
திருமாகாளம் மாகாளேசுவரர் கோவில்.
மறுபிறவியை தவிர்க்கும் அம்மனின் நெய்க்குளம் தரிசனம்
திருமணத்தடை நீங்க அரளி மாலை வழிபாடு
திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் என்னும் ஊருக்கு அருகில் உள்ள தேவார தலம் திருமாகாளம் மாகாளேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் பட்சயாம்பிகை (அச்சம் தவிர்த்த நாயகி). காளி அம்பன், அம்பாசூரன் என்னும் அசுரர்களை வதைத்த தோஷம் நீங்க இத்தலத்து இறைவனை வழிபட்டதால், அவருக்கு மாகாளநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் தான் சோமாசிமாற நாயனார் சோம யாகம் செய்தார்.
மாகாளம் என்ற பெயர் பெற்ற சிவதலங்கள் இந்தியாவில் மூன்று இடங்களில் இருக்கின்றன. அவை வட இந்தியாவிலுள்ள உஜ்ஜயனி மாகாளம், தொண்டை நாட்டுத் தலமான இரும்பை மாகாளம், மற்றும் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான அம்பர் மாகாளம் என்ற இத்தலம்.
இத்தலத்து அம்பாள் பட்சயாம்பிகை (அச்சம் தவிர்த்த நாயகி), பக்தர்களின் மன துயரத்தையும், மனதில் உள்ள அச்சத்தையும் தீர்க்கும் நாயகியாக போற்றப்படுகிறார்.
இத்தலத்தில் அம்பாள் அச்சம் தீர்த்த நாயகிக்கு நெய் குளம் தரிசனமும் அன்ன பாவாடை சேவையும் மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது. கருவறைக்கு முன்பாக 15அடி நீளத்திற்கு வாழை இலையை பரப்பி அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர். அத்துடன் புளி சாதம், தயிர்சாதம் போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைக்கப்படும். சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம் போல அமைத்து அங்கே இரண்டரை டின் தூய நெய்யைக் கொண்டு நிரப்புவர்.
அதன் பின்னர் கருவறையின் திரையை விலக்கினால் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உருவம் நெய் குளத்தில் பிரதிபலிக்கும். இதனை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது. இதனால் இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் இத்தலம் வந்து சிவப்பு அரளிப்பூ மாலைகள் இரண்டு தொடுத்து அதை இறைவன், இறைவிக்கு சார்த்தி ஐந்து வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டு, பின்பு ஒரு மாலையைப் பெற்று கழுத்தில் அணிந்து கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது இக்கோவிலின் தனி சிறப்பாகும்.

பிளாஞ்சேரி கைலாசநாதர் கோவில்
காசியைப் போல் அஷ்ட பைரவர்கள் அருள் பாலிக்கும் தலம்
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் இருந்து வடக்கே 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பிளாஞ்சேரி கைலாசநாதர் கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சியம்மன். காசியில், அஷ்ட பைரவர்களுக்கும் தனித்தனி கோயில்கள் அமைந்துள்ளன. தமிழகத்திலும் அஷ்ட பைரவர்கள் அருளும் ஒரு திருத்தலம் தான் பிளாஞ்சேரி. இங்கே தனித்தனி சன்னதிகளில் அஷ்ட பைரவர்களும் அருள்பாலிக்க, சரபசூலினியும் குடிக் கொண்டிருக்கிறாள்.
சிவபெருமானின் திருவடிவங்களில் ஒன்று ஸ்ரீசரபமூர்த்தி வடிவம். இரண்யகசிபுவை வதைத்த நரசிம்ம மூர்த்தியின் ஆக்ரோஷத்தைத் தணிக்க, சிவபெருமான் எடுத்த திருவடிவே ஸ்ரீசரபமூர்த்தி வடிவம். இந்த மூர்த்தியின் வலப்புற இறக்கையில் இருந்து தோன்றியவளே ஸ்ரீசரப சூலினி. இந்தத் தலத்தில் ஸ்ரீசரப சூலினிக்குக் காவலாக எட்டு பைரவர்கள் தனித் தனிச் சன்னதிகளில் காட்சி தருகிறார்கள். சரபசூலினிக்கு மட்டுமல்ல, இங்கு வந்து வழிபட்டுச் செல்லும் பக்தர்களுக்கும் காவலாக இருந்து அருள்பாலிக்கிறார்கள் இந்த அஷ்ட பைரவர்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்கள். இவர்கள் எண்மரையும் வழிபட்டால், எட்டுவிதமான பேறுகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
எட்டு பேறுகள் அருளும் அஷ்ட பைரவர்கள்
அசிதாங்க பைரவர்: அன்ன வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் இவர், நான்கு திருக்கரங்களோடு அருள்கிறார். ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புக்தி நடைபெறும் அன்பர்களும் ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரக்காரர்களும் வழிபடவேண்டிய பைரவர் இவர். இவரை வழிபட்டால் கல்வி, கலை, செல்வம், பேச்சாற்றல் ஆகியவற்றில் சிறந்து விளங்கலாம். கலைத் துறையினர் இவரை வழிபட்டால் மகத்தான வெற்றிகளைப் பெறலாம்.
குரு பைரவர்: ரிஷப வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். சூரிய திசை, சூரிய புக்தி நடைபெறும் ஜாதகர்களும் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபடவேண்டிய பைரவர் இவர். பித்ரு தோஷங்கள் நீங்கவும், திருமணத் தடைகள் விலகவும், கணவன்- மனைவி இடையே பிரச்சினைகள் நீங்கிக் குடும்ப ஒற்றுமை ஏற்படவும் இவரை வழிபட வேண்டும்.
சண்ட பைரவர்: மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி நடைபெறும் ஜாதகர்களும் அவிட்டம், மிருகசீரிடம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபடவேண்டிய பைரவர். காரியத் தடைகள் அகலவும், துன்பங்கள் நீங்கவும், ரத்தம் சம்பந்தமான வியாதிகளில் இருந்து விடுபடவும் இவரை வழிபடுவது, விசேஷம்.
குரோதன பைரவர்: கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். புதன் திசை, புதன் புக்தி நடைபெறும் ஜாதகர்களும் ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர். கடன்தொல்லை தீரவும், செல்வம் பெருகவும், தோல் வியாதிகள் விலகவும் இவரை வழிபடவேண்டும்.
உன்மத்த பைரவர்: குதிரை வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். கேது திசை, கேது புக்தி நடைபெறும் ஜாதகர்களும் அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர். சகலவிதமான திருஷ்டி தோஷங்கள் நீங்கவும், ஏவல், பில்லி-சூன்யம் போன்ற தீவினைகள் விலகவும், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறவும் இவரை வழிபடவேண்டும்.
கபால பைரவர்: யானை வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். நான்கு திருக்கரங்களுடன் திகழ்பவர். சுக்கிர திசை, சுக்கிர புக்தி நடைபெறும் ஜாதகர்களும் பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய மூர்த்தி இவர். இவரை வழிபட்டால் ஜனவசியம், ஆட்சி-அதிகாரம், அரசியலில் உயர் பதவிகள் ஆகியவை வாய்க்கும்.
பீஷண பைரவர்: சிம்ம வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். நான்கு திருக்கரங்களோடு அருள்கிறார். குரு திசை, குரு புக்தி நடைபெறும் ஜாதகர்களும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர். குழந்தை பாக்கியம் கிடைக்கவும், இதயம் தொடர்பான பிணிகள், பக்கவாதம் ஆகியவை விலகவும் இவரை வழிபடவேண்டும்.
சம்ஹார பைரவர்: நாய் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். பத்து திருக்கரங்களைக் கொண்டவர். சனி திசை-சனி புக்தி மற்றும் ராகு திசை-ராகு புத்தி நடைபெறும் ஜாதகர்களும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரக்காரர்களும் வழிபட வேண்டிய பைரவர் இவர். சத்ரு உபாதைகள் நீங்கவும், கண்டங்களிலிருந்து தப்பிக்கவும், விபத்துகளில் சிக்காதிருக்கவும், வாக்குப் பலிதம் வாய்க்கவும் இவரை வழிபட்டு பலன் பெறலாம்.
ஆயுள் கண்டம் இருப்பவர்கள் வழிபட வேண்டிய பரிகார தலம்
ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம் (உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கண்டம்) இருப்பவர்களுக்கும் சிறந்த பரிகாரத் தலம் இது. அவர்கள், தேய்பிறை அஷ்டமியன்று மாலை 6 மணியளவில் அஷ்ட பைரவர்களுக்கு நடைபெறும் சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டால், தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்
பெருமாள் மீசையோடு காட்சி தரும் திவ்ய தேசம்
சென்னை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள திவ்ய தேசம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 61 வது திவ்ய தேசம். கருவறையில் மூலவர் பார்த்தசாரதி பெருமாள், தன் குடும்ப சமேதராக காட்சியளிக்கிறார். இந்தப் பெருமாள் ,அர்ஜுனனுக்கு உதவியாக வந்த கிருஷ்ணாவதாரம் என்பதால்,அருகில் ருக்மிணி தாயார் இருக்கிறாள். வலப்புறத்தில் அண்ணன் பலராமர், இடதுபுறத்தில் தம்பி சாத்யகி, மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் ஆகியோரும் இருக்கின்றனர்.
அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்ததால் இந்தப் பெருமாள் பார்த்தசாரதி என்று அழைக்கப்படுகிறார். ஒன்பது அடி உயரம் உள்ள இந்த பெருமாள், சாரதிக்குரிய மீசையோடு காட்சியளிப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இந்த இடத்தில் மட்டும் தான் கிருஷ்ண பகவான் மீசையுடனும், தன் பிரதான ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார். அதற்கு காரணம் மகாபாரதப் போரின் தொடக்கத்தில், இவர் எந்த ஆயுதமும் ஏந்தாமல் இருப்பதாக வாக்கு கொடுத்ததால் போரின் தொடக்கம் மற்றும் முடிவினை தெரிவிக்கும் சங்கத்தை மட்டும் ஏந்தியுள்ளார். இங்கு உற்சவ மூர்த்தி தன் கதாயுதம் இல்லாமல் செங்கோலுடன் காட்சி தருகிறார்.
திருப்பதி லட்டு, உப்பிலியப்பன் கோவில் உப்பில்லா சாதம், மதுரை கள்ளழகர் கோவில் தோசை ஆகிய பிரசாதங்கள் பிரசித்தி பெற்றிருப்பதைபோல, இக்கோவிலில் சர்க்கரைப்பொங்கல் பிரசித்தி பெற்ற பிரசாதமாகும்.

உத்திரகோசமங்கை வராகி அம்மன் கோவில்
உலகின் முதல் வராகி அம்மன் கோவில்
காளியம்மன் போல் அமர்ந்திருக்கும் வராகி அம்மனின் வித்தியாசமான தோற்றம்
ராமநாதபுரத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ளது மிகவும் பழமையான சுயம்பு வராகி அம்மன் கோவில். இந்த வராகி அம்மனுக்கு மங்கை மாகாளியம்மன் என்ற பெயரும் உண்டு. உலகின் முதல் சிவாலயம் என்று கருதப்படும் உத்திரகோசமங்கை மங்களநாதர் கோவிலின் காவல் தெய்வம் இந்த வாராகி அம்மன். இந்த இரு கோவில்களும், சதுர் யுகங்களையும் கடந்த பழமையான கோவில்கள் ஆகும். 'மண் முந்தியதோ, மங்கை முந்தியதோ' என்ற சொற்றொடர் இத்தலத்தின் தொன்மையினைக் குறிக்கும். எனவே இந்த வராகி அம்மன், உலகின் முதன்மையான வராகி அம்மன் என்று போற்றப்படுகின்றாள்.
இந்தியாவில் வராகி அம்மனுக்கு உத்தரகோசமங்கை, தஞ்சாவூர், காசி உள்ளிட்ட சில இடங்களில்தான் முதலில் கோவில்கள்/ சன்னதிகள் ஏற்பட்டன. அவற்றில் மிக மிக பழமையானது தான் உத்தரகோசமங்கையில் உள்ள மங்கை மாகாளி என்ற சுயம்பு வராகி அம்மன் கோவில்.
ஆறடி உயரத்தில் எட்டு திருக்கரங்களுடன் மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தரும் சுயம்பு வராகி அம்மன், வலது கரம் அபயம் அளிக்க, இடது கரம் வரதம் காட்ட, மற்ற கரங்களில் சங்கு, சக்கரம், ஏர்கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம் தாங்கிட, காளியம்மன் போல வலது காலை குத்த வைத்து, இடது காலை தொங்கவிட்டு உக்கிரமாக அமர்ந்த கோலத்தில் வராகி அன்னை இருக்கிறாள். வடக்கு திசை நோக்கி இருக்கும் அவள் காலடியில் பஞ்ச பூதங்களும் அடக்கம். இதனைக் குறிக்கும் வகையில் 5 பூதகணங்கள் அவள் காலடியில் உள்ளனர்.
அன்னையின் உக்கிரத்தை தணிக்கும் பொருட்டு அவளது இடது பக்கம் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளார். இவர் அம்பாளின் கோபத்தை பெற்றுக் கொண்டு, பக்தர்களுக்கு அருள் மட்டும் கிடைக்க வழிவகை செய்கிறார். இப்படி விநாயகர் அருகில் இருக்கும் வராகி அம்மனை, வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது
வராகி அம்மனுக்கு மஞ்சளை அரைத்து சாத்தும் பரிகாரம்
வராகி அம்மனுக்கு மஞ்சள் அரைத்து சாத்துவது இந்த கோவிலில் சிறந்த பரிகாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஏனென்றால் அன்னையின் முகம் காட்டுப்பன்றி வடிவம் கொண்டது. பன்றிகள் பொதுவாக பூமியை கிளறி கிழங்கு வகைகளை உண்ணும். மஞ்சளும் பூமிக்கடியில் விளையும் ஒரு கிழங்கு வகை என்பதாலும், அதோடு மங்களகரமான பொருள் என்பதாலும் வராகி அம்மனுக்கு மஞ்சளை அரைத்து சாத்தும் வழக்கம் ஏற்பட்டது.
திருமணம், குழந்தை பேறு, வேலைவாய்ப்பு, தொழில் அபிவிருத்தி, பணம் மற்றும் சொத்து பிரச்சினை, வழக்கு மற்றும் நோய் நொடிகள் தீர பக்தர்கள் மஞ்சளை அரைத்து அம்பாளின் பாதத்தில் சாத்தி கோரிக்கைகளை சொல்லி வழிபடுவார்கள். அன்னையின் பாதத்தில் சாத்திய மஞ்சளை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள். அதனை சிறிதளவு எடுத்து 3 நாட்கள் சாப்பிட வேண்டும். பெண்கள் உடலுக்கு பூசியும் குளிக்கலாம்.
பக்தர்கள் மஞ்சள் அரைத்து சாத்துவதற்கு மஞ்சள் பொடியை பயன்படுத்தக் கூடாது. கோவிலுக்கு வந்து தான் மஞ்சள் கிழங்கை அரைத்து கொடுக்க வேண்டும். இதற்காக கோவில் வளாகத்தில் 180 அம்மிகற்கள் வைக்கப்பட்டு உள்ளன.
மற்றொரு சிறப்பு பரிகாரமாக தேங்காய் விளக்கு ஏற்றுதலும் செய்யப்படுகிறது.
வளர்பிறை, தேய்பிறை பஞ்சமி திதியில் வராகி அம்மனை விரதமிருந்து வழிபட நல்ல பலன் கிடைக்கும். வராகி அம்மனிடம் மேற்கண்ட பரிகாரங்கள் மூலம் வைக்கும் வேண்டுதல்கள் யாவும் 3 முதல் 6 மாத காலத்தில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

முத்தாலங்குறிச்சி முக்குறுணி அரிசி விநாயகர் கோவில்
பிரம்மாண்டமான முக்குறுணி அரிசி விநாயகர்
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முத்தாலங்குறிச்சியில், தாமிரபரணி நதிக்கரையில் மிகவும் பழமையான, பிரம்மாண்டமான முக்குறுணி அரிசி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரம்மாண்டமான தோற்றத்துடன் காட்சி அளிக்கும் இவர் ஐந்தரை அடி உயர திருமேனி உடையவர் முப்புரி நூல் அணிந்து, பேழை வயிற்றுடன் அமர்ந்து இருக்கிறார். கூரையில்லாமல் வேப்பமரத்தடியில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் இந்த விநாயகருக்கு கூரை போட முயற்சிக்கையில் பல தடங்கல்கள் ஏற்பட்டன. அதனால் கூரை போடுவதற்கு அமைக்கப்பட்ட நான்கு கல் தூண்கள் அப்படியே இன்றளவும் உள்ளன. இந்தப் பிள்ளையாருக்கு எண்ணெய்க் காப்பு செய்ய வேண்டும் என்றால் பத்து லிட்டர் எண்ணெய் தேவைப்படும். வஸ்திரம் அணிவிக்க எட்டுமுழ வேஷ்டி வேண்டும். இரண்டு பேர் சேர்ந்துதான் வஸ்திரம் சாத்துவார்கள்.
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த விநாயகருக்கு, முக்குறுணி (18 படி) அளவு அரிசியை மாவாக்கி, பெரிய அளவில் ஒரே ஒரு மோதகம் செய்து படைப்பார்கள்.

அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில்
அனுமனின் தாகத்தை தீர்த்த முருகப்பெருமான்
கோவையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் மேல் இருக்கிறது, அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில். மலையின் மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்ல 586 படிக்கட்டுகள் உள்ளன.
அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிட்டு இந்த மலை வழியாக வரும் போது, அவருக்கு தாகம் ஏற்பட்டதால், அப்போது அவர் இம்மலையில் உள்ள முருகனை வேண்டியதால், அவர் தனது வேல் கொண்டு ஒரு சுனையை உருவாக்கி அனுமனின் தாகத்தை தீர்த்தார். இங்கு அனுமார் தீர்த்தம் உள்ளதால் இந்த பகுதி அனுமார்வாவி என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் மருவி அனுவாவி என்று அழைக்கப்பட்டு வருகிறது. அனுமனுக்கு குமரன் அருள்பாலித்ததால் 'அனுமக்குமரன் மலை' என்ற பெயரும் உண்டு.
கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண கோலத்தில் காட்சியளிப்பதால், திருமணம் ஆகாதவர்கள் இங்கு சென்று வேண்டினால் உடனடியாக திருமணம் ஆகும் என்றும், குழந்தை இல்லாதவர்கள் வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும், இங்குள்ள அனுமன் குளத்தில் அதிகாலையில் குளித்தால் சகல நோயும் உடனடியாக குணமாகும் என்பது ஐதீகம்.

களக்காடு வரதராஜ பெருமாள் கோவில்
மூலிகைகளாலும், படாச்சாரமும் கலந்து தயார் செய்யப்பட்ட பெருமாள் விக்கிரகம்
வரதராஜப் பெருமாளும், வெங்கடாஜலபதியும் கருட சேவை சாதிக்கும் சிறப்பு
திருநெல்வேலியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள, களக்காடு என்னும் ஊரில் அமைந்துள்ளது வரதராஜ பெருமாள் கோவில். தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற வைணவ தலமாகத் திகழும் இக்கோவில். சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
இங்கு மூலவராக வீற்றிருக்கும் வரதராஜ பெருமாள் சிலை மூலிகைகளாலும், படாச்சாரமும் அதாவது மரமும் கலந்து தயார் செய்யப்பட்ட விக்கிரகமாகும். 6 அடி உயரமுள்ள பெருமாள் கிழக்கு நோக்கி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காட்சியளிக்கிறார். வரதராஜ பெருமாள் சன்னதிக்குத் தென்புறம் ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் அலமேலுமங்கை, பத்மாவதி தாயாருடன் கிழக்கு நோக்கியே தனி சன்னதி கொண்டிருப்பது இக்கோயிலின் தனிச் சிறப்புகளில் ஒன்றாகும். இந்தத் தலத்தில் ராஜகோபுரம் இல்லை அதற்குப் பதிலாக வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கடாஜலபதி சன்னதிகளில் இரு கோபுரங்கள் காணப்படுகின்றன.
இக்கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை அன்றும், பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழாவின் 5ம் நாள் இரவிலும், 2 கருட வாகனங்களில் தனித்தனியாக வரதராஜப் பெருமாளும், வெங்கடாஜலபதியும் வீதி உலா வருவது இத்தலத்தின் மற்றும் ஒரு தனிச்சிறப்பாகும்.

அம்பகரத்தூர் அஷ்டபுஜ பத்ரகாளியம்மன் கோவில்
அம்பகரத்தூர் அஷ்டபுஜ பத்ரகாளியம்மன்
வெள்ளைத் துணி அணிவிக்கப்படும் காளியம்மன்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில், சனி பகவான் திருத்தலமான திருநள்ளாறிலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அம்பகரத்தூர் என்னும் தலத்தில் அமைந்துள்ளது, அஷ்டபுஜ பத்ரகாளியம்மன் கோவில். தமிழக எல்லையில் அமைந்துள்ள இத்தலம், பேரளம் என்ற ஊரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது..உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் இக்கோவில், வட இந்தியாவுக்கு அடுத்த இரண்டாவது காளியம்மன் தலமாக விளங்குகின்றது.
அம்பர் மாகாளத்தில் அம்பன், அம்பராசுரன் என்ற இரண்டு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் மக்களை துன்பப்படுத்தி வந்தனர். அனைவரும் சிவபெருமானை வணங்கி காத்தருள வேண்டிக்கொண்டனர். அம்பிகையின் திருவருளால் அம்பராசுரனை அம்பன் கொன்று விட்டான். பின்னர் அவன் தேவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்க உடனே காளியாக மாறி அம்பனை விரட்டுகிறாள். ஓடிக்கொண்டு இருக்கும் போது அந்த அசுரன் கிடாமங்கலம் என்று ஊரில் எருமை கிடாவாக மாறுகிறான். அம்பகரத்தூரில்தான் அவன் காளியால் சம்ஹாரம் செய்யப்படுகிறான்.
அரக்கனை சம்ஹாரம் செய்த உடன் காளிக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு இரண்டு அசுர முகமானது தலையில் ஒன்றும் காதில் ஒன்றும் தோன்றி விடுகிறது. இதனால் எம்பெருமானிடம் சென்று முறையிட்டுகிறாள். அவர் உபதேசித்தப்படி அம்பகரத்தூரில் இருந்து கோவில் திருமாகாளம் சென்று தனது திருக்கரங்களால் சிவலிங்கம் பிடித்து வைத்து பூஜை செய்து தோஷ நிவர்த்தி பெறுகிறார்.
ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் இங்கு திருவிழா நடக்கும். மகிஷாசுரன் சம்ஹார நினைவு வைபவம் மிகவும் முக்கியமான நிகழ்வாக கொண்டாடப்படும். ஏராளமான பக்தர்கள் பல ஊர்களில் இருந்து திரண்டு வருவார்கள்.
கருவறையில், காளியம்மன் வடதிசை நோக்கிக் காட்சி தருகிறாள். நீண்ட பற்கள், கோபமுகம். வலக்கரங்கள் நான்கில் சூலம், கத்தி, உடுக்கை, கிளி; இடக்கரங்கள் நான்கில் பாசம், கேடயம், மணி, கபாலம் ஏந்தியுள்ளாள். வலப்பாதத்தை மடித்து இடப்பாதத்தை அம்பரன்மீது ஊன்றி, திரிசூலம் கொண்டு அவனது மார்பைப் பிளப்பது போன்ற கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறாள். பத்ரகாளியம்மனுக்கு 18 மீட்டர் அளவில், எப்பொழுதும் வெள்ளைத் துணி அணிவிப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இந்தத் துணியை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
பிரார்த்தனை
வழக்கு பிரச்சனைகள் உள்ளவர்கள், எதிரிகளின் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இங்கே வந்து வேண்டிக் கொள்கிறார்கள். ஏவல், பில்லி, சூன்யம் அனைத்தும் இங்கே வந்தால் தொலைந்து போகும்.

திருக்காட்டுப்பள்ளி அக்னீசுவரர் கோவில்
சிவபெருமான் கயிலாயத்தில் அம்பிகைக்கு உபதேசித்த கோலத்தில் காட்சி தரும் யோக தட்சிணாமூர்த்தி
திருவையாறு – கல்லணை சாலையில் திருவையாற்றுக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள தேவார தலம் திருக்காட்டுப்பள்ளி அக்னீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் சௌந்தரநாயகி.
இத்தலத்து இறைவனை அக்னி பகவான் வழிபட்டதால், கோயிலுக்கு 'அக்னீசுவரம்' என்று பெயர் வந்தது. மூலவர் அக்னீசுவரர் கருவறை, தரை மட்டத்திலிருந்து கீழே ஒரு தாழ்வான பகுதியில் இருக்கிறது. பிரம்மாவுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய தலம் இது. அக்கினீசுவரர் சந்நிதிக்கு இடது பக்கத்தில் பிரம்மாவுக்குத் தனி சந்நிதி அமைக்கப்பட்டிருக்கிறது.
மூலவரைச் சுற்றிவரும் பிராகாரத்தில் கோஷ்ட மூர்த்தமாக யோக தட்சிணாமூர்த்தி விளங்குகின்றார். சிவபெருமான் கயிலாயத்தில் அம்பிகைக்கு சிவாகமங்களை உபதேசித்த போது இருந்த அதே கோலத்தில், இங்கே யோக தட்சிணாமூர்த்தியாக எழுந்து அருளி இருப்பது தனிச்சிறப்பாகும். இதனால் இந்த யோக தட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவர் குரங்காசனத்தில் அமர்ந்து, இரண்டு திருக்கரங்களுடன் கழுத்தில் மகரகண்டி, ருத்ராட்சம் அணிந்து, திருச்சடையில் சூரிய, சந்திரன் அணிந்து, தன் கையில் சிவாகம நூல் ஏந்தி யோக குருவாகக் காட்சி தருவது சிறப்பு. இவரை அப்பர் தன்னுடைய தேவாரத்தில், ஞான நாயகன் என்று போற்றுகின்றார். இவரை வாரந்தோறும் வியாழக்கிழமையில் ஐந்து நெய்தீபம் ஏற்றி முல்லைப் பூவால் வழிபட்டால், திருமணம், கல்வி, செல்வம் யோகத்தை அடையலாம். வழக்குகளில் நம் பக்கம் நியாயம் இருந்தால், எல்லா தடைகளும் நீங்கி வெற்றி பெறலாம்.
இத்தலத்திலுள்ள இரண்டாம் பிராகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி எனப்படுகிறார். சிலா வடிவிலுள்ள இவரின் அடிப்பகுதியில் உள்ள துவாரம் வழியே, கருவறை கோஷ்டத்தில் உள்ள யோக தட்சிணாமூர்த்தியைப் பார்க்கலாம். இந்த அமைப்பும், இரண்டு குரு பகவான்கள் எழுந்தருளி இருப்பதும் இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவில்
திருவோண நட்சத்திரத்தன்று வழிபட்டால் திருமண பாக்கியம் அருளும் பெருமாள்
திண்டுக்கல்லில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள வடமதுரையில் அமைந்துள்ளது சவுந்தரராஜ பெருமாள் கோவில். தாயார் திருநாமம் சவுந்தரவல்லி. 15 அடி உயரத்தில், பழங்கால சுற்றுச்சுவர்கள் கொண்ட, சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள மிகப் பெரிய கோவில் இதுவாகும்.
ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தன்று பெருமாளுக்கு, பால் அபிஷேகம் செய்து, பொங்கல் வைத்து வழிபட்டால் கடன் நிவர்த்தி மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். துளசி மாலை அணிவித்து வேண்டினால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் கை கூடிய பக்தர்கள், தம்பதியர்களாக வந்து வழிபாடு செய்கிறார்கள்.

கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில்
மூன்று கால்கள் மட்டுமே உள்ள அபூர்வ நந்தி
நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கும் கொல்லிமலையில் அமைந்துள்ளது அறப்பளீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் தாயம்மை. கொல்லிமலை, நாமக்கல்லில் இருந்து சுமார் 64 கி.மீ. தொலைவில் இருக்கிறது. கொல்லிமலைக்குப் போய் வர, அதிகக் கொண்டையூசி வளைவுகள் கொண்ட மலைப் பாதை உள்ளது.
திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற தேவார வைப்புத்தலம் இது. கவிச்சக்கரவர்த்தி கம்பரும் பாடியுள்ளார்.
கொல்லிமலை, கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில்ஓரி எனும் மன்னன் ஆண்ட பகுதியாகும். மூலிகை பொருட்களுக்கு பெயர் போன கொல்லிமலையில் நிறைய மர்மமான விஷயங்கள் இருப்பதாகவும், இம்மலையில் சித்தர்கள் குகைகளில் தங்கித் தவம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இக்கோவில் நந்திக்கு மூன்று கால்கள் மட்டுமே உள்ளன. இவருக்கு பின்புற வலது கால் கிடையாது. இது பற்றி ஒரு புராணக் கதை உள்ளது. இந்த நந்தி, இக்கோவிலுக்கு அருகில் உள்ள புளியஞ் சோலையில் பயிரிடப்பட்டிருந்த கடலைச் செடியின் பூக்களின் மணம் கவரவே, கடலைக் காய்களைத் தின்பதற்கு இரவில் அங்கு சென்றது. இதனை அறிந்த காவலர்கள், நந்தியை பயங்கர ஆயுதத்தால் தாக்க, நந்தியின் ஒரு கால் வெட்டுப்பட்டது. அந்த நிலையில் அப்படியே கோவிலுக்கு வந்து நந்தி அமர்ந்தது. அந்தத் தோற்றத்துடன் இன்றும் காட்சி தருகிறது நந்தி. விவரம் அறிந்த விவசாயிகள் தங்கள் செயலுக்கு வருந்தியதுடன், தினமும் நந்திக்குப் பிடித்த கடலைக் காய்களை அதற்குச் சமர்ப்பித்தார்கள்.
சிவராத்திரியின் போதும், பிரதோஷ காலத்தின் போதும் இந்த நந்தீஸ்வரரை வழிபட்டால் வாழ்வில் வசந்தம் வீசும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அம்பல் பிரம்மபுரீசுவரர் கோவில்
மூலவருக்கு பின்புறம் சோமாஸ்கந்தமூர்த்தி அமைந்திருக்கும் அரிய காட்சி
மயிலாடுதுறை - திருவாரூர் சாலை மார்க்கத்தில் 23 கி.மீ. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவார தலம் அம்பல் பிரம்மபுரீசுவரர் கோவில். இத்தலத்திற்கு திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில் என்ற பெயரும் உண்டு. இறைவியின் திருநாமம் பூங்குழல்நாயகி, சுகந்த குந்தளாம்பிகை.
அம்பன், அம்பரன் என்ற இரு அசுரர்கள் இத்தல இறைவனை பூசித்து இறவா வரம் பெற்றனர். அவர்கள் வழிபட்டதால் இத்தலம் அம்பர் எனப் பெயர் பெற்றது. பிரம்மா, இத்தல இறைவனை வழிபட்டு தான், அன்ன வடிவம் பெற்ற சாபத்தை நீங்க பெற்றார். அதனால் இத்தல இறைவனுக்கு பிரம்மபுரீசுவரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமாற நாயனார் அவதரித்த திருத்தலம் இது.
பொதுவாக சிவாலயங்களில், சிவபெருமான் கருவறையில் லிங்க வடிவில் எழுந்தருளி இருப்பார். சில தலங்களில் சிவபெருமானும், பார்வதியும் மூலவருக்கு பின்புறம் திருமணக் கோலத்தில் எழுந்தருளி இருப்பார்கள். இத்தலத்தில், கர்ப்ப கிரகத்தில் சுயம்பு மூர்த்தியாக விளங்கும் பிரம்மபுரீசுவரருக்குப் பின்னால், சோமாஸ்கந்தமூர்த்தி (சிவன் + முருகன் + பார்வதி) அமைந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இத்தகைய காட்சியை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.

கொடிக்குளம் வேதநாராயண பெருமாள் கோவில்
பெருமாளை, பிரம்மா மனித முகத்துடன் (ஒரே தலையுடன்) வணங்கி நிற்கும் அபூர்வ காட்சி
மதுரை - சென்னை நெடுஞ்சாலையில் 13 கி.மீ தொலைவில் உள்ள கொடிக்குளம் விலக்கு என்ற இடத்திலிருந்து இரண்டு கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது கொடிக்குளம் வேதநாராயண பெருமாள் கோவில். இக்கோவில் யானைமலை யோக நரசிம்மர் கோவிலுக்கு 2 கி.மீ. அருகாமையில் உள்ளது.
புராணத்தின் படி, மது மற்றும் கைடபர் என்ற இரண்டு அசுரர்கள் பிரம்மாவிடமிருந்து வேதங்களைத் திருடிவிட்டதால், படைப்புத் தொழில் நின்று போனது. மகா விஷ்ணு அசுரர்களை அழித்து வேதங்களை மீட்டார். ஆனால் பிரம்மாவிடம் கொடுக்கவில்லை. விஷ்ணுவிடம் வேதங்களை பெற்று மீண்டும் படைப்புத் தொழில் செய்ய பிரம்மா இத்தலத்தில் மனித வடிவில் அந்தணராக, ஒரு தலையுடன் வந்து தவமிருந்தார். பெருமாள் அவருக்கு ஹயக்ரீவ மூர்த்தியாக காட்சி தந்து வேதங்களை திருப்பி தந்தார்.
அப்போது பிரம்மா பெருமாளிடம், சுயரூபத்தில் தரிசனம் தரும்படி வேண்டவே அவர் நாராயணராக காட்சி தந்தருளினார். எனவே, மகா விஷ்ணு வேதநாராயணன்' என்றும் பெயர் பெற்றார்
மூலவர் வேதநாராயணன், கருவறையில் தாயார்கள் இல்லாமல் எழுந்தருளி உள்ளார். வேதநாராயணப் பெருமாள் அருகில், அந்தணராக வந்து தவம் செய்த பிரம்மா ஒரு தலையுடன், பெருமாளை வணங்கியபடி இருப்பது வித்தியாசமான காட்சியாகும்.
ஸ்ரீரங்கம் உற்சவர் நம் பெருமாள் 48 ஆண்டு காலம் மறைந்திருந்த தலம்
பதினான்காம் நூற்றாண்டில் அந்நியர்கள் படையெடுத்து வந்தபோது, ஸ்ரீரங்கம் உற்சவரான நம்பெருமாளை இக்கோவிலுக்கு அருகில் உள்ள குகையில்தான் 48 ஆண்டுகள் மறைத்து வைத்திருந்தார்கள். ஸ்ரீரங்கம் உற்சவர் வைக்கப்பட்டிருந்த குகையில் தற்போது, பெருமாள் பாதம் இருக்கிறது.
தோல் நோய்களை தீர்க்கும் பிரம்ம தீர்த்தத்து நீர்
இக்கோவில் தீர்த்தமான பிரம்ம தீர்த்தத்தின் நீரை வீட்டிற்கு கொண்டு சென்று தண்ணீரில் கலந்து குளித்தால் தோல் வியாதிகள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருமீயச்சூர் மேகநாதர் கோவில்
திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மன்
லலிதா என்றால் மென்மையானவள் என்றும் சுலபமானவள் என்றும் அர்த்தம். திருமீயச்சூர் தலத்தில், லலிதாம்பிகை, மிகுந்த கலை அழகுடன், தன் வலது காலை மடித்து இடது காலைத் தொங்கவிட்டவாறு ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்து அபய, வரத ஹஸ்த முத்திரையுடன் காட்சியளிக்கிறார். இப்படி வலது காலை மடித்த அம்பிகையை வேறெங்கும் காண்பது அரிது.
பக்தையிடம் கால் கொலுசு கேட்ட லலிதாம்பிகை அம்மன்
லலிதாம்பிகையின் அலங்காரத்திற்கு கால் கொலுசு தவிர அனைத்து வகை ஆபரணங்களும் இருந்தன. அம்பிகை தனக்கு வேண்டிய கால் கொலுசை பெற்றுக் கொண்டது ஒரு அதிசயமான நிகழ்ச்சியாகும்..
பெங்களூரில் வசித்து வந்த ஒரு பெண்மணி மிகுந்த இறை பக்தி உடையவர். தினமும் லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்த பின்தான், தன் அன்றாட பணிகளை மேற்கொள்வார. 1999-ம் வருடம் நவம்பர் மாதத்தில் ஒரு நாள் இரவில் அவருடைய கனவில் அம்பிகை வடிவில் ஓர் உருவம் தோன்றி, எனக்கு காலில் அணிந்து கொள்ள கொலுசு இல்லை. அதனை நீதான் எனக்கு செய்து தர வேண்டும் எனக் கட்டளையிட்டு மறைந்தது. அப்பெண்மணி கனவில் வந்த அம்பிகை யார் என்று அறிந்து கொள்ள முயன்றார். ஆனால், ஒன்றும் பிடிபடவில்லை. வைணவக் குலத்தைச் சேர்ந்த அப்பெண்மணி, திருப்பதி, ஸ்ரீரங்கம் முதலிய தலங்களுக்குச் சென்று, அங்கிருக்கும் தாயார்தான் தன் கனவில் வந்தவராக இருக்குமோ என்று அறிந்து கொள்ள முயற்சித்தார் ஆனால் அவர்கள் எவரும் கனவில் வந்த உருவத்தோடு ஒத்து போகவில்லை. ஒருநாள் தற்செயலாக ஆன்மீக மாத இதழ் ஒன்றில் லலிதாம்பிகையின் உருவப்படத்தை பார்த்தார. தன் கனவில் வந்தது இந்த அம்பிகைதான் என்றுணர்ந்தார். தினமும் லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்ததால்தான் தனக்கு இந்த பாக்கியம் என்று மகிழ்ந்தார். உடனே அம்பிகைக்கு கொலுசை காணிக்கையாகத் தர விரும்பினார. திருமீயச்சூர் கோவிலுக்கு வந்து விவரங்களை தெரிவித்தார். ஆனால் கோவில் அர்ச்சகர்கள் அம்மனின் கால் பீடத்தில் ஒட்டி இருப்பதால், கொலுசு அணிவிக்க முடியாது என்று மறுத்து விட்டனர். ஆனால் அப்பெண்மணியோ, கொலுசை கேட்டது அம்மன்தான் என்றும், எனவே அதை அவள் கண்டிப்பாக அணிந்து கொள்வாள் என்றும் வற்புறுத்தினார்.
அர்ச்சகர்கள் மீண்டும் கொலுசை அம்மனுக்கு அணிவிக்க முயற்சி செய்தார்கள். அப்போது அம்மனின் கணுக்காலலுக்கும் பீடத்துக்குமிடையே முக்கால் அங்குலத்தில் துவாரம் இருப்பதையும், அதனை இத்தனை காலம் அபிஷேகப் பொருட்கள் அடைத்து இருந்ததையும் கண்டுபிடித்து ஆச்சரியப்பட்டனர். அந்தப் பகுதியை சுத்தம் செய்து கொலுசையும் அம்மனுக்கு அணிவித்தனர். அப்பெண்மணி அம்மனின் உத்தரவை நிறைவேற்றியதை எண்ணி ஆனந்தமடைந்தார். அன்றிலிருந்து பிரார்த்தித்துக் கொண்டு வேண்டுதல் நிறைவேறியவுடன் லலிதாம்பிகைக்கு கொலுசு அணிவிக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
அன்னப்பாவாடை சார்த்தும் வைபவம் - லலிதாம்பிகை அம்மனின் நெய் குள தரிசனம்
லலிதாம்பிகைக்கு அன்னப்பாவாடை சார்த்தும் வைபவம், நவராத்திரி விஜயதசமியிலும், மாசி மாத அஷ்டமி நாளிலும், வைகாசி - பௌர்ணமியன்றும் நடைபெறுகிறது. இந்த வைபவத்தைக் காண, வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். அன்னப்பாவாடை என்னும் இந்த நைவேத்தியத்தில் 50 கிலோ சர்க்கரை பொங்கல், 50 கிலோ புளியோதரை 50 கிலோ தயிர் சாதம், அதிரசம், முறுக்கு, லட்டு, வடை, பாயாசம் போன்றவையுடன் இளநீர், பழங்கள் படைக்கப்படும். அம்பிகையின் சந்நிதிக்கு முன்னேயுள்ள அர்த்த மண்டபத்தில் இந்த நைவேத்திய பொருட்களை ஒரு பெரிய பாத்தியாகக் கட்டி, அதில். நெய்யை ஊற்றிக் குளம் போலாக்கிவிடுவார்கள். குளம் போல் ததும்பியிருக்கும் நெய்யில், அம்பிகையின் திருவுருவம் பிரதிபலிப்பதைக் காண கண் கோடி வேண்டும்.
புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே தரிசிக்கக் கூடிய தலம்
காஞ்சி மகாபெரியவர் இதலத்தின் சிறப்பு பற்றி குறிப்பிடுகையில், ‘இத்தலம் மிகவும் புண்ணியமான க்ஷேத்திரம். பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்களே இத்தலத்திற்கு வர முடியும். அப்படி வந்து தரிசித்தீர்கள் என்றால், ஸ்ரீலலிதாம்பிகை, ஏழேழு ஜென்மத்துக்கும் உங்களைக் காப்பாள்’ என அருளினாராம்.
இத்தலம், திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

கூத்தனூர் சரஸ்வதி கோவில்
ஆயக்கலைகள் அறுபத்தி நான்கினையும் வழங்கும் சரஸ்வதி தேவி
சரஸ் என்றால், நீர் மற்றும் ஒளி ஆகியவற்றை தடையின்றி வழங்குபவள் என்று பொருள். பிரம்மனின் துணைவியான சரஸ்வதி கல்வி கடவுளாகவும், ஆயக்கலைகள் அறுபத்து நான்கினிற்கும் தெய்வமாகவும் திகழ்கிறாள். இவருக்கு கலைமகள், காயத்ரி, சாரதா என்ற பெயர்களும் உண்டு. சரஸ்வதி கையில் இருக்கும் வீணையின் பெயர் கச்சபி. இவரது சகோதரர் சிவபெருமான்தான் இந்த வீணையை உருவாக்கி, இவருக்கு வழங்கினார்.
தமிழ் நாட்டில் சரஸ்வதிக்கு என்றே தனியாக கோவில் உள்ள திருத்தலம் கூத்தனூர். கூத்தனூரில், நாம் வீணையை கையில் ஏந்தாத சரஸ்வதியை தரிசிக்கலாம்.
இத்தலத்தை, இரண்டாம் ராஜராஜன் தன் சபையில் அவைபுலவராக விளங்கிய, சரஸ்வதியின் அருள்பெற்ற ஒட்டக்கூத்தருக்கு பரிசாக வழங்கினார். ஒட்டக்கூத்தருக்கு பரிசாக வழங்கப்பட்டதால் இவ்வூர் கூத்தன் + ஊர் = கூத்தனூர் என்றாயிற்று .ஓட்டக்கூத்தருக்கும் ஆலயத்தில் தனி சன்னதி உள்ளது.ஓட்டகூத்தரை எதிரிகள் சூழ்ந்து கொண்டு பரணி பாடினால் விட்டுவிடுவதாக கூற ,கூத்தரின் நாவில் சரஸ்வதி அமர்ந்து பரணி பாடிட அருளினார். புலவர் கம்பரின் சங்கடங்களை தீர்ப்பதற்காக, இந்த சரஸ்வதி கிழங்கு விற்கும் பெண்ணாகவும் , இடையர் குல பெண்ணாகவும் நேரில் வந்து அருள் புரிந்தார். பிறவி ஊமையான புருஷோத்தமன் என்னும் பக்தனுக்கு தன்னுடைய வாய் தாம்பூலத்தை தந்து, உலகம் போற்றும் புருஷோத்தமா தீட்சிதர் ஆக்கினார்.
சரஸ்வதி பூஜையன்று பக்தர்கள் சரஸ்வதி தேவியின் பாதங்களை தாங்களே மலரிட்டு பூஜிக்கும் வகையில் அம்மனின் பாதங்களை அர்த்த மண்டபம் வரை அமையுமாறு, நீட்டி அலங்கரிப்பது கண்கொள்ளா காட்சி
இத்தலம், மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் பூந்தோட்டம் என்னும் ஊரில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில்
பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன்
துர்க்கை அம்மனின் திருநாமத்தில் உள்ள துர் என்பது தீயவை எனப் பொருள்படும். தீய செயல்களையும் தீயவர்களையும் தனது கையால் அழிப்பவள். அதனால் துர்க்கை என்று பெயர். துர்க்கம் என்பதற்கு அரண் என்ற பொருளும் உண்டு. பக்தர்களுக்கு அரணாக இருந்து காப்பதாலும், துர்க்கை அம்மன் என்று பெயர். இவளை துர்காதேவி, ஆர்த்தி தேவி, ஜோதி தேவி என்றும் அழைக்கிறார்கள்.
பார்வதி தேவியின் உக்கிர வடிவம்தான் துர்க்கை அம்மன். ஆனால் கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் துர்க்கை அம்மன் இதழோரம் புன்னகை ததும்ப, சாந்த சொரூபினியாக காட்சி தருகிறாள். பொதுவாக எல்லா ஆலயங்களிலும் துர்க்கை அம்மன், கோஷ்டத்தில்தான் தரிசனம் தருவாள். ஆனால், பட்டீஸ்வரத்தில், தனிச்சந்நிதியில் ஒய்யாரமாக நின்ற திருக்கோலத்தில் மூன்று கண்கள், எட்டு திருக்கரங்களுடன் எருமை முகமுடைய மகிஷாசுரனைக் காலில் மிதித்தபடி காட்சி தருகிறாள். எட்டு திருக்கரங்களின் ஒன்றில் அபயஹஸ்தம் காட்டுகிறாள். மற்றொரு கரத்தை இடுப்பில் ஒயிலாக வைத்திருக்கிறாள். ஆறு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் ஆகிய ஆயுதங்களைக் கொண்டிருக்கிறாள். துர்க்கை இங்கு சாந்த சொரூபிணியாக இருப்பதை அவளது புன்னகை தவழும் முகமும், வலப்புறம் திரும்பியுள்ள சிம்ம வாகன முகமும் நிரூபிக்கிறது. தன்னைச் சரண் அடையும் பக்தர்களுக்கு உடனே அருள்புரிய காலைஎடுத்து வைத்துப் புறப்படுகிற தோற்றத்தில் துர்க்கை நிற்பது இன்னொரு சிறப்பு.
பாண்டிய மன்னர்களின் குல தெய்வமாக எப்படி மீனாட்சிஅம்மன் விளங்கினாரோ, அதுபோல இந்த துர்க்கையம்மன் சோழ மன்னர்களின் குல தெய்வமாக திகழ்ந்தாள்.
பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் மிகுந்த வரப்பிரசாதி. திருமணமாகாத ஆண்களும், பெண்களும், நோயினால் பீடிக்கப்பட்டவர்களும், குடும்ப துன்பத்தில் தவிப்பவர்களும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டால் குறைகள் நீங்கி நலம் அடைவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன்
அகிலாண்டேஸ்வரி என்பதற்கு உலகத்தை ஆள்பவள் என்று பொருள். திருவானைக்காவல் பஞ்சபூதத் தலங்களில் அப்புத்(நீர்) தலமாகும் இத்தலத்தில் இருக்கும் ஜம்பு லிங்கம் அம்பிகையால் செய்யப்பட்டது. ஒரு முறை இத்தலத்திற்கு வந்த அம்பிகை, காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் அமைத்து சிவபெருமானை வழிபட்டார். நீரால் செய்யப்பட்டதால் அந்த லிங்கம் ஜம்புகேஸ்வரர் எனப் பெயர் பெற்றது.
அகிலாண்டேஸ்வரி அம்பிகையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியும். இந்தக் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பார்கள். ஆரம்பத்தில் இத்தலத்தில் அம்பாள் உக்கிரமாக இருந்ததால், பக்தர்கள் மிகவும் அச்சமுற்று கோவிலுக்குள் செல்லாமல் வெளியில் இருந்து வழிபட்டு வந்தனர். பொதுவாக உக்கிரமான அம்பிகையை சாந்தப்படுத்த, ஸ்ரீசக்ரத்தில் அம்பாளின் ஆக்ரோஷத்தைச் செலுத்தி சாந்தப்படுத்துவர். ஆனால், இங்கு வந்த ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்துக்குப் பதிலாக, இரண்டு தாடங்கங்களை, ஸ்ரீசக்ரம் போல் உருவாக்கி அம்பாளுக்குப் பூட்டி விட்டார். பின்னர் அம்பாள் சாந்தமானாள். அம்பிகையை மேலும் சாந்தப்படுத்தும் வகையில் அம்பிகைக்கு முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
இத்தலத்தில் தினமும் நடைபெறும் உச்சிக்கால பூஜை தனிச்சிறப்புடையது. அப்போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வார். இது போன்ற பூஜை வேறு எந்த தலத்திலும் காண முடியாது.
51 சக்தி பீடங்களில் தண்டநாதபீடம் எனும் வாராஹி பீடமாக இந்த சந்நதி விளங்குகிறது.

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில்
தன் சிலையைத் தானே வடிவமைத்த அம்மன்
உலகப் புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலகப் புகழ்பெற்றதாகும். பக்தர்கள் இத்திருவிழாவிற்காக, சுமார் ஒரு மண்டல காலம் விரதம் இருந்து, தசரா திருவிழாவன்று பல்வேறு வேடங்களை அணிந்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம்.
தன் சிலையைத் தானே வடிவமைத்த அம்மன்
குலசேகரப்பட்டினம் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் பாதையில் 76 கி.மீ. தொலைவில் உள்ளது. 150 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில், முத்தாரம்மனை முதலில் சுயம்பு வடிவிலேயே பக்தர்கள் வழிபட்டு வந்தனர். பின்னர் அம்மனுக்கு விக்கிரகம் அமைக்க விரும்பினர்.
கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன், கன்னியாக்குமரி அருகே மைலாடி என்றொரு சிற்றூர் உள்ளது. அங்கு சென்றால் உங்கள் விருப்பம் நிறைவேறும் என்று கூறினாள். மைலாடி பகுதியில் அதிக அளவில் பாறைகள் உண்டு. சிலை செய்யும் சிற்பிகளும் அதிகம் பேர் உண்டு. அவர்களில் ஒருவரான சுப்பையா ஆசாரி என்பவர் மிகவும் திறமைசாலி. .அவரது கனவிலும் முத்தாரம்மன் தோன்றி, குலசேகரப்பட்டினத்தில் தான் சுயம்புவாக இருப்பதாகவும், பக்தர்கள் தனக்கு விக்கிரகம் அமைக்க விரும்புவதையும் கூறினாள்.
பின்னர், சுவாமியுடன் ஆசாரிக்குக் காட்சி அளித்த அன்னை, தங்களை நன்கு உற்று நோக்குமாறும், தென் திசையில் உள்ள ஆண் பெண் பாறையில் ஒரே கல்லில், ஒரே பீடத்தில் தங்கள் திருவுருவச் சிலையை வடித்துக் கொடுக்குமாறும் உத்தரவிட்டாள். அந்தக் கற்சிலையை தன் சுயம்பு மேனிக்கு அருகில் நிறுவ வேண்டும் என்றும் கட்டளையிட்டாள்.
சுப்பையா ஆசாரி, முத்தாரம்மன் தனக்கிட்ட ஆணையை நிறைவேற்ற முடிவு செய்தார். குலசேகரப்பட்டினம் எங்கிருக்கிறது என்று விசாரித்து அறிந்து கொண்டார். அதன்பிறகு தன் மனதில் திடமாகப் பதிந்திருந்த அம்பாள் மற்றும் சுவாமியின் திருமேனியை அப்படியே கற்களில் சிலையாக வடித்தார்.
முத்தாரம்மன் கனவில் கூறியபடி குலசை அர்ச்சகர் மைலாடி சென்றார்.சுப்பையா ஆசாரி பற்றி விசாரித்து அறிந்து அவரைச் சந்தித்தார். சுப்பையா ஆசாரி ஏற்கனவே ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் சிலையை செய்து வைத்திருந்ததைப் பார்த்தார். பக்தர்கள், அம்மனின் திருவிளையாடலை எண்ணி மெய்சிலிர்த்தனர்.
இந்த அம்மன்தான் குலசேகரன்பட்டினத்தில், இன்றும் காட்சியளிக்கிறாள். ஒரே பீடத்தில், முத்தாரம்மன் அருகே சுவாமி ஞானமூர்த்தி வீற்றிருப்பது இந்த ஆலயத்தின் முக்கியச் சிறப்பாகும். இப்படி அம்பாளும், சிவனும் ஒரே பீடத்தில் வீற்றிருப்பது வேறு எந்த தலத்திலும் இல்லை

திருவாரூர் தியாகராஜர் கோவில்
திருவாரூர் கமலாம்பிகை
திருவாரூர் கமலாம்பிகை, முப்பெரும் தேவியரும் இணைந்த அம்சமாகும். கமலாம்பிகை திருநாமத்தில் உள்ள க- கலைமகளையும், ம- மலைமகளையும், ல- அலைமகளையும் குறிக்கின்றது. இந்த அம்பிகையின் சிறப்புகளாலேயே, திருவாரூருக்கு ஸ்ரீபுரம், கமலாபுரி, கமலா நகரம், கமலாலயம் என்ற பெயர்களும் உண்டு.
திருவாரூர் தியாகராஜர் கோவிலில், தனிக்கோயில் கொண்டு, கமலாம்பிகை அருள்பாலிக்கிறார். கமலாம்பாள் ஆலயம், அம்பிகையை பெண்ணின் ஐந்து பருவ நிலைகளில் வைத்து வணங்கப்படும் ஐந்து அக்ஷித்தலங்களுள், இளம் பெண் பருவத்தினைக் குறிக்கின்றது. கருவறையில் கமலாம்பிகை, மூன்றடுக்கு பீடத்தின் மேல் இடக்கால் மீது வலக்காலை அமர்த்தி, இடக்கரம் ஊரு ஹஸ்தமாய் விளங்க, நீலோத்பல மலரை வலக்கரத்தில் பற்றி, வளர்பிறை சந்திரனையும் கங்கையையும் சிரசில் கரண்ட மகுடத்தில் தரித்து, தவ யோக நிலையில், அமர்ந்த கோலத்தில் காட்சித் தருகிறார். தர்மம் தழைத்தோங்கவும், சரஸ்வதி, சசிதேவி எனும் இந்திராணி, மகாலக்ஷ்மி, பூதேவி போன்ற தெய்வங்களும் தேவதைகளும் சர்வ மங்கள செளபாக்கியங்களுடன் வாழவும், சகல உயிர்கள் அனைத்தும் இன்புறவுமே கமலாம்பிகை தவக்கோலம் பூண்டு இருக்கிறார். இக்கோவிலில் உள்ள அக்ஷர சக்தி பீடம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்பீடத்தின் பிரபையில் முன்னும் பின்னும் 51 அக்ஷரங்களும், பீடத்தின் மத்தியில் ஹ்ரீம் எனும் புவனேஸ்வரி பீஜமும் பொறிக்கப்பட்டுள்ளன
லலிதா ஸஹஸ்ரநாமம் பல இடங்களில் கமலாம்பிகையை துதித்துப் போற்றுகின்றது. ஸ்ரீவித்யா எனும் உபாசனையின் யந்திர நாயகி இத்தேவியே ஆவார். முத்துசுவாமி தீட்சிதர் அன்னை கமலாம்பாளைத் துதித்து நவாவரண கீர்த்தனைகளை பாடியிருக்கிறார்.
சக்தி பீடங்களில், கமலாம்பிகை அருள் பாலிக்கும் திருவாரூர், கமலை பீடம் ஆகும்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்
காமாட்சி அம்மனின் திருநாமத்தில் உள்ள காம என்பது அன்பையும் கருணையையும், அட்ச என்பது கண்ணையும் குறிக்கும். காமாட்சி அம்மன் தன் அருட்கருணை பொங்கும் திருவிழிப் பார்வையினால், பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி அருள்பவர். இவருக்கு, மகாதேவி, திரிபுரசுந்தரி, ராஜராஜேஸ்வரி, காமேஸ்வரி, லலிதா, ஸ்ரீசக்கரநாயகி என்னும் பெயர்களும் உண்டு.
காமாட்சி அம்மன் இருபத்தி நான்கு தூண்கள் தாங்கி நிற்கும் காயத்ரி மண்டபத்தின் நடுவில் பத்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறார். தன் நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், மலர் அம்பு, கரும்பு வில் ஏந்தியிருக்கிறார். காமாட்சியின் பிரகாசமான முகத்தை தீர்க்கமாக தரிசிப்பவர்களுக்கு, அம்மனின்_கண்கள் சிமிட்டுவது போன்ற உணர்வினை ஏற்படுத்துமாம்
இக்கோலிலில் காமாட்சி அம்மன் ஸ்தூலம், சூட்சுமம், காரணம் என்னும் மூன்று வடிவில் இருக்கின்றார். மூலவர் காமாட்சி அம்மன் ஸ்தூல(உருவ) வடிவிலும், அஞ்சன காமாட்சி சூட்சும(உருவமில்லாத) வடிவிலும், காமாட்சி அம்மன் முன் அமைந்துள்ள ஸ்ரீ சக்கரம் காரண(உருவமும், உருவமில்லாத) வடிவிலும் அருளுகிறார்கள. ஸ்ரீ சக்கரம், ஆதிசங்கரரால், எட்டாம் நூற்றாண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மிகவும் உக்கிரமாக இருந்த காளியன்னையை, சௌம்யமான காமாட்சியாக ஆதிசங்கரர் சாந்தப்படுத்தினார்.
காஞ்சிபுரத்திலுள்ள எல்லா சிவாலயங்களுக்கும் காமாட்சி அம்மனே மூலவர் அம்பாளாக விளங்குகிறார். இதனால் காஞ்சீபுரத்தில் உள்ள சிவாலயங்களில், அம்மனுக்கு என தனி சன்னதி கிடையாது.
அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றான இத்தலம், ஒட்டியாண(அம்பிகையின் இடுப்பு எலும்பு விழுந்த) பீடம் ஆகும்.