
ஆத்மநாதசுவாமி கோயில்
ஆவுடையார் மட்டுமே உள்ள சிவாலயம்
வித்தியாசமான அம்சங்கள் உள்ள சிவாலயம்
சிவாலயங்களில் உள்ள சிவலிங்கம் இரண்டு பகுதிகளால் ஆனது. கீழ்ப்பகுதி ஆவுடையார் என்றும் மேல்பகுதி பாணம் என்றும் கூறப்படும். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் என்னும் தலத்தில் உள்ள ஆத்மநாதசுவாமி கோவில் மூலவர் சன்னதியில், ஆவுடையார்(லிங்கத்தின் கீழ் பகுதி) மட்டுமே உள்ளது. மேல் பகுதியான பாணம் கிடையாது. இங்கு பாணம் அரூபமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்தலத்து அம்பிகை யோகாம்பிகை, அரூபமாக இருப்பதால் அம்பிகைக்கு திருவுருவம் இல்லை. அவள் தவம் செய்த போது, பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடக்கிறது. இந்த பாதத்தைப் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, கண்ணாடியில் பாதம் பிரதிபலிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவளது சன்னதி எப்போதும் அடைத்தே இருக்கும் என்பதால், சன்னதி முன்புள்ள கருங்கல் பலகணி வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும். மேலும் மற்ற சிவாலயங்களில் இருப்பது போல நந்தி, கொடிமரம், பலிபீடம் போன்றவை இங்கு கிடையாது.
சிற்பக்கலையின் பொக்கிஷம்
இத்தலத்து சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த கலைநயம் உடையவை. முற்காலத்தில் சிற்பிகள் தங்கள் சிற்ப வேலைக்கு ஒப்பந்தம் போடும்போது, ஆவுடையார் கோவில் கொடுங்கை தாரமங்கலம் தூண், திருவலஞ்சுழி பலகணி போன்ற வேலைப்பாடுகளை தவிர வேறு எந்த சிற்ப வேலைப்பாடுகளையும் தங்களால் செய்ய முடியும் என்று உறுதி அளிப்பார்களாம்.
கோவிலின் தாழ்வாரத்திலுள்ள கொடுங்கைகள் (Raft),எப்படி ஒரு வீட்டில் கொடுங்கைகளை, தேக்கு மரச் சட்டங்களை இணைத்து அதன் மீது மெல்லிய ஓடு வேய்ந்திருப்பார்களோ, அதேபோல அத்தனை அம்சங்களையும் கல்லிலே வடிவமைத்து இருப்பது காண்போரை வியக்க வைக்கும். இந்த கொடுங்கைக்கூரையில், கற்கள் எப்படி எந்த இடத்தில் இணை சேர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டரையடி கனமுள்ள கற்களை இப்படி தாழ்வாரக் கூரையாக்கி, அவற்றை செதுக்கிச் செதுக்கி ஒரு அங்குல கனமுள்ள மேலோடு அளவிற்குச் மெல்லிய தாக்கியிருப்பது, சிற்பக் கலையின் உச்சக்கட்ட திறனாகும்.
தற்கால நாகரீகப் பெண்கள் அணியும் நவீன அணிகலன்கள், தங்க நகைகள், சங்கிலிகள் போன்ற விதவிதமான வடிவமைப்பு உள்ள அணிகலன்கள், இங்குள்ள சிற்பங்களில் காணப்படுவது நம்மை பிரமிக்க வைக்கும். சுருங்கச் சொன்னால் இத்தலமானது சிற்பக்கலையின் பொக்கிஷமாகும்.

சூரியனார் கோவில்
நவகிரகங்கள் தனித்தனி மூலவராக இருக்கும் தலம்
கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள ஆடுதுறை என்ற ஊருக்கருகில் இருக்கும் தலம், சூரியனார் கோவில். தமிழகத்தில் சூரியனுக்கான தனிக்கோவில் அமைந்துள்ளதும், ஒரே கோவிலுக்குள் நவகிரகங்களுக்கும் தனித்தனி கர்ப்பக்கிரகம் அமைந்திருப்பதும் இத்தலத்தின் தனிச்சிறப்பு. நவகிரகங்களையும் முதலில் இடமாக சுற்றி வந்து பின்னர் ஒன்பது முறை வலம் வரும்படி இத்தலத்தின் அமைப்பு உள்ளது. ஒரே கோவிலில் ஒன்பது கிரகங்களுக்கும் தோஷ பரிகாரங்கள் செய்யும்படி உள்ள தலம். தனித்தனி மூலவராக இருக்கும் இந்த நவகிரகங்களின் சன்னதிகள், இரண்டு அசுப கிரகங்களுக்கு இடையில் ஒரு சுப கிரகம் என்ற வரிசை முறையில் அமைந்திருக்கின்றன.

பூமீஸ்வரர் கோவில்
மனிதரைப் போல ரோமம், மச்சம், ரேகை, நகம் ஆகிய அம்சங்கள் உடைய நடராஜர்
திருவிடைமருதூரில் இருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் கோனேரிராஜபுரம். இறைவன் பெயர் பூமீஸ்வரர். இறைவி தேகசௌந்தரி. இங்குள்ள நடராஜர் ஆறடி உயரத்தில், மிக அழகாகவும் கம்பீரமாகவும் காணப்படுகிரார். இத்தல நடராஜருக்கு மனிதருக்கு இருப்பது போலவே ரோமம்,மார்பில் மருவும், உடலில் கொழுப்புக் கட்டியும், கையில் மச்சம், கைவிரல் ரேகைகள், நகம் போன்ற அம்சங்கள் இருப்பது அதிசயமாகும். .
இந்த நடராஜர் விக்ரகத்தை அமைக்கும்படி சிவபெருமான், சோழ மன்னனின் கனவில் வந்து உரைத்தார் மன்னன் தன் சிற்பியிடம் பஞ்சலோக நடராஜர் விக்கிரகம் ஒன்றை, வடித்துத் தர உத்தரவிட்டான் மேலும் அதற்கு காலக்கெடு விதித்து, அதற்குள் சிலையை வடிக்கவில்லை என்றால், தலையை துண்டித்து விடுவதாகவும் எச்சரித்தான்.
சிற்பி, தனது பணியைத் தொடங்கினார். எவ்வளவு முறை செய்தாலும், அதில் ஏதேனும் ஒரு குறை ஏற்பட்டு, சிலையை வடிக்க முடியாமல் போனது. மன்னன் குறித்த காலக் கெடு நெருங்க, நெருங்க, சிற்பி கவலை அடைந்தார்,. இறுதி முயற்சியாக, ஒரு நாள் சிற்பி கொதித்துக் கொண்டிருக்கும் உலோக கூழை தான் செய்துள்ள அச்சில் ஊற்றுவதற்குத் தயாரானார். அப்போது சிவபெருமான் புலையன் உருவத்தில், கையில் நான்கு வேதங்களையும் நாய்களாக பிடித்துக் கொண்டு வந்தார். அவருடன் அம்பிகை தலையில் கள் குடத்தை சுமந்தபடி முருகப்பெருமானை சிறு குழந்தையாக இடுப்பில் ஏந்தியபடி தோன்றினாள்.
சிவனும், அம்பிகையும் சிற்பியிடம் வந்து தண்ணீர் கேட்டனர். சிற்பியோ, ‘இங்கு தண்ணீர் இல்லை. வேண்டுமென்றால் உலோகக் கூழ் இருக்கிறது, அதைக் குடியுங்கள்’ என்று அதைத் தம்பதிகளிடம் நீட்டினார். அவர்களும் அதனை வாங்கிப் பருகி நடராஜர் சிலையாகவும்,, சிவகாமி அம்பாள் சிலையாகவும் மாறிப் போனார்கள். அப்போது அங்கு வந்த மன்னன் சிலையைப் பார்த்தான். நடராஜரின் சிலையில் நகங்கள், உரோமங்கள் என உயிரோட்டமாக இருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்த மன்னன்
சிற்பியைக் கேட்டான். சிற்பியும் நடந்ததைக் கூறினார். சிற்பி பொய் கூறுவதாக நினைத்த மன்னன், அவரை வெட்ட வாளை ஓங்கினான். அப்போது வாள் சிலையின் காலில் பட, அதில் இருந்து ரத்தம் பீறிட்டது. அதே நேரம் மன்னனுக்கும் தொழுநோய் உண்டானது. தன் தவறை உணர்ந்த மன்னன், ஈசனிடமும், சிற்பியிடமும் மன்னிப்பு கேட்டான். தன் நோய் குணமாக ஈசனிடம் பரிகாரமும் கேட்டான். மன்னன், ஈசன் கூறிய பரிகாரத்தைச் செய்து குணமடைந்தான். மன்னனின் வாளால் ஏற்பட்ட காயத்தை நடராஜரின் வலது திருப்பாதத்தில் இன்றும் காணலாம். கூடவே கையில் மச்சம், கைவிரல் ரேகைகள் இத்தல நடராஜர் உயிரோட்டமுள்ளவர் என்பதையும் சொல்கின்றன.

அருணாச்சலேஸ்வரர் கோயில்
வீதி உலாவின் போது ராஜகோபுரத்தை தவிர்க்கும் இறைவன்
பொதுவாக ஆலயங்களில் வீதி உலா நடக்கும் பொழுது. சுவாமி ஆலயத்தின் பிரதான ராஜகோபுரத்தின் வழியாகத்தான் வெளியே வருவார். ஆனால் பஞ்சபூத தலங்களில், அக்னித் தலமான திருவண்ணாமலையில், சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார். இந்த நடைமுறை வேறு எந்த ஆலயங்களிலும் கடைடிக்கப்படுவதில்லை

திருக்காமீசுவரர் கோவில்
சுகப்பிரசவம் அருளும் பிரசவ நந்தி
புதுவை மாநிலத்தின் பெரிய கோவில் என பெருமை கொண்டது வில்லியனூர் திருக்காமீசுவரர் கோவில். இக்கோவிலின் மற்றொரு சிறப்பு, இங்குள்ள சுகப்பிரசவ நந்தி ஆகும். அம்மன் சன்னிதியை(வடக்கு திசை) நோக்கியவாறு இந்தப் பிரசவ நந்தி அமைந்துள்ளது. சுகப்பிரசவம் விரும்பும் எவரும், இங்கு வந்து, மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்து கொண்டு, இந்தப் பிரசவ நந்தியை அம்மன் பார்க்கும் தென்திசை நோக்கி(அதாவது நந்தியின் இயல்பு திசைக்கு எதிர் திசையில்)திருப்பி வைத்துவிட வேண்டும். பிரசவ நந்தியின் அருளால் நிச்சயமாக அந்தப் பெண்ணுக்கு சுகப்பிரசவம் நடந்துவிடும். அதன்பிறகு, குழந்தையும், தாயும் இவ்வாலயம் வந்து பிரசவ நந்திக்கு சிறிய அளவில் அபிஷேகம் செய்து, அந்த நந்தியை, அம்மனை நோக்கிய வடக்கு திசையில், அதாவது அதன் இயல்பு நிலைக்குத் திரும்பி வைத்துவிட வேண்டும். இதுவே சுகப்பிரசவத்திற்கான பரிகாரமும், நன்றிக்கடனும், ஆகும்.

அரசலீஸ்வரர் கோவில்
சிவலிங்கத்திற்கு தலைப்பாகை அணிவித்துப் பூஜை செய்யும் தேவாரத்தலம்
விழுப்புரம் மாவட்டம் ஒழிந்தியாப்பட்டு, தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலமாகும்.இறைவன் பெயர் அரசலீஸ்வரர். இங்கு சுவாமி 108 ருத்ராட்ச மணிகள் சேர்ந்த ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்க விடிவில் சிறிய மூர்த்தியாக அருளுகிறார். லிங்கத்தின் தலையில் அம்பு பட்ட காயம் இருக்கிறது. இந்த காயத்தை மறைப்பதற்காகவும், சிவனுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் லிங்கத்திற்கு மேலே தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்கின்றனர்.

பலாசவனேஸ்வரர் கோவில்
பலாப்பழம் போன்ற திருமேனியை உடைய சிவலிங்கம்
தஞ்சை மாவட்டம் திருச்சேறை அருகே உள்ளது நாலூர். இத்தலத்து இறைவன் பெயர் பலாசவனேஸ்வரர். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாபழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. இத்தலம் தேவார வைப்புத்தலமாகும். தேவார வைப்புத் தலங்கள் என்பவை தேவாரத்தில் தனிப்பாடல்களாகப் பாடப்பெறாமல், வேற்றூர் பதிகத்தின் இடையிலும், பொது பதிகத்தின் இடையிலும் குறிப்பிடப்படும் தலங்களாகும்.

அர்த்தநாரீஸ்வரர் கோவில்
இனிப்பு,புளிப்பு என இரட்டை சுவையுடன் விளங்கும் தலவிருட்சம்
தென்காசிக்கு அருகில் உள்ள வாசுதேவநல்லூர்.அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், சிவபெருமானும் பார்வதியும் இணைந்து அர்த்தநாரீஸ்வர கோலத்தில் காட்சி கொடுக்கிறார்கள், புளிய மரங்கள் நிறைந்த வனத்தில் சிவன் காட்சி தருவதால், சிந்தாமணிநாதர் என்று அழைக்கப்படுகிறார். புளிய மரத்திற்கு சிந்தை மரம் என்றும் பெயர் உண்டு. இத்தலத்தின் விருட்சமும் புளியமரம் ஆகும். இம்மரத்தின் பழங்கள் இனிப்பு, புளிப்பு என இரட்டைச் சுவையுடன் இருப்பது சிறப்பம்சம். பிரிந்திருக்கும் தம்பதியர் இங்கு வேண்டிக்கொள்ள, மீண்டும் இணைவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நீலகண்டேஸ்வரர் கோயில்
அபிஷேக எண்ணெயை உறிஞ்சும் அதிசய சிவ லிங்கம்
தஞ்சை மாவட்டம் திருநீலக்குடியில் உள்ளது தேவாரப்பாடல் பெற்ற நீலகண்டேஸ்வரர் திருக்கோவில். இங்குள்ள சிவனுக்கு நல்லெண்ணெய் கொண்டு பிரத்யேகமாக அபிஷேகம் நடக்கிறது. தினமும் பாத்திரம் பாத்திரதமாக எவ்வளவு எண்ணெயை ஊற்றினாலும் அவ்வளவு எண்ணெயையும் இங்குள்ள சிவ லிங்கம் தன்னுள்ளே உறிஞ்சிக்கொள்கிறது. அடுத்தநாள் மீண்டும் அபிஷேகம் செய்வதற்கு முன்பு சிவ லிங்கத்தை பார்த்தால், பல வருடங்களாக எண்ணெயே தடவாதது போல் மிகவும் வறண்டு காணப்படுகிறது. சிவபெருமான் அருந்திய ஆலகால விஷம் அவர் தொண்டையிலேயே தங்கி இருப்பதால்,அந்த விஷத்தன்மையை குறைக்கவே இவருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது ஐதீகம்

ரிஷபேஸ்வரர் கோவில்
தங்க நிறமாக மாறும் நந்தி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் என்ற ஊரில், ரிஷபேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பங்குனி மாதம் மூன்றாம் நாள் மாலை சூரிய அஸ்தமனத்தின் போது, சூரிய ஒளிக்கதிர்கள் இராஜ கோபுரத்தின் மேல் பட்டு நந்தியின் மேல் விழும். அப்படி சூரிய ஒளி விழும் சில நிமிடங்கள், நந்தி தங்க நிறமாக மாறி காட்சியளிக்கும்.

கடம்பவனேசுவரர் கோயில்
கருவறையில் சிவபெருமானுடன் காட்சி தரும் சப்த கன்னியர்கள்
பொதுவாக சப்த கன்னியர்களுக்கு கோவில்களில் உபசன்னதி அமைந்திருக்கும். சில இடங்களில் சப்த கன்னியர்களுக்குத் தனியாக கோவில் அமைந்திருக்கும். ஆனால், கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில், சப்த கன்னியர்கள் மூலவர் கடம்பவனநாதரின் பின்புறம் அமர்ந்திருக்கிறார்கள். இதுபோல மூலஸ்தானத்தில் சப்த கன்னியர்கள் மற்ற தெய்வங்களுடன் இருப்பது போன்ற அமைப்பு வேறு எங்கும் காண முடியாது.
பாடலீஸ்வரர் கோவில்
சிவன் சன்னதியில் பள்ளியறை
அனைத்து சிவ ஆலயங்களிலும், அம்பாள் சன்னதியில்தான பள்ளியறை அமைந்திருக்கும். ஆனால் தேவாரப் பாடல் பெற்ற திருப்பாதிரிப்புலியூர் (கடலூ்ர்) சிவாலயத்தில் பள்ளியறை சிவன் சன்னதியில் உள்ளது, இங்கு மற்ற ஆலயங்களைப் போல சுவாமி அம்மனின் சன்னதியிலுள்ள பள்ளியறைக்கு எழுந்தருள்வதற்கு பதிலாக, அம்மன் தானே சிவன் சன்னதியி லுள்ள பள்ளியறைக்கு எழுந்தருள்கிறாள்.
கபாலீசுவரர் கோயில்
இரண்டு கொடிமரங்கள் அமைந்த தேவாரத்தலம்
பொதுவாக ஆலயங்களில் ஒரு கொடிமரம்தான் இருக்கும்.ஆனால் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில்,சுவாமி சன்னதிக்கு எதிராக ஒரு கொடிமரமும் சிங்காரவேலர் சன்னதிக்கு எதிராக மற்றொரு கொடிமரமும் என இரண்டு கொடிமரங்கள் அமைந்துள்ளன.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
கால் மாற்றி ஆடும் நடராஜப் பெருமான்
நடராஜப் பெருமான் பொதுவாக தன் வலது காலை முயலகன் மீது ஊன்றி இடது காலைத் தூக்கி ஆடும் கோலத்தில் தான் எல்லா சிவாலயங்களிலும் காட்சி தருவார்.ஆனால் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், ஒரு பாண்டிய மன்னன் ஒரே காலில் நிற்பது நடராஜப் பெருமானுக்கு வலிக்குமே என்று ஆதங்கப் பட்டதால்,தன் இடது காலை முயலகன் மீது ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடும் கோலத்தில், வெள்ளியம்பலத்தில் காட்சி தருகிறார்.

தில்லை நடராசர் கோயில்
சிதம்பரத்து பொன்னம்பலத்திற்கும் நமது உடலுக்கும் உள்ள ஒற்றுமைகள்
சைவ உலகில் கோவில் என்றால் அது சிதம்பரத்தைத்தான் குறிக்கும். சிவபெருமானின் ஐந்து சபைகளுள் ஒன்றான பொற்சபை உள்ள தலம்.
பஞ்ச பூதத் தலங்களுள் ஆகாயத் தலம்.பொன்னம்பலத்தில் சிவபெருமான் நடராசர் திருக்கோலத்துடன் காட்சி தருகிறார்.
இந்த பொன்னம்பலத்திற்கும் நமது உடலுக்கும் ஒற்றுமைகள் உள்ளன. பொன்னம்பலத்தின் மேலே உள்ள ஒன்பது தங்கக் கலசங்கள் 9 சக்திகளைக் குறிக்கின்றன. இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள 64 மரத்துண்டுகள் 64 கலைகளையும், இதில் வேயப்பட்டுள்ள 21,600 ஓடுகள் ஒரு நாளில் நாம் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றினையும், இவற்றில் அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள் நம் உடலில் உள்ள நரம்புகளின் எண்ணிக்கையையும் குறிக்கும். இக்கோயிலில் மட்டும் கருவறை இடதுபுறம் உள்ளது. அதேபோல் நமது உடம்பில் இதயம் இடப்புறத்தில்தான் உள்ளது.
சகல தீர்த்தமுடையவர் கோவில்
விசேடத் தீர்த்தம்
இராமநாதபுர மாவட்டம் தொண்டியிலிருந்து 15 கீ.மீ. தொலைவிலுள்ள தலம்தான் தீர்த்தாண்டதானம். இத்தலத்து இறைவன் சகல தீர்த்தமுடையவர்.இறைவி பெரியநாயகி. இத்தலத்து தீர்த்தமான கடலில் நீராடி பின்னர் இறைவனை வழிபட்டால் 64000 தீர்த்தங்களில் நீராடிய புண்ணியமும், பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம்.