கும்பகோணம் தசாவதாரப் பெருமாள் கோவில் (ஸ்ரீ சரநாராயணப் பெருமாள் சன்னதி)
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கும்பகோணம் தசாவதாரப் பெருமாள் கோவில் (ஸ்ரீ சரநாராயணப் பெருமாள் சன்னதி)

பெருமாள் சங்கு, சக்கரத்தினை கை மாற்றி ஏந்தி இருக்கும் அபூர்வ காட்சி

பெருமாளின் பின்புறம் தசாவதார மூர்த்திகள் இருக்கும் அரிய காட்சி

கும்பகோணம் நகரில் பெரிய கடைவீதியில் அமைந்துள்ளது சரநாராயணப்பெருமாள் கோவில். 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில், வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவில் ஆகும். நம்மாழ்வார் திருமங்கை ஆழ்வார்களால் ஸ்ரீ சாரங்கபாணியுடன் இணைந்து, மங்களாசாசனம் செய்யப் பெற்றது.

இக்கோவில் மூலவர் சரநாராயணப் பெருமாள். சிரித்த முகத்துடன், ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாக காட்சி தருகிறார். பொதுவாக பெருமாள் வலதுகையில் சக்கரத்தையும் இடது கையில் சங்கையும் ஏந்திருப்பார். ஆனால் இத்தல பெருமாள், சற்று வித்தியாசமாக, வலது கையில் சங்கையும், இடது கையில் சக்கரத்தையும் ஏந்தி காட்சி தருகிறார்.

சன்னதியில் சரநாராயண பெருமாளின் பின்புறம், மகாவிஷ்ணுவின் தசாவதார மூர்த்திகள் காணப்படுகின்றனர். தசாவதார மூர்த்திகளின் தனித்தலமாக இக்கோவில் போற்றப்படுகிறது. அதனால்தான் இக்கோவிலை தசாவதாரக் கோவில் என்றும் அழைக்கின்றனர்.

இக்கோவில் கடக ராசிக்காரர்களுக்கு உரிய கோவிலாகவும், நவக்கிரக பரிகாரத்தலமாகவும் விளங்குகின்றது. வெள்ளிக்கிழமைகளில் இக்கோவிலை வழிபடுவது மிகவும் சிறந்தது.

Read More
தேவன்குடி கோதண்ட ராமர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

தேவன்குடி கோதண்ட ராமர் கோவில்

கண் கொடுத்த கோதண்டராமர்

தென் இந்தியாவின் அயோத்தி என்று போற்றப்படும் தலம்

மன்னார்குடிக்கு வடகிழக்கே, காவிரியின் துணை நதி கோரையாற்றின் தென்கரையில் உள்ள தேவன்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது கோதண்ட ராமர் கோவில்..

முற்காலத்தில் தேவர்கள் இந்த கிராமத்தில் வசித்து வந்ததால் இவ்வூர் தேவன்குடி என்னும் பெயரை பெற்றதாகவும். இங்கு இருக்கும் சிவனை இந்திரன் இந்திரலோகத்தில் இருந்து வந்து பூஜித்ததால் இங்கு அருள் பாலிக்கும் சிவன், இந்திரபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் என்றும் தல புராணம் கூறுகின்றது.

ராமாவதாரத்தில் தென்னகம் நோக்கிய பயணத்தில் ஸ்ரீராமர், இளையபெருமாளோடு சீதையைத் தேடி வந்த இடங்களுள் தேவன்குடியும் ஒன்று. இக்கோவிலில். ஸ்ரீசீதா, லட்சுமண, பரத, சத்ருகன, அனுமன் சமேதமாக ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி அருள்பாலித்து வருகிறார். தென் இந்தியாவின் அயோத்தி என்று இத்தலம் போற்றப்படுகிறது.

முற்காலத்தில் இந்த ராமர் கோவிலில் கண் தெரியாத ஒருவர் தினமும் பிரதட்சணம் செயது வந்தார். ஒருநாள் இவ்வாறு வலம் வருகையில் திடீரென்று கண் பார்வை திரும்ப பெற்றதால், தன்னுடைய நிலங்களை இந்த கோவிலுக்கு நன்றியுடன் கொடுத்து விட்டார். அதனால் இந்த ராமருக்கு 'கண் கொடுத்த கோதண்டராமர்' என்ற பெயர் உண்டாயிற்று.

இந்த கோவில் மணி சுமார் 800 கிலோ எடை கொண்டது. மிகப்பெரிய இந்த மணியின் ஒலி அக்கம்பக்கத்து ஆறு ஏழு கிராமங்களுக்குக் கேட்குமாம்.

Read More
இடுகம்பாளையம் ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

இடுகம்பாளையம் ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவில்

பிரமாண்ட திருமேனியுடன் நம்மை நேர்பார்வை கொண்டு ஆசீர்வதிக்கும் அபூர்வ ஆஞ்சநேயர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில், இடுகம்பாளையத்தில் அமைந்துள்ளது ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவில். இக்கோவில் 700 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இந்தக் கோவிலுக்கு 'ஸ்ரீ அனுமந்தராயசாமி கோயில்' என்ற பெயரும் உண்டு. கிருஷ்ணதேவராயரின் ராஜகுருவான ஶ்ரீவியாசராய தீர்த்தர் இந்த இடத்துக்கு வருகை புரிந்தபோது, இங்கிருந்த பாறையொன்றில் ஆஞ்சநேயர் தியானம் செய்வது போன்ற காட்சி தெரிந்தது. எனவே, அந்தப் பாறையில் ஜெயமங்கள ஆஞ்சநேயரின் திருவுருவத்தைத் தாமே பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

இக்கோவிலில், ஜெயமங்கள ஆஞ்சநேயர் வேறெங்கும் காண இயலாத அபூர்வத் தோற்றத்தில் காட்சி தருகிறார். ஜெயமங்கள ஆஞ்சநேயர். எட்டு அடி உயரம் கொண்ட பாறையில் புடைப்புச் சிற்பமாக, ஆறு அடி உயரமும், ஐந்து அடி அகலமும் கொண்டு மிக பிரமாண்டமாக, நம்மை நேருக்கு நேர் பார்த்து ஆசீர்வதிக்கும் கோலத்தில் கம்பீரமாகக் காட்சிதருகிறார்.

ஆஞ்சநேயரின் திருவடிகளில் தாமரை மலர் போன்ற தண்டை அணிந்தும், வலக் கரத்தில் சுதர்சன சக்கரம் பொறிக்கப்பட்டு ஆசீர்வாதம் செய்யும் நிலையிலும், இடக் கரத்தில் சவுகந்திக மலரை ஏந்தியபடி தொடையில் ஊன்றிக் காட்சி தருகிறார். ஆஞ்சநேயரின் வால், ஆஞ்சநேயரின் தலைப்பகுதிக்குப் பின்புறம் இடப்புறமாக மேல் நோக்கி நீண்டிருக்க, வாலின் நுனியில் மணி கட்டப்பட்டிருக்கிறது. ஆஞ்சநேயரின் வாலுக்கு நவகிரகங்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக ஐதீகம். வாலின் நுனியில் உள்ள மணியை மானசீகமாக வழிபட்டு வேண்டிக்கொண்டால், நவகிரக தோஷங்கள் விலகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஜெயமங்கள ஆஞ்சநேயரை புத்திரப்பேறு கிடைக்கவும், திருமணத் தடை நீங்கவும் பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

Read More
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
Perumal, பெருமாள் Alaya Thuligal Perumal, பெருமாள் Alaya Thuligal

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்

ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் போர்த்தும் வைபவம்

கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி, கைசிக ஏகாதசி எனப்படும். அன்று இரவு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், உற்சவ மூர்த்தியான நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் ஒவ்வொன்றாய் போர்த்தும் வைபவம் விடிய விடிய நடைபெறும். பெருமாளுக்கு தினமும் அணிவிக்கும் வஸ்திரங்களில் ஏதேனும் குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்யும் பரிகாரமாக இந்த வைபவம் நடைபெறுகிறது. மேலும் கார்த்திகை, மார்கழி குளிர் மாதங்கள் என்பதால் பெருமாளின் மீதுள்ள அன்பின் காரணமாக இந்த வஸ்திரங்கள் போர்த்தப்படுகின்றன. அத்துடன், ஒவ்வொரு வஸ்திரம் சாற்றியவுடனும் வேளையம் என்று அழைக்கப்படும் வெற்றிலை, பாக்கு, கற்பூர ஆரத்தி ஆகியவையும் நம்பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

கி.பி 1320 முதல் 1370 வரையிலான ஆண்டுகளில் முஸ்லிம் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சூறையாடப்பட்ட நிலையில், உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் திருப்பதி திருமலையில் சுமார் 50 ஆண்டு காலம் எழுந்தருளியிருந்தார். இதனை நினைவுகூறும் வகையில், ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஆண்டுதோறும் கைசிக ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு கைசிக ஏகாதசி டிசம்பர் 11-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

Read More
ராவத்தநல்லூர் ஶ்ரீ சஞ்சீவிராய ஆஞ்சநேயர் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ராவத்தநல்லூர் ஶ்ரீ சஞ்சீவிராய ஆஞ்சநேயர் பெருமாள் கோவில்

இருவேறு திசை நோக்கி அருள் பார்வை புரியும் அபூர்வ ஆஞ்சநேயர்

கோரிக்கைகள் நிறைவேற, ஞாயிற்றுக்கிழமைதோறும் எமகண்ட நேரத்தில் நடைபெறும் அபிஷேக ஆராதனை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலையில் சங்கராபுரம் அருகாமையில் புதூர் என்ற கிராமத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ராவத்தநல்லூர் ஶ்ரீ சஞ்சீவிராய ஆஞ்சநேயர் பெருமாள் கோவில். 750 வருட பழமை வாய்ந்த சிறப்புமிக்க ராமாயண காலத்தின் வரலாற்று பெருமை கொண்ட கோவில் இது. ராமாயணம் காலத்தில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கி செல்லும்போது, ராவத்தநல்லூரில், சஞ்சீவி மலையின் ஒரு சில பகுதிகள் கீழே விழுந்தன.

மூலவர் சஞ்சீவராய ஆஞ்சநேயர், 11 அடி உயரத் திருமேனியுடன் தெற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். அவரது இடது கண் கிழக்கு திசை நோக்கியும், வலது கண் மேற்கு திசை நோக்கியும் அருள் பார்வை புரிவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இப்படி இருவேறு திசை நோக்கி ஆஞ்சநேயரின் அருட்பார்வை இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.

இக்கோவிலில் பிரதி ஞாயிறு தோறும், எமகண்ட நேரத்தில் சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெறுகின்றது. இதில் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதல்களை வைக்கும் பக்தர்களுக்கு, அவர்களின் கோரிக்கைகள் 48 நாட்களுக்குள் நிறைவேறுகின்றது. இந்தக் கோவிலில் எமகண்ட நேரத்தில் செய்யப்படும் அபிஷேக ஆராதனை வேறு எந்த கோவிலிலும் இல்லாத நடைமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றினால் திருமணத்தடை நீங்கி திருமணம் கைகூடும். வெண்ணெய் சாற்றினால் மழலைச் செல்வம் கிடைக்கும்.

Read More
தேவர்மலை கதிர் நரசிங்கப்பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

தேவர்மலை கதிர் நரசிங்கப்பெருமாள் கோவில்

நெற்றியில் மூன்றாவது கண் அமைந்த நரசிம்மர்

நரசிம்மரின் இடது கை அக்வான முத்திரையில் (பக்தர்களை அழைக்கும் வண்ணம்) இருக்கும் தனிச்சிறப்பு

கரூர் நகரிலிருந்து பாளையம் செல்லும் வழியில் 35 கி.மீ. தொலைவில் உள்ள தேவர்மலையில் அமைந்துள்ளது கதிர்நரசிங்கப் பெருமாள் கோவில். தாயார் திருநாமம் கமலவல்லித் தாயார்.

மூலவர் 'உக்கிர நரசிம்மர்' என்றும் அழைக்கப்படுகிறார். இடதுகாலை மடித்து அமர்ந்த நிலையில் இடது கை அக்வான முத்திரையிலும் (பக்தர்களை அழைக்கும் வண்ணம்), வலது கை அபய முத்திரையிலும் உள்ளது. மேல் இரண்டு கைகள் சங்கு மற்றும் சக்கரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இந்த நரசிம்மருக்கு நெற்றியில் மூன்றாவது கண் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.

இரணியகசிபுவை வதம் செய்த பிறகு நரசிம்மர் உக்கிரம் தணியாமல் காடு, மேடு, மலைகளில் சுற்றித் திரிந்தார். அவரை சாந்தபடுத்த தேவர்களும் முனிவர்களும் வழிமறித்து வணங்கிய தலமே 'தேவர் மறி'. அதுதான் பிற்காலத்தில் மருவி 'தேவர்மலை' ஆனது. நரசிம்ம மூர்த்தியின் உக்ரத்தால் இன்றும் இந்த தலம் வறண்ட பூமியாகவே காணப்படுகிறது. தேவர்களும், முனிவர்களும் இந்த இடத்தில் தீர்த்ததை உண்டாக்கி அந்த நீரால் அவருக்கு அபிஷேகம் செய்து சாந்தப்படுத்தினார்கள். இந்தத் தீர்த்தத்திற்கு மோட்ச தீர்த்தம் என்று பெயர். சிறிய கோமுகியில் தானாகவே ஊற்றெடுக்கும் இந்த தீர்த்தத்தின் மூலம், தேவரகசியமாகவே உள்ளது. மோட்ச தீர்த்தத்தில் நீராடினால் சனி தோசம் நிவர்த்தியாகும். தேவர்மலைச் சுற்று வட்டாரத்திலிருக்கும் எந்தக் கோவிலிலோ, வீட்டிலோ விசேஷம் என்றால், இந்த நரசிங்கர் ஆலயத்துக்கு வந்து அவரை வழிபட்டு, மோட்ச தீர்த்தத்திலிருந்து புனித நீர் எடுத்துச் செல்வது வழக்கம்.

பக்தர்களது துன்பங்களை சற்றும் காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் தீர்த்து வைப்பவர் இந்த நரசிம்மர். கமலவல்லித் தாயாரை வணங்கினால் குடும்ப பிரச்சினைகள், மனம் தொடர்பான பிரச்சினைகள், திருமணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்குவதாகவும், பிரதோசத்தில் 11 முறை இந்த கோவிலுக்குச் செல்வதால், நம் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

Read More
ஸ்ரீ வைகுண்டம் வைகுண்டநாதர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீ வைகுண்டம் வைகுண்டநாதர் கோவில்

கண்களையும், கருத்தையும் வெகுவாக கவரும் சிற்பங்கள்

திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள திவ்ய தேசம், ஸ்ரீவைகுண்டம் மூலவர் வைகுண்டநாதர். தாயார் - வைகுண்டவல்லி, பூதேவி.

நவ திருப்பதிகளில் ஒன்று. நவக்கிரகங்களில் சூரியனுக்குரியத் தலம்.

இங்குள்ள திருவேங்கடமுடையான் சன்னதியில் நாயக்கர் காலத்து அற்புதமான சிற்பங்கள் உள்ளன. இந்த சன்னதி . மிக அற்புதமான வேலைப்பாடுகள் தன்னுள் தாங்கி நிற்கிறது . வரிசையாக யாளி உள்ள தூண்கள் , ஒவ்வொரு தூண்களிலும் விதவிதமான அழகிய சிற்பங்கள் ,மண்டபத்தின் மேல் பகுதியில் சுற்றிலும் பெருமாளின் மங்களாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களின் பெருமாள் வடிவங்கள் புடைப்பு சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

இக்கோவிலின் சிற்பச் சிறப்பெல்லாம் இம்மண்டபத்தில்தான் அமைந்து இருக்கின்றது. வரிசைக்கு ஒன்பது சிங்கப் போதிகையோடு (போதிகை என்றால், தூண்களின் மேற்பகுதியாக அமைந்து, மேலுள்ள வளையைத் தாங்கும் வகையில் அமைந்த, தூணின் ஒரு கூறு ஆகும்) கூடிய யாளிகள் இருக்கின்றன. யானைமேல் யாளியும், யானையின்மேல் சிங்கமும் அதன்மேல் யாளியும் உள்ள தூண்கள் அவை. தெற்கேயிருந்து மூன்றாவது தரணில் யாளிகள் வாயில் அனுமார் நிற்கிறார். இங்குள்ள ஒவ்வொரு தூணின் மேலும் அனுமார் பலப்பல உருவங்களில் இருக்கிறார்.குறிப்பாக, ஆதிசேஷனைக் குடையாகக் கொண்டு தேவியருடன் காட்சி தரும் பெருமாள், மூவுலகமும் தன்னுள் அடக்கம் என்பதை உணர்த்தும் உலகளந்த பெருமாள், அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதை உணர்த்தும் ராமர் அனுமார் சிற்பம், கணவரின் காலில் இருந்து முள்ளுடன் சேர்த்து வலியையும் எடுக்கும் மனைவி, நம் மீது தாவத் தயாராக இருக்கும் வானரம், நவநாரி குஞ்சரம் என்னும் யானை உருவ வடிவில் அமைந்திருக்கும் ஒன்பது பெண்கள், பஞ்ச நாரி துரகம் என்னும் குதிரை உருவ வடிவில் அமைந்திருக்கும் ஐந்து பெண்கள் என, இது போல ஆயிரம் கதைகள் சொல்லும் சிற்பங்கள் நம் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கின்றன.

மண்டபத்தில் முகப்பில் உள்ள தூண் ஒன்றில் அகோர வீரபத்திரன் காட்சி கொடுப்பார். இவைகளையெல்லாம் விடச் சிறந்த வடிவங்கள் இரண்டு இம்மண்டப முகப்பில் உண்டு. ஒன்று ராமன், சீதாப்பிராட்டி சகிதனாகத் தனது இலங்கைப் படையெடுப்புக்கு உதலிய சுக்ரீவனை அணைத்து அருள்பாலிப்பது. ராமன் சுக்ரீவனுக்கு அருள்பாலிக்கும்போதே, லட்சுமணனும் அங்கதனையும், அனுமனையும் அணைத்துக் கொண்டு நிற்கிறார். இப்படி, வானர வீரர்களை ராமனும், லட்சுமணனும் அணைத்துக் கொண்டு நிற்கும் காட்சி சிற்ப உலகிலே மிக அபூர்வமான ஒன்று.

சுருங்கச் சொன்னால் இக்கோவில் சிற்பங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். நம் கண்களையும் கருத்தையும் வெகுவாக கவரும்.

Read More
மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் .கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் .கோவில்

சிவலிங்கம் போன்ற திருமேனி உடைய அபூர்வ பெருமாள்

திருப்பூர் மாவட்டத்தில், மொண்டிபாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ளது வெங்கடேச பெருமாள் கோவில். தாயார் திருநாமம் அலமேலு மங்கை. இக்கோவிலில் உள்ள மூலவர் வெங்கடேச பெருமாள் சாளக்கிராம சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருடைய திருமேனி லிங்கம் போன்ற அமைப்பு கொண்டது. நான்கு புறமும் பட்டையாகவும், மத்தியில் கூராக, வாழைப்பூ வடிவில், சுயம்பு லிங்கம் போல காட்சி தருவது வேறு எந்த வைணவ தலங்களிலும் காண முடியாத தனி சிறப்பாகும்.

தோல் நோய் தீர்க்கும் 'மல்லிப்பொட்டு' பிரசாதம்

இக்கோவிலில் பக்தர்களுக்கு துளசி, வேம்பு, வெள்ளெருக்கு, பூமொட்டு, அரளி, ஊஞ்சற்கரி, எலுமிச்சைசாறு ஆகிய மூலிகை பொருட்கள் கலந்த மல்லிப்பொட்டு எனும் சிறப்பு பிரசாதம் வழங்கப்படுகிறது. இது தேகத்தில் தோன்றும் வெண்குஷ்டம் போன்ற கொடிய நோய்களுக்கு அருமருந்தாகப் பயன்படுகிறது.

கொங்கு திருப்பதி

திருப்பதி வெங்கடேசப் பெருமாளே இத்தலத்தில் அருள் பாலிப்பதாக ஐதீகம். எனவே, திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்ற முடியாதவர்கள், இத்தலத்திற்கு வந்து தாங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். இதனால் இத்தலம் 'மேலத்திருப்பதி', கொங்கு திருப்பதி என்ற சிறப்பு பெயர்களுடன் அழைக்கப்படுகிறது. திருப்பதிக்கு ஏழுமலைகளைக் கடந்து செல்வதைப் போலவே இங்கு செல்லவேண்டுமெனில், இயற்கையாகவே அமைந்த ஏழு மேடுகளைக் கடந்து செல்ல வேண்டும்.

Read More
தாராபுரம் உத்தரராகவப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

தாராபுரம் உத்தரராகவப் பெருமாள் கோவில்

மார்பில் சங்கு சின்னம் தரித்த அபூர்வ பெருமாள்

பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் செய்த தலம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரில் அமைந்துள்ளது உத்தரராகவப் பெருமாள் கோவில். மகாபாரத காலத்தில் இப்பகுதி விராடபுரம் என்று பெயர் பெற்றிருந்தது. பின்னர் வஞ்சிபுரி என்று அழைக்கப்பட்டு கொங்கு சோழர் காலத்தில் ராசராசபுரம் என்றானது. ராசராசபுரம் என்பது விஜயநகர பேரரசர் காலத்தில், ராராபுரம் என்று மருவி பின்னர் தாராபுரம் ஆனது.

மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தது விராடபுரி என்று என்று முன்னர் அழைக்கப்பட்ட தாராபுரத்தில் தான். பாண்டவர்கள் 13 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டனர். இதில் ஓராண்டு அஞ்ஞானவாசம் இருந்து எவருக்கும் தெரியாமல் மறைந்து வாழ வேண்டும் என்பது கௌரவர்களின் கட்டளை. அதன்படி மறைந்து வாழ, பாண்டவர்கள் விராட நாட்டை தேர்ந்தெடுத்து, விராட மன்னனிடம் சேவகர்களாக பணிபுரிந்தனர்.

இத்தலத்து பெருமாள் கோவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. பொதுவாக அனைத்து பெருமாள் கோவில்களிலும், பெருமாள் தனது கையில் தான் சங்கை ஏந்தி இருப்பார். ஆனால் இத்தலத்து பெருமாள் மார்பில் சங்கு சின்னம் பொருந்தியுள்ளது.. இந்த சங்கை மகாலட்சுமியாக கருதி பக்தா்கள் வழிபட்டு வருகின்றனா்.

Read More
நந்திவனம் நந்திநாதப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

நந்திவனம் நந்திநாதப் பெருமாள் கோவில்

நந்தி தேவர் வழிபட்ட பெருமாள் கோவில்

கும்பகோணத்தில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவில், மருதாநல்லூர் அருகில் அமைந்துள்ளது நந்திவனம் நந்திநாதப் பெருமாள் கோவில். தாயார் திருநாமம் செண்பகவல்லி. இக்கோவில் 1800 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கருவறையில் மூலவர் நந்திநாதப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நந்தி தேவர் வழிபட்ட தலம் இது. 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வைணவக் கவிஞர் காளமேகப் புலவர் இக்கோவிலில் வழிபட்டார்.

சிவபெருமானை சாந்தப்படுத்துவதற்குத் தீர்வு காணும் பொருட்டு விஷ்ணுவை வழிபட நந்தி தேவர் இங்கு வந்தார். நந்தி தேவர் விஷ்ணுவிடம் இங்கேயே தங்கி தனது (நந்தியின்) பெயரை விஷ்ணுவின் சொந்த பெயரின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளுமாறு வேண்டினார். எனவே இத்தலத்து பெருமாள் நந்தி நாத பெருமாள் என்று பெயர் பெற்றார். இந்த இடத்திற்கு நந்திவனம் என்ற பெயரும் ஏற்பட்டது.

நந்தியாவட்டை பூ முதலில் தோன்றிய தலம்

இங்குள்ள நந்திநாதப் பெருமாளுக்கு, நந்தி தேவர் விண்ணுலகின் நந்திமணி மலரால் பூஜை செய்தார். இந்தப் பூ பூமியில் நிலைத்திருந்து, இன்று தமிழில் 'நந்தியாவட்டை' (பின்வீல் பூ) என்று அழைக்கப்படுகிறது.

Read More
அம்பாசமுத்திரம் புருஷோத்தம பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

அம்பாசமுத்திரம் புருஷோத்தம பெருமாள் கோவில்

நித்திய கருட சேவை சாதிக்கும் பெருமாள்

திருநெல்வேலி – பாபநாசம் மாநில நெடுஞ்சாலை சாலையில், 35 கி.மீ தூரத்தில் உள்ள அம்பாசமுத்திரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது புருஷோத்தம பெருமாள் கோவில். தாயார் திருநாமம் அலர்மேல் மங்கை. இத்தலத்தில் பெருமாள் ஒரு தாயாருடன் காட்சி தருவதால், 'புருஷோத்தமர்' என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு, 'ஏகபத்தினி விரதர்' என்றும் பெயருண்டு.

பொதுவாக பெருமாள் திருவிழா காலங்களில் தான் கருடன் மீது எழுந்தருளி காட்சி தருவார். ஆனால், இக்கோவிலில், மூலஸ்தானத்திலேயே பெருமாள் கருட சேவை சாதிக்கிறார். கருவறையின் நடுவில் சதுர பீடமும், அதன் மத்தியில் மலர்ந்த தாமரை மலரும் அதன்மேல் ஆதிசேஷனின் அடிபாகமும், அதில் கருட பகவான் ஒருகாலை மடித்து, மறுகாலை ஊன்றித் திகழ, அவரின் ஒரு கை பெருமாளின் வலது திருப்பாதத்தைத் தாங்கியவாறும், மற்றொரு கை மலர்ந்த தாமரை மலரை கையில் கொண்டும் இருக்கிறது. கருடன் தோளின்மேல் உள்ள பீடத்தில் ஸ்ரீபுருஷோத்தம பெருமாள் இடதுகாலை மடித்து, வலது காலை கருட பகவானின் கையில் வைத்தவாறும், பிராட்டியை தன் இடது மடியில் அமர்த்தி, ஆதிசேஷன் ஏழு தலைகளுடன் குடைபிடிக்க, வரதஹஸ்தம் கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில், நித்திய கருட சேவை சாதிக்கிறார். தாயார் இடது கையில் தாமரை மலருடன், கருடனின் கையில் உள்ள தாமரை மலர் மீது திருப்பாதங்கள் வைத்து மலர்ந்த முகத்துடன் தரிசனம் தருகிறார். இந்த சிலை ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ளது என்பது தனிச்சிறப்பு. பெருமாள் அஷ்ட திருக்கரங்களுடன் எழுந்தருளியிருப்பதால், இவரை அஷ்டபுயகரப்பெருமாள் என கூறுகின்றனர். பெருமாளின் இந்த நித்திய கருட சேவை இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

இரண்டு சங்கு இரண்டு சக்கரம் ஏந்திய அபூர்வ பெருமாள்

பொதுவாக பெருமாள் எல்லாத் தலங்களிலும் ஒரு சங்கு, ஒரு சக்கரம் ஏங்கிய நிலையில்தான் காட்சி தருவார். ஆனால் மூலவர் புருஷோத்தம

பெருமாள் கைகளில் இரண்டு சங்கு இரண்டு சக்கரம் ஏந்தி அருள் பாலிக்கிறார். இந்த அமைப்புடன் பெருமாளை தரிசிப்பது அபூர்வம் ஆகும்.

பிரார்த்தனை

இத்தலத்து பெருமாள் ஏகபத்தினி விரதர் என்பதால், புதுமணத் தம்பதியர்கள், தாயாரையும் பெருமாளையும் வணங்கினால் வாழ்க்கை முழுவதும் இணைபிரியாமல் இருப்பர் என்பது நம்பிக்கை. கடன் தொல்லை உள்ளவர்கள் இப்பெருமாளை வழிபட்டால் நிவாரணம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
கும்பகோணம் சாரங்கபாணி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கும்பகோணம் சாரங்கபாணி கோவில்

பக்தனுக்கு தீபாவளி அன்று சிரார்த்தம் செய்யும் சாரங்கபாணி பெருமாள்

கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுபடுகிறது. மூலவர் சாரங்கபாணி, தலையை தனது வலது கையில் வைத்தவாறு, சயனத் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். தாயார் திருநாமம் கோமளவல்லி.

ஒருசமயம், கும்பகோணத்தில் லட்சுமி நாராயணசாமி என்னும் பெருமாள் பக்தர் வாழ்ந்து வந்தார். இவர் கும்பகோணம் சாரங்கபாணி மீது தீராத பக்தி கொண்டிருந்தார்.இவர்தான் கும்பகோணம் சாரங்கபாணி கோவில் கோபுரத்தைக் கட்டியவர்.

ஒரு தீபாவளியன்று லட்சுமி நாராயணசாமி பெருமாளின் திருவடியை அடைந்தார். சிரார்த்தம் செய்ய குழந்தைகள் இல்லாமல் போனால், நரகம் செல்ல வேண்டி வரும் என்பதால், தனக்கு சேவை செய்த தன் பக்தருக்கு தானே மகனாக இருந்து, இறுதிச்சடங்குகள் செய்தார் சாரங்கபாணி. இது நடந்த மறுநாள் கோயிலை திறந்து பார்த்த போது, பெருமாள் ஈரவேட்டியுடனும், மாற்றிய பூணூலுடனும், தர்ப்பைகளுடனும் காரியம் செய்து வந்த கோலத்தில் காட்சியளித்தார். அதாவது பெருமாளே தன்பக்தனுக்கு ஈமக்கிரியை செய்துவைத்து கருணைக்கடலாக விளங்கினார். தீபாவளியன்று உச்சிக்காலத்தில் அந்த பக்தருக்கு சாரங்கபாணி, திதி கொடுக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது. ஆனால், அதை பக்தர்கள் பார்க்க முடியாது.

இதில் நெகிழ்ச்சியான இன்னொரு விஷயம் என்னவென்றால், அன்றைய தினம், பெருமாளுக்கு நிவேதனம் செய்வது அன்றைய சிராத்தத்துக்காகத் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளைத்தான்; வழக்கமான பிரசாதங்களை அல்ல

Read More
படவேடு யோகராமசந்திர மூர்த்தி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

படவேடு யோகராமசந்திர மூர்த்தி கோவில்

ஒரே கல்லில், ஒரே பீடத்தில் அமர்ந்தபடி இருக்கும் அரிய ராமர், சீதை சிலை

ஆஞ்சநேயருக்கு ஆசிரியராக இருந்து உபதேசம் செய்யும் யோகராமர்

திருவண்ணாமலை மாவட்டம் படவேடு அருகே, நடந்துசெல்லும் தூரத்தில் உள்ள வீரக்கோயில் கிராமத்தில் அமைந்துள்ளது யோகராமசந்திர மூர்த்தி கோவில். படவேடு ரேணுகாதேவி கோவில் இணைப்புக் கோவிலாக யோகராமசந்திர மூர்த்தி கோவில் இருக்கிறது.

வால்மீகி இயற்றிய ராமாயணத்தின் முதல் ஸ்லோகத்தில், ராமபிரான் யோக ராமச்சந்திரனாக இருக்கும் அமைப்பைப் பற்றி பாடியுள்ளார். இந்த ஸ்லோகத்தின் பொருளை உணர்த்தும்விதமாக அமைந்த கோவில் இது.

இத்தலத்தில் ராமபிரான் புஷ்பக விமானத்தின் கீழ், வீராசனத்தில் அமர்ந்து, சின்முத்திரை காட்டிய வலது கையை மார்பில் வைத்து யோக நிலையில், மாணவனுக்கு பாடம் போதிக்கிற பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். இது போன்ற அமைப்பை காண்பது அரிதாகும். ராமர், சீதை இருவரின் சிலையும் ஒரே கல்லில், ஒரே பீடத்தில் அமர்ந்தபடி வடிக்கப்பட்டுள்ளது.

சுவாமிக்கு அருகில், ஆஞ்சநேயர் அமர்ந்து கையில் அடக்க ஒடுக்கமாக அமர்ந்த நிலையில், பனை ஓலைகளை கொத்தாக கையில் பிடித்து, ஓலைச் சுவடியை படிக்கும் கோலத்தில் காட்சி தருகிறார். ஆஞ்சநேயருக்கு ஆசிரியராக இருந்து உபதேசம் செய்தவர் என்பதால், ராமபிரான் இங்கு குரு அம்சமாக போற்றப்படுகிறார். எனவே, சக்கரவர்த்திக்குரிய போர் ஆயுதங்கள் எதுவும் எதுவும் இல்லை. ஆனால், இளையபெருமாளான லட்சுமணன் வில்லும் கையுமாக நிற்கிறார்.

யோகராமர் உலகின் நிரந்தரமான மெய்ஞான நிலையை உணர்த்தும் கோலத்தில் இருப்பவர் என்பதால், நிலையான இன்பமான மோட்சம் கிடைக்க மட்டுமே இவரை வழிபடுகிறார்கள். இதனால், இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று சுவாமிக்கு விசேஷ பூஜை மட்டும் நடக்கும்.

கல்வி, கலைகளில் உயர்வான நிலை பெற, ஞாபகமறதி நீங்க, ஞானம் உண்டாக இத்தல ராமரை வழிபட்டு பலனடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்

பெருமாள் மீசையோடு காட்சி தரும் திவ்ய தேசம்

சென்னை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள திவ்ய தேசம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 61 வது திவ்ய தேசம். கருவறையில் மூலவர் பார்த்தசாரதி பெருமாள், தன் குடும்ப சமேதராக காட்சியளிக்கிறார். இந்தப் பெருமாள் ,அர்ஜுனனுக்கு உதவியாக வந்த கிருஷ்ணாவதாரம் என்பதால்,அருகில் ருக்மிணி தாயார் இருக்கிறாள். வலப்புறத்தில் அண்ணன் பலராமர், இடதுபுறத்தில் தம்பி சாத்யகி, மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் ஆகியோரும் இருக்கின்றனர்.

அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்ததால் இந்தப் பெருமாள் பார்த்தசாரதி என்று அழைக்கப்படுகிறார். ஒன்பது அடி உயரம் உள்ள இந்த பெருமாள், சாரதிக்குரிய மீசையோடு காட்சியளிப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இந்த இடத்தில் மட்டும் தான் கிருஷ்ண பகவான் மீசையுடனும், தன் பிரதான ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார். அதற்கு காரணம் மகாபாரதப் போரின் தொடக்கத்தில், இவர் எந்த ஆயுதமும் ஏந்தாமல் இருப்பதாக வாக்கு கொடுத்ததால் போரின் தொடக்கம் மற்றும் முடிவினை தெரிவிக்கும் சங்கத்தை மட்டும் ஏந்தியுள்ளார். இங்கு உற்சவ மூர்த்தி தன் கதாயுதம் இல்லாமல் செங்கோலுடன் காட்சி தருகிறார்.

திருப்பதி லட்டு, உப்பிலியப்பன் கோவில் உப்பில்லா சாதம், மதுரை கள்ளழகர் கோவில் தோசை ஆகிய பிரசாதங்கள் பிரசித்தி பெற்றிருப்பதைபோல, இக்கோவிலில் சர்க்கரைப்பொங்கல் பிரசித்தி பெற்ற பிரசாதமாகும்.

Read More
களக்காடு வரதராஜ பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

களக்காடு வரதராஜ பெருமாள் கோவில்

மூலிகைகளாலும், படாச்சாரமும் கலந்து தயார் செய்யப்பட்ட பெருமாள் விக்கிரகம்

வரதராஜப் பெருமாளும், வெங்கடாஜலபதியும் கருட சேவை சாதிக்கும் சிறப்பு

திருநெல்வேலியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள, களக்காடு என்னும் ஊரில் அமைந்துள்ளது வரதராஜ பெருமாள் கோவில். தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற வைணவ தலமாகத் திகழும் இக்கோவில். சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

இங்கு மூலவராக வீற்றிருக்கும் வரதராஜ பெருமாள் சிலை மூலிகைகளாலும், படாச்சாரமும் அதாவது மரமும் கலந்து தயார் செய்யப்பட்ட விக்கிரகமாகும். 6 அடி உயரமுள்ள பெருமாள் கிழக்கு நோக்கி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காட்சியளிக்கிறார். வரதராஜ பெருமாள் சன்னதிக்குத் தென்புறம் ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் அலமேலுமங்கை, பத்மாவதி தாயாருடன் கிழக்கு நோக்கியே தனி சன்னதி கொண்டிருப்பது இக்கோயிலின் தனிச் சிறப்புகளில் ஒன்றாகும். இந்தத் தலத்தில் ராஜகோபுரம் இல்லை அதற்குப் பதிலாக வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கடாஜலபதி சன்னதிகளில் இரு கோபுரங்கள் காணப்படுகின்றன.

இக்கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை அன்றும், பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழாவின் 5ம் நாள் இரவிலும், 2 கருட வாகனங்களில் தனித்தனியாக வரதராஜப் பெருமாளும், வெங்கடாஜலபதியும் வீதி உலா வருவது இத்தலத்தின் மற்றும் ஒரு தனிச்சிறப்பாகும்.

Read More
வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவில்

திருவோண நட்சத்திரத்தன்று வழிபட்டால் திருமண பாக்கியம் அருளும் பெருமாள்

திண்டுக்கல்லில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள வடமதுரையில் அமைந்துள்ளது சவுந்தரராஜ பெருமாள் கோவில். தாயார் திருநாமம் சவுந்தரவல்லி. 15 அடி உயரத்தில், பழங்கால சுற்றுச்சுவர்கள் கொண்ட, சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள மிகப் பெரிய கோவில் இதுவாகும்.

ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தன்று பெருமாளுக்கு, பால் அபிஷேகம் செய்து, பொங்கல் வைத்து வழிபட்டால் கடன் நிவர்த்தி மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். துளசி மாலை அணிவித்து வேண்டினால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் கை கூடிய பக்தர்கள், தம்பதியர்களாக வந்து வழிபாடு செய்கிறார்கள்.

Read More
கொடிக்குளம் வேதநாராயண பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கொடிக்குளம் வேதநாராயண பெருமாள் கோவில்

பெருமாளை, பிரம்மா மனித முகத்துடன் (ஒரே தலையுடன்) வணங்கி நிற்கும் அபூர்வ காட்சி

மதுரை - சென்னை நெடுஞ்சாலையில் 13 கி.மீ தொலைவில் உள்ள கொடிக்குளம் விலக்கு என்ற இடத்திலிருந்து இரண்டு கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது கொடிக்குளம் வேதநாராயண பெருமாள் கோவில். இக்கோவில் யானைமலை யோக நரசிம்மர் கோவிலுக்கு 2 கி.மீ. அருகாமையில் உள்ளது.

புராணத்தின் படி, மது மற்றும் கைடபர் என்ற இரண்டு அசுரர்கள் பிரம்மாவிடமிருந்து வேதங்களைத் திருடிவிட்டதால், படைப்புத் தொழில் நின்று போனது. மகா விஷ்ணு அசுரர்களை அழித்து வேதங்களை மீட்டார். ஆனால் பிரம்மாவிடம் கொடுக்கவில்லை. விஷ்ணுவிடம் வேதங்களை பெற்று மீண்டும் படைப்புத் தொழில் செய்ய பிரம்மா இத்தலத்தில் மனித வடிவில் அந்தணராக, ஒரு தலையுடன் வந்து தவமிருந்தார். பெருமாள் அவருக்கு ஹயக்ரீவ மூர்த்தியாக காட்சி தந்து வேதங்களை திருப்பி தந்தார்.

அப்போது பிரம்மா பெருமாளிடம், சுயரூபத்தில் தரிசனம் தரும்படி வேண்டவே அவர் நாராயணராக காட்சி தந்தருளினார். எனவே, மகா விஷ்ணு வேதநாராயணன்' என்றும் பெயர் பெற்றார்

மூலவர் வேதநாராயணன், கருவறையில் தாயார்கள் இல்லாமல் எழுந்தருளி உள்ளார். வேதநாராயணப் பெருமாள் அருகில், அந்தணராக வந்து தவம் செய்த பிரம்மா ஒரு தலையுடன், பெருமாளை வணங்கியபடி இருப்பது வித்தியாசமான காட்சியாகும்.

ஸ்ரீரங்கம் உற்சவர் நம் பெருமாள் 48 ஆண்டு காலம் மறைந்திருந்த தலம்

பதினான்காம் நூற்றாண்டில் அந்நியர்கள் படையெடுத்து வந்தபோது, ஸ்ரீரங்கம் உற்சவரான நம்பெருமாளை இக்கோவிலுக்கு அருகில் உள்ள குகையில்தான் 48 ஆண்டுகள் மறைத்து வைத்திருந்தார்கள். ஸ்ரீரங்கம் உற்சவர் வைக்கப்பட்டிருந்த குகையில் தற்போது, பெருமாள் பாதம் இருக்கிறது.

தோல் நோய்களை தீர்க்கும் பிரம்ம தீர்த்தத்து நீர்

இக்கோவில் தீர்த்தமான பிரம்ம தீர்த்தத்தின் நீரை வீட்டிற்கு கொண்டு சென்று தண்ணீரில் கலந்து குளித்தால் தோல் வியாதிகள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
திருமலை பேடி ஆஞ்சநேயசுவாமி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருமலை பேடி ஆஞ்சநேயசுவாமி கோவில்

கை விலங்குடன் காட்சி அளிக்கும் பால அனுமன்

திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு நேர் எதிரே, சந்நிதி தெருவில் அமைந்துள்ளது பேடி ஆஞ்சநேயசுவாமி கோவில். திருமலைக்கு வருகை தரும் பக்தர்கள்

இக்கோவிலுக்குச் சென்று ஆசி பெற வேண்டும், பேடி ஆஞ்சநேய சுவாமியின் ஆசீர்வாதம் முழுமையான பயணத்தைக் குறிக்கிறது. ஸ்ரீ வெங்கடாசலபதி கோவில் மகா துவாரத்திலிருந்து நடந்து செல்லக்கூடிய தூரத்தில், பேடி ஆஞ்சநேய ஸ்வாமி கோவில் உள்ளது.

இக்கோவிலில் ஆஞ்சநேயர், பால அனுமன் தோற்றத்தில், கைகள் கூப்பிய அஞ்சலி முத்திரை கோலத்தில் காட்சி அளிக்கிறார். அவரது கைகள் விலங்குகளால் கட்டப்பட்டிருக்கின்றது. இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி உள்ளது.

ஒரு சமயம் பால அனுமன் தனது வாகனமான ஒட்டகத்தைத் தேடி காடுகளில் அலைந்து கொண்டிருந்தார். ஆஞ்சநேயரின் அன்னையான அஞ்சனாதேவி, பால அனுமானைத் தடுக்கும் முயற்சியில், அவனைக் கைவிலங்கிட்டு, தான் திரும்பி வரும் வரை ஸ்ரீவாரி கோவில் முன் இருக்குமாறு தனது அன்பு மகனுக்கு உத்தரவிட்டதாக புராணம் கூறுகிறது. பின் அஞ்சனா தேவி அருகில் இருந்த மலையில் தவம் செய்ய சென்று விட்டாள். இதனால் தான், திருமலையில் உள்ள ஏழு மலைகளில் ஒன்றான அஞ்சனாத்ரி, அவள் பெயராலே அழைக்கப்பட்டு வருகின்றது.

தம் அன்பான சீடன் கோயிலின் முன் தனியாக நிற்பதைக் கண்டு, ஸ்ரீ வெங்கடேஸ்வர பகவான், ஒவ்வொரு நாளும் பால அனுமனுக்கு சரியான நேரத்தில் உணவை வழங்கவும், அவரது தாயார் அஞ்சனாதேவி, திரும்பி வரும் வரை அவரை நன்கு கவனித்துக் கொள்ளவும் கோயில் குருக்களுக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனாலேயே ஒவ்வொரு நாளும் ஸ்ரீ பூவராகசுவாமிக்கும், ஸ்ரீ வெங்கடேசப் பெருமானுக்கும் நைவேத்தியம் சமர்பிக்கப்படும் அதே நைவேத்தியம் இந்தக் கோவிலுக்குக் கொண்டு வந்து அனுமனுக்குப் படைக்கப்படுகிறது.

Read More
அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவில்

திருபாற்கடல் பள்ளி கொண்ட கோலத்தை பெருமாள் காட்டி அருளும் திவ்ய தேசம்

திருச்சியில் இருந்து 21 கி.மீ., தொலைவில் உள்ள அன்பில் என்ற ஊரில் அமைந்துள்ளது ஐந்தாவது திவ்ய தேசமான சுந்தரராஜ பெருமாள் கோவில். தாயார் திருநாமம் அழகியவல்லி. பஞ்சரங்க தலங்களில் ஒன்று அன்பில் சுந்தரராஜப் பெருமாள் கோயில். அரங்கம் என்றால் ஆறு பிரியும் இடத்தில் அமைந்துள்ள மேடான தீவு அல்லது திட்டு என்று பொருள். காவிரி ஆறு பிரியும் இடத்தில், அடுத்தடுத்து அமைந்துள்ள 5 வைணவ தலங்கள் பஞ்சரங்க தலங்கள் என அழைக்கப்படுகின்றன.

திருபாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் இருப்பதைப் போல, திருமால் தாரக விமானத்தின் கீழ் இந்த திவ்ய தேசத்தில் எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

பிரம்மனுக்கு அழகிய இளைஞனின் உருவில் காட்சி கொடுத்த பெருமாள்

மூலவர் சுந்தர்ராஜ பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக ஆதிசேஷன் மீது சயனித்த திருக்கோலத்தில் இருக்க, உற்சவர் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். ஒருசமயம் நான்முகனான பிரம்ம தேவருக்கு தானே உலகில் அழகானவர் என்றும், தன் படைப்பினாலேயே உலகில் தன்னால் படைக்கப்படும் உயிரினங்களும் அழகாக உள்ளதாக ஆணவம் கொண்டார். இதனால் கோபமடைந்த மகாவிஷ்ணு, பிரம்ம தேவரை சாதாரண மானிட பிறவியாக பிறக்கும் படி சாபம் அளித்துள்ளார். விஷ்ணு அளித்த சாபத்தின் படி பூமியில் பல தலங்களுக்கும் சென்று வழிபட்டார் பிரம்மா. கடைசியாக இந்த தலத்திற்கு வந்த போது ஒரு அழகான இளைஞரின் தோற்றத்தில் மகாவிஷ்ணு, பிரம்மனுக்கு காட்சி கொடுத்தார்.

அவரின் அழகை கண்டு வியந்து போன பிரம்மா, எப்படி இவ்வளவு அழகாக உள்ளீர்கள் என அவரிடம் கேட்டார். அப்போது விஷ்ணு தனது உண்மையான வடிவத்தை காட்டி, திருக்காட்சி அளித்தார். அழகு நிலையானது இல்லை; அதற்காக ஆணவம் கொள்ளக் கூடாது என்பதை புரிய வைக்க பிரம்மனுக்கு அழகிய இளைஞனின் உருவில் காட்சி கொடுத்ததால் இந்த தல பெருமாள் சுந்தரராஜ பெருமாள் என்றும், வடிவழகிய நம்பி என்றும் திருநாமம் கொண்டு அழைக்கப்படுகிறார்.

ஆண்டாள் நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் இருக்கும் அரிய காட்சி

இத்தலத்தின் முன்மண்டபத்தில் ஆண்டாள் நின்ற கோலத்தில் தனிசன்னதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். அதே சந்நிதியில் அமர்ந்த கோலத்தில் அவரின் உறு்சவர் திருமேனி காணப்படுகிறது. ஒரே இடத்தில் இரண்டு கோலங்களில் ஆண்டாளை இங்கே தரிசிப்பது சிறப்பு.

Read More
திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்

கையில் செங்கோலுடன் ராஜ கோலத்தில் காட்சி தரும் பெருமாள்

தென்திருப்பதி என்று அழைக்கப்படும் தலம்

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டை தாண்டி வரும் படாளம் கூட்டு ரோடில் இருந்து வேடந்தாங்கம் செல்லும் வழியில், நாலு கி.மீ தொலைவில் இருக்கிறது திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில். இந்த மலைக்கோயிலுக்கு செல்ல சாலை வசதியும் உண்டு.

தென்திருப்பதி என்று அழைக்கப்படும் இத்தலம், திருப்பதியில் உள்ளது போல் அமைப்பும் பூஜை முறைகளும் கொண்ட கோவிலாகும்.

மூலவர் பிரசன்ன வெங்கடேசர் பெருமாள், செங்கோலுடன் ராஜ கோலத்தில் காட்சி தருகிறார் . தன் இரு மார்பிலும் இரண்டு மஹாலக்ஷ்மியை ஏந்தியுள்ளார், திருவாசியில் ஆதிசேஷன் இருக்கிறார். .பெருமாள் அஷ்டலக்ஷ்மி ,தசாவதார ஒட்டியாணம் ,சகஸ்ரநாம மாலைகள் அணிந்து மிகவும் அழகாக காட்சி தருகிறார். வியாழன் தோறும் இவைகள் எதுவும் அணியாமல் திருப்பதியில் உள்ளது போல் நேத்திர தரிசனம் தருகிறார் .

தொண்டைமான் மன்னன் ஒருவர், தனக்கு வெற்றி தேடித் தந்த பெருமாளுக்கு நன்றி சொன்னார். அப்போது இம் மலையில், பெருமாள் கையில் செங்கோலுடன் மன்னரின் மனதில் காட்சி கொடுத்தார். அவ்வாறு தன் மனதில் வந்து காட்சி கொடுத்ததால், அவருக்கு பிரசன்ன வெங்கடேசர் என்ற பெயர் வைத்து இதே இடத்தில் வெங்கடாஜலபதிக்கு மன்னன் கோவிலையும் எழுப்பினார்.

வராஹ சுவாமி தரிசனம்

திருப்பதியில் வராஹ சுவாமி பெருமாளை தரிசித்த பிறகே ஸ்ரீனிவாசரை தரிசிக்க வேண்டும் .அதேபோல் இங்கேயும் வராகரை தரிசித்த பிறகே பெருமாளை தரிசனம் செய்யவேண்டும் , வராஹ அவதாரத்தை கருட ஆழ்வார் காணமுடியாமல் போகவே அவரின் வேண்டுகோளை ஏற்று இத்தலத்தில் பெருமாள் கருடனுக்கு வராஹ அவதாரத்தை காட்டினார். இங்கு வராஹர் தனது வலது காலை ஆதிசேஷனின் வால் மீதும், இடது காலை ஆதிசேஷனின் தலையின் மீது வைத்து, லட்சுமி தேவியை மடியில் அணைத்தபடி தரிசனம் தருகிறார் .

திருவோண தீபம்

திருவோணம் நட்சத்திரக்காரர்கள் சென்று தரிசிக்க வேண்டிய கோவிலாகும் . ஒவ்வொரு மாதமும் வரும் திருவோணம் நட்சத்திரம் அன்று ஓண தீபம் ஏற்றுகிறார்கள்

,அன்று காலை பெருமாள் யாக மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அப்போது ஸ்ரீனிவாசருக்கு யாகம் ,திருமஞ்சனம் மற்றும் திருக்கல்யாணம் நடக்கும் .அப்போது பெருமாள் சன்னதியில் அகன்ற தீபத்தில் நெய் ஊற்றி பெருமாளின் காலடியில் வைத்து ஆராதனை செய்கிறார்கள் . திருவோண நட்சத்திரக்காரர்கள் மற்றும் பக்தர்கள் திருமணம் தோஷம் மற்றும் புத்திர தோஷம் உடையவர்கள் நெய் கொடுத்து தீப தரிசனம் காணுகிறார்கள் .

Read More