மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில்

ஸ்ரீரங்கம் கோவில் உருவாகக் காரணமான உச்சிப்பிள்ளையார்

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பிள்ளையார் தலங்களில் முதன்மையானது, திருச்சி மாநகரில் அமைந்துள்ள மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் ஆகும். பொதுவாக சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி மாநகரின் மத்தியில் 275 அடி உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இது, ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது. இந்த மலையானது தென்தமிழகத்தின் கைலாயம் என்று போற்றப்படுகின்றது. மலைக்கோவிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் உள்ளன.

இந்த மலைக் கோவிலை கிழக்கிலிருந்து பார்த்தால், விநாயகர் போன்றும், வடக்கிலிருந்து பார்த்தால் தோகை விரித்தாடும் மயில் போன்றும், மேற்கிலிருந்து பார்த்தால் நங்கூரம் பாய்ச்சிய கப்பல் மற்றும் சிவலிங்கம் போலவும், தெற்கிலிருந்து பார்த்தால் தலை உயர்த்தி அமர்ந்திருக்கும் ரிஷபம் அல்லது யானை மேல் அம்பாரி இருப்பது போலவும் தோற்றம் அளிக்கும்.உச்சிப் பிள்ளையார் கோவிலிலிருந்து கீழே நோக்கினால், படிக்கட்டுகளும், மலையின் தோற்றமும், விநாயகரின் தும்பிக்கை போல் தோற்றமளிக்கும்.

தல வரலாறு

இராவணனுடன் நடந்த போரில் வெற்றி பெற்று அயோத்தி திரும்பிய ராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அதில் இராவணனின் சகோதரன் விபீசணனும் கலந்து கொண்டார். போரில் தனக்கு உதவியதற்காக ராமர், விபீசணனுக்கு ரங்கநாதர் சிலை ஒன்றை பரிசளித்தார். விபீசணன் ராமருக்கு உதவிய போதிலும், அவர் அசுரன் என்ற காரணத்தால் அச்சிலையை அவர் கொண்டு செல்வதில் விருப்பமில்லாத தேவர்கள், அதை தடுக்க வேண்டுமென விநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவர்களது வேண்டுகோளை விநாயகரும் ஏற்றார்.

விபீசணன் இலங்கைக்கு திருச்சி வழியே செல்லும் போது, அங்கு ஓடும் காவிரி ஆற்றில் குளிக்க விரும்பினார். ஆனால், ரங்கநாதர் சிலையை ஒரு முறை தரையில் வைத்து விட்டால் அதை அங்கிருந்து நகர்த்த முடியாது என்ற காரணத்தால் செய்வதறியாமல் திகைத்தார். அப்போது அங்கு இருந்த ஒரு சிறுவனிடம் அச்சிலையைக் கொடுத்து, தான் குளித்து விட்டு வரும் வரையில் அதைத் தாங்கி பிடித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து குளிக்கச் சென்று விட்டார். சிறுவன் வேடத்தில் இருந்த விநாயகர், ரங்கநாதர் சிலையை தரையில் வைத்து விட்டார். இதைக் கண்ட விபீசணன் கோபங்கொண்டு அச்சிறுவனைத் துரத்தி மலை உச்சியில் பிடித்து, கோபத்தில் அவனது தலையில் குட்டினார். அப்பொழுது விநாயகர் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தினார். பின்பு, அவ்விடத்திலேயே உச்சிப்பிள்ளையார் கோயில் எழுப்பப்பட்டது.

விபீசணன் குட்டியதால் ஏற்பட்ட வீக்கத்தை இங்குள்ள விநாயகர் சிலையின் தலையில் காணலாம்.

ரங்கநாதரின் சிலை வைக்கப்பட்டிருந்த இடம் நீண்ட காலமாக தீவு பகுதியான அடர்ந்த காடுகளுக்குள் மூடப்பட்டிருந்தது. பல நூற்றாண்டுகள் கடந்து ஒரு சோழ மன்னன் கிளியைத் தேடிக் கொண்டு வரும் போது தற்செயலாக அந்த சிலை இருந்ததைக் கண்டுபிடித்தார்‌. பின்னர் பிரம்மாண்டமான ஸ்ரீரங்கம் கோவிலை கட்டினார்

விநாயகர் சதுர்த்தி விழா - 75 கிலோ கொழுக்கட்டை நைவேத்தியம்

விநாயக சதுர்த்தியன்று மலைக்கோட்டை கீழ் சன்னதியில் உள்ள மாணிக்க விநாயகர் மற்றும் மலைக்கோட்டை மேல் எழுந்தருளி இருக்கும் உச்சிப் பிள்ளையார் ஆகிய இரு சன்னதிகளுக்கும் தலா 75 கிலோ கொழுக்கட்டை என 150 கிலோ மெகா கொழுக்கட்டை படைக்கப்படுவது வழக்கம். இதற்காக கோவில் மடப்பள்ளி பணியாளர்கள் ஒருநாள் முன்பே கொழுக்கட்டை தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். பச்சரிசி, மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள், நெய், தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, பின்னர் அவற்றை இருபங்காக பிரித்து துணியில் கட்டி பெரிய பாத்திரத்தில் வைத்து தொடர்ந்து 24 மணிநேரம் ஆவியில் வேக வைப்பார்கள். இந்தக் கொழுக்கட்டை சிவாச்சார்யர்களால் மேளதாளங்கள் முழங்க தொட்டிலில் வைத்து கொண்டுவரப்படும். பின்னர் இரண்டு விநாயகருக்கும் நைவேத்தியமாக படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

விநாயகர் சதுர்த்தி அன்று வெளியான முந்தைய பதிவுகள்

1. கடல் நுரையாலான   வெள்ளை விநாயகர் (31.08.2022)

https://www.alayathuligal.com/blog/yynbl6ag4ce4a62h8dedw6kx5n7tkn

 2. முக்குறுனி விநாயகர் (10.09.2021)

https://www.alayathuligal.com/blog/8mhwgbl7fakbj8n3cax4hhfshw6ljm

 
Previous
Previous

மும்பை சித்தி விநாயகர் கோவில்

Next
Next

திருப்புறம்பியம் சாட்சிநாதேசுவரர் கோவில்