திருப்பந்துறை சிவானந்தேசுவரர் கோவில்

அர்த்தநாரீசுவரர் மற்றும் வீணாதர தட்சிணாமூர்த்தி கோலத்தில், கோவில் விமானத்தில் தட்சிணாமூர்த்தி இருக்கும் அரிய காட்சி

கும்பகோணத்திலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருப்பேணுபெருந்துறை. தற்போது 'திருப்பந்துறை' என்று அழைக்கப்படுகிறது. இறைவனின் திருநாமம் சிவானந்தேசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. பொதுவாக ஒரு சில ஆலயங்களில், மூலவர் இருக்கும் சன்னிதிக்குள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நாளில்தான் சூரியனின் கதிர்கள் விழும். ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள மூலவர் சிவலிங்கத்தின் மீது தினந்தோறும் சூரியனின் கதிர்கள் படர்வது, வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.

பொதுவாக சிவாலயங்களில் கருவறை சுற்றுச்சுவரில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி, இக்கோவில் சுவாமி கருவறை விமானத்தின் மேல் கல்லால மரத்தின் கீழ், ஆசனங்கள் ஏதும் இன்றி, வலது கையை ஊன்றி உடலை சற்றே சாய்த்து, சாவகாசமாக அமர்ந்திருக்கிறார். அது மட்டுமல்ல, தட்சிணாமூர்த்தியின் உருவம் வலது பக்கம் ஆணைப் போன்ற தோற்றமும், இடது பக்கம் பெண்ணைப் போன்ற தோற்றமும் கொண்டு அர்த்தநாரீசுவரர் கோலத்தில் எழுந்தருளி இருப்பது, வேறு எங்கும் காணக் கிடைக்காத அரிய காட்சியாகும். சுற்றிலும் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற அவரது மாணவர்கள் இருக்கின்றனர். இங்கு, தட்சிணாமூர்த்தியின் உடலில் பார்வதியும் இருந்து, பாடம் கேட்பதாக ஐதீகம். இவரை, 'சிவசக்தி தட்சிணாமூர்த்தி' என்கின்றனர்.

இந்த அர்த்தநாரீசுவர தட்சிணாமூர்த்தி இருக்கும் மாடத்தின் கீழேயே, வீணாதர தட்சிணாமூர்த்தி கையில் வீணையுடன், தனது நான்கு சீடர்களுடன் காட்சி தருகிறார். இப்படி அர்த்தநாரீசுவர தட்சிணாமூர்த்தியும், வீணாதர தட்சிணாமூர்த்தியும் ஒருசேர கோவில் விமானத்தில் காட்சி தருவது வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

முருகப்பெருமானின் தோஷம் நீங்கிய தலம் (18.08.2021)

https://www.alayathuligal.com/blog/xamthlj325b4jgpye37wywzzk4caeh

படங்கள் உதவி : திரு நாகராஜன் குருக்கள், ஆலய அர்ச்சகர்

அர்த்தநாரீசுவர தட்சிணாமூர்த்தி

வீணாதர தட்சிணாமூர்த்தி

 
Previous
Previous

குற்றாலம் சித்திரசபை கோவில்

Next
Next

தாமல் தாமோதரப் பெருமாள் கோவில்