ஆதிகுடி அங்குரேசுவரர் கோவில்
சனி பகவானின் கால் ஊனம் சரியான தலம்
உடல் ஊனம், பக்கவாதம், விபத்தால் அங்கங்களின் வலிமை இழப்பு போன்ற குறைபாடுகளை போக்கும் தலம்
திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஆதிகுடி அங்குரேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் பிரேமாம்பிகை. அங்குரம் எனக் கூறப்படும் மண்வெட்டியால் தோண்டியபோது வந்த லிங்கம் என்பதால், இக்கோவில் இறைவனுக்கு அங்குரேசுவரர் எனப் பெயர் உண்டானது.
இக்தலத்தில் வழிபட்டுதான் சனி பகவானின் கால் ஊனம் சரியானது. இக்கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் மிகப் பெரிய அளவில் விமல லிங்கம் அமைந்துள்ளது. இங்கு சனி பகவான் எப்போதும் விமல லிங்க மூர்த்தியை வழிபடுவதால், ஆதிகுடி அங்குரேசுவரர் கோவிலில், விமலலிங்க மூர்த்தி வழிபாடே சனி பகவான் வழிபாடாகவும் கருதப்படுகிறது.
விபத்தால் அங்க வலிமை இழந்திருந்தால், நடப்பு சந்ததியினர் ஊனம் அடைந்திருந்தால், பக்கவாதம் போன்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இக்கோவிலில் காட்சியளிக்கும் விமல லிங்கத்தின் வலதுபுறத்தில் நன்றாகத் திரண்ட வெண்ணெய் காப்பும், இடதுபுறத்தில் வெண்ணெய் காப்பின் மேல் நிறைய மாதுளை முத்துகளைப் பதித்து வழிபட்டால் குணம் நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இத்தலம் நீத்தார் கடன் செய்யவும் உகந்த திருத்தலமாகும். இவ்வூரை காசிக்கு இணையாகச் சொல்வதுண்டு. இக்கோவிலுக்கு எதிரிலேயே மயானம் உள்ளது. தென் தமிழகத்தில் ஸ்ரீவாஞ்சியம் மற்றும் ஆதிகுடி என்ற இவ்விரு சிவத்தலத்திற்கு எதிரில் மட்டுமேதான் சுடுகாடு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
விமல லிங்கம்