சோழவந்தான் ஜெனகை மாரியம்மன்  கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில்

எண்ணற்ற வியாதிகளை குணப்படுத்தும் மருத்துவக் கோவில்

மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள சோழவந்தானில் அமைந்துள்ளது ஜெனகை மாரியம்மன் கோவில். மதுரையைப்போல இவ்வூரையும் கோவில் நகரம் என அழைக்கின்றனர். இந்த மாரியம்மனை ஜனக மகாராஜா வணங்கியதாக தல வரலாறு கூறுகிறது. இதனால் இந்த மாரியம்மன் 'ஜனகை மாரி' என்றழைக்கப்பட்டு பின்னர், 'ஜெனகை மாரி' என்று பெயர் பெற்றாள்.

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் கருவறையில் ஜெனகை மாரியம்மன் இரண்டடி உயர திருமேனியுடன் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். அவருக்குப் பின்புறம் சந்தனமாரியம்மன் ஆக்ரோஷமாக நின்ற நிலையில் எழுந்தருளி இருக்கிறார். சொல்லி வரம் கொடுப்பாள் சோழவந் தான் ஜெனகை மாரி என்பது இவ்வூர் மக்களின் வேதச் சொல் ஆகும். இப்பகுதியில் பெரும்பாலான குழந்தைகளுக்கு ஜெனகைமாரி என பெயர் வைத்திருப்பார்கள்

இக்கோவிலில் குடிகொண்டுள்ள ஜெனகை மாரியம்மன், சோழவந்தான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 48 கிராம மக்களுக்கும் குல தெய்வமாக உள்ளார். எண்ணற்ற வியாதிகளை குணப்படுத்தும் மருத்துவ கோவில் இது. அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு ஈரத் துணியோடு வந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டிக் கொண்டு அர்ச்சகர் தரும் அம்பாள் தீர்த்தம் வாங்கி குடிக்க வேண்டும். இது மஞ்சள் வேப்பிலை மற்றும் வேறு சில பொருட்களும் கலந்த மருத்துவ குணமும், அம்பாள் கருணையும் கலந்த அபூர்வ தீர்த்தம் ஆகும். அம்மை போட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டு குணமடைவது இப்பகுதியில் மிகவும் பிரபலம். குழந்தை பாக்கியம். திருமண வரம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்துக்கு பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர்.

பெண் பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி, கோவிலில் தொட்டில் கட்டி பூஜை செய்வது வழக்கம். குழந்தை வரம் கிடைக்கப் பெற்றவர்கள் கரும்புத் தொட்டில் கட்டி குழந்தையை எடுத்து கோவிலை சுற்றி வருகின்றனர். விவசாயம் செழிப்படைய வேண்டிக் கொண்டவர்கள் தானியங்களை கொண்டு வந்து கொட்டி அம்மனுக்கு காணிக்கை செய்கின்றனர்.

திருவிழாவின் முடிவில் மழை தூரல் விழும் அதிசய நிகழ்ச்சி

இக்கோவிலில் தொடர்ந்து 17 நாட்கள் திருவிழா நடைபெறுவது ஒரு தனிச்சிறப்பாகும். ஒவ்வொரு ஆண்டும் விஜய தசமி அன்று வைகை ஆற்றில் நடக்கும் அம்பு போடுதல் திருவிழாவின் முடிவில், மழை தூரல் விழுவது இத்தலத்தில் இன்றளவும் நடக்கும் அதிசய நிகழ்ச்சியாகும்.

Read More
குருவித்துறை சித்திரரதவல்லப பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

குருவித்துறை சித்திரரதவல்லப பெருமாள் கோவில்

சந்தன மரச்சிலையால் ஆன பெருமாள்

மதுரையிலிருந்து 35 கி.மீ தொலைவில், சோழவந்தான் அருகில், அமைந்துள்ளது குருவித்துறை. மூலவர் - சித்திர ரத வல்லப பெருமாள். தாயார் - செண்பக வல்லி.

குரு பகவான் (வியாழன்) தன் மகன் கசனுக்காக வைகை நதிக்கரையில் துறை அமைத்து பெருமாளை நோக்கி தவம் மேற்கொண்ட இடம் என்பதால், இந்த இடம் குருவி(ன்) துறை எனப்படுகிறது. குரு பகவானுக்கு உகந்த திருத்தலமாகத் திகழ்கின்றது.

அத்தி வரதர் எப்படி மரத்தால் செய்யப்பட்ட சிறப்பு பெற்றுள்ளாரோ, அதே போல் இங்குள்ள சித்திர ரத வல்லப பெருமாள் சந்தன மரசிலையால் ஆன மூர்த்தியாக திகழ்கின்றார். குருபகவானின் பிரார்த்தனையால், ஒவ்வொரு ஆண்டும் பெருமாள் சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தன்று, சித்திரத் தேரில் எழுந்தருளுகிறார். இதன் காரணமாக சித்தரரத வல்லப பெருமாள் என அழைக்கப்படுகின்றார்.

குரு பகவானுக்கு அருளிய பெருமாள்

இக்கோவிலில், ஒரே சன்னிதியில் குரு பகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர். அசுர குருவான சுக்ராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் 'மிருத சஞ்சீவினி' மந்திரம் கற்றிருந்தார். இதனால், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் நடக்கும்போது, அவர் எளிதாக அசுரர்களை உயிர்ப்பித்தார். அந்த மந்திரத்தை கற்க விரும்பிய தேவர்கள், தங்கள் படையிலிருந்து ஒருவரை சுக்ராச்சாரியாரிடம் அனுப்ப முடிவு செய்தனர்.

தேவகுரு பிரகஸ்பதியின் (வியாழன்) மகன் கசன், அந்த மந்திரத்தை கற்று வருவதாகச் சொன்னான். அதன்படி சுக்ராச்சாரியாரிடம் சென்றவன், அவரது மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்தான். அவரிடம் மந்திரத்தைக் கற்று வந்தான். கசன், தேவகுலத்தைச் சேர்ந்தவன் என்பதை அறிந்த அசுரர்கள், அவனை எரித்து சாம்பலாக்கி, சுக்ராச்சாரியார் பருகிய பானத்தில் கலந்து கொடுத்துவிட்டனர்.

கசனைக் காணாத தேவயானி, தந்தையிடம் அவனைக் கண்டுபிடித்துத் தரும்படி வேண்டினாள். சுக்ராச்சாரியார் அவனை உயிர்ப்பித்தார். மகனைக் காணாத குரு பகவான், அவனை அசுரலோகத்தில் இருந் து மீட்டு வர அருளும்படி, இங்கு பெருமாளை வேண்டி தவமிருந்தார். குருவின் தவத்தால் மகிழ்ந்த பெருமாள்,சக்கரத்தாழ்வாரை அனுப்பி, குருவின் மகன் கசனை மீட்டுத் தந்து குருவுக்கு அருளினார்.

பிரார்த்தனை

குரு பகவானே இங்கு வந்து தவம் செய்த தலம் என்பதால், குரு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு பரிகாரம் செய்தால் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

Read More
ஏடகநாதேஸ்வரர் கோவில்

ஏடகநாதேஸ்வரர் கோவில்

திருஞானசம்பந்தர் சமணர்களுடன் அனல் வாதம். புனல் வாதம் புரிந்த தலம்

மதுரையை ஆண்ட கூன்பாண்டிய மன்னர், சைவ நாயன்மார்களுள் ஒருவர் ஆவார். இவருக்கு நின்றசீர் நெடுமாறன் என்ற பெயரும் உண்டு. இவர் சோழமன்னரின் மகளாகிய மங்கையர்க்கரசியாரின் கணவர். இவர் காலத்தில் சமணர்கள் மிகத் தீவிரமாக சமணசமயத்தைப் பரப்பி வந்தனர். சைவத்தைக் காப்பாற்ற மங்கையர்க்கரசியாரின் அழைப்பின் பேரில் திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்தபோது திருநீறு பூசி அரசன் கூன்பாண்டியனின் வெப்ப நோய் நீங்க உதவினார். இதனால் சமணர்கள் ஆத்திரமுற்று திருஞானசம்பந்தரை அனல் வாதம். புனல் வாதம் புரிய அழைத்தனர்.

சமணர்கள் தாங்கள் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆயிற்று. ஆனால் திருஞானசம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆகாமல் பச்சையாகவே இருந்தது. பின்பு புனல் வாதத்தின் போது சமணர்கள் எழுதிய ஏட்டை வைகை ஆற்றில் விட்ட போது அது ஆற்றுடன் சென்றது. ஆனால் திருஞானசம்பந்தர் 'வாழ்க அந்தணர்' என்று தொடங்கும் பதிகம் எழுதியிட்ட ஏட்டை வைகை ஆற்றில் விட்ட போது அது வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து சென்றது. மதுரை பாண்டிய மன்னனின் மந்திரி குலச்சிறையார் என்பவர் குதிரையின் மீதேறி வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து செல்லும் ஏட்டைப் பின் தொடர்ந்து செல்ல அது ஓரிடத்தில் வைகை ஆற்றின் கரையில் ஒதுங்கியது. பாண்டிய மன்னன் ஏடு ஒதுங்கிய இடத்தில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டு அங்கு ஒரு கோவில் எழுப்பினான். அதுவே திருவேடகம் என்ற தேவார பாடல் பெற்ற தலம் ஆனது.

இத்தலத்தில் ஒரு நாள் தங்கி இருந்து இறைவனை முழுமனதுடன் பூஜை செய்து வழிபட்டால் காசியில் ஆயுள் முழுவதும் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கோயிலில் உள்ள கால பைரவர் சன்னதி மிகவும் விசேஷமானது வைகை நதிக்கரையில் பித்ரு காரியங்கள் மற்றும் அவர்கள் இறந்த திதி போன்ற நாட்களில் பூஜைகள் செய்வது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. இத்தலம் காசிக்கு நிகராகக் கருதப்படுவதால் முன்னோர் வழிபாடுகள் இத்தலத்தில் செய்யலாம். நம் முன்னோர்களின் முக்தி அடையை மோட்ச தீபம் ஏற்றும் பழக்கம் இக்கோவிலில் உள்ளது.

இக்கோவில் பிரம்ம தீர்த்தக் குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டால், சித்த பிரமை நீங்குவது தலத்தின் தனி சிறப்பாகும்.

Read More