திருச்சிற்றம்பலம் புராதனவனேசுவரர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

திருச்சிற்றம்பலம் புராதனவனேசுவரர் கோவில்

பூவை விழுங்கும் விநாயகர்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில், 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருச்சிற்றம்பலம் என்ற திருத்தலம். இறைவன்

திருநாமம் புராதனவனேசுவரர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இக்கோவில் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.

திருவாரூரில் பிறந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. அந்த வகையில் இந்த திருச்சிற்றம்பலத்து மண்ணை உடலில் பூசிக்கொண்டால் முக்தி கிடைக்கும் என்கிறார்கள்.

இக்கோவிலில் பெரியநாயகி அம்மன் சன்னதியை வலம் வரும் இடத்தில், பூவிழுங்கி விநாயகர் என்ற பெயரில் பழம் பெருமை வாய்ந்த விநாயகர் உள்ளார்.

அம்மன் சன்னதியை வலம் வருவோர் இவரது செவியில் உள்ள துவாரங்களில் தமது வேண்டுதல்களை மனதில் நினைத்து பூக்களை வைக்கிறார்கள். காதில் வைக்கப்படும் பூவை இவ்விநாயகர் காதுக்குள் இழுத்துக் கொண்டால் நமது வேண்டுதல் நிறைவேறும், நினைத்த காரியம் கைகூடும். காரியங்கள் நிறைவேறாது என்றால் செவிகளில் வைத்த பூக்கள் அப்படியே வைத்தவாறே இருக்கும்.பக்தர்களின் நம்பிக்கையாக இன்றும் பூ வைக்கும் பழக்கம் இருக்கிறது. இந்த விநாயகரால் இத்தலத்தின் பெயரே பூவிழுங்கி விநாயகர் கோவில் என்றே மருவி வருகிறது.

Read More
மணிக்குடி பஞ்சவர்ணேஸ்வரர் கோவில்

மணிக்குடி பஞ்சவர்ணேஸ்வரர் கோவில்

புற்றுநோய்க்கு மருந்தாகும் அபிஷேகப் பால்

கும்பகோணம் அணைக்கரை சாலையில் அமைந்துள்ள திருப்பனந்தாள் என்னும் தேவாரத் தலத்திலிருந்து, தென்கிழக்கே 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மணிக்குடி கிராமம். இத்தலத்து இறைவன் திருநாமம் பஞ்சவர்ணேஸ்வரர். இறைவியின் திருநாமம் பிரகன் நாயகி.    1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில் இது.

ஒரு சமயம் சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜப் பெருமானுக்கும், காளி தேவிக்கும் நடனப் போட்டி ஏற்பட்டது. நடராஜப் பெருமான் நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது, அவரது கால் சிலம்பிலிருந்து ஒரு மரகதப் பச்சை மணி தெறித்து ஓடியது. அந்த மரகத பச்சை மணி விழுந்த இடம் தான் மணிக்குடி. விழுந்த மரகதப்பச்சை மணி சுயம்பு லிங்கமாக மாறியது. அந்த சுயம்பு லிங்கத் திருமேனியின் திருநாமம் தான் பஞ்சவர்ணேஸ்வரர். தான் சுயம்புவாக உருவாகி இருப்பதை சிவபெருமான் தேவர்களுக்கு அசரீரி மூலம் உணர்த்தினார். மேலும் அவர்களுக்கு ஐந்து வண்ணங்களோடு காட்சி தந்தார். இத்தலத்தில் விஷ்ணு ஏற்படுத்திய விஷ்ணு தீர்த்தம் கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ளது.

இத்தலத்தில் பஞ்சவர்ணேஸ்வரருக்கு காலை, மாலை இரு வேளையும் செய்யப்படும் பசும்பால் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அப்படி அபிஷேகம் செய்து, அந்தப் பாலை சிறிது பிரசாதமாக உட்கொண்டால், கேன்சர் என்று சொல்லப்படும் புற்றுநோயின் பாதிப்பு வெகுவாக குறையும். அதுமட்டுமல்ல, எத்தகைய தீராத நோயால் அவதிப்படுபவர்களும் மணிக்குடி கிராமத்திற்கு வந்து இத்தல இறைவனுக்கு பசும்பால் அபிஷேகம் செய்து, அதை பிரசாதமாக பருகினால், அவர்களது நோயும் குணமாகிவிடும். இப்படி அபிஷேகப் பால், அனைத்து நோய்களுக்கும் அருமருந்தாக விளங்குவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

இதனால் ஏராளமான பக்தர்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் கூட இங்கு வந்து தங்கி, அபிஷேக பாலை பருகி தங்கள் புற்று நோயையும் மற்றும் தங்களுக்கு ஏற்பட்ட தீராத நோய்களையும், குணமாக்கிக் கொண்டு செல்கிறார்கள்.

Read More
நாச்சியார் கோயில் திருநறையூர் நம்பி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

நாச்சியார் கோயில் திருநறையூர் நம்பி கோவில்

தாயார் சொல் கேட்டு நடக்கும் பெருமாள்

கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கும் தாயார்

கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ தூரத்தில் திருவாரூர் செல்லும் வழியில் உள்ள திவ்ய தேசம் நாச்சியார் கோயில். பெருமாளின் திருநாமம் சீனிவாசப் பெருமாள். தாயாரின் திருநாமம் வஞ்சுளாதேவி. இத்தலத்தில் உள்ள தாயார், பெருமாளைவிட சற்று முன்புறம் நின்றவாறு உள்ளார். நின்ற கோலத்தில் இருக்கும் தாயார் தரிசனம் இக்கோவிலில் மிகவும் விசேஷமானது ஆகும். இங்குள்ள உற்சவ தாயார் கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கிறாள்.

தாயார், இடுப்பில் சாவிக் கொத்து வைத்திருப்பது, கோயில் நிர்வாகம் அனைத்தும் அவரே நிர்வாகம் செய்கிறார் என்பதை உணர்த்துகிறது.

கோயில் நிர்வாகம் அனைத்தும் தாயாரிடம்தான் என்பதை உணர்த்தும் வகையில் தாயாருடைய இடுப்பில் சாவிக்கொத்து தொங்குகிறது. இதன் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது.

மேதாவி எனும் மகரிஷி மகாவிஷ்ணு மீது தீவிர பக்தி உடையவராக இருந்தார். அவரையே தனது மருமகனாகப் பெற விரும்பி மகாலட்சுமி தனக்கு மகளாக பிறக்க வேண்டி இத்தலத்தில் உள்ள வஞ்சுள மரத்தின் கீழ் தவம் இருந்தார். மேதாவியின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த மகாலட்சுமி, ஒரு பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் அவர் தவம் செய்த மரத்தின் அடியில் சிறுமியாக அவதரித்தாள்.

சிறுமியைக் கண்ட மகரிஷி அவளுக்கு வஞ்சுளாதேவி எனப்பெயரிட்டு வளர்த்து வந்தார். திருமண வயதை அடைந்த அவள், தந்தையின் ஆசிரமத்திலேயே சேவைகள் செய்து வந்தார். மகாலட்சுமியை திருமணம் செய்வதற்காக மகாவிஷ்ணு, சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருதன், புருஷாத்தமன், வாசுதேவன் என ஐந்து வடிவங்கள் எடுத்து பூலோகத்தில் அவளை தேடி வந்தார்.

அவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு திசையாகச் சென்று வஞ்சுளாதேவியை தேடினர். மகாவிஷ்ணுவுடன் வந்த கருடாழ்வார் இத்தலத்தில் மேதாவியிடம் வளர்ந்து வந்த பிராட்டியாரைக் கண்டு, மகாவிஷ்ணுவிடம் தாயார் இருக்குமிடத்தைப் பற்றிக் கூறினார். உடனே மகாவிஷ்ணு அங்கு சென்று வஞ்சுளா தேவியை பெண் கேட்டார். மேதாவி மகாவிஷ்ணுவிடம், தாங்கள் என் மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று விரும்பினால் எப்போதும் நீங்கள் அவள் சொல் கேட்டுத்தான் நடக்க வேண்டும், அவளே அனைத்திலும் பிரதானமானவளாக இருக்க வேண்டும், என நிபந்தனை விதித்தார். மகாவிஷ்ணுவும் ஏற்றுக் கொண்டார். கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தது. அப்போது மகாவிஷ்ணு கருடாழ்வாரிடம், நான் இங்கு என் மனைவி சொல் கேட்பவனாக இருப்பேன். எனவே, நீயே இங்கிருந்து நான் பக்தர்களுக்கு அருளுவதைப் போல அருள் வழங்க வேண்டும் என்றார். கருடாழ்வாரும் ஏற்றுக் கொண்டார். எனவே, இவர் இத்தலத்தில் பிரதான மூர்த்தியாகவும் இடம்பிடித்தார். தாயார் பெயரிலேயே இத்தலம் நாச்சியார் கோயில் என்ற பெயரும் பெற்றது.

Read More
கபிஸ்தலம்  கஜேந்திர வரதப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கபிஸ்தலம் கஜேந்திர வரதப் பெருமாள் கோவில்

யானைக்குத் திருமால் சாப விமோசனம் அருளிய திவ்யதேசம்

கும்பகோணம்-திருவையாறு சாலையில், கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கிமீ தொலைவில் ஊரில் உள்ள கபிஸ்தலம் என்னும் ஊரில் அமைந்துள்ள திவ்யதேசம் கஜேந்திர வரதப் பெருமாள் கோவில். தாயார் திருநாமம் ரமாமணி வல்லி.

கபி என்றால் குரங்கு என்று பொருள். ஸ்ரீஆஞ்சநேயர் கடும் தவம் செய்து பெருமாளின் தரிசனம் பெற்றார் எனவே கபிஸ்தலம் என அழைக்கப்பட்டது.108 திவ்ய தேசங்களில், இது ஒன்பதாவது தலமாகும். தமிழ்நாட்டிலுள்ள பஞ்ச கிருஷ்ண தலங்களில் இத்தலமும் ஒன்று.

இந்திரஜ்யும்னன் என்ற அரசன் சிறந்த விஷ்ணு பக்தனாக விளங்கினான். ஒரு சமயம் அவன் விஷ்ணு வழிபாட்டில் தன்னை மறந்து ஆழ்ந்திருந்த போது அவனைக் காண துர்வாச முனிவர் வந்தார். அரசன் அவரது வருகையை உணரவே இல்லை. தன்னை அரசன் அவமதித்து விட்டதாகக் கோபம் கொண்ட முனிவர் 'முனிவர்களை மதிக்கத் தெரியாத நீ யானையாகப் பிறப்பாய்' எனச் சாபம் கொடுத்து விட்டார். பின் தன்னை மன்னிக்கும்படி வேண்டிய அரசனிடம், 'திருமால் மேல் பக்தி கொண்ட யானைகளுக்கு அரசனாகப் பிறந்து, திருமால் மூலமாக சாப விமோசனம் அடைவாய்' என்று கூறினார்.

ஒரு குளக்கரையில் இருந்த கூஹூ என்ற அரக்கன், குளத்தில் குளிக்க வருவோரையெல்லாம் காலைப் பிடித்து நீருக்குள் இழுப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தான். ஒரு நாள் அங்கு வந்த அகத்தியர் காலையும் நீருக்குள் இழுத்து, அவர் அவனை முதலையாக்கி சாபம் கொடுத்தார். மன்னிப்பு வேண்டி நின்ற அரக்கனுக்கு திருமால் மூலம் சாப விமோசனம் கிடைக்கும் எனக் கூறினார்.

வழக்கம் போல் ஒருநாள் யானைகளின் அரசனான கஜேந்திரன், விஷ்ணுவை வழிபட தாமரைப்பூ எடுப்பதற்கு அக்குளத்திற்குள் சென்றபோது, முதலையாக அங்கிருந்த அரக்கன் கஜேந்திரனின் ஒரு காலைக் கவ்விக்கொண்டான். காலை விடுவித்துக் கொள்ளமுடியாத கஜேந்திரன் திருமாலை 'ஆதிமூலமே காப்பாற்று' என்று அபயக்குரல் கொடுத்தது. திருமாலும் காட்சி தந்து முதலையைச் சக்ராயுதத்தால் கொன்று யானையைக் காப்பாற்றினார். முதலை, யானை இரண்டுமே சாபவிமோசனம் அடைந்தனர். இவ்வாறு யானைக்குத் திருமால் அருளிய தலமே கபிஸ்தலமாகும்.

திருவிழா

ஆடி பௌர்ணமியன்று நடைபெறும் கஜேந்திர மோட்ச லீலை, வைகாசி விசாகத் தேர்த் திருவிழா, பிரம்மோற்சவம் ஆகியவை மூன்றும் இத்தலத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள் ஆகும்.

Read More
கருவளர்சேரி அகஸ்தீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கருவளர்சேரி அகஸ்தீஸ்வரர் கோவில்

மழலைச் செல்வம் அருளும் அகிலாண்டேஸ்வரி

மண்ணால் ஆன சுயம்பு திருமேனி உடைய அம்பிகை

திரையிடப்பட்டு இருக்கும் அம்பிகையின் பாதி திருமேனி

கும்பகோணம் - வலங்கைமான் பாதையில் மருதா நல்லூரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கருவளர்சேரி. இறைவன் திருநாமம் அகஸ்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. அகத்திய முனிவர் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, தனது மனைவி லோப முத்திரையுடன் வழிபட்ட தலம் இது.

இத்தலத்து அம்பிகை அகிலாண்டேஸ்வரி மண்ணால் ஆன சுயம்பு திருமேனி உடையவள். அதனால் அம்பாளுக்கு இங்கு அபிஷேகம் கிடையாது. அர்ச்சனை மூல ஸ்ரீ சக்ர மகா மேரு மற்றும் ஸ்ரீ சக்ரத்திற்கும் செய்யப்படுகிறது. இப்படி மண்ணாலான சுயம்பு திருமேனி உடைய அம்பிகையை நாம் வேறு தளத்தில் பார்ப்பது அரிது. மேலும், அம்பாளின் முழு உருவத்தை சிவராத்திரி மற்றும் நவராத்திரியின் ஒன்பது நாட்களில் மட்டுமே நாம் காண முடியும். மற்ற நாட்களில் அம்பாளின் பாதி உருவம் மட்டுமே பார்க்கும் அளவிற்கு திரையிடப்பட்டு இருக்கும். அதாவது சாதாரண நாட்களில் நாம் அம்பிகையின் முகத்தை மட்டுமே தரிசிக்க முடியும்.

அகிலாண்டேஸ்வரி கரு வளர்க்கும் நாயகி என்று அழைக்கப்படுகிறார் - கரு வளர அருள் புரியும் தெய்வம். கருவில் இருக்கும் சிசுவிற்கு வளர்ச்சி வரம் தருகிறாள். இத்தலத்துக்கு அருகாமையில் உள்ள புகழ் பெற்ற திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலை இந்த ஆலயம் நிறைவு செய்கிறது. கருவைக் காக்கும் தெய்வம் கர்ப்பரட்சாம்பிகை. அந்த அம்பிகை கருவில் இருக்கும் சிசுவிற்கு பாதுகாப்பு அருளுகிறாள். இதனால் கர்ப்பிணிகளுக்கு ஒரு புனித தலத்தில் (கருவளர்சேரி) வளர்ச்சியும், மற்றொரு இடத்தில் (திருக்கருகாவூர்) பாதுகாப்பு வரமும் கிடைக்கும்.

கருவளர்சேரி திருத்தலத்துக்கு வந்து அகிலாண்டேஸ்வரி அம்பிகையை வழிபடுவோருக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் கர்ப்பம் தரித்த பெண்களும் இங்கு வந்து வழிபடுவதால், சிக்கலற்ற பிரசவம் நடக்கும். திருமணமாகி வெகுநாட்களாகியும் குழந்தையில்லாமல் ஏங்கும் பெண்கள் இக்கோவிலுக்கு வந்து அன்னையை மனமுருக வேண்டி, படி பூஜை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபடவேண்டும். வழிபாட்டுக்குப் பின் சன்னிதியில் பூஜை செய்த மஞ்சள் கிழங்கினை வாங்கி வந்து, தொடர்ந்து பூஜித்து வர வேண்டும். இங்கு தரப்படும் மஞ்சள் பிரசாதம் சக்தி வாய்ந்தது. இப்படிச் செய்தால், தடைகளை எல்லாம் நீக்கி, கருவளர் நாயகி மகப்பேற்றை அருள்வாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கர்ப்பிணிகளும் இந்த பூஜையை செய்து பயன்பெறலாம். பூஜை செய்து வழிபட்டுச் சென்ற பெண்கள் சில மாதங்களிலேயே கருவுற்று, மீண்டும் இக்கோவிலுக்கு வந்து தொட்டில், தங்களுக்கு வளைகாப்பு நடைபெறும்போது கொடுக்கப்படும் வளையல் ஆகியவற்றை தங்கள் நேர்த்திக்கடனாக சமர்ப்பிக்கிறார்கள்.

மேலும், கருவளர்சேரிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்யும் அனைவரின் உடல் ரீதியாக உள்ள தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
திருநாரையூர் (நாச்சியார் கோவில்) ஆகாச மாரியம்மன்  கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருநாரையூர் (நாச்சியார் கோவில்) ஆகாச மாரியம்மன் கோவில்

சமயபுரம் மாரியம்மன் அருவமாக எழுந்தருளி இருக்கும் தலம்

கண்ணாடி வளையல்கள், மல்லிகை, முல்லை பூக்களை ஏற்றுக் கொள்வதற்காக ஆகாய மார்க்கமாக வரும் சமயபுரம் மாரியம்மன்

தர்ப்பை புல்லாலான ஆகாச மாரியம்மன்

கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருநாரையூர் ஆகாச மாரியம்மன் கோவில். ஆனால் இந்தக் கோவிலில் ஆகாச மாரியம்மனுக்கு திருவுருவத் திருமேனி கிடையாது. சமயபுரம் மாரியம்மனே இந்த கோவிலில் அருவமாக இருந்த ஆட்சி செய்கிறாள். இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், வைகாசி மாதம் அமாவாசையை அடுத்த வெள்ளிக்கிழமை தொடங்கி, பதிமூன்று நாட்களுக்கு திருவிழா மிகச் சிறப்பாக விழா நடைபெறுகிறது. அப்போது சமயபுரம் மாரியம்மன் ஆகாய மார்க்கமாக இங்கு வந்து, திருவிழாவுக்கு என்று செய்யப்படும் விக்கிரகத்தில் சேர்ந்து தரிசனம் கொடுப்பதாக ஐதீகம். இந்த ஊர் மக்கள் அளிக்கும் கண்ணாடி வளையல்கள், மல்லிகை, முல்லை பூக்களை ஏற்றுக் கொள்வதற்காகவே சமயபுரத்தாள் ஆகாய மார்க்கமாக இந்த ஊருக்கு வந்து திருவிழாவில் கலந்து கொள்கின்றாள். இதன் பின்னணியில் சமயபுரம் மாரியம்மனின் திருவிளையாடல் உள்ளது.

திருநாரையூரில், 600 ஆண்டுகளுக்கு முன்பு, கவரைச் செட்டியார்கள் என்ற வணிக சமூகத்தார், பாரம்பரியமாக கண்ணாடி வளையல் வியாபாரம் செய்து வந்தனர். ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்து வரும் பழக்கத்தை உடைய அவர்கள், ஒருமுறை சமயபுரம் கோவிலுக்கு வந்து இரவு தங்கினர். அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது, ​​சமயபுரம் மாரியம்மன் இளம்பெண் வடிவம் எடுத்து வியாபாரி ஒருவரின் கனவில் தோன்றினாள். வியாபாரி அவள் கைகளுக்கு கண்ணாடி வளையல்களை அடுக்க ஆரம்பித்தார். ஆனால் வளையல்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக உடைந்தது. வியாபாரி குழப்பமடைந்து, இளம்பெண்ணின் கைகளை அலங்கரிக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டார்.

வியாபாரி , 'தாயே, வளையல்கள் அனைத்தும் உடைந்து விடுகிறதே. உனக்குத் தகுந்த வளையல்கள் போட வேண்டும் என்றால் தயவு செய்து நீ எங்கள் ஊருக்கு வா. இரண்டு கைகள் நிறைய வளையல்களைப் போட்டு விடுகிறேன். உனக்கு முல்லை, மல்லிகை மலர்களைச் சூட்டுகிறேன். எங்கள் ஊருக்கு வா தாயே!' என்று அன்புடன் வேண்டினார்.

அதற்கு அந்த இளம்பெண், 'உங்கள் ஊருக்கு வந்தால்தான் வளையல் போடுவாயா? இப்போதே உங்கள் ஊர்காரர்களிடம் எழுந்தருள்கிறேன்' என்று சொல்லிவிட்டு மறைந்தாள். வியாபாரி கனவு கலைந்து எழுந்தார். அருகில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வளையல்கள் அனைத்தும் உடைந்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். தவிர, அவருடன் வந்திருந்த மற்ற வியாபாரிகளுக்கு அம்மை போட்டிருப்பதையும் கண்டார். இது சமயபுரத்தாளின் சோதனை என்பதை அறிந்த அவர், 'எங்களை மன்னித்துவிடு தாயே' என்று கோவிலை நோக்கிக் கைகூப்பினார்.

விடிந்ததும் காலையில் கோவில் குருக்கள் அந்த வியாபாரியிடம்,""ஐயா, வெளியூரிலிருந்து வந்திருக்கும் வளையல் வியாபாரி தாங்கள் தானே? இந்தாருங்கள் பொற்காசு. உடைந்த வளையல்களுக்கு உரிய தொகை. இதை உங்களிடம் சமயபுரத்தாள் கொடுக்கச் சொன்னாள்' என்றார். மேலும், அம்மை கண்டவர்களுக்கு மாரியம்மன் பிரசாதமாக குங்குமத்தை நெற்றியில் பூசினார் குருக்கள். அம்மை கண்டவர்கள் உடனே குணமடைந்து எழுந்தார்கள்.

கனவில் வளையல் போட்டுக் கொள்ள வந்தவள் சமயபுரம் அன்னையே என்பதை உணர்ந்து கொண்ட அவர், மற்றவர்களிடம் கூறவே, அவர்கள் அனைவரும் தங்களுக்கும் அன்னை காட்சி தரவேண்டும் என்று வேண்டினார்கள். அதை ஏற்று அன்னை ஆகாயத்தில் அன்ன வாகனத்தில் காட்சி தந்து அருளாசி வழங்கினாள். அன்னையை தரிசித்த வியாபாரிகள், 'தாயே, எங்கள் ஊருக்கு வந்து அருளவேண்டும்' என்று மனமுருக வேண்டினார்கள்.

சமயபுரம் மாரியம்மன் அவர்களிடம், 'உங்கள் ஊர் எது?' என்று கேட்க, 'நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் திருநாரையூர்" என்றனர். அவர்களது பக்தியை மெச்சிய அன்னை, ""முல்லைக்கும் மல்லிக்கும், முன்கை வளையல்களுக்கும் ஆண்டுதோறும் வைகாசி மாத அமாவாசைக்கு அடுத்த வெள்ளிக்கிழமை சமயபுரத்திலிருந்து ஆகாச மார்க்கமாக திருநாரையூருக்கு வந்து, பத்து நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் சமயபுரம் திரும்பிவிடுவேன்' என்று அருளினாள்.

சமயபுரத்தாள் சொன்னதுபோல் ஒவ்வொரு வருடமும் திருநரையூர் தலம் வந்து, பத்து நாட்களுக்குத் தங்கி அலங்காரத்துடன் காட்சி தந்து அருள்புரிகிறாள் என்பது ஐதீகம். இந்த விழா தற்பொழுது பத்து நாள்களுக்கு மேல் நடந்து பதிமூன்றாம் நாள் நின்ற கோலத்தில் தேரில் சமயபுரத்திற்கு எழுந்தருள்வதுடன் விழா நிறைவு பெறுகிறது. அச்சமயம் அம்மன் கையில் வெள்ளிக்குடம் கொடுத்து வீதியுலா நடைபெறும். இதன்மூலம், அம்மன் சமயபுரம் செல்கிறாள் என்பது ஐதீகம்.

இக்கோவிலில், ஆண்டுக்கு 10 நாட்கள் தவிர, அம்மன் உருவமற்றவராக அதாவது சூட்சும ரூபத்தில் இருக்கிறார். விளக்கு மட்டுமே அம்மன் என்று வழிபடப்படுகிறது. வைகாசி அமாவாசைக்குப் பிறகு, உள்ளூர் மக்கள் தர்ப்பை புல்லைப் பயன்படுத்தி அம்மன் சிலையை உருவாக்கி, மல்லிகைப் பூக்கள் மற்றும் கண்ணாடி வளையல்களால் அலங்கரிக்கின்றனர். உடையக்கூடிய தர்ப்பை புல்லால் மூர்த்தி கட்டப்படும் கோவிலை நாம் வேறு எங்கும் காண முடியாது.

ஒவ்வொரு நாளும் புதிதாக தர்ப்பை புல் சேர்க்கப்படும், இதனால் வடிவம் படிப்படியாக வளரும். மற்றும் அலங்காரங்களும் தினமும் மாற்றப்படும். லட்சுமி, சரஸ்வதி, மதனகோபாலன் போன்ற பல்வேறு வடிவங்களில் அவள் சித்தரிக்கப்படுகிறாள், கடைசி நாளில் ராஜ ராஜேஸ்வரி வடிவத்தில் உச்சம் பெறுகிறாள்.

Read More
ஆதனூர் வீர சுதர்சன ஆஞ்சநேயர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஆதனூர் வீர சுதர்சன ஆஞ்சநேயர் கோவில்

தலைக்கு மேல் சுதர்சன சக்கரத்தை தாங்கி இருக்கும் அபூர்வ ஆஞ்சநேயர்

கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ள திவ்யதேசம் ஆதனூர். இந்த திவ்ய தேசத்தில், 20 அடி நீளம், 10 அடி அகலம் கொண்ட சிறிய மண்டபத்தில், வீர சுதர்சன ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. மண்டபத்திற்கு சற்று வெளியே ஸ்ரீராமரின் பாதம் பதித்த ஒரு கல் உள்ளது. சன்னதிக்குள் நுழையும் முன், பக்தர்கள் தங்கள் பிரார்த்தனையை ஸ்ரீராமரிடம் செலுத்துகிறார்கள். மண்டபம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முன்புறப் பாதி பக்தர்கள் தரிசிக்கும் இடமாகவும், பின்புறப் பாதி ஆஞ்சநேயரின் கர்ப்பக் கிரகமாகவும் உள்ளது.

கருவறையில், வீர சுதர்சன ஆஞ்சநேயர் ஏழடி உயர திருமேனி உடையவராய், கிழக்கு நோக்கியவாறு வடக்கு நோக்கி நடக்கும் கோலத்தில் காட்சி அளிக்கிறார். ஆஞ்சநேயரின் வால் தலைக்கு மேல் சுருள் வடிவில் உயர்த்தி காணப்படுகிறது. வால் சுருளின் மையத்தில் பன்னிரண்டு இதழ்கள் கொண்ட ஒரு சக்கரம் அமைந்திருக்கின்றது. இப்படி தலைக்கு மேல் சுதர்சன சக்கரத்தை கொண்டிருக்கும் ஆஞ்சநேயரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. அவரது தலையின் மேல், நேர்த்தியாகக் கட்டப்பட்ட கேசத்தின் உச்சியில் 'ரக்கொடி' எனப்படும் ஒரு ஆபரணத்தை அணிந்திருக்கிறார். இரு காதுகளிலும் தோள்களைத் தொடும் அளவு, நீளமான குண்டலங்களை தரித்திருக்கிறார். வலது கையை உயர்த்தி அபய முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

Read More
திருபுவனம்  கம்பகரேசுவரர் கோவில்

திருபுவனம் கம்பகரேசுவரர் கோவில்

பயத்தை நீக்கி, மனதில் துணிச்சலைத் தரும் கம்பகரேசுவரர்

கும்பகோணம் - மயிலாடுதுறை வழியில், கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது திருபுவனம் கம்பகரேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் தர்மசம்வர்த்தினி. கம்பகம் என்றால் நடுக்கம் என்று அர்த்தம். நடுக்கத்தை ஏற்படுத்தும் பயத்தை போக்கும் ஈசன் என்பதால் இந்த தலத்து சிவபெருமானுக்கு கம்பகரேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது. இது தேவார வைப்புத் தலமாகும். பட்டுக்கும் பெயர் பெற்ற ஊர் இது.

சரபேசுவரருக்கான பிரதான தலம்

அம்மன் சன்னிதிக்கு நேர் எதிரே, இத்தலத்தின் முக்கிய சன்னிதியாக விளங்கும் சரபேசுவரர் சன்னிதி, தெற்கு முகமாய் அமைந்துள்ளது. சிவன், விஷ்ணு, காளி(பிரத்யங்காரா தேவி), துர்க்கை(சூலினி துர்க்கை) ஆகிய நான்கு மூர்த்திகளும் சேர்ந்த அம்சம் தான் சரபேசுவரர். நான்கு பெரிய தெய்வங்களும் ஒன்றாக இருப்பதால் நான்கும் சேர்ந்த அருள் கிடைக்கிறது. இத்தலத்தில் சரபேசுவரர் 7 அடி உயரத்தில் தனிசன்னதியில் பிரம்மாண்டமான தோற்றத்தில் அருள்பாலிக்கிறார்.

மகாவிஷ்ணு, தன் பக்தன் பக்த பிரகலாதனுக்காக, இரண்யன் பெற்ற வரத்தின்படி மனிதனும் இல்லாத மிருகமும் இல்லாத வடிவமாக நரசிம்மராக அவதாரம் எடுத்து, இரண்யனை அழித்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதன்படி இரண்யனின் குடலை உருவி மாலையாக அணிந்த நரசிம்மர், இரண்யனின் உதிரத்தைக் குடித்தார். இதனால் அவரது செயல் அசுரத்தனமாக மாறியது. அவரது இந்த மாற்றத்தால் உலகே அச்சத்தில் நடுங்கியது. அனைவரும் சிவபெருமானிடம் சரணடைந்தனர். அதற்குச் செவி மடுத்த சிவபெருமான், தன் அம்சத்தில் இருந்து தோன்றிய வீரபத்திரரிடம் நரசிம்மரின் அட்டகாசங்களை நிறுத்தி, அவரை சாந்த மூர்த்தியாக்க ஆணையிட்டார்.

வீரபத்திரர் பேரண்டப் பட்சியாக, சரப வடிவம் ஏற்றார். சிங்கமுகம், நரிவால் கொண்டிருந்த அந்த தோற்றத்தைக் கொண்டு, நரசிம்மரை சாந்தப்படுத்தினார். அதே வடிவத்தில் சரபேசுவரர் என்ற பெயரில் கோவில் கொண்டார். பல்வேறு திருக்கோவில்களில் சரபேசுவரர் வடிவங்கள் இருந்தாலும், திரிபுவனம் கம்பகரேசுவரர் திருக்கோவிலில் உள்ள சரபேசுவரரே பிரதானமாக போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தின் உற்சவமூர்த்தியும் சரபேசுவரர் தான். இங்குள்ள சரபர் ஆறு கால்கள், நான்கு கரங்களுடன் பன்னிரு கால் பீடத்தையும், இரு கரங்கள் நரசிம்மனைப் பற்றியும் அமைந்துள்ளது.

பிரார்த்தனை

சரபேசரை வணங்கினால் வியாதிகள், மனக்கஷ்டங்கள், கோர்ட் விவகாரங்கள், பில்லி சூன்யங்கள், ஏவல், மறைமுக எதிரிகள் தொல்லை, திருஷ்டி தோசங்கள், சத்ரு தொல்லைகள், ஜாதக தோசங்கள், கிரக தோசங்கள் அனைத்தும் நீங்கும். கல்வி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி , மனம் விரும்பும் படியான வாழ்க்கை, உத்தியோக உயர்வு போன்ற நினைத்த காரியங்கள் கைகூடும். குழந்தை பேறு கிடைக்கும். கடன் தொல்லை நீங்கும்.

செவ்வரளிப்பூ, மரிக்கொழுந்து, வில்வம், செண்பக புஷ்பம், நாகலிங்கப்பூ ஆகிய மலர்களால் சரபேசருக்கு சரப அர்ச்சனை செய்வது முக்கிய நேர்த்திகடனாக உள்ளது. வெள்ளிக்கிழமை அன்று சரபேசருக்கு தயிர் அபிசேகம்(வியாதி நீக்கம்) பால் அபிசேகம்(ஆயுள் விருத்தி) ஆகியவை செய்வதும் பக்தர்களது நேர்த்திகடனாக உள்ளது.

Read More
வடகுரங்காடுதுறை தயாநிதீசுவரர் கோவில்

வடகுரங்காடுதுறை தயாநிதீசுவரர் கோவில்

கருங்கல்லான அபூர்வ நடராஜர், சிவகாமி அம்மன் விக்ரகங்கள்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் வடகுரங்காடுதுறை. ஆடுதுறை பெருமாள் கோயில் என்றும் கபிஸ்தலம் என்றும், இந்த தலம் அழைக்கப் படுகின்றது. இறைவன் திருநாமங்கள் தயாநிதீசுவரர், அழகு சடைமுடி நாதர், வாலி நாதர், சிட்டிலிங்க நாதர், குலை வணங்கீசர். இறைவியின் திருநாமங்கள் ஜடாமகுட நாயகி, அழகு சடைமுடி அம்மை.

பொதுவாக சிவாலயங்களில், பஞ்சலோகத்தால் ஆன நடராஜர், சிவகாமி அம்மன் சிலைகளை நாம் தரிசிக்க முடியும். ஆனால் இக்கோவிலில், சற்று வித்தியாசமாக கருங்கல்லான நடராஜர், சிவகாமி அம்மன் சிலைகள் உள்ளன. மேலும் இவர்கள் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Read More
சோழபுரம் பைரவேஸ்வரர் கோவில்

சோழபுரம் பைரவேஸ்வரர் கோவில்

64 விதமான பைரவ மூர்த்திகளுக்கும் ஆதி மூலமாக விளங்கும் பைரவேஸ்வரர்

கும்பகோணம்- சென்னை சாலையில், 13 கி.மீ. தொலைவில் உள்ளது சோழபுரம் பைரவேஸ்வரர் கோவில். இத்தலத்து இறைவனின் திருநாமம் பைரவேஸ்வரர். இத்தலத்து இறைவன் 3 அடி உயர ஆவுடையாரின் மீது இரண்டடி உயர பாணத்துடன் காணப்படுகிறார்.

உலகில் உள்ள 64 விதமான பைரவ மூர்த்திகளுக்கும் ஆதி மூலமாக விளங்குபவர் தான், இந்த சோழபுரம் பைரவேஸ்வரர். 64 பைரவ வடிவங்களும் தோன்றிய தலம் இது. . இதனாலேயே இத்தலத்தின் பழங்காலப் பெயர் பைரவபுரம். சிவன், பைரவரின் மூல மூர்த்தியாக இருப்பதால், பைரவேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். கோவிலுக்குள் 64 பீடங்கள் உள்ளன, மேலும் 64 பைரவர்களில் ஒவ்வொருவரும், இங்கு எப்போதும் அமர்ந்து பூஜையும் , தியானமும் செய்வதாக நம்ப படுகிறது.

பிரார்த்தனை

பிரபஞ்சத்தின் அனைத்து பைரவ உபாச சித்தர்களும் ரிஷிகளும், யோகிகளும் அஷ்டமி திதி தினங்களில் கண்களுக்கு தெரியாத வடிவங்களில் இங்கு வந்து பூஜித்து செல்கிறார்கள். இந்த பைரவரை வழிபட்டால், பித்ரு தோசம், பித்ரு சாபங்களில் பல வருடங்கள் பாதிக்கப்பட்டு எந்த முன்னேற்றமும் இல்லாமலிருப்பவர்களும், பில்லி, சூன்யம்,செய்வினை,ஏவல்,மாந்திரீகம் போன்ற பிரச்சினைகளும் அகலும்.

தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர். இத்துன்பங்களில் இருந்து விடுபட, பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு,பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனி கிழமையும் வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும். சனிக்கு குருவாக விளங்குபவரர் பைரவர் என்பதால் அவரை சனிக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பு.

Read More
பாலத்தளி துர்க்கையம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

பாலத்தளி துர்க்கையம்மன் கோவில்

மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் அபூர்வ துர்க்கை

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில், 4 கி.மீ. தொலைவில் உள்ள பாலத்தளி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது துர்க்கையம்மன் கோவில். பாலை மரங்கள் அதிகமாகக் காணப்படுவதால் பாலத்தளி என்றழைக்கப்படுகிறது.

கருவறையில் துர்க்கை அம்மன் எருமைத்தலையின் மீது நின்ற நிலையில், நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். இந்த அம்பிகை தனது இரு கரங்களில், சங்கு சக்கரம் தாங்கி இருப்பதால் விஷ்ணு துர்க்கை என அழைக்கப்படுகிறார். அதேபோல் தெய்வீக பொழிவோடு காட்சி தருவதால் நவ துர்க்கை எனவும் அழைக்கப்படுகிறார். பொதுவாக துர்க்கை அம்மன் வடக்கு நோக்கி எழுந்தருளி இருப்பாள். ஆனால் இந்த ஆலயத்தில் துர்க்கை அம்மன், மற்ற ஆலயங்கள் போல் இல்லாமல் மேற்கு நோக்கி அமைந்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருப்படுகிறது.

இந்த ஆலயத்தில் ராகு கால பூஜை மிகவும் பிரசித்திப்பெற்றது அதேபோல் ஆடி வெள்ளி,ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளி,செவ்வாய் என துர்க்கைக்கு உகந்த நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள்.

Read More
மருங்கப்பள்ளம் மருந்தீசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மருங்கப்பள்ளம் மருந்தீசுவரர் கோவில்

அம்பிகைக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது மருங்கப்பள்ளம். இத்தலத்து இறைவன் திருநாமம் மருந்தீசுவரர், ஔஷதபுரீசுவரர். இறைவியின் திருநாமம் மருத்துவ நாயகி ,பெரியநாயகி. சகல நோய்களையும் இறைவன் குணப்படுத்துவதால் இந்த பெயர் ஏற்பட்டது. இக்கோவில் 1200 ஆண்டுகள் பழமையானது.

இத்தலத்து இறைவி பெரிய நாயகி மேல் இரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கி கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் புன்னகை தவழ நின்றகோலத்தில் காட்சிதருகிறாள். அம்பிகை, இவளை வணங்குவோர் குடும்பத்தில் நிம்மதி நிலவும். ஒற்றுமை நிலைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதனை நிரூபிப்பதுபோல், இந்த ஆலயத்தில் இவளுக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்யப்படுகிறது. வழக்கமாக இறைவனின் உற்சவமூர்த்திக்கே செய்யப்படும் இந்த அலங்காரம், தேவியின் மூலமூர்த்திக்கே செய்யப்படுவது சிறப்பானது.

Read More
மருங்கப்பள்ளம் மருந்தீசுவரர் கோவில்

மருங்கப்பள்ளம் மருந்தீசுவரர் கோவில்

மருந்து கல்வம் மற்றும் குழவியே சிவலிங்கமாக இருக்கும் தலம்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது மருங்கப்பள்ளம். இத்தலத்து இறைவன் திருநாமம் மருந்தீசுவரர், ஔஷதபுரீசுவரர். இறைவியின் திருநாமம் மருத்துவ நாயகி ,பெரியநாயகி. சகல நோய்களையும் இறைவன் குணப்படுத்துவதால் இந்த பெயர் ஏற்பட்டது. இக்கோவில் 1200 ஆண்டுகள் பழமையானது.

சூரியனுக்கும் உஷா தேவிக்கும் பிறந்த குழந்தைகள் நசத்யா மற்றும் தசரா. அஸ்வினி குமாரர்கள் என்றழைக்கப்படும் இவர்கள், பிரம்மாவின் ஆணைப்படி, தேவலோக மருத்துவர் பதவியை அடைவதற்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து, அந்த பதவியை அடைந்தார்கள். அவர்கள் முதலில் மூலிகைகளை அரைக்க பயன்படுத்திய, கல்வம் (கல்வம் என்பது கல்லினாலான ஆன முட்டை வடிவமான குழியுள்ள அம்மி) மற்றும் குழவியையே, உலக உயிர்கள் யாவும் ஆரோக்கியமாக வாழும் பொருட்டு சிவலிங்கமாக பிரதிஷ்டைசெய்து, "ஸ்ரீ மருந்தீசுவரர்" என்று திருநாமம் வைத்து வழிபட்டார்கள். மருந்தீசுவரர் லிங்கத்தில், குழவியின் விளிம்பு இருப்பது, நாம் வேறு எந்த தலத்து சிவலிங்கத் திருமேனியிலும் காண முடியாது.

ஆஞ்சநேயப் பெருமான் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்து செல்லும்போது மருந்தீஸ்வரர் திருவருளால் அதிலிருந்து ஒர் பெரும் பாறை இவ்வூரில் விழுந்து சிதறியது. விழுந்ததினால் ஏற்பட்ட பள்ளம், மருந்து தீர்த்தம் என்று அழைக்கப்படும் இக்கோவிலின் திருக்குளமானது. பாறையிலிருந்து சிதறிய மூலிகைகள் இவ்வூரெங்கும் மருத்துவ தாவரங்கள் ஆகவும், முக்கிய மூலிகையான பாதிரி தல விருட்சமாகவும் ஆனது. இதனாலையே இவ்வூர் மருந்து + பள்ளம் = மருந்துப்பள்ளம் என பெயர்பெற்றது. இதுவே மருவி மருங்கப்பள்ளம் என் அழைக்கப்படுகிறது. மருந்துபுரி, ஒளஷதபுரி என்றும் இத்தலம் புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த, திருக்குளத்து நீரே( மருந்து தீர்த்தம்) தீராத நோய் தீர்க்கும் மஹாஔஷத பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது.

மருத்துவத் துறையைச் சார்ந்த அனைவரும் வழிபட வேண்டிய தலம்

மருந்தீசுவரர், அனைத்து நோய்களையும் தீர்க்கும் மருத்துவராக விளங்குவதால், சகல துறை வைத்தியர்களும், அறுவை சிகிச்சை நிபுணர்களும், சித்த மருத்துவர்களும், நாட்டு வைத்தியர்களும், மருத்துவத் துறையில் படிப்பவர்களும், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும், விற்பனையாளர்களும், செவிலியர்களும் வழிபட வேண்டிய தெய்வமாக திகழ்கிறார். மருத்துவர்கள் தங்களது மருத்துவ சாதனங்களை இறைவன் திருபாதத்தில் வைத்து பூஜை செய்து எடுத்துச்சென்றால் அவர்களது அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் வெற்றியடையும். உடல்நிலை பாதிக்கபெற்ற அன்பர்கள் தங்களது மருந்துப் பொருட்களை இறைவன் திருவடியில் வைத்து வணங்கி, மருந்துப் பொருட்களை இறைவன் திருபிரசாதமாக உண்ணும்பொழுது வியாதி உடனே நிவர்த்தியாகும்.

அசுவினி, ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன் தரும் தலம்

அசுவினி, ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் மற்றும் ஞாயிறு ,செவ்‌‍‌‍‍வாய்க் கிழமையில் பிறந்தவர்கள் வழிபடவண்டிய தலம் இது. பிறந்தநாள், திருமண நாள், ஜன்ம நட்சத்திர நாள், ஆகிய தினங்களில் இங்குள்ள மருந்து தீர்த்தத்தில் நீராடி ஆயுஷ்ய ஹோமம் செய்து கொண்டால் நீண்ட ஆயுளோடு வாழலாம் என்பது ஐதீகம். நோய்கள் நிவர்த்தியாகும்.

Read More
அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோவில்

மூன்று முகங்கள் கொண்ட அபூர்வ விஷ்ணு துர்க்கை

கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோவில். ருத்ராட்சப்பந்தலின் கீழ் இறைவன் அமைந்துள்ளார். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில், இக்கோவிலும் ஒன்றாகும்.

ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அம்சமாக, தனது நான்கு கைகளில் இரண்டில் சங்கமும், சக்கரமும் ஏந்தி காட்சி தருபவள் விஷ்ணு துர்க்கை எனப்படுகிறாள். பதினெட்டு அல்லது எட்டு அல்லது நான்கு கைகளுடனும் ஒவ்வொரு கைகளிலும் கத்தி சூலம் போன்ற ஆயுதங்களுடனும், அசுரர்களை எதிர்த்து போரிடும் உக்கிர சொரூபமாகக் காட்சிக் கொடுப்பவள் சிவதுர்க்கை எனப்படுகிறாள். இந்தக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் விஷ்ணு துர்க்கை மூன்று முகங்களுடன் அபூர்வ கோலத்தில் காட்சி தருகிறாள். இப்படி மூன்று முகம் கொண்ட விஷ்ணு துர்க்கை தமிழ் நாட்டில் வேறு எங்கும் இல்லை.

இந்தக் கோவிலில் எழுந்தருளியுள்ள மூன்று முக விஷ்ணு துர்க்கையைத் தரிசித்தால் முன் ஜன்ம வினைகள் உடனே தீரும். திருமணமாகி மன வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வரும் தம்பதிகள் இங்கு வந்து, இந்த மூன்று முக துர்க்கையைப் பிரார்த்தித்தால், விரைவில் மன வேறுபாடு நீங்கி ஒன்று சேருவார்கள் என தல வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளது. மூன்றுமுக விஷ்ணு துர்க்கைக்குச் சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் வாழ்வு வளம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
கும்பகோணம் ராமசாமி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கும்பகோணம் ராமசாமி கோவில்

தென்னக அயோத்தி - கும்பகோணம் ராமசாமி கோவில்

சீதையும் ராமரும் திருமண கோலத்தில் ஒரே ஆசனத்தில் அருகருகே அமர்ந்து இருக்கும் அபூர்வ காட்சி

கும்பகோணம் ராமசாமி கோவில் தென்னக அயோத்தி என்னும் சிறப்பை பெற்றது. இக்கோவில் கி.பி.1600 முதல் கி.பி.1645 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த ரகுநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. கும்பகோணத்திற்கு அருகே உள்ள தாராசுரத்தில் குளம் வெட்டும்போது கிடைத்த ராமன், சீதையின் சிலைகளைத் தான் இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்தார் என்கிறது தல வரலாறு.

கருவறையில் பட்டாபிஷேகக் கோலத்தில் ராமர், சீதை, லட்சுமணன், சத்ருகனன், அனுமார் ஆகியோர் எழுந்தருளி இருக்கிறார்கள். மூலவர் இராமரும் சீதைப்பிராட்டியும் பீடத்தில் அமர்ந்திருக்க, பரதன் குடை விரிக்க, லட்சுமணன் அஞ்சலி பந்தத்துடன் நிற்க, சத்துருக்கனன் வெண்சாமரம் வீச, அனுமன் கையில் வீணையையும், சுவடியையும் ஏந்தியிருக்க காட்சி தருகின்றனர். ராமபிரான் தனது சகோதரர்களோடு எழுந்து அருளி இருக்கும் தலங்கள் மிகவும் அரிது. உத்தரப்பிரதேசம் அயோத்தி, சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் மற்றும் இத்தலத்தில் தான் நாம் இந்த அபூர்வ காட்சியை தரிசிக்க முடியும். அயோத்தியில் சீதா ராமர் பட்டாபிஷேக கோலத்தில் இருப்பர். இங்கே இருவரும் திருமண கோலத்தில் காட்சி தருகின்றனர். மேலும் ராமரும் சீதையும் ஒரே ஆசனத்தில் அருகருகே அமர்ந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். மற்ற கோவில்களில் ராமர், சீதையை தனித்தனி ஆசனத்தில் தான் காண முடியும்.

இத்தலத்தை தரிசனம் செய்தாலே குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். திருமணத் தடையுள்ள ஆண், பெண்கள் இக்காட்சி கண்டால் தடை நீங்கி என்றும் தியாக மனப்பான்மையுள்ள வாழ்க்கைத் துணையைப் பெறுவர்.

அயோத்தியில் கும்பாபிஷேகம் நடைபெறும் இன்று (22.01.2024), கும்பகோணம் ராமசாமி கோவிலில் சீதாராமருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

"ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம"

"ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்"

Read More
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில்

தினமும் குழந்தை, இளம்பெண், பெண் என மூன்று வித தோற்றங்களில் காட்சி தரும் அம்பிகை

கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருநாகேஸ்வரம். இறைவன் திருநாமம் நாகநாதசுவாமி. இத்தலத்தில் கிரிகுஜாம்பிகை மற்றும் பிறையணிவாள் நுதல் அம்மை என இரண்டு அம்மன்கள் அருள்பாலிக்கிறார்கள்.

கிரிகுஜாம்பாள் அம்பிகை தனிச் சன்னதியில் தவக்கோலத்தில் காட்சியளிக்கின்றாள். கிரிகுஜாம்பிகையின் வலதுபுறம் வீணையைக் கையில் தாங்கி சரஸ்வதியும், இடதுபுறம் கரங்களில் தாமரை மலரைத் தாங்கி லட்சுமிதேவியும் இருக்கின்றனர் . கிரிகுஜாம்பிகை காலையில் சிறுமியாகவும், மதியத்தில் இளம் பெண்ணாகவும், மாலையில் தேவியாக, பெண்ணாகவும் அலங்கரிங்கப்படுகிறார்.

கிரிகுஜாம்பிகையின் திருவடிவம் சுதையால் ஆனது என்பதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகுச் சட்டம் மட்டுமே சார்த்துகிறார்கள். மார்கழி மாதத்தில் 48 நாட்கள் புனுகு சட்டம் மட்டுமே சாற்றுவது வழக்கம். அந்நாட்களில் அம்பிகையை தரிசிக்க முடியாது. இந்நாட்களில் அம்பிகையின் சன்னதி முன்புள்ள திரைச்சீலைக்கே பூஜை நடக்கிறது. தை மாதத்தில் அம்பாளுக்கு, புனுகு காப்புத் திருவிழா நடைபெறும். தை கடைசி வெள்ளியன்று அம்மனது சன்னதி முன்மண்டபத்தில் அன்னம், காய்கறி, பழங்கள் போன்றவற்றை படைத்து சிறப்பு பூஜை நடைபெறும்.

இங்கு முத்தேவியரை வணங்கி, இவர்களை வழிபட குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை. இத்தலம் ராகுவிற்கான பரிகார தலமாகவும் விளங்குகிறது.

Read More
தஞ்சைப் பெரிய கோவில்

தஞ்சைப் பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவில் நந்திக்கு மாட்டுப் பொங்கலன்று நடைபெறும் சிறப்பு பூஜை

உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீட்டர், நீளம் 7 மீட்டர், அகலம் 3 மீட்டர் ஆகும். இதன் எடை 20 டன் ஆகும். இந்த நந்தியம் பெருமான், ஆந்திர மாநிலத்தில் உள்ள லேபாக்ஷி கோவில் நந்திக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே 2வது பெரிய நந்தி ஆவார். ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கல் தினத்தில், நந்தியம் பெருமானுக்கு பூஜைகள் மிகவும் சிறப்பாக நடக்கும். அப்போது 108 பசுக்களுக்கு 'கோ' பூஜை செய்யப்படும். பெருந்திரளான பக்தர்கள் இந்த பூஜையில் கலந்து கொள்கிறார்கள். மிகவும் விஷேசமான இந்த பூஜையையொட்டி, நந்திககு ஒரு டன் எடையில் காய்கறிகள், பழங்கள், பலவகை இனிப்புகள், பலகாரங்கள் உள்ளிட்டவைகளால் அலங்கரித்து பெருவுடையாருக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடத்தப்படும். இந்த பூஜையில் கலந்துகொண்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோவில்

அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோவில்

காசிக்கு இணையான காலபைரவர் தலம்

கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோவில். சப்தரிஷிகளான மரீசி, அத்திரி, புலத்தியர், பிருகு, ஆங்கிரசர், வசிஷ்டர், பரத்வாஜர் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டதால், இத்தல சிவபெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. ருத்ராட்சப் பந்தலின் கீழ் இறைவன் அமைந்துள்ளார். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில், இக்கோவிலும் ஒன்றாகும்.

புண்ணியத் தலமான காசியை காலபைரவர் க்ஷேத்திரம் என்று புராணங்கள் கூறுகின்றன. காசியில் வாழ்பவர்கள், இறைவன் திருவடியை அடையும்போது அவர்கள் எமவாதம் இன்றி முக்தியடைகின்றனர் என்பது புராணங்கள் உணர்த்தும் உண்மையாகும். ஏனெனில், காசியை அதன் எட்டுத்திக்கிலும் எட்டு விதமான பைரவர்கள் காத்து அருள்வதாக ஐதீகம். இதனால் காசி, காலபைரவர் க்ஷேத்திரம் என்று வணங்கப்படுகின்றது. 'காசிக்கு இணையான தலம் காசினி(பூமி)யில் இல்லை' என்ற முதுமொழிக்கும் இதுவே காரணமாகும்.

காசியைப் போலவே கோவில் நகரமான கும்பகோணத்தையும் எட்டு பைரவர்கள் காத்து அருள்வதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த வரிசையில் அம்மாசத்திரம் என்ற இத்தலத்தில் அருள்பாலிக்கும் காலபைரவர்,காசிக்கு இணையான பெருமையும் முக்கியத்துவமும் வாய்ந்த சக்தி வாய்ந்த மூர்த்தமாகும்.

பவிஷ்யோத்தர புராணம், காசியில் உள்ளோரின் பாவங்களையும் போக்கும் சக்தி கொண்டவராக இத்தல காலபைரவரைக் குறிப்பிடுகின்றது.

இங்கு பைரவரின் வாகனத்தின் முகம் வடக்கு நோக்கி இருப்பதால் பிதுர் தோஷங்கள் நீங்கும் என்பதும், தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பதும் ஐதீகம். மனநிலை பாதிப்பு, தீயசக்தியால் பாதிப்பு, செய்வினை தோஷங்கள், அமைதியின்மை முதலான பல துன்பங்களுக்கு தேய்பிறை அஷ்டமியில் இத்தல பைரவருக்கு வழிபாடு செய்வது நிவர்த்தி தரும்.

Read More
கும்பகோணம் சாரங்கபாணி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கும்பகோணம் சாரங்கபாணி கோவில்

சொர்க்கவாசல் இல்லாத திவ்ய தேசங்கள்

பொதுவாக எல்லா பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் அதிகாலையில் திறக்கப்படும். ஆனால் திவ்ய தேசமான கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு கிடையாது. ஏனென்றால் இந்த கோவிலில் சொர்க்கவாசல் கிடையாது. ஏனென்றால் இத்தலத்து மூலவர் சாரங்கபாணி, இந்த கோவிலுக்கு வந்து எழுந்தருளினார். இத்தலத்து தாயாரான மகாலட்சுமியின் அவதாரமான கோமளவல்லியை, பெருமாள் நேராக வைகுண்டத்திலிருந்து இந்த கோவிலுக்கு வந்து எழுந்தருளி, திருமணம் புரிந்து கொண்டார். எனவே இவரை வணங்கினாலேயே பரமபதம் கிடைத்து விடும் என்பதால், இந்த கோவிலில் சொர்க்கவாசல் கிடையாது.

இக்கோவிலில் மூலவரை தரிசிக்கும் வழியில், உத்திராயண வாசல், தட்சிணாயண வாசல் என்று இரண்டு வாசல்கள் உள்ளன. உத்திராயண வாசல் வழியே தை மாதம் முதல் ஆனி மாதம் வரையும், தட்சிணாயண வாசல் வழியே ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையும் பெருமாளை தரிசிக்க செல்ல வேண்டும். இந்த இரு வாசல்களை கடந்து சென்று பெருமாளை தரிசித்தாலே பரமபதம் கிட்டும் என்பது ஐதீகம்.

இதேபோல் திருச்சிக்கு அருகே உள்ள மற்றொரு திவ்ய தேசமான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் கிடையாது. இக்கோயில் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுகிறது. இங்கும் உத்திராயண வாசல், தட்சிணாயண வாசல் என்று இரண்டு வாசல்கள் உள்ளன.

Read More
தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஹரித்ரா விநாயகர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஹரித்ரா விநாயகர் கோவில்

உடல் முழுவதும் பாம்புகள் பின்னப்பட்டுள்ள, தமிழகத்திலேயே உயரமான விநாயகர்

தஞ்சாவூர்-வல்லம் சாலையில் 7 கி.மீ. தொலைவில் உள்ள பிள்ளையார்பட்டி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது ஹரித்ரா விநாயகர் கோவில். காரைக்குடியில் ஒரு பிள்ளையார்பட்டி இருப்பதால் இக்கோவில் தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஹரித்ரா விநாயகர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. ஹரித்ரா என்றால் மங்களம் என்று பொருள்.

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், மாமன்னன் ராஜராஜ சோழனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாமன்னன் ராஜராஜ சோழன் தஞ்சை பெருவுடையார் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் உள்ள சிற்பக்கூடத்தில் இருந்து நந்தி மற்றும் விநாயகர் விக்கிரகங்களை யானை பூட்டிய தேரில் வைத்து எடுத்து வந்தான். அப்படி வரும் வழியில், விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த தேரின் அச்சு முறிந்து, தேர் ஒரு இடத்தில் நின்றுவிட்டது. தேரின் அச்சு முறிந்ததால் விநாயகர் சிலையின் இடது பக்க தந்தம் உடைந்து விட்டது. இதனால் பின்னம் அடைந்த சிலை, தஞ்சை பெரிய கோவிலுக்கு வேண்டாம் என்று ராஜராஜ சோழன் முடிவு செய்து விட்டான். இருப்பினும் விநாயகர் சிலையை, அதே பகுதியில் பிரதிஷ்டை செய்து ஒரு ஆலயத்தை எழுப்பினான். அதுவே பிள்ளையார்பட்டி விநாயகர் ஆலயம் ஆகும். பெரிய பிள்ளையாரை தரிசிக்க, மிகவும் அடக்கமாக செல்ல வேண்டும் என்பதற்காக சிறிய நுழைவுவாசல் அமைக்கப்பட்டிருப்பது. பொதுவாக விநாயகருக்கு, எலிதான் வாகனமாக இருக்கும். ஆனால் இங்கு நந்தியே விநாயகரின் முன்புறம் வாகனமாக இருப்பது கவனிக்கத்தக்கது.

இங்குள்ள விநாயகர் சிலை, தமிழகத்திலேயே உயரமான சிலை என்று குறிப்பிடப்படுகிறது. ஒரே கல்லினால் வடிவமைக்கப்பட்ட இந்த விநாயகரின் உயரம் 11 அடி. தரை மட்டத்துக்கு கீழே அமைந்துள்ள அடிபீடம் 5 அடி கொண்டது. இந்த சிலையில் ஒரு தந்தம் உடைந்து காணப்படுகிறது. பிள்ளையாரின் முதுகு பகுதியில் ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது. அமர்ந்த கோலத்தில் உள்ள விநாயகரின், நாபி அருகில் பாம்பு ஒன்று படமெடுத்தபடி உள்ளது. அது விநாயகரின் உடலை சுற்றிய நிலையில் காணப்படுகிறது.

கேது நிவர்த்தி தலம்

ஹரித்ரா விநாயகரின் உடல் முழுவதும் பாம்புகள் பின்னப்பட்டுள்ளது. எனவே இந்த தலம் கேது நிவர்த்தி தலமாக கருதப்படுகிறது. திருமண தடை நீக்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும், தீராத நோயை தீர்க்கவும் உகந்த ஆலயம் என்பதால் ஏராளமான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

Read More