வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்

தென்திசை நோக்கி காட்சி தரும் ஞான துர்க்கை

நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் தேவாரத் தலமான வேதாரண்யம் உள்ளது. இறைவன் திருநாமம் திருமறைக்காடர். இறைவியின் திருநாமம் வேதநாயகி, யாழைப் பழித்த மொழியாள். 64 சக்தி பீடங்களில் ஒன்றான சுந்தரி பீடம் அமையப் பெற்ற கோவிலாகவும் இது திகழ்கிறது.

பொதுவாக சிவாலயங்களில், மூலவர் கருவறையின் சுற்றுச்சுவரில் வடக்கு நோக்கி பரிவார தேவதையான துர்க்கை எழுந்து அருளி இருப்பாள். ஆனால் இத்தலத்தில் பரிவார தேவதையான துர்க்கையானவள் தென்திசை (மூலவர் சந்நிதியை) நோக்கி காட்சி தருகிறாள். இது ஒரு அரிதான காட்சியாகும். தட்சிணாமூர்த்தி போல் தென்திசை நோக்கி எழுந்தருளி இருப்பதால் இவளை ஞான துர்க்கை என்பார்கள். திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் புன்முறுவல் காட்டி எழுந்தருளி உள்ளாள். இவள் வேதாரண்யத்தின் காவல் நாயகி என்பர் ஆன்றோர்.

பிரார்த்தனை

இவள் மிகுந்த வரப்பிரசாதி என்பதால் இத்தலத்தின் பிரார்த்தனை தெய்வமாக விளங்குகின்றாள். துர்க்கை அம்மன் சந்நிதியில் செவ்வாய் கிழமைகளில் ராகுகால பூஜைகள் மிகவும் விசேஷம். இவளை வழிபட்டால் குழந்தை இல்லாமை, திருமணத் தடை, பில்லி- சூனியம், கிரக கோளாறுகள் போன்ற குறைபாடுகள் விலகும்.

Read More
திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீசுவரர் கோவில்

திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீசுவரர் கோவில்

அமர்ந்த கோலத்தில் இருக்கும் அபூர்வ அர்த்தநாரீசுவரர்

திருவையாற்றில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலை வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருக்கண்டியூர். திருவையாறு மற்றும் அதைச் சுற்றியுள்ள சப்த ஸ்தான கோவில்களில் இத்தலமும் ஒன்று. சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் முதலாவது தலம் இது. இறைவன் திருநாமம் பிரம்மசிரகண்டீசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை.

இக்கோவிலில் எழுந்தருளியுள்ள அர்த்தநாரீசுவரரின் திருமேனி அற்புதமான கலையம்சம் கொண்டது. அர்த்தநாரீசுவரர் என்ற பெயரின் அர்த்தம் 'அரை பெண்ணாக இருக்கும் இறைவன்' என்பதாகும். அர்த்தம் என்பது பாதி; நாரி என்பது பெண். சிவனின் ஆண் உருவம் பாதியும், பார்வதியின் பெண்ணுருவம் பாதியும் கொண்டு அமைந்த கோலம் தான் அர்த்தநாரீசுவரர். சிவனின்றி சக்தி இல்லை, சக்தி இன்றி சிவனில்லை என்பதனை விளக்குகின்ற உருவமாகும்.

இக்கோவிலில் உள்ள அர்த்தநாரீசுவரர், மற்ற சிவாலயங்களில் உள்ளதுபோன்று நின்ற கோலத்தில் அல்லாமல் ரிஷபத்தின் மீது ஒரு கையை ஊன்றி அமர்ந்த கோலத்தில் காட்சியளிப்பது விசேஷமானது. ஆண் பாதியில் காலைத் தொங்கவிட்டுக் கொண்டு ஒரு கரத்தில் மழு எந்தியிருக்க, பெண் பாதியில் சேலை அணிந்த காலைக் குத்திட்டு உட்கார்ந்து அதன் மீது மலர் ஏந்தும் கரத்தை ஊன்றித் தலையைச் சுற்றி சாய்ந்து காட்சிக் கொடுக்கும் தோற்றமானது, அற்புதமான ஒன்றாகும். அர்த்தநாரீசுவரரின் இந்தத் தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

Read More
கண்டரமாணிக்கம் மருதம் விநாயகர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

கண்டரமாணிக்கம் மருதம் விநாயகர் கோவில்

அனுமனைப் போல வடை மாலை ஏற்கும் மருதம் விநாயகர்

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் என்ற கிராமத்தில் உள்ள விநாயகர் மிகமிக வித்தியாசமாக தோற்றம் அளிக்கிறார். இந்த விநாயகருக்கு தும்பிக்கை கிடையாது. மனித முகத்துடன் காணப்படும் இந்த விநாயகர், மருதம் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். பக்தர்கள் வேண்டியதைக் கொடுக்கும் சக்தி வாய்ந்த இந்த கணபதிக்கு, அனுமனைப்போல வடை மாலை அணிவித்து, பொங்கல் வைத்து மக்கள் வழிபாடு செய்கிறார்கள்.

தோல் நோய் அகற்றும் விநாயகர்

மகாகவி முத்தப்பர் (1767 - 1829) என்ற கவிஞர் நகரத்தார் மரபில், செட்டிநாட்டில் பிறந்தவர். இளமையிலேயே பாடும் திறமை பெற்றிருந்த முத்தப்பர், குன்றக்குடி முருகன் பேரில் பதிகம் பாடி அருட் புலமை பெற்றார். தமது குல வழக்கமான வணிகத்தில் ஈடுபடாது தமிழை வளர்ப்பதில் ஈடுபட்டார். முருகனின் அருளால் சொல்பலிதமும் ஏற்பட்டது. பாடிய மாத்திரத்தில் ஏதும் நடந்துவிடும் அளவுக்கு அவருடைய சொல்லாற்றல் விளங்கியது. தான் பாடும் பாடல்களால், மழையை வரவைக்கும் கவித்துவம் பெற்றவர்.

மகாகவி முத்தப்பர், இந்த கணபதியை வேண்டி மனமுருகி பாடிய பத்து பாடல்கள் காரணமாக, அவருக்கு இருந்த தோல் நோய்கள் நீங்கினார். இதனால் இன்றும் தோல் நோய் கொண்டவர்கள் இங்கு வந்து மருதம் விநாயகரிடம் வேண்டிக் கொண்டு பலன் பெறுகிறார்கள். பிள்ளைப்பேறு வேண்டி இத்தலத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகம்.

Read More
 வள்ளியூர் சுப்பிரமணியர் சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

வள்ளியூர் சுப்பிரமணியர் சுவாமி கோவில்

வள்ளி தேவிக்குக்கென்று தனி சன்னதி உள்ள திருப்புகழ் தலம்

திருநெல்வேலியில் இருந்து சுமார் 42 கி.மீ. தொலைவில், நாகர்கோவில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. வள்ளியூர் சுப்பிரமணியர் சுவாமி கோவில். பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட, குடைவரை கோவில் இது. மற்ற கோவில்களில் முருகப் பெருமான் குன்றின் மீது நின்று அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இங்கு, குன்றுக்குள் இருந்து அருள்பாலிக்கிறார் என்பது தனிச்சிறப்பு. வள்ளி-தெய்வானையுடன், முருகப்பெருமான் வீற்றிருக்கும் இந்த குன்றின் பெயர், 'பூரணகிரி' என்பதாகும். சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த சமயத்தில், கிரவுஞ்ச மலையையும் தகர்த்து எறிந்தார். அந்த மலையின் துண்டுகள் விழுந்து உருவான மலையே வள்ளியூர் என்று கூறப்படுகிறது. மாயம் நிறைந்த கிரவுஜாசுரனின் தலைப்பாகமாக, இந்த குன்று கருதப்படுகிறது. அகத்தியருக்கு பிரம்ம ஞான உபதேசம் அருளிய காரணத்தினால் முருகப்பெருமான் ஞானஸ்கந்தன் என்று அழைக்கப்படுகின்றார். வள்ளி கேட்ட வரத்தின் படி முருகன் வள்ளியை திருத்தணிகையில் மணமுடித்து தென்கோடியில் உள்ள பூரணகிரி மலைக்குகையில் வள்ளியுடன் வந்து அமர்ந்தாராம். அதனால் இம்மலை அமைந்துள்ள பகுதி வள்ளியூர் என அழைக்கப்பட்டது. இங்குள்ள சரவணப் பொய்கை, வள்ளியின் வேண்டுகோளுக்கிணங்க, முருகப்பெருமானால் உருவாக்கப்பட்டதாம். இத்தலம் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்றது.

கருவறையில் வள்ளி-தெய்வானையோடு முருகப்பெருமான் அருள்காட்சி தருகிறார். அதே வேளையில் வள்ளிதேவிக்கு மட்டும் தனியாகவும் இங்கு சன்னிதி அமைந்திருப்பது இக்கோவிலின் மற்றொரு சிறப்பாகும். நான்கு கரங்களைக் கொண்ட இத்தல முருகப்பெருமான், வலது மேற்கரத்தில் வள்ளிக்குப் பிடித்த தாமரையையும், இடது மேற்கரத்தில் தெய்வானைக்குப் பிடித்த நீலோற்பவத்தையும் ஏந்தியிருக்கிறார். வலது கீழ் கரத்தில் அபய முத்திரையை காட்டி, இடது கீழ்கரத்தை இடுப்பில் வைத்து வள்ளி, தெய்வானையுடன் கல்யாண கோலத்தில் நின்றபடி அருள்கிறார். முன்புறம் வைரம் பதித்த வஜ்ரவேல் மின்னுகிறது.

திருமணத் தடை நீக்கும் வள்ளியூர் முருகன்

வள்ளியூர் கோயில் வந்து வள்ளி சமேத முருக பெருமானை வழிபட திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களுக்கு இடையே நம்பிக்கையாக உள்ளது. வள்ளிதேவியிடம் மனதிற்கு பிடித்தவரை கரம் பிடிக்க வேண்டிக் கொள்ளும் கன்னி பெண்களுக்கு, அவரையே மணம் முடிக்கும் பாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை உள்ளது.

Read More
நெடுங்குணம் யோக ராமர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

நெடுங்குணம் யோக ராமர் கோவில்

கைகளில் வில்லும், அம்புமின்றி யோக நிலையில் அமர்ந்திருக்கும் அபூர்வ ராமர்

திருவண்ணாமலையிலிருந்து 47 கி.மீ. தொலைவிலும், வந்தவாசியிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது நெடுங்குணம் யோக ராமர் கோவில். சுமார் 700 ஆண்டுகள் பழமையானது. எண்பத்தேழாயிரம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள இக்கோவில், தமிழ்நாட்டில், ராமருக்கு என்று அமைந்த தனிக்கோவிலில் மிகவும் பெரியது.

கருவறையில் ஸ்ரீராமபிரான் வித்தியாசமான கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார். எப்பொழுதும் அவர் கையில் ஏந்தி இருக்கும் கோதண்டம் மற்றும் ஆயுதங்கள் ஏதுமின்றி, அமர்ந்த நிலையில் வலது கையை சின் முத்திரையுடன் திருமார்பில் வைத்தபடி, கண்களை மூடிய வண்ணம் யோக நிலையில் காட்சி தருகிறார். இது ராமபிரானின் மிகவும் அபூர்வமான திருக்கோலம் ஆகும். இதனாலேயே இவரை யோக ராமர் என்று அழைக்கின்றனர். ராமர் அருகே இடப்புறம் சீதாபிராட்டி அமர்ந்த நிலையில், வலக் கரத்தில் தாமரை மலரை ஏந்தியபடி காட்சி தருகிறார். அவரது இடக்கரம் திருவடி சரணத்தை உணர்த்தும் அபயஹஸ்தமாக விளங்குகிறது. லட்சுமணன், ராமருக்கு வலது புறத்தில் கைகளைக் குவித்து அஞ்சலி செலுத்தியவராய் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். ராமபிரானும் சீதா பிராட்டியும் பீடத்தில் அமர்ந்து காட்சி தர, அவர்கள் எதிரே அனுமன் பிரம்மசூத்திரம் படித்தபடி காட்சி தருவது இன்னும் சிறப்பானது. இது வேறு எங்குமே காணமுடியாத அற்புத காட்சியாகும்.

பிரார்த்தனை

இங்கே ராமபிரான் சாந்தமான கோலத்தில் எழுந்தருளி இருப்பதால், அவரை வணங்கினால் மன அமைதி, நிம்மதியான வாழ்க்கை நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.ராமபிரான் இங்கு குரு அம்சமாக இருப்பதால், கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்கான பிரதான வழிபாட்டுத் தலமாக இருக்கிறது. கல்வி, கலைகளில் உயர்வான நிலை பெற, ஞாபகமறதி நீங்க, ஞானம் உண்டாக நெய்தீபம் ஏற்றி வேண்டிக் கொள்கிறார்கள். திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்க, தம்பதியர் ஒற்றுமைக்காக ஊற வைத்த பாசிப்பயிறு, சர்க்கரைப்பொங்கல் , பானக நிவேதனம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இத்தலத்தில் வியாபார விருத்தி, உத்தியோக உயர்வு, குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் பெருமளவில் வந்து வழிபடுகின்றனர்.

Read More
விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோவில்

விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோவில்

அதிசயமான நேரம் காட்டும் கல்

வேலூர் நகரத்திலிருந்து 12 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் மார்க்கபந்தீசுவரர் ஆவார். இறைவியின் திருநாமம் மரகதாம்பிகை.இக்கோவில் 1300 வருடங்கள் பழமையானதாகும்.

இக்கோவிலில் உள்ள அதிசயம், மணி காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கல். கோவிலின் உள்ளே தென்புறத்தில் 'நேரம் காட்டும் கல்' உள்ளது. இதை மணிகாட்டிக் கல் என அழைப்பதும் உண்டு. அர்த்த சந்திரவடிவில் உள்ள காலம் காட்டும் கல்லின் ஒருபுறம், இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பகுதியில் ஒன்று முதல் ஆறு வரை எண்கள் எழுதப்பட்டிருக்கின்றன. மற்றொரு புறமும் ஆறு முதல் 12 என்ற வரிசையில் எண்கள் எழுதப்பட்டுள்ளன. ஒரு பாகம் முற்பகலையும், மற்றொரு பாகம் பிற்பகலையும் காட்டும். மணிகாட்டும் கல்லின் மேற்பகுதியில் சிறிய பள்ளமான பகுதி ஒன்று இருக்கும். அதன் மேல் சிறு குச்சியை வைத்தால், சூரிய ஒளியின் திசைக்கு ஏற்றவாறு, குச்சியின் நிழல் மணிக்காக குறிக்கப்பட்டுள்ள கோட்டின் மீது விழும். அதைப் பார்த்து மணியைத் தெரிந்துகொள்ளலாம்.

ஆதிகாலத்தில் மேலை நாட்டினர், 'கிளாசிக்கல் க்ளாக்' எனும் மணல் கடிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். அறிவியல் அதிகமாக வளராத ஆதிக்காலத்திலையே, சூரியனை எப்படிப் பயன்படுத்தலாம் என்று யோசித்தவர்கள், தமிழர்கள். மேலை நாட்டினர் மண்ணைப் பார்த்து சிந்தித்தபோது, விண்ணைப் பார்த்து சிந்தித்தவன் தமிழன். தமிழர்கள் சூரியனைப் பயன்படுத்தி கடிகாரம் கண்டுபிடித்து, பயன்படுத்திக்கொண்டிருந்தனர். அதற்கு முன்னர், சூரியனையும், கோயில் கோபுரத்தையும் வைத்து நேரம் அறிந்துகொண்டிருந்தனர், தமிழர்கள். அதன் பின்னர் சிறிய கருங்கல்லை வைத்து தன்னுடைய தொழில்நுட்பத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தினார்கள். சிறியதாக ஒரு கருங்கல்லை வைத்து பன்னிரண்டு மணிநேரத்தை பார்க்கும்படி வடிவமைத்துள்ளார்கள்.வானியல் மாற்றங்களைத் தெரிந்துகொள்ள தொழில்நுட்பங்கள் இல்லை. பருவநிலையையும் மற்றும் பருவகால மாற்றங்களையும் அறிந்துகொள்ள மணிகாட்டும் கல்லைத் தவிர இன்னும் பல கற்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள், நம் முன்னோர்கள்.

Read More
ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்

ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்

ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகத்தின் சிறப்புகள்

சிவபெருமான், சதா அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அவை தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகம்.

ஐப்பசி மாதப்பௌர்ணமி தினத்துக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் தோன்றுகிறான். ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தின்போது சந்திரன் பூமிக்கு நெருக்கமாக வந்து அதிகப் பொலிவுடன் தோன்றுவான். நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால், அன்று சிறப்பு வழிபாடாக ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்து, உணவை சாப்பிட்டால் அன்னதோஷசம், அன்ன துவேஷம் நீங்கும். ஐப்பசி பௌர்ணமி நாளில் சிவனை தரிசித்தால், சொர்க்கத்திற்கு போகும் வரை சோறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அன்னம் பர பிரம்மம் என்று கூறி, உணவை இறைவனாகப் பாவிப்பது நம் இந்து தர்மம். உடலை வளர்ப்பது மட்டுமல்லாமல் உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம்தான். கல்லினுள் வாழும் தேரை முதல் கர்ப்பப்பையில் வளரும் உயிர் வரை, அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிப்பவன் ஈசன். அதனால் அன்னத்தைப் பற்றி ‘அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ’ என்று சாமவேதத்தில் குறிப்பிடப்படுகிறது. எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருக்கிறான் என்பதே இதன் பொருள். அன்னம்தான் உலகில் வாழும் உயிர்களுக்கு அடிப்படை. சோறுதான் சொக்கநாதர், 'சோறுகண்ட இடம் சொர்க்கம்' என்று இன்றும் மக்கள் சொல்வதுண்டு. உயிர்களைப் படைத்ததோடு மட்டுமல்லாமல், அவை உண்பதற்கான உணவையும் படைத்தருளிய இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் செய்கிறோம்.

ஐப்பசி மாதம் பெளர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து அதில் உள்ள ஒவ்வொரு சாதத்திலும், அரிசியிலும் ஒரு சிவத்தின் ரூபத்தை காணலாம். ஒரு சிவத்தை வழிபட்ட பலன் அந்த நாளில் கிடைக்கும் என சிவ பெருமானே நமக்கு வரமளித்துள்ளார். அந்த வரத்தின் படி அன்னாபிஷேகத்தை கண்டால் அதில் உள்ள கோடான கோடி சோறும், கோடான கோடி சிவ லிங்கங்களை சென்று தரிசனம் செய்த பலனை நமக்கு தரும்.

ஐப்பசி மாத பௌர்ணமியன்று, வடித்து சற்றே ஆற வைக்கப்பட்ட அன்னத்தைக் கொண்டு சிவலிங்கத் திருமேனி முழுவதையும் மறைத்து, அதன் மேலாக காய்,கனி வகைகளைக் கொண்டு அலங்கரிப்பார்கள். இந்த வேளையில் யஜூர் வேதம், ருத்ரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணம் நடைபெறும். லிங்கத்தின் ஆவுடையிலும், பாணத்தின் மீதும் சாத்தப்பட்ட அன்னத்தை எடுத்துச் சென்று கோயில் குளத்திலோ இல்லை ஆற்றிலோ கரைப்பார்கள். நல்ல அதிர்வுகளும் உடலுக்குத் தேவையான கதிர் வீச்சுகளும் நிறைந்திருக்கும் சிவலிங்கத்தின் மேல்பாகத்தில் சாத்தப்பட்ட அன்னம், மனிதர்களுக்குப் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

கலியுகத்தில் முக்தி பெறும் வழிகளில் முதன்மையானது பக்தியும், அன்னமிடுதலும் ஆகும். அன்னம் ஒடுங்கினால், சகலமும் ஒடுங்கி விடும். பசியால் வாடுபவர்களுக்கு உணவு தராமல் விரட்டினால், அன்னதோஷம் ஏற்படும். அன்னதோஷம் பீடித்தால், வீட்டில் எவ்வளவு உழைத்தாலும் செல்வம் தங்காது. தரித்திரம் ஆட்டிப்படைக்கும். அன்னதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அன்ன துவேஷம் எனும் உணவைக் கண்டாலே வெறுப்பு உண்டாகும் நோய் ஏற்படும். அன்னதோஷத்தாலும், அன்ன துவேஷத்தாலும் பீடிக்கப்பட்டவர்களும். ஈசனுக்கு பக்தியுடன் அன்னாபிஷகம் செய்வதன் மூலம் முக்தியைப் பெற முடியும். ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும் உணவை அப்படியே உண்ணக்கூடாது. தயிரோ அல்லது வெண்ணெயோ கலந்துதான் சாப்பிட வேண்டும்.

Read More
கல்விமடை  திருநாகேசுவரமுடையார்  கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கல்விமடை திருநாகேசுவரமுடையார் கோவில்

இரண்டு மாதத்துக்கு ஒருமுறை நிறம் மாறும் அம்மன்

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ளது கல்விமடை . இந்தக் கிராமத்தில் கி.பி 10-ம் நூற்றாண்டை சேர்ந்த, மிகவும் பழமை வாய்ந்த, திருநாகேசுவரமுடையார் கோவில் உள்ளது. இறைவியின் திருநாமம் திருநாகேசுவரி.

இந்தக் கோவிலில் உள்ள அம்மன் விக்கிரகம் அற்புதமானது. அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அம்மன் விக்கிரகத்தின் கண்களில் பளிங்கு போன்று ஒளி வீசுகிறது. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை, அம்மன் விக்கிரகம் தானாக நிறம் மாறுகிறது. பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் அம்மன் நிறம் மாறுகிறது. அம்மனின் நிறம் மாறுவதைக் காண, ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இந்தக் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

இக்கோவிலில் புரட்டாசி மகாளய அமாவாசை திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. அப்பொழுது மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளான சிவப்பெருமான் மற்றும் அம்பாளுக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், சந்தனம், உள்ளிட்ட அபிசேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பின்னர் சுவாமி-அம்பாளுக்கு வில்வம், ரோஜா, செவ்வந்தி, சாமந்தி, தாமரை, மரிக் கொழுந்து, முல்லை, மல்லி கை பூ உள்ளிட்ட சுமார் 2 டன் எடையுள்ள 11 வகையான மலர்களால் அபிசேகம் செய்து அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது.

பிரார்த்தனை

இத்தலம் ராகு, கேது பரிகாரத் தலமாக விளங்குகின்றது. நன்றாக பணி செய்தும், சரியான மரியாதை கிடைக்காமல் இருப்பவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் மன அமைதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பணி உயர்வு, இடமாற்றம் வேண்டுபவர்களும் சுவாமியை வழிபடலாம். புத்திர பாக்கியம் இல்லாத பெண்கள் அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி வளையல்கள் அணிவித்து வழிபடுகிறார்கள்.

Read More
அனந்தமங்கலம் இராஜகோபால சாமி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

அனந்தமங்கலம் இராஜகோபால சாமி கோவில்

மூன்று கண்களையும், பத்துக் கரங்களையும் உடைய அபூர்வ ஆஞ்சநேயர்

மயிலாடுதுறை மாவட்டத்தில், திருக்கடையூருக்கும் தரங்கம்பாடிக்கு இடையில் அமைந்துள்ளது அனந்தமங்கலம் ராஜகோபால சாமி கோவில். கருவறையில் மூலவர் வாசுதேவப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சேவை சாதிக்கிறார். உற்சவர் ராஜகோபால சுவாமி ருக்மணி, சத்யபாமாவுடன் எழுந்தருளி இருக்கிறார்.

இக்கோவில் பெருமாள் கோவிலாக இருந்தாலும், இங்கு எழுந்தருளியுள்ள திரிநேத்திர தசபுஜ வீர ஆஞ்சநேயர் மிகவும் பிரசித்தி பெற்றவர். அவரே முதன்மையான கடவுளாக இத்தலத்தில் வழிபடப்படுகிறார். அவர் மூன்று கண்களையும், பத்துக் கரங்களையும் உடையவராகவும், அவரது ஐந்து வலது கைகளில் சுதர்ஸனம், திரிசூலம், அங்குசம், பாணம், மத்தகக்ஷ்ம் என்ற ஆயுதங்களையும், இடது ஐந்து கைகளில் சங்கு, பத்மம், பாசம், கோதண்டம், நவநீதம் என்ற ஆயுதங்களையும் ஏந்தி, முதுகின் இருபக்கமும் கருடனுக்குரிய சிறகுகளோடு, அபூர்வமான தோற்றத்தில் காட்சித் தருகிறார். இதுபோன்ற ஆஞ்சநேயர் திருமேனியை வேறு எந்த கோவிலிலும் நாம் தரிசிக்க முடியாது.

ராமபிரான் இலங்கையில் இராவணனை வதம் செய்துவிட்டு திரும்புகையில், ராவணனின் வழிவந்த அரக்கர்கள் அங்கே கடலுக்கு அடியில் தவம் செய்து கொண்டிருப்பதை கேள்விப்பட்டு அவர்களை அழிக்க அனுமனை அனுப்பினார். இலங்கைக்கு புறப்பட்ட ஆஞ்சநேயருக்கு திருமால் தன்னுடைய சங்கு, சக்கரத்தையும், பிரம்மா தனது பிரம்ம கபாலத்தையும், ருத்ரன் மழுவையும், ஸ்ரீதேவி பத்மமும், ஸ்ரீசக்தி பாசமும் அளித்தனர். ராமபிரான் வில்லையும், அம்பையும் வழங்கினார். கருடாழ்வார் தம் சிறகுகளை அளித்தார். கடைசியாக அங்குவந்த சிவபெருமான், பத்து கரங்களிலும் ஆயுதங்கள் தரித்து நின்றிருந்த அனுமனைப் பார்த்தார். தாம் என்ன தருவது என்று சிந்தித்தார். தம்முடைய சிறப்புக்குரிய மூன்றாவது கண்ணையே அனுமனுக்கு அளித்தார். மூன்று கண்களும் (திரிநேத்ரம்), பத்து கைகளும் (தசபுஜம்) கொண்டு வீரக்கோலத்தில் இருந்த அனுமன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

கடலுக்கு கீழே தவம் செய்த அசுரர்களையும் அவர்களது படையினரையும் அழித்து துவம்சம் செய்த அனுமன், தனக்கு தரப்பட்ட கடமையை செவ்வனே செய்து முடித்து, ஆனந்தத்துடனும் ராமனை சந்திக்கப் பயணமானார். அப்படி வரும் வழியில் கடற்கரை ஓரத்தில் இயற்கை அழகு நிரம்பிய இத்தலத்தில் ஆனந்தத்துடன் தங்கினார். அப்படி அவர் தங்கிய இடம் 'ஆனந்தமங்கலம்' என பெயர் பெற்றது. தற்போது வழக்கில் அனந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது.

பிரார்த்தனை

திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும், அனந்தமங்கலம் சென்றால் ஆனந்தம் கிடைக்கும் என்பது பழமொழி. இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டாலே சிவன், திருமால், பிரம்மா, ஸ்ரீராமர், இந்திரன், ருத்ரன், கருடாழ்வார் ஆகிய அனைவரையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். உடல் மற்றும் மனநலம் குன்றியவர்கள். திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள். தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள். பில்லி, சூனியம், ஏவலால் பாதிக்கப்பட்டவர் கள் இத்தல் ஆஞ்சநேயரை வழிபட்டால் அவர்கள் அல்லல் நீங்கி ஆனந்தம் பெறுவதாக மக்களின் நம்பிக்கை. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் வியாழக்கிழமை, இத்தல ஆஞ்சநேயரை வழிபட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

Read More
தஞ்சைப் பெரிய கோவில்

தஞ்சைப் பெரிய கோவில்

மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா

தஞ்சைப் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன். உலக வரலாற்றில் அலெக்ஸ்சாண்டருக்கு இணையாகப் போற்றப்பட வேண்டியவர். மாபெரும் யானைப்படை, கப்பல் படையைக் கொண்டு தெற்காசியா முழுமையும் தனது பராக்கிரமத்தால் கட்டியாண்ட மாமன்னன் ராஜராஜன், 947-ம் ஆண்டு ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர். 985-ம் ஆண்டு சதய நட்சத்திரத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று 1014-ம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். சைவர்கள் போற்றும் திருமுறைகளை மீட்டுத் தந்தவர் மாமன்னன் ராஜராஜன். அவரை சிறப்பிக்கும் வகையில், அவர் பதவியேற்ற 985-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 -வது சதய விழா, இன்று (25.10.2023) அரசு விழாவாக கொண்டாடப்படுகின்றது.

தஞ்சைப் பெரிய கோவிலின் சிறப்புகள்

ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் மாமன்னன் ராஜராஜ சோழனின் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கும் தஞ்சை பெருவுடையார் கோவிலின் சில சிறப்புகளை இப்பதிவில் காணலாம்.

1003க்கும் 1010ஆம் ஆண்டிற்கும் இடையில் சோழ மன்னனான ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோயில், திராவிடக் கோயில் கலையின் உன்னதமான சான்றாகக் கருதப்படுகிறது. தற்போதுள்ள தொழில்நுட்பத்தை வைத்து கட்டினால் கூட பல ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்தை பெற்ற இந்தக் கோவில், இந்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. இந்தக் கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கடந்த 2010ஆம் ஆண்டில் நடைபெற்றது.

தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோவில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோவில், பிரகதீசுவரர் கோவில் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. காஞ்சியில் இராசசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோவில், மாமன்னன் ராஜராஜசோழனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலைக் கட்ட எண்ணிய ராஜராஜசோழன் தஞ்சையில் பெரிய கோவிலைக் கட்டினார். பெரியகோவிலின் அமைப்பு, திருவாரூர் தியாகராசர் கோவிலில் உள்ள அசலேசுவரர் சந்நிதியின் மாதிரியைக் கொண்டு உருவானதாகவும் செய்தி உண்டு. இக்கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சர மல்லன் இராசராசப்பெருந்தச்சன் எனக் கோவிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோவில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீ உயரமான இக்கற்கோவிலை ராஜராஜசோழன் எழுப்பினார். கோவிலின் கட்டுமானப் பணிக்காக 1,30,000 டன் கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அருகே மலைகள் இல்லாத நிலையில், நவீன போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் சுமார் 50 மைல்கள் தொலைவில் இருந்து கோவியிலுக்கான கற்கள் எடுத்து வரப்பட்டிருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இக்கோவில், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வெண்கலச் சிலையுருவாக்கம் ஆகியவற்றில் சோழர்களின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.

மாமன்னன் ராஜராஜசோழனின் தமிழ் பற்றை இக்கோவிலின் வடிவமைப்பில் இருந்து நாம் புரிந்து கொள்ளலாம். கோவிலில் உள்ள சிவ லிங்கத்தின் உயரம் 12 அடி. தமிழின் உயிர் எழுத்துக்கள் 12, சிவ லிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடி. தமிழின் மெய் எழுத்துக்கள் 18, கோவிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி. தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 216, சிவ லிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி. தமிழ் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247 ஆகும். கருவறையில் உள்ள சிவலிங்கம் மிகவும் பெரியது. 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தி 20 டன் எடையும், இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாகவும், இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியுமாகவும் உள்ளது, கோபுரத்தின் மேல் உள்ள வைக்கப்பட்டுள்ள கலச வடிவிலான மேற்கூரை கல் சுமார் 80 டன் எடை கொண்ட ஒற்றை கல்லால் செய்யப்பட்டது என்பது பெரிய அதிசயம். அதைவிட பெரிய அதிசயம், அப்பெரிய கல்லை எப்படி அவ்வளவு மேலே எடுத்துச் சென்றனர் என்பதுதான்.

அழகி என்னும் இடையர் குல மூதாட்டி, பெரிய கோவில் கட்டி முடிக்கும் வரை கோவில் கட்டும் சிற்பிகளின் தாகத்தை போக்கும் பொருட்டு தினமும் அவர்களுக்கு தயிர், மோர் வழங்கி வந்தார். இதனை அறிந்த மன்னர் ராஜராஜசோழன் இடையர் குல மூதாட்டியின் சிவத்தொண்டை அனைவரும் அறியும் வண்ணம், இராசகோபுரத்தின் உச்சியில் உள்ள 80டன் எடை கொண்ட கல்லில், அழகி என்று மூதாட்டியின் பெயர் பொறித்தார். அந்த கல் இடைச்சிக் கல் என்று அழைக்கப்படுகிறது. இப்படி, கோவிலில் உள்ள கல்வெட்டில், கோவிலை கட்ட யார் யார் பணியாற்றினார்களோ, கட்டடக்கலை நிபுணர்களிலிருந்து அவர்களின் துணிகளை சலவை செய்தவர்கள், முடி திருத்தியவர்கள் என கோவில் பணி செய்ய உதவியவர்களுக்கு தொண்டு செய்தவர்களின் பெயர் கூட கல்வெட்டில் பதிவு செய்திருப்பது ராஜ ராஜ சோழனின் பெருந்தன்மையும், மக்கள் மீது அவர் வைத்திருந்த அன்பும், ராஜ ராஜ சோழன் மீது மக்கள் கொண்டிருந்த அன்பும் புலப்படுகிறது.

Read More
கன்னியாகுமரி  பகவதி  அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்

கன்னியாகுமரி பகவதி அம்மன்

இந்தியாவின் தென்கோடி முனையில், முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில். அம்மனின் 51 சக்தி பீடங்களில், இது சேது சக்தி (குமரி சக்தி) பீடம் ஆகும்.. இந்த அம்மனுக்கு துர்க்கை, பகவதி என்னும் பெயர்களும் உண்டு. பரசுராமர் பிரதிஷ்டை செய்த ஆலயங்களில், கன்னியாகுமரியும் ஒன்று என்பது ஐதிகம். பாணாசுரன் எனும் அசுரனை அழித்த தேவி இங்கே குமரியாக நிலை கொண்டாள். அம்பிகையின் தோழிகளான தியாகசுந்தரி, பாலசுந்தரி இருவரும் ஆலயத்தில் தனிச் சந்நதி கொண்டருள்கின்றனர். தேவியின் மூக்கில் ஜாஜ்வல்யமாக ஜொலிக்கும் மூக்குத்தி, நாகரத்தினத்தால் ஆனது.

தாணுமாலயனுக்கும் தேவிக்கும் நடக்க இருந்த திருமணம் நாரதரின் கலகத்தால் நின்றது. திருமணத்திற்குத் தயாரிக்கப்பட்ட உணவுகள் யாவும் வகை வகையான மணலாக மாறின. அதன் சான்றாகவே, இன்றும், குமரி கடற்கரையில் அரிசி போன்ற வெண் சிறுமணலையும், பலவண்ண மணல்களையும் காணலாம்.

இந்தத் தலத்துக்குத்தான் ராமர் முதலில் வந்து வணங்கி,சீதையை மீட்க இங்கிருந்து இலங்கைக்கு பாலம் அமைக்க முயன்றார். அதன்பின் தேவியின் உத்தரவின்பேரில் வானரசேனையோடு ராமேசுவரம் சென்று அங்கு பாலம் அமைத்தார் என்கிறது தலவரலாறு.

இத்தலத்தில் கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை ஆகியவை செய்தால் திருமணம் விரைவில் கைகூடும். இந்த ஆலயத்துக்கு வந்து கன்னிப்பெண்கள் வேண்டிக்கொண்டால் விரும்பியபடி கணவன் அமைவான் என்பது நம்பிக்கை. காசிக்குச் சென்று புண்ணிய தீர்த்தத்தில் நீராடுவதற்கு முன்பு கன்னியாகுமரியில் இருக்கும் முக்கூடல் சங்கமிக்கும் இந்த தீர்த்தத்தில் நீராடுவதால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.

Read More
சிருங்கேரி சாரதாம்பிகை கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சிருங்கேரி சாரதாம்பிகை கோவில்

சிருங்கேரி சாரதாம்பிகை

கர்நாடகா மாநிலத்தில், சிக்மகளூர் மாவட்டத்தில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது சிருங்கேரி சாரதாம்பிகை கோவில். ஆயகலைகள் அறுபத்து நான்கினிற்கும் தெய்வமாக திகழும் சரஸ்வதி தேவிக்கு, நாற்பதுக்கும் அதிகமான திருநாமங்கள் உள்ளன. அவற்றில் சில கலைமகள், சகலகலாவல்லி, நாமகள், சாவித்ரி, சாரதா ஆகியவை ஆகும். சாரதா என்றால் சரஸ்வதி அல்லது வாக்கிற்கு அதி தேவதை என்று பொருள். லலிதாம்பிகையின் ஆயிரம் திருநாமங்களில் 123 வது திருநாமமாக அமைவது சாரதாராத்யா என்னும் திருநாமம். சாரதாராத்யா என்றால் விஷ்ணு, பிரம்மா ஆகியோரால் ஆராதிக்கப்பட்டவள் என்று பொருள். 'சாரத' என்ற சொல்லுக்குப் பண்டிதர்களால் பூஜிக்கப்படுபவர் என்ற அர்த்தமும் உண்டு.

கருவறையில் சாரதா தேவியானவள் 'பிரம்ம வித்யா' சொரூபமாக அதாவது பிரம்ம, விஷ்ணு, சிவன் மற்றும் சக்தி சொரூபங்களாகிய சரஸ்வதி, லட்சுமி, பார்வதி அனைவரையும் உள்ளடக்கிய ஒரே சொரூபமாக ஸ்ரீசக்ர பீடத்தில், கையில் ஜெப மாலையுடன் சிம்மாசனத்தில் மேல் அமர்ந்திருக்கிறார். அவரது நான்கு கைகளில் மேல் வலது கையில் கிளி இருக்கிறது. கீழிருக்கும் வலது கை சின்முத்திரை காண்பிக்கிறது. மேல் இடது கை அமிர்த கலசத்தை ஏந்தியுள்ளது. கீழ் இடது கை புத்தகத்தை வைத்துள்ளது. அமிர்த கலசம் சாகாமையையும், புத்தகம் மேலான அறிவையும் குறிக்கின்றன. ஜெப மாலையோ, பிரபஞ்சம் தோன்றும் விதையாக உள்ளது. பிரம்மனுடன் அடையாளப்படுத்திக்கொள்ளும் உயிரின் விழிப்புணர்வை சின்முத்திரை பிரதிபலிக்கிறது.

சரத் காலத்தில் ஆராதிக்கப்பட்டவள் சாரதாம்பிகை. சரத்காலம் என்பது இலையுதிர் காலம். இது ஐப்பசி, கார்த்திகை மாதங்களைக் கொண்டது. இந்தக் காலத்தில் வரும் நவராத்திரி, சாரதா நவராத்திரி எனப்படும். வசந்த காலத்தில் வரும் நவராத்திரி, வசந்த நவராத்திரி எனப்படும். இந்த இரு நவராத்திரி காலங்களும் அம்பிக்கைக்கு மிகவும் உகந்த பூஜை காலமாகும். ஆகவே இந்தக் காலத்தில் சிறப்பு பூஜைகள் இங்கு நடத்தப்படுகின்றன. கோலாகலமாக நடைபெறும் நவராத்திரி விழாவில், ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இங்கு திரண்டு வந்து, சாரதாம்பிகையை வழிபடுகின்றனர்.

நுண்ணறிவை அதிகம் கொண்டு மேதையாக ஆக சாரதா வழிபாடு மிகவும் அவசியம். சிருங்கேரி சாரதாம்பிகையை தரிசிப்பதன் மூலம் பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய அனைத்து தெய்வங்களின் அருளையும் பெறலாம் என்பது ஐதீகம். சாரதாம்பிகையே சரஸ்வதி என்பதால் கல்வியை ஆரம்பிக்கும் இளம் சிறார்கள் இங்கு வந்து அதைத் தொடங்குகின்றனர்.

Read More
மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில்

மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன்

மைசூரில் இருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் உள்ளது சாமுண்டி மலை . ஏறத்தாழ 3500 அடி உயரத்தில் உள்ள இந்த மலை மேல் தான் சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது . துர்கை அம்மனின் ரௌத்திர கோலம்தான் சாமுண்டீஸ்வரி அம்மன். 51 சக்தி பீடங்களில், இத்தலம் சம்பப்பிரத பீடம் ஆகும். சாமுண்டீஸ்வரி அம்மன் இங்கே ஆதி சக்தியாக வணங்கப்படுகிறார். மேலும் இவள் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றான மகா பிரம்மம் என்றும், மகா சக்தி என்றும் பக்தர்களால் வழிபடப்படுகிறார்.

முன்னொரு காலத்தில் மைசூர் நகரமானது, மகிஷாசூரன் என்ற அரக்க மன்னனால் ஆளப்பட்டது. இவனது பெயரிலுள்ள மகிஷா என்ற வார்த்தை காலப்போக்கில் மருவி மைசூர் என்று தற்போது அழைக்கப்பட்டு வருகிறது. பெண் தெய்வமான சாமுண்டீஸ்வரி, மகிஷாசுரனை வதம் செய்து அந்த ஊர் மக்களை அரக்கனிடம் இருந்து காப்பாற்றியதால், காவல் தெய்வமாக மைசூர் நகரத்திலேயே தங்கிவிட்டாள் என்கிறது வரலாறு. சாமுண்டி மலைப்பாதையில் மகிஷாசுரன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கையில் கத்தியும், மற்றொரு கையில் நாகபாசமும் கொண்டு உயர்ந்த வடிவில் மகிஷாசுரன் நிற்கிறான்.

கருவறையில் எட்டு கரங்களுடன் சாமுண்டீஸ்வரி அம்மன் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். பழமையான இந்த விக்கிரகம் மார்க்கண்டேய மகரிஷியால் நிறுவப்பட்டது. சாமுண்டீஸ்வரி அம்மன் மூல விக்கிரகம் தங்க மூலாம் பூசப்பட்டது . மூலத்தான கதவுகள் வெள்ளியிலானது . அம்மனின் காலடியின் கீழ் மகிஷாசுரன் எருமை உடலுடனும், அசுரத் தலையுடனும் விழிகள் பிதுங்கிய வண்ணம் இருக்கிறான். திரிசூலத்தால் அம்மன் இவனைக் குத்தியபடி காட்சியளிக்கிறாள். மூன்றாவது ஆடிவெள்ளியில் தேவி அவதரித்தார் என்பதால், ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் இங்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

மைசூர் ராஜ வம்சத்தின் குல தெய்வம் சாமுண்டீஸ்வரி அம்மன். 1573ம் ஆண்டு மைசூரை நான்காம் சாமராஜ உடையார் ஆட்சி செய்து கொண்டிருந்தார். ஒருநாள் இவர் தனது குல தெய்வமான சாமுண்டி தேவியை தரிசிக்கச் சென்றார். தரிசித்து முடிந்ததும் பல்லக்கில் ஏறி மைசூருக்குப் புறப்பட்டார். சிறிது தொலைவு சென்ற பின் திடீரென இடி, மின்னல், மழை என்று இயற்கை சீற ஆரம்பித்தது. பாதுகாப்புக்காக ஒரு பெரிய மரத்தின் அடியில் பல்லக்கை வீரர்கள் நிறுத்தினார்கள். 'நாங்கள் பத்திரமாக ஊர் திரும்ப அருள்புரிவாய் அம்மா' என்று அந்த மரத்தடியிலிருந்தே சாமுண்டிதேவியை வேண்டியபடி அன்னை கோயில் கொண்டிருந்த மலையுச்சியைப் பார்த்தார். மழை ஒரு திரையாகி ஆலயம் தெரியாதபடி மறைத்தது. சரி, சற்றுத் தொலைவு சென்று பார்க்கலாம் என தன் வீரர்களுடன் சில அடி தூரம் மன்னர் நகர்ந்தபின், அவர் அதற்கு முன் பாதுகாப்புக்காக தங்கியிருந்த மரத்தில் இடி விழுந்து மரம் தீப்பற்றி எரிந்தது. தன்னைக் காப்பாற்றவே அந்த இடத்திலிருந்து தேவி, கோவிலைத் தெரியாமல் செய்திருக்கிறாள் என உணர்ந்த சாமராஜ உடையார், அதற்கு நன்றிக் கடனாக மைசூரின் எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் கோவில் தெரியும் வண்ணம் சாமுண்டீஸ்வரிக்கு ஆலயம் எழுப்பினார்.

உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா

சாமுண்டீஸ்வரி அம்மன் விஜயதசமி அன்று மகிஷாசுரனை வதம் செய்தாள். அதனால் தான் மைசூரில் தசரா பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கிபி 1610-ம் ஆண்டில் இருந்து மைசூரை ஆண்ட உடையார் மன்னர்கள், போரில் வென்றதை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையின்போது 10 நாட்கள் தசரா விழாவை கொண்டாட தொடங்கினர். தசரா பண்டிகையின் முதல் நாள் மைசூர் உடையார் வம்ச மன்னர் சாமுண்டீஸ்வரி அம்மனை வணங்கி சிறப்பு பூஜைகள் செய்து விழாவினை தொடங்கி வைப்பார். பின்னர் புகழ்பெற்ற அரச தர்பார் வைபோகம் நடைபெறும் அதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு அரச வம்சத்தினரின் தர்பார் கோலத்தினை காண்பார்கள். நவராத்திரி ஒன்பது நாட்களும் சிறப்பான பூஜைகளும், கொண்டாட்டங்களும் மைசூரில் நடக்கும். விஜயதசமி தினத்தன்று ஜம்பூ சவாரி எனும் யானைகள் அணிவகுப்பு சிறப்பானது. அலங்கரிக்கப்பட்ட தலைமை யானையின் மீது சாமுண்டீஸ்வரி அம்மன் 750 கிலோ எடை கொண்ட தங்க மண்டபத்தில் பவனி வருவது தசரா திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாகும்.

ஞாயிறு, செவ்வாய், வெள்ளியன்று இத்தலத்தில் கூட்டம் அதிகம் இருக்கும். இந்த அன்னையை வணங்கினால், எதிரிகளை எளிதில் வெற்றிகொண்டு, வாழ்வில் நல்லருள் பெறலாம் என்பது ஐதீகம்.

Read More
ஹொரநாடு அன்னபூர்ணேசுவரி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

ஹொரநாடு அன்னபூர்ணேசுவரி கோவில்

ஹொரநாடு அன்னபூர்ணேசுவரி அம்மன்

கர்நாடகா மாநிலம் சிக்மகளூரில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில், அடர்ந்த காட்டுப் பகுதியில், பத்ரா நதிக்கரையில் அமைந்திருக்கிறது ஹொரநாடு அன்னபூர்ணேசுவரி கோவில். அன்னபூரணி என்றாலே அன்னத்தை பூரண திருப்தியோடு பக்தர்களுக்கு அளிப்பவள் என்று பொருள். அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் உச்சிகால பூஜை நடந்து முடிந்த பிறகு அனைவருக்கும் சாப்பாடு வழங்கப்படுகிறது. அன்னபூரணியை தரிசித்துவிட்டு ஒருவர் கூட பசியுடன் கோவிலை விட்டு திரும்பி செல்ல முடியாது. கோவிலில் அம்மனை தரிசிக்கும் சிறு குழந்தைகளுக்கு கூட பசும்பால் தரப்படுகிறது.

கருவறையில் அன்னபூர்ணேசுவரி தங்கத்தாலான திருமேனி உடையவளாய், நான்கு கரங்களுடன் பீடத்தின் மேல் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார், அன்னையின் மேல் இரு கரங்கள் சங்கும் சக்கரமும் தாங்கி இருக்கின்றன. அபய முத்திரையுடன் விளங்கும் அன்னையின் வலது கீழ் கையில் காயத்ரி தேவியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. வரத முத்திரை தாங்கி நிற்கும் இடது கீழ் கையில் ஸ்ரீ யந்திரம் பொறிக்கப்பட்டுள்ளது.

பார்வதிதேவி அன்னபூரணியாக அவதரித்த வரலாறு

ஒரு முறை, சிவபெருமானுக்கும்,பார்வதி தேவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிவபெருமான் உணவுப்பண்டங்களை மாயை என்று கூறினார். பார்வதியோ உணவு மாயை அல்ல என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிவபெருமான் உணவு மாயை என்பதை நிரூபிக்க தட்பவெப்ப நிலை மாறாமல் நிறுத்திவிட்டார். இதனால் தாவரங்கள் வளரவில்லை. உணவு பொருட்கள் ஏதும் மக்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் நம் பூமியில் பஞ்சம் ஏற்பட்டது. இதனை நீக்க பார்வதி தேவியானவள், அன்னபூரணியாக அவதாரம் எடுத்து அனைவருக்கும் உணவினை வழங்கி பஞ்சத்தை போக்கி அருள்பாலித்தாள். இதன் பிறகு அன்னபூரணி நமக்கெல்லாம் உணவு அளிக்க நம் பூமியிலேயே தங்கிவிட்டாள் என்பது வரலாற்று கதை.

இந்த அன்னபூர்ணேசுவரி கோவிலில் அர்ச்சனை செய்தால் இங்கு தரப்படுகின்ற முக்கிய பிரசாதம் அரிசி தான். அந்த அரிசியை கொண்டு வந்து நம் வீட்டின் அரிசி ஜாடியில் போட்டு வைத்தால், என்றும் உணவுக்கு நம் வீட்டில் பஞ்சமே இருக்காது. நம் வீட்டில் உள்ள பாத்திரம் அட்சய பாத்திரமாக தான் என்றும் திகழும் என்பது நம்பிக்கை. அன்னபூர்ணேசுவரியை வணங்குபவர்களுக்கு, 'அன்னதோஷம்' என்னும் வறுமை அணுகவே அணுகாது.

Read More
திருச்சானூர் பத்மாவதி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருச்சானூர் பத்மாவதி கோவில்

திருச்சானூர் அலர்மேல் மங்கை தாயார்

ஆந்திர மாநிலத்தில், கீழ் திருப்பதியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருச்சானூர் பத்மாவதி கோவில். இக்கோவில் வெங்கடாசலபதியின் மனைவியான பத்மாவதி தேவி எனும் அலர்மேல் மங்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில். பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்குவதால், திருச்சானூர், சுகபுரி என்றும் அழைக்கப்படுகிறது. பத்மாவதி தாயாருக்கு அலர்மேல் மங்கை என்ற பெயரும் உண்டு. சொல் வழக்கில், அலமேலு என்று அழைப்பார்கள். அலர் என்றால் தாமரை. 'செந்தாமரை மலர் மேல் வீற்றிருப்பவள்' என்று பொருள். பத்மம் என்றாலும் தாமரை. எனவே, அவளுக்கு, பத்மாவதி என்ற பெயரும் பொருத்தமாகிறது. அன்னை மகாலட்சுமியின் அம்சம் அலர்மேல் மங்கை. பத்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த சிறப்புடையவள் அலர்மேல் மங்கைத் தாயார்.'

திருச்சானூரில் அருளும் இந்தத் தாயாரின் சந்நிதியில் பிரம்மா, உலக நன்மைக்காக இரண்டு தீபங்களை ஏற்றி வைத்து வழிபட்டார் என்றும், அந்த விளக்குகள் இன்றும் ஒளி விட்டுப் பிரகாசிக்கின்றன என்றும் புராணங்கள் கூறுகின்றன. இங்கு தாயாருக்கு ஆலயம் எழுப்பும்படி தொண்டைமானுக்கு ஶ்ரீநிவாசனே உத்தரவிட்டார் என்கின்றது தலபுராணம். அதனால் பகவான் ஆனந்தம் அடைந்ததால், இந்த ஆலய விமானத்துக்கு ஆனந்த விமானம் என்று தொண்டைமான் பெயரிட்டான்.

இந்த ஆலயத்தில் வழிபட்டப் பிறகே திருமலை சென்று ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பது மரபு. மன அமைதியைத் தருவதோடு, வறுமையில் வாடும் மக்களுக்கு செல்வத்தை அளிப்பவளும் அவளே. அப்படிப்பட்ட அலர்மேல் மங்கையை தரிசித்து அல்லது மனக்கண்ணால் தியானித்து வழிபடுவதன் மூலம் சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும் என்பது நம்பிக்கை. திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு, பெருமாள் குறத்தியாக வந்து குறி சொன்னார். குறத்தி குறி சொன்ன கதையை கேட்டாலோ, படித்தாலோ திருமணத் தடை நீங்குவதுடன், அவர்கள், வம்சாவளிக்கே, திருமணத்தடை நீங்கி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ‘வைகரீ ரூபாய அலர்மேல் மங்காய நமஹ' எனும் அலர்மேல் மங்கை தாயார் மந்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் காலையில் எழுந்த உடன் இந்த மந்திரத்தை கூறினால் பத்மாவதி தேவியின் அருள் கிட்டும் என்பது ஐதீகம்.

Read More
ராமேசுவரம்  ராமநாதசுவாமி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில்

ராமேசுவரம் பர்வதவர்த்தினி அம்மன்

பாண்டிய நாட்டு 14 தேவாரத் தலங்களில் ஒன்று ராமேசுவரம். இறைவன் திருநாமம் ராமநாதசுவாமி. இறைவியின் திருநாமம் பர்வதவர்த்தினி, மலைவளர்காதலி. பர்வதத்தின் (பர்வதம்=மலை) மகள், பர்வத வர்தினி ஆனாள். 'வர்தன' என்னும் சொல்லுக்கு 'வளர்ச்சி, விரிவு' என்னும் பொருள்கள் உண்டு. பர்வத அரசர் (ஹிமவான்) வளர்த்த மகளாக, பர்வத வம்சத்தின் விரிவாக ஓங்கி நிற்பவளுக்குப் பர்வதவர்தினி என்பது திருநாமம். மலையத்துவச மன்னர் (ஹிமவான்) வளர்த்த மகள் என்பதைக் குறிப்பதாக இந்த அம்பிகையை மலைவளர் காதலி (மலை வளர்த்த பாசத்திற்குரியவள்) என்றே திருஞானசம்பந்தரும், தாயுமானவரும் அழைக்கின்றனர்.

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இத்தலமும் ஒன்று. அம்மனின் 51 சக்தி பீடங்களில், இது சேது சக்தி பீடம்.

சுவாமியின் வலது பக்கத்தில் அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோல நாயகியாக, நான்குத் திருக்கரங்களுடன் அம்பிகை காட்சி தருகிறாள். கீழ்க்கரங்கள் அபயமும், வரமும் காட்ட, மேல் திருக்கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியிருக்கிறாள். திருப்பாதங்களைச் சேர்த்து வைத்துக்கொண்டு இவள் நிற்பதைப் பார்த்தால், 'நானிருக்கிறேன், கவலைப்படாதே' என்று கூறுவது போன்றே தோன்றுகிறது. தாமரை மலர்களைத் தாங்கியவள் என்பதாலோ என்னவோ, நவராத்திரி காலத்தில் தாமரைச் செல்வியான மகாலட்சுமிக் கோலத்திலும் அம்பிகை காட்சி தருவது வழக்கம். பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரம் உள்ளது.

அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக் காப்பு அலங்காரம் செய்வது வழக்கம். இங்கு உள்ள பள்ளியறையில் சுவாமி அம்பாளுக்கு நடைபெறும் இரவு கால சயன பூஜையும் , அதிகாலையில் நடைபெறும் எழுந்தருளல் பூஜையும் நாம் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

அம்பிகை பர்வதவர்தினியிடம் வேண்டிக்கொண்டால், எதுவாக இருந்தாலும் நிறைவேற்றிக் கொடுப்பாள் என்பது பக்தர்களின் நெடுங்கால அனுபவம்.

பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதி பிரகாரத்தில் சந்தான விநாயகர், சவுபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து இருக்கின்றனர். இவர்களுக்கு காவிஉடை அணிவிக்கப்படுகிறது. விநாயகர், பிரம்மச்சாரி என்பதால் இவ்வாறு அணிவித்திருப்பதாகச் சொல்கிறார்கள். அம்பாள் சன்னதி பிரகாரத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் அரங்கநாதர் காட்சி தருகிறார். இராமர் பூஜித்த அரங்கநாதரைப் பெற்ற விபீஷணன், சந்தர்ப்பவசத்தால் அச்சிலையை காவிரிக்கரையில் வைத்துவிட்டு, இலங்கை திரும்பினான். அப்போது தன் திருப்திக்காக, இங்கு வேறொரு அரங்கநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். ஏழு தலையுடைய ஆதிசேஷன் மீது சயனம் கொண்டுள்ள இந்த அரங்கநாதர், கையில் தண்டத்துடன் காட்சியளிப்பது சிறப்பான அமைப்பு.

Read More
திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்

திருஈங்கோய்மலை மரகதாம்பிகை அம்மன்

திருச்சி - கரூர் சாலை வழியிலுள்ள குளித்தலை என்ற ஊரிலிருந்து காவிரி ஆற்றைக் கடந்து சென்றால் காவிரியின் வடகரையில், மலையின் மேல் அமைந்துள்ள தேவாரத் தலம், திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோவில். மலைமேல் அமைந்த வெகு சில தேவாரத் தலங்களில் இத்தலமும் ஒன்று. சுமார் 500 படிகள் ஏறினால் கோவிலை வந்தடையலாம். அகத்தியர் ஈ உருவத்தில் இங்குள்ள இறைவனை வழிபட்டதால் ஈங்கோய்மலை என்று பெயர் வந்தது. இத்தலத்து இறைவன் திருநாமம் மரகதாசலேசுவரர், ஈங்கோய்நாதர். இறைவியின் திருநாமம் மரகதாம்பிகை, லலிதா, மரகதவல்லி.அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சாயா சக்தி பீடம் ஆகும். கருவறையில், அம்பாள் நான்கு கரங்களுடன், நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார், அம்பாளின் கருவறை விமானம், கோபுரம் போன்ற அமைப்பில் மூன்று கலசங்களுடன் இருக்கின்றது.

மூலவர் மரகதாலேஸ்வரர் பெயருக்கு ஏற்றாற் போல மரகதம் போன்று பச்சை நிறத்தில் அமைந்துள்ளார். சிவராத்திரி நாளின், முனபின் நாடகளில் சூரிய ஒளி இத்தல இறைவன் மீது படுகிறது. அச்சமயம் லிங்கம் பல வண்ணத்தில் காட்சி அளிப்பதைக் காணலாம். சிவனுக்கு தீபாராதனை காட்டும்போது லிங்கத்தில் ஜோதி ஜொலிப்பதைக் காணலாம்.

பிருகு முனிவர் சிவனை வணங்கும் வழக்கம் உடையவர். ஆனால், அம்பாளைக் வணங்க மாட்டார். பக்தர்களின் வழிபாட்டில் அம்பாளுக்கும் முக்கியத்துவம் வேண்டும் எனக் கருதிய சிவன், அவளைக் கோபப்படும்படி செய்தார். அம்பாள், பூலோகம் வந்து இத்தலத்தில் தவம் செய்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தன் உடலின் இடப்பாகத்தை தருவதாக இத்தலத்தில் உறுதியளித்தார். அம்பாளுக்கு, சிவன் தன் இடப்பாகம் தர உறுதி தந்த மலை என்பதால் இம்மலையை 'சக்திமலை' என்கின்றனர்.

திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க இத்தலத்திற்கு வந்து வழிபடுகிறார்கள்.

Read More
ஸ்ரீகாளஹஸ்தி காளத்தியப்பர் கோயில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

ஸ்ரீகாளஹஸ்தி காளத்தியப்பர் கோயில்

ஸ்ரீகாளஹஸ்தி ஞானப் பூங்கோதை அம்மன்

சென்னையில் இருந்து 110 கி.மீ. தொலைவில், ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள தேவாரத் தலம் ஸ்ரீகாளஹஸ்தி காளத்தியப்பர் கோயில். இறைவன் திருநாமம் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர். இறைவியின் திருநாமம் ஞானப் பூங்கோதை. இந்த அம்பிகைக்கு ஞானப்பிரசனாம்பிகை, ஞானக்கொழுந்து, ஞானசுந்தரி, ஞானப் பேரொளி, வண்டார்குழலி என்ற பெயர்களும் உண்டு. 51 சக்தி பீடங்களில் இத்தலம் ஞான பீடம் ஆகும். பஞ்ச பூதத்தலங்களுள் இது வாயுத்தலம். தட்சிண(தென்) கயிலாயம் என்னும் சிறப்புடையது.

கயிலாச கிரி மலையடிவாரத்தில், சுவர்ணமுகி எனப்படும் பொன்முகலி ஆற்றின் கரையில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அம்பாள் ஞானப் பூங்கோதை நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்பாள் திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 'அர்த்த மேரு ' உள்ளது. அம்பாள் இடுப்பு ஒட்டியாணத்தில் 'கேது ' உருவமுள்ளது. அம்பாள் கருவறையை வலம் வரும்போது வட்டமாகத் தரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மூலை இடத்தில் மூன்று தலைகள் சேர்ந்திருப்பது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தினடியில் சக்தி வாய்ந்த யந்த்ரம் இருப்பதால் இங்கு அமர்ந்து ஜபம் செய்வது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. அம்பாளுக்கு வெள்ளிக்கிழமை தோறும் தங்கப்பாவாடை சாற்றப்படுகிறது. சந்நிதிக்கு நேர் எதிரில் உள்ள மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தோறும் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.

இத்தலம் சிறந்த 'ராகு, கேது க்ஷேத்ரம்' என்றழைக்கப்படுகிறது. சர்ப்ப தோஷம் முதலியவை நீங்கும் தலமாதலின் இங்கு இராகு கால தரிசனம், இராகுகால சாந்தி முதலியன விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

நவராத்திரி நாட்களில் ஞானப் பூங்கோதையை நேரிலோ, நினைத்தோ வழிபட்டால் அம்பிகையின் திருவருள் கைகூடி சகல அஞ்ஞானங்களும் நீங்கும். மேலும் ஞானகாரகனாம் கேதுவின் திருவருள் கிட்டும்.

Read More
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன்

அம்மனின் சக்தி பீடங்களில் முதன்மையானது என போற்றப்படுவது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இந்த பீடத்திற்கு 'ராஜமாதங்கி சியாமள பீடம்' என்று பெயர். மீனாட்சிஅம்மன் சிலை மரகதக்கல்லால் ஆனது.

இத்தலத்தை பொறுத்தவரை பெண்மைக்கு முக்கியத்துவம் தரும் வகையில், அம்மனின் இடப்பக்கம் சுவாமி வீற்றிருக்கிறார். மதுரையில் மீனாட்சிக்கே முதல் மரியாதை. இங்கு மீனாட்சி அம்மனை முதலில் வணக்க வேண்டும். பின்னர்தான் சுவாமியை தரிசிக்க வேண்டும். பொதுவாக சிவாலயங்களில் முதலில் இறைவனுக்கு நைவேத்யம் செய்தபிறகு, அதையே தான் சுவாமியின் பிரசாதமாக அம்பாள் முதலான மற்ற எல்லா தெய்வங்களுக்கும் நைவேத்யம் செய்வார்கள். மதுரையிலே மட்டும் மீனாட்சிக்கு முதலில் நைவேத்யம் செய்துவிட்டு, பின்னர் சுந்தரேஸ்வர் உட்பட பிற மூர்த்திகளுக்கு நைவேத்யம் செய்வார்கள்.

மீனாட்சி அம்மனின் ஆபரணங்கள்

மீனாட்சி அம்மனின் மாணிக்க மூக்குத்தி மிகவும் பிரசித்தம். அது போன்றே மீனாட்சி அம்மன் திருவிழாக்காலங்களில் அணியும் பல நகைகள் பக்தர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும். பாண்டியர், நாயக்கர் கால மன்னர்கள், ஆங்கிலேயர்கள் என அம்மன், சுவாமிக்கு பலரும் தங்கம், வைரம், வைடூரியம், முத்து, மாணிக்கம், புஷ்பராகத்தில் ஆபரணங்கள் செய்து காணிக்கையாக கொடுத்துள்ளனர். இவை திருவிழா காலங்களில் அம்மன், சுவாமிக்கு அணிவிக்கப்படுகின்றன. அவைகளில் சில - பாண்டிமுத்து, முத்து சொருக்கு, முத்து உச்சிக் கொண்டை, முத்து மாம்பழக் கொண்டை, முத்துமாலைகள், முத்து கடிவாளம், பெரியமுத்து மேற்கட்டி, முத்து உச்சிக் கொண்டை, முத்து மாம்பழக் கொண்டை, முத்தங்கிகள், முத்து மாலைகள், முத்துக் கடிவாளம் ஆகிய முத்தாரங்கள். தலைப்பாகை கிரீடம், திருமுடி சாந்து, பொட்டுக்கறை, பவளக் கொடி பதக்கம், ரோமானிய காசு மாலை, நாகர் ஒட்டியாணம், நீலநாயகப் பதக்கம், திருமஞ்சன கொப்பரை (வெள்ளி), தங்க காசுமாலை, தங்க மிதியடிகள், பட்டாபிஷேக கிரீடம், ரத்தின செங்கோல்.

அம்மனின் தங்க கவசம் - 7 ஆயிரம் கிராம் எடையுள்ளது. தங்க கவசத்தை அம்மனுக்கு சாத்தினால், அழகிய புடவை அணிந்திருப்பது போல் தோன்றும்.

ரத்தின செங்கோல் - இதன் எடை 67 தோலா. இதில் 761 சிவப்பு கற்கள், 21 பலச்ச வைரங்கள், 269 மரகதம், 44 முத்துக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பெரிய அளவில் 2 வாகன பதக்கங்கள். ரோமானிய காசுமாலை. இதில் தங்க ரோமன் 48 காசுகள் 50 தங்க மணிகளுடன் கோர்க்கப்பட்டுள்ளன. இதேபோல் வெளிநாட்டினர் கொடுத்த காசுமாலை, கிழக்கத்திய கம்பெனி வழங்கிய 73 தங்ககாசுகளுடன் கூடிய காசுமாலை உள்ளது.

வைர கிரீடம்

1972ல் திருப்பணி நடத்தியபோது வைர கிரீடம் உருவாக்கப்பட்டது. வைர கிரீடம் 3 ஆயிரத்து 500 கிராம் எடையுள்ளது. இதில் வெளிநாட்டில் பட்டை தீட்டப்பட்ட 399 காரட் எடையுள்ள முதல் தரமான 3 ஆயிரத்து 345 வைர கற்களும், 600 காரட் எடையுள்ள 4 ஆயிரத்து 100 சிவப்பு கற்களும் பதிக்கப்பட்டுள்ளன இது தவிர எட்டரை காரட் எடையுள்ள ஒரு மரகத கல்லும், அதே எடையில் ஒரு மாணிக்க கல்லும் பொருத்தப்பட்டுள்ளன. கிரீடத்தின் உயரம் பதிநான்கரை அங்குலம்.

விக்டோரியா மகாராணி பார்வைக்காக இங்கிலாந்து சென்று திரும்பிய நீலநாயகப் பதக்கம்

நீலநாயகப் பதக்கம் மன்னர் திருமலை நாயக்க மன்னர் அளித்தது. ஆபரணங்களில் இதுவே மிக அற்புதமானது. எந்த பக்கம் பார்த்தாலும் பளபளப்பும், ஒளியும் ஊடுறுவி பளிச்சிடும். இதன் எடை 21 தோலா. இதில் 10 பெரிய நீல கற்கள், 2 கெம்பு, 1 கோமேதம் பதிந்துள்ளது. நீலநாயகப் பதக்கத்தை ஒரு தடவை ஏழாம் எட்வர்டு சக்கரவர்த்தி மதுரைக்கு வந்திருந்தபோது பார்த்துவிட்டு ஆச்சரியப்பட்டுப் போனாராம். உடனே அந்தப் பதக்கத்தை அவர் தமது தாயார் விக்டோரியா மகாராணிக்குக் காட்ட வேண்டுமென்று சொல்லிக் கையோடு எடுத்துக் கொண்டு இங்கிலாந்து போனார் . எடுத்துக் கொண்டு போனவர் அதை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பத்திரமாகத் திருப்பியும் அனுப்பி விட்டார்.

பீட்டர் பாடுகம்

அம்மனின் திருவடிகள் தாங்கும் தங்க மிதியடிகள்-ஒன்றின் எடை 27 தோலா. 211 சிவப்பு கற்கள், 36 மரகத கற்கள், 40 பலச்ச வைரம், 2 முத்து, 2 நீலம், 2 வைடூரியம் பதிக்கப்பட்டுள்ளது. மற்றொன்றின் எடை 28 தோலா. 211 சிவப்பு கற்கள், 40 பலச்ச வைரம், 36 மரகத கற்கள், 2 நீலம், 2 முத்து, 2 வைடூரியம் பதிக்கப்பெற்றது. இந்த மிதியடிகளை, சிறுமி வடிவில் வந்து தன் உயிரை காப்பாற்றிய மீனாட்சி அம்மனுக்கு ரவுஸ் பீட்டர் (1812-1828) என்ற ஆங்கிலேய கலெக்டர் காணிக்கையாக அளித்தார். பின்னர் கோவில் நிர்வாகம் அவரது பெயரை, காலணிகளின் அடியில் 'பீட்டர் பாடுகம்' என்று செதுக்கி அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். மேலும் மாணிக்கக் கற்கள் பதித்த தங்க அங்கவடிகளை (குதிரைச் சேணத்திலிருந்து தொங்கும் பாதந்தாங்கிகள்) அம்மனுக்கு அளித்தார்.

Read More
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்

தன் பக்தையிடம் தங்கக் காசு மாலை கேட்ட மயிலை கற்பகாம்பாள்

தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களுள், தேவாரத் தலமான மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் மிகவும் முக்கியமானது. மயிலாப்பூர் பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது. 'கயிலையே மயிலை; மயிலையே கயிலை' என்னும் சிறப்புடையது. மயிலாப்பூர் என்ற பெயரே மயிலை என்று மருவியது. மயில் + ஆர்ப்பு + ஊர்= மயிலாப்பூர். இதற்கு, மயில்கள் நிறைந்த இடம் அல்லது மயில்கள் ஆரவாரம் செய்யும் ஊர் என்று பொருள். பிரம்மாண்ட புராணம் இந்தத் தலத்தை மயூரபுரி, மயூரநகரி ஆகிய பெயர்களால் குறிப்பிடுகிறது. வேண்டுவோருக்கு வேண்டியதைத் தரும் தேவலோக மரமான கற்பகத் தருவைப் போன்று, தன் பக்தர்கள் தன்னிடம் வேண்டும் வரங்களை எல்லாம் தருவதால், இந்த அம்பிகைக்கு ஸ்ரீகற்பகாம்பாள் என்று திருநாமம்.

இத்தலத்து இறைவி கற்பகாம்பாள், நான்கு திருக்கரங்களுடன் அபய-வரத ஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில் அழகே உருவாகக் காட்சி தருகிறாள். வெள்ளிக் கிழமைகள் மற்றும் சில விசேஷ தினங்களில் மலர்களால் ஆன பூப்பாவாடைகளை அணிந்து காட்சித் தருகிறாள் ஸ்ரீகற்பகாம்பாள். மேலும் வெள்ளிக்கிழமைதோறும் மாலை வேளையில் அன்னை கற்பகாம்பாளுக்கு தங்கக் காசு மாலையும், வைரக் கிளி தாடங்கமும் அணிவிக்கப்படுவது இந்தக் கோயிலின் தனிச் சிறப்பு. இந்தத் தங்கக் காசு மாலையின் பின்னணியில் அம்பிகையின் திருவிளையாடல் உள்ளது.

இக்கோவிலில் 1950-ம் வருடத்திலிருந்து, 'கற்பகாம்பாள் சஹஸ்ரநாம கோஷ்டி' என்னும் பெண்கள் குழு அனுதினமும் லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்வது வழக்கம். இந்தக் குழுவிற்கு 'குரு பாட்டி' என்பவர் தலைவியாகவும், ஆனந்தவல்லி என்பவர் செயலாளராகவும் இருந்தனர். அனுதின பாராயணத்தைத் தவிர கோவிலின் பல்வேறு உற்சவங்கள் மற்றும் விசேஷ நாட்களில் அர்ச்சனை, அபிஷேகம் ஆராதனை ஆகியவையும் செய்து வந்தனர்.

1970-ல் ஒரு நாள் குரு பாட்டியின் கனவில் வந்த கற்பகாம்பாள், 'நீயும் உனது குழுவினரும் தினமும் எனக்கு சஹஸ்ரநாம பாராயணம் செய்கிறீர்கள். காசி விசாலாட்சிக்கும், காஞ்சி காமாட்சிக்கும் இருப்பதைப் போல் எனக்கும் தங்கத்துல சஹஸ்ரநாம காசுமாலை வேணும்' என்று கேட்டாள். குரு பாட்டியும் தான் கனவில் கண்டதை தன் குழுவினரிடம் சொன்னாள். அனைவரும் நன்கொடை பெற்று காசுமாலை செய்து கற்பகாம்பாளுக்கு அணிவிக்க முடிவு செய்தனர்.

வருடங்கள் பல சென்றும், குழுவினரால் காசு மாலைக்கு தேவையான பொருளை சேர்க்க முடியவில்லை. 1978-ல் குருபாட்டியும், ஆனந்தவல்லி மற்றும் உறுப்பினர்கள், இது பொருட்டு காஞ்சி மகா பெரியவரிடம் முறையிட காஞ்சி மடத்திற்கு சென்றனர். 'என்ன? காசுமாலைக்கு பணம் சேரலியா' என்று அவர்கள் முறையிடும் முன்னரே, மகா பெரியவர் கேட்டதால் அவர்கள் ஆச்சரியமடைந்தனர். ' கேட்டவள் அம்பிகை தானே. அதற்கு அவளே அருள் கொடுப்பாள். கவலைப்பட வேண்டாம்' என்று சொன்னார். மேலும் 'விசாலாட்சிக்கும், காமாட்சிக்கும் இருக்கறது பணக்கார காசுமாலை; ஆனால் கற்பகாம்பாளுக்கு கிடைக்கப் போறது பக்தியால காசுமாலை' என்று அங்கிருந்தவர்களிடம் கூறினார். பிறகு ஆனந்தவல்லியிடமும் குரு பாட்டியிடமும் 'கற்பகம் சுவாசினி சங்கம் அப்பிடின்னு பேர்வச்சு, நிறைய சுவாசினி மற்றும் பாலா திருபுரசுந்தரி பூஜைகள் செஞ்சிண்டு வாங்கோ' என்று சொல்லி ஆசீர்வாதம் செய்து பிரசாதமளித்தார்.

மகா பெரியவர் சொன்னதை சிரமேற்கொண்டு நடைமுறைப்படுத்தியதால், பொன்னும் பொருளும் வந்து குவிந்தன. 1982-ல் காசு மாலை செய்யும் வேலை துவங்கியது. ஒவ்வொரு தங்கக் காசிலும், காசின் ஒரு புறத்தில் சஹஸ்ரநாமாவளியின் ஒரு நாமாவும், மறு புறத்தில் கோவிலின் முத்திரையான சிவலிங்கத்தை மயில் பூஜை செய்வது -பின்னணியில் அம்பாள் உருவமும் பதிக்கப்பட்டது. தங்க காசு மாலையும் உருவானது.

கற்பகாம்பாளுக்கு லலிதா சஹஸ்ரநாம தங்க காசு மாலையை சமர்ப்பிக்கும் விழா 26. 2. 1986 அன்று கொண்டாடுவது என்று முடிவானது.

ஆனால், 20-1-1986 அன்று ஆனந்த வல்லியின் கணவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கை கால்கள் செயலிழந்து, பேச்சும் இல்லாமல் போனது. மருத்துவர்கள் , அதிக பட்சம் 48 மணி கெடு கொடுத்து விட்டனர். ஆனந்தவல்லி இதைத் தாங்க முடியாது மனமுடைந்து வீட்டின் பூஜை அறையிலேயே அடைந்து கிடந்தார். குரு பாட்டி சங்கத்தின் உறுப்பினர்களோடு காசு மாலையை எடுத்துக்கொண்டு பெரியவாளை தரிசிக்க மடத்திற்குச்சென்றார். இவர்கள் எல்லோரையும் பார்த்த மகா பெரியவர் , 'ஏன்? உங்க செயலாளர் வரலியா?' என்று கேட்க, இவர்களும் அனந்தவல்லி கணவரின் நிலைமை பற்றி கண்ணீருடன் விவரித்தனர். காசுமாலையை பார்வையிட்ட மகா பெரியவர், 'மாலை சிறப்பாக அமைந்திருக்கிறது. இந்த மாலையை கற்பகாம்பாளுக்கு போட, உங்க செயலாளர் உடன் இருப்பார். கவலைப்படாதீர்கள்' என்று சொல்லி ஆசீர்வதித்து பிரசாதங்கள் கொடுத்தார்.

அனைவரும் நேராக ஆனந்தவல்லி வீட்டிற்கு வந்து ஸ்வாமிகளின் ஆசிகளை சொல்லி பிரசாதங்களை கொடுத்தனர். என்ன ஒரு அதிசயம்! அதேநேரத்தில் மருத்துவ மனையிலிருந்து, ஆனந்தவல்லியின் கணவர் நினைவு திரும்பி பேசுவதாகவும், நல்ல நிலையில் இருப்பதாகவும் செய்தி வருகிறது. மருத்துவர்கள் மிகுந்த ஆச்சர்யத்துடன், ஏதோ அற்புதம் நடந்துள்ளது என்று சொல்லி மறு நாளே டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள்.

26-2-1986 அன்று நடந்த காசுமாலை சமர்ப்பண விழாவில், ஆனந்தவல்லி கணவரும் கலந்து கொண்டார். ஆனந்தவல்லி விழாவை முன்னின்று நடத்தி, அன்று காலையில் கற்பகம்பாளுக்கு காசுமாலையினை சாற்றி, மாலையில் நடை பெற்ற கூட்டத்தில் தனது அறிக்கையையும் சமர்ப்பித்தார்.

மேலும், காசுமாலையைப் பாதுகாப்பாக வைக்க ஒரு கோத்ரேஜ் அலமாரியினையும் அளித்தார். தற்போதும், அம்பாளுக்கு அனைத்து வெள்ளிக் கிழமைகள், பெளர்ணமி நாட்கள் மற்றும் வருடா வருடம் பிப்ரவரி 26 நாளிலும் இந்தக் காசுமாலை சாற்றப்படுகிறது.

Read More