விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் கோவில்

விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் கோவில்

நாகத்துடன் காட்சி தரும் அபூர்வ தட்சிணாமூர்த்தி

திருநெல்வேலியில் இருந்து 45 கி.மீ., தொலையில் உள்ள விக்கிரமசிங்கபுரத்தில் அமைந்துள்ளது சிவந்தியப்பர் கோவில். இறைவன் திருநாமம் சிவந்தியப்பர். இறைவியின் திருநாமம் வழியடிமை கொண்டநாயகி.

பொதுவாக தட்சிணாமூர்த்தி இடது கையில் ஏடு அல்லது அக்னியை ஏந்தியபடிதான் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி, தன் இடக்கையை, காலுக்கு கீழ் இருக்கும் நாகத்தின் தலை மீது வைத்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பாகும். இப்படி நாகத்துடன் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தியை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

Read More
மாறாந்தை கயிலாயநாதர் கோவில்

மாறாந்தை கயிலாயநாதர் கோவில்

தட்சிணாமூர்த்தியின் சிரசில் சிவலிங்கம் அமைந்திருக்கும் அபூர்வ காட்சி

திருநெல்வேலியிலிருந்து மேற்காக தென்காசி செல்லும் சாலையில், 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மாறாந்தை கயிலாயநாதர் கோவில். இறைவியின் திருநாமம் ஆவுடையம்மாள். இத்தலத்து இறைவன் திருமேனியில் பசு மாட்டின் குளம்படி தடம் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.

இப்பகுதி முற்காலத்தில், மாறன் தாய நல்லூர் என்று அழைக்கப்பட்டது. 'மாறன்' என்பது பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். 'தாயம்' என்பதற்கு 'உரிமை என்று பொருள். பாண்டிய மன்னன் தம் வரி உரிமையை, மக்களுக்கு விட்டுக் கொடுத்த நல்ல ஊர் என்னும் பொருள்படும்படியாக இப்பகுதி இப்பெயரால் அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இப்பெயர் மருவி, தற்போது மாறாந்தை என அழைக்கப்படுகிறது.

பொதுவாக, ஆலமர்ச் செல்வன் என்று போற்றப்படும் தட்சிணாமூர்த்தி, சனகாதி முனிவர்கள் நான்கு பேர்களுக்கு கல்லால மரத்தடியில் உபதேசம் செய்யும் கோலத்தில் காட்சி தருவார். இதில் சற்று மாறு பட்ட கோலத்திலும் சில தலங்களில் அருள் புரிகிறார். தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி சில தலங்களில் திசைமாறியும் எழுந்தருளியுள்ளார். திசைமாறியும், வித்தியாசமான திருக்கோலத்திலும் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியை வழிபட நினைத்த நல்ல காரியங்கள் உடனே நிறைவேறும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

வேறெந்த ஆலயத்திலும் இல்லாத தனிச்சிறப்பாக, இவ்வாலயத்திலுள்ள தட்சிணாமூர்த்தியின் சிரசில் சிவலிங்கம் உள்ளது. பாலபிஷேகம், மஞ்சள் அபிஷேகம் செய்து இந்த தட்சிணாமூர்த்தியை வழிபடுவோருக்குச் சிறந்த கல்வி, உயர்பதவி, தொழில் முன்னேற்றம் கிடைக்கின்றன.

Read More
திருமெய்ஞ்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோவில்

திருமெய்ஞ்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோவில்

தட்சிணாமூர்த்தி ஆறு சீடர்களுடன் இருக்கும் அபூர்வ தோற்றம்

மயிலாடுதுறை - தரங்கம்பாடி வழித்தடத்தில், திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலுக்கு கிழக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருக்கடவூர் மயானம். பிரம்மாவை அழித்து ஞானம் உபதேசித்த தலமென்பதால், கடவூர்மயானம் என்றும். திருமெய்ஞானம் என்றும் இத்தலத்திற்கு பெயர்கள் உண்டு. இறைவன் திருநாமம் பிரம்மபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் மலர்க்குழல் மின்னம்மை. திருக்கடையூரில் ஆயுஷ்ய ஹோமம், சதாபிஷேகம் செய்பவர்கள் இங்குள்ள சிவனுக்கும் பூஜை செய்து ஹோமத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.

பொதுவாக சிவாலயங்களில் கருவறை சுற்றுச்சுவரில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி, கல்லால மரத்தின் கீழே, நான்கு சீடர்களுடன் உபதேசம் செய்யும் கோலத்தில் காட்சி அளிப்பார். ஆனால் இக்கோவிலில், கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியுடன், ஆறு சீடர்களுடன் காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும்.. மேலும் கல்லால மரமும் இல்லை. கல்வியில் சிறந்து விளங்க இத்தல சிவனையும் இங்குள்ள தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது சிறப்பு.

Read More
திருப்பந்துறை சிவானந்தேசுவரர் கோவில்

திருப்பந்துறை சிவானந்தேசுவரர் கோவில்

அர்த்தநாரீசுவரர் மற்றும் வீணாதர தட்சிணாமூர்த்தி கோலத்தில், கோவில் விமானத்தில் தட்சிணாமூர்த்தி இருக்கும் அரிய காட்சி

கும்பகோணத்திலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருப்பேணுபெருந்துறை. தற்போது 'திருப்பந்துறை' என்று அழைக்கப்படுகிறது. இறைவனின் திருநாமம் சிவானந்தேசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. பொதுவாக ஒரு சில ஆலயங்களில், மூலவர் இருக்கும் சன்னிதிக்குள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நாளில்தான் சூரியனின் கதிர்கள் விழும். ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள மூலவர் சிவலிங்கத்தின் மீது தினந்தோறும் சூரியனின் கதிர்கள் படர்வது, வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.

பொதுவாக சிவாலயங்களில் கருவறை சுற்றுச்சுவரில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி, இக்கோவில் சுவாமி கருவறை விமானத்தின் மேல் கல்லால மரத்தின் கீழ், ஆசனங்கள் ஏதும் இன்றி, வலது கையை ஊன்றி உடலை சற்றே சாய்த்து, சாவகாசமாக அமர்ந்திருக்கிறார். அது மட்டுமல்ல, தட்சிணாமூர்த்தியின் உருவம் வலது பக்கம் ஆணைப் போன்ற தோற்றமும், இடது பக்கம் பெண்ணைப் போன்ற தோற்றமும் கொண்டு அர்த்தநாரீசுவரர் கோலத்தில் எழுந்தருளி இருப்பது, வேறு எங்கும் காணக் கிடைக்காத அரிய காட்சியாகும். சுற்றிலும் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற அவரது மாணவர்கள் இருக்கின்றனர். இங்கு, தட்சிணாமூர்த்தியின் உடலில் பார்வதியும் இருந்து, பாடம் கேட்பதாக ஐதீகம். இவரை, 'சிவசக்தி தட்சிணாமூர்த்தி' என்கின்றனர்.

இந்த அர்த்தநாரீசுவர தட்சிணாமூர்த்தி இருக்கும் மாடத்தின் கீழேயே, வீணாதர தட்சிணாமூர்த்தி கையில் வீணையுடன், தனது நான்கு சீடர்களுடன் காட்சி தருகிறார். இப்படி அர்த்தநாரீசுவர தட்சிணாமூர்த்தியும், வீணாதர தட்சிணாமூர்த்தியும் ஒருசேர கோவில் விமானத்தில் காட்சி தருவது வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்.

Read More
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்

தட்சிணாமூர்த்தி உற்சவராக தேரில் வரும் தலம்

கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் ஆலங்குடி. இறைவன் திருநாமம் ஆபத்சகாயேஸ்வரர். இறைவியின் திருநாமம் ஏலவார்குழலி என்ற சுக்ரவார அம்பிகை. இக்கோவில் 1900 ஆண்டுகள் பழமையானது.

நவக்கிரகத் தலங்களில், ஆலங்குடி குரு தலமாக விளங்குகிறது. இத்தலத்து தட்சிணாமூர்த்தி மிகவும் விசேடமானவர். இவருக்கு குரு தட்சிணாமூர்த்தி என்ற சிறப்பு பெயரும், இத்தலத்துக்கு தட்சிணாமூர்த்தித் தலம் என்ற பெயரும் உண்டு. தட்சிணாமூர்த்தி உற்சவராக தேரில் பவனி வருவது தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான்.

பிரார்த்தனை

14 ஜன்மங்களில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே, ஆலங்குடிக்கு ஒருவர் வரக்கூடும் என்பது நம்பிக்கை. பொதுவாக எல்லா ராசி அன்பர்களும் குரு பெயர்ச்சிக்கு பரிகாரமாக ஆலங்குடி சென்று குருவுக்கு பிரீதி செய்வது வழக்கம். குரு தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்தும், 24 நெய் தீபங்கள் ஏற்றியும் வழிபட குரு தோஷங்கள் நீங்கி நன்மை பெறலாம். முல்லை மலரால் அர்ச்சனை, மஞ்சள் வஸ்திரம் சாற்றுதல், கொண்டைக் கடலைச் சுண்டல், சர்க்கரைப் பொங்கல் நிவேதனங்களுடன், சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பாலாபிஷேகம், குரு ஹோமம் செய்ய சகல தோஷங்களும் நிவர்த்தியாகும். வாரந்தோறும் வியாழக்கிழமை, தினசரி வரும் குரு ஹோரை மற்றும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்கள் மற்றும் அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் குரு பகவானை வழிபடுதல் சிறந்தது.

இவரை வழிபடுவதால், ஆயுள், ஆரோக்கியம், சந்தானப் பேறு, புகழ், ஐஸ்வரியம் ஆகிய யாவும் குறைவிலாது கிட்டும் என்பது நம்பிக்கை.

Read More
கோவில்பாளையம் காலகாலேஸ்வரர்  கோவில்

கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவில்

தலைக்கு மேல் சிவலிங்கத்துடன் இருக்கும் ஆசியாவிலேயே மிகப்பெரிய தட்சிணாமூர்த்தி

கோயம்புத்தூரிலிருந்து 20 கி.மீ.தொலைவில், கோவில் பாளையம் என்ற ஊரில் அமைந்துள்ளது காலகாலேஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் காலகாலேஸ்வரர். இறைவியின் திருநாமம் கருணாகரவல்லி. திருக்கடவூரில் மார்கண்டேயர் உயிரைபறிக்க எமதர்மராஜன் முயன்றபோது, சிவபெருமானால் தன் சக்தியை இழந்த எமதர்மராஜன் (காலன்) இக்கோவிலில் காலகாலேஸ்வரரை வழிபட்ட பின்பு இழந்த சக்தியை மீண்டும் பெற்றார்.

இக்கோவில் 1,300 ஆண்டு பழமை வாய்ந்தது.சுவாமி சன்னிதிக்கும் அம்மன் சன்னிதிக்கும், இடையில் வள்ளி தெய்வானையுடன் முருகன் கால சுப்பிரமணியர் என்ற பெயருடன் தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். இக்கோவிலில், மரகதத்திற்குரிய குணங்களைக் கொண்ட பச்சை நிற மரகத நந்தி உள்ளது. மூலவர் காலகாலேஸ்வரர், மணல், நுரையால் ஆனவர் என்பதால் தயிர், நெய், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வதில்லை.

ஆலங்குடியிலுள்ள தட்சிணாமூர்த்திக்கு இணையாக, ஆசியாவிலேயே மிகப் பெரிய தட்சிணாமூர்த்தி இங்கு இருக்கிறார், தட்சிணாமூர்த்தி சிலைக்கு மேல் சிவலிங்கம் இருப்பது தனிச்சிறப்பாகும். இந்த கோவில் குரு பரிகார தலமாகவும், கொங்கு மண்டல குரு பரிகார தலமாகவும் விளங்குகிறது.

பிரார்த்தனை

சுவாமி, அம்பாளுக்கு தேன் மற்றும் சந்தனம் உட்பட பல்வேறு திரவியங்களுடன் அபிஷேகம் செய்கின்றனர். அபிஷேக தேனும், சந்தனமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனை சாப்பிடுவதன் மூலம் குழந்தை பிறக்கவும், நோய் தீரவும் வழிபிறப்பதாக நம்பிக்கையுள்ளது. திருமணத் தடை விலகவும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இங்குள்ள நஞ்சுண்டேஸ்வரருக்கு இளநீர் அபிஷேகம் செய்வதன் மூலம் விஷக்கடிக்கு நிவாரணம் கிடைக்கிறது. ஆயுள் ஹோமம், உக்ரஹர சாந்தி, சஷ்டியப்தபூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம்) போன்ற ஹோமங்கள் இக்கோவிலில் பிரசித்தி பெற்றதாகும்.

Read More
தருமபுரம் யாழ்மூரிநாதர் கோவில்

தருமபுரம் யாழ்மூரிநாதர் கோவில்

காவி உடையுடன் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வ கோலம்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தேவாரத்தலம் தருமபுரம். இறைவன் திருநாமம் யாழ்மூரிநாதர், தருமபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் தேனாமிர்தவல்லி, மதுர மின்னம்மைமார்க்கண்டேயரின் உயிரைப் பறித்த பிழை நீங்க எமன் (தருமன்) வழிபட்ட பதியாதலின் தருமபுரம் என்று பெயர் பெற்றது.

திருஞானசம்பந்தரின் யாழ்முரிப்பதிகம் பெற்ற சிறப்புடையது இத்தலம். யாழை இசைத்து, யாழ்ப்பாணரின் கர்வத்தை அடக்கியவர் என்பதால் இத்தலத்து சிவபெருமான் 'யாழ்மூரிநாதர்' என அழைக்கப்படுகிறார். சிவபெருமான் யாழ் இசைத்த போது, அவரது அம்சமான தட்சிணாமூர்த்தி இசையை விரும்பி கேட்டார். இசையில் மகிழ்ந்த தட்சிணாமூர்த்தி தன்னையும் அறியாமல் வியப்பில் பின்புறம் சாய்ந்தாராம். இதனை உணர்த்தும்விதமாக இங்குள்ள தட்சிணாமூர்த்தி பின்புறம் சற்றே சாய்ந்தவாறு இருக்கிறார். பொதுவாக மஞ்சள் நிற வஸ்திரம்தான் தட்சிணாமூர்த்திக்கு அணிவிப்பார்கள். ஆனால், இங்கு காவி நிற வஸ்திரம் சாத்தி பூஜைகள் செய்கிறார்கள். தட்சிணாமூர்த்தியின் இந்த கோலத்தை காண்பது அபூர்வம். மணம் முடிக்காமல், குரு அம்சமாக இருப்பதால், காவி ஆடை அணிவிப்பதாக சொல்கிறார்கள்.

பிரார்த்தனை

இசை கற்பவர்கள் சிவபெருமான், தட்சிணாமூர்த்திக்கு விசேஷ பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள்.

Read More
மயிலாடுதுறை வதாரண்யேசுவரர் கோவில்

மயிலாடுதுறை வதாரண்யேசுவரர் கோவில்

தட்சிணாமூர்த்தி முன் நந்திதேவர் அமர்ந்திருக்கும் அபூர்வ கோலம்

மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள வதாரண்யேசுவரர் கோவில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் ஒன்று. இக்கோவில் வள்ளலார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. இக்கோவில் பிரசித்தி பெற்ற ஒரு குரு பரிகாரத் தலமாகும்.

இக்கோவிலில், ரிஷபத்தின் மீது அமர்ந்து ஞானம் உபதேசிக்கும் தட்சிணாமூர்த்தியைக் காணலாம். இந்த வடிவை மேதா தட்சிணாமூர்த்தி என்பர். பொதுவாக சிவன் கோவில்களில் நந்தி, மூலவரான லிங்கத்திருமேனி முன்பு அமர்ந்திருப்பார். ஆனால் இக்கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு முன்பாக நந்தி காணப்படுவது தனிச்சிறப்பாகும். .இந்த தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி எனப்படுகிறார்.

ஒரு சமயம், ரிஷப தேவர் தன்னைப் பற்றி மிகவும் பெருமிதம் கொண்டார், சிவபெருமானை சுமந்து செல்வதால் தான் மற்றவர்களை விட உயர்ந்தவர் என்று கர்வம் கொண்டார். சிவபெருமான் அவருக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்து, ரிஷப தேவரின் முதுகில் தன்னுடைய சடையின் ஒரு முடியை வைத்தார். ரிஷப தேவர் அந்த ஒரு முடியின் எடையைத் தாங்க முடியாமல், தனது முட்டாள்தனத்தை உணர்ந்தார். சிவபெருமானை வணங்கி மன்னிப்புக் கோரினார். சிவபெருமான் அவரை மன்னித்தது மட்டுமல்லாமல், தெய்வீக அறிவையும் அவருக்கு அருளினார். இங்குள்ள இறைவன் தம் பக்தர்களுக்கு அறிவு, செல்வம், ஆரோக்கியம் ஆகியவற்றை அருளுவதால் வள்ளலார் என்று அழைக்கப்படுகிறார். தமிழ் மொழியில், வள்ளல் என்றால் மிகுதியாக கொடுப்பவர் என்று பொருள். இறைவன் நந்தியின் மீது அமர்ந்து, தன் எதிரில் அமர்ந்திருக்கும் ரிஷப தேவருக்கு அறிவை அருளுகிறார். ரிஷபதேவர், தர்மத்தின் வடிவம். தர்மத்தின் பொருளை உபதேசிக்கும் மேதா தட்சிணாமூர்த்தியுடன், ரிஷப தேவரையும் சேர்த்து வழிபடுவது சிறப்பு. மேதா என்றால் அறிவு அல்லது ஞானம். இந்த கோவிலில், மேதா தட்சிணாமூர்த்தி தனது வலது கையில் 'சின் முத்திரை' மற்றும் இடது கையில் புத்தகம் ஏந்தியவாறு காட்சியளிக்கிறார். குருபகவான் இங்குள்ள தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பக்தர்களுக்கு வரம் அருளும் ஆற்றல் பெற்றதால் இத்தலம் குரு பரிகாரத் தலமாக விளங்குகின்றது. அதனால் குருபெயர்ச்சி இங்கு ஒரு முக்கியமான திருவிழாவாகும். குருபெயர்ச்சியின் போது தொலைதூர மற்றும் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் இங்கு திரளுவார்கள்

காவிரியில் நந்தி நீராடிய இடம், ரிஷப தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. ஆற்றின் நடுவே நந்திக் கோவில் உள்ளது. இங்கு நீராடினால் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, தாமிரபரணி ஆகிய ஆறுகளில் நீராடிய பலன் கிடைக்கும். அவ்வாறே குருசேத்திரம்,பிரயாகை ஆகிய இடங்களில் தானம் செய்ததற்கு நிகரான பலன் கிடைக்கும்.

Read More
மணக்கால் அய்யம்பேட்டை சேஷபுரீஸ்வரர் கோவில்

மணக்கால் அய்யம்பேட்டை சேஷபுரீஸ்வரர் கோவில்

கையில் வளையல், காலில் கொலுசு, மெட்டியுடன் காணப்படும் அபூர்வ அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தி

திருவாரூர்-கும்பகோணம் பேருந்து சாலையில், 10 கி.மீ. தொலைவில் உள்ள மணக்கால் அய்யம்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ளது சேஷபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் அந்தப்புர நாயகி.

வழக்கமாக சிவாலயங்களில் தட்சிணாமூர்த்தி இறைவன் கருவறையின் சுற்றுச்சுவரில் தெற்கு முகமாக எழுந்தருளி இருப்பார். ஆனால் இக்கோவிலில் தட்சிணாமூர்த்தி மகாமண்டபத்தில், இறைவனுக்கும் இறைவிக்கும் நடுவில் எழுந்தருளி இருக்கிறார். இது ஒரு அரிய அமைப்பாகும். இங்குள்ள தட்சிணாமூர்த்தி, சரஸ்வதிக்கு ஞானத்தையும், லக்ஷ்மிக்கு ஞானத்தையும் வழங்கியதால், இத்தலத்தில் சிறப்பு வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். மகாமண்டபத்தின் வெளிப்புற மேற்குச் சுவரின் இடது மற்றும் வலதுபுறத்தில் லட்சுமியும் சரஸ்வதியும் இருப்பதற்கு இதுவே காரணம். மேலும் சரஸ்வதி தன் கையில் வீணை இல்லாமல் காட்சியளிக்கிறார்.

இத்தலத்து தட்சிணாமூர்த்தி அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் காட்சியளிப்பது ஒரு தனி சிறப்பாகும். அவரது சுருண்ட தலைமுடியும், திருமேனியை அலங்கரிக்கும் ஆபரணங்களும், மார்பில் இருக்கும் முப்புரி நூலும் பார்ப்பவரை பரவசமடையச் செய்யும். அவரது புன்முறுவல் பூத்த முகமும், இடப்பாகம் மிளிரும் பெண்மையின் நளினமும் தெய்வீகத் தன்மை கொண்டவையாக இருக்கின்றது. அவரது கையில் வளையலும், காலில் கொலுசும், கால் விரல்களில் மெட்டியும் காணப்படுவது ஒரு அபூர்வமான தோற்றமாகும்.

Read More
நெடுங்குணம் தீர்த்தாஜலேஸ்வரர் கோவில்

நெடுங்குணம் தீர்த்தாஜலேஸ்வரர் கோவில்

யோகநிலையில் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வ கோலம்

திருவண்ணாமலையில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள தலம் நெடுங்குணம் தீர்த்தாஜலேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பாலாம்பிகை. சுகப் பிரம்மரிஷி வழிபட்ட தலம் இது.

இக்கோவிலில் 64 சிவ மூர்த்தங்களில் ஒன்றான யோக தட்சிணாமூர்த்தி எழுந்தருளி இருக்கிறார். பிரம்ம தேவரின் மகன்களான சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் தட்சிணாமூர்த்தியாக, சிவபெருமான் உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்போது யோக நிலையைப் பற்றியும் எடுத்துரைக்க நால்வரும் வேண்டினார்கள். அவர்களின் வேண்டுதல்களை ஏற்று யோகம் பற்றியும் அதன் உட்கருத்துப் பற்றியும் சிவபெருமான் எடுத்துரைத்தார்.

பிரம்ம தேவரின் மகன்களான சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் தட்சிணாமூர்த்தியாக, சிவபெருமான் உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்போது யோக நிலையைப் பற்றியும் எடுத்துரைக்க நால்வரும் வேண்டினார்கள். அவர்களின் வேண்டுதல்களை ஏற்று யோகம் பற்றியும் அதன் உட்கருத்துப் பற்றியும் சிவபெருமான் எடுத்துரைத்தார். ஆனால் சனகாதி முனிவர்களுக்கு மனம் ஒருமுகப்படாததால் தெளிவு ஏற்படவில்லை.இதனால் சிவபெருமான் தாமே யோக நிலையில் அமா்ந்து மெளனத்தின் மூலமாக ஞானமும் நிஷ்டையும் கைகூடும் தன்மையை போதித்து அருளினாா். சிவபெருமானின் இத்திருக் கோலத்தை 'யோக தட்சிணாமூா்த்தி' என்று புராணங்கள் போற்றுகின்றன. யோக தட்சிணாமூர்த்தியின் கோலம் அரிதானது. இரு பாதங்களையும் குத்திட்டு, குறுக்காக வைத்து, யோகபட்டயம் தரித்து, முன் இரண்டு கரங்களையும் முழங்கால்கள் மீது நீட்டி, பின் இரண்டு திருக்கரங்களில் அட்சய மாலை மற்றும் கமண்டலம் ஏந்தி காட்சி தருகிறார்.

செவ்வாய் தோஷம் தீர்க்கும் யோக தட்சிணாமூர்த்தி

இந்த யோக தட்சிணாமூர்த்தியை இலுப்பெண்ணெய், வேப்பெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவை கொண்டு விளக்கேற்றி வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும். கல்வியில் மேன்மை பெறலாம்.

Read More
கோலியனூர் வாலீஸ்வரர் கோவில்

கோலியனூர் வாலீஸ்வரர் கோவில்

சப்த கன்னியருக்கு உபதேசம் செய்த 'கன்னியர் குரு' தட்சிணாமூர்த்தி

விழுப்புரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது கோலியனூர் வாலீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. கிஷ்கிந்தையின் அரசன் வாலி வழிபட்ட சிறப்பினை உடையது. அதனால் இறைவன் வாலீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார்.

பொதுவாக தட்சிணாமூர்த்தி இறைவன் சன்னதி சுற்றுச்சுவரில், தனது நான்கு சீடர்களுடன் அருள் பாலிப்பார். ஆனால் இத்தலத்தில், தட்சிணாமூர்த்தி சப்த கன்னியருடன் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும். தட்சிணாமூர்த்தி சப்த கன்னியருடன் எழுந்தருளி இருப்பதற்கும் அம்பிகை மகிஷாசுரனை வதம் செய்ததற்கும் தொடர்புண்டு.

மகிஷாசுரன், கருவில் உருவாகாத பெண்ணால் மட்டுமே அழிவு உண்டாக வேண்டுமென்ற வரம் பெற்றிருந்தான். தான் பெற்ற வரத்தால், தேவர்களை துன்புறுத்தினான். தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவன், அம்பிகையிடம், மகிஷாசுரனை வதம் செய்யும்படி கூறினார். அதன்படி அம்பிகை, தன்னிலிருந்து பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி என ஏழு சக்திகளைக் தோற்றுவித்தாள். "சப்தகன்னியர்' எனப்பட்ட இவர்கள் மகிஷாசுரனை அழித்தனர். இதனால் அவர்களுக்கு தோஷம் உண்டானது.

இந்த தோஷம் நீங்க, கயிலாயம் சென்று சிவனை வேண்டினர். .இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் கோலியனூர் எனும் தலத்தில் தன்னை வழிபட்டு வரும்படியும், குறிப்பிட்ட காலத்தில் தோஷ நிவர்த்தி செய்வதாகவும்கூறினார். சப்த கன்னியர்களை பாதுகாக்க தன்னுடைய அம்சமான வீரபத்திரனை உடன் அனுப்பி வைத்தார். இத்தலத்தில் சப்த கன்னியருக்கு தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து உபதேசம் செய்து கொலைப்பாவத்தினை நீக்கினார். அவர்களுக்கு விமோசனம் தந்து, சிவாலயங்களில் அம்பிகையின் காவலர்களாகவும் இருக்க அருள்பாலித்தார். இதன் அடிப்படையில் இத்தலத்தில், சப்தகன்னியர் தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் கோலத்தில் காட்சி தருகின்றனர். இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். சப்தகன்னியருக்கு அருளியவர் என்பதால் இவரை, "கன்னியர் குரு' என்று அழைக்கிறார்கள். வீரபத்திரர் சப்த கன்னியரின் பாதுகாப்பிற்காக இங்கு வந்தபோது, அவர் ரிஷபத்தில் வந்தார். இந்த நந்தி கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. நந்தி அருகில் கொடிமரம் உள்ளது.

பொதுவாக தட்சிணாமூர்த்தியை, வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்வார்கள். ஆனால், பக்தர்கள் இங்கு தினமும் பூஜை செய்து வழிபடுகிறார்கள். பிராமிக்கு உரிய அதிதேவதை பிரம்மா. எனவே, தலைவிதி சரியில்லை என வருந்துபவர்கள் மன அமைதி கிடைக்கவும், கல்வியில் சிறப்பிடம் பெறவும் ஞாயிற்றுக் கிழமைகளில் இவளை வழிபடுகிறார்கள். மகேசுவரிக்குரிய அதிதேவதை சிவன் என்பதால், முக்தி கிடைக்க சிவனுக்குரிய திங்கட்கிழமைகளில் இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். கவுமாரிக்குரிய அதிதேவதை முருகன் என்பதால், இவளிடம் செவ்வாய் தோஷ நிவர்த்திக்காக வேண்டுகிறார்கள். குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக சனிக்கிழமைகளில் வைணவியையும், தீராத நோய்கள் விரைவில் குணமாக புதன்கிழமையில் வாராகியையும், தோஷ நிவர்த்தி பெற வியாழக்கிழமைகளில்

இந்திராணியையும், திருமணத்தடை நீங்க வெள்ளிக்கிழமைகளில் சாமுண்டியையும் வழிபடுகிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு கன்னியரையும் வணங்கும் போது அவர்களுடன், தட்சிணாமூர்த்திக்கும் நைவேத்யம் படைக்கிறார்கள். இதனால், தங்களின் குருவின் கட்டளைப்படி பக்தர்களுக்கு சப்தகன்னியர் அருளுவதாகச் சொல்கிறார்கள். பஞ்சமி திதியன்று, சப்தகன்னியருடன் உள்ள வீரபத்திரருக்கு விசேஷ பூஜை நடக்கும்.

Read More
திரிசூலம் திரிசூலநாதர் கோவில்

திரிசூலம் திரிசூலநாதர் கோவில்

அபூர்வ கோலத்தில் கோலத்தில்அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தி

சென்னை விமான நிலையம் எதிரில் அமைந்துள்ள திரிசூலம் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திரிசூலநாதர் கோவில். கோவிலின் பிரதான அம்பிகையான திரிபுரசுந்தரி அம்மன் தனிச் சன்னதியிலும், மற்றொரு அம்பிகையான சொர்ணாம்பிகை மூலவர் திரிசூல நாதரின் கருவறையிலும் எழுந்தருளி இருக்கிறார்கள்.

இறைவன் கருவறையின் சுற்றுச்சுவரில், தட்சிணாமூர்த்தி வலது காலை முயலகன் மீது ஊன்றி, தனது இடது காலை குத்திட்டு வைத்திருக்கிறார். வழக்கமாக அவர் ஒரு காலை மடித்தும், மற்றொரு காலை தொங்கவிட்டும் இருக்கும் நிலையிலிருந்து மாறுபட்டு இப்படி இடது காலை குத்திட்டு அமர்ந்திருப்பது ஒரு அபூர்வ காட்சியாகும். இப்படி அமர்ந்திருக்கும் கோலத்தினால், அவர் வீராசன தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். மேலும் வலது செவியில் மகர குண்டலமும், இடது செவியில் பத்ர குண்டலமும் அணிந்து காட்சி தருவதால் தட்சிணாமூர்த்தி, இங்கே அர்த்தநாரீஸ்வர கோலத்தில் வீற்று இருக்கிறார். தட்சிணாமூர்த்திக்கு கீழேயுள்ள சீடர்கள், வழக்கமான அஞ்சலி முத்திரையுடன் இல்லாமல், சின்முத்திரை காட்டியபடி இருக்கின்றனர். இதுவும் ஒரு அபூர்வமான அமைப்பாகும்.

Read More
ஆமூர் ரவீஸ்வரர் கோவில்

ஆமூர் ரவீஸ்வரர் கோவில்

புதுமண தம்பதிகள் வணங்க வேண்டிய திருவதன தட்சிணாமூர்த்தி

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஆமூர் ரவீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவள்ளி. இத்தலத்து இறைவனை வழிபட்டு சூரியபகவான் தன்னுடைய அதீத உஷ்ணத்தை குறைத்துக் கொண்டார். எனவே இத்தலம் சூரிய தோஷம், பித்ரு தோஷம், ஜாதக தோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரத்தலமாக விளங்குகின்றது.

இத்தல தட்சிணா மூர்த்தியை சித்தர்கள், திருவதன தட்சிணாமூர்த்தி என்று அழைக்கிறார்கள். காலவ மகரிஷி, இத்தல ஈசனின் திருவடிகளில் அமர்ந்து தொடர்ந்து தவமியற்றி, தினமும் தன்னுடைய தவ சக்திகளை லட்சுமி தேவியாக திருவிடந்தை பெருமாளுக்கு மண முடித்து வைத்தார். இவ்வாறு முதன் முதலில் திருவிடந்தை பெருமாள் திருமகளை திருமணம் புரிந்த போது, லட்சுமியின் தந்தையான காலவ மகரிஷியின் ஆசியைப் பெறவும், இறைவனுக்கு நன்றி தெரிவிக்கவும், பெருமாள் தம்பதி சமேதராக ஆமூர் திருத்தலத்திற்கு எழுந்தருளினார். அப்போது தட்சிணா மூர்த்தி திருமணத்திற்குப் பின் தம்பதிகள் ஒருவரையொருவர் எப்படி பார்த்து அன்புடன் புன்னகை புரிய வேண்டும் என்று தானே புன்னகை புரிந்து ஆசி வழங்கினாராம். அந்த தெய்வீக காட்சியைக் கண்ட தேவர்கள் எல்லாம் மணம் குளிர்ந்து தட்சிணா மூர்த்தி, காலவ மகரிஷி, பெருமாள் தம்பதிகள் மேல் மலர்கள் தூவி வணங்கினார்கள். அன்று முதல் ஆமூர் திருத்தல தட்சிணா மூர்த்தி, திருவதன தட்சிணா மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். திருவதன தட்சிணா மூர்த்தியைப் போல பெருமாளும், லட்சுமி தேவியும் புன்னகை புரிய அப்போது தோன்றியதே பெருமாளின் அழகிய மணவாளன் தரிசனம். திருமணமானவர்கள் முதன் முதலில் தரிசனம் செய்ய வேண்டிய மூர்த்தியே திருவதன தட்சிணா மூர்த்தி ஆவார். இங்கு தரிசனம் பெறும் புதுமணத் தம்பதிகளுக்கு மற்றோர் ஈடு இணையற்ற பாக்கியமும் காத்திருக்கிறது. தம்பதிகள் ஸ்ரீதிருவதன தட்சிணாமூர்த்தியையும், காலவ மகரிஷியையும் வணங்கும்போது அது குபேர திசையான வடக்கு நோக்கி அமைவதால் காலவ மகரிஷியின் 360 திருமகள் தேவிகளின் ஒருமித்த லட்சுமி கடாட்ச சக்திகளுமே அவர்கள் மேல் குபேர நிதியாக பொழியும்.

Read More
திருப்பாற்றுறை ஆதிமூலநாதர் கோவில்

திருப்பாற்றுறை ஆதிமூலநாதர் கோவில்

நடனமாடிய கோலத்தில் இருக்கும் வீணை தட்சிணாமூர்த்தி

திருச்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருப்பாற்றுறை. இறைவன் திருநாமம் ஆதிமூலநாதர். இறைவியின் திருநாமம் மேகலாம்பிகை, நித்யகல்யாணி. கொள்ளிடம், காவிரி ஆகிய இரு ஆறுகளுக்கு மத்தியில் இக்கோவில் அமைந்திருக்கிறது.

நந்தியும், பலிபீடமும் கோவில் கோபுரத்திற்கு வெளியே இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

தல வரலாறு

இப்பகுதியை ஆண்ட சோழன், இவ்வழியாக வேட்டைக்கு சென்றபோது தன் படைகளுடன் சற்று நேரம் ஓய்வெடுத்தான். அப்போது அருகிலுள்ள புதரில் இருந்து வெண்ணிற அதிசய பறவை பறந்து சென்றது. மன்னன் அப்பறவையின் மீது ஆசைகொண்டு அம்பு எய்தான். ஆனால், தப்பி விட்டது. சிலநாட்கள் கழித்து மன்னன் மீண்டும் இவ்வழியாக சென்றபோது, முன்பு பார்த்த அதே பறவை பறப்பதைக் கண்டான். புதர் தானே அதன் இருப்பிடம், அங்கு வந்ததும் பிடித்து விடலாம் எனக் கருதி மறைந்திருந்தான். அந்த இடம் முழுதும் பால் மணம் வீசியது. பறவை வரவே இல்லை. சந்தேகப்பட்ட மன்னன் புதரை வெட்டினான். ஒரு புற்று மட்டும் இருந்தது. புற்றை தோண்டியபோது, பால் பீறிட்டது. பயந்த மன்னன் அரண்மனைக்கு திரும்பி விட்டான். அன்றிரவில் அவனது கனவில் அசரீரியாக ஒலித்த சிவன், பால் வெளிப்பட்ட இடத்தில் தான் லிங்க வடிவில் இருப்பதாக கூறினார். அதன்பின் மன்னன் இவ்விடத்தில் கோவில் கட்டி வழிபட்டான். பால் பொங்கிய இடத்தில் இருந்து வெளிப்பட்டதால், சுவாமி ‘பாற்றுறை நாதர்’என்றும், தலம் ‘பாற்றுறை’ (பால்துறை) என்றும் பெயர் பெற்றது.

அற்ப ஆயுள் பெற்றிருந்த மார்க்கண்டேயர், ஆயுள்விருத்திக்காக சிவனை வேண்டி யாத்திரை சென்றார். அவர் இங்கு வந்தபோது லிங்கத்துக்கு பூஜை செய்ய தீர்த்தம் இல்லை. சுற்றிலும் தண்ணீர் கிடைக்காத நிலையில், லிங்கத்தின் தலையில் இருந்து பால் பொங்கி, தானாகவே அபிஷேகமானது.

வீணை தட்சிணாமூர்த்தி

கருவறை சுற்றுச்சுவரில் தட்சிணாமூர்த்தி வீணை வாசிக்கும் கோலத்தில் இருக்கிறார். அவரது இடது கால் சற்றே மடங்கி நளினமாக இருக்கிறது. இதனை, வீணையின் இசைக்கேற்ப நடனமாடிய கோலம் என்கிறார்கள். அருகே சீடர்கள் இல்லை. தட்சிணாமூர்த்தியின் இந்த வித்தியாசமான கோலத்தைக் காண்பது மிகவும் அபூர்வம். இசைக்கலைஞர்கள் இவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

Read More
மூவலூர் மார்க்க சகாயேசுவரர் கோவில்

மூவலூர் மார்க்க சகாயேசுவரர் கோவில்

யானை. மான், ரிஷபம், சிம்மம் ஆகியவற்றின் மேல் வீற்றிருக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி

மயிலாடுதுறைக்கு மேற்கே 6 கி.மீ தூரத்தில், மூவலூர் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் மார்க்க சகாயேசுவரர். இந்த ஆலயத்தில் சவுந்திர நாயகி, மங்களாம்பிகை என்ற இரண்டு அம்பிகைகள் எழுந்தருளியிருக்கிறார்கள்.

பொதுவாக சிவாலயங்களில், இறைவன் கருவறையின் சுற்றுச்சுவரில் எழுந்தருளியிருக்கும் தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன் இருக்க, சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் என நான்கு சீடர்களுடன் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில் தட்சிணாமூர்த்தியின் காலடியில் யானை முகம், மான், ரிஷபம், சிம்மம் ஆகியவற்றோடு முயலகனும், சனகாதி முனிவர்களும் இருப்பது ஒரு வித்தியாசமான அமைப்பாகும். இத்தகைய தட்சிணாமூர்த்தியின் தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

Read More
லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில்

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில்

கைகளில் வீணையோடு நின்ற கோலத்தில் காட்சி தரும் வீணா தட்சிணாமூர்த்தி

திருச்சியில் இருந்து அரியலூர் செல்லும் வழியில், 23 கி.மீ. தொலைவில் உள்ள தலம் லால்குடி. இறைவனின் திருநாமம் சப்தரிஷீஸ்வரர். இறைவனின் திருநாமம் சப்தரிஷீஸ்வரர். இறைவியின் திருநாமம் பெருதிருப்பிராட்டியார். இவ்வூர் பக்கம் படையெடுத்து வந்த முகமதிய மன்னன் மாலிக் கபூர் இத்திருக்கோவிலின் சிவப்பு கோபுரத்தை கண்டு உருதுமொழியில் லால்குடி (லால் – சிவப்பு, குடி – கோபுரம்) என்று அழைக்க, அதுவே இவ்வூருக்கு பெயராகி அழைக்கபடுகிறது.

இத்தலத்தில் வீணையைக் கையிலேந்தி, சற்றே வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கின்றார் தட்சிணாமூர்த்தி. இவரை 'வீணா தட்சிணாமூர்த்தி' என்றே தலபுராணம் குறிப்பிடுகின்றது. இசைக்கு தலைவன் சிவபெருமான். இதை உணர்த்தும் வகையில் அழகிய சடை முடியோடும், கைகளில் வீணையோடும், நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் இத்தலத்து தட்சிணாமூர்த்தி.

பிரார்த்தனை

இவரை வணங்கினால் உயர்பதவி, கல்வியில் முன்னேற்றம், நினைத்த படிப்பு படிக்கும் அமைப்பைக் கொடுப்பார். வியாழக் கிழமைகளில் இவருக்கு சந்தனக் காப்பிட நினைத்தக் காரியம் கைகூடும். வெண்தாமரை அர்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் கொடுக்க மனம் ஒருமுகப்படும். மேலும் இவர்க்கு தேனாபிசேகம் செய்தால் தேன் போன்ற இனிமையான குரல்வளம் கிடைக்கும்.

Read More
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்

குரு தட்சிணாமூர்த்தி பரிகார தலம்

கும்பகோணத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் ஆலங்குடி. தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் இந்த இடத்திற்கு ஆலங்குடி என்று பெயர் வந்தது. இறைவன் திருநாமம் ஆபத்சகாயேஸ்வரர். இறைவியின் திருநாமம் ஏலவார்குழலி.

இத்தலம் சிறந்த குரு தட்சிணாமூர்த்தி பரிகார தலமாக விளங்குகிறது. இந்த தலத்தில் சிறப்புடைய குரு தட்சிணாமூர்த்தி, இறைவனின் தெற்கு சுற்றுச் சுவரில் எழுந்தருளியுள்ளார். தட்சிணாமூர்த்தி உற்சவராகத் தேரில் பவனி வருவது தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டும்தான் என்பது கூடுதல் சிறப்பாகும். சித்ரா பௌர்ணமி அன்று பத்து நாள் உற்சவ விழாவும், தட்சிணாமூர்த்திக்குத் தேர்த் திருவிழாவும் நடைபெறுகிறது.

குரு தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்து 24 நெய் தீபங்கள் ஏற்றி வழிபட குரு தோஷங்கள் நீங்கி நன்மை பெறலாம் என்பது ஐதீகம். குருபகவானுக்கு முல்லை மலரால் அர்ச்சனை, மஞ்சள் வஸ்திரம் சாத்துதல், கொண்டைக்கடலை சுண்டல், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியங்களுடன் சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பாலாபிஷேகம், குரு ஹோமம் செய்ய சகல தோஷங்களும் நிவர்த்தியாகி அவருடைய அருள் கிடைக்கும்.

வாரந்தோறும் வியாழக்கிழமை, தினசரி வரும் குரு ஹோரை மற்றும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்கள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் குரு பகவானை வழிபடுதல் சிறந்தது.

Read More
திருக்காலிமேடு சத்தியநாதர்  கோவில்

திருக்காலிமேடு சத்தியநாதர் கோவில்

ஏழு சீடர்களுடன் காட்சி தரும் அபூர்வ தட்சிணாமூர்த்தி

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருநெறிகாரைக்காடு. இத்தலம் திருக்காலிமேடு என்று தற்போது அழைக்கப்படுகின்றது. இறைவன் திருநாமம் சத்தியநாதர். இத் தலம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கும் முற்பட்டது.

காஞ்சீபுரத்தின் ஆதி கோவிலான இத்தலத்தில், இறைவன் திருமேனி மணலால் ஆனது. காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோவிலே எல்லா சிவன் கோவில்களுக்கும் பொதுவான அம்பிகை சன்னதியாக விளங்குகின்றது. அதனால் தனிப்பட்ட அம்பிகை சன்னதி எந்த சிவன் கோவிலிலும் கிடையாது. ஆனால் இக்கோவிலில் பிரமராம்பிகை என்ற திருநாமத்துடன், அம்பிகை உற்சவ திருமேனியாக எழுந்தருளி இருக்கிறாள். அம்பிகையின் உலோகத் திருமேனியின் வலது கரத்தில் மச்ச ரேகையும், தான்ய ரேகையும், மீனின் வடிவம் மற்றும் நெற்கதிர் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது ஒரு தனிச்சிறப்பாகும்.

பொதுவாக தட்சிணாமூர்த்தி, இறைவனின் கருவறை சுற்றுச்சுவரில் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களுடன் எழுந்தருளி இருப்பார். ஆனால் இந்தத் தலத்தில் தட்சிணாமூர்த்திப் பெருமான் ஏழு சீடர்களுக்கு ஞானம் தருவதாக அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு வித்தியாசமான அமைப்பாகும். இவரிடம் வேண்டிக்கொண்டால் தெளிந்த ஞானம் பிறக்கும்.

Read More
துடையூர் விஷமங்களேஸ்வரர் கோவில்

துடையூர் விஷமங்களேஸ்வரர் கோவில்

கண்பார்வை பிரச்சனைகளை தீர்க்கும் வீணாதர தட்சிணாமூர்த்தி

திருச்சிக்கு அருகே, தேவாரத் தலமான திருவாசிக்கு மிக அருகில் அமைந்துள்ள தேவார வைப்புத் தலம் துடையூர், இறைவனின் திருநாமம் விஷமங்களேஸ்வரர் . அம்பிகையின் திருநாமம் வீரமங்களேஸ்வரி என்ற மங்களநாயகி.

சுவாமி சந்நிதியை வலம் வரும்போது கோஷ்டத்தில் நின்ற கோலத்தில் 'வீணாதர தட்சிணாமூர்த்தி' காட்சி தருகிறார். இவர் கரங்களில் ஏந்தியிருப்பது 'திகி சண்டளா வீணை' என்பதால், 'திகி சண்டளா வீணாதர தட்சிணாமூர்த்தி' எனப்படுகிறார். இப்படி நின்ற கோலத்தில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தியை காண்பது மிக அரிது. இவருடைய வீணையின் இசைக்கேற்ப, இவருக்கு அருகில் ஒரு பூத கணம் உடுக்கை அடித்துக் கொண்டும், ஒரு பெண்மணி தாளம் போட்டுக் கொண்டும் காட்சி தருகிறார்கள்.

இவர் கண்களுக்கு ஒளி தரும் நரம்புகளைக் காக்கக் கூடியவர். எனவே, கண் பிரச்னை உள்ளவர்கள், இங்கே வந்து இந்த வீணாதர தட்சிணாமூர்த்தியை தரிசித்து மனதாரப் பிரார்த்தித்தாலே போதும். பார்வை பிரகாசமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்தச் சந்நிதியில் செவ்வாய், புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமைகள் விசேஷமானவை. உயர்கல்வி, குடும்ப நலன், மருத்துவச் சிகிச்சை போன்ற வேண்டுதல்களுக்காக, இத்தினங்களில் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.

Read More
பாமணி நாகநாத சுவாமி கோவில்

பாமணி நாகநாத சுவாமி கோவில்

நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து இருக்கும் தட்சிணாமூர்த்தி

மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் பாமணி. இறைவன் திருநாமம் நாகநாத சுவாமி. இறைவியின் திருநாமம் அமிர்தநாயகி.

இத்தலத்தில் குருபகவான் நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து சிம்ம தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிப்பதால், இவரை வழிபடுபவர்களுக்கு சிம்ம குருவின் அருள் கிடைக்கும். ஒருமுறை தட்சிணாமூர்த்தியின் சீடர்கள் நால்வரும் விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் சென்றார்கள். அப்போது இவர்களை துவார பாலகர்கள் தடுத்தனர். கோபம் கொண்ட முனிவர்கள், அவர்களுக்கு சாபம் கொடுத்தனர். இதனால் முனிவர்களுக்கு தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நீங்க பாமணி நாகநாதரையும், சிம்ம தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு தங்கள் தோஷம் நீங்கப் பெற்றனர்.

சிம்மம், கும்பம், கடகம், தனுசு, மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்களும், லக்னத்திற்குரியவர்களும் சிம்ம தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சிறப்பான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.

Read More