
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
ஊமைக் குழந்தையை பேச வைத்த செந்திலாண்டவன்
குமரகுருபரர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெருந் தமிழ்ப் புலவர். இவர் சைவ நெறியைப் போற்றிய தருமபுரம் ஆதீனத்துடன் தொடர்புடையவர் ஆவார். இவரது நூல்கள் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் பிரபந்தங்கள் என்னும் பெயரில் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
இவர் தமிழ்நாட்டுத் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டம் என்னும் ஊரில் சைவ வெள்ளாளர் குலத்திலே சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகனாகப் பிறந்தார். இளம்வயதில் வாய் பேச முடியாத நிலையில் இருந்தார். குழந்தையைப் பேச வைக்க வேண்டும் என ஆசைப்பட்ட பெற்றோர்கள் குமரகுருபரருக்கு ஐந்து வயது நிரம்பியதும் அவரைத் திருச்செந்தூர் அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் 48 நாட்கள் விரதம் மேற்கொண்டனர். விரதத்தை முடித்தபின்பும் அவர்கள் வேண்டியது கிடைக்கவில்லை.
எனவே, குமரகுருபரரின் பெற்றோர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். 'இனி உயிரோடு இருந்து எந்தப் பலனுமில்லை. மூவரும் திருச்செந்தூர் கடலில் விழுந்து உயிரைப் போக்கிக் கொள்ள வேண்டும்' என எண்ணி கடற்கரை அருகே வந்தார்கள்.
திருச்செந்தூர் முருகன் கோவில் அருகிலுள்ள கடலருகே வந்து உயிரைவிட முயன்றனர். அந்த நேரத்தில் ஒரு அர்ச்சகர் வடிவத்தில் முருகப்பெருமான அவர்கள் முன்பு தோன்றினார். 'கடலில் விழுந்து உயிரைவிட முடிவு செய்துவிட்டீர்களே! அது ஏன்?' என்று கேட்டார் அர்ச்சகர்.
'அய்யா எங்களுக்கு குழந்தை பிறந்து 5 வருடங்கள் ஆகிவிட்டது. இந்தக் குழந்தை இன்னும் வாய் திறந்து பேச முடியாமல் இருக்கிறது. நாங்கள் பல விரதங்கள் இருந்து பார்த்துவிட்டோம். ஆனால் முருகப்பெருமான் எங்கள்மீது இரக்கம் காட்டி குழந்தையை இன்னும் பேச வைக்கவில்லை. நாங்கள் உயிரினும் மேலாக நேசிக்கும் இந்தக் குழந்தை பேசும் சக்தி இழந்ததை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவேதான் நாங்கள் உயிரைவிட முயன்றோம்' என்றனர்.
அர்ச்சகர் வடிவிலிருந்த முருகப்பெருமான், 'என் கையில் உள்ளது எது?' என குமரகுருபரரிடம் கேட்டார். அர்ச்சகர் கேள்விக்கு உடனே பதில் சொன்னார். குழந்தையான குமரகுருபரர். 'இது... பூ...' என்று சொல்லிக்கொண்டே 'பூமேவு செங்கமல' எனத் தொடங்கி முருகன்மீது பக்திகொண்டு பாடல்களைப் பாட ஆரம்பித்தார். கந்தர்கலி வெண்பாவைக் குழந்தையான குமரகுருபரர் பாடினார்.
மதுரை மீனாட்சி அம்மன் பரிசாக அளித்த முத்துமாலை
இவர் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் வேண்டுகோளுக்கு இணங்க மதுரை மீனாட்சி அம்மனைப் போற்றி மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் நூலை இயற்றினார். ஒரு சமயம், இந்த நூலில் உள்ள 'வருகைப்பருவம்' என்னும் பகுதியை கோவில் மேடையில் அமர்ந்தவாறு பாடிய போது மதுரை மீனாட்சி அம்மனே சிறு பெண் வடிவத்தில் வந்து குமரகுருபரருக்கு முத்து மாலை பரிசளித்ததாக வரலாறு உள்ளது. மேலும் மீனாட்சி அம்மனைப் போற்றி மதுரைக் கலம்பகம், மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், நீதி நெறி விளக்கம் போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். பின்னர் திருவாரூர் சென்று அங்குள்ள தியாகராச பெருமானைப் போற்றித் 'திருவாரூர் நான்மணி மாலை' என்னும் நூலை இயற்றினார்.
சென்ற ஆண்டு கந்தசஷ்டி விழா நான்காம் நாளன்று வெளியான பதிவு
ஆதி சங்கரரின் காச நோயை குணப்படுத்திய திருச்செந்தூர் முருகன்
https://www.alayathuligal.com/blog/nlxf623gs25b7ycgh6tf5j8n8mjcdl

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
திருச்செந்தூர் - சிறந்த குரு பரிகாரத் தலம்
ஆறுமுகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில், இரண்டாம் படைவீடான திருச்செந்தூர், குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான தலமாகவும், குரு பகவான் தொடர்பான பரிகாரத் தலமாகவும் விளங்குகின்றது.
முருகப் பெருமான் போரிடச் செல்லும் முன், அசுரர்களைப் பற்றிய வரலாற்றை, குரு பகவான் முருகனிடம் விளக்கிய தலமாக திருச்செந்தூர் விளங்குகின்றது. குருவின் விளக்கத்தால் முருகப் பெருமான், அசுரர்களிடம் போரிட்டு சூரபத்மன், சிங்கமுகாசுரன், தாரகாசுரன் ஆகியோரை சம்ஹாரம் செய்து அவர்களை தம் பக்தர்களாக ஆட்கொண்டார். சூரபத்மனுடன் நடந்த போரில் வெற்றி பெற காரணமாக இருந்த குருபகவானுக்கு மரியாதை செலுத்தும் விதமாக திருச்செந்தூர் கோவிலில் முருகர் ஞான குருவாக வீற்றிருக்கிறார். அவருக்கு செய்யும் வழிபாடு முறைகள் அனைத்தும் குரு பகவானுக்கும் செய்ய வேண்டும் என்று அருள் புரிந்தார். இதன் காரணமாக திருச்செந்தூர் முருகனை வணங்கினால், குரு பகவானால் ஏற்படக் கூடிய சிக்கலிலிருந்து தப்பிக்கக் கூடிய பரிகாரத் தலமாக விளங்குகின்றது.
திருச்செந்தூர் பிரகாரத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தியும் விசேஷமானவர். இவரின் வலது கையில் சிவபெருமானுக்குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது. இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் உள்ளது. மேதா தட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட யானைகள், அஷ்ட நாகங்கள், மேதா மலை என 4 நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கின்றார். தட்சிணாமூர்த்தியின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது.
ஒருவருடைய ஜாதகத்தில் குருவின் கோட்சார நிலை வலுவிழந்து காணப்படும் பொழுது திருமணத்தில் தடை மற்றும் வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். இதனை நிவர்த்தி செய்வதற்கு திருச்செந்தூரில் இருக்கும் குருபகவானை வழிபட்டு செல்வதால் நல்ல பலன் காணலாம். குரு பகவானால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள குருவிற்குரிய பரிகாரங்கள் இத்தலத்தில் மேற்கொள்ளப்படுகிறது. அதனால் தான் திருச்செந்தூர் முருகனுக்குரிய ஸ்தலமாக மட்டுமல்லாமல், குரு ஸ்தலமாகவும் பார்க்கப்படுகிறது. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவசியம் ஒருமுறையாவது சென்று வரவேண்டிய தலம் திருச்செந்தூர் ஆகும். குருதிசை, குருபுத்தி நடப்பில் உள்ளவர்கள் மற்றும் குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு, முன்னேற இயலாத நிலையில் இருப்பவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்யலாம்.
சென்ற ஆண்டு கந்தசஷ்டி விழா மூன்றாம் நாளன்று வெளியான பதிவு
இஸ்லாமிய பக்தரின் கடனை அடைத்த செந்திலாண்டவன்
https://www.alayathuligal.com/blog/xrm49wlwbzfd52blj8fa27wcgyw8cs

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து வணங்கிய பஞ்சலிங்கம்
ஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், முருகப்பெருமான் நின்ற திருக்கோலத்தில் கையில் தாமரை மலர் ஏந்தி சிவ பூஜை செய்யும் திருக்கோலத்தில் காட்சித் தருகிறார். இத்தலத்தில் முருகப்பெருமான், சூரபத்மனுடன் போரிட்டு அவனை சம்ஹாரம் செய்து ஆட்கொண்டு தேவர்களை காத்து நின்றார்.
அசுரர் படைகளை சம்ஹாரம் செய்த பாவம் நீங்க, முருகப்பெருமான் கடற்கரையில் ஐந்து லிங்கங்களை பிரதிஷ்டை செய்து சிவ பூஜை செய்தருளினார். முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து வணங்கிய அந்த ஐந்து லிங்கங்களும் இன்றும் பஞ்சலிங்கம் என்ற பெயரில் இங்குள்ள மூலவர் கருவறைக்கு பின்னர் தனி அறையில் காட்சியளிக்கிறது. சன்னதியை அடைய கருவறைக்கு அருகில் உள்ள நுழைவாயிலின் வழியாக செல்ல வேண்டும். இந்த லிங்கங்கள் உள்ள இடத்தைப் பாம்பறை என்கின்றனர். இங்குள்ள மேடையில் ஐந்து லிங்கங்கள் வரிசையாக உள்ளன. இந்த லிங்கங்களுக்கு, ஆவுடையார் என்னும் சக்தி பாகம் இல்லை. உருத்திர பாகமான மேல் பகுதி மட்டுமே உள்ளது. இந்த பஞ்சலிங்கங்களுக்கு நேராக மேலே துளை இருக்கிறது. நாள் தோறும் நள்ளிரவில் தேவர்கள் இவ்வழியாக வந்து இந்தப் பஞ்சலிங்கங்களைப் பூசிப்பதாக கூறுகின்றனர். இந்த லிங்கங்களை நாள்தோறும் தேவர்களும், முருகனும் பூசிப்பதால், இவற்றிற்கு மானிடர் பூசையில்லை. குடமுழுக்கின்போது மட்டும் இந்த பஞ்சலிங்கங்களுக்கென யாகசாலை அமைத்து, வேள்வி புரிந்து வேள்விக் கலச நீரால் அபிஷேகம் செய்கின்றனர்.
.இந்த பஞ்சலிங்கங்களை நாம் தரிசித்து வணங்கினால் நம் முன்வினை பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சென்ற ஆண்டு கந்தசஷ்டி விழா இரண்டாம் நாளன்று வெளியான பதிவு
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் திருச்செந்தூர் இராஜகோபுரம்
https://www.alayathuligal.com/blog/ddkah4agj82ztwy3nemsacm73aea84

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா
முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று திருச்செந்தூர் தலத்தில் வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நிகழ்ந்ததால், கந்த சஷ்டி திருவிழா இத்தலத்தில் 12 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
பல முருகத் தலங்களில் கந்தசஷ்டி விழா ஆறு நாட்களே நடைபெறும்.சில தலங்களில் முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடைபெறும். ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறு நாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாள் முருகப்பெருமான்-தெய்வயானை திருக்கல்யாணம், அடுத்த ஐந்து நாட்கள் திருக்கல்யாணக் கோலத்தில் முருகப்பெருமானின் ஊஞ்சல் சேவை என இவ்விழா பன்னிரெண்டு நாட்கள் நடைபெறும்.
சுந்தசஷ்டி கொண்டாடுவதற்கான காரணங்கள்
சூரபத்மன் வரதம் தவிர்த்து சுந்தசஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு வேறு இரண்டு காரணங்கள் இருப்பதாக மகாபாரதம்,சுக்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.ஒருசமயம் முனிவர்கள் சிலர் உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவக்கி ஆறு நாட்கள் நடத்தினர் யாககுண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.
கந்தப்புராணத்தில், கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள் அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும், ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுக்கருளச் செய்து, நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பதி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.
சென்ற ஆண்டு கந்தசஷ்டி விழா முதல் நாளன்று வெளியான பதிவு
திருசெந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதியின் சிறப்பு
https://www.alayathuligal.com/blog/f2mfw7jgfymnjwlsgtysg9y23rg436

சண்முகநாதர் கோவில்
கேட்ட வரத்தைக் கொடுக்கும் குன்றக்குடி குமரன்
காரைக்குடி - திருப்பத்தூர் சாலையில் காரைக்குடியிலிருந்து மேற்கே 8 கி.மீ தொலைவிலிருக்கிறது குன்றக்குடி. ஊரின் நடுவே உயர்ந்து நிற்கும் மலையின் மேல், குடைவரைக் கோவிலில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.
தனித்தனி மயில் வாகனங்களில் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை
மலைக்கோயில் கருவறையில், ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு, முருகப்பெருமான் சண்முகநாதர் என்ற திருநாமத்துடன், அழகிய மயில்மீது கம்பீரமாக அமர்ந்து, கிழக்கு நோக்கி அருளாசி தருகிறார். முருகப்பெருமான் அமர்ந்திருக்கும் மயில் வடக்குப் பார்த்திருக்கிறது. ஆறுமுகப் பெருமானின் வலமும் இடமுமாக முறையே தனித்தனி மயில் வாகனங்களில் வள்ளியும் தெய்வானையும் வீற்றிருக்கிறார்கள். இதுபோன்ற மூன்று மயில் வாகன தரிசனம் காண்பதற்கரியது. முருகனின் மயில் வாகனமும், முருகப்பெருமானை சூழ்ந்திருக்கும் திருவாசியும், மூலவர் மூர்த்தமும் ஒரே சிலையாக வடிக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பாகும்.
மயில் வடிவில் தோன்றும் குன்றக்குடி மலை
ஒருமுறை சிவபெருமானை தரிசிக்க கயிலைக்கு வந்த பிரம்மாதி தேவர்கள் முருகப்பெருமானையும் வணங்கிப் பணிந்தனர். அப்படி வந்தவர்கள் வணங்கிவிட்டு அப்போது அங்கு உலவிக்கொண்டிருந்த அழகிய மயிலிடம் 'முருகப்பெருமானின் வாகனமாக மாறவேண்டி சூரபதுமன் தனது தம்பியருடன் காஞ்சிபுரத்தில் கடும்தவம் மேற்கொண்டிருக்கிறான்' என்ற விஷயத்தை கூறிச் சென்றுவிட்டார்கள். எங்கே தனக்கு பதிலாக சூரர்கள் முருகப்பெருமானை சுமக்கும் பாக்கியத்தைப் பெற்றுவிடுவார்களோ என்று தேவமயில் வருந்தியது. இதனால் தனது மனவருத்தத்தைப் போக்கிட முருகப்பெருமானைத் தியானித்தது. மயிலின் பிரார்த்தனைக்கு இரங்கிய முருகப் பெருமான், மயிலின் மனவருத்தத்தைப் போக்கிடும்விதத்தில் சூரனையும் அவன் சகோதரர்களையும் கணங்களாக்கித் தம் அருகில் வைத்துக்கொண்டார்.
சூரபதுமனும் அவனுடைய சகோதரர்களும் தேவர்களை பழிவாங்கும் நோக்கில் மயிலிடம் நான்முகனின் அன்னம், திருமாலின் கருடன் ஆகியவை நாங்கள்தான் மயிலைவிட வேகமாக பறக்கக் கூடியவர்கள் என்று சொன்னதாக பொய் சொவினதால் மயில் கோபம் அடைந்தது அன்னத்தையும் கருடனையும் மயில் விழுங்கி விட்டது. நான்முகனும் திருமாலும் முருகனிடம் முறையிட அன்னத்தையும் கருடனையும் மீட்டு தந்தார். பின்பு செய்த குற்றத்திற்காக மயிவை மலையாகிப் போக சாபம் தந்தார். மயிலும் தன் தவறை உணர்ந்து குன்றக்குடிக்கு வந்து முருகப்பெருமானை நோக்கி தவம் இருந்கது. முருகனும் மயிலுக்கு சாப விமோசனம் தந்தார். சாபம் நீங்கப் பெற்ற மயில், 'முருகப் பெருமான் தொடர்ந்து அதே இடத்தில் எழுந்தருளி, வேண்டி வந்து வணங்குபவர்க்கு எல்லா வரமும் அருளவேண்டும்' என்று வரம் கேட்டது.பின் மயிலின் வேண்டுகோளுக்கிணங்க மயில் வடிவமாக தோற்றம் உள்ள இம்மலையில் எழுந்தருளி அருள் தருகிறார்.; மிகவும சிறப்பு வாய்ந்த இக்கோயில் திருப்புகழ் பாடன் பெற்ற திருத்தலமாகும்.
சிறப்பு வாய்ந்த பிரார்த்தனைத் தலம்
இக்தலம் தமிழ்நாட்டிலுள்ள, பிரார்த்தனைத் தலங்களில் மேன்மை வாய்ந்தது. குன்றக்குடி பெருமான் அருளாசி வழங்குவதிலும் தாராளச் சிந்தனைகொண்டவர். ராஜப் பிளவை நோய் ஏற்பட்டு கடுமையாக பாதித்த பெரிய மருதுபாண்டியரை காத்து ரட்சித்தவர் நோய்கள், துன்பங்கள் நீங்கவும், குழந்தை வரம், ஆயுள் பலம், கல்வி அறிவு, செல்வம் விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப் பெறவும் இக்கலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள் குன்றக்குடி காவடி என்பது புகழ்பெற்றது குன்றக்குடிக்கு காவடி எடுத்தாலும் நடக்காது என்ற பழமொழி தமிழ் பேச்சு வழக்கில் பரவியுள்ளது இப்பழமொழியால் குன்றக்குடிக்கு காவடி எடுத்தால் நினைத்தவை கை கூடியே தீரும் என்பது எதிரிமறையாக வலியறுக்கப்படுகிறது.

வியாக்ரபுரீஸ்வரர் கோவில்
தவக்கோலத்தில் காட்சி தரும் முருகப் பெருமான்
புதுக்கோட்டையிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள தலம் திருவேங்கைவாசல். இறைவன் திருநாமம் வியாக்ரபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் பிரகதாம்பாள்.
கோயில் சுற்றுப்பிரகாரத்தில் எண்கோண வடிவில் தவக்கோல சன்னதி உள்ளது. அதில் முருகப்பெருமானின் 5அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான திருமேனி உள்ளது. மற்ற எல்லா தலங்களிலும் உள்ள, முருகப் பெருமான் கைகளில் இருக்கும் வேல், சூலாயுதம், தண்டம் இவற்றிலிருந்து ஒரு வேறுபாடாக தலையில் மகுடத்துடன் கண்ணிமாலை, காதுகளில் பத்ர குணடலம். கழுத்தனி மார்பில் சன்னலீரம், வயிற்றுப்பகுதியில் உதரபந்தம் ஆகிய அணிகலன்களுடன் ஒரு காலை மடித்தும் மறுகாலை தொங்கவிட்ட நிலையில் தாமரை மலர் பீடத்தின் மீது கால் வைத்த வண்ணம் அமர்ந்து, தவம் புரியும் கோலத்தில் காணப்படுகிறார்.
இவரிடம் வேலும் இல்லை. மயிலும் இல்லை. ஆண்டி கோலத்திலும், ராஜ அலங்காரத்திலும் முருகனை வழிபட்டு வந்த நமக்கு, இப்படி தவக்கோலத்தில் முருகனை தரிசிப்பது வித்தியாசமான காட்சியாகும்.

ஆண்டார்குப்பம் பால சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன் அதிகார தோரணை கொண்ட வடிவத்தில் காட்சி தரும் தலம்
சென்னை – கொல்கத்தா நெடுஞ்சாலையில் தச்சூர் கூட்டு சாலையில் வழியாக பொன்னேரி செல்லும் வழியில் அமைந்துள்ளது ஆண்டார்குப்பம். ஆளும் கோலத்தில் முருகன் இங்கு இருப்பதால் 'ஆண்டார்குப்பம்' என அழைக்கப்படுகிறது .
இங்கு முருகன் அதிகார தோரணை கொண்ட வடிவத்தில் நமக்கு காட்சி தருகிறார் .பிரணவத்திற்கு பொருள் கூறும்படி அதிகாரத்துடன் இடுப்பில் கைவைத்து கேள்வி கேட்க்கும் தோரணையில் அவரது தோற்றம் இருக்கிறது . பிரணவத்திற்கு பொருள் தெரியாத பிரம்மனை, முருகன் சிறையில் அடைத்ததோடு அல்லாமல் படைப்பு தொழிலையும் தானே எடுத்து கொண்டார்.
குழந்தை, இளைஞர்,முதியவர் என்ற் மூன்று கோலத்தில் காட்சி தரும் முருகன்
முருகன் இங்கு வேல் ,வஜ்ரம் , சக்தி என எவ்வித ஆயுதம் இல்லாமல் காட்சி தருகிறார் . சுவாமிக்கு அருகில் இரண்டு யானை வாகனம் இருக்கிறது. மனிதர்களின் வாழ்க்கையில், சிறுவயதில் குழந்தையாகவும், நடுவயதில் இளைஞராகவும், முதுமையில் முதியவராக மாறுவதே காலசக்கரத்தின் பணி. அதனை போன்று இத்திருத்தலத்தில் காலையில் குழந்தையாகவும், உச்சி வேளையில் இளைஞராகவும், மாலையில் முதியவராகவும் மூலவர் முருகபெருமான் காட்சி அளிப்பது உலகில் இங்கு தவிர வேறு எங்கும் இல்லை என்பது இத்திருக்கோயிலின் சிறப்பு.
பிரம்மா இங்கு முருகனுக்கு எதிரில் நீள்வட்ட சிலை வடிவில் இருக்கிறார் . இதில் பிரம்மாவிற்கு உருவம் இல்லை அவருக்குரிய தாமரை , கமண்டலம் ,அட்சரமாலை மட்டும் இருக்கிறது . இங்கு முருகன் யானை வாகனத்துடன் காட்சி தருகிறார் . இத்தலத்தை பற்றி அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார் .
இத்தலத்து முருகனை நாம் வந்து வணங்கினால் பொறுப்பான பதவி ,அதிகார பதவிகள் மற்றும் புத்திசாலியான குழந்தைகள் ஆகியவை கிடைக்கும் .

சுப்பிரமணிய சுவாமி கோவில்
பச்சைமலை முருகனின் பரவசப் புன்னகை
ஈரோடு மாவட்டம், கோபிச் செட்டிப்பாளையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்.
பச்சைமலை மூலவர் பால தண்டயுதபாணியாகக் காட்சி தருகிறார். பச்சைமலை மூலவரின் புன்னகை நம்மை பரவசப்படுத்தும் சிறப்பு உடையது. பழனியை போன்றே இங்கு மூலவர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். மேற்கு நோக்கிய முருகன் திருத்தலங்கள் மிகவும் அரிது.
பச்சைமலை முருகன் கோவில் வரலாறு
முன்னொரு காலத்தில் துர்வாச முனிவர் ஒருமுறை கொங்கு நாட்டிற்கு எழுந்தருளினார். குன்னத்தூர் அருகே வந்து, சிவ பூஜை செய்ய சரியான இடத்தை தேட முற்பட்டார். அப்போது, கோபி அருகே அமைந்துள்ள மொடச்சூர் என்னும் ஊர் தான் சிவ பூஜை செய்ய சரியான இடம் என்பதை ஞான திரிஷ்டியால் உணர்ந்து அங்கு வந்து சிவ பூஜை செய்ய முற்படுகிறார். அப்போது குறை தீர்க்கும் குமரக் கடவுளை காண எண்ணி அவரது மனம் பூஜையில் திளைக்க மறுக்கிறது. குறை தீர்க்கும் குகனை எண்ணி தவத்தால் அருகில் உள்ள பச்சைமலை ( மரகதாச்சலம்/ மரகதகிரி) என்னும் குன்றை அறிகிறார். அங்கு அவருக்கு பாலதண்டாயுதபானியாக முருகன் காட்சி அளிக்கிறார். அவரின் வேண்டுகோளை ஏற்று இறைவன் பச்சைமலையில் நிலையாகக் குடிகொள்கின்றான். துர்வாசர் முருகனை மேற்கு நோக்கி பிரதிஷ்டை செய்கிறார்.
கால ஓட்டத்தில், மரகதாச்சலத்தின் மகிமையை உலகம் மறந்தது. கோவில் மிகவும் பாழடைந்தது. அப்போது குப்புசாமி கவுண்டர் என்ற பக்தர் இறைவனை தரிசிக்க வருகிறார். அவருக்கு ஜோதி வடிவாக அருளிய முருகன், தன் கோவிலை பராமரிக்குமாறு அவருக்கு அசரீரியாக ஆணை பிறப்பிக்கிறார். இறைவனின் ஆணை ஏற்று பூஜைகள் தொடங்கப்பட்டது. பக்தர்களால் இணைந்து திருப்பணிகள் பல செய்யப்பட்டது. இன்று மீண்டும் மரகதாச்சலபதியாகிய பச்சைமலை பாலமுருகன், தமிழகமெங்கும் உள்ள முருக பக்தர்களால் கொண்டாடப்படுகிறான்.
தாரா அபிஷேகம்
இத்தல மூலவருக்கு தாரா அபிஷேகம் செய்வது பிரசித்தமான வழிபாடுகளில் ஒன்று. 108 லிட்டர் பால் கொண்டு 11 முறை ருத்ரம் ஓதி செய்யப்படும் இந்த வழிபாட்டால் நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வு கிடைக்கிறது.
இத்தல முருகனை வணங்கினால் திருமணம் கைக்கூடும்.அதே போல குழந்தை பேறு வேண்டி நிற்கும் தம்பதிகள் கந்தசஷ்டி விரதமிருந்து வழிபட, குழந்தை பாக்கியம் அருள்கிறான் குமரன். இந்த விரதத்திற்காக வருடத்திற்கு சுமார் 5000 பேர் இத்தலத்தில் காப்புக் கட்டிக் கொண்டு விரதமிருக்கிறார்கள்.
பங்குனி உத்திரத்தன்று மும்மூர்த்தியாகத் திகழும் முருகன்
பங்குனி உத்திர கல்யாண உற்சவத்தின் போது சிவப்பு சாத்தி உற்சவம் நடைபெறுகிறது. அன்று ஷண்முகர் திருசெந்தூரை போலவே நடராஜராகவும் காட்சி அளிப்பார். அன்றைய தினம் இரவு வெள்ளை சாத்தி உற்சவமும், மறுநாள் பங்குனி உத்திரத்தன்று பச்சை சாத்தி உற்சவமும் நடைபெறும். முருகன் தானே சிவன், பிரம்மா , விஷ்ணுவாகத் திகழ்வதை உணர்த்தவே இவ்வலங்காரங்கள் செய்யப்படுகின்றது.

பாலதண்டாயுதபாணி கோவில்
வாதம் நோய் தீர்க்கும் குமரமலை முருகன்
புதுக்கோட்டையிலிருந்து காரையூர் செல்லும் வழியில் 12 கி.மீ., சென்றால் குமரமலை விலக்கு வரும். அங்கிருந்து சற்றுதூரம் நடந்தால் மலை அடிவாரத்தை அடையலாம். மலையில் 45 படி ஏறினால் கோவிலை அடையலாம். சுவாமிக்கு பாலதண்டாயுதபாணி என்ற திருநாமம்.
குமரமலை முருகனின் வரலாறு
குமரமலை பகுதியில் சேதுபதி என்ற தீவிர முருக பக்தர் வாழ்ந்து வந்தார். அவர் சிறு வயது முதலே பழநிக்கு பாதயாத்திரை மேற்கொள்பவர். 80 வயதைக் கடந்த நிலையில், ஒருமுறை கார்த்திகையன்று பழனிக்கு காவடி எடுத்துச் செல்ல முடியாத அளவுக்கு அவர் உடல் நோயுற்றது. 'பழனிக்குச் சென்று வழிபட முடியவில்லையே? இனி நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்?' என்ற வேதனைப்பட்ட அவர் கனவில் தோன்றிய முருகன், இத்தனை ஆண்டுகள் நீ என்னைத் தேடி வந்தாய். இந்த ஆண்டு உன்னைத் தேடி நான் வருகிறேன். உன் ஊருக்கு அருகிலுள்ள குன்றில் சங்குச் செடிகள் வளர்ந்து கிடக்கும் இடத்திற்கு காலையில் நான் வருவேன். அங்கு வந்து என்னைத் தரிசனம் செய்து வழிபடு. நான் அங்கு குடிகொண்டதற்கு அடையாளமாக அந்த இடத்தில் ஒரு விபூதிப் பை, உத்திராட்ச மாலை, பிரம்பு, எலுமிச்சம் பழம் ஆகியவை இருக்கும்.
அந்த இடத்தில் மேற்கு நோக்கி ஒரு வேலை வைத்து நீயும் இப்பகுதி மக்களும் வழிபடுங்கள். இனி இந்தக் குன்று 'குமரமலை' என்ற பெயருடன் விளங்கும். இப்பகுதி மக்கள் அனைவரும் அனைத்து நன்மைகளும் பெறுவார்கள்! என்று சொல்லி மறைந்தார்.
கனவில் முருகன் சொல்லியபடி சங்குச் செடிகளின் இடையில் இருந்த விபூதிப் பை, பிரம்பு, உத்திராட்ச மாலை, எலுமிச்சம் பழம் அனைத்தையும் கண்டு, பழனி முருகன் வந்தமர்ந்த இடத்தில்,அவர் அருளாணைப்படி ஆள் உயர வேலை பிரதிஷ்டை செய்து, அப்பகுதி மக்களும் வழிபட்டனர்.
வேலை எடுத்து விட்டு, அந்த இடத்தில் பழனி தண்டாயுதபாணியின் திருவுருவத்தை எழுந்தருளச் செய்யலாம் என்று திட்டமிட்ட போதும் முருகன் தோன்றி, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் இருக்கும் சிற்பியின் பெயரைச் சொல்லி, 'அவர் ஒரு முருகன் சிலையை வடிவமைத்து வைத்திருக்கிறார். அதை நான் சொன்னதாகச் சொல்லி கேள், தருவார். வாங்கி வந்து நான் வந்து நின்ற சங்குச் செடி மண்டிக் கிடக்கும் இடத்தில் மேற்கு நோக்கி வைத்து வழிபடுங்கள்' என்று சொல்லி மறைந்தார்.
அந்த இடத்தில் கோவில் கட்டி, சிற்பியிடம் பெற்ற பாலமுருகன் சிலையை பிரதிஷ்டை செய்தார்.
சங்கு சுனைத் தீர்த்தம்
குமரமலைக்கு மேல் சங்கு வடிவிலான சுனைத்தீர்த்தம் உள்ளது. இங்கிருந்தே சுவாமிஅபிஷேகத்துக்கு தேவையான புனித நீர் எடுக்கப்படுகிறது. கோவிலில் வழங்கப்படும் இந்த தீர்த்தத்தை பக்தர்கள் பருகுவதன் மூலம் நோய் நொடிகள் நீங்குவதாகவும் நம்பிக்கையுள்ளது.
வாதநோய்க்கு பிரார்த்தனை
வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குமரமலை அடிவாரத்திலுள்ள தீர்த்தத்தில் நீராடி முருகனுக்கு பால் அபிஷேகம் செய்வதுடன், அர்ச்சனை செய்து வழிபட்டு செல்வதால் வாதம் நோய் நீங்குகிறது.
வேலுக்கு வளையல் கட்டி, சுகப் பிரசவத்திற்கு பிரார்த்தனை
இப்பகுதி பெண்கள் தங்கள் வளைகாப்பு நிகழ்ச்சியன்று அர்த்தமண்டபத்திலுள்ள வேலில் வளையல்களை கட்டி வழிபடுகின்றனர். இவ்வாறு செய்தால் பிரசவம் எளிமையாகும் என்பது நம்பிக்கை. குமரமலைக்கு சஷ்டி திதிகளில் வந்து விரதம் இருப்பதன் மூலம் திருமணத்தடை நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும் செய்வதாக நம்பிக்கையுள்ளது.

சுப்பிரமணிய சுவாமி கோவில்
தனித்தனி மயில் வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் முருகன், வள்ளி, தெய்வயானை
திருச்சி நகரத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் லால்குடிக்கு அருகில் உள்ள திண்ணியம் எனும் தலத்தில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஈசனின் திருநாமம் கோடீசுவரர். இறைவி பிருகந்தநாயகி.
இக்கோவிலின் உள்ளே நுழைந்ததும் நமக்கு முதன்மையாக காட்சி தருபவர் சுப்பிரமணிய சுவாமிதான். பொதுவாக சிவாலயங்களில் ஈசுவரனை தரிசித்த பின்புதான் முருகப்பெருமானை தரிசிக்கும் வகையில் சன்னதிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இக்கோவிலில் ஒரே இடத்தில் நின்றபடி சிவனையும், முருகனையும் தரிசிக்கும்படி சன்னதிகள் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும்.
மற்ற கோவில்களில் தனியாகவோ அல்லது வள்ளி தெய்வயானை சமேதராகவோ முருகப்பெருமான் மயில் மேல் எழுந்தருளியிருப்பார். ஆனால் இக்கோவிலில் மூவரும் தனித்தனியே மயில் வாகனத்தில் எழுந்தருளியிருப்பது மேலும் ஒரு சிறப்பாகும்.
திருமணப்பேறு, குழந்தை வரம், கல்வி ஞானம் அருளும் முருகன்
இத்தலத்தில் முருகனுடைய வலது கரம், அபயம் காட்டுகிறது. பக்தர்களை காக்கும் கரமாக விளங்குகிறது. அதேசமயம் இடது கரம் வரத ஹஸ்தமாக இல்லாமல் அரிஷ ஹஸ்தமாக உள்ளது. அதாவது, பக்தர்களுடைய கஷ்டங்களை தான் வாங்கிக் கொள்ளும் கையாக உள்பக்கமாக அணைந்தபடி உள்ளது. பிற பத்துக் கரங்களும் பக்கத்துக்கு ஐந்தாக அமைந்து, பக்தர்களின் துயர்களை யெல்லாம் களைகின்றன. இதனால் இந்தக் கோயிலுக்கு வருபவர்களுக்கு திருமணத்தடை நீங்குதல், குழந்தை பாக்கியம், கல்வி ஞானம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கிறது என்கிறார்கள் பக்தர்கள். இக்கோவில் முருகன் சிலை, வண்டியிலிருந்து கீழே சரிந்து இத்தலத்தில் நிலை கொண்டுவிட்டதால், இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடுவோர் விரைவிலேயே சொந்த வீடு, நிலம் வாங்குவார்கள் என்றும் நம்பப்படுகிறது.

குழந்தை வேலப்பர் கோவில்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை கிராமத்தில் குழந்தை வேலப்பர் கோவில்அமைந்துள்ளது. இக்கோவில் மூன்றாயிரம் ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் உள்ள சிலையானது போகர் என்னும் சித்தரால் நவபாஷானத்தால் உருவாக்கப்பட்டது.இந்தியாவில் இரண்டு கோவில்களில் மட்டுமே நவபாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான முருகன் சிலைகள் உள்ளன, அவற்றில் ஒன்று பழனி மலை மீதுள்ள தண்டாயுதபாணி முருகன் சிலை. மற்றொன்று பூம்பாறை மலையில் உள்ள குழந்தை வேலப்பர் முருகன் சிலை.
பழனி மலை முருகன் நவபாஷான சிலையை உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர் மாமுனிசித்தர் போகர் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் பூம்பாறை முருகன் சிலையையும் அவர்தான் நவபாஷானத்தால் உருவாக்கியவர் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. அதுபோல் அருள் பாலிப்பதிலும் பழனி முருகன் போன்று அருள் தர வல்லவர் என்பது அந்த கோவிலு்க்கு சென்று அனுபவரீதியாக பயன் அடைந்த பக்தர்களுக்குத்தான் தெரியும்.
பழனி மலைக்கும், பூம்பாறை மலைக்கும் நடுவில் உள்ள யானை முட்டி குகையையில் சித்தர் போகர் அமர்ந்து, தான் கற்று வந்த கலைகளை சோதிக்க அதற்கான மூலிகைகள் ராசாயண பொருட்கள் சேகரித்து முதலில் ஒரு முருகன் சிலையை உருவாக்கினார். அந்த சிலையைத் தான் பழனி மலை மீது பிரதிஷ்டை செய்தார். தண்டம் கொண்டு அச்சிலையை உருவாக்கியதால் அதற்கு தண்டாயுதபாணி என்று பெயர். அக்கோவிலை இறைவனிடம் வேண்டி சிவ பூதங்களால் கோவில் மற்றும் மண்டபகங்களை கட்ட செய்தார் என்பது வரலாறு.
பின்னர் சித்தர் போகர் மறுபடியும் சீனநாட்டிற்கு சென்று பஞ்சபூத சக்திகளை மீண்டும் பெற்று யானை முட்டி குகைக்கு வந்து ஞான நிலையை அடையும் பிரம்மத்தை உணர்ந்து கொள்ளவும், ஆதிபராசக்தியின் துணைகொண்டு குருமூப்பு என்ற அருமருந்தை நிலைநிறுத்தவும் பஞ்சபூதங்களை நிலைப்படுத்தி அதன் மூலம் குருமூப்பு சிலையை உருவாக்கினார், அந்த சிலைதான் பூம்பாறை மலையுச்சியிலுள்ள, சேர மன்னன் தவத்திற்கு பழனி முருகன் திருமண காட்சியளித்து, சேர மன்னனால் கட்டப்பட்ட திருமண மண்டபத்தில் பிரதிஷ்டை செய்தார்.
அருணகிரிநாதரை குழந்தை வடிவில் வந்து காப்பாற்றிய முருகன்
ஒரு சமயம் அருணகிரிநாதர் பூம்பாறை மலைக்கு வந்து முருகனை தரிசிக்க வந்தார். அப்போது இரவு நேரமானதால் கோவில் மண்டபத்தில் தங்கி தூங்கி விட்டார். அப்போது ராட்சசி ஒருத்தி அருணகிரிநாதரை கொல்ல வந்தபோது, முருகன் குழந்தை வடிவம் கொண்டு காவியுடை அணிந்திருந்த அருணகிரி நாதர் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு, குழந்தையும் தாயும்தான் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி அருணகிரிநாதரைக் கொல்லாமல் சென்று விட்டதாம்.
இதனை தனது ஞான திருஷ்டியால் நடந்த சம்பவத்தை அறிந்த அருணகிரிநாதர், குழந்தை வேடம்த்தில் வந்து தன் உயிரை காப்பாற்றியது முருகனே என்று உணர்ந்தார். அன்று முதல் இத்தலத்து முருகன்,குழந்தை வேலப்பர் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

ரணபலி முருகன் கோவில்
முருகன் உருவம் பொறித்த அபூர்வமான சத்ரு சம்ஹார வேல்
ராமநாதபுரம் அருகே பெருவயல் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிவ சுப்ரமணிய சுவாமி என்ற ரணபலி முருகன் கோவில் உள்ளது. ராமநாதபுரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில், தேவிபட்டினம் செல்லும் வழியில், பெருவயல் விலக்கு எனற இடத்தில் இருந்து மேற்கே 3 கி.மீ. தொலைவில் பெருவயல் கிராமத்தில் ரண பலி முருகன் கோவில் உள்ளது. ரணபலி முருகன் கோவிலுக்கு பெருமை சேர்ப்பது முருகன் உருவம் பொறித்த சத்ரு சம்ஹார வேல் ஆகும். இத்தகைய வேலை நாம் வேறு எந்தத் தலத்திலும் காண முடியாது.
முருகன் சுட்டிக் காட்டி கிடைத்த சத்ரு சம்ஹார வேல்
இராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களில் ஒருவரான கிழவன் சேதுபதியின் தளபதியாக விளங்கியவர் தளவாய் வயிரவன் சேர்வை. முருகபக்தரான இவர் அடிக்கடி திருச்செந்தூர் முருகன் கோவில் சென்று வழிபட்டு வருவது வழக்கம்.
ஒருநாள் அவர் கனவில் முருகன் தோன்றி, என்னை வழிபட இனி திருச்செந்தூர் வர வேண்டாம். தேவிப்பட்டினம் கடலில் நவபாஷாண கற்கள் இருக்கும் இடத்துக்குக் கிழக்கில் கண்ணாமுனை என்ற இடத்தில் மேலே கருடன் வட்டமிடும். அதற்குக் கீழே கடலில் மாலையும் எலுமிச்சம் பழமும் மிதக்கும். அந்த இடத்தில் கடலுக்கு அடியில் வள்ளி-தெய்வானை சமேதராக சத்ரு சம்ஹார வேலுடன் நான் இருப்பேன். என்னை எடுத்துச் சென்று உங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடு என்று கூறினார்.
இதே போன்று கனவு அருகில் உள்ள திரு உத்திரகோச மங்கை என்னும் தலத்தைச் சேர்ந்த ஆதிமங்களேஸ்வர குருக்களுக்கும் தோன்றியதால், இருவரும் மறுநாள் சந்தித்து, முருகன் கனவில் சொன்ன அடையாளங்களின்படி ஆட்களை விட்டு கடலுக்குள் முருகன் சிலையைத் தேடினார்கள். பல மணி நேரம் தேடியும் சிலை கிடைக்கவில்லை. கடைசியில் வயிரவன் சேர்வையே கடலுக்குள் மூழ்கி அந்த சிலையையும் வேலையும் எடுத்து வந்தார். கடலுக்குள் இறங்கி முருகன் சிலையை எடுக்க முற்பட்ட பலருக்கு உடல் முழுவதும் ரணம்(காயம்) ஏற்பட்டதால் மூலவர் சிவ சுப்ரமணிய சுவாமி, ரணபலி முருகன் என்றும் அழைக்கப்படுகிறார்.
விஷயம் அறிந்த ராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி, தன் அரண்மனையில் 'ராமலிங்க விலாசம்' என்ற தர்பார் மண்டபம் கட்டுவதற்காக வைத்திருந்த பொருட்களைத் தந்து பெருவயல் ஊரணிக்கரையில் முருகனுக்கு ஆலயம் அமைக்க நிலங்களையும் தானமாக கொடுத்து உதவினார். அதன் பின்னர் ஆலயத்திருப்பணிகள் வேகமாக நடைபெற்று, கடலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
தளபதி வயிரவன் சேர்வை ராமேஸ்வரத்தில் உள்ள இராமநாத சுவாமி, பர்வத வர்த்தினி அம்மன் மீதும் தீவிர பக்தி உடையவராதலால் இருவருக்கும் இங்கு சன்னதி அமைத்துள்ளார்.
பக்தர்களின் உள்ள ரணத்தை ஆற்றும் முருகன்
பக்தர்களின் உள்ளத்தில் ரணத்தை ஏற்படுத்தும் கடன், பிணி, சத்ரு ஆகிய துன்பங்களையெல்லாம் பலி செய்து, அவர்களுக்கு சகல நன்மைகளும் அருள்வதால், ரணபலி முருகன்' என்ற பெயர் இவருக்கு மிகப் பொருத்தமான பெயராகும். முருகன் உருவம் பொறித்த சத்ரு சம்ஹார வேலை பிரம்மோற்சவம், சூரசம்ஹாரம் போன்ற கோவில் விழா நாட்களில்தான் நாம் தரிசிக்க முடியும். இந்த வேலைத் தரிசித்தவர்களுக்கு எதிரிகள் தொல்லை நீங்கி சகல செளபாக்கியஙகளும் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் இங்கு முருகன் ராகு கேதுக்களுடன் தனியாக காட்சி தருகிறார் இவரை வழிபட்டால் ராகுதோஷம் நீக்குவார் என்பது ஐதீகம்..
இத்தலத்துக்கு வந்த பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் திரு.கிருபானந்த வாரியார் அவர்கள், இங்குள்ள முருகனின் திரு உருவம் பொறிக்கப்பட்ட வேல் போல் எங்கும் கண்டதில்லை என இத்தலத்தின் சிறப்பை பற்றி கூறியதை இங்கு அவரது புகைப்படத்துடன் செய்தியாக வைத்துள்ளார்கள்.
இக்கோவில் கட்டிய தளபதி வயிரவன் சேர்வையின் சமாதிக்கோவிலும் இங்கு உள்ளது. அங்கு சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது.

வாழைமர பாலசுப்பிரமணியர் கோவில்
பக்தனுக்காக வாழை மரத்தில் எழுந்தருளிய முருகன்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெம்பக்கோட்டை என்ற இடத்திற்கு அருகில் துலுக்கன்குறிச்சி என்ற இடத்தில் வாழைமர பாலசுப்பிரமணியர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வாழை மரத்துடன் முருகப்பெருமான் அருள்பாலிப்பது விசேஷமானதாகும். சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் தல விருட்சமாகவும் வாழைமரமே உள்ளது.
19–ம் நூற்றாண்டில் துலுக்கன்குறிச்சி கிராமத்தில் வேலாயுதம் என்ற முருக பக்தர் வாழ்ந்து வந்தார். முருகனை வணங்கிய பின்பே அன்றாட பணிகளை செய்யத் தொடங்குவார். அவர், தனது நிலத்தில் வாழை மரங்களை நட்டு வைத்து அதனை கண்ணும், கருத்துமாக பராமரித்து வந்தார். மேலும் அவர்,தன்னுடைய ஊரில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று, அங்குள்ள முருகப்பெருமானை தினமும் வழிபட்டு வருவார். அந்த ஆலயம் வெம்பக்கோட்டை என்ற இடத்திற்கு அருகில் வனமூர்த்திலிங்கபுரம் என்ற ஊரில் இருந்தது.
ஒரு நாள் அவர் கனவில் முருகப்பெருமான் தோன்றி, 'பக்தனே! நீ தினமும் என்னைக் காண வெம்பக்கோட்டை வர வேண்டாம். நானே உன்னைத் தேடி வந்துவிட்டேன். நீ மிகவும் ஆசையாக பராமரிக்கும் வாழை மரங்களில், இப்பொழுது எந்த வாழை மரத்தில் குலை தள்ளியிருக்கிறதோ, அந்த மரத்தில் நான் இருக்கிறேன்'என்று கூறி மறைந்தார். கனவில் இருந்து விழித்தெழுந்த முருக பக்தர், தன் மீது இறைவன் கொண்டிருக்கும் அன்பை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
இந்த நிலையில் அந்தக் கிராமத்திற்கு அருகில் உள்ள செவல்பட்டி ஜமீன்தாரின் கணக்குப் பிள்ளையின் மகனுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. திருமண வீட்டின் வாசலில் வைக்க குலை தள்ளிய வாழை மரம் தேவைப்பட்டது. பணியாட்கள் பல ஊர்களில் தேடியும் எங்குமே, குலை தள்ளிய வாழை மரம் கிடைக்கவில்லை. துலுக்கன்குறிச்சி கிராமத்தில், முருக பக்தர் வேலாயுதம் வீட்டு தோட்டத்தில் குலை தள்ளிய வாழை மரம் இருப்பதை அறிந்து, அவரிடம் வந்து கேட்டனர்.
அதற்கு வேலாயுதம், 'இந்த மரத்தில் முருகன் குடியிருக்கிறார். அவரை நான் தினமும் வழிபட்டு வருகிறேன். எனவே என்னால் அந்த மரத்தை உங்களுக்கு தர முடியாது' என்று கூறி மறுத்தார்.
இதனை பணியாட்கள் ஜமீன்தாரிடமும், அவரது கணக்குப்பிள்ளையிடமும் தெரிவித்தனர். இதைக் கேட்டதும் கணக்குப்பிள்ளையின் மகனான மாப்பிள்ளை, 'நானே சென்று அந்த மரத்தை கொண்டு வருகிறேன்' என்று கூறிவிட்டு, முருக பக்தரின் தோட்டத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் வேலாயுதத்திடம் மரத்தை தரும்படி கேட்டார். வேலாயுதம் மீண்டும், 'இது மரமல்ல, நான் வணங்கும் தெய்வம். அதனால் இதனை வெட்டக்கூடாது. அதற்கு மேல் உங்கள் விருப்பம்’ என்று கூறிவிட்டார்.
வாழைமரத்திலிருந்து பீறிட்ட ரத்தம்
வேலாயுதம் பேச்சைக் கேட்காமல், கணக்குப்பிள்ளையின் மகன் அரிவாளால், முருகப்பெருமான் குடியிருந்த வாழைமரத்தை வெட்டினார். மரத்தை வெட்டியதும் அதில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. மேலும் அந்த இடத்தில் நாகப்பாம்பு ஒன்று தோன்றி, கணக்குப்பிள்ளையின் மகனை தீண்டியது. ஜமீன்தாரும், கணக்குப்பிள்ளையும் இந்தச் செய்தியை அறிந்து பதறித் துடித்து ஓடி வந்தனர். இறந்து கிடந்த தன் மகனைப் பார்த்து கணக்குப்பிள்ளை கண்ணீர் வடித்தார். 'மணக்கோலத்தில் பார்க்க வேண்டிய பிளளையை, பிணக்கோலத்தில் பார்க்கிறேனே' என்று கதறி அழுதார்.
கணக்குப்பிள்ளை மகன் உயிர்ப்பித்து எழுந்த அதிசயம்
பின்னர் கணக்குப்பிள்ளை தன் மகனை உயிர்ப்பித்து தரும்படி, வேலாயுதத்திடம் வேண்டினார். அதற்கு அவர் தன் கையில் எதுவும் இல்லை. முருகப்பெருமானின் கருணையால் அவர் உயிர் பிழைப்பார் என்று கூறினார். பிறகு ஒரு பிரம்புக் குச்சியை எடுத்து இறைவனை நினைத்து, 'முருகா.. முருகா..' என்று மூன்று முறை கூறிக் கொண்டு சடலத்தின் மீது தடவினார். கணக்குப்பிள்ளையின் மகன், ஏதோ உறக்கத்தில் இருந்து எழுந்ததுபோல் எழுந்தார். அனைவரும் முருக பக்தரிடம் மன்னிப்புக் கேட்டனர்.
ஜமீன்தார் முருகபக்தரிடம், ‘உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். என்ன வேண்டும் என்று கேளுங்கள்’ என்றார். அதற்கு அவர், 'நான் வணங்கும் வாழை மர பாலசுப்பிரமணியரை சுற்றி, நான்கு கம்புகள் ஊன்றி மேற்கூரை போட்டுத் தாருங்கள்' என்று கேட்டார். அவரும் அவ்வாறே செய்து கொடுத்தார். வாழை மர பாலசுப்பிரமணியரின் சக்தியை அறிந்து கொண்ட அக்கம் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள் பலரும், இங்கு வந்து வழிபாடு செய்யத் தொடங்கினர். பிற்காலத்தில் பக்தர்களின் வசதிக்காக ஆலயம் புதுப்பிக்கப்பட்டது.
கோவிலில் நடத்தப்படும் பூஜைகள்
மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில், யாகம் வளர்க்கப்பட்டு, சிறப்பு பூஜையும், அபிஷேகமும் ஆராதனையும் செய்யப்படுகிறது. மார்கழி மாதம் நித்திய பூஜையும், மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று பூஜையும், வருடம் தோறும் வைகாசி விசாகத்தன்று சிறப்பு பூஜையும், பால்குட ஊர்வலமும், அன்னதானமும் வழங்கப்படுகிறது.
இந்த வாழை மர பாலசுப்பிரமணியரை வழிபட்டால் குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும். திருமண வரம், குழந்தை பாக்கியம் போன்றவை வந்து சேரும்.

வழிவிடும் முருகன் கோவில்
கருவறையில் விநாயகரும், முருகனும் சேர்ந்து காட்சி தரும் தலம்
ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் வழிவிடும் முருகன் கோவில் அமைந்துள்ளது. பொதுவாக கோவில்களில் நாம் உள்ளே சென்றதும் விநாயகரை வணங்கிவிட்டு திரும்பி வரும் போது முருகனை வழிபடுவது போன்ற அமைப்பு இருக்கும். ஆனால் இக்கோவில் கருவறையில் விநாயகரும், முருகனும் சேர்ந்து காட்சி அளிப்பது தனிச் சிறப்பாகும். இத்தகைய தரிசனத்தை வேறு எந்தத் தலத்திலும் காண முடியாது.
வழிவிடும் முருகன் என்று பெயர் ஏற்பட்டதின் காரணம்
பல ஆண்டுகளுக்கு முன், தற்போது கோவில் இருக்கும் இடத்தில் ஒரு அரச மரமும், அதனடியில் இருந்த வேலுக்கு பூஜையும் நடத்தப்பட்டு வந்தது. அரச மரத்திற்கு அருகில் இருந்த நீதிமன்றத்திற்கு வருபவர்கள், தங்கள் வழக்குகளில் வெற்றி பெற வேண்டுமென்று இந்த வேலை வணங்கிச் சென்றார்கள்.
இந்த முருகனை வணங்கியவர்கள் வாழ வழி பெற்றதால் இவருக்கு வழிவிடும் முருகன் என்ற பெயர் ஏற்பட்டது. இவரை வந்து வழிபடுபவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும், வாழ்க்கை முழுவதும் துணையாகவும் விளங்குவார் எனபது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
சனி பகவானின் பாதிப்பைக் குறைக்கும் சாயா மரம்
சனி பகவானின் தாயார் சாயாதேவி. இக்கோவிலில் சாயா எனறொரு மரம் உள்ளது. இம்மரத்தை சாயாதேவியின் அம்சமாக இங்குள்ள மக்கள் வழிபடுகிறார்கள். எனவே இத்தலத்துக்கு வந்த் வழிபடுபவர்களை, தன் தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு சனி பகவான் அவர்களுக்குத் தன்னால் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதாக ஐதீகம்.
சகோதரர்களின் சொத்துப் பிரச்சனைத் தீர்க்கும் தலம்
சொத்துக்காக நீதிமன்றத்தில் வழக்காடும் சகோதரர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டால் பிரச்சனைத் தீர்ந்து இருவரும் சேர்ந்து வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சுப்பிரமணிய சுவாமி கோவில்
நான்கு உற்சவர்கள் கொண்ட முருகப்பெருமானின் படை வீடு
பொதுவாக ஒரு கோவிலில் ஒரு உற்சவர் அல்லது சில இடங்களில் இரண்டு உற்சவர்கள் திருமேனி அமையப்பெற்றிருக்கும். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நான்கு உற்சவர்கள் எழுந்தருளியிருப்பது சிறப்பம்சம் ஆகும். இந்த நான்கு உற்சவர்களுக்கும் தனிச் சன்னதிகள் இருக்கின்றன.
திருச்செந்தூர் கோவிலில் எழுந்தருளியிருக்கும் நான்கு உற்சவர்கள்
ஸ்ரீ ஆறுமுகநயினார் (சண்முகப்பெருமான்)
ஸ்ரீ ஜெயந்திநாதர்
ஸ்ரீ அலைவாயுகந்த பெருமான்
ஸ்ரீ குமரவிடங்க பெருமான்
இதில் ஆறுமுகநயினார் வருடத்திற்கு இரண்டு முறை ஆவணி மற்றும் மாசி திருவிழாக்களில் திருவீதி உலா எழுந்தருளுவார். கந்த சஷ்டி சூரசம்ஹார விழா மற்றும் தினசரி தங்க தேர் உலா ஆகியவற்றில் ஜெயந்திநாதர் எழுந்தருளுவார். ஆவணி மற்றும் மாசி திருவிழாக்களிலும், பங்குனி உத்திரம் - ஐப்பசி திருக்கல்யாணத்திலும் குமரவிடங்க பெருமான் எழுந்தருளுவார். குமரவிடங்க பெருமானுக்கு மாப்பிள்ளை சுவாமி என்ற பெயரும் உண்டு. வைகாசி விசாகம் அன்று மயில் வாகனத்தில் அலைவாயுகந்த பெருமான் எழுந்தருளுவார்.

சுவாமிநாத சுவாமி கோவில்
பதினொரு முகங்கள் கொண்ட அபூர்வ முருகன்
இராமநாதபுரம் குண்டுக்கரை எனும் இடத்தில் அமைந்துள்ளது சுவாமிநாத சுவாமி கோவில்.
சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்திருந்தார். அப்போது முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அதே வடிவில், விஸ்வரூபம் எடுத்த நிலையில் இத்தலத்து உற்சவர் முருகன் தரிசனம் தருகிறார். இப்படி பதினொரு முகங்கள் கொண்ட முருகனை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
மாறுபட்ட நிலையிலிருந்து தந்தைக்கு உபதேசம் செய்யும் முருகன்
மற்ற கோயில்களில் எல்லாம், பிரணவ மந்திரத்தின் பொருள் கூற, முருகன் சிவனின் மடியில் அமர்ந்திருப்பது போல சிலை இருக்கும். ஆனால், இத்தலத்தில் தகப்பன் சுவாமியான முருகன் குன்றின் மீது அமர்ந்து பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல, சிவன் அதை நின்று கேட்கும் நிலையில் அமைந்துள்ளது. முருகனின் இந்த நிலை, இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
சுவாமிநாத சுவாமி கோவில் என பெயர் வந்த வரலாறு
300 ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரத்தில் வாழ்ந்த பாஸ்கர சேதுபதி குண்டுக்கரை முருகன் கோயிலுக்கு தினமும் வந்து வழிபாடு செய்வார்.
ஒருமுறை இவர் சுவாமிமலை சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்தபோது, இவரது கனவில் சுவாமிமலை முருகன் தோன்றி, குண்டுக்கரை முருகன் கோயிலில் உள்ள பழைய முருகன் சிலையை எடுத்து விட்டு புதிதாக முருகனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் உனக்கும், உனது மக்களுக்கும் நன்மை உண்டாகும் என கூறி மறைந்தார்.
ராமநாதபுரம் வந்த பாஸ்கர சேதுபதியும் கனவில் முருகன் கூறியபடி குண்டுக்கரை சென்று அந்த கோயிலிலிருந்த பழைய முருகன் சிலையை அகற்றி விட்டு புதிதாக முருகன் சிலை பிரதிஷ்டை செய்தார். சுவாமிமலை முருகனின் பெயரான சுவாமிநாதன் என்பதையே இத்தலத்து முருகனுக்கும் சூட்டினார்.
ஐப்பசி கந்த சஷ்டி சந்தன காப்பு அலங்காரம்
மூலவர் கவாமிநாத சுவாமிக்கு ஐப்பசி கந்த சஷ்டியன்று சந்தன காப்பு அலங்காரம் செய்யப்படும். அன்று மட்டும் பதினோரு முகங்களுடன் தரிசனம் தரும் அவரது திருஉருவம் பார்ப்போரை பரவசம் அடையச் சேய்யும்.

சுப்பிரமணிய சுவாமி கோவில்
நான்கு முகம் கொண்ட சதுர்முக முருகன்
திண்டுக்கலில் இருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ள சின்னாளப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். கருவறையில் மூலவரான சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிக்கிறார்.
மகா மண்டபத்தில் முருகப்பெருமான் நான்கு முகங்களுடன் சதுர்முக முருகனாக மயில் மீது அமர்ந்து காட்சியளிக்கிறார். இத்தகைய நான்கு முகங்கள் கொண்ட முருகனின் தோற்றத்தை நாம் வேறு எந்த தவத்திலும் தரிசிக்க முடியாது. அருகில் பாலதிரிபுரசுந்தரி அம்பிகையும், விஸ்வாமித்திரரும் காட்சியளிக்கிறார்கள்.
முருகப் பெருமான் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாததால் பிரம்மனை சிறையில் அடைத்தார். பின்னர் முருகப்பெருமானே படைப்புத் தொழிலை மேற்கொண்டார். அதை நினைவு கூறும் வகையில் இங்கே, முருக பெருமான் சதுர்முகத்துடன் இருப்பதாக தல புராணம் கூறுகின்றது.
குங்குமத துகள்களில் தோன்றிய சதுர்முக முருகன்
விசுவாமித்திரர் பிரம்மரிஷி பட்டம் பெறுவதற்காக கடும் தவம் செய்து கொண்டிருந்தார் . அப்போது விசுவாமித்ரர் முன்பாக சிறுமி வடிவில் தோன்றிய பாலதிரிபுரசுந்தரி அம்பிகை, தனக்கு குங்குமப் பொட்டு வைக்கும்படி கேட்க, அந்த சிறுமியின் நெற்றியில் விசுவாமித்திரர் குங்குமப் பொட்டு வைத்தார். அவர் குங்குமம் இட்டதை சரி பார்ப்பதற்காக, அருகே இருந்த குளத்து நீரில், சிறுமி பாலதிரிபுரசுந்தரி தன் பிம்பத்தைப் பார்த்தாள்.
குளத்தை அவள் குனிந்து பார்த்த சமயத்தில் குங்குமப் பொட்டின் துகள்கள் நீரில் விழுந்தன. இதனையடுத்து அந்த குளத்தில் இருந்து சதுர்முக முருகன் தோன்றினார்.'இந்த சதுர்முக முருகனே நீ வேண்டும் வரத்தை அருள்வான்' என்று விசுவாமித்ரரிடம் தெரிவித்து விட்டு அந்த சிறுமி மறைந்தாள்.
சதுர்முக முருகனும், சிறிது தொலைவில் உள்ள கோயிலுக்கு வரும்படி தெரிவித்து விட்டு மறைந்தார். விசுவாமித்திரரும் அருகில் உள்ள அந்த கோயிலுக்கு சென்றார். அங்கு பாலதிரிபுரசுந்தரியும், சதுர்முக முருகனும், ஒன்றாகக் காட்சியளிப்பதை பார்த்து மகிழ்ந்தார். பின் இறையருளைப் பெற தவம் புரியாமல் எதை எதையோ வேண்டி தவம் செய்தேன் என்று வருந்தினார். அப்போது அங்கு வந்த வசிஷ்டர், விசுவாமித்ரருக்கு 'பிரம்மரிஷி' பட்டம் வழங்கி ஆசீர்வதித்தார்.
செம்பால் அபிஷேகம்
இத்தலத்தில் செவ்வாய்கிழமைகளில் காலை சதுர்முக முருகனுக்கு பசும்பாலில் குங்குமப்பூ மற்றும் குங்குமம் கலந்த 'செம்பால் அபிஷேகம்' செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். இப்படிப்பட்ட அபிஷேக நடைமுறை வேறு எந்தக் கோவிலிலும் இல்லை.
செவ்வாய்க்கிழமைகளில், குங்குமமும் பாலும் கலந்து அபிஷேகம் செய்தால், செவ்வாய் தோஷம் நீங்கும்; சத்ரு பயம் விலகும், திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்பது ஐதீகம். மற்றும் இங்கே உள்ள பாலதிரிபுரசுந்தரிக்கு புடவை சார்த்தி, செவ்வரளி மலர்கள் சூட்டி வழிபட்டால், கல்வியும் ஞானமும் பெறலாம்.

கழுகாசலமூர்த்தி கோயில்
முருகப்பெருமான் ராஜபோகமாக வீற்றிருக்கும் தலம்
கோவில்பட்டியிலிருந்து சங்கரன்கோயில் செல்லும் சாலையில், கோவில்பட்டியிலிருந்து 20 KM தொலைவில் உள்ளது.
இத்தலத்தில், இராவணனால் கொல்லப்பட்ட ஜடாயுவின் தம்பியான சம்பாதி என்ற கழுகு முக முனிவருக்கு முருகன் முக்தியளித்தார். அதனாலேயே, இத்தலம் முனிவரின் பெயரால் கழுகுமலை என்று அழைக்கப்படுகிறது. முருகப்பெருமான் சூரனை வதம் செய்ய திருசெந்தூர் செல்லும் வழியில் இங்கு வந்து தங்கியிருந்தார் என்பது இத்தலத்தின் மேலுமொரு சிறப்பாகும்.
மேற்கு முகமாக காட்சி தரும் சிறப்பு
இத்தலத்தில் முருகப்பெருமான் நான்கு அடி உயரத்தில் ஒரு திருமுகமும், ஆறுகரங்களுடனும், இடது காலை தொஙக விட்டு மயிலின் மேல் வைத்தும், வலது காலை மடித்தும் அமர்ந்த நிலையில் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். கந்த புராணத்தில் முருகன் மேற்கு முகமாக உள்ள தலங்கள் மூன்று என்றும் அதில் முருகன் ராஜபோகமாக வீற்றிருக்கும் தலம் கழுகுமலை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தலத்தில் இந்திரனே முருகனின் மயிலாக இருப்பது சிறப்பாகும். அதனால், மற்ற கோவில்களில் உள்ளது போல முருகனின் வாகனமான மயில், வலது பக்கம் அல்லாமல் இடது பக்கம் நோக்கி காட்சி அளிப்பது தனிச்சிறப்பு இத்தலத்தில் முருகனோடு குருவாகிய தக்ஷிணாமூர்த்தியும் இருப்பதால் குருமங்கள தலம் என்றும் அழைக்கபடுகிறது. இத்தலத்து இறைவனை அகத்தியர் தினமும் பூஜிப்பதாக ஐதீகம்.
குடைவரைக் கோவில்
மலையை குடைந்து, கோயிலை மலைக்குள் அமைத்திருப்பது இக்கோயிலின் சிறப்பாகும். இந்த குடைவரைக் கோயிலுக்கு மலையே கோபுரமாக அமைந்துள்ளது. இக்கோயிலை சுற்றி வர வேண்டுமானால் மலையையே சுற்றி வர வேண்டும்.
இத்தலத்து முருகனை வேண்டினால் திருமணத் தடை நீங்குமென்பதும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் நம்பிக்கை.
இத்தலம் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்றுள்ளது.
பிரம்மபுரீஸ்வரர் கோவில்
முருகப்பெருமான் கையில் வில்லும், அம்பும் ஏந்தியிருக்கும் அபூர்வ கோலம்
மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள திருக்கடையூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில், தேவாரத் தலமான திருக்கடவூர் மயானம் உள்ளது. இறைவர் திருப்பெயர் பிரம்மபுரீஸ்வரர். இறைவி மலர்க்குழல் மின்னம்மை.
இத்தலத்தில் முருகப்பெருமான் சிங்காரவேலர் என்ற திருநாமத்துடன் தென்திசை நோக்கி அருள் புரிகிறார். சிங்காரவேலர் போருக்குச் செல்லும் கோலத்தில் ஒரு கையில் வேலும், மற்றொரு கையில் வில்லும், அம்பும் கொண்டு, கழுத்தில் ருத்ராட்ச மாலையும், காலில் பாதக் குறடு(காலணி) அணிந்தும் காட்சியளிப்பது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும். இவர் வில்லேந்திய இராமனைப் போல நளினமாக சற்றே இடப்பறம் சாய்ந்திருக்கும் கோலம் நம்மை பரவசமடையச் செய்யும். முருகன் சிவனின் அம்சம் என்றாலும், இத்தலத்தில் இராமனின் சிலை போல வளைந்து காட்சி தருவதால், இவரை திருமாலின் அம்சமாகக் கருதுகின்றனர். மாமனைப் போல் மருமகன் என்றுகொண்டாடுகின்றனர்.
வில்லேந்திய சிங்கார வேலரை வழிபட்டால் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.

திருமலை முத்துக்குமார சுவாமி கோவில்
விசாக நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்
தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகரில் இருந்து வடக்கு திசையில் 8 கிலோமீட்டர் தொலைவில் பண்பொழி (பைம்பொழில்) என்ற ஊர் உள்ளது. இந்த ஊருக்கருகில் மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடரின் ஒரு சிறிய குன்றில் திருமலை முத்துக்குமார சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவார வைப்புத் தலமான இந்தக் கோவிலுக்கு வாகனங்கள் சென்று வர மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலில் முத்துக்குமார சுவாமி, நான்கு கரங்களுடன் மேல்நோக்கிய வலது கையில் சக்தி ஆயுதம், இடது கையில் வச்சிராயுதம் தாங்கியும், கீழ்நோக்கிய வலது கையில் அபயக்கரம், இடது கையில் சிம்ம கர்ண முத்திரையும் காட்டி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
இத்தலத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு, பார்வதிதேவி தன் வாயால் அருளிச் செய்த 'தேவி பிரசன்ன குமார விதி'ப்படி எட்டுக்கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இக்கோவிலில் மற்ற கோவில்கள் போன்று பள்ளி யறையில் சுவாமியைப் பாதுகை செய்வது இல்லை. மூலவருக்குப் பால், பழம், ஊஞ்சலுடன் சயனப் பூஜை மட்டுமே செய்யப்படுகிறது.
விசாக நட்சத்திரக்காரர்கள், வாழ்வில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய தலம்
முருகப்பெருமான் அவதரித்த விசாக நட்சத்திரக்காரர்கள் கோவிலாக திருமலை முத்துக்குமரசுவாமி கோவில் உள்ளது.;வி; என்றால் 'மேலான' என்றும், 'சாகம்' என்றால் 'ஜோதி' என்றும் பொருள்படும். விசாக நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக்கிரகணங்களைக் கொண்டது. இந்த கிரகணங்கள் அனைத்தும் இம்மலையில் படுவதால், விசாக நட்சத்திரத்தினர் இங்கு சென்று வழிபட்டு வந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படும்.
பித்ரு தர்ப்பணம் செய்ய உகந்த தலம்
இந்த மலைப்டிகள் ஸ்கந்த கோஷ்டப் பித்ருக்கள் வசிக்கும் தேவ படிக்கட்டுக்கள் எனச் சொல்லப்படுகிறது. ஆகையால், இந்த தலத்திற்கு வந்து முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால், நம் சந்ததிகளுக்கு நல்ல சிறப்பான வாழ்வு அமையும். நல்ல வாரிசுகள் உருவாகும் என்பது ஐதீகம்.
அருணகிரிநாதர் திருப்புகழில் திருமலை முருகனைப் புகழ்ந்து பாடியுள்ளார்.