குருவித்துறை சித்திரரதவல்லப பெருமாள் கோவில்

சந்தன மரச்சிலையால் ஆன பெருமாள்

மதுரையிலிருந்து 35 கி.மீ தொலைவில், சோழவந்தான் அருகில், அமைந்துள்ளது குருவித்துறை. மூலவர் - சித்திர ரத வல்லப பெருமாள். தாயார் - செண்பக வல்லி.

குரு பகவான் (வியாழன்) தன் மகன் கசனுக்காக வைகை நதிக்கரையில் துறை அமைத்து பெருமாளை நோக்கி தவம் மேற்கொண்ட இடம் என்பதால், இந்த இடம் குருவி(ன்) துறை எனப்படுகிறது. குரு பகவானுக்கு உகந்த திருத்தலமாகத் திகழ்கின்றது.

அத்தி வரதர் எப்படி மரத்தால் செய்யப்பட்ட சிறப்பு பெற்றுள்ளாரோ, அதே போல் இங்குள்ள சித்திர ரத வல்லப பெருமாள் சந்தன மரசிலையால் ஆன மூர்த்தியாக திகழ்கின்றார். குருபகவானின் பிரார்த்தனையால், ஒவ்வொரு ஆண்டும் பெருமாள் சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தன்று, சித்திரத் தேரில் எழுந்தருளுகிறார். இதன் காரணமாக சித்தரரத வல்லப பெருமாள் என அழைக்கப்படுகின்றார்.

குரு பகவானுக்கு அருளிய பெருமாள்

இக்கோவிலில், ஒரே சன்னிதியில் குரு பகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர். அசுர குருவான சுக்ராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் 'மிருத சஞ்சீவினி' மந்திரம் கற்றிருந்தார். இதனால், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் நடக்கும்போது, அவர் எளிதாக அசுரர்களை உயிர்ப்பித்தார். அந்த மந்திரத்தை கற்க விரும்பிய தேவர்கள், தங்கள் படையிலிருந்து ஒருவரை சுக்ராச்சாரியாரிடம் அனுப்ப முடிவு செய்தனர்.

தேவகுரு பிரகஸ்பதியின் (வியாழன்) மகன் கசன், அந்த மந்திரத்தை கற்று வருவதாகச் சொன்னான். அதன்படி சுக்ராச்சாரியாரிடம் சென்றவன், அவரது மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்தான். அவரிடம் மந்திரத்தைக் கற்று வந்தான். கசன், தேவகுலத்தைச் சேர்ந்தவன் என்பதை அறிந்த அசுரர்கள், அவனை எரித்து சாம்பலாக்கி, சுக்ராச்சாரியார் பருகிய பானத்தில் கலந்து கொடுத்துவிட்டனர்.

கசனைக் காணாத தேவயானி, தந்தையிடம் அவனைக் கண்டுபிடித்துத் தரும்படி வேண்டினாள். சுக்ராச்சாரியார் அவனை உயிர்ப்பித்தார். மகனைக் காணாத குரு பகவான், அவனை அசுரலோகத்தில் இருந் து மீட்டு வர அருளும்படி, இங்கு பெருமாளை வேண்டி தவமிருந்தார். குருவின் தவத்தால் மகிழ்ந்த பெருமாள்,சக்கரத்தாழ்வாரை அனுப்பி, குருவின் மகன் கசனை மீட்டுத் தந்து குருவுக்கு அருளினார்.

பிரார்த்தனை

குரு பகவானே இங்கு வந்து தவம் செய்த தலம் என்பதால், குரு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு பரிகாரம் செய்தால் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

குரு பகவான்

 
Previous
Previous

கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில்

Next
Next

பழனிமலை தண்டாயுதபாணி கோவில்