கன்னியாகுமரி  குகநாதீசுவரர் கோவில்

கன்னியாகுமரி குகநாதீசுவரர் கோவில்

முருகன் தோஷம் நீங்க சிவனை வழிபட்ட தலம்

கன்னியாகுமரி ரயில் நிலயத்திற்கு அருகில், பகவதி அம்மன் கோவிலில் இருந்து சுமார் ஒரு கி.மீ.தொலைவில் இருக்கிறது குகநாதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் பார்வதி. இவர் கோனாண்டேசுவரன் என்றும், குகனாண்டேசுவரன் என்றும் அழைக்கப்படுகிறார். ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது குகநாதீசுவரர் கோவில். தஞ்சை பெரிய கோவிலைக் கட்டுவதற்கு முன்பாகவே, சோழப் பேரரசன் ராஜராஜ சோழன் இந்தக் கோவிலைக் கட்டியுள்ளார்.

முருகப் பெருமான் தன் அன்னை பார்வதியின் வழிகாட்டல்படி, தனது தோஷம் நீங்குவதற்காக இங்கே சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டார் என்று தல வரலாறு கூறுகின்றது.இங்கு, குகன் என்ற முருகக்கடவுள், ஈசுவரன் என்ற சிவனை வழிபட்டதால், இந்தக் கோவிலுக்கு குகநாதீசுவரர் கோயில் என்று பெயர்க் காரணம் கூறுகின்றனர். இந்த கோவிலில் மூலவர் குகநாதீசுவரர் 5 அடி உயரத்துடன் கிழக்கு நோக்கி லிங்க வடிவில் அருள் பாலிக்கிறார். இந்த சிவலிங்கம், குமரி மாவட்டத்திலேயே மிகப் பெரிய சிலையாகும்.

பிரார்த்தனை

இந்த கோவிலில் 11 திங்கட்கிழமை தொடர்ந்து வந்து, முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடி, கோவிலின் கருவறை தீபத்திற்கு பசுநெய் வழங்கி வழிபட்டால் குரு சாபம், மாத்ரு சாபம், பித்ரு சாபம், சுமங்கலி சாபம் மற்றும் முதியவர்களை மதிக்காததால் வரும் தோஷம் ஆகியவை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
நத்தம்  அக்னி ஈசுவரர் கோவில்

நத்தம் அக்னி ஈசுவரர் கோவில்

ஆட்டின் முகமும், காளை உடலும் கொண்ட அபூர்வ நந்தி

திருநெல்வேலி மாநகராட்சியின் ஒரு பகுதியான மேலப்பாளையம் அருகே நத்தம் என்னும் ஊரின் அருகே தாமிரபரணி நதியின் கரையிலே அமைந்துள்ளது அக்னி ஈசுவரர் கோவில்.

இறைவியின் திருநாமம் கோமதி அம்பாள். மூலவர் அக்னி ஈசுவரர் சுயம்பு மூர்த்தி. அவரது திருமேனியில் ருத்ராட்சத்தில் உள்ளது போலவே பட்டைகள் காணப்படுவதால், ருத்ராட்சமே லிங்கமாக அமைந்தது போன்ற தோற்றமளிக்கிறார்.

இந்தக் கோவிலில் எழுந்தருளியிருக்கும் நந்தி அபூர்வமான தோற்றம் உடையதாக இருக்கின்றது. இந்த நந்தி ஆட்டின் முகத்தோடும் , காளை உடலோடும் அமைந்துள்ளது. இத்தகைய நந்தியை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இந்த நந்திக்கு மேஷ நந்தி என்று பெயர். மேஷ ராசி அன்பர்களுக்கு சிறந்த வழிபாட்டுத் தலமாகும். குறிப்பாக பரணி நட்சத்திர அன்பர்களுக்கு உரிய தலமாகும். இது செவ்வாய் கிரக பரிகார தலமாகவும் உள்ளது.

Read More
களியப்பேட்டை லட்சுமி நாராயணப்பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

களியப்பேட்டை லட்சுமி நாராயணப்பெருமாள் கோவில்

சங்கு சக்கரம் ஏந்திய அபூர்வ வேணுகோபால சுவாமி

செங்கல்பட்டு நகரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது களியப்பேட்டை லட்சுமி நாராயணப்பெருமாள் கோவில். தாயாரின் திருநாமம் செண்பகவல்லி. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டதாகும்.

கருவறையில், பெருமாள் லட்சுமி தேவியைத் தன் இடது மடியின் மேல் அமர்த்திக் கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். இப்பெருமாள் தனது மேல் இரண்டு திருக்கரங்களில் சங்கு சக்கரத்தை ஏந்திக் கொண்டும், கீழ் இடது திருக்கரத்தால் லட்சுமி பிராட்டியை அணைத்துக் கொண்டும், கீழ் வலது திருக்கரத்தால் அபய ஹஸ்த கோலத்தைக் காட்டியபடியும் காட்சியளிக்கிறார்.

பொதுவாக, வைணவத் திருத்தலங்களில் வேணுகோபாலன் தம் இரு கரங்களால் புல்லாங்குழலை ஏந்திய இரு கை உருவமாகவே பெரும்பாலும் காணப்படுவார். ஆனால் இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ருக்மிணி-சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி சற்று வித்தியாசமான தோற்றத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். மேல் திருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்திக் கொண்டும், கீழ் இருக்கரங்களால் புல்லாங்குழலை பற்றிக் கொண்டும் சேவை சாதிக்கிறார். நிற்கும் நிலையிலுள்ள பெரும்பாலான மற்ற தெய்வ வடிவங்களின் அமைப்பில் இரண்டு வளைவுகள் (த்விபங்கம்) அல்லது மூன்று (த்ரிபங்கம்) வளைவுகளே காணப்படும். மாறாக, இந்த மனங்கவரும் வேணுகோபால சுவாமியின் திருமேனி ஐந்து (பஞ்சபங்கம்) வளைவுகளைக் கொண்டுள்ளது என்பது அரிய சிறப்பாகும். இத்தகைய வேணுகோபால சுவாமியின் திருவுருவை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

Read More
நட்சத்திர கோயில் (வில்வாரணி)  சிவசுப்ரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

நட்சத்திர கோயில் (வில்வாரணி) சிவசுப்ரமணிய சுவாமி கோவில்

நாகாபரணத்துடன், சுயம்பு வடிவ லிங்கத் திருமேனியராய் காட்சி தரும் அபூர்வ முருகன்

திருவண்ணாமலை-வேலூர் சாலையில், கலசபாக்கத்தில் இருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ளது நட்சத்திர கோயில் (வில்வாரணி) என்னும் சிற்றூர். இந்த ஊரில் அமைந்துள்ள நட்சத்திர கிரி மலையில், சுயம்பு வடிவ லிங்கத் திருமேனியராய் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார். இத்தலத்து கருவறையில், நாகாபரணத்துடன் முருகரும், சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒருசேர காட்சி தருவது தனிச்சிறப்பாகும். வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் அமர்ந்து, நித்ய சிவபூஜை செய்யும் தனிப்பெருமை மிக்க ஆலயம் இதுவாகும்.

கார்த்திகைப் பெண்களும் 27 நட்சத்திரங்களும் தினமும் இங்கு வந்து முருகனை வழிபட்டுச் செல்வதாக நம்பிக்கை. அதனால் இத்தலம் ,27 நட்சத்திரங்களுக்கும் அனுகிரகத் தலமாகவும் அமைந்திருக்கிறது. எனவேதான், நட்சத்திர கோவில் எனும் சிறப்புடன் பக்தர்கள் அழைக்கின்றனர். 27 நட்சத்திரங்களும், சிவ சர்ப்பமும் முருகப்பெருமானை வழிபடும் சிறப்பு, இந்த கோயிலை தவிர உலகில் வேறெங்கும் இல்லை. இக்கோவிலின் சுயம்பு முருகனை வழிபட்டால் நாகதோஷம், புத்திர தோஷம் மற்றும் கல்யாண தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. கிருத்திகைதோறும் பக்தர்கள் நட்சத்திரகிரி மலையை வலம் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இக்கோவில் கும்பாபிஷேகத்தின் போது, மலேசியா நாட்டில் உள்ள முருகன் சிலையை போல் 42 அடி உயர முருகன் சிலை இக்கோவிலில் நிர்மாணிக்கப்பட்டது.

பிரார்த்தனை

இக்கோவிலில் செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு தேன் அபிஷேகம் செய்து, சம்பா சாதம் படைத்து, செவ்வரளி மாலை சாற்றி, அன்னதானம் செய்து வழிபடுபவர்களின் நாகதோஷம் புத்திர தோஷம், திருமண தோஷங்கள் அகலும். பாலபிஷேகம் செய்து, சிவந்த விருட்சி புஷ்பங்களால் அர்ச்சித்து, மாதுளைக் கனி படைத்து வழிபடுவோரின் நட்சத்திர தோஷங்கள் யாவும் விலகும்; நல்லருள் கிட்டும் என்பது நம்பிக்கை.

இந்த கோவில், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக 227 படிகள் அமைக்கப்பட்டுள் ளன. சன்னதி வரை வாகனங்கள் செல்லவும் சரிவுப் பாதை வசதி செய்யப்பட்டுள்ளது.

Read More
தகடி அழகியநாதேசுவரர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

தகடி அழகியநாதேசுவரர் கோவில்

வேத கோஷத்தை ஒய்யாரமாக அமர்ந்து கேட்கும் ஆனந்த விநாயகர்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ள தகடி என்னும் ஊரில் அமைந்துள்ளது அழகியநாதேசுவரர் கோவில். இறைவன் திருநாமம் அழகியநாதேசுவரர். இறைவியின் திருநாமம் அழகிய பொன்னம்மை.

இக்கோவிலில் விநாயகர் வேத கோஷத்தை கேட்கும் ஆனந்த நிலையில் நமக்கு தரிசனம் தருகிறார். விநாயகர் நான்கு திருக்கரங்களுடன், இடது காலை மடித்து வலது காலை ஊன்றி, ஒய்யாரமாக அமர்ந்த நிலையில் கண் மூடி தலையை சாய்த்து வேத மந்திரங்களை ஊன்றி கவனிக்கும் தோற்றத்தில் காட்சி தருகிறார். விநாயகரின் இந்த ஒய்யார தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

Read More
மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில்

மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில்

பசுவின் கொம்பைப் போல் காட்சியளிக்கும் அபூர்வ சிவலிங்கம்

கிழக்கு தாம்பரத்திலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ​மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் தேனுகாம்பாள். கருவறையில் மூலவர் தேனுபுரீஸ்வரர் , காமதேனு பசுவின் கொம்பு வடிவில் காட்சி அளிக்கிறார். சதுர ஆவுடையாரின் நடுவில் மூன்று அங்குல அகலமும், எட்டு அங்குல உயரமும் கொண்டு, சிறிய மூர்த்தியாக இந்த தேனுபுரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். ஈசன் பல்வேறு தலங்களில் பல்வேறு வடிவங்களில் காட்சியளித்தாலும், பசுவின் கொம்பைப் போல் தரிசனம் அளிக்கும் இந்தக் காட்சி​ அபூர்வமானது. சிவலிங்கத்தின் மீது பசு மிதித்த தழும்பும், கல்லடி பட்ட பள்ளமும் இருக்கிறது. லிங்கத்தில் சிறிய மண்டபம் போன்ற அமைப்பும், நாகாபரணமும் அணிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலைக் கட்டியவர் ராஜராஜ சோழனின் தந்தையான சுந்தர சோழன்.

ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் நடைபெறும் சரபேஸ்வரர் பூஜை

இக்கோவில் மண்டபத்தில் உள்ள 18 தூண்களும் அழகான சிற்ப வேலைப்பாடுகள் கொண்டவை. கையில் வீணையுடன் விநாயகர், கையில் சேவலுடன் யானையின் மீது அமர்ந்து இருக்கும் முருகன், மடியில் சீதையை அமர்த்தியிருக்கும் ராமனின் பாதத்தை தொட்டு வணங்கும் அஞ்சநேயர், ஐந்து முகங்களுடன் பிரம்மா ஆகிய தூண் சிற்பங்கள் விசேஷமானவை.

ஒரு தூணில், உக்கிர சரபேஸ்வரர் சிலை உள்ளது. தேனுபுரீஸ்வரர், தேனுகாம்பாளுக்கு அடுத்தபடியாக,இந்தக் கோயிலுக்கு சரபேஸ்வரரை தரிசிப்பதற்காகவே ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இரண்யகசிபுவை வதம் செய்த நரசிம்மரின் கோபம் தணிப்பதற்காகவே, சிவபெருமான் சரபேஸ்வரர் திருவுருவம் எடுத்தார் என்கிறது தல புராணம். சரபேஸ்வரர், நரசிம்மனை கீழே சாய்த்து அவரது கோபத்தை அடக்கும் நிலையில் காட்சி தருகிறார்.

ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் (4.30 முதல் 6 மணி வரை), சரபேஸ்வரருக்கும் உத்ஸவ மூர்த்தியான சரபேஸ்வரருக்கும் அபிஷேகங்கள் விமர்சையாக நடைபெறுகின்றன. நரசிம்மரைப் போலவே, சரபேஸ்வரருக்கும் பானக அபிஷேகம் மிகவும் விசேஷம். சரபேஸ்வரரை வணங்கினால் எதிர்ப்புகள் விலகும், தீய சக்திகள் அஞ்சி ஓடும் என்பது ஐதீகம். கிரக, நாக தோஷம் உள்ளவர்களும் இங்குள்ள சரபேஸ்வரரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் தலம்

அருணகிரிநாதர் இத்தலத்தை மாடையம்பதி என்று தமது திருப்புகழில் குறிப்பிட்டு பாடியுள்ளார். இத்தலத்துக்கு அருகே சித்தர்கள் வாழ்ந்த இடம், முற்காலத்தில் சித்தர் பாக்கம் என்றிருந்தது. இப்போது சித்தல பாக்கம் என்று அழைக்கப்படுகிறது. ​

Read More
பூவரசன்குப்பம்  லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில்

தெற்கு அகோபிலம் என்று போற்றப்படும் பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில்

விழுப்புரம் மாவட்டம் பண்ருட்டி அருகில் பூவரசன்குப்பம் ஊரில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில். மூலவர் லட்சுமி நரசிம்மர். தாயார் அமிர்தவல்லி. பொதுவாக லட்சுமி நரசிம்மர் கோவிலில், தாயார் மட்டுமே நரசிம்மரை ஆலிங்கனம் செய்யும் நிலையில் காட்சி அளிப்பார். ஆனால், இந்த ஒரு கோவிலில் மட்டும்தான், நரசிம்மர் தாயாரை ஆலிங்கனம் செய்தபடி காட்சியளிக்கின்றார்.

இக் கோவில் தெற்கு அகோபிலம் எனக் கூறப்படும் அளவுக்கு புகழ் பெற்றது. இங்கு ஏழு முனிவர்களான சப்த ரிஷிகளுக்கு நரசிம்மர் காட்சி தந்தாராம்.

ஹிரண்யகசிபுவைக் கொன்ற பாதி மனித பாதி மிருக உடலைக் கொண்ட நரசிம்மர் தன்னை வேண்டி தவம் இருந்த முனிவர்களுக்குக் காட்சி தர தெற்கு நோக்கி வந்தபோது பூவரசன்குப்பத்தின் அருகில் அவர்களுக்குக் காட்சி தந்தார். ஆனால் அவர்களால் உக்கிர அவதாரத்தில் இருந்த நரசிம்மரை தரிசிக்க முடியவில்லை. காரணம் அத்தனை சூடாக அந்த பூமியே தகித்ததாம். ஆகவே அவர்கள் அவரது துணைவியாரான அமிருதவல்லித் தாயாரிடம் பெருமானை தாங்கள் தரிசனம் செய்ய வசதியாக இருக்க அவர் கோபத்தை தணிக்குமாறு வேண்டிக் கொள்ள, தாயாரும் அவர் மடியில் சென்று அமர்ந்து கொண்டாள். ஒரு கண்ணால் நரசிம்மரையும் இன்னொரு கண்ணால் முனிவர்களையும் பார்த்துக் கொண்டு இடது தொடை மீது அமர்ந்து கொண்டு தன்னைப் பார்த்துக் கொண்டு இருந்த தாயாரை நரசிம்மரும் நோக்க அவர் உக்கிரத்தை தாயார் அப்படியே உறிஞ்சிக் கொண்டு விட , நரசிம்மரின் கோபம் அடங்கியது. முனிவர்கள் ஆனந்தம் அடைந்து அவரை மனமார தரிசித்தார்கள். அது முதல் நரசிம்மர் அதே கோலத்தில் இருந்தபடி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

பிரார்த்தனை

இந்த லட்சுமி நரசிம்மபெருமாளை 48 நாட்கள் விரதமிருந்து உள்ளன்போடு வழிபட்டால், கடன்தொல்லைகள் தீரும். பதவி உயர்வு வந்து சேரும். மற்றும் எதிரிகள் எல்லாம் நண்பர்களாகி விடுகிறார்கள் என்பது ஐதீகம்.

Read More
பள்ளியூர்  ஆதி வீரமாகாளியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

பள்ளியூர் ஆதி வீரமாகாளியம்மன் கோவில்

திருமணம் நடைபெற வேண்டி ஜாதகத்தை உண்டியலில் போடப்படும் தலம்

தஞ்சையில் இருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளியூர் என்ற ஊரில் அமைந்துள்ளது ஆதி வீரமாகாளியம்மன் கோவில். இந்தக் கோவிலை அங்குள்ள மக்கள் 'பௌர்ணமி கோவில்' என்றும் அழைப்பது உண்டு. காரணம் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இந்த கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறும்

ஆதி வீரமா காளியம்மன் கோவில் 300 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியூர் பகுதியில் இருந்துள்ளது. அந்த பகுதியில் குடியிருந்த 50க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் அதனை வழிபட்டு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் இடத்தை காலி செய்துவிட்டு சென்ற பின்னர் அந்த பகுதி முழுவதும் கருவேல மரங்கள் நிறைந்து காணப்பட்டது . அதில் ஒரு புற்று இருந்துள்ளது . இதனை அந்த பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். ஒருநாள் திடீரென மழை பெய்த போது புற்றின் மேல் பகுதியில் இருந்த மண் கரைந்து கருப்பு நிறத்தில் ஒரு பொருள் வெளியே தெரிந்தது. இதை பார்த்த பொதுமக்கள் பிறகு தண்ணீரை அதிக அளவில் ஊற்றிய போது அந்த புற்றிலிருந்து அம்மன் சிலை தென்பட்டது. அது வீரமாகாளியம்மன் சிலை.இதை அடுத்து அந்த சிலை காணப்பட்ட இடத்திலேயே கோவில் கட்டப்பட்டது. அம்மன் சிலை ஒன்றரை அடி உயர கருங்கல் சிலையாகும்.

இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தால் எண்ணங்கள் ஈடேறும் என்கிறார்கள் பக்தர்கள். குறிப்பாக திருமணம் ஆகாதவர்கள், குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்தால் திருமணம் நடக்கும்,குழந்தை பேறு கிட்டும் என்பது ஐதீகம்.

திருமணமாகாதவர்கள் தங்கள் ஜாதகத்தின் நகல்களில் இரண்டு பிரதிகளை இந்த கோவிலுக்கு கொண்டுவர வேண்டும். அதனை அம்மன் பாதத்தில் வைத்து விட்டு ஒன்றை அங்கு வைக்கப்பட்டுள்ள ஜாதக உண்டியலில் போட வேண்டும். மற்றொன்று கொண்டு வந்தவர்களிடமே கொடுக்கப்படும் . அதன்படி இதுவரை இந்த கோவிலுக்கு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு 90 நாளில் திருமணம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் குழந்தை இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு மூன்று பௌர்ணமி வந்து தரிசனம் செய்ய வேண்டும். தேங்காய், வெற்றிலை, பாக்கு போன்றவை எடுத்து வர வேண்டும் . மூன்றாவது பௌர்ணமி அன்று அவர்கள் கோவிலுக்கு வரும்போது ஆண் , பெண் உருவம் கொண்ட இரண்டு மரப்பாச்சி பொம்மைகள் எடுத்து வர வேண்டும். அதில் ஒரு பொம்மையை கோவிலில் வைத்துவிட்டு ஒரு பொம்மை கொண்டு வந்தவர்களிடம் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு விரைவில் குழந்தை பேறு கிட்டுகிறது .

நோய் நீங்க வேண்டும், இன்னும் பல்வேறு காரியங்களை நினைத்துக் கொண்டு வருபவர்களுக்கும் அவர்களின் எண்ணங்கள் ஈடேறி வருவதாக இங்கு வரும் பக்தர்கள் தெரிவித்து வருகிறார்கள் .

Read More
தஞ்சை 24 பெருமாள்கள் கருட சேவை
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

தஞ்சை 24 பெருமாள்கள் கருட சேவை

தஞ்சை வைகாசி திருவோண 24 பெருமாள்கள் கருட சேவை விழா

தஞ்சாவூர் மற்றும் அந்த ஊரைச் சுற்றிலும் சுமார் 24 பெருமாள் கோயில்கள் உள்ளன. ஆண்டுதோறும் வைகாசி திருவோண நட்சத்திரத்தில், தஞ்சையில் 24 பெருமாள் கோவில்களில் உள்ள உற்சவ பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். இந்த கருடசேவையைத் தரிசித்தால் அஸ்வமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

தஞ்சை கொடிமரத்து மூலைக்கு அன்னபட்சி வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் முதலில் எழுந்தருளுவார். அவரை தொடர்ந்து நீலமேகப் பெருமாள், ஸ்ரீநரசிம்மர், மணிகுன்றப்பெருமாள், ஸ்ரீவேளூர் வரதராஜப்பெருமாள், ஸ்ரீகல்யாண வெங்கடேசர், கரந்தை ஸ்ரீயாதவக் கண்ணன், கொண்டிராஜபாளையம் ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீகோதண்டராமர், கீழராஜவீதி வரதராஜ பெருமாள், தெற்கு ராஜவீதி ஸ்ரீகலியுக வெங்கடேச பெருமாள், அய்யங்கடைத் தெரு பஜார் ஸ்ரீராமசுவாமி, எல்லையம்மன் கோயில் தெரு ஸ்ரீஜனார்த்தனர், கோட்டை ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள், மேல அலங்கம் ஸ்ரீரங்கநாதப் பெருமாள், மேலராஜவீதி ஸ்ரீவிஜயராமர், ஸ்ரீநவநீதகிருஷ்ணர், சகாநாயக்கன் தெரு ஸ்ரீபூலோகக் கிருஷ்ணர், மாச்சாவடி நவநீதகிருஷ்ணர், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், பள்ளியக்ரஹாரம் ஸ்ரீகோதண்டராம சுவாமி, சுக்காந்திடல் ஸ்ரீலக்ஷ்மி நாராயணபெருமாள், கரந்தை வாணியத் தெரு ஸ்ரீவெங்கடேசப் பெருமாள், கொல்லுப்பேட்டைத் தெரு ஸ்ரீவேணுகோபால சுவாமி ஆகிய கோயில்களில் இருந்து 24 பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி, தஞ்சை ராஜ வீதிகளான கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக வந்து பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்கள்.

நவநீத சேவை

கருட சேவைக்கு அடுத்த நாள் நவநீத சேவை நடைபெறுகிறது. இதனை வெண்ணெய்தாழி மகோற்சவம் என்றும் அழைப்பர். இதில் 15 பெருமாள்கள் கையில் வெண்ணை குடத்துடன், நவநீத அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்கள்.

Read More
நேமம் ஜெயங்கொண்ட சோளீசுவரர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

நேமம் ஜெயங்கொண்ட சோளீசுவரர் கோவில்

ஆவுடையாரின் மேல் வீற்றிருக்கும் அபூர்வ விநாயகர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து 12 கி.மீ., தூரத்தில் நேமம் உள்ளது. இறைவன் திருநாமம் ஜெயங்கொண்ட சோளீசுவரர். இறைவியின் திருநாமம் சவுந்தர நாயகி. இக்கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது.

கருவறை அருகில் ஆவுடையின் மேல் விநாயகர் இருக்கிறார். இப்படி ஆவுடையாரின் மேல் வீற்றிருக்கும் விநாயகரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

பொதுவாக தெற்கு நோக்கி காட்சியளிக்கும் பைரவர் இங்கு மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இக்கோவில் தூண்களில் வித்தியாசமான வடிவமைப்பில் பல சிற்பங்கள் வடிக்கப்பட்டு உள்ளன. விநாயகரைப் போல் தலையும், கழுத்திலிருந்து இடுப்பு பகுதி வரை பெண் வடிவமும், ஒரு பாதம் எருது வடிவிலும், மற்றொரு பாதம் சிம்ம வடிவிலும் கொண்ட ஒரு சிற்பம் கண்ணைக் கவர்வதாக உள்ளது. இக்கோவில் சிற்பங்கள், யாவரும் வியக்கும்படியான நுட்பமான சிற்ப வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளன.

பிரார்த்தனை

சிவன் மன்மதனை வெற்றி கொண்ட தலம் என்பதால், தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் வரும் இடையூறுகளைக் கடக்கவும், கல்வியில் முதலிடம் பெறவும், வேலைவாய்ப்பு தேர்வுகளில் வெல்லவும் இங்கு சிறப்பு வழிபாடு செய்கிறார்கள்.ஆவுடையாரின் மேல் வீற்றிருக்கும் அபூர்வ விநாயகர்

Read More
தேக்கம்பட்டி வனபத்ர காளியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

தேக்கம்பட்டி வனபத்ர காளியம்மன் கோவில்

பாண்டவர்கள் வழிபட்ட வனபத்ரகாளியம்மன்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு மேற்கே 5 கி.மீ. தொலைவிலுள்ள தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த வனபத்ர காளியம்மன் கோவில் உள்ளது.

தல வரலாறு

சாகாவரம் பெற்ற மகிசாசூரனை அழிக்க அம்பாள் சிவனை நினைத்து வழிபட்டுப் பூஜை செய்து சூரனை அழித்தாள். அம்பாள் சிவனை நினைத்து இந்த வனத்தில் தியானம் செய்ததால் இங்குள்ள அம்மன் வனபத்ரகாளியம்மன் என்று பெயர் பெற்றாள். இது தவிர ஆரவல்லி, சூரவல்லி சகோதரிகள் கதையோடும் இக்கோவில் தொடர்புடையதாக கூறப்படுகிறது.

மந்திரம், சூன்யம் ஆகியவற்றால் கொடிய ஆட்சி செய்த ஆரவல்லி, சூரவல்லி, வீரவல்லி என்ற ஏழு சகோதரிகளை அடக்க பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் சென்று சிறைப்பட்டு பின்னர் கிருஷ்ணன் அவனைக் காப்பாற்றினார். பின்பு பாண்டவர்கள் அப்பெண்களை அடக்க தங்களின் தங்கை சங்கவதியின் மகன் அல்லிமுத்துவை அனுப்பி வைத்தனர்.

அவன் இங்குள்ள வனபத்ரகாளி அம்மனை வழிபட்டுச் சென்று ஆரவல்லியின் பெண்கள் சாம்ராஜ்ஜியத்தைத் தவிடு பொடியாக்க அவர்கள் பயந்து போய் ஆரவல்லியின் மகளை அல்லி முத்துவுக்கு திருமணம் செய்து கொடுத்து அவள் மூலம் நஞ்சு கொடுத்துக் கொன்றனர். இதையறிந்த அபிமன்யு வானுலகம் சென்று அல்லிமுத்துவின் உயிரை மீட்டு வந்தான். நடந்த விஷயங்களைக் கேள்விபட்ட அல்லிமுத்து வெகுண்டெழுந்து ஆரவல்லியை அடக்கப் புறப்பட்டுச் சென்றான். வழியில் வனபத்ரகாளியம்மனை வழிபட்டு அவள் அருள் பெற்று ஆரவல்லியின் சாம்ராஜ்ஜியத்தை அழித்தான்.

பிரார்த்தனை

அம்மனிடம் குழந்தை வரம் வேண்டி வணங்கி தொரத்தி மரத்தில் கல்லை கட்டிவிட்டு வழிபட்டால் தங்கள் பிரார்த்தனை நிறைவேறுகிறது. செய்வினை, பில்லிசூன்யம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக்கோயிலுக்கு ஒருமுறை வந்து அம்மனை மனமுருக வேண்டிக்கொண்டால் அத்தகைய கோளாறுகள் நீங்குகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேண்டிய காரியம் நன்றாக முடிந்தால், பெண்கள் தாலியை உண்டியலில் போட்டு விடுவர்.

Read More
மூவலூர் மார்க்க சகாயேசுவரர் கோவில்

மூவலூர் மார்க்க சகாயேசுவரர் கோவில்

இதய நோய்க்கான பரிகாரத்தலம்

மயிலாடுதுறைக்கு மேற்கே 6 கி.மீ தூரத்தில், மூவலூர் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் மார்க்க சகாயேசுவரர். இந்த ஆலயத்தில் சவுந்திர நாயகி, மங்களாம்பிகை என்ற இரண்டு இரண்டு அம்பிகைகள் எழுந்தருளியிருக்கிறார்கள். ருத்ரன், திருமால், பிரம்மா மூவருக்கும், இத்தலத்து இறைவன் வழிகாட்டி தன்னை வெளிப்படுத்தியதால் இறைவனுக்கு, 'வழிகாட்டிய வள்ளல்' என்றும், 'மார்க்க சகாயேசுவரர்' என்றும் பெயர் வழங்கலாயிற்று. இதேபோல் மூவரும் வழிபட்ட ஊர் இதுவென்பதால், 'மூவரூர்' என அழைக்கப்பட்டது. இதுவே மருவி தற்போது, 'மூவலூர்' என்றாகி இருக்கிறது. இத்தலம் தேவார வைப்புத் தலமாகும்.

திரிபுர சம்ஹாரத்தில் திருமாலுக்கும் பிரம்மனுக்கும் ஏற்பட்ட சாபத்தை நீக்கிய தலம், மகிஷாசுரனை வதம் செய்த துர்ககையின் தோஷம் நீக்கிய தலம் என பல்வேறு பெருமைகளைக் கொண்ட சிறப்பு மிக்கது இந்த ஆலயம்.

இக்கோவிலில், மையத்தில் பலிபீடம் இருக்க அதைச் சுற்றி நான்கு திசைகளிலும் நான்கு வேத நந்திகள் அமைந்திருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

இந்த கோவில் இதய நோய்களுக்கு சிறந்த பரிகாரத் தலமாகத் திகழ்கின்றது. இதய நோய் உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் 11 நெய் தீபம் ஏற்றி, சுவாமிக்கு அர்ச்சனை செய்தும், பாலபிஷேகம் செய்தும், அபிஷேகப் பாலை அருந்தியும் வந்தால் நோய் குணமாவதாக பக்தர்கள் நம்பிக்கை.

Read More
திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில்

கிரகண காலத்தில் நடை திறந்திருக்கும் தேவாரத்தலம்

திருவாரூரிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருவாஞ்சியம். இறைவனின் திருநாமம் வாஞ்சிநாதர். இறைவியின் திருநாமம் மங்களநாயகி.

பொதுவாக கிரகண காலத்தில் எல்லா கோவில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால், திருவாரூர் அருகிலுள்ள ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில் திறக்கப்பட்டிருக்கும். கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும்.

நமக்கு முக்தி கிடைக்க நாமே செய்யும் ஆத்ம தர்ப்பணம்

திருவாரூரில் பிறக்க முக்தி, திருவண்ணாமலையை நினைக்க முக்தி என்பது முதுமொழி. அதுபோல இத்தலத்தின் பெயரை சொன்னாலே முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாக கோவில் அருகில் யாராவது இறந்து விட்டால், சடலத்தை எடுக்கும் வரை கோவிலில் நடைபெறும் பூஜைகள் நிறுத்தி வைக்கப்படும். ஆனால் இவ்வூரில் பூஜையை நிறுத்துவதில்லை. எமதர்மனே இங்கு ஷேத்திர பாலகராக இருப்பதால் இவ்வாறு நடக்கிறது. இங்கே சுவாமிக்கு எமதர்மராஜனே வாகனமாகவும் இருக்கிறார். மேலும் கோவில் எதிரிலேயே சுடுகாடு இருக்கிறது. சடலத்தை எரியூட்டியவுடன் அங்கிருந்தபடியே சுவாமியை வணங்கி இறந்தவர் சிவனடி சேர வேண்டிக்கொள்கிறார்கள்.

ஒருவர் இறந்த பின், அவரது பிள்ளைகளால் செய்யப்பட வேண்டிய பிதுர் காரியங்களை இக்கோவிலில் முன்கூட்டி நாமே செய்து, முக்தி கிடைக்க வழி தேடிக்கொள்ளலாம். இதற்கு 'ஆத்ம தர்ப்பணம்' எனப்பெயர். மேலும் இத்தலத்து தீர்த்தத்தை பருகினால் மரண அவஸ்தைப்படுகிறவர்களுக்கு சிரமம் நீங்கும் என்கிறார்கள். இத்தலத்தில் இறந்தாலும், வேறு இடத்தில் இறந்தவர்களுக்கு இங்கு பிதுர் காரியம் செய்தாலும் சிவனே அவர்களது காதில் பஞ்சாட்சர மந்திரம் கூறி தன்னுள் சேர்த்து கொள்வதாக ஐதீகம்.

மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரத்தினர், மேஷம், சிம்மம், கும்ப ராசி அல்லது லக்னம் கொண்டவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க இத்தலத்தில் வழிபடுகின்றனர்.

Read More
திருப்பைஞ்ஞீலி  ஞீலிவனேஸ்வரர் கோவில்

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோவில்

எமதர்மன் குழந்தை வடிவில் இருக்கும் அபூர்வ தோற்றம்

திருச்சியில் இருந்து ( வழி - மண்ணச்சநல்லூர் சுமார் 19 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருப்பைஞ்ஞீலி. இறைவன் திருநாமம் ஞீலிவனேஸ்வரர். இறைவியின் திருநாமம் விசாலாட்சி. இத்தலத்தில் அருளும் யமதர்மராஜனை சனிக்கிழமைகளில் வழிபட, சனி பகவான் அருள் கிட்டும்.

இத்தலத்தில் எமதர்மனுக்கு என்று அமைந்துள்ள தனிச் சன்னதி, ஒரு குடைவரைக் கோவிலாகும். பூமிக்கு அடியில் சற்று பள்ளத்தில் உள்ள இந்த குடைவரைக் கோவிலில் புடைப்பு சிற்பமாக சோமஸ்கந்தர் ரூபத்தில் சிவன் அம்பாள் இருவருக்கும் இடையே முருகன் அமர்ந்திருக்க,சுவாமியின் பாதத்தின் கீழே குழந்தை வடிவில் எமதர்மன் இருக்கிறார். இறைவன் பெயர் மிருத்யுஞ்சயர் , தாயார் தாட்சாயணி . மிருத்யுஞ்சயர் என்றால் எம பயம் போக்குபவர் என்று அர்த்தம் அதனால் இந்த சந்நிதி முன்பு திருக்கடவூரில் செய்வது போல சஷ்டியப்தபூர்த்தி, ஆயுள்விருத்தி ஹோமம் ஆகியவை நடத்துகின்றனர்.

திருக்கடவூர் தலத்தில், மார்க்கண்டேயனுக்காக எமதர்மனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் சிவபெருமான். இதனால் உலகில் இறப்பு என்பதே இல்லாமல் போக பூமியின் பாரம் அதிகரித்தது. பாரம் தாங்காத பூமிதேவி சிவபெருமானிடம் முறையிட்டாள். சிவபெருமான் அதற்கிணங்கி தைப்பூச நாளன்று மீண்டும் எமதர்மனை இத்தலத்தில் தன் பாதத்தின் அடியில் குழந்தை உருவில் எழும்படி செய்து, தர்மம் தவறாமல் நடந்து கொள்ளும்படி அறிவுரை கூறி மீண்டும் தன் பணியை செய்து வரும்படி அருள் செய்தார்.

எமதர்மன் சனி பகவானுக்கு அதிபதி என்பதாலும், எமனுக்கு இத்தலத்தில் தனி சன்ன உள்ளதாலும் இத்தலத்தில் நவகிரக சன்னதி இல்லை . இத்தலத்தில் அருளும் யமதர்மராஜனை சனிக்கிழமைகளில் வழிபட, சனி பகவான் அருள் கிட்டும். அதனால் சனிபகவானின் பாதிப்புக்கு உள்ளானவர்கள் இக்கோவிலுக்கு வந்து பிராத்தனை செய்கின்றனர் .

Read More
மேலக்கொடுமலூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

மேலக்கொடுமலூர் சுப்பிரமணியசுவாமி கோவில்

இரவு வேளைகளில் மட்டும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் முருகன் தலம்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது மேலக்கொடுமலூர். முருகப்பெருமான் சூர சம்ஹாரத்துக்குப் புறப்பட்ட போது, அன்னை சக்தியிடமிருந்து வேல் மற்றும் பல ஆயுதங்களைப் பெற்றுச் சென்றார். அவற்றுள் பிரதானமான `மழு' எனும் ஆயுதத்தை முருகப் பெருமான் பெற்ற தலம்தான் கொடுமழுவூர் என்றழைக்கப்படும் மேலக்கொடுமலூர்.

மேலக்கொடுமலூர் என்றால் 'வலிமைமிக்க மழு ஆயுதம் தாங்கி மேற்கு திசை நோக்கி நிற்கின்றவனின் ஊர்' என்ற அர்த்தமும் உண்டு. அதாவது முருகப் பெருமான் அசுரனை மழு என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தால் அழித்துவிட்டு திரும் பும்போது, அங்கிருந்த முனிவர்கள் முருகனைக் கண்டுவணங்கினர். அந்த இடத்திலேயே (மேற்கு திசையில்) முருகன் நின்று அவர்களுக்கு அருளாசி வழங்கினார். மேலக்கொடுமழுர் என்பது காலப் போக்கில் மருவி மேலக்கொடுமலூர் என மாறிவிட்டது. இங்கு குமரக்கடவுள் சுயம்பு மூர்த்தியாக சுமார் ஆறு அடி உயரத்தில் காட்சியளிக்கிறார்.

முருகனுக்கு முப்பழ பூஜை

இங்கே முருகப்பெருமான் அஸ்தமன வேளையில் முனிவர்களுக்குக் காட்சி தந்ததால், சூரிய அஸ்தமன த்துக்குப் பிறகே அபிஷேக ஆராதனைகள் நடைபெறு கின்றன. திங்கள், வெள்ளி, கிருத்திகை ஆகிய நாள்களில் இரவு வேளைகளில் 33 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத் தக்கது. வைகாசி மாதம் கடைசி வெள்ளிக் கிழமையன்று மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் செய்யப்படும் முப்பழ பூஜை மிகவும் பிரசித்திபெற்ற பூஜையாகும். முப்பழ பூஜையின்போது முருகப்பெருமானின் அழகைக் காண்பதற்காகவே தமிழகமெங்கும் இருந்து பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகிறார்கள்.

முழங்கால் வலி தீர்க்கும் முருகன்

தீராத முழங்கால் வலியால் அவதிப்படுபவர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து முருகப்பெருமானை வேண்டிக் கொண்டு, மஞ்சள் பூசப்பட்ட உடைமரக் கால்களை (கவட்டையுடன் கூடியது) வாங்கி சமர்ப்பித்தால், நாள்பட்ட முழங்கால் வலி நீங்கி விடும் என்பது பக்தர்களது நம்பிக்கை.

மேலும் வயிற்று வலி, நெஞ்சு வலி ஆகிய பாதிப்புகளால் அவதிப்படும் அன்பர்கள், இங்கு வந்து மாவிளக்கு ஏற்றி வைத்து முருகப்பெருமானை வணங்கி வழிபட்டுச் சென்றால், விரைவில் அந்தப் பிரச்னைகள் தீரும் என்கிறார்கள்.

அதேபோல், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 48 நாள்கள் விரதம் இருந்து, கோயிலின் தலவிருட்சமான உடைமரத்தின் இலைகளைப் பிரசாதமாகப் பெற்று உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

Read More
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்

வரதராஜப் பெருமாள் கருட சேவை

108 வைணவத் திவ்ய தேசங்களில், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் முக்கியனமான தலமாகும். இங்கு, வருடத்துக்கு மூன்று கருட சேவை நடைபெறும் என்றாலும், வைகாசி மாதம் வரும் கருடசேவை உலகப் பிரசித்தமானது. இவ்விழா வைகாசி விசாக நாளில் கொண்டாடப்படுகின்றது. இந்த கருட சேவையை கண்டு மகிழ்ந்து ஆழ்வார்கள் தனி மங்களாசாசனமே செய்துள்ளார்கள்.

ஒரு விநாடி தரிசனம் - கருட சேவையை திருக்குடைகளால் மறைப்பதற்கான பின்னணி

கருட சேவையின் பொழுது அலங்காரம் முடிந்து பெருமாள் புறப்படும் நேரத்தில் கருட சேவையை ஒரு விநாடி பொழுது திருக்குடைகளால் மறைப்பார்கள். இது இங்கு மட்டுமே நடைபெறும் வழக்கமாகும். இதற்கு ஒரு விநாடி தரிசனம் என்று பெயர். இதற்கு காரணம் முற்காலத்தில் சோளிங்கர் நகரில் வாழ்ந்த தொட்டாச்சாரியார் என்னும் விஷ்ணு பக்தர். அவர் காஞ்சியில் நடைபெறும் அனைத்து சேவைகளையும் தவறாது தரிசிப்பதை வழக்கமாகக்கொண்டிருந்தார். அவரால் ஒரு முறை காஞ்சிபுரம் கருட சேவைக்கு செல்ல முடியவில்லை. அதனால் மனம் வேதனையுற்ற, அவர் சோளிங்கரில் இருந்தபடியே பெருமாளை பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். தன் பக்தனுக்கு பெருமாள் மனமிரங்கி சோளிங்கரில் அவருக்கு கருட தரிசனம் தந்தார். இதனைக் கருத்தில் கொண்டே இன்றும் கருட சேவை நடைபெறும் பொழுது சேவையை திருக்குடைகளால் ஒரு விநாடி பொழுது மறைக்கிறார்கள்.

ராபர்ட் கிளைவ் காணிக்கையாக தந்த மகர கண்டி ஆபரணம்

ஆங்கிலேயர் ஆட்சியை இந்தியாவில் நிறுவக் காரணமாய் இருந்த ராபர்ட் கிளைவ், மகர கண்டி என்னும் ஆபரணத்தை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்குக் காணிக்கையாக கொடுத்தார். ஒவ்வொரு கருட சேவையின் போதும், ராபர்ட் கிளைவ் மகர கண்டி ஆபரணத்தை இன்றும் பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

இந்த ஆண்டு வைகாசி விசாக கருடசேவை 2.6.2023 வெள்ளிக்கிழமையன்று நடைபெறுகின்றது

Read More
சேங்காலிபுரம் பரிமள ரங்கநாதர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

சேங்காலிபுரம் பரிமள ரங்கநாதர் கோவில்

பெருமாள் ஒருக்களித்த நிலையில் சயனித்திருக்கும் அபூர்வ கோலம்

திருவாரூர் கும்பகோணம் சாலையில் உள்ள குடவாசலில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது சேங்காலிபுரம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத பரிமள ரங்கநாதர் கோவில். முன்னர் இந்த ஊரின் பெயர் திருக்கலீஸ்வரம் என்று இருந்தது. பதினொன்றாம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழ மன்னனின் படை தளபதியான அரவான் ராஜராஜன் என்பவர் சாளுக்கிய மன்னனான ஜெயசிம்மனை தோற்கடித்ததினால், இந்த ஊரை அவருக்கு பரிசாக மன்னன் கொடுத்து விட, இந்த ஊரின் பெயர் ஜயசிங்ஹ குலகாலபுரம் என ஆயிற்று. நாளடைவில் அதுவே சேங்காலிபுரம் என மருவியது.

இத்தலம் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம் ஆகும். இறைவன் தானாகவே விக்கிரக வடிவில் ஓர் இடத்தில் தோன்றினால், அந்த கோவில்களை ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம் என்று சொல்வார்கள். வியக்தம் என்றால் வெளிப்படுதல் என்று பொருள். ஸ்வயம் வியக்தம் என்றால் இறைவன் சுயமாகவே வெளிப்பட்ட திருத்தலம்,

பொதுவாக அனைத்து கோவில்களிலும் சயன கோலத்தில் காணப்படும் பெருமாள், ஆகாயத்தை நோக்கி படுத்த நிலையில் காணப்படுவார் . ஆனால் இங்குள்ள பெருமாளோ சயன கோலத்தில் இருந்தாலும், தனது முகம் உட்பட முழு சரீரத்தையும் பக்தர்களுக்கு காட்டி அருள் பாலிக்கும் வகையில் சயன கோலத்தில் காட்சி தருகின்றார் என்பது ஒரு அதிசய காட்சியாகும். தனது ஒரு கைமீது தலையை வைத்து படுத்தபடி சயன கோலத்தில் உள்ளார். பூமி மீது நேரடியாக தலையை வைத்துக் கொண்டு படுக்கலாகாது என்பது ஒரு நெறிமுறை என்பதினால், அதை தவிர்க்கவே, தனது ஒரு கையின் மீது தலையை வைத்துக் கொண்டு படுத்து உள்ளார்.

வலது காலில் ஆறு விரல்கள் உள்ள பெருமாள்

இத்தலத்து பெருமாளுடைய வலது காலில் ஆறு விரல்கள் உள்ளன. அதை தரிசிப்பவர்களுக்கு பெரும் அதிருஷ்டம் வரும். மேலும், ஆறாவது விரல், கலியுகத்தில் ஏற்படும் அனைத்து துன்பங்களையும் நீக்கவல்லது என்றும் நம்பப்படுகிறது.

ஸ்ரீ தேவி, பூதேவி ஆகிய இருவரும் 'இங்கேயே இரு' என்ற பாவனையில் கைகளை வைத்து இருக்கும் அபூர்வ தோற்றம்

தசரத சக்ரவர்த்தி தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதற்காக பல கோவில்களில் யாகங்கள், பூஜைகள், பரிகாரங்கள் செய்தார். இந்த தலத்திற்கும் வந்திருந்து ஒரு வருடம் பூஜைகள் செய்தார். ஆனால் பலன் கிடைக்காமல் இருக்கவே, இந்த தலத்திருந்து வருத்தத்துடன் திரும்பிப் போகையில், அவர் முன் தோன்றிய ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி 'உனக்கு அனுக்கிரகம் கிடைக்கும் வேளை வந்து விட்டதினால் இன்னமும் சற்றே இங்கிருந்து புத்திர பாக்கியம் கிடைக்க, பெருமாளை தோத்திரம் செய்' என அழைத்தார்கள். அந்த நிலையில் இங்கேயே இரு என கூறும் வகையில் காட்சி தரும் கைகளுடன், இரு தேவிகளும் காணப்படுகின்றார்கள். அந்த தேவிகளின் கைகளை உற்றுப் பார்த்தால் இந்த காட்சியைக் காணலாம். பிற கோவில்கள் அனைத்திலும் உள்ள இரு தேவிகளும் கைகளில் பூ அல்லது ஆயுதங்களோடு காட்சி தர இங்கு மட்டுமே ' இங்கு இன்னும் சற்று இரு' என கூறுவது போன்ற நிலையில் உள்ள கைகளோடு காட்சி தருகிறார்கள். அதைக் கேட்டு படுத்திருந்த பெருமாள் அங்கேயே நின்றிருந்த தசரதரை நோக்கி சற்றே ஒருக்களித்து படுத்துக் கொண்டு 'தசரதா, நான் உன்னுடைய தவத்தினால் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனாலும் இன்னமும் உனக்கு உள்ள பாவங்களை தொலைத்துக் கொள்ள சில புண்ணிய காரியங்களை செய்ய வேண்டி உள்ளது. அவற்றையும் நீ செய்து முடித்தப் பின்னர், நானே உனக்கு புத்திரனாக பிறப்பேன்' என கூறினாராம்.

Read More
துடையூர் விஷமங்களேஸ்வரர் கோவில்

துடையூர் விஷமங்களேஸ்வரர் கோவில்

பிரம்மாவிற்கும் சரஸ்வதி தேவிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் ஒரே தலம்

திருச்சியிலிருந்து முசிறி செல்லும் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவில், தேவாரத் தலமான திருவாசிக்கு மிக அருகில் அமைந்துள்ள தேவார வைப்புத் தலம் துடையூர், இறைவனின் திருநாமம் விஷமங்களேஸ்வரர் . அம்பிகையின் திருநாமம் வீரமங்களேஸ்வரி என்ற மங்களநாயகி. சுமார் 2,000 வருடப் பழைமை மிக்க கோயில்.

இறைவன் கருவறையின் வடபுற சுற்றுச்சுவரில், நான்முகனாராகிய பிரமன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கருவறையின் தென்புறச் சுவரில் பத்மாசன கோலத்தில் குடையின்கீழ், ஞான சரஸ்வதி தேவி கரங்களில் வீணை இல்லாமல், அருள்புரிகிறார். தீச்சுவாலைகளுடன் திகழும் திருவாசி இத்தேவியின் தலைக்குப் பின் திகழ, சடாமகுடத்துடன் அமர்ந்த கோலத்தில், வலக்கரம் சின்முத்திரை காட்ட, தொடைமீது திகழும் இடக்கரத்தில் ஏட்டுச் சுவடி திகழ பின்னிரு கரங்களில் நீர்ச் சொம்பும், மணிமாலையும் ஏந்திய நிலையில் ஞான சரஸ்வதி தேவி, காணப் பெறுகின்றாள்.

வைகாசி விசாக நன்னாளில் இந்த கோயிலில் பிரம்மாவிற்கும் சரஸ்வதி தேவிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். ஹோமங்கள் முடிந்து பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் காலை 4.30 மணிமுதல் 6 மணிக்குள் பிரம்மாவிற்கும், சரஸ்வதி தேவிக்கும் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும். இது போல் பிரம்மாவிற்கு கல்யாணம் நடைபெறும்தலம் தமிழ்நாட்டிலேயே இந்த துடையூர் தலம் மட்டும் தான். வேறு எங்கும் நடப்பதில்லை- பிரம்ம முகூர்த்த வேலையில் பிரம்மாவை தரிசிப்பதே பெரும் புண்ணியம். அத்துடன் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி- பிரம்மா திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்வது பெரும் புண்ணியம்.

Read More
அருப்புக்கோட்டை   படித்துறை விநாயகர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

அருப்புக்கோட்டை படித்துறை விநாயகர் கோவில்

ஜடாமுடியுடன், தவக்கோலத்தில் தோற்றமளிக்கும் அபூர்வ விநாயகர்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் படித்துறை விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவில் விநாயகர் ஜடாமுடியோடு வித்தியாசமாக காட்சி தருவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

பாண்டிய மன்னன் ஒருவனுக்கு, சாபத்தினால் உடலில் தீராத நோய் ஒன்று ஏற்பட்டது. அந்த சாப நிவர்த்திக்காகவும், தனது நோய் நீங்கிடவும் , அந்த பாண்டிய மன்னன் அருப்புக்கோட்டை சொக்கநாதர் கோவில் அருகிலேயே ஒரு திருக்குளத்தினை வெட்டினான். அந்த திருக்குளம் வெட்டிய இடத்தில், புதையுண்டுக் கிடந்த அழகிய விநாயகர் சிலை ஒன்றுக் கிடைத்தது. எல்லா விநாயகர் சிலை போன்று அல்லாமல் , அந்த விநாயகர் சிலை தலையில் கிரீடம் இல்லாமல், ஜடாமுடியுடன் தவக்கோலத்தில் காணப்பட்டதாம்.எனவே இந்த விநாயகர் சிலை காலத்தால் , பாண்டிய ஆட்சிக்கும் முற்பட்டது எனவும் , தவக்கோலத்தில் இருப்பதால், சித்தர்களாலும், முனிவர்களாலும் இவர் பூஜிக்கப் பட்டு இருக்கலாம் எனவும் கருதுகிறார்கள்.

பாண்டிய மன்னன் இந்த சிலையை , திருக்குளத்தின் ஈசான்ய மூலையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான்,.காலங்கள் பல மாறிய பின்பு, சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிலை முன்பு இருந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்டு, அதே ஈசான்ய மூலையில் புதிய ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பிரார்த்தனை

மாங்கல்ய பாக்யம் வேண்டுவோர் வழிபட சிறந்த கோயிலாகும். விநாயகர் சதுர்த்தி, மற்றும் பிரதோஷ நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

Read More
திருநெல்வேலி  நெல்லையப்பர் கோவில்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்

விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் இசை தூண்கள்

திருநெல்வேலி தேவாரப்பாடல் பெற்ற 14 பாண்டிய நாட்டு தலங்களில் ஒன்றாகும். இறைவன் திருநாமம் நெல்லையப்பர். இறைவியின் திருநாமம் காந்திமதி அம்மன்.

நம் தமிழகத்தில் ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் கொண்ட பல கோவில்கள் உள்ளன. அவற்றுள் விஞ்ஞானிகளாலும் இன்று வரை கண்டுபிடிக்க முடியாத அதிசயமான இசைத் தூண்களைக் கொண்டது திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில். தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில், ஆழ்வார் திருநகரி, திருவானைக்காவல், தாடிக்கொம்பு, தாராசுரம் உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள கோவில்களில் இசைத் தூண்கள் உள்ளன. இருந்தாலும் நெல்லையப்பர் கோவிலில் உள்ள இசைத்தூண்கள் தனித்துவமானவை. நெல்லையப்பர் கோவிலில் உள்ள இசைத் தூண்கள், உலகில் வேறு எங்கும் காண முடியாத அதிசயங்களில் ஒன்றாகும். இந்த தூண்களில் இருந்து வெளிப்படும் சப்த ஸ்வரங்கள் எப்படி ஒலிக்கிறது என்பது இன்றும் வரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இக்கோவில் இரண்டாம் பிரகாரத்தில் ஏழிசை ஸ்வரங்களை எழுப்பும் இசை தூண்கள் உள்ளன. ஒரு பெரிய தூணை சுற்றிலும் 48 சிறிய தூண்களை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன. வெளித்தூண்கள் வேறுபட்ட வடிவங்களையும், உயரங்களையும் கொண்டவையாக உள்ளன. இந்த தூண்களை வெறும் கைகளால் தட்டினாலே ச,ரி,க,ம,ப,த,நி என்ற ஏழு ஸ்வரங்களும் ஒலிக்கும். ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு இசையை எழுப்பக் கூடியவையாகும்.

பெரிய தூணில் கர்நாடக சங்கீதமும், அதை சுற்றி உள்ள சிறிய தூண்களில் மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி போன்ற இசைக்கருவிகளின் இசையை ஒலிக்கின்றன. ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்தில் இழைத்திருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். அந்த காலத்தில் திருவிழாக்களின் போது இசைக்கலைஞர்கள் இந்த தூண்களை பயன்படுத்தியே இசைத்ததாக சொல்லப்படுகிறது.

​எந்த தொழில்நுட்ப வசதியும் இல்லாத காலத்தில் ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு விதமான அலைக்கற்றையை உருவாக்கும் விதத்தில் எப்படி உருவாக்கினார்கள் என்பது இன்று வரை வியப்பை மட்டுமே தருகிறது. இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி கழகத்தின் இயற்பியல் பிரிவு விஞ்ஞானிகள் இந்த தூண்களின் வடிவமைப்பு, இதிலிருந்து வெளிப்படும் இசை போன்றவற்றை ஆய்வு செய்தனர். தன்மைக்கு ஏற்ப மாறுபட்டு இசைந்து கொடுக்கும் அலைக்கற்றையினால் சப்தம் உருவாவதாக மட்டுமே ஆய்வின் முடிவில் தெரிவித்தனர். ஆனால் இந்த தூண்களை எப்படி வடிவமைத்திருப்பார்கள் என்பது தற்போதும் விடை தெரியாத புதிராக மட்டுமே உள்ளன.

இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வழிபடுத்தும் ஒரு முறை ஆகும். ஆனால் கற்களால் செதுக்கப்பட்ட இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே செல்வதற்கு துவாரம் ஏதும் கிடையாது. அப்படி இருக்கையில் எப்படி ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு விதமான இசையை எழுப்ப முடியும் என்பது விஞ்ஞானிகளை இன்று வரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

Read More