முத்துமலை முருகன் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

முத்துமலை முருகன் கோவில்

முருகப்பெருமானின் தலைக்கிரீடத்திலிருந்து முத்து விழுந்த மலை

கோவைக்கும் பொள்ளாச்சிக்கும் இடையே உள்ள கிணத்துக்கடவு என்ற ஊரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் முத்துகவுண்டனூரில் உள்ளது, முத்துமலை முருகன் கோவில். மலை மேல் அமைந்துள்ள இந்தக் கோவிலுக்கு செல்ல சாலை வசதியும் உண்டு.

முருகப்பெருமான் தனது வாகனமான மயிலின் மீது உலகைச் சுற்றிக் கொண்டிருந்தபோது, ​​அவரது கிரீடத்திலிருந்து ஒரு முத்து விழுந்தது. முருகன் அந்தமுத்துவைத் தேடியபோது, ​​அது இந்த மலையின் மீது விழுந்திருந்தது. முருகப்பெருமான் அதை மீட்க இம்மலையின் மீது கால் வைத்தார். முருகனின் முத்து இம்மலையில் விழுந்ததால், இந்த மலை முத்துமலை என்று அழைக்கப்பட்டது.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, முருகப்பெருமான் ஒரு உள்ளூர் பெண்ணின் கனவில் வந்து, மூன்று காரைச் செடிகளின் (காட்டு மல்லிகை) வரிசையின் கீழ் புதைந்து இருப்பதாகக் கூறினார். இதை அந்தப் பெண் உள்ளூர் பெரியவர்களிடம் கூறியபோது, ​​யாரும் நம்பவில்லை. தொடர்ந்து மூன்று கிருத்திகை மற்றும் பரணி நட்சத்திர நாட்களில் அவள் கனவில் முருகன் மீண்டும் தோன்றினார். அந்தப் பெண் முருகனை தேடிச் சென்றபோது, ​​மூன்று காரைச் செடிகள் வரிசையாக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். ஊர் பெரியவர்கள் அவளை நம்பி, அந்த இடத்தில் ஒரு வேல் (ஈட்டி) நிறுவி, அதை முருகனின் பிரதிநிதியாகக் கருதி வழிபட்டனர். பின்னர் இந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டு முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இத்தலத்தில் நாகர் சன்னதி அமைந்துள்ளது. அதனால் நாக தோஷ நிவர்த்திக்காக விசேஷ பூஜைகள் இத்தலத்தில் நடத்தப்படுகின்றது. கோவிலுக்கு அருகில் ஒரு எறும்புப் புற்று உள்ளது. இந்த எறும்புப் புற்றிலிருந்து இரவு நேரங்களில் ஒரு ஒளி வெளிப்படுகிறது. இந்த ஒளியை பல பக்தர்கள் தரிசனம் செய்திருக்கிறார்கள். இந்த ஒளிர்விற்கான காரணத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை.

Read More
பேரூர் பட்டீஸ்வரர் கோவில்

பேரூர் பட்டீஸ்வரர் கோவில்

சிவபெருமானும் பார்வதி தேவியும் விவசாயிகளாக வந்திருந்து நாற்று நட்ட தலம்

கோயம்புத்தூரில் இருந்து சிறுவானி செல்லும் வழியில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பேரூர் பட்டீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் பட்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் மனோன்மணி, பச்சைநாயகி.

பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆண்டுக்கொருமுறை நாற்று நடும் விழா, ஆனி மாதத்தில் கிருத்திகை தொடங்கி பூராட நட்சத்திரத்தில் நாற்று நடவும், உத்திரத்தில் திருமஞ்சனமும் ஆக கோலாகலமாய் நடக்கிறது. காஞ்சி நதிக்கரையில் நாற்று நடும் திருவிழா இன்றும் சிறப்பாக நடைபெறுகிறது. இவ்விழா ஏற்பட்டதற்கு பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.

சிவபெருமான், சகலமும் தானே என்ற தத்துவத்தை சுந்திரமூர்த்தி நாயனாருக்கு உணர்த்த எண்ணினார். சுந்தரர் பேரூர் வந்திருந்தபோது, சிவபெருமான் விவசாயக் குடிமகனாக அவதாரமெடுத்தார். சிவபெருமான் பள்ளன் என்ற விவசாயியாகவும், உமாதேவி பள்ளி என்ற விவசாயப் பெண்ணாகவும் அவதரித்து, காஞ்சி நதிக்கரைக்கு நாற்று நடச் சென்றனர். தேவர்களுனம், சிவ கணங்களும் உதவியாளர்களாய் வந்தார்கள்.

சிவபெருமான் அடித்த அடியால், சப்பையான தாடையுடன் காட்சி தரும் நந்தி தேவர்

தனது பக்தரான சுந்தரரை பற்றி நன்கு அறிந்த சிவபெருமான் 'சுந்தரன் வந்து கேட்டால் 'நான் இருக்கும் இடத்தை சொல்லாதே' என்று நந்திதேவரிடம் எச்சரித்துவிட்டு சென்றார். இறைவனை தரிசிக்க பட்டீஸ்வரர் கோவிலுக்கு வந்த சுந்தரமூர்த்தி நாயனார், கோவிலில் இறைவனை காணாமல் நந்தி தேவரை விசாரித்தார். சிவபெருமானின் எச்சரிக்கையையும் மீறி நந்தி தேவர் சுந்தரரிடம் இறைவன் இருக்குமிடத்தை கூறிவிட்டார். சுந்தரரும் காஞ்சி நதிக்கரையில் நாற்று நட்டுக் கொண்டிருந்த சிவபெருமானை தரிசித்து மகிழந்தார். நந்தி தம் சொல்லை மீறியதால் கோபமடைந்த சிவபெருமான், தன் கையிலிருந்த மண் வெட்டியால் நந்தியின் தாடையில் அடித்து விட்டார். இதனால் இந்தக் கோவிலில், நந்தி தேவரின் தாடை சற்று சப்பையாகக் காட்சியளிக்கிறது. பிறகு நந்தி தேவர், மன்னிப்பு வேண்டி தவமிருக்க, தனது தாண்டவ தரிசனத்தை அவருக்கு சிவபெருமான் அருளினார். பிறப்பில் பேதமில்லை என்று இறைவனே உணர்த்திய தலம் இதுவாகும்.

Read More
சூலக்கல் மாரியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சூலக்கல் மாரியம்மன் கோவில்

கண்நோயை தீர்க்கும் மாரியம்மனின் அபிஷேக தீர்த்தம்

பொள்ளாச்சியில் இருந்து 11கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சூலக்கல் மாரியம்மன் கோவில். சுயம்புவாக தோன்றிய மாரியம்மனுக்கு அருகே சூலம் இருந்ததால் இந்தப்பகுதி சூலக்கல் என்று பெயர் பெற்றது. கோவை மாவட்டத்தில் சிறப்பு பெற்ற மாரியம்மன் கோவில்களில், சூலக்கல் மாரியம்மன் கோயிலும் ஒன்று.

கருவறையில் மாரியம்மன் அமர்ந்த நிலையில் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்ட நிலையில், வலது கைகளில் உடுக்கையும் சுத்தியும், இடது கைகளில் சூலமும், கபாலமும் ஏந்தி அருள்பாலிக்கிறார். சூலக்கல் மாரியம்மன் வடக்கு நோக்கி அருள் புரிவதால், 'வடக்கு வாயிற் செல்வி' எனவும் அழைக்கப்படுகிறார்.

பிரார்த்தனை

சூலக்கல் மாரியம்மன், அம்மை நோயையும், கண்நோயையும் தீர்ப்பதில் கண்கண்ட தெய்வமாய் திகழ்கிறாள். அவளது அபிஷேக தீர்த்தத்தை கண்நோய் கண்டவர்கள் தங்கள் கண்களில் இட்டு குணம் பெறுகின்றனர். குழந்தைப்பேறு, இல்லாதவர்கள் அம்மனை வேண்டி, தல விருட்சத்தில் தொட்டில் கட்டி பிராரத்தனை செய்தால், அவர்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறுகிறது.

Read More
பேரூர் பட்டீஸ்வரர் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

பேரூர் பட்டீஸ்வரர் கோவில்

திருமண வரம் , வீடு மனை யோகம் அருளும் முருகன்

கோயம்புத்தூரில் இருந்து சிறுவானி செல்லும் வழியில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பேரூர் பட்டீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் பட்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் மனோன்மணி, பச்சைநாயகி. இக்கோவில் இரண்டாம் நூற்றாண்டில், கரிகால சோழனால் கட்டப்பட்டது.

இக்கோவில் வெளிப்பிராகாரத்தில், முருகபெருமான் பால தண்டாயுதபாணி என்ற திருநாமத்துடன், தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கோரக்க முனிவர் தான் இந்த பால தண்டாயுத சுவாமியை பிரதிட்டைசெய்து, இங்கு கடும் தவம் புரிந்தார் என்கிறது தல புராணம். இத்தலத்து முருகன் பற்றி அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியிருக்கிறார்

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில், முருகப்பெருமான் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார் . அதே போல் இக்கோவிலிலும், பால தண்டாயுதபாணி மேற்கு பார்த்த நிலையில் தரிசனம் தந்தருள்கிறார். இப்படி மேற்குப் பார்த்தபடி முருகக் கடவுள் திருக்காட்சி தரும் திருத்தலங்கள் அரிது. மேலும் மேற்குப் பார்த்த நிலையில் உள்ள முருகக் கடவுளைத் தரிசிப்பது மும்மடங்கு பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.

ஆடி கிருத்திகை, தை கிருத்திகை போல் மாதந்தோறும் வருகிற எல்லா கிருத்திகை நட்சத்திர நாளும் இங்கே விசேஷம் தான். இந்த நாளில், பேரூர் பால தண்டாயுதபாணிப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகளும்,அபிஷேகங்களும் விமரிசையாக நடைபெறுகின்றன.

கிருத்திகை நட்சத்திர நாளில், விரதம் மேற்கொண்டு, பேரூர் முருகப்பெருமானை தரிசித்தால், திருமண பாக்கியம் கைகூடும். அதேபோல், திருமணமான பெண்கள் கிருத்திகை நட்சத்திர நாளில் விரதம் மேற்கொண்டு பாலதண்டாயுதபாணியை தரிசித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள்.

கிருத்திகை நட்சத்திர நாளில், பால தண்டாயுதபாணிக்கு செவ்வரளி மாலை சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால், வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறலாம். எதிர்ப்புகள் இல்லாமல் போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
சிறுமுகை பழத்தோட்டம் பாலசுப்பிரமணியர் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

சிறுமுகை பழத்தோட்டம் பாலசுப்பிரமணியர் கோவில்

தலையில் குடுமியுடன் காட்சி அளிக்கும் பாலமுருகன்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவிலும், ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும், அமைந்துள்ளது. பவானி நதிக்கரையில் உள்ள இக்கோவில் ஆயிரம் வருடங்கள் பழமையானது. முற்காலத்தில் கோவில் அமைந்திருக்கும் பவானி நதிக்கரையோரம், ஏராளமான மாமரங்கள், பலா மரங்கள், கொய்யா மரங்கள் நிறைந்திருந்தன. அதனால் இக்கோவில் பழத்தோட்டம் பாலசுப்பிரமணியர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. பழனி திருஆவினன்குடி கோவிலை அடுத்து, இந்த வட்டாரத்தில் தரை பரப்பில் அமைந்த முருகன் கோவில்களில் இது மிகவும் பிரசித்தி பெற்றது.

கருவறையில் பாலமுருகன், இரண்டரை அடி உயர திருமேனியுடன், கையில் வேலேந்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த பாலமுருகனின் பின்னந்தலையில் குடுமி அமைந்திருப்பது ஆச்சரியமாகும். இந்த பாலமுருகனின் கோலத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

பிரார்த்தனை

இந்த பாலமுருகனுக்கு, செவ்வாய்க்கிழமை செவ்வரளி மாலை சாற்றி வழிபட்டால், குடும்பத்தில் சகல கஷ்டங்களும் விலகி, செல்வ செழிப்பு உண்டாகும். இவரை வணங்கினால் திருமண தடைகள் நீங்கும்; சந்தான பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
தேக்கம்பட்டி வனபத்ர காளியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

தேக்கம்பட்டி வனபத்ர காளியம்மன் கோவில்

பாண்டவர்கள் வழிபட்ட வனபத்ரகாளியம்மன்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு மேற்கே 5 கி.மீ. தொலைவிலுள்ள தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த வனபத்ர காளியம்மன் கோவில் உள்ளது.

தல வரலாறு

சாகாவரம் பெற்ற மகிசாசூரனை அழிக்க அம்பாள் சிவனை நினைத்து வழிபட்டுப் பூஜை செய்து சூரனை அழித்தாள். அம்பாள் சிவனை நினைத்து இந்த வனத்தில் தியானம் செய்ததால் இங்குள்ள அம்மன் வனபத்ரகாளியம்மன் என்று பெயர் பெற்றாள். இது தவிர ஆரவல்லி, சூரவல்லி சகோதரிகள் கதையோடும் இக்கோவில் தொடர்புடையதாக கூறப்படுகிறது.

மந்திரம், சூன்யம் ஆகியவற்றால் கொடிய ஆட்சி செய்த ஆரவல்லி, சூரவல்லி, வீரவல்லி என்ற ஏழு சகோதரிகளை அடக்க பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் சென்று சிறைப்பட்டு பின்னர் கிருஷ்ணன் அவனைக் காப்பாற்றினார். பின்பு பாண்டவர்கள் அப்பெண்களை அடக்க தங்களின் தங்கை சங்கவதியின் மகன் அல்லிமுத்துவை அனுப்பி வைத்தனர்.

அவன் இங்குள்ள வனபத்ரகாளி அம்மனை வழிபட்டுச் சென்று ஆரவல்லியின் பெண்கள் சாம்ராஜ்ஜியத்தைத் தவிடு பொடியாக்க அவர்கள் பயந்து போய் ஆரவல்லியின் மகளை அல்லி முத்துவுக்கு திருமணம் செய்து கொடுத்து அவள் மூலம் நஞ்சு கொடுத்துக் கொன்றனர். இதையறிந்த அபிமன்யு வானுலகம் சென்று அல்லிமுத்துவின் உயிரை மீட்டு வந்தான். நடந்த விஷயங்களைக் கேள்விபட்ட அல்லிமுத்து வெகுண்டெழுந்து ஆரவல்லியை அடக்கப் புறப்பட்டுச் சென்றான். வழியில் வனபத்ரகாளியம்மனை வழிபட்டு அவள் அருள் பெற்று ஆரவல்லியின் சாம்ராஜ்ஜியத்தை அழித்தான்.

பிரார்த்தனை

அம்மனிடம் குழந்தை வரம் வேண்டி வணங்கி தொரத்தி மரத்தில் கல்லை கட்டிவிட்டு வழிபட்டால் தங்கள் பிரார்த்தனை நிறைவேறுகிறது. செய்வினை, பில்லிசூன்யம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக்கோயிலுக்கு ஒருமுறை வந்து அம்மனை மனமுருக வேண்டிக்கொண்டால் அத்தகைய கோளாறுகள் நீங்குகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேண்டிய காரியம் நன்றாக முடிந்தால், பெண்கள் தாலியை உண்டியலில் போட்டு விடுவர்.

Read More
கோவை, ஒத்தக்கால் மண்டபம் நவகோடி நாராயணப்பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கோவை, ஒத்தக்கால் மண்டபம் நவகோடி நாராயணப்பெருமாள் கோவில்

ஜாதக தோஷங்களை நீக்கும் பெருமாள்

கோயம்புத்தூரிலிருந்து 19 கி.மீ தொலைவிலுள்ள ஒத்தக்கால் மண்டபம் என்ற ஊரில் அமைந்துள்ளது, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நவகோடி நாராயணப் பெருமாள் கோவில். தமிழ்நாட்டிலே, வேறு எங்கும் இல்லாத வகையில், பெருமாள் நவகோடி நாராயணர் என்ற திருநாமத்தில் எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.

வைணவப் பெரியவரான ராமாநுஜர் இத்திருத்தலத்திற்கு வந்து, துறவறம் பூண்டு இந்த பெருமாளின் அன்பையும் அருளையும் பெற்றார் என்கிறது தல வரலாறு. இத்தலப்பெருமாள், நவகிரக தோஷங்களை நிவர்த்தி செய்வதால், ' நவகோடி நாராயணன்' என்ற பெயர் ஏற்பட்டதாகவும், ராமாநுஜர் பெருமாளை இத்திருநாமத்தில் முதன்முதலில் அழைத்ததால் இப்பெயர் ஏற்பட்டதாகவும் காரணங்களைக் குறிப்பிடுகின்றனர். நவகோடி ரிஷிகளும் வழிபட்ட நாராயணர் இவர் என்ற கூற்றும் இங்கு உண்டு.

கருவறையில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். மூலவர் எழுந்தருளியிருக்கும் கருவறையிலேயே ராமாநுஜரும் எழுந்தருளி இருப்பது ஒரு அபூர்வமான காட்சியாகும்.

கோவை மாவட்டத்தின் மத்தியப் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலையும், புற நகர்ப் பகுதியில் உள்ள இக்கோயிலையும் அரசர்களும் வீரர்களும் போர்ப் பாசறையாகப் பயன்படுத்தியுள்ளனர். திப்புசுல்தானின் படைவீரர்கள் ஸ்ரீரங்கப் பட்டிணத்திலிருந்து திண்டுக்கல் செல்லும்போது, இக்கோயிலில் முகாமிட்டிருந்தனர் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இக்கோயிலைச் சுற்றியும் மிகப் பெரிய கோட்டை இருந்ததாகவும் பிற்காலத்தில் சிதைந்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.

பிரார்த்தனை

செண்பகம், மல்லிகை போன்ற மலர்களை பெருமாளுக்குச் சூட்டி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. பெருமாளிடம் வைக்கப்படும் நியாயமான கோரிக்கைகள், உடனே நிறைவேறுவதாகக் கூறுகின்றனர் பக்தர்கள். மேலும், இங்கு வந்து வழிபட்டு ஜாதக தோஷங்கள், திருமணத் தடை, குழந்தைப் பேறின்மை உள்ளிட்ட குறைகள் நிவர்த்திப் பெற்று பலன் அடைந்தவர்கள் ஏராளம்.

Read More
ஓதிமலை ஆண்டவர் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

ஓதிமலை ஆண்டவர் கோவில்

முருகப்பெருமான் ஐந்து முகங்களோடு தோற்றமளிக்கும் அபூர்வ காட்சி

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் இருந்து சுமார் 48 கிலோமீட்டரில் உள்ளது இரும்பொறை. அங்கிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது ஓதிமலை.முருகன் கோவில் அமைந்த மலைகளிலேயே இந்த ஓதிமலைதான் மிகவும் உயரமான மலை. இது சுமார் 3 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலையாகும். இந்த மலையில் ஏறி, முருகப்பெருமானை தரிசனம் செய்ய நாம், 1800 படிகளை கடந்து செல்ல வேண்டும்.

முருகப்பெருமானுக்கு ஐந்து முகங்கள் உண்டான கதை

பிரம்மதேவனுக்கு, உயிர்களின் உருவாக்கத்திற்கு மூலமாக இருக்கும் பிரணவத்திற்கு பொருள் தெரியவில்லை. இதனால் அவரை, முருகப்பெருமான் சிறையில் அடைத்தார். அதோடு பிரம்மன் செய்து வந்த படைப்புத் தொழிலை தானே இந்த ஓதிமலையிலிருந்து மேற்கொண்டார்.

படைப்புத் தொழிலை செய்து வந்த காரணத்தால், இந்தல முருகப்பெருமானுக்கு, நான்முகனின் நான்கு முகங்களோடு சேர்த்து மொத்தம் ஐந்து முகங்கள் உண்டு. ஐந்து முகத் தோற்றத்தில் அருளும் முருகப்பெருமானை வேறு எந்த தலத்திலும் காண முடியாது என்பது இந்த தலத்தின் கூடுதல் சிறப்பு.

ஒதி மலை என்ற பெயர் ஏற்பட்டதின் பின்னணி வரலாறு

முருகப்பெருமான் படைப்புத் தொழிலை செய்துவந்த கால கட்டத்தில், அனைத்து உயிர்களும், பூமியில் புண்ணிய ஆத்மாக்களாகவே பிறப்பு எடுத்தன. ஆகவே அவர்களுக்கு இறப்பு ஏற்படவில்லை. இதனால் பூமியில் பாரம் உண்டானது. பூமாதேவி தவித்துப் போனாள். பிறப்பும், இறப்பும் சமமாக இருந்தால்தான், உலக இயக்கம் முறையாக இருக்கும் என்பது நியதி. எனவே தேவர்கள் அனைவரும் இதுபற்றி சிவபெருமானிடம் முறையிட்டனர்

அவரும் முருகப்பெருமானை சந்தித்து, பிரம்மதேவனை சிறையில் இருந்து விடுவித்து, படைப்பு தொழிலை அவரிடமே ஒப்படைக்கும்படி கேட்டுக் கொண்டார். சுவாமிமலையில் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் விளக்கத்தை சொன்ன முருகப்பெருமான், இத்தலத்தில் வேத, ஆகம விதிகளை சிவபெருமானுக்கு உபதேசம் (ஓதியதால்) செய்தார். எனவே இந்த மலைக்கு ‘ஓதிமலை’ என்று பெயர் வந்தது. பிரம்மதேவனை சிறையில் அடைத்த இடம் ‘இரும்பறை’ என்று அழைக்கப்பட்டது. அது இந்த ஓதி மலைக்கு அருகிலேயே இருக்கிறது. இரும்பறை என்பது மருவி இரும்பொறை என்று அழைக்கப்படுகிறது.

எந்த ஒரு தொழிலையும் புதியதாகத் தொடங்குவதற்கு முன்னர், இத்தல முருகனிடம் பூ வைத்து உத்தரவு கேட்டு செய்வது இந்தப் பகுதி மக்களிடம் வழக்கமாக இருக்கிறது. தொழில் மட்டுமல்லாமல், வீட்டில் சுபநிகழ்ச்சிகள் செய்வதாக இருந்தாலும் பூ போட்டு கேட்கும் வழக்கம் இருக்கிறது.

இத்தல முருகப்பெருமானை வேண்டிக்கொண்டால், கல்வியில் நல்ல முன்னேற்றம் அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
தண்டுமாரியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

தண்டுமாரியம்மன் கோவில்

திப்பு சுல்தான் படை வீரர்களின் அம்மை நோய் தீர்த்த அம்மன்

ஒரு சமயம், திப்பு சுல்தான் தனது படைவீரர்களை கோவை கோட்டை மதில்களுக்கிடையில் ஓர் கூடாரத்தில் தங்க வைத்திருந்தார். அங்கு தங்கியிருந்த வீரர்களில் ஒருவன் அம்மனை தினமும் வழிபடுபவன். அப்போது,ஒருநாள் அவனது கனவில் தோன்றிய மாரியம்மன், தான் வீரர்கள் குடியிருக்கும் பகுதியில், வேப்பமரங்களுக்கும் காட்டுக் கொடிகளுக்கும் இடையே இருக்கும் நீர்ச்சுனைக்கு அருகில் நீண்ட காலமாக வசித்து வருவதை உணர்த்தி, தன்னை அங்கேயே வழிபடும்படி கட்டளையிட்டாள்.

கனவில் மாரியம்மனை தரிசித்த அவ்வீரன், மறுநாள் காலையில், அம்மன் உணர்த்திய இடத்திற்கு சென்று வேப்ப மரங்களின் இடையே தேடினான். அப்போது அங்கே கனவில் கண்ட அம்மன் வீற்றிருந்தாள். அங்கேயே அம்மனை வணங்கிய அவன் சக படைவீரர்களுக்கும், கனவில் தோன்றி அருள்புரிந்த அம்மன் வீற்றிருந்த இடத்தை காண்பித்தான். பின், படை வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி இவ்விடத்தில் ஆதியில் சிறிய மேடை போல அமைத்து வழிபட்டு, காலப் போக்கில் பெரிய கோயிலாக எழுப்பினர். 'தண்டு' என்றால் 'படை வீரர்கள் தங்கும் கூடாரம்' என்று பொருள். படைவீரர்கள் தங்கும் இடத்தில் கிடைத்த அம்மன் என்பதால் இந்த அம்மன் 'தண்டுமாரியம்மன்' என்று அழைக்கப்பட்டாள். தண்டு என்பதற்கு 'தங்கு' என்பது பொருள். தங்கும் (தண்டு) இடமாக இருந்ததால் அம்மனுக்கு 'தண்டு மாரியம்மன்' என பெயர் உண்டானது. ஆங்கிலத்தில் 'டென்ட்' என்பது கூடாரத்தை குறிப்பதால் 'டென்ட்' மாரியம்மன் என்றும் பெயருண்டு.

படை வீரர்கள் தண்டு மாரியம்மனை வணங்கி வந்த நேரத்தில், ஒரு சமயம், பெரும்பாலான வீரர்களுக்கு அம்மை நோய் தோன்றியது. அவர்கள் அம்மை விலக அம்மனை வணங்கி, தண்டுக்கீரை சாறால் அபிஷேகம் செய்து வழிபட்டு, அத்தீர்த்தத்தைப் பருகிட, அனைவருக்கும் ஒரே நேரத்தில் அம்மை நோய் குணமான அதிசயம் நிகழ்ந்தது. இந்த நிகழ்ச்சியும் அம்மனுக்கு 'தண்டு மாரியம்மன்' என்ற பெயர் ஏற்பட காரணமாயிற்று.

தண்டு மாரியம்மன்: கருவறையில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். உற்சவரின் பெயர், அகிலாண்ட நாயகி. தினமும் மாலையில் தங்கத்தேர் பவனி நடக்கிறது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கும். திருமணம் நிறைவேற கன்னிப்பெண்கள் ஆடி வெள்ளியில் அடிப்பிரதட்சணம் செய்கின்றனர். சித்திரை மாதத்தில் அக்னி (பூ) சட்டி ஊர்வலம் நடக்கும்.

அம்மை நோய் குணமாக, தொழில் விருத்தியடைய, குடும்பம் சிறக்க, தீராத பிணிகள் தீர்ந்திட இந்த அம்மனை பிரார்த்தித்துக் கொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு பால் அபிசேகம் செய்து பால்குடம், அக்னிசட்டி எடுத்தும் அங்க பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்..

Read More
வேலாயுதசுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

வேலாயுதசுவாமி கோவில்

மூலவர் முருகப்பெருமான் வேலுடன் காட்சி தரும் அரிய கோலம்

கிணத்துக்கடவு வேலாயுதசுவாமி கோவிலில், மூலவர் முருகப்பெருமான் கையில் வேலுடன் காட்சி தருகிறார். மூலவரின் இத்தகைய தோற்றம் வேறு எந்த தலத்திலும் காண்பதற்கு அரிது. இத்தலம் கோவையிலிருந்து 21 கி.மீ. தொலைவிலும், பொள்ளாச்சியில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.சில நூற்றாண்டுகளுக்கு முன் பொள்ளாச்சியை அடுத்துள்ள புரவிபாளையத்தில் ஜமீன்தார் ஒருவர் வசித்து வந்தார். சிறந்த முருக பக்தரான இவர், அடிக்கடி பழனிக்குச் சென்று முருகனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு முறை, ஜமீன்தார் விரதமிருந்து பழநி சென்றார். பழநி அருகிலுள்ள ஆயக்குடி ஜமீனில் இவரை விருந்துக்கு அழைத்தனர். ஆயக்குடி சென்ற இவர், பழநி முருகனை தரிசிக்காமல் விருந்துண்ண மாட்டேன் என்று கூறிவிட்டு ஏதோ காரணத்தால், பழனி முருகனை தரிசிக்காமல், புரவி பாளையத்திற்கே திரும்பிவிட்டார். பழநி முருகனை தரிசிக்காமல் வந்து விட்டோமே என்ற கவலையினாலேயே ஜமீன்தாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அன்றிரவு, ஜமீன்தாரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி, கிணத்துகடவு என்ற ஊரில் உள்ள மலை மீது தன் பாதம் பதிந்துள்ளதாகவும், அதனை பூஜிக்கும்படியும் கூறி மறைந்தார். இதையடுத்து முருகன் குறிப்பிட்ட கிணத்துகடவு பொன்மலை மீது சென்று பார்த்த போது ஒரு இடத்தில் முருகனின் பாதம் இருப்பதைக்கண்டு மகிழ்ந்து அதற்கு பூஜை செய்து வழிபட ஆரம்பித்தார். மறுபடியும் முருகன் ஜமீன்தாரின் கனவில் வேலுடன் தோன்றி, அதே தோற்றத்தில் மலைமீது மூலவர் பிரதிஷ்டை செய்து சன்னதி அமைக்க வேண்டும் என்று கூற, சன்னதியும் அமைக்கப்பட்டது. கையில் வேலுடன் மூலவர் அமைக்கப்பட்டதால் இங்குள்ள முருகன் 'வேலாயுத சுவாமி' என அழைக்கப்பட்டார்.பெற்றோரிடம் போபித்துக்கொண்டு பழநியில் குடி கொண்ட முருகப்பெருமான், இந்த கிணத்துக்கடவு பொன்மலையில் பாதம் பதித்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே இங்கு மூலஸ்தான முருகனுக்கு பூஜை நடத்தும் முன்பாக, பாறையிலுள்ள முருகனின் பாதத்திற்கே முதல் பூஜை செய்யப்படுகிறது.அருணகிரிநாதர் இந்த தலத்தை ‘கனககிரி’ என்று பாடி இருக்கிறார். 'கனக' என்பது பொன்னையும் 'கிரி' என்பது மலையையும் குறிக்கும். .திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க பக்தர்கள் வேலாயுத சுவாமியை வேண்டிக் கொள்கிறார்கள்.

Read More
சுப்பிரமணிய சுவாமி கோவில்
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

சுப்பிரமணிய சுவாமி கோவில்

தம்பிக்கு உகந்த விநாயகர்

மருதமலை முருகன் கோயில் , கோயம்புத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள மருதமலை மேல் அமைந்துள்ளது. மருதமலையின் அடிவாரத்திலிருந்து நடை பயணமாகச் செல்லும்போது, பாதையின் தொடக்கத்திலேயே காட்சி தருகிறது தான்தோன்றி விநாயகர் சந்நிதி. இச்சன்னதியில் விநாயகர், சுயம்புவாக இருக்கிறார். இவருடைய தோற்றம் ஒரு குட்டி யானை படுத்திருப்பது போன்று இருக்கின்றது. யானைத்தலை மட்டும் உள்ள இவருக்கு உடல் இல்லை. இவர், மலையிலுள்ள முருகன் சன்னதியை நோக்கி, தும்பிக்கையை நீட்டி காட்சி தருவதுவிசேஷம். விநாயகரின் இந்தக் கோலம் காண்பதற்கு அரிதாகும். விநாயகரின் அழகையும் பெருமைகளையும் மருதமலை தான்தோன்றி பதிகத்தில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் கூறியுள்ளார்.அருகில் மற்றொரு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சுயம்பு விநாயகருக்கு பூஜை செய்த பின்பே, பிரதான விநாயகருக்கு பூஜை நடக்கிறது.

முருகனுக்கு உகந்த நாட்களான கிருத்திகை, சஷ்டி, விசாகம் மற்றும் அமாவாசை நாட்களில் இவருக்கும் விசேஷ பூஜை நடக்கிறது. எனவே இவரை, 'தம்பிக்கு உகந்த விநாயகர்' என்றும் அழைக்கிறார்கள். மருதமலை சுப்பிரமணியரை தரிசிக்கச் செல்பவர்கள் இவரை வணங்கிவிட்டுச் செல்ல வேண்டுமென்பது ஐதீகம்."

Read More
சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

சுப்பிரமணிய சுவாமி கோவில்

கல்லால் ஆன கொடிமரம் அமைந்திருக்கும் முருகன் கோவில்

பொதுவாக கோவில்களின் கொடிமரம் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். ஆனால் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ராஜ கோபுரத்தை தாண்டி நாம் உள்ளே சென்றால், முதலில் கல்லாலான கொடிமரத்தை காண முடியும். இது ஒரு வித்தியாசமான அமைப்பாகும். இக்கொடிமரத்துக்கு முன் வலம்புரி விநாயகர் அமர்ந்திருக்கிறார். அவர்முன் வைக்கப்பட்டுள்ள பெரிய மயில்முக குத்துவிளக்கு,மிக்க கலைநயத்துடன் விளங்குகின்றது. மயில்முக விளக்கின் அடிப்புற ஆமை வடிவமும் அதனைத் தொடர்ந்த மேற்தண்டிலுள்ள பாம்பு உருவங்களும் சிறப்பாக அமைந்திருக்கின்றன.

Read More
சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

பஞ்சமுக விநாயகர்

பொதுவாக விநாயகர் அரசமரத்தடியில்தான் அமர்ந்து அருள்பாலிப்பார். ஆனால், கோவை மருதமலையில், முருகன் கோயிலுக்கு அருகில் அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை ஆகிய மரங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து வளர்ந்திருக்கின்றன. இம்மரங்களுக்கடியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பவர்தான் பஞ்சமுக விநாயகப் பெருமான். நடைப்பயணமாக மருதமலையேறி வருவோர் இந்த விநாயகரைத் தாண்டிதான் முருகன் சன்னிதிக்குச் செல்ல வேண்டும்.

விநாயகருக்கு ஐந்து முகங்கள் ஒரே வரிசையில் அமைந்திருப்பதும். வலம்புரி இடம்புரி துதிக்கைகள் இருப்பதும் சிறப்பு அம்சமாகும். பஞ்சமுக விநாயகர் பஞ்ச விருட்சத்தின் கீழ் காட்சி தருவது காணக்கிடைக்காத ஒன்றாகும். இந்த விருட்சத்தின்கீழ் அமர்ந்து தியானம் செய்யும்போது இதன் காற்று பல்வேறு பிணிகளைத் தீர்க்கும் வல்லமை பெற்றது என்பதும், பாம்பாட்டி சித்தர் உள்பட பல்வேறு சித்தர்களும் இங்கு தவம் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது.

முருகனுக்கரிய விழா தினங்களிலும், விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி நாட்களிலும் பஞ்சமுக விநாயகருக்கு சிறப்பு பூஜை. ஆராதனைகள் வெகுவிமர்சையாக நடைபெறுகின்றது.

Read More
ஈச்சனாரி விநாயகர் கோவில்
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

ஈச்சனாரி விநாயகர் கோவில்

தன் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்த விநாயகர்

கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 10வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது ஈச்சனாரி விநாயகர் கோவில். இங்கு விநாயகர் அருள்பாலிப்பதற்கு பின்னயில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.

கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 10வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது ஈச்சனாரி விநாயகர் கோவில். இங்கு விநாயகர் அருள்பாலிப்பதற்கு பின்னணியில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.இங்குள்ள மூலவர் சிலையை பேரூர் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக மதுரையில் இருந்து கொண்டு வந்தனராம். வழியில் வண்டியின் அச்சு முறிந்து தற்போது கோவில் இருக்கும் இடத்தில் நின்று விட எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டும் வண்டியை மேற்கொண்டு நகர்த்த முடியவில்லை. பின்னர் விநாயகர் இவ்விடத்திலேயே இருக்க விரும்புகிறார் என எண்ணி அங்கேயே கோவிலை நிர்மாணித்தனர். ஈச்சனாரி எனும் இடத்தில் வாசம் செய்வதால் ஈச்சனாரி விநாயகர்' என்றே இவர் அழைக்கப்படுகிறார்.கோவையில் புதிதாக வாகனங்களை வாங்குவோர் தங்கள் வாகனங்களுக்கு முதல் பூஜை போடுவது இங்குதான் என்பது சிறப்பம்சமாகும.

Read More
காரண விநாயகர் கோவில்
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

காரண விநாயகர் கோவில்

கருவறையில் விநாயகரும் நந்தியும் சேர்ந்து காட்சி தரும் தலம்கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மத்தம் பாளையத்தில் அமைந்துள்ளது காரண விநாயகர் கோவில். ஏதோ ஒரு காரணத்தால் விநாயகர் இந்த இடத்தில் அமர்ந்ததால் காரண விநாயகர் என அழைக்கப்படுகிறார். கருவறையில் விநாயகரின் அருகில் நந்தி இருப்பது ஒரு அரிதான காட்சியாகும். காரண விநாயகரின் சந்நிதி அருகில் அவரது தம்பியான காரண முருகனும், மாமாவான பெருமாளும், ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில், கால்நடைகளின் விருத்திக்காகவும், நோயற்ற வாழ்க்கை வாழவும் பிரார்த்தனை தலமாக விளங்குகிறது.

Read More