இடதுபுறம் லட்சுமணனும், ராமரின் காலடி அருகே கரம் குவித்த நிலையில் ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர்.

இங்கு பெருமாள் சீதா தேவியுடன் குடும்ப சகிதமாய் சேவை சாதிக்கிறார். அதனால், இவரை வணங்கும் பக்தர்களுக்கு, குடும்ப பிரச்சினைகள் யாவும் விரைந்து தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், தம்பதிகளின் பிணக்குகள் நீங்கி மன ஒற்றுமை நிலவவும், தாமதமாகும் திருமணங்கள் தடையின்றி நடந்தேறவும், கிரகக் கோளாறுகள் நீங்கி மன மகிழ்வுடன் வாழவும் இத்தல இறைவன் அருள்புரிகிறார்.

Read More
நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்

அம்பிகை மெட்டி அணிந்திருக்கும் அபூர்வக் கோலம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டத்திலுள்ள நன்னிமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில். இத்தலம் திருச்சியிலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன் திருநாமம் சுந்தரேஸ்வரர். இறைவியின் திருநாமம் மீனாட்சி.

இக்கோவில் மகாமண்டபத்தின் இடதுபுறம், இறைவி மீனாட்சியின் சந்நதி உள்ளது. அம்பிகை முன்கை அபய முத்திரை காட்ட, மறு கையில் மலர் ஏந்தி நின்ற கோலத்தில், தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். அம்பிகையின் கால்கட்டை விரல்களில் மெட்டி அணிந்திருப்பது ஓர் அபூர்வமான காட்சி ஆகும். திருமணத்துக்காகக் காத்திருக்கும் இளம் வயதினர், அம்பிகையின் மெட்டி தரிசனம் கண்டால் வெகுவிரைவில் அந்த பாக்கியம் அருளப் பெறுகிறார்கள்.

Read More
எறும்பீசுவரர் கோவில்

எறும்பீசுவரர் கோவில்

தேவர்கள் எறும்பு வடிவில் வழிபட்ட தேவாரத் தலம்

திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சை செல்லும் பாதையில் 13 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தேவாரத் தலம், திருவெறும்பூர். இறைவன் திருநாமம் எறும்பீஸ்வரர். இறைவி சௌந்தர நாயகி.

புற்று மண்ணால் ஆன சுயம்பு நாதரான இறைவன் எறும்பீஸ்வரர், வடக்கில் தலை சாய்ந்த நிலையில் வட்ட வடிவ ஆவுடையாராகக் கிழக்கு முகமாய் காட்சி தருகின்றார்.

தாருகாசுரன் என்னும் அசுரன் தான் பெற்ற வரத்தினால் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். ஒரு நிலையில் விண்ணுலகில் வாழ்ந்த இந்திரனைத் தோல்வியுறச் செய்தான். தோல்வி கண்ட இந்திரன், பிரம்மனிடம் முறையிட்டான். அவர் 'தென்கயிலாயமான மணிக்கூடபுரத்துப்(திருவெறும்பூர்) சிவபெருமானை வழிபடுவாயாக, அப்போது சூரனை அழிக்க ஒரு புதல்வன் தோன்றுவான், அவனே சூரனை அழிப்பான்' என்று ஆலோசனை கூறினார்.

அதன்படி தான் வழிபாடு செய்வதை அசுரன் அறிந்து விடக் கூடாது என்பதால், இந்திரனும், தேவர்களும் எறும்பு வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டு வந்தனர். இறைவன் விருப்பப்படி கருநெய்தல் மலர்களால் பூசித்து வந்தனர். எண்ணெய்ப் பசையால் மலர்களைக் கொண்டு செல்லும் எறும்புகள் எளிதில் ஏறி வழிபட சிரமமாக இருந்தது. இதனால் தன் வடிவத்தினையும் புற்று மண்ணாக மாற்றியும், சறுக்கி விழாமல் எறும்புகள் எளிதில் ஏறும் வண்ணம் சிவபெருமான் திருமுடி சாய்த்தும் எறும்புகளுக்கு அருள் வழங்கினார்.

Read More
சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

சுப்பிரமணிய சுவாமி கோவில்

தனித்தனி மயில் வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் முருகன், வள்ளி, தெய்வயானை

திருச்சி நகரத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் லால்குடிக்கு அருகில் உள்ள திண்ணியம் எனும் தலத்தில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஈசனின் திருநாமம் கோடீசுவரர். இறைவி பிருகந்தநாயகி.

இக்கோவிலின் உள்ளே நுழைந்ததும் நமக்கு முதன்மையாக காட்சி தருபவர் சுப்பிரமணிய சுவாமிதான். பொதுவாக சிவாலயங்களில் ஈசுவரனை தரிசித்த பின்புதான் முருகப்பெருமானை தரிசிக்கும் வகையில் சன்னதிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இக்கோவிலில் ஒரே இடத்தில் நின்றபடி சிவனையும், முருகனையும் தரிசிக்கும்படி சன்னதிகள் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும்.

மற்ற கோவில்களில் தனியாகவோ அல்லது வள்ளி தெய்வயானை சமேதராகவோ முருகப்பெருமான் மயில் மேல் எழுந்தருளியிருப்பார். ஆனால் இக்கோவிலில் மூவரும் தனித்தனியே மயில் வாகனத்தில் எழுந்தருளியிருப்பது மேலும் ஒரு சிறப்பாகும்.

திருமணப்பேறு, குழந்தை வரம், கல்வி ஞானம் அருளும் முருகன்

இத்தலத்தில் முருகனுடைய வலது கரம், அபயம் காட்டுகிறது. பக்தர்களை காக்கும் கரமாக விளங்குகிறது. அதேசமயம் இடது கரம் வரத ஹஸ்தமாக இல்லாமல் அரிஷ ஹஸ்தமாக உள்ளது. அதாவது, பக்தர்களுடைய கஷ்டங்களை தான் வாங்கிக் கொள்ளும் கையாக உள்பக்கமாக அணைந்தபடி உள்ளது. பிற பத்துக் கரங்களும் பக்கத்துக்கு ஐந்தாக அமைந்து, பக்தர்களின் துயர்களை யெல்லாம் களைகின்றன. இதனால் இந்தக் கோயிலுக்கு வருபவர்களுக்கு திருமணத்தடை நீங்குதல், குழந்தை பாக்கியம், கல்வி ஞானம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கிறது என்கிறார்கள் பக்தர்கள். இக்கோவில் முருகன் சிலை, வண்டியிலிருந்து கீழே சரிந்து இத்தலத்தில் நிலை கொண்டுவிட்டதால், இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடுவோர் விரைவிலேயே சொந்த வீடு, நிலம் வாங்குவார்கள் என்றும் நம்பப்படுகிறது.

Read More
தான்தோன்றீஸ்வரர் கோவில்

தான்தோன்றீஸ்வரர் கோவில்

நவக்கிரகங்கள் தம் மனைவியருடனும், வாகனத்துடனும் இருக்கும் ஆபூர்வக் காட்சி

திருச்சி மாநகரின் ஒரு பகுதியான உறையூர் தலத்தில், சுமார் 1800 ஆண்டுகள் பழமையான குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

பொதுவாக சிவாலயங்களில் நவக்கிரகங்கள் ஒரு பீடத்தின் மேல் நின்ற கோலத்தில் வக்கரித்த நிலையில் காட்சி தருவார்கள். மேலும் சில தலங்களில் தம்பதி சமேதராகவோ அல்லது தம் வாகனத்துடனோ காட்சி தருவார்கள். ஆனால் இக்கோவிலில் நவக்கிரகங்கள் தம்பதி சமேதராய் தம் வாகனத்துடன் எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

இக்கோவிலில் குங்குமவல்லி தேவிக்கு, ஒவ்வொரு ஆண்டும் வளையல் காப்புத் திருவிழா ஆடிப்பூரம் மற்றும் தை மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் மூன்று நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் இந்த வளையல் காப்புத் திருவிழா வெகு பிரசித்தம்.

Read More
ஏழைப் பிள்ளையார் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

ஏழைப் பிள்ளையார் கோவில்

ஏழு இசை ஸ்வரங்கள் சாப விமோசனம் பெற்ற தலம்

திருச்சி மலைக்கோட்டை என்றாலே நம் நினைவுக்கு வருவது உச்சிப் பிள்ளையார்தான்.ஆனால் மலைக்கோட்டையை கிரிவலம் வரும்போது, உச்சிப் பிள்ளையாரையும் சேர்த்து 12 விநாயகர் கோயில்களை தரிசிக்கலாம். இதில் ஏழாவதாகக் காட்சி தருபவரே வடக்கு ஆண்டார் தெருவில் வீற்றிருக்கும் ஏழாவது பிள்ளையார். இவரே நாளடைவில் மருவி ஏழைப் பிள்ளையார் என்றானார். ஏழு ஸ்வரங்கள் இணைந்து இவரை வணங்கி அருள் பெற்றன என்றும் அதனால் ஏழிசை விநாயகர் என்ற திருநாமம் ஏற்பட்டு பின்னர் அது ஏழைப் பிள்ளையார் என்று மருவியது என்ற கருத்தும் உண்டு. இவர் ஸப்தபுரீஸ்வரர் என்றும் போற்றப்படுகிறார்.

ஏழு இசை ஸ்வரங்கள் சாப விமோசனம் பெற்ற தலம்

ஏழு இசை ஸ்வரங்களும் தாங்களே சிறந்தவர்கள் என்ற ஆணவத்தால், சிவபூஜையில் அபசுரமாக ஒலித்த காரணத்தால் கலைமகளால் சாபம் பெற்றன . இதனால் அவை ஊமையாகி விட்டன. சாபவிமோசனம் வேண்டி, ஈசனைத் துதிக்க, அவரும் 'பூலோகம் சென்று, தென் கயிலாயம் எனப்படும் திருச்சிராப்பள்ளி மலை மீது அருளும் உச்சிப் பிள்ளையாரை வழிபட்டு, அந்த மலையை வலம் வந்து, அந்த பாதையில் ஏழாவதாக எழுந்தருளி இருக்கும் விநாயகரை வழிபட்டால் உங்கள் சாபம் நீங்கும். மீண்டும் சப்தஸ்வரங்களை ஒலிக்கும் சக்தியைப் பெறுவீர்கள். அந்த ஆலயமும் உங்கள் நினைவாக ஏழிசைப் பிள்ளையார் என்ற பெயர் கொண்டு விளங்கும்' என்று அருளினார். அதேபோல் ஏழு ஸ்வரங்களும் இங்கு வந்து கணபதியை பிரதிஷ்டை செய்து, தொழுது சாப விமோசனம் பெற்றன என்று ஆலய புராணம் கூறுகிறது.

மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகள் குணமடைய அருளும் பிள்ளையார்

இசைக் கலைஞர்கள் குரல் வளம் சிறப்பாக, பேச்சுத் திறமை உண்டாக, செல்வச் செழிப்பு உண்டாக, குழந்தைகளுக்கு ஏற்படும் பேச்சு சம்பந்தமான குறைகள் தீர, தொண்டை சம்பந்தமான நோய்கள் நீங்க இங்குள்ள விநாயகரைப் பிரார்த்திக்கிறார்கள். படிப்பில் கவனம் குறைந்த குழந்தைகளும், மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகளும் இவரை வணங்கினால் நல்ல முன்னேற்றம் அடைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

யம பயம் போக்கும் பிள்ளையார்

ஏழைப் பிள்ளையார் தெற்கு திசை நோக்கி அருள்புரிவதால் இவரை வணங்குபவர்களுக்கு யம பயமோ, யம வாதனையோ இல்லை என்பது ஆன்றோர் கூற்று. திருச்சிராப்பள்ளி மலை மீது எழுந்தருளியிருக்கும் தந்தையான ஈசனையும் தாயான அம்பிகையையும் பார்த்த வண்ணம் இருப்பதால், இந்த கணபதியை வணங்கினால் குடும்ப ஒற்றுமையும் அமைதியும் நிலைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த கணபதியை தரிசித்தாலே மலை மீது ஏறி உச்சிப் பிள்ளையாரை தரிசித்த பலனும் கிட்டும் என்கிறார்கள்.

Read More
பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில்

உடல் ஊனத்தை குணமாக்கும் பெருமாள்

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ளது குணசீலம். பெருமாளின் திருநாமம் பிரசன்ன வேங்கடாசலபதி. தாயாருக்கு தனிச்சந்நிதி இல்லை. பெருமாள் செங்கோலுடனும் காட்சி தருகிறார். இந்த செங்கோல் கொண்டு, தீராத நோயையும் தீர்த்தருள்கிறார் பிரசன்ன வேங்கடாசலபதி.

குணசீலம் என்று பெயர் ஏற்பட்ட பின்னணி

குணசீலர் என்று பெயர் கொண்ட பெருமாள் பக்தர் ஒருவர் காவிரிக்கரையில் ஒரு ஆசிரமத்தை நடத்தி வந்தார். ஒருநாள் திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை தரிசித்து வந்த குணசீலருக்கு தன் ஆசிரமத்திலும், பெருமாள் எழுந்தருள வேண்டும் என்ற ஆசை வந்தது. தனது ஆசிரமத்தில் பெருமாளை வரவழைக்க கடும் தவம் மேற்கொண்டார். இந்த தவத்தின் மூலம் பெருமாள் குணசீலருக்கு காட்சியளித்து அந்த ஆசிரமத்திலேயே பிரசன்ன வெங்கடாஜலபதியாக இருந்து இன்று வரை தரிசனம் தருகின்றார். பெருமாலின் பக்தரான குணசீலரால் தான் இந்த பகுதிக்கு குணசீலம் என்ற பெயர் ஏற்பட்டது.

பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் உருவான வரலாறு

குணசீலரின் சேவை மற்றொரு ஆசிரமத்திற்கு தேவைப்பட்டதால், குணசீலர் தன் சீடனிடம் பெருமாளை ஒப்படைத்துவிட்டு பூஜைக்கான பொறுப்பையும் கொடுத்துவிட்டு, வேறு இடத்திற்கு சென்றுவிட்டார். அந்த சமயத்தில் குணசீலம் ஒரு காடாக இருந்தது. வனவிலங்குகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் குடிலை விட்டு சீடன் வேறு இடத்திற்கு சென்று விட்டான். அந்த குடிலில் பெருமாள் சிலை மட்டும் தனியாக இருந்த போது, புற்றினால் மூடப்பட்டுவிட்டது. அப்போது ஞானவர்மன் என்ற மன்னன் அந்தப் பகுதியில் ஆட்சி செய்து கொண்டிருந்தான் அரண்மனையின் பசுக்கள் அந்த காட்டில், புல் மேய்வதற்காக விடப்படும். தொடர்ச்சியாக அந்த காட்டினுள் சென்ற மாடுகளில் மடியில் இருந்து பால் கரப்பது இல்லை. இதற்கு காரணம் என்ன என்று அறிந்து கொள்வதற்காக, அந்த காட்டிற்குச் சென்ற மன்னனுக்கு ஒரு அசரீதி குரல் ஒலித்தது. அந்தக் குரலின் மூலம் புற்றுக்குள் சிலை இருப்பதை உணர்ந்த மன்னன் பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு கோவில் எழுப்பினான்.

தீராத நோயையும் தீர்த்தருளும் தலம்

உடல் ஊனமுற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், வாய் பேச முடியாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து பெருமாளை தரிசனம் செய்தால் சரியாகி விடும் என்பது நம்பிக்கை. மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், இந்தத் தலத்தில் ஒருமண்டலம் தங்கி, இங்கே வழங்கப்படும் தீர்த்தப் பிரசாதத்தை உட்கொண்டு, பெருமாளை ஸேவித்து வந்தால், மன நலம் குணமாகித் திரும்புவர் என்பது ஐதீகம். மதியம் ஒருமணி உச்சிக்கால பூஜையில், பெருமாளுக்கு பூஜைகள் நடந்த பின்னர், பக்தர்களின் முகத்தில் தீர்த்தம் தெளிக்கப்படுவது வழக்கம்.

Read More
பஞ்சமுகேஸ்வரர் கோவில்
சிவபெருமான், Shiva Alaya Thuligal சிவபெருமான், Shiva Alaya Thuligal

பஞ்சமுகேஸ்வரர் கோவில்

ஐந்து முகங்கள் கொண்ட சிவலிங்கம்

திருச்சியில் திருவானைக்காவல் கோவில் அருகே பஞ்சமுகேஸ்வரர் கோவில் உள்ளது. இறைவன் திருநாமம் பஞ்சமுகேஸ்வரர். இறைவி திரிபுரசுந்தரி. கருவறையில் பஞ்சமுகேஸ்வரர் கிழக்கு திசையை நோக்கி ஐந்து முகங்கள் கொண்ட சிவலிங்க உருவில் அருள்பாலிக்கிறார். சிவலிங்கத்தின் நான்குபுறமும் முகங்கள் இருக்க, லிங்கமும் ஒருமுகமாக கணக்கிடப்பட்டு பஞ்ச முகமாக காட்சி தருகிறார். பஞ்சமுக லிங்கத்தின் ஆவுடையார், ஒ ரு தாமரைப் பீடத்தின் மேல் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும். நான்கு திசைகளையும் பார்க்கும்படி முகங்கள் அமைந்திருப்பதால், எந்த திசையில் இருப்பவரையும் இவர் காப்பாற்றுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இக்கோவிலில் பஞ்சமுகேஸ்வரர் சன்னதி எதிரிலேயே திரிபுரசுந்தரி அம்மன் சன்னதி அமைந்திருக்கிறது. இதனால் நாம் இருவரையும் ஒரு சேர தரிசிக்க முடியும். இப்படி இறைவன் இறைவி சன்னதிகள் எதிர் எதிரில் அமைந்திருப்பது அபூர்வமானது. இப்படி இருவரையும் தரிசிப்பதால், திருமணம் கைகூடும். மங்கலங்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்.

இந்தக் கோவிலில் சஷ்டி அப்த பூர்த்தியை செய்வது விசேஷமாகும்.

Read More
ரங்கநாதர் கோவில்
Perumal, பெருமாள் Alaya Thuligal Perumal, பெருமாள் Alaya Thuligal

ரங்கநாதர் கோவில்

ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் போர்த்தும் வைபவம்

கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி, கைசிக ஏகாதசி எனப்படும். அன்று இரவு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், உற்சவ மூர்த்தியான நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் ஒவ்வொன்றாய் போர்த்தும் வைபவம் விடிய விடிய நடைபெறும். பெருமாளுக்கு தினமும் அணிவிக்கும் வஸ்திரங்களில் ஏதேனும் குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்யும் பரிகாரமாக இந்த வைபவம் நடைபெறுகிறது. மேலும் கார்த்திகை மார்கழி குளிர் மாதங்கள் என்பதால் பெருமாளின் மீதுள்ள அன்பின் காரணமாக இந்த வஸ்திரங்கள் போர்த்தப்படுகின்றன. அத்துடன், ஒவ்வொரு வஸ்திரம் சாற்றியவுடனும் வேளையம் என்று அழைக்கப்படும் வெற்றிலை, பாக்கு, கற்பூர ஆரத்தி ஆகியவையும் நம்பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

கி.பி 1320 முதல் 1370 வரையிலான ஆண்டுகளில் முஸ்லிம் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சூறையாடப்பட்ட நிலையில், உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் திருப்பதி திருமலையில் சுமார் 50 ஆண்டு காலம் எழுந்தருளியிருந்தார். இதனை நினைவுகூறும் வகையில், ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஆண்டுதோறும் கைசிக ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு கைசிக ஏகாதசியான நவம்பர் 15 அன்று நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் போர்த்தும் வைபவம் நடைபெற்றது.

வைகுண்ட ஏகாதசி விழா

மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி 'வைகுண்ட ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது. இதனை 'மோட்ச ஏகாதசி' என்றும் அழைப்பார்கள். வைகுண்ட ஏகாதசியில் விரதம் மேற்கொள்வது, மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் தரக்கூடியது என்பதால், வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. ஏகாதசி அன்று தன்னை வழிபடுவோர்க்கு வைகுண்டப்பதவி அளிப்பதாக கூறி பெருமாள் அருளியதாக புராணங்கள் கூறுகின்றன.

வைகுண்ட ஏகாதசி அன்று, அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் பரமபத வாசல் என்ற சொர்க்கவாசல் திறப்பு விழா நடத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில், இன்று(14.12.2021) வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது. மார்கழி மாதத்தில் போகிப்பண்டிகை நாளில் ஏகாதசி வருவதால் இந்த ஆண்டு கார்த்திகையிலேயே பரமபதவாசல் திறக்கப்படுகிறது. இப்படி கார்த்திகை மாதம் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடப்பது, சுமார் 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை அமையும்.

Read More
வேதநாராயண பெருமாள் கோவில்
Perumal, பெருமாள் Alaya Thuligal Perumal, பெருமாள் Alaya Thuligal

வேதநாராயண பெருமாள் கோவில்

வேதங்களை தலையணையாக வைத்து படுத்திருக்கும் பெருமாள்

திருச்சி முசிறி சாலையில், தொட்டியத்திற்கு அருகில் (திருச்சியில் இருந்து 52 கிலோ மீட்டர்) அமைந்துள்ளது வேதநாராயணபுரம்.இத்தலத்தில் இருக்கும், வேதநாராயண பெருமாள் கோவிலில், ஸ்ரீவேதநாராயண பெருமாள்,நான்கு வேதங்களையும் தலையணையாகக் கொண்டு, ஆதிசேஷன்மீது பள்ளிக் கொண்டபடி, நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மதேவருக்கு வேத உபதேசம் செய்கிறார். பெருமாளின் திருவடியில் ஸ்ரீதேவியும் ஸ்ரீபூதேவியும் இருக்கிறார்கள். கீழே பிரகலாதன் இருக்கிறார்.

பிரகலாதன் இரணிய வதம் முடிந்ததும், பெருமாளிடம் அவரின் சாந்த ரூப தரிசனம் காண வேண்டும் எனப் பிரார்த்தித்தார். பெருமாள் அதைப் பிரகலாதனுக்கு திருநாராயணபுரத்தில் காண்பிப்பதாக வரமளித்தார். அதனால்தான், மூலவர் பெருமாளின் கீழே, பிரகலாதன் மூன்று வயதுக் குழந்தை வடிவில் காட்சித் தருகிறார்.

Read More