நித்ய கல்யாண பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

நித்ய கல்யாண பெருமாள் கோவில்

ஒவ்வொரு நாளும் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் திவ்ய தேசம்

சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரைச்சாலையில், 40 கிலோமீட்டர் தொலைவில், கோவளத்திற்கு முன்னதாக திருவேடகத்தில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில். இங்கு, லட்சுமியை தன் இடது தோளில் ஏந்தியபடி காட்சி தருகிறார் நித்ய கல்யாணப் பெருமாள். லட்சுமியை இடப்பக்கம் ஏந்திய திருத்தலம் என்பதால் `திருஇடந்தை' என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே திருவிடந்தை ஆக மாறிவிட்டது.

கருவறையில் மூலவரான ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் சுமார் ஆறரை அடி உயரமுள்ள கல் விக்ரகமாக- தேவியை மடியில் அமர்த்திக் கொண்டு வீற்றிருக்கிறார். பெருமாளின் திருவடியின்கீழ் தன் பத்தினியுடன் ஆதிசேடன் உள்ளார். ஸ்ரீஆதிவராக மூர்த்தியின் இடப்பக்கத்தில் உள்ள நாச்சியாருக்கு அகில வல்லி நாச்சியார் என்றும், பிரதி தினம் கல்யாணம் செய்து கொண்டபடியால், பெருமாளுக்கு நித்திய கல்யாண பெருமாள் என்றும் திருநாமம் வழங்கலாயிற்று. தாயார் திருநாமம் கோமளவல்லி.

பெருமாளுக்கு அனுதினமும் திருமணம் நடந்த வரலாறு

சரஸ்வதி ஆற்றங்கரையில் உள்ள சம்பு என்று அழைக்கப்பட்ட தீவில் குனி என்னும் முனிவர் தவம் செய்து வந்தார். அவருக்குப் பணிவிடை செய்வதற்காக கன்னிகை ஒருத்தி அங்கு வந்து சேர்ந்தாள். ஒரு காலகட்டத்தில் அந்த முனிவர் மோட்சம் அடையவே, அவரைப் போலவே மோட்சம் அடைய அந்தக் கன்னிகை கடுந்தவம் செய்து வந்தாள். ஒரு நாள் அங்கு வந்த நாரத முனிவர் அவளிடம்,'திருமணம் செய்து கொள்ளாமல் மோட்சம் அடைய இயலாது' என்று கூறினார். எனவே பல முனிவர்களிடமும் சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டினாள். காலவ முனிவர் என்பவர் அவளை மணந்து கொண்டார். அவர்களுக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்தார்கள். முதலாவது பெண் குழந்தையின் பெயர் கோமளவல்லி. அவர்களைப் பெற்ற சிறிது காலத்தில் குழந்தைகளின் தாய் மறைந்து விட்டாள். காலவ முனிவர் அந்த 360 பெண் குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்டார். பெண் குழந்தைகள் மளமளவென்று வளர்ந்து பருவமடைந்து, திருமணத்திற்குக் காத்திருக்கும் கன்னிகளானார்கள். இத்தனை பெண்களையும் எப்படி திருமணம் செய்து கொடுப்பது என்று தவித்தார் காலவ முனிவர். சம்புத்தீவிற்கு வந்து மற்ற முனிவர்களிடம் அந்தப் பெண்களுக்கு எவ்வாறு திருமணம் செய்து வைப்பது என்று வருத்தத்துடன் ஆலோசனை கேட்டார். அவர்கள் திருவிடந்தை சென்று பெருமாளை வழிபடக் கூறினார்கள். இத்தலத்திற்கு தனது 360 கன்னிகைகளுடன் வாழ்ந்து வந்த காலவரிஷியின் வேண்டுதலை ஏற்று, பெருமாள் பிரம்மச்சாரியாக வந்து தினம் ஒரு கன்னிகையாக 360 நாட்களில் அனைவரையும் திருமணம் செய்து கொண்டு கடைசி நாளன்று அனைவரையும் ஒருவராக்கி தனது இடபாகத்தில் வைத்துக் கொண்டு எழுந்தருளினார்.

திருஷ்டி தோஷம் விலக்கும் தலம்

உற்சவரான ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி ஆகியோர் பஞ்சலோக விக்ரகங்களாகக் காட்சி தருகின்றனர். ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாளின் திருமுகத்தில் திருஷ்டிப் பொட்டு ஒன்று உள்ளது. இது இயற்கையிலேயே அமைந்ததாம். இந்த திருஷ்டிப் பொட்டையும் தனிச்சந்நிதி தாயாரான கோமள வல்லித் தாயாரின் திருமுகத்தில் இருக்கும் திருஷ்டிப் பொட்டை யும் தரிசிப்பவர்களுக்கு திருஷ்டி தோஷம் விலகும் என்கிறார்கள். இந்த கோவிலுக்கு வந்து வேண்டிக்கொண்டால் சட்டென்று திருமணம் முடிந்து விடும். அவ்வாறு திருமணம் முடிந்த தம்பதியர், இந்த கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

Read More
திருவாரூர் தியாகராஜர் கோவில்

திருவாரூர் தியாகராஜர் கோவில்

எழுந்து நிற்கும் நிலையில் காட்சி தரும் நந்தி

பொதுவாக சிவாலயங்களில் அமர்ந்த நிலையில் காட்சி தரும் நந்தி, சிவபெருமானின் முன்பு அமர்ந்திருப்பார். ஆனால் திருவாரூர் தியாகராஜர் கோவிலில், தியாகராஜப் பெருமானுக்கு முன்பு உள்ள நந்தியோ நின்ற கோலத்தில் உள்ளார், இதற்கு பின்னால் ஒரு சுவாரசியமான காரணம் உள்ளது.

சிவபெருமானின் நண்பரும், தேவாரம் பாடிய மூவர்களில் ஒருவருமான சுந்தரர் திருவாரூரில் வசித்து வந்த பரவை நாச்சியார் என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்காக அவர் சிவபெருமானை பரவை நாச்சியாரிடம் தனக்காக தூது செல்ல வேண்டினார். சுந்தரரின் காதலியிடம் துாது சென்றார் சிவபெருமான். அப்போது தன் வாகனமான நந்தி மீது செல்லாமல், திருவாரூர் வீதிகளில் நடந்தே போனார். இதனால் வருத்தமடைந்த நந்தி, இதன் பின் யாருக்காகவும், எதற்காகவும் சிவபெருமானை நடக்க விடக் கூடாது என்றும், அவர் அழைத்தால் உடனே புறப்படவும் தயாராக இருக்க வேண்டும் என்றும் நந்தி முடிவு செய்தார். இதுவே இங்கு நந்தி நின்ற நிலையில் காட்சியப்பதற்கான காரணமாகும்.

பொதுவாக நந்தியின் வடிவமானது கருங்கல்லாலோ அல்லது வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இத்தலத்தில் உலோகத்தினால் நந்தி உருவாக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பாகும். மேலும் திருவாரூரைச் சுற்றியுள்ள மற்ற சப்த விடங்கத்தலங்களிலும் நந்தி நிற்கும் நிலையில் இருப்பதும், உலோகத்தினால் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.இவரை தரிசித்தால் தடைகள் அகன்று சுபவிஷயங்கள் நடந்தேறும்.

Read More
அமிர்தகடேசுவரர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

அமிர்தகடேசுவரர் கோவில்

இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில், எய்யலூர் சாலையில் அமைந்துள்ள தேவாரத் தலம் மேலக்கடம்பூர். இறைவன் திருநாமம் அமிர்தகடேசுவரர். இறைவி வித்யூஜோதிநாயகி.

தேவர்கள், பாற்கடலில் கிடைத்த அமுதத்தை விநாயகரை வணங்காமல் பருக சென்றதால், விநாயகர் தேவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி, அமுதகலசத்தை எடுத்து செல்லும்போது ஒரு துளி அமுதம் கடம்பவனமாக இருந்த இந்த ஊரில் விழுந்தது. அந்த இடத்தில் சிவன் சுயம்பு லிங்கமாக உள்ளார். இந்திரனும் தேவர்களும் தங்கள் தவறை உணர்ந்து விநாயகரிடம் மன்னிப்பு கேட்டு அமுதகலசத்தை திரும்பி கேட்டனர். விநாயகர் சிவனிடம் வேண்டும்படி கூறினார். சிவன் இந்திரனுக்கு அமுதகலசத்தை கொடுத்து அமிர்தகடேஸ்வரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளி உள்ளார்.

தேவர்களின் தாயான அதிதி, அமுதம் அளித்த சிவனை தினமும் வணங்கி வந்தார். இவர் தினமும் இங்கு வருவதை விரும்பாத இந்திரன் இந்த சிவனை கோயிலோடு இந்திரலோகம் எடுத்து செல்ல விரும்பி கோயிலை தேர் வடிவில் மாற்றி இழுத்து செல்ல முயன்றான். விநாயகர் தன காலால் தேர் சக்கரத்தை மிதித்து கொள்ள, இந்திரனால் ஒரு அடிகூட நகர்த்த முடியவில்லை. இந்திரன் விநாயகரிடம் வழி விடும்படி வேண்ட விநாயகர் இந்திரனிடம் கோடி லிங்ககளை பிரதிஷ்டை செய்தால் தேரை கொண்டு செல்லலாம் என்று கூறினார். இந்திரன் ஆணவத்துடன் லிங்கங்கள் செய்ய அனைத்தும் பின்னப்பட்டன, தவறை உணர்ந்த இந்திரன் அமிர்தகடேஸ்வரரை வேண்ட அவர் ஆயிரம் முறை தன் பெயரை சொல்லி ஒரு லிங்கம் செய்யும்படி பணித்தார். அதன்படி இந்திரன் ருத்ரகோடிஸ்வர லிங்கத்தை உருவாக்கினான். சிவன் அவனுக்கு காட்சி தந்து தான் இங்கேயே இருக்க விரும்புவதால் அதிதிக்கு பதில் இந்திரனே தினமும் வழி படலாம் என கூறினார். இந்திரனும் மன்னிப்பு கேட்டான் . தினமும் இந்திரன் பூஜை செய்வதாக ஐதிகம்.

இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர் தனிச் சன்னதியில் அருள் பாலிக்கிறார். இவருக்கு ஆரவார விநாயகர் என்று பெயர். அமிர்த கலசத்தை தூக்கிச் சென்றும், தேர் சக்கரத்தை மிதித்தும் ஆரவாரம் செய்ததால் இவருக்கு இந்த பெயர் வந்தது. இவர் தலையை இடது புறமாக சாய்த்தபடி கோப முகத்துடன் காட்சி தருகிறார். தேர் சக்கரத்தை மிதத்ததின் அடையாளமாக, தேர் போல் அமைந்த இக்கோவிலின் இடது பக்க சக்கரம் பூமியில் பதிந்து காணப்படுகிறது.

Read More
லட்சுமி நரசிம்மர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

லட்சுமி நரசிம்மர் கோவில்

தீராத நோய்களைத் தீர்க்கும் வைத்திய நரசிம்மர்

தெலுங்கானா மாநிலம் யாதகிரி மாவட்டத்தில், யாதகிரிகுட்டா என்ற ஊரில் அமைந்துள்ளது. லட்சுமி நரசிம்மர் கோவில். ஐதராபாத்தில் இருந்து 52 கிலோ மீட்டரிலும், வாரங்கல்லில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. தீராத நோயைத் தீர்த்து வைக்கும் சக்திமிக்கவராக விளங்கும் இத்தல நரசிம்மர், 'வைத்திய நரசிம்மர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

தல வரலாறு

திரேதா யுகத்தில், ருஷ்யசிருங்கரின் மகனான யாத மகரிஷி இங்கு தவம் செய்கையில் அவருக்குப் பிரத்யட்சமான அனுமன் அவரது வேண்டுகோளின்படி அவருக்கு நரசிம்மரின் திருக்கோலம் காணும் பாக்கியத்தை அருளினார். நரசிம்மர் அவருக்கு ஐந்து வடிவில் காட்சி தந்த தலம் இது. இந்த இடம் தற்போது கோவில் இருக்கும் இடத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. மக்களின் முறையற்ற வழிபாட்டின் காரணமாக, நரசிம்மர் தன்னுடைய புராதன இடத்தில் இருந்து தற்போதைய குன்றில் வந்து அமர்ந்ததாகவும், அதை அறிந்து இங்கே ஆலயம் கட்டப்பட்டதாகவும் தலவரலாறு சொல்கிறது.

இங்கு வீற்றிருக்கும் மூலவரான லட்சுமி நரசிம்மர், மிகவும் சக்தி வாய்ந்தவர். இவர் 12 அடி உயரமும், 30 அடி அகலமும் கொண்ட குகையில் இருந்து அருள்புரிகிறார். யோக நரசிம்மர், நரசிம்பர், ஜூவால் நரசிம்மர், உக்கிர நாசிப்பர், லட்சுமி நரசிம்மர்' என ஐந்து தோற்றங்களில் யாதரிஷி முனிவருக்கு, காட்சிதந்த தலம் என்பதால், இந்தக் கோவில் பஞ்ச நரசிப்பர் கோவில்' என்றும் அழைக்கப்படுகிறது. பதினெட்டு புராணங்களில் ஒன்றான கந்த புராணத்தில், கோவிலைப் பற்றிய தகவல்கள் இருப்பதை வைத்து, இது எவ்வளவு புராதனமான ஆலயம் என்பதை உண முடியும்.

தீராத நோயைத் தீர்த்து வைக்கும் சக்திமிக்கவராக விளங்கும் இத்தல நரசிம்மர், 'வைத்திய நரசிம்மர்' என்றும் அழைக்கப்படுகிறார். சகல மனக்கிலேசங்களையும், அச்சங்களையும் அகற்ற வல்லவர் நரசிம்மர். இங்கு ஒரு மண்டல காலம் தங்கித் தொழுதால் மனப்பிணிகள் அகன்று விடும் என்பது நம்பிக்கை. இங்கு வந்து தொழுவோருக்கு பில்லி, சூனியம், ஏவல் ஆகியவை அகன்று விடும் என்பதும் நம்பிக்கை.உத்தியோகம், உத்தியோகத்தில் உயர்வு, மகப்பேறு ஆகியவற்றிற்காவும் இத்தலம் பெயர் பெற்றுள்ளது.

Read More
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்

மும்மூர்த்திகளான சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மதேவன் ஒன்றாக சேர்ந்திருக்கும் அபூர்வக் கோலம்

சேலம்-மேட்டூர் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் தாரமங்கலம். இறைவன் திருநாமம் கைலாசநாதர். இறைவி சிவகாமியம்மை.

இக்கோவிலில் மும்மூர்த்திகளான சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மதேவன் ஒரே சிலையில் காட்சியளிப்பது வித்தியாசமான திருக்கோலம் மற்றும் அபூர்வமான விஷயமாகும். அதிலும் மகாவிஷ்ணு, லிங்க வடிவில் இருக்கும் சிவபெருமானின் ஆவுடையாராக மாறியிருக்கிறார். பிரம்மதேவனும் கூட, நான்முகனாக மாறுவதற்கு முன்பு இருந்த 5 முகங்களுடன் காட்சியளிக்கிறார். விஷ்ணுவும், பிரம்மனும், சிவபெருமானின் அடியையும், முடியையும் தேடினர். அது இயலாமல் போனதால் இருவரும் சிவனை பூஜிக்க, அவர் சிவலிங்க வடிவில் இருவருக்கும் காட்சியளித்தார். அடி முடி தேடிய வரலாற்றை எடுத்துரைக் கும் வகையிலேயே, அடியைத் தேடிச் சென்ற மகாவிஷ்ணு, சிவலிங்கத்தின் அடியில் ஆவுடையாராக மாறியிருக்கிறார். அதே போல் முடியைத் தேடிச் சென்ற பிரம்மன், சிவலிங்கத்தின் மேற்பகுதியை தன்னுடைய கையில் தழுவியபடி காட்சி யளிக்கிறார்.

இக்கோயில் சிற்ப கலைக்கு மிகவும் புகழ் பெற்றது. இங்குள்ள சிங்கத்தின் வாயில் உருளும் கல், இராமன் வாலியை வதைக்கும் சிற்பம் ஆகியவை வியப்புக்குரியவை. ரதி சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியாத வகையிலும், மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் ரதி தெரியும்படியும் அமைந்த சிற்பம் சிறப்பானது. இத்தலத்தில் உள்ள கல் சங்கிலி, கல் தாமரை, சிங்கம் ஆகியவை சிற்பகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

Read More
துர்கா பரமேசுவரி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

துர்கா பரமேசுவரி கோவில்

வித்தியாசமான கோலத்தில் காட்சி தரும் துர்கை அம்மன்

கர்நாடக மாநிலம் மங்களூர் நகரத்திலிருந்து 29 கி.மீ. தூரத்தில் உள்ள கட்டீல் தலத்தில் அமைந்துள்ளது துர்கா பரமேசுவரி கோவில். கனககிரி மலைக்கும், பர்வஞ்சே என்ற இடத்திற்கும் நடுவே கட்டீல் அமைந்துள்ளது. இத்தலத்தில் பாயும் நந்தினி நதியின் நடுவே துர்கா பரமேசுவரி கோவில் அமைந்துள்ளது. முனிவர் ஒருவர் சாபத்தால் தேவலோக பசுவான காமதேனுவின் மகளான நந்தினி இங்கே நதியாக பாய்கிறாள்.

அருணாசுரன் என்ற அரக்கன் பிரம்ம தேவரை வழிபட்டு அரிய பெரிய வரங்களைப் பெற்றான். பின்னர், அவற்றைக் கொண்டு தேவர்களையும், முனிவர்களையும், உலக உயிர்களையும் துன்புறுத்தினான். அவனை அம்பாள் தேனீ வடிவில் வந்து அழித்தாள். பின்னர் தன் அடியவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இத்தலத்தில் எழுந்தருளினாள்.

கடிலா என்பது தேவியின் இடுப்புப் பகுதியைக் குறித்ததினாலும் , அவள் நதிக்கு இடையில் தோன்றியதால் நடு என்ற அர்த்தம் தரும் வகையில் கடி எனவும் , இடம் என்ற அர்த்தத்தை தரும் லா என்ற சொல்லும் இணைந்த சொல்லான கடி லா என்ற பெயரில் அங்கு ஆலயம் எழும்ப, பின்னர் கடிலா என்பது மருவி கட்டீல் என ஆயிற்று.

இக்கோவிலில், துர்கை அம்மன் உட்கார்ந்த நிலையிலும் இல்லாமல், நின்ற நிலையிலும் இல்லாமல் வித்தியாசமான கோலத்தில் காட்சி தருவது ஒரு தனிச் சிறப்பாகும். நதிக்கு நடுவில் அம்மன் எழுநந்நருளியிருப்பதால் கர்ப்பகிரகம் ஈரமாக இருப்பதுடன், இங்கு பிரசாதமாக வழங்கப்படும் குங்குமமும் ஈரமாக இருக்கினறது.இந்த துர்கை அம்மனுக்கு இளநீர் அபிஷேகம் மிகவும் பிரசித்தம். வாரத்திற்கு கிட்டத்தட்ட 3000 இளநீரால் அபிஷேகம் நடை பெறுமாம். அதே போல பாக்குப் பூ அர்ப்பணிப்பதும் விசேஷம். சுற்று வட்டார தென்னை விவசாயிகள் தங்கள் தென்னந் தோப்புகளில் தேங்காய் நிறைய காய்க்க வேண்டும் என்று இங்கே வழிபாடு செய்கிறார்கள். வேண்டுதல் பலித்ததும் தென்னங்கன்றுகளை கோவிலுக்கு காணிக்கையாக்குகின்றனர்.

Read More
லட்சுமி நரசிம்ம சுவாமி  கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில்

நாள்பட்ட நோயால் சிரமப்படுபவர்கள் வழிபட வேண்டிய தலம்

செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் 16 கி.மீ.தூரத்திலும், காஞ்சிபுரத்திலிருந்து 21 கி.மீ. தூரத்திலும் பழைய சீவரம் தலத்தில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது.

மூலவர் லட்சுமிநரசிமமர் மேற்குநோக்கி வீற்றிருக்கிறார். கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியும்,வலக்கரத்தால் அபயம் அளித்தும், இடது கையால் லட்சுமியை அணைத்தபடியும் உள்ளார். தாயார் அகோபிலவல்லி.

பக்தரின் வயிற்று வலியை போக்கிய லட்சுமிநரசிமமர்

300 ஆண்டுகளுக்கு முன், வடஇந்தியாவிலிருந்து பக்தர்கள் இங்கு வந்தனர். அதில் ஒருவருக்கு தீராத வயிற்றுவலி இருந்தது. பழைய சீவரம் தலத்திற்கு தாிசனம் செய்ய வந்த இந்த அன்பா் புண்ணியநதியான 'ஷீர நதியில்' (பாலாறு) நீராடி எம்பெருமானை வழிபட்டு அன்று இரவு இத்தலத்திலேயே ஓய்வெடுத்தாா் . அவரது கனவில் பிரத்யக்ஷமான எம்பெருமான் இத்தலத்தில் ஒரு மண்டலம் தங்கி வழிபாடு செய்ய உடல் நோய் முற்றிலும் குணமாகும் என அருள்பாலித்தாா். நெஞ்சம் நெகிழ்ந்த அன்பா் எம்பெருமானின் திருவுள்ளப்படி இத்தலத்தில் தங்கி வழிபாடுகள் செய்ய அவரது உடல் நோய் முற்றிலும் நீங்கியது. எம்பெருமானின் அருட்கடாட் சத்தை எண்ணி வியந்த இந்த அன்பா் திருக்கோயிலுக்குப் பல திருப்பணிகளை செய்து மகிழ்ந்தாா். அவருடைய பரம்பரையில் வந்தவர்களே அறங்காவலர்களாக இன்றும் இருந்து வருகின்றனர்.

நாள் பட்ட நோய்களை விரட்டும் லட்சுமி நரசிம்ம மந்திரம்

நாள்பட்ட வியாதிகளால் அவதியுறும் அன்பா்கள் இத்தலத்தில் வழிபட, நோயின் தாக்கம் உடனடியாகக் குறைந்து உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது. நாள்பட்ட நோய்களால் அவதிப்படுபவர்கள் ஆரோக்கியம் பெற லட்சுமி நரசிம்மரை வீட்டிலிருந்த படியே வேண்டிக் கொள்ளலாம். அறுவை சிகிச்சை செய்ய இருப்பவர்கள், மருத்துவமனை செல்லும் முன் இங்கு வந்து தரிசிக்கின்றனர். இவர்கள் லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை ஜபித்தபடியே மருந்து உண்டால், நோய்கள் பறந்தோடும் என்பது நம்பிக்கை. பாவம் காரணமாகவே நோய்கள் வருகின்றன. இந்த மந்திரத்தை ஜெபித்து, நல்லதை மட்டுமே செய்தால் நோய்கள் தங்கள் பரம்பரைக்கும் வராமல் தடுக்கலாம். துளசி மாலை சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

Read More
சுத்தரத்தினேசுவரர் கோவில்

சுத்தரத்தினேசுவரர் கோவில்

சிறுநீரக நோய்களைத் தீர்ககும் பஞசநதன நடராஜர்

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பாடலூர் என்ற ஊரிலிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள தலம் ஊட்டத்தூர். இறைவன் திருநாமம் சுத்தரத்தினேசுவரர். இறைவி அகிலாண்டேசுவரி.

இக்கோவிலில் தனிச் சன்னதியில் பஞசநதன நடராஜர் அருள் பாலிக்கிறார்.எட்டு அடி உயரத் திருமேனி உடைய இவர் ஆசியக் கண்டத்திலேயே மிகப் பெரிய நடராஜர் என்ற பெருமை உடையவர். இவர் சூரிய பிரகாசிப்புத் தருகின்ற, அரிய வகைக் கல்லான பஞசநதன என்ற கல்லால் ஆனவர். இத்தகைய கல்லாலான சிற்பங்களை கோவில்களில் காணபது என்பது மிக மிக ஆபூர்வம்.

சிறுநீரகத்தில் கல் உருவாகி அவதிப்படுபவர்கள், சிறுநீரகம் செயலிழந்து அதனனால் ரத்தம் சுத்தகரிப்பு செய்ய வேண்டியவர்கள் என சிறுநீரக பாதிப்புக்கு உள்ளானவர்கள். இத்தலத்துக்கு ஒரு கிலோ வெட்டிவேரை வாங்கி வந்து அதனை 48 துண்டுகளாக்கி பின் அதனை மாலையாகத் தொடுத்து பஞசநதன நடராஜருக்கு சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் அந்த மாலையையும், இத்தலத்து தீர்த்தமான பிரம்ம தீர்த்தத்தையும் தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

வெட்டிவேரை தினம் ஒரு துண்டு வீதம் பிரம்ம தீர்த்தத்தில் ஊற வைத்து அதன் சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறுநீரக பாதிப்பு குறைகின்றது என்று பக்தர்கள் கூறுகின்றனர். வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானவர்கள் இங்கு வந்து வழிபட்டு தங்கள் சிறுநீரக நோய் குணமடைந்து செல்கின்றனர்.

Read More
புஷ்பவனநாதர் கோவில்

புஷ்பவனநாதர் கோவில்

நாரதருக்கு நாதோபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி

தஞ்சாவூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளி, கல்லணை செல்லும் வழியில் கண்டியூரை அடுத்த 3 கி.மீ. தொலைவில் மேலத்திருப்பூந்துருத்தி எனும் இடத்தில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் உள்ள தேவாரத் தலம் திருப்பூந்துருத்தி. இறைவன் திருநாமம் புஷ்பவனநாதர். இறைவி சௌந்தர்யநாயகி.

சப்தஸ்தான தலங்களுள் ஒன்றான இத்தலத்தில் வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தியின் அபூர்வக் கோலத்தை நாம் தரிசிக்கலாம். இவர், வீணையேந்தியபடி யோக நெறியை மேற்கொண்டு, அந்த வீணை நாதத்தில் மனமொருமித்த நிலையில் அருள்கிறார். நாரத முனிவருக்கு நாதோபதேசம் செய்த அருட்கோலம் இது. ஒரு சமயம், ஒலி எனும் நாதத்தின் உற்பத்தி ஸ்தானமான நாதப்பிரம்மம் எத்தகையது என கந்தர்வர்களும், தேவர்களும், நாரதரும் சிவபெருமானிடம் வினவ, சிவபெருமான் பூந்துருத்திக்கு வருக எனப் பணித்தார். அங்கே தானும் எழுந்தருளி, வீணையை ஏந்தி மீட்ட, நாதத்தின் மையத்தோடு யாவரும் கலந்தனர்.

சரசுவதி சிவபெருமானுக்கு பரிசாக அளித்த வீணை

ஒரு சமயம் கல்விக் கடவுளான சரசுவதிக்கும், சிவபெருமானுக்கும் விவாதப் போட்டி நடைப்பெற்றது. அதில் சிவபெருமான் வெற்றி பெற்றார். சிவபெருமானின் வாதத் திறமையைக் கேட்டு மனம் மகிழ்ந்த சரசுவதி தன் கையிலிருந்த வீணை அவருக்கு பரிசாக அளித்து விட்டாள்.

இசைக்கலைஞர்களுக்கு அருளும் வீணா தட்சிணாமூர்த்தி

இசைக்கலைஞர்கள் தங்கள் இசைக் கருவிகளை இவர் முன் வைத்து தங்கள் கலையில் முன்னேற்றம் பெற இவரை வழிபடுகின்றனர்.இந்த தட்சிணாமூர்த்தியை வழிபட, அவர்களின் கலைத் திறன் மேன்மையடைகிறது.

Read More
வலஞ்சுழி விநாயகர் கோவில்
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

வலஞ்சுழி விநாயகர் கோவில்

கடல் நுரையாலான வெள்ளை விநாயகர்

வலஞ்சுழி விநாயகர் கோவில் கும்பகோணத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தூரத்தில் உள்ள தேவார பாடல் பெற்ற தலமான திருவலஞ்சுழியில் அமைந்துள்ளது.

இத்தலத்து விநாயகர் பாற்கடலில் உள்ள அமுதமயமான கடல் நுரையினால் உருவானதால் சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) என பெயர் பெற்றார்.இவர் வெண்மையான திருமேனியுடன் வலம் சுழித்த தும்பிக்கையுடனும் காட்சி தருகிறார்.இவர் கடல் நுரையால் ஆனதால் இவருக்கு அபிஷேகங்கள் கிடையாது. பச்சைக் கற்பூரம் மட்டுமே திருமேனியில் சாத்தப்படுகிறது. விசேஷ தினங்களில் வெள்ளி, தங்கக் கவசங்கள் அணியப்படும்.

இதர தலங்களில் விநாயகரின் இரண்டு தந்தங்களில் ஒன்று மட்டும் கூர்மையாக இருக்கும். மற்றொன்று பாதி ஓடிந்த நிலையில் காணப்படும். ஆனால் இந்தத் தலத்தில் விநாயகரின் இரு தந்தங்களும் கூர்மையானதாகக் காட்சியளிக்கின்றன.

இந்திரன் வடித்து வழிபட்ட விநாயகர்

'சுவேத' என்ற வடமொழிச் சொல்லுக்கு 'வெள்ளை' என்று பொருள். பாற்கடலைக் கடைந்தபோது, மிதந்து வந்த வெள்ளை நிற நுரையைக் கொண்டு இந்திரன் வடித்து வழிபட்ட உருவம்தான் இந்த விநாயகர் எனக் கூறப்படுகிறது.

ஒருமுறை தேவலோகத்துக்கு விஜயம் செய்த துர்வாச முனிவரை மதியாததால், தேவேந்திரன் சபிக்கப்பட்டார். சாப விமோசனம் பெரும் பொருட்டு, கடல் நுரையால் செய்யப்பட்ட விநாயகர் உருவத்தை எடுத்துக்கொண்டு பூமியில் சுற்றித் திரிந்தார். அமைதியான இந்த காவிரிக்கரையைக் கண்டதும், பிள்ளையாரைக் கீழே வைத்து விட்டு நதியில் நீராடினார். ஆற்றிலிருந்து திரும்பி வந்து சிலையை எடுக்க தேவேந்திரன் முயன்றார். முடியவில்லை. இன்றும் ஒவ்வொரு விநாயக சதுர்த்தியன்றும் இந்திரன் இங்கு வந்து வழிபடுவதாக ஐதீகம்.

மகாவிஷ்ணு வழிபட்ட விநாயகர்

மகாவிஷ்ணு, மார்கழி மாத சஷ்டி திதியில் இத்தலத்தில் உள்ள வெள்ளை விநாயகரை நேரில் வந்து வழிபட்டதாகவும் புராணங்கள் இருக்கின்றன.

ராஜராஜ சோழன், போருக்குப் போகும் போதெல்லாம் தன்னுடைய இஷ்ட தெய்வங்களின் ஒன்றான வெள்ளை விநாயகரை வழிபட்டு, பின்னர்தான் போருக்குச் சென்று வெற்றி வாகை சூடிவந்ததாக இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன.

கருங்கல் ஜன்னல்

கருங்கல்லால் ஆன ஜன்னல் இச்சன்னதியில் உள்ளது. கல்லால் ஆன விளக்குகளைப் போன்ற அமைப்பு இச்சன்னதியின் தனித்துவங்களில் ஒன்றாகும். இக்கோவில் தூண்களில் நுணுக்கமான சிற்ப அமைப்புகள் காணப்படுகின்றன.

விநாயகர் சதுர்த்தி விழா

திருவலஞ்சுழி சுவேத விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறும். தினமும் சுவாமி வீதியுலா நடைபெறும். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேவேந்திரன் பூஜை, தேரோட்டம் நடைபெறும். சுத்தாபிஷேகத்துடன் விழா நிறைவடையும்.

Read More
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில்

காலபைரவர் மூச்சு விடும் அதிசயம்

திருநெல்வேலியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் நாங்குனேரிக்கு அருகில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருக்குறுங்குடி. இத்தலத்தில் பெருமாள் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 திருக்கோலங்களில் எழுந்தருளியுள்ளார். தாயார் குறுங்குடிவல்லி

சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இக்கோவிலில் சிவபிரான் 'மகேந்திரகிரி நாதர்' என்ற பெயரில் எழுந்தருளியிருக்கிறார்.

இங்கே பெருமாள் சன்னதியில் காலபைரவர் அதிசயிக்கதக்க வகையில் இருக்கிறார். உள் பிரகாரத்தை சுற்றி வரும்போது பிரமாண்டமான தோற்றத்தில் இருக்கும் இவரே, இக்கோவிலின் காவல் தெய்வமாக இருக்கிறார்.

காலபைரவர் சன்னதியில், கருவறையின் மேற்பக்கம் ஒரு விளக்கும், கீழ்பகுதியில் ஒரு விளக்கும் ஏற்றப்பட்டிருக்கும். இவைத் தவிர பக்கவாட்டில் இரண்டு சரவிளக்குகளும் இருக்கும். இந்த நான்கு தீபங்களும் எரியும்போது தெரியும் பிரகாசமான ஒளியில் பைரவர் ரூபம் அழகாகக் காட்சியளிக்கும். இந்தக் கருவறைக்குள் எந்த திசையிலிருந்தும் காற்று புகாவண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் இதில் அதிசயம் என்னவென்றால் மேற்பகுதியில் உள்ள விளக்கின் ஜ்வாலை மட்டும் காற்று பட்டால் அசையும் தீபம் போல ஆடிக் கொண்டேயிருக்கும். கீழே உள்ள விளக்கின் தீப ஒளி எந்தவித சலனமும் இல்லாமல் இருக்கும்.

மேல் இருக்கும் விளக்கு மட்டும் வெளிபக்கமாகவும் , உள்பக்கமாகவும் அசைவது பைரவர் விடும் மூச்சு காற்று என சொல்லபடுகிறது. அதாவது பைரவர் மூச்சை இழுக்கும்போது தீபம் உள்பக்கமாகவும், மூச்சு வெளிவிடும்போது தீபம் வெளிப்பக்கமாகவும் அசைகிறது. மற்ற தீபங்கள் எல்லாம் எந்த சலனமும் இல்லாமல் அசையாமல் இருக்கும்போது அவருடைய முகத்துக்கு பக்கத்தில் இருக்கும் விளக்கு மட்டும் உள்பக்கம் வெளிபக்கமாக அசைவதை பகதர்கள் நேரில் கண்கூடாகப் பார்க்கலாம்.

குழந்தைப்பேறு வேண்டி இங்கே வழிபாடு நடத்துபவர்களுக்கு உடனடியாகப் பலன் கிடைக்கிறது. இவருக்கு தயிரன்னமும், வடைமாலையும், பூசட்டையும் படைக்கப்படுகிறது.

Read More
வெளிகண்டநாத சுவாமி கோவில்

வெளிகண்டநாத சுவாமி கோவில்

சூரியன்,சந்திரனின் அபூர்வக் கோலம்

திருச்சி மாநகரம் மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தூரத்திலுள்ள பாலக்கரை பகுதியில் அமைந்துள்ளது வெளிகண்டநாத சுவாமி கோவில். இறைவி சுந்தரவல்லி.

பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் சூரியன்,சந்திரன் உள்பட எல்லா நவக்கிரகங்களும் நின்ற நிலையில் எழுந்தருளியிருப்பார்கள். ஆனால் இத்தலத்தில் வெளிகண்டநாத சுவாமி கருவறைக்கு நேர் எதிர் திசையில் சூரியனும், சந்திரனும் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார்கள். இவர்களின் இந்தக் கோலம் மிகவம் விசேடமானது என்று தலபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சூரிய பூஜை வழிபாடு என்பது எல்லா சிவாலயங்களிலும், தமிழ் மாதங்களில், குறிப்பிட்ட மூன்று நாட்கள்தான் நடைபெறுவது வழக்கம். ஆனால் இக்கோவிலில் மாசி மற்றும் ஐப்பசி மாதம் முழுவதும் சூரிய பூஜை நடைபெறுவது தனிச் சிறப்புடையதாகும்.

Read More
திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் கோவில்

தாயார் பெருமாளைத் தாங்கியிருக்கும் திவ்ய தேசம்

திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் (திரிவிக்கிரம நாராயணர்) திருக்கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று.இத்திருத்தலம் சீர்காழியில் அமைந்துள்ளது.மூலவர் திரிவிக்கிரம நாராயணர் (நின்ற திருக்கோலம்). உற்சவர் தாடாளன். தாயார் லோகநாயகி.

உரோமச முனிவர் தவமிருந்து பெருமாளின் திரிவிக்கிரம அவதாரக் காட்சி கண்ட திருத்தலம். மூலவர் திரிவிக்கிரமராக இடது காலைத் தலைக்கு மேல் தூக்கியபடியும் வலது கையை தானம்பெற்ற கோலத்திலும் இடக்கையை அடுத்த அடி எங்கே என ஒரு விரலைத் தூக்கியபடியும் அமைந்துள்ளார்.

பெருமாள் தன் மார்பில் மகாலட்சுமியைத் தாங்கியிருப்பது போல தாயார் லோகநாயகி, திரிவிக்கிரமரை பதக்கமாக தன் மார்பில் தாங்கியிருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு. திரிவிக்கிரம கோலத்தில் பெருமாள் ஒருபாதத்தை உயரத் தூக்கியபோது, பாதம் நோகுமே என்று அவரை பதக்கமாகத் தாயார் தாங்குவதாக மரபு. இத்திருத்தல தாயார் தரிசனம் காணும் பெண்கள் கணவரிடம் அன்பு காட்டுவர் என்பது ஐதீகம். பெண்கள் இவரை வணங்கினால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர்.

Read More
அமிர்தகடேசுவரர் கோவில்

அமிர்தகடேசுவரர் கோவில்

சனி பகவான் கழுகு வாகனத்துடன் இருக்கும் அபூர்வக் காட்சி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில், எய்யலூர் சாலையில் அமைந்துள்ள தேவாரத் தலம் மேலக்கடம்பூர். இறைவன் திருநாமம் அமிர்தகடேசுவரர். இறைவி வித்யூஜோதிநாயகி.

பொதுவாக சனி பகவான் காக வாகனத்துடன்தான் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் கருட வாகனத்துடன் அவர் இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.

சனி பகவானுக்கு ஆரம்ப காலத்தில் கழுகுதான் வாகனமாக இருந்தது. ராமரின் தந்தையான தசரதர், அவருக்கு கழுகுக்கு பதிலாக காகத்தை கொடுத்தார். இங்குள்ள சனி பகவான் கழுகு வாகனத்துடன் காட்சி தருகிறார். எனவே, இவர் ராமாயண காலத்திற்கும் முற்பட்டவர் என்கிறார்கள்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.

Read More
சந்திரமவுலீஸ்வரர் கோவில்
Amman, அம்மன் Alaya Thuligal Amman, அம்மன் Alaya Thuligal

சந்திரமவுலீஸ்வரர் கோவில்

திருவக்கரை வக்ரகாளியம்மன்

தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றான திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் ஆலயத்தில் உள்ளது வக்ரகாளியம்மன் சந்நிதி.

பொதுவாக காளி கோவில், ஊரின் எல்லையில்தான் இருக்கும். ஆனால் இங்கு ஊரின் நடுவில் ராஜ கோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகிலேயே அமைந்து, வித்தியாசமானதாக உள்ளது.

வக்கிரகாளியின் திருவுருவம் பிரமிப்பாக இருக்கிறது. சுடர் விட்டு பரவும் தீக்கங்குகளைப் பின்னணியாகக் கொண்ட தலை, மண்டை ஓட்டுக் கிரீடம், வலது காதில் சிசுவின் பிரேத குண்டலம் அணிந்திருக்கிறாள்.

காளியம்மனின் வலப்புறம் உள்ள நான்கு திருக்கரங்களிலும் மேலிருந்து முறையே பாசம், சக்கரம், வாள் மற்றும் கட்டாரி ஆகியவற்றை ஏந்தி காட்சித் தருகின்றாள். அதேபோல இடப்புறத்தில் மேலிருந்து முறையே உடுக்கை வைத்திருக்கும் பாவனையுடன் ஒரு திருக்கரம், அடுத்து கேடயம் மற்றும் கபாலம் ஏந்தியிருக்கும் இரு திருக்கரங்கள் மற்றும் இறுதியாக இடதுகாலை ஒட்டிக் கை விரல்களை லாவகமாக மடக்கி ஆள்காட்டி விரலால் அம்மன் தனது இடது பாதத்தைச் சுட்டிக்காட்டும் பாவனையில் அமைந்த திருக்கரம் என நான்கு திருக்கரங்களுடன் அருள்புரிகின்றாள். அன்னையின் மார்பிற்கு குறுக்கே மண்டை ஓட்டு மாலை காணப்படுகிறது. தர்மத்திற்கு எதிராக அக்கிரமம் செய்பவர்களை அழித்து அவர்களது மண்டை ஓடுகளை சேர்த்து மாலையாக அணிந்துள்ளாள்.

வக்கிரகாளி தலையை சற்று இடதுபுறமாக சாய்த்தபடி அமர்ந்த திருக்கோலத்தில் அருள்புரிகின்றாள். கோரைப் பற்களுடன் சினம் கக்கும் பெரிய உருண்டை விழிகளால் பூமியை நோக்குகின்றாள். அம்மன் வலது காலைச் சற்றே தூக்கி மடித்து அமர்ந்துள்ள பீடத்தில் ஊன்றியபடியும், இடது காலை தரையில் ஊன்றியபடியும் உடலை சற்று வலப்புறம் திருப்பிய நிலையில் அமர்ந் துள்ள காட்சி வேறு எங்கும் காணக்கிடைக்காத கண் கொள்ளாக் காட்சி ஆகும்.

வக்ராசூரன் என்ற அசுரனை வரதராஜப் பெருமாள் சம்காரம் செய்கிறார். அந்த வக்ராசூரனின் தங்கை துன்முகியை, வக்ர காளி சம்காரம் செய்யும் போது அந்த ராட்சசி துன்முகி கர்ப்பமாக இருந்தாளாம். குழந்தையை வதம் கூடாது என்பது தர்ம சாஸ்திரம். எனவே துன்முகியின் வயிற்றில் கருவிலுள்ள குழந்தையை காளி தனது வலது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு ராட்சசியை சம்காரம் செய்தாளாம். வக்கிராசூரனின் தங்கையை அழித்ததால் வக்ரகாளியாக அங்கேயே அமர்ந்து விட்டாள்.

சம்காரம் பண்ணியதால் வக்ரகாளி ஓங்காரமாக இருந்திருக்கிறாள். ஆதி சங்கரர் வந்து காளியை சாந்தம் செய்து இடது பாதத்தில் ஸ்ரீ சக்ர ராஜ எந்திரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார்.

ராகு கேது கிரகங்களுக்கு அதிதேவதை காளி என்பதால் இக்கோவிலை வலம் வர நினைப்பவர்கள் வலப்பக்கமாக ஐந்து முறையும், இடப்பக்கமாக நான்கு முறையும் வலம் வந்து தொழ வேண்டும் என்பது ஐதீகம்.

பவுர்ணமி இரவு, அமாவாசை நண்பகல் ஜோதி தரிசனம்

பவுர்ணமி இரவு 12 மணிக்கும் அமாவாசை பகல் 12 மணிக்கும் வக்ரகாளியம்மனுக்கு ஜோதி தரிசனம் காட்டும் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடுகிறார்கள். வக்ரகாளியம்மன் சன்னதியின் கோபுர மண்டபத்திற்கு மேல் சூடம் ஏற்றுவார்கள். அந்த தீபத்தை தரிசனம் காணுவது இத்தலத்தின் முக்கிய விசேஷம் ஆகும்.

Read More
பள்ளி கொண்ட பெருமாள் கோவில்
Perumal, பெருமாள் Alaya Thuligal Perumal, பெருமாள் Alaya Thuligal

பள்ளி கொண்ட பெருமாள் கோவில்

பெருமாள் பூலோகத்தில் விரும்பி வந்து பள்ளி கொண்ட இடம்

வேலூர்-பெங்களூரு நெடுஞ்சாலையில், வேலூரிலிருந்து 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பள்ளி கொண்டான். பெருமாள் பூலோகத்தில் விரும்பி வந்து பள்ளி கொண்ட இடம் என்பதால், இவ்வூர் 'பள்ளி கொண்டான்' எனப்பட்டது. பெருமாள் 'உத்தர ரங்கநாதர்' எனப்படுகிறார்.

பெருமாள் இங்கே தென்திசையில் முடியை வைத்து, வடதிசையில் திருப்பாதங்கள் நீட்டி ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ளார்..மார்பில் திருமகளும், நாபியில் பிரம்மனும், பாதங்களின் பக்கம் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி அளிக்கிறார் எம் பெருமான். திருக்கரம் 'வா' என்று பக்தர்களை, அன்போடு அழைக்கும் விதமாக அமைந்துள்ளது. மூலவரின் திருமேனி சாளக்கிராமத்தால் ஆனது. தனி சன்னதியில் தாயார் ரங்கநாயகி இருக்கிறார்.

பிரிந்த பிரம்மாவையும் சரஸ்வதியையும் இணைத்து வைத்த பெருமாள்

மகாலட்சுமிக்கும், சரஸ்வதிக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு தீர்ப்பு கூறும்படி இருவரும் பிரம்மனிடம் சென்றனர். மகாலட்சுமி தான் பெரியவர் என பிரம்மா தீர்ப்பு கூறினார். இதனால் சரஸ்வதிக்கு கோபம் ஏற்பட்டு, பூலோகத்திலுள்ள சாசிய மலையில் தனது நிலை உயர வேண்டி தவம் செய்யத் தொடங்கினாள். இந்நிலையில் பிரம்மா பெருமாளுக்கு சிறப்பு செய்வதற்காக ஒரு யாகம் தொடங்கினார். நியதிப்படி யாகத்தை தம்பதி சமேதராக நடத்த வேண்டும். ஆனால், சரஸ்வதி யாகத்திற்கு வர மறுத்தாள். எனவே பிரம்மா, சரஸ்வதியின் அம்சமாக ஒரு பெண்ணைப் படைத்து, அவளுக்கு சாவித்திரி என பெயர் சூட்டி, அவளையே மணந்து யாகத்தை தொடங்கினார்.

இதனால் மேலும் கோபமடைந்த சரஸ்வதி, பிரம்மன் ஆரம்பித்த இந்த யாகத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 'க்ஷீரநதி' என்ற பெயரில் நதியாக மாறி, வெள்ளப்பெருக்கெடுத்து யாக குண்டத்தை உடைக்கும் நோக்கத்தில் ஓடிவந்தாள். இதனால் பிரம்மா, பெருமாளின் உதவியை நாடினார். பெருமாள், சரஸ்வதியை சமாதானம் செய்தார். முன்னதாக, அவர் நதியின் ஓட்டத்தை தடுக்க, ஆதிசேஷனை நதியின் குறுக்கே படுக்க வைத்து, அதில் சயனித்தார். பின்னர், பிரம்மா யாகத்தை சிறப்பாக முடித்தார். சரஸ்வதியும் சாவித்திரியும் ஒன்றே என்பதை விளக்கிய பெருமாள், அவளை பிரம்மனுடன் மீண்டும் இணைத்து வைத்தார்.

பெருமாளுக்கு உதவியாக வைகுண்டத்தில் இருந்து வந்த ஆதிசேஷன், இத்தலத்தில் தான் முதல்முறையாக அவரைத் தன்னில் சயனிக்க வைத்தார் என்கிறது தலபுராணம். பின்னர் பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டதால், இத்தலத்து ஆறுக்கும் 'பாலாறு' என்று பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் ஒருநாள் இரவு தங்கி பெருமாளை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என பிரமாண்ட புராணம் கூறுகிறது.

அந்நியர் படையெடுப்பின் போது, இங்குள்ள ரங்கநாதர் மறைக்கப்பட்டு, சிறிய ரங்கநாதர் சிலை செய்து, கோயில் பாதுகாக்கப்பட்டது. இன்றும் கூட சிறிய ரங்கநாதருக்கும் பூஜைகள் செய்யப்படுகிறது. இவர் 'சோட்டா ரங்கநாதர்' எனப்படுகிறார்.

பிரிந்த தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய தலம்

இத்தலத்தில் நிறைய திருமணங்கள் நடக்கின்றன. இங்கு திருமணம் செய்து கொண்டால், தம்பதியர் மனமொத்து வாழ்வர் என்பது நம்பிக்கை. திருமணமாகாதவர்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து பள்ளிகொண்ட பெருமாளை வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பதும் இத்தலத்தில் திருமணம் செய்துகொள்ளுபவர்கள் பதினாறு பேறுகளையும் பெற்று பெருவாழ்வு வாழ்வர் என்பதும் ஐதீகம். தடைபடும் திருமணங்கள் சிறப்பாக நடக்கவும், பிரிந்த தம்பதியர் ஒன்றாக சேரவும் இங்கு பிரார்த்திக்கிறார்கள்.

Read More
சூரியகோடீசுவரர் கோவில்

சூரியகோடீசுவரர் கோவில்

சூரிய பகவான் அனுதினமும் தன் ஒளிக்கதிர்களால் சிவபெருமானை ஆராதனை செய்யும் தலம்

கும்பகோணத்தில் இருந்து, கஞ்சனூர், திருலோகி கிராமங்களை அடுத்து 15.கி.மீ தொலைவில், சூரியனார் கோவிலுக்கு அருகே அமைந்துள்ளது கீழசூரியமூலை என்ற தலம். இறைவன் திருநாமம் சூரியகோடீசுவரர். இறைவி பவளக்கொடி. கருவறையில் ஈசுவர லிங்கத்திற்கு மேல் ஓராயிரத்திற்கு மேலான 'ஏகமுக'

சூரிய பகவான் அனுதினமும் தன் ஒளிக்கதிர்களால் சிவபெருமானை ஆராதனை செய்யும் தலம்

கும்பகோணத்தில் இருந்து, கஞ்சனூர், திருலோகி கிராமங்களை அடுத்து 15.கி.மீ தொலைவில், சூரியனார் கோவிலுக்கு அருகே அமைந்துள்ளது கீழசூரியமூலை என்ற தலம். இறைவன் திருநாமம் சூரியகோடீசுவரர். இறைவி பவளக்கொடி. கருவறையில் ஈசுவர லிங்கத்திற்கு மேல் ஓராயிரத்திற்கு மேலான 'ஏகமுக' ருத்திராட்சத்தினால் ஆன பந்தல் உள்ளது.

சூரியனுக்கு மூலாதார சக்தியை கொடுத்ததால் சூரிய மூலை என இத்தலம் அழைக்கப்பட்டது. சூரியனார் கோவிலில் தன் குஷ்ட நோய் நீங்கப் பெற்ற சூரியன், இத்தலத்தில் தன் முழு சக்தியையும் பெற்றார்

சூரிய கோடீஸ்வரரை காலை முதல் மாலை வரை சூரியபகவான் தனது பொற்கரங்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். அதற்கு ஏற்ப காலை சூரிய உதயம் முதல், மாலை சூரிய அஸ்தமனம் வரை மூலவரின் நிழல் சுவரில் தெரியும். மற்ற நேரங்களில் தெரிவதில்லை. பல ஆலயங்களில் கருவறை இறைவன் மீது ஓர் ஆண்டில் சில நாட்கள் மட்டுமே சூரிய ஒளி படரும். இப்படி ஒளி படுவதை சூரியன் செய்யும் சிவபூஜை எனக் கூறுவர். ஆனால், இந்த ஆலய இறைவன் மீது தினம் தினம் கதிரவனின் பொற் கதிர்கள் சில நிமிடங்களாவது படர்ந்து செல்வது அற்புதம் ஆகும்.

சூரிய பகவான் பிரதோஷ வழிபாட்டின் பலனைப் பெற்ற தலம்

ஒரு சமயம் சூரிய பகவானுக்கு அனைத்து உலகங்களிலும் உள்ளவர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு பயன் அடைவதைக் கண்டு, தன்னால் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் ஏற்பட்டது. பிரதோஷ நேரம் என்பது தினசரி மாலைப் பொழுது. சூரியன் மறையும் நேரம் அது என்பதால் சூரியனால் அந்த வழிபாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. மேலும் பிரதோஷ நேரம் தன்னுடைய பணி நேரம் என்பதால், அந்த வழிபாட்டில் தன்னால் நிரந்தரமாக எப்போதுமே கலந்து கொள்ள முடியாமல் போய்விடுமே என எண்ணி வேதனை அடைந்தார். தன் வேதனையையும் வருத்தத்தையும் தன் சீடனான யக்ஞவல்கிய மாமுனியிடம் எடுத்துரைத்தார் சூரிய பகவான்.

சூரியபகவானிடமிருந்து வேதங்களைக் கற்றவர் யக்ஞவல்கியர். சூரிய பகவானின் வருத்தத்தைக் கேட்ட மாமுனி அவருக்கு ஆறுதல் கூறினார். பின், தான் தினந்தோறும் வழிபடுகின்ற இறைவனான சூரியகோடீஸ்வரரிடம் தன் குருவின் கவலையை எடுத்துரைத்து, தன் குருவின் வேதனையை தீர்த்து வைக்கும்படி வேண்டினார். சூரிய பகவானிடமிருந்து தான் கற்றுக் கொண்ட வேதங்கள் அனைத்தையும் பாஸ்கரச் சக்கர வடிவில் செய்து அவற்றின் பலன்களைப் பொறித்து சூரிய கோடீஸ்வரருடைய பாதங்களில் காணிக்கையாகச் அர்ப்பணித்தார். அப்படி அவர் சமர்பித்த வேதமந்திர சக்திகள் ஒன்று சேர்ந்து இலுப்பை மரமாக வளர்ந்து, பின்னர் அந்த இடமே இலுப்பை மரக் காடாகியது. மாமுனிவர் இலுப்பை மர விதைகளிலிருந்து எண்ணெய் எடுத்து மாலை வேளைகளில் கோடி தீபங்கள் ஏற்றி சூரியகோடீசுவரரை வழிபட ஆரம்பித்தார்.

பிரதோஷ காலத்தில் ஏற்றி வைத்த தீபங்கள் அப்படியே சுடர்விட்டுக் கொண்டடிருக்க, மறுநாள் காலையில் உதித்தெழுந்த சூரியபகவான் அந்த கோடி தீபங்களைக் கண்டு வணங்கி பிரதோஷ வழிபாட்டின் பலனைப் பெற்றார்.

கண் பார்வை பாதிக்கப்பட்டவர்கள் வழிபட வேண்டிய தலம்

சூரிய தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள இறைவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கும். நிம்மதி கிடைக்கும். ஒரு கண் பார்வை, மாறுகண் பார்வை, மங்கலான கண் பார்வை, பார்வை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இத் தலத்திற்கு வந்து சூரிய கோடீஸ்வரரை வழிபட்டால் பலன் பெறுவது கண்கூடான நிஜம். இக்கோயிலில் அன்னதானம் செய்தால், முன்னோர்களுக்கு நாம் செய்த பாவங்களும், அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகும்.

Read More
சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

சுப்பிரமணிய சுவாமி கோவில்

பச்சைமலை முருகனின் பரவசப் புன்னகை

ஈரோடு மாவட்டம், கோபிச் செட்டிப்பாளையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்.

பச்சைமலை மூலவர் பால தண்டயுதபாணியாகக் காட்சி தருகிறார். பச்சைமலை மூலவரின் புன்னகை நம்மை பரவசப்படுத்தும் சிறப்பு உடையது. பழனியை போன்றே இங்கு மூலவர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். மேற்கு நோக்கிய முருகன் திருத்தலங்கள் மிகவும் அரிது.

பச்சைமலை முருகன் கோவில் வரலாறு

முன்னொரு காலத்தில் துர்வாச முனிவர் ஒருமுறை கொங்கு நாட்டிற்கு எழுந்தருளினார். குன்னத்தூர் அருகே வந்து, சிவ பூஜை செய்ய சரியான இடத்தை தேட முற்பட்டார். அப்போது, கோபி அருகே அமைந்துள்ள மொடச்சூர் என்னும் ஊர் தான் சிவ பூஜை செய்ய சரியான இடம் என்பதை ஞான திரிஷ்டியால் உணர்ந்து அங்கு வந்து சிவ பூஜை செய்ய முற்படுகிறார். அப்போது குறை தீர்க்கும் குமரக் கடவுளை காண எண்ணி அவரது மனம் பூஜையில் திளைக்க மறுக்கிறது. குறை தீர்க்கும் குகனை எண்ணி தவத்தால் அருகில் உள்ள பச்சைமலை ( மரகதாச்சலம்/ மரகதகிரி) என்னும் குன்றை அறிகிறார். அங்கு அவருக்கு பாலதண்டாயுதபானியாக முருகன் காட்சி அளிக்கிறார். அவரின் வேண்டுகோளை ஏற்று இறைவன் பச்சைமலையில் நிலையாகக் குடிகொள்கின்றான். துர்வாசர் முருகனை மேற்கு நோக்கி பிரதிஷ்டை செய்கிறார்.

கால ஓட்டத்தில், மரகதாச்சலத்தின் மகிமையை உலகம் மறந்தது. கோவில் மிகவும் பாழடைந்தது. அப்போது குப்புசாமி கவுண்டர் என்ற பக்தர் இறைவனை தரிசிக்க வருகிறார். அவருக்கு ஜோதி வடிவாக அருளிய முருகன், தன் கோவிலை பராமரிக்குமாறு அவருக்கு அசரீரியாக ஆணை பிறப்பிக்கிறார். இறைவனின் ஆணை ஏற்று பூஜைகள் தொடங்கப்பட்டது. பக்தர்களால் இணைந்து திருப்பணிகள் பல செய்யப்பட்டது. இன்று மீண்டும் மரகதாச்சலபதியாகிய பச்சைமலை பாலமுருகன், தமிழகமெங்கும் உள்ள முருக பக்தர்களால் கொண்டாடப்படுகிறான்.

தாரா அபிஷேகம்

இத்தல மூலவருக்கு தாரா அபிஷேகம் செய்வது பிரசித்தமான வழிபாடுகளில் ஒன்று. 108 லிட்டர் பால் கொண்டு 11 முறை ருத்ரம் ஓதி செய்யப்படும் இந்த வழிபாட்டால் நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வு கிடைக்கிறது.

இத்தல முருகனை வணங்கினால் திருமணம் கைக்கூடும்.அதே போல குழந்தை பேறு வேண்டி நிற்கும் தம்பதிகள் கந்தசஷ்டி விரதமிருந்து வழிபட, குழந்தை பாக்கியம் அருள்கிறான் குமரன். இந்த விரதத்திற்காக வருடத்திற்கு சுமார் 5000 பேர் இத்தலத்தில் காப்புக் கட்டிக் கொண்டு விரதமிருக்கிறார்கள்.

பங்குனி உத்திரத்தன்று மும்மூர்த்தியாகத் திகழும் முருகன்

பங்குனி உத்திர கல்யாண உற்சவத்தின் போது சிவப்பு சாத்தி உற்சவம் நடைபெறுகிறது. அன்று ஷண்முகர் திருசெந்தூரை போலவே நடராஜராகவும் காட்சி அளிப்பார். அன்றைய தினம் இரவு வெள்ளை சாத்தி உற்சவமும், மறுநாள் பங்குனி உத்திரத்தன்று பச்சை சாத்தி உற்சவமும் நடைபெறும். முருகன் தானே சிவன், பிரம்மா , விஷ்ணுவாகத் திகழ்வதை உணர்த்தவே இவ்வலங்காரங்கள் செய்யப்படுகின்றது.

Read More
செந்நெறியப்பர் கோவில்

செந்நெறியப்பர் கோவில்

கடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறை ருண விமோசனர்

கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில்அமைந்துள்ள தேவாரத் தலம் திருச்சேறை. இறைவன் திருநாமம் செந்நெறியப்பர்.

இங்கு தனி சன்னதியில் 'ருண விமோசனராய்' அருள்பாளிக்கிறார் பரமேஸ்வரன். தொடர்ந்து 11திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்ய, அனைத்து வித கடன் தொல்லைகளும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இச் சன்னதியின் முன் நின்று"கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே" எனமனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.

ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்த்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள 'ருணவிமோசன லிங்கேஸ்வரர்'. ருணவிமோசனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால், வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும்.

Read More
சூரியகோடீசுவரர் கோவில்

சூரியகோடீசுவரர் கோவில்

பைரவரின் கழுத்தில் சிவப்பு ஒளி வெளிப்படும் அற்புதம்

கும்பகோணத்தில் இருந்து 15.கி.மீ தொலைவில், சூரியனார் கோவிலுக்கு அருகே மைந்துள்ளது கீழசூரியமூலை என்ற தலம். இறைவன் திருநாமம் சூரியகோடீசுவரர். இறைவி பவளக்கொடி.

இக்கோவிலில், சுவாமி மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் பைரவர், சூரியன் திருமேனிகள் உள்ளன. இங்குள்ள பைரவர், சொர்ண பைரவர், என அழைக்கப்படுகிறார். இந்த பைரவருக்கு தீபாராதனை காட்டும்போது அவரது கண்டத்தில் (கழுத்தில்) பவளமணி அளவில் சிவப்பு ஒளி வெளிப்படுவதும், அது மெல்ல அசைவதும் மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி.

இந்த பைரவர் தன் கழுத்துப் பவளமணியின் ஏழு ஒளிக் கிரணங்களின் மூலம் அனைத்து கோடி சூரிய, சந்திர மூர்த்திகளின் ஒளிக் கிரணங்களால் ஏற்படும் தோஷங்களையும், பிணிகளையும் நிவர்த்தி செய்கிறார். தவிர பணத்தட்டுப்பாடு, வறுமையைப் போக்கக் கூடியவர். இந்த பைரவர் என்ற நம்பிக்கையும் உண்டு.

இந்த பைரவரின் கண்டப்பகுதி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுவதும், பின் பழைய நிலையை அடைவதும் இததலத்தின் சிறப்பு. இத் தலத்தின் பைரவரை தரிசனம் செய்தால் பக்தர்களின் கண்டம் நீங்குமாம்.

Read More