
கும்பகோணம் ஆதிவராகப் பெருமாள் கோவில்
நிலம், வீடு தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் பெருமாள்
கும்பகோணத்தின் மையப்பகுதியில், சக்கரபாணி கோவிலுக்கு தென்மேற்கில், ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது, மிகப் பழமையான ஆதிவராகப் பெருமாள் கோவில். இதன் அருகிலேயே வராக விநாயகராகிய கரும்பாயிரம் பிள்ளையார் கோவிலும் உள்ளது.
இக்கோயிலில் உள்ள மூலவர் ஆதிவராகப்பெருமாள் ஆவார். தாயார் அம்புஜவல்லி.
உலகில் முதலில் தோன்றிய இடம் 'வராகபுரி' என்னும் கும்பகோணம் என்று இந்தக் கோவில் தல புராணம் சொல்கிறது. எனவே முதலில் இந்தக் கோவிலில் உள்ள ஆதிவராகப் பெருமாளை வழிபட்ட பிறகே, அனைத்து தெய்வங்களையும் வழிபட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா உண்டாவதற்கு முன்பாகவே இவர், இத்தலத்தில் எழுந்தருளியிருந்தார். எனவே இவரை, 'ஆதிவராகர்' என்று அழைக்கின்றனர். இவரே இங்குள்ள பெருமாள்களுக்கெல்லாம் முந்தியவர். மாசிமகத் திருவிழாவின்போது, கும்பகோணத்திலுள்ள சாரங்கபாணி, சக்கரபாணி, வரதராஜர், ராஜகோபாலர் மற்றும் இத்தலத்து மூர்த்தி ஆகிய ஐவரும் காவிரிக்கரைக்கு தீர்த்த நீராட எழுந்தருளுகின்றனர்.
மூலஸ்தானத்தில் சுவாமி, பூமாதேவியை இடது மடியில் அமர்த்திய கோலத்தில் காட்சி தருகிறார். பூமாதேவி திருமாலை வணங்கியபடி இருக்கிறாள். மூலவர் ஆதிவராகப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் இருக்க, அவருக்கு முன்பாக உற்சவர் நின்றபடி இருக்கிறார். உற்சவர் ஆதிவராகர், தனது இடது பாதத்தை ஆதிசேஷன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். சுவாமி முன்பாக 'வராக சாளக்கிராமம்' உள்ளது. இதில் சங்கு, சக்கர ரேகைகள் உள்ளன.
தல வரலாறு
வராகத்தின் (பன்றி) முகத்தோடு விளங்குவதால் வராகப் பெருமாள் என்ற பெயர் பெற்றார். ஒருசமயம் இரண்யாட்சன் என்னும் அசுரன், பூமியை பாதாள உலகிற்குள் எடுத்துச்சென்று மறைத்து வைத்தான். தன்னை மீட்கும்படி, பூமாதேவி திருமாலிடம் வேண்டினாள். திருமால் வராக அவதாரம் எடுத்து பாதாளத்திற்குள் சென்று பூமியை மீட்டு வந்தார். இவரே இத்தலத்தில் வராகமூர்த்தியாக அருள்புரிகிறார்.
கோரைக்கிழங்கு மாவுருண்டை பிரசாதம்
தினமும் ஆதிவராகப் பெருமாளுக்கு அர்த்தஜாம பூஜையின்போது, கோரைக்கிழங்கு மாவுருண்டையை நைவேத்யமாக படைக்கிறார்கள். பாய் நெய்வதற்குரிய நாணல் புல்லின் அடியில் முளைப்பது கோரைக்கிழங்கு. இந்தக்கிழங்கை பொடித்து, அதனுடன் அரிசி மாவு, சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து உருண்டையாகப் பிடித்து வைப்பர். மறுநாள் காலையில் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். பூமியை மீட்டு வந்த பெருமாள் என்பதால். பூமிக்கு கீழே விளையும் கிழங்கு கலந்த நைவேத்யம் இவருக்கு படைக்கப்படுகிறது.
ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் சுவாமியை வணங்கி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். நிலம், வீடு தொடர்பான பிரச்னைகள் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

சின்னமனூர் லட்சுமிநாராயணர் கோவில்
வயிற்று வலி தீர்க்கும் பெருமாள் திருமஞ்சனத் துண்டு
தேனியில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் உள்ள சின்னமனூர் என்ற ஊரில் அமைந்திருக்கிறது லட்சுமிநாராயணர் கோவில். 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
குருவாயூரப்பன் தோற்றத்தில் பெருமாள்
ஒரு சமயம் சேர மன்னர் கனவில் தோன்றிய பெருமாள், தனது இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டி இங்கு கோவில் எழுப்பும்படி கூறினார். அதன்பின்பு இங்கு குருவாயூரப்பன் அமைப்பில் சுவாமிக்கு சிலை வடித்த மன்னர், தாயார்களுடன் பிரதிஷ்டை செய்தார். குருவாயூரில் சின்னக்கண்ணனாக காட்சி தரும் பெருமாள் இங்கு, தாயார்களுடன் காட்சி தருவது விசேஷமான தரிசனம். பொதுவாக மகாலட்சுமி தாயாருடன் மட்டும் காட்சி தரும் மூர்த்தியே, 'லட்சுமி நாராயணர்' என்ற பெயரில் அழைக்கப்படுவார். ஆனால், இங்கு சுவாமியின் மார்பிலுள்ள மகாலட்சுமி பிரதான தாயாராக கருதப்படுவதால், சுவாமிக்கு இப்பெயரே அமைந்துவிட்டது.
கருவறையில் லட்சுமிநாராயணர், நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன், கழுத்தில் சாளக்கிராம மாலையும், நான்கு திருக்கரங்களில் சங்கு சக்கரமும், அபய ஹஸ்தத்துடன் தான ஹஸ்தமும் திகழக் காட்சி தருகிறார். பெருமாள், குருவாயூர் அமைப்பில் காட்சி தருவதால், இங்கும் லட்சுமிநாராயணர் கையில் வைத்திருக்கும் சந்தனத்தையே பிரசாதமாகத் தருகிறார்கள்.
பெருமாள் அருகில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கும் சிறப்பு
ஒரு சமயம் இக்கோவிலில், ஆஞசநேயருக்கு தனிச் சன்னதி அமைத்து அதில் அவருடைய விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்ய முற்பட்டார்கள். அப்போது ஆஞ்சநேயரைத் தன் அருகிலேயே பிரதிஷ்டை செய்து விடும்படி பெருமாள் ஒரு பக்தரின் மூலம் உத்திரவிட்டாராம். பொதுவாக ராமபிரானுடன் காட்சியளிக்கும் ஆஞ்சநேயர், இங்கு பெருமாளுடன் எழுந்தருளியிருப்பது தனிச் சிறப்பாகும்.
வயிற்று வலி தீர பெருமாளுக்கு திருமஞ்சனம்
வயிற்று வலி நோயால் அவதிப்படுபவர்கள், தங்களுக்குரிய நட்சத்திர நாளில் சுவாமிக்கு துண்டு கட்டி வேண்டிக் கொள்கிறார்கள். பக்தர்கள் கொடுக்கும் துண்டை, சுவாமியின் மடியில் கட்டி திருமஞ்சனம் செய்கின்றனர். பின்பு ஈரமான துண்டை, பக்தர்களிடம் கொடுத்து விடுகிறார்கள். இதை வீட்டில் விரித்து, அதன் மீது படுத்துக்கொண்டால், வயிற்று வலி நிவர்த்தியாவதாகச் சொல்கிறார்கள்.
தீராத நோய் மற்றும் அடிக்கடி உடல் வலி வந்து அவதிப்படும் பக்தர்கள் ஸ்ரீலட்சுமிநாராயணப் பெருமாளின் திருப்பாதத்தில் 9 மிளகுகளை வைத்து வழிபட்டுப் பெற்றுக்கொண்டு, அவற்றைத் தினமும் ஒன்று வீதம் சாப்பிட, தீராத நோயும் தீரும்; உடல் வலி அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இப்பகுதி விவசாயிகள் தங்கள் விவசாயம் செழிக்க, தங்கள் வயலில் நெல் விதைக்கும் முன்பாக சுவாமியின் பாதத்தில் வைத்து பூஜித்துச் செல்கிறார்கள்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கம் கோவிலில் 'ஏழு' என்ற எண்ணிக்கையில் அமைந்த சிறப்பு அம்சங்கள்
108 வைணத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாக திகழும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் 'ஏழு' என்ற எண்ணிக்கையில் அமைந்த பல சிறப்பு அம்சங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.
01. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் 'ஏழு பிரகாரங்களுடன்., ஏழு மதில்களை' கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில்.
02. ஏழு 'பெரிய' பெருமை உடைய
1) பெரிய கோவில்
2) பெரிய பெருமாள்
3) பெரிய பிராட்டியார்
4) பெரிய கருடன்
5) பெரியவசரம்.
6) பெரிய திருமதில்
7) பெரிய கோபுரம்
இப்படி அனைத்தும் 'பெரிய' என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.
03. ஸ்ரீரங்கம் அரங்கனாதருக்கு ஏழு நாச்சியார்கள்
1) ஸ்ரீதேவி
2) பூதேவி.
3) துலுக்க நாச்சியார்
4) சேரகுலவல்லி நாச்சியார்
5) கமலவல்லி நாச்சியார்
6) கோதை நாச்சியார்
7) ரெங்க நாச்சியார் ஆகியோர்
04. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாஹனத்தில் எழுந்தருளுவார்
1) விருப்பன் திருநாள்
2) வசந்த உற்சவம்
3) விஜயதசமி
4) வேடுபரி
5) பூபதி திருநாள்
6) பாரிவேட்டை
7) ஆதி பிரம்மோத்சவம் ஆகியவை
05.ஸ்ரீரங்கம் கோவிலில் வருஷத்திற்கு ஏழு முறை (மாதங்கள்) நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார்
1) சித்திரை
2) வைகாசி
3) ஆடி
4) புரட்டாசி
5) தை
6) மாசி
7) பங்குனி
06. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் ஏழாம் திருநாளன்று வருஷத்திற்கு ஏழு முறை (மாதங்கள்) நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார்
1) சித்திரை
2) வைகாசி
3) ஆவணி
4) ஐப்பசி
5) தை.
6) மாசி
7) பங்குனி
07. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்திரி உற்சவத்தில் ஏழாம் திருநாளன்று ஸ்ரீரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.
08. தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் (30 நாட்களும்) தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.
09. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். 'ராமாவதாரம் ஏழாவது' அவதாரமாகும்.
10. இராப்பத்து ஏழாம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.
11. ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும்.
1) கோடை உற்சவம்
2) வசந்த உற்சவம்
3) ஜேஷ்டாபிஷேகம்., திருப்பாவாடை
4) நவராத்திரி
5) ஊஞ்சல் உற்சவம்
6) அத்யயநோத்சவம்
7) பங்குனி உத்திரம்
12. பன்னிரண்டு ஆழ்வார்களும் ஏழு சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள்.
1) பொய்கையாழ்வா, பூதத்தாழ்வார், பேயாழ்வார்
2) நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், மதுரகவியாழ்வார்
3) குலசேகராழ்வார்
4) திருப்பாணாழ்வார்
5) தொண்டரடிப் பொடியாழ்வார்
6) திருமழிசையாழ்வார்
7) பெரியாழ்வார்., ஸ்ரீஆண்டாள்
13. இராப்பத்து 'ஏழாம் திருநாள்' நம்மாழ்வார் பராங்குச நாயகி அலங்காரத்தில் வருவதால் அன்று மட்டும் ஸ்ரீஸ்தவம் மற்றும் ஸ்ரீகுணரத்ன கோசம் சேவிக்கப்படும்
14. பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 'ஏழு கோபுரங்கள்' உள்ளன.
1) நாழிகேட்டான் கோபுரம்
2) ஆர்யபடால் கோபுரம்
3) கார்த்திகை கோபுரம்,
4) ரங்கா ரங்கா கோபுரம்
5) தெற்கு கட்டை கோபுரம் – I
6) தெற்கு கட்டை கோபுரம் – II
7) ராஜகோபுரம்
15. ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார்.
1) வசந்த உற்சவம் ~ நீராழி மண்டபம்
2) சங்கராந்தி ~ சங்கராந்தி மண்டபம்
3) பாரிவேட்டை ~ கனு மண்டபம்
4) அத்யயநோற்சவம் ~
5) பவித்ர உற்சவம் ~ பவித்ர உற்சவ மண்டபம்.
6) ஊஞ்சல் உற்சவம் ~ ஊஞ்சல் உற்சவ மண்டபம்.
7) கோடை உற்சவம் ~ நாலுகால் மண்டபம்
16. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும்.
1) பூச்சாண்டி சேவை.
2) கற்பூர படியேற்ற சேவை.
3) மோகினி அலங்காரம்., ரத்னங்கி சேவை.
4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம்.
5) உறையூர்., ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை.
6) தாயார் திருவடி சேவை.
7) ஜாலி சாலி அலங்காரம்
17. திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஏழு மண்டபங்களில் நம்பெருமாள் ஒரு நாள் மட்டுமே எழுந்தருள்வார்
1) நவராத்ரி மண்டபம்.
2) கருத்துரை மண்டபம்
3) சங்கராந்தி மண்டபம்,
4) பாரிவேட்டை மண்டபம்
5) சேஷராயர் மண்டபம்
6) சேர்த்தி மண்டபம்.
7) பண்டாரம் ஆஸ்தான மண்டபம்
18. திருக்கோவிலில் உள்ள ஏழு பிரகாரங்களிலும் பெருமாளின் ஏழு திருவடிகள் உள்ளன.
19. ஏழு பிரகாரங்களிலும் ஏழு திருமதில்கள் அமையப் பெற்றுள்ளன.
20. திருக்கோயில் வளாகத்தில் ஏழு ஆச்சார்யர்களுக்கும் தனி சன்னதி உள்ளது
1) ராமானுஜர்
2) பிள்ளை லோகாச்சாரியார்
3) திருக்கச்சி நம்பி
4) கூரத்தாழ்வான்
5) வேதாந்த தேசிகர்
6) நாதமுனி
7) பெரியவாச்சான் பிள்ளை
21. சந்திர புஷ்கரிணியில் ஆறு முறையும், கொள்ளிடத்தில் ஒருமுறையும் இப்படியாக ‘ஏழு முறை’ சின்ன பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார்
1) விருப்பன் திருநாள் ~ சித்திரை மாதம்
2) வசந்த உற்சவம் ~ வைகாசி மாதம்.
(3) பவித்ரோத்சவம் ~ ஆவணி மாதம்
4) ஊஞ்சல் உற்சவம் ~ ஐப்பசி மாதம்
5) அத்யயன உற்சவம் ~ மார்கழி மாதம்
6) பூபதி திருநாள் ~ தை மாதம்
7) பிரம்மோத்சவம் ~ பங்குனி மாதம்
22. நம்பெருமாள் மூன்று முறை எழுந்தருளும் ஏழு வாஹனங்கள்
1) யானை வாஹனம் ~ சித்திரை, தை, மாசி
2) தங்க கருடன் வாஹனம் ~ சித்திரை, தை, பங்குனி
3) ஆளும் பல்லக்கு ~ சித்திரை, தை, பங்குனி
4) இரட்டை பிரபை ~ சித்திரை, மாசி, பங்குனி
5) சேஷ வாஹனம் – சித்திரை, தை, பங்குனி
6) ஹனுமந்த வாஹனம் – சித்திரை, தை, மாசி
7) ஹம்ச வாஹனம் ~ சித்திரை, தை, மாசி
23. மாசி மாதம் நடைபெறும் திருப்பள்ளியோடம் திருவிழாவில் நம்பெருமாள் ஏழு வாஹனங்களில் மட்டும் உலா வருவார்.
24. கற்பக விருட்சம்.,
ஹனுமந்த வாஹனம்.,
சேஷ வாஹனம்.,
சிம்ம வாஹனம், ஒற்றை பிரபை ஆகிய இந்த ஐந்து வாஹனங்கள் தங்கத்திலும், யாளி வாஹனம், இரட்டை பிரபை ஆகிய இந்த இரண்டு வாகனங்கள் வெள்ளியிலும் ~ ஆகிய ஏழு வாஹனங்களை தவிர மற்ற அனைத்து வாகனங்கள் வெள்ளியிலோ அல்லது தங்கத்திலோ ஆனது இல்லை.
25. மற்ற கோவில்களில் காண முடியாதவை
1) தச மூர்த்தி
2) நெய் கிணறு
3) மூன்று தாயார்கள் ஒரே சன்னதியில்
4) 21 கோபுரங்கள்
5) நெற்களஞ்சியம்
6) தன்வந்தரி
7) நான்கு திசைகளிலும் ராமர் சன்னதி

ஸ்ரீரங்கம் தசாவதார கோவில்
மூலஸ்தானத்தில் தசாவதார கோலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வடமேற்கே சுமார் 1 கி.மீ. தூரத்தில், கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ளது தசாவதார கோவில்.
ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரம், திருமதில்சுவர் உட்பட கோயில் கட்டுமானப்பணிகளை திருமங்கையாழ்வார் முன்னின்று நடத்தினார். அவருடைய பணியை பாராட்டி, ரெங்கநாதர் திருமங்கையாழ்வாரின் கோரிக்கையை எறறு, பத்து அவதாரத்தில் (தசாவதாரம்) திருமங்கையாழ்வாருக்கு காட்சியளித்த இடம்தான் கொள்ளிடம் ஆற்றங்கரையிலுள்ள தசாவதாரம் கோவிலாகும்.இக்கோவில் மூலஸ்தானத்தில் பெருமாள் தசாவதார கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார். இந்தத் தோற்றத்தில் மச்ச, கூர்ம, வராக, நரசிம்மர் ஆகிய அவதாரங்கள் ஆயுதங்கள் இல்லாமல் சங்கு சக்கரத்துடனும், வாமன அவதாரம் கையில் குடையுடனும், பரசுராம அவதாரம் கையில் கோடாரியுடனும், ராம அவதாரம் வில் அம்புடனும், பலராமன் அவதாரம் கலப்பையுடனும், ஸ்ரீகிருஷ்ண அவதாரம் நர்த்தன கிருஷ்ணணாக ஒரு கையில் வெண்ணையுடனும், நாட்டிய பாவனையிலும் கல்கி அவதாரம்,குதிரைவாகனத்தில், கேடயம் கத்தியுடனும் காட்சியளிக்கிறார்கள். மச்ச (மீன்) கூர்ம (ஆமை) அவதாரங்கள் அவதார நிலையிலேயே மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ளன. இங்குள்ள உற்சவ மூரத்தி லெட்சுமி நாராயணர். இவர் ஆழ்வார்களாலேயே பூஜை செய்யப்பட்டவர்.
பொதுவாக கோவில்களில் ஒரு மூலவருக்கு பல உற்சவர் இருப்பதை காணலாம். ஆனால் இங்கு பத்து மூலவருககு ஒரே ஒரு உற்சவர் மட்டுமே இருப்பது தனிசிறப்பாகும். பத்து அவதாரங்களுக்கும் ஒரு கலசம் வீதம், விமானத்தில் பத்து கலசங்கள் காணப்படுகின்றன. கருவறை விமானம் செவ்வக வடிவில் இருப்பதும் ஒரு தனிச் சிறப்பாகும்.
கிரக தோஷ நிவர்த்தி தலம்
இங்குள்ள ஒவ்வொரு அவதாரமும், ஒவ்வொரு கிரகத்தின் தலைவராகக் கருதப்படுகிறது. குறிப்பாக மச்ச-கேது, கூர்ம-சனீஸ்வரர், வராக-ராகு, நரசிம்மா-செவ்வாய், வாமன-குரு, பரகராம-சுக்கிரன், ராம-சூரியன், கிருஷ்ணன்-சந்திரன், பலராமன்-மாந்தி, கல்கி-புதன் ஆகிய கிரக தோஷங்களை நிவர்த்தி செய்கின்றனர். அதனால், கிரக தோஷமுடையவர்கள் தங்கள் நட்சத்திர தினத்தில் இக்கோவிலை வழிபட்டு பலன் பெறலாம்.

எண்கண் ஆதிநாராயணபெருமாள் கோவில்
மூலஸ்தானத்தில் பெருமாள் கருட வாகனத்தின் மீது எழுந்தருளியிருக்கும் அபூர்வக் காட்சி
திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள எண்கண் தலத்தில் அமைந்துள்ளது, ஆதிநாராயண பெருமாள் கோவில்.
பொதுவாக, பெருமாள் கோவில்களில் பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த என்ற மூன்று நிலைகளிலும், சிறப்பம்சமாக நடந்த நிலை எனப்படும் திரிவிக்ரம அவதார நிலையிலும் தரிசனம் தருவார். பெருமாளின் எதிரே பெரிய திருவடியான கருடாழ்வார், நின்ற நிலையில் கைகூப்பியபடி காட்சி தருவார். திருவிழாக் காலங்களில் உற்ஸவ மூர்த்திகள் மட்டும் கருடாழ்வாரின் மீதேறி கருட வாகனராக சேவை சாதிப்பார்.
ஆனால் இந்த எண்கண் திருத்தலத்தில், பெருமாளின் நித்யகருட சேவையை தினமும் தரிசிக்கும் வகையில், மூலஸ்தானத்தில் பெருமாள் கருட வாகனத்தின் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இதுபோன்று மூலஸ்தானத்தில் பெருமாள் கருட வாகனத்தின் மீது அமர்ந்த கோலத்தில் உள்ள அமைப்பை வேறு எங்கும் காண்பது அரிது. இங்கே கருடாழ்வாரும் பெருமாளும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம். உற்சவர் ஆதிநாராயணப்பெருமாள் பிரயோகச்சக்கரம் ஏந்தி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார்.
ஒருசமயம் பிருகு முனிவர் இத்தலத்தில் பெருமாளைக் குறித்து தவம் இருந்தார். அச்சமயம் சிங்க வேட்டைக்கு வந்த சோழ மன்னன் படைகள் எழுப்பிய கூச்சலால் அவர் தவம் கலைந்தது. அதனால் சோழ மன்னனின் முகம் சிங்க முகமாக மாற சபித்து விட்டார். தனது செயலை எண்ணி வருந்திய மன்னன், தனக்கு சாப விமோசனம் அளிக்கும்படி முனிவரை வேண்டினான்.
மனம் இரங்கிய பிருகு முனிவர், 'தைப்பூசத் திருநாளில், விருத்த காவேரி என்று அழைக்கப்படும் வெட்டாற்றில் நீராடி, எண்கண் எனப்படும் இந்தத் தலத்தில் அமர்ந்து பெருமாளை நோக்கி தவமிருந்து வழிபட்டால், அப்போது, பெருமாள் கருடன் மீதமர்ந்து காட்சி தருவார். மயில் மீது முருகனும் அமர்ந்து காட்சி தர, சாப விமோசனம் கிட்டும். அதன்பின்னர்,பெருமானுக்கு சிம்ம, ரிஷப, மயூர, அன்ன, மேஷ வாகானாதிகள் உள்பட 108 வாகனங்கள் அமைத்து பெருவிழாவை நடத்த வேண்டும்' என்றார். அதன்படி சோழனும் பெருமாளை நினைந்து மனமுருகி வழிபட்டு வந்தான்.
சோழ மன்னனின் வேண்டுதலுக்கு உடனே செவி சாய்க்கும் விதத்தில், பெருமாள் கருட வாகனத்தில் பறந்து வந்து சோழ மன்னனுக்கு காட்சி தந்து அருள்புரிந்தார். முருகனும் மயில் மீது அமர்ந்து சோழ மன்னனுக்கு காட்சி தந்து அருள்புரிந்தார். அதன்மூலம், மன்னனின் சிங்க முகம் மாறி பழைய நிலை அடைந்தான்.
சோழனுக்கு பெருமாள் கருட வாகனத்தில் காட்சி கொடுத்த அதே அமைப்பில் சோழ மன்னன் பெருமாளுக்கு இங்கே கோயில் எழுப்பினானாம். எனவே இங்கே கருவறையில் மூலவர் பெருமான் கருட வாகனத்தில் அமர்ந்த நிலையில் நித்திய கருடசேவையாக பக்தர்களுக்குக் காட்சி தந்து கொண்டிருக்கின்றார்.
மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில்
பெருமாளின் அருளால் அரசனுக்கு மிருக முகம் நீங்கி, பழைய முகம் கிடைத்ததன் காரணமாக இத்தலம் மிருகசீர்ஷ நட்சத்திரக்காரர்களின் தோஷம் போக்கும் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தமது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது மிருகசீரிட நட்சத்திரத்தன்றோ இத்தல பெருமாளை வழிபாடு செய்தால், உடனே கருட வாகனத்தில் தோன்றி மிருக சீரிட நட்சத்திரக்காரர்களின் நட்சத்திர தோஷத்தை நீக்குவதாக ஜதீகம்.
படிப்புக்கேற்ற வேலை கிடைக்காதவர்கள், நல்ல சம்பளத்துடன் கூடிய உயர் பதவி வேண்டுபவர்கள், புதன், சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமணத்தில் தடை உள்ளவர்கள், நாக தோஷம், பட்சி தோஷம் உள்ளவர்கள் , தோல் நோயால் பாதிக்கப்பட்வர்கள், பகைவர்களால் பாதிக்கப்பட்டவர்கள், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர நினைப்பவர்கள், அடிக்கடி மரண சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் தொந்தரவுகள், பவுர்ணமி மற்றும் மிருகசீரிட நட்சத்திர நாட்களில் இங்கு வழிபாடு செய்ய வேண்டும்.

நென்மேலி லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில்
பித்ரு கடன் செலுத்த முடியாதவர்களுக்காக பெருமாளே திதி கொடுக்கும் தலம்
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில், செங்கல்பட்டிலிருந்து சுமார் 5 கி.மீ. மீட்டர் தொலைவில் உள்ளது நென்மேலி திருத்தலம். மூலவர் ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள். உற்சவர் ஸ்ரீ ஸ்ராத்த ஸம்ரக்ஷண நாராயணப் பெருமாள். இதுவரை, பித்ருக்களுக்கு தர்ப்பணமோ, திதியோ கொடுக்கவே இல்லை. பித்ருக் கடனைத் தீர்க்க வாரிசு இல்லை. ஆண் வாரிசு இல்லை. மகள்தான் உண்டு என பித்ரு கடன் செலுத்த முடியாதவர்களுக்காக, இத்தலத்து பெருமாளே திதி கொடுத்து நம் பித்ரு தோஷங்களை நிவர்த்தி செய்கிறார்.
தல வரலாறு
இத்தலம், அந்தக் காலத்தில் புண்டரீக நல்லூர் என அழைக்கப்பட்டது. அதாவது பிண்டம் வைத்த நல்லூர் எனப்பட்டது. இதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்காடு நவாபுகளின் ஆட்சி நடைபெற்றது. இந்தப் பகுதியை யக்ஞநாராயண சர்மா என்பவர் திவானாகப் பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். இவரின் மனைவி சரஸ வாணி. இருவரும் பெருமாளின் மீது மாறா பக்தி கொண்டிருந்தார்கள். யக்ஞநாராயண சர்மா வரியாக வசூலித்த பணத்தையெல்லாம், நென்மேலி பெருமாளுக்கே தம்பதியர் இருவரும் செலவு செய்தார்கள். இதனால், ஆற்காடு நவாப்பிடம் வரிப்பணத்தையெல்லாம் செலுத்த முடியாத நிலை ஏற்ப்பட்டது. இதை அறிந்த நவாப், அவர்களுக்கு மரண தண்டனை விதித்தார். அதை அறிந்த இந்தத் தம்பதி, திருவிடந்தை குளத்தில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொண்டனர். அப்போது உயிர் பிரியும் தருணத்தில், 'எங்களுக்கு வாரிசு இல்லையே. எங்களின் ஈமக்காரியங்களை செய்ய எவரும் இல்லையே' என வருந்தினார்கள். இருவரும் இறந்தார்கள். பின்னர், அவர்கள் இருவருக்கும் பெருமாளே வந்து சிராத்தம் உள்ளிட்ட ஈமக்காரியங்களைச் செய்தார் என்கிறது தல வரலாறு.
அன்றில் இருந்து இன்று வரை, பிள்ளை இல்லாதவர்களுக்கோ, அகால மரணம் அடைந்தவர்களுக்கோ, ஏதோவொரு சூழலால், சிராத்தம் தடைப்பட்டு போயிருந்தவர்களுக்கோ, இந்தக் கோவிலில் சிராத்தம் செய்யப்படுகிறது. அதாவது பெருமாளே சிராத்தம் செய்வதாக ஐதீகம். இங்கே, ஆலயத்தில் பெருமாளின் திருப்பாதம் உள்ளது. அந்தப் பாதத்தைக் கொண்டுதான் சிராத்த காரியங்கள் செய்யப்படுகின்றன. இங்கு, காலை முதல் மதிய வேளைக்குள் சிராத்தம் செய்யப்படுகிறது. வெண்பொங்கல், தயிர்சாதம், பிரண்டையும் எள்ளும் கலந்த துவையல் ஆகியவை நைவேத்தியம் செய்யப்படுகிறது. பின்னர் அதில் இருந்து பிண்டமாக எடுத்து, முன்னோருக்கு பிண்டம் வைத்து பூஜிக்கப்படுகிறது. அதன் ஒருபகுதியை அவர்களுக்கு உணவாகவும் இன்னொரு பகுதி தானமாகவும் வழங்கப்படுகிறது. காசி, கயா, ராமேஸ்வரம் முதலான புண்ணிய க்ஷேத்திரங்களில் சிராத்தம் செய்த பலன், நென்மேலி தலத்துக்கு வந்து சிராத்தம் செய்தால் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள், பித்ரு சாபம் உள்ளவர்கள், வீட்டில் அகால மரணம் அடைந்தவர்கள், துர்மரணம் தோஷம் உள்ளவர்களின் குடும்பத்தார், இங்கு வந்து சிராத்தம் செய்வது ரொம்பவே நல்லது.
இங்கு, தினமும் சிராத்த காரியங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக, அமாவாசை, பஞ்சமி, ஏகாதசி முதலான புண்ணிய திதிகளில் இங்கு வந்து சிராத்தம் செய்வது கூடுதல் விசேஷம். வீட்டில் சகல தோஷங்களும் விலகும்; சந்தோஷம் பெருகும்.

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில்
இழந்த சொத்துக்களை மீட்டுத் தரும் திவ்ய தேசம்
ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருக்கோளூர், திருநெல்வேலியிலிருந்து 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், மூலவராக வைத்தமாநிதி பெருமாளும், அவரின் வலதுபுறத்தில் குமுதவள்ளியும், இடதுபுறம் கோளூர்வல்லி தாயாரும் அருள்பாலிக்கிறார்கள்.
ஒரு சமயம், பார்வதியால் குபேரனுக்கு சாபம் உண்டாயிற்று .இதனால் குபேரனிடம் இருந்து நவநிதிகளான, சங்கநிதி, பதுமநிதி, மகரநிதி, கச்சபநிதி, மகுடநிதி, நந்தநிதி, நீலநிதி, கர்வநிதி மற்றும் மஹாபதுமநிதி ஆகிய ஒன்பது வகைச் செல்வங்களும் விலகிச் சென்றன. அந்த நவநிதிகள் பெருமாளிடம் சென்றடைந்தன. பெருமாள் இந்த நவநிதிகளின் மீது சயனம் கொண்டு அவற்றை பாதுகாத்து வைத்திருந்ததால் அவருக்கு வைத்தமாநிதி பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது. பெருமாள், இத்தலத்தில் தனது வலது தோளுக்கு கீழ் நவநிதிகளை பாதுகாத்து வருவதாக ஐதீகம் இத்தலத்து பெருமானை வழிபட்டு குபேரன், மீண்டும் நவநிதிகள் பெற்றதாக தல புராணங்கள் கூறுகின்றன. குபேரனுக்கு காட்சியளித்து சாபவிமோசனமருளியதுடன், அவன் இழந்த நிதிகளில் ஒரு பகுதியை மரக்காலால் அளந்து குபேரனுக்கு திருப்பி அளித்தார். பெருமாள் நவநிதிகளை பாதுகாத்து வருவதை இன்றும் நாம் தரிசிக்கலாம். கருவறையில் வைத்தமாநிதி பெருமாள், ஆதிசேஷன் மீது புஜங்க சயனத்தில், வலக்கையை நீட்டியவாறு, குபேரனுக்கு செல்வங்களை அளந்து கொடுத்த மரக்காலைத் தன் தலைக்கு வைத்தும், கையில் அஞ்சனம், மை தடவி நிதி எங்கு எவ்வளவு உள்ளது என கணக்குப் பார்க்கும் கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
செவ்வாய் கிரக தோஷ நிவர்த்தி தலம்
பாண்டிநாட்டு நவ திருப்பதியில் இது மூன்றாவது திருப்பதி. சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரக தலங்களுக்கு ஒப்பாக இப் பாண்டிநாட்டு நவதிருப்பதிகள், நவகிரக தலங்களாக போற்றப்படுகிறது. நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ தலங்களில் உள்ள பெருமாளை, நவ கிரகங்களாக கருதப்பட்டு வழிபடப்படுகிறது.
நவக்கிரகத்தில் இது செவ்வாய் ஸ்தலமாகும். செவ்வாய் கிரகத்தால் தோஷம் உள்ளவர்கள் இங்கு சென்று வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும்.
ஒவ்வொரு மாசி மாதத்தில் வரும் வளர்பிறையில் சுவாதி நட்சத்திரத்தன்று குளித்து, பெருமாளை முழுமனதுடன் வேண்டினால் இழந்த சொத்துக்கள், தோஷ நிவர்த்திகள் விலகும் என்பது ஐதீகம். இந்த நட்சத்திர நாளில்தான் குபேரன் திருப்பதிக்கு கடன் கொடுத்ததாக வரலாறு கூறுகிறது.
நீராஞ்சனம் விளக்கு வழிபாடு
அனைத்து மாதங்களிலும் செவ்வாய் மற்றும் சனி கிழமைகளில் நீராஞ்சனம் எனும் விளக்கு ஏற்றப்படுகிறது. இந்த விளக்கானது அரிசி, தேங்காய் மற்றும் நெய் ஆகிய 3-ம் சேர்ந்து உருவாக்கப்பட்டதாகும். இவ்வாறாக 3 வாரம் தொடர்ந்து ஏற்றினால் வேண்டிய வரங்கள் கிடைப்பதால் அனைத்து பக்தர்களும் அதனை திரளாக செய்து வருகின்றனர். கன்னிப்பெண்கள் திருமண வரம் வேண்டியும், மணமுடித்தவர்கள் குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் அமைதி நிலவவும், சொத்துக்கள் அதிக அளவில் கிடைக்கவும் வேண்டி இவ்வாறாக விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர்.

உத்திரமேரூர் சுந்தரவரதராஜப் பெருமாள் கோவில்
ஒரே கோவிலில் ஒன்பது பெருமாள்கள் அருளும் தலம்
செங்கல்பட்டிலிருந்து 26 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊர் உத்திரமேரூர். இந்த ஊரில் சுந்தரவரதராஜப் பெருமாள் ஆலயத்தில் 9 பெருமாள்களை தரிசிக்கலாம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் எங்கு வசிக்கிறார்களோ. அங்கே நவமூர்த்திகள் அமைக்கப்பட வேண்டும் என்கிறது மரீசி சம்ஹிதை எனும் ஞான நூல். அந்த வகையில் ஒன்பது பெருமாள்களுடன் அமைந்த கோயில் இது ஆகவே, நவநாராயணர் கோயில் என்றும் பக்தர்கள் போற்றுகிறார்கள்.
இந்தக் கோயிலில் மூன்று தளங்கள் இருக்கின்றன. அதாவது ஒன்றின் மீது ஒன்றாக மூன்று கருவறைகள் அமைந்துள்ளன. தரைத் தளம் மற்றும் முதல் தளத்தில் அமைந்துள்ள இரண்டு பிரதானக் கருவறைகளைச் சுற்றி மூன்று பிரதான திசைகளிலும் திசைக்கொன்றாக மூன்று கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பு இக்கோவிலின் தனிச் சிறப்பாகும். இந்தக் கோவிலின் மூன்று நிலைகளில் உள்ள மூலமூர்த்திகள் அத்தி மரத்தால் உருவானவை என்பது குறிப்பிடதக்கது.
கீழ்த்தளத்திலுள்ள முதன்மைக் கருவறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். நான்கு கரங்களுடன், நின்ற கோலத்தில் காடசி தரும் பெருமாள், மேல் வலது கையில் சக்கரம் மற்றும் மேல் இடது கையில் சங்கு ஏந்தியும், கீழ் கைகள் அபய ஹஸ்த முத்திரையும் கடிஹஸ்த முத்திரை காட்டியபடியும், காட்சி தருகிறார். இந்த பெருமாளின் தரிசனம் பாண்டவர்களில் ஒருவனான பீமனுக்குக் கிடைத்ததாம். அதே தனத்தில் பிராகாரத்தில் தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு நோக்கி முறையே அச்சுத வரதர், அதிருத்த வரதர், கல்யாண வரதர் அருன்கிறார்கள். ஆக கீழ்த் தளத்தில் 4 பெருமான்கள் அருள்பாலிக்கிறார்கள்.
முதல் தளத்தில் நடுநாயகமாக கிழக்கு நோக்கி வைகுண்ட நாதர் அருள்கிறார். இந்த பெருமாளின் தரிசனம் பாண்டவர்களில் ஒருவனான தர்மனுக்குக் கிடைத்ததாம்.பிராகாரச் சுற்றில் தெற்கு நோக்கி கண்ணன், மேற்கு நோக்கி நாசிம்மர், வடக்கு நோக்கிப் பூவராகர் என இங்கும் 4 பெருமாள்கள் சேவை சாதிக்கிறார்கள். மேல்தளத்தில் அனந்தசயனப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
பாண்டவ சகோதரர்கள் இழந்த ஆட்சியை மீட்டுத் தந்த தலம்
இந்தக் கோயில் மகாபாரதத்துடன் தொடர்புடையது. பாண்டவ சகோதரர்கள் தங்கள் அஞ்ஞாத வாசக்காலத்தில் வழிபட்ட தலம் சுந்தர வரத பெருமாள் கோயில். இந்த கோவிலை வழிபட்டபிறகே பிறகே அவர்கள் இழந்த ஆட்சி, அதிகாரம், வலிமைகளை திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்தக் கோயிலுக்குச் சென்று தவநாராயணரையும் தரிசித்து வழிபட்டால், தோஷங்கள் யாவும் நீங்கும். சந்தோஷம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பொன்மலை விஜயராகவப் பெருமாள் கோவில்
தம்பதியர் குறை தீர்க்கும் பெருமாள்
திருச்சிராப்பள்ளி நகரில், பொன்மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது விஜயராகவப் பெருமாள் திருக்கோவில். கருவறையில் ராமபிரான், 'விஜயராகவப் பெருமாள் என்ற திருநாமத்தில் சேவை சாதிக்கிறார். பெருமாளின் இடது கரத்தில் வில்லும், வலது கரத்தில் அம்பும் உள்ளன. ராமபிரானின் வலதுபுறம் சீதா பிராட்டியாரும், இடதுபுறம் லட்சுமணனும், ராமரின் காலடி அருகே கரம் குவித்த நிலையில் ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர்.
இங்கு பெருமாள் சீதா தேவியுடன் குடும்ப சகிதமாய் சேவை சாதிக்கிறார். அதனால், இவரை வணங்கும் பக்தர்களுக்கு, குடும்ப பிரச்சினைகள் யாவும் விரைந்து தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், தம்பதிகளின் பிணக்குகள் நீங்கி மன ஒற்றுமை நிலவவும், தாமதமாகும் திருமணங்கள் தடையின்றி நடந்தேறவும், கிரகக் கோளாறுகள் நீங்கி மன மகிழ்வுடன் வாழவும் இத்தல இறைவன் அருள்புரிகிறார்.

தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில்
திருமலை நாயக்கருக்கு பிரசன்னமாக காட்சியளித்த திருமலை வெங்கடாஜலபதி
மதுரை தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ளது பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில். இத்தலத்து வேங்கடாஜலபதி, மன்னர் திருமலை நாயக்கருக்கு பிரசன்னமாக காட்சியளித்ததால் பிரசன்ன வெங்கடாஜலபதி என்று அழைக்கப்படுகிறார்.
மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் வெங்கடாஜலபதியின் தீவிர பக்தராக இருந்தார். அவர் வெங்கடாஜலபதி கோயிலில் தினசரி பூஜைகள் நடத்தப்படும் போது, தமது மகாலில் இருந்தே அவரை பூஜித்து விட்டு பின்பு உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதற்காக, திருப்பதியில் பூஜை செய்யும் போது தாமும் தரிசனம் செய்ய வசதியாக கோயிவில் இருந்து அவரது மகால் அனமந்திருக்கும் பகுதி வரையில் வழி நெடுக மணிகட்டி மண்டபங்களை அமைத்தார்.
கோயிலில் பூஜை தொடங்கிய உடன் அவரது பணியாளர்கள் முதம் மணியை அடிக்க, தொடர்ந்து ஒவ்வொரு மணியாக அடிக்கப்படும். இறுதியில் மகால் அருகேயுள்ள மணி ஒலிக்க, பின் இங்கிருந்தே வெங்கடாஜபதியை தரிசனம செய்து விட்டு, உணவினை உண்பார். இந்நிலையில் ஓர் நாள் மணி ஒலிக்காது போக,கோபமடைந்த மன்னர் என்ன பிரச்சனை என அறிவதற்காக தனது குதிரையில் மணிகட்டி மண்டபம் நோக்கிச் சென்றார். முன்பு மாதுளை தோட்டமாக இருந்த பகுதி அருகே அவர் வந்த போது அவரது குதிரை அவ்விடத்தை விட்டு நகராமல் அங்கேயே மிரட்சி உடன் கணைத்தபடி நின்றது. அப்போது கீழே இறங்கிய மன்னர் அங்கே சுயம்புவாக வீற்றிருந்த ஆஞ்சநேயர் சிலையினைக் கண்டு மனம் வியந்தார். அப்போது அவரது மனதில் பிரசன்னமாக காட்சியளித்த ஸ்ரீவெங்கடாஜபதி தினமும் தன்னை தரிசனம் செய்ய அத்தலத்திலேயே கோயில் ஒன்றினைக் கட்டும்படி அறிவுறுத்தினார். அதன் பின்பே திருமலை நாயக்கர் மன்னர், இவ்விடத்தில் இக்கோயிலை கட்டியதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இத்தலம் திருமலை நாயக்கர் மகாலுக்கு நேரே அங்கிருத்தே இறைவனை தொழும்படியாக கட்டப்பட்டுள்ளது. இந்தலத்தில் ஸ்ரீ வெங்கரஜல்பதியின் கருவறைக்கு வலப்பக்கத்தில் நின்ற நிலையில் உக்கிரமாக ஆஞ்சநேயர் அருள் பாவிக்கிறார், அவரின் உக்கிரத்தை குறைக்கும் விதமாக ஏதிரே ஒரே கல்லில் சங்கு மற்றும் சக்கரங்கள் மட்டும் செதுக்கப்பட்ட நிலையில் சக்கரத்தாழ்வார் காட்சி தருகிறார்.

திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
.
பக்தனுக்காக கரும்பு தின்ற திருமலை வெங்கடேசப் பெருமாள்
ஹாதிராம் பாவாஜி என்ற ஒருவர் வடநாட்டைச் சேர்ந்தவர். திருப்பதி பெருமாளின் மேல் மிகுந்த பக்தி கொண்டவர். அவரின் பக்தியை ஏற்று வெங்கடேசப் பெருமாள், பாவாஜி தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். தன்னுடன் சொக்கட்டான் விளையாடி அருள் செய்ய வேண்டும் என்று ஹாதிராம் பாவாஜி, வெங்கடேசப் பெருமாளைக் கேட்டுக கொண்டார். வெங்கடேச பெருமாளும் அதையேற்று ஹாதிராம் பாவாஜியுடன் சொக்கட்டான் விளைடாடினார்.
ஒருநாள் ஹாதிராம் பாவாஜியுடன் சொக்கட்டான் விளைடாச் சென்ற பெருமாள் தான் அணித்திருந்த மாலை (ஹாரம்) ஒன்றை ஹாதிராம் பாலாஜி தங்கியிருந்த மடத்திலேயே விட்டுச் சென்று விட்டார். ஹாரத்தைக் கண்டெடுத்த ஹாதிராம் பாலாஜி, காலையில் திருப்பதி கோயிலுக்குச் சென்று கொடுத்து விடலாம் என்று எண்ணினார். காலையில் திருப்பதி கோயிலுக்கு பூஜை செய்ய சென்ற அர்ச்சகர்கள் ஹாரம் இல்லாததைக் கண்டு அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
ஹாரத்தை வைத்திருந்த ஹாதிராம் பாலாஜியை, திருடன் என்று அதிகாரிகள் முடிவெடுத்து தண்டித்தனர். ஹாதிராம் பாலாஜி, பெருமாளே நேரில் வந்து சொக்கட்டான் விளளயாடிய உண்மையை சொல்லியும் யாரும் அவரை நம்புவதாக இல்லை. பாலாஜியை சிறை வைத்தனர். அவரிடம் நீங்கள் சொல்வது உண்மையானால் இந்த அறையிலுள்ள கரும்புக் கட்டுக்கள் அனைத்தையும் நீங்களே தின்று தீர்க்க வேண்டும். அப்படியில்லாவிட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று நிபந்தனை விதித்தனர். ஹாதிராம் பாலாஜி பக்தியுடன் பெருமாளை தியானிக்கத் தொடங்கினார். நள்ளிரவில் யானையாக வந்த பெருமாள் அனைத்து கரும்புக் கட்டுகளையும் தின்று தீர்த்து தனது பக்தனின் பெருமையை உலகறியச் செய்தார்.
திருமலையிலிருந்து பாபவிநாச தீர்த்தம் செல்லும் வழியில் உள்ள வேணுகோபாலசுவாமி கோவிலில் ஹாதிராம் பாவாஜியின் அதிஷ்டானம் உள்ளது.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
1. திருப்பதி பெருமாளுக்கு முகவாயில் பச்சைக் கற்பூரம் சாற்றும் வழக்கம் ஏற்பட காரணமாக இருந்த கடப்பாரை
https://www.alayathuligal.com/blog/8r2h5k9nc4zyxc85agwjcf5fww5jhw
2. திருவேங்கடவனின் மாமனார்
https://www.alayathuligal.com/blog/558mb2xzflf6tm53dbbpmw9z5yk2kr

வேணுகோபாலசுவாமி கோவில்
பத்மாசன கோலத்தில் வணங்கி நிற்கும் அபூர்வ கருடாழ்வார்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, வெங்கடாம்பேட்டை. இத்தலத்திலுள்ள, வேணுகோபாலசுவாமி கோவிலில், பெருமாள் நின்ற திருக்கோலத்தில், ஶ்ரீபாமா ருக்மணி சமேத ஶ்ரீவேணுகோபாலனாக அருள்பாலிக்கிறார்.
இக்கோவில் கோபுர வாயிலைக் கடந்ததும், பலிபீடம் அருகே அபூர்வ கோல கருடாழ்வார் சந்நிதி அமைந்துள்ளது. பெரும்பாலான ஆலயங்களில் நின்று கை கட்டி வணங்கி நிற்கும் கோலத்திற்கு பதிலாக இரண்டு கால்களையும் மடித்து பத்மாசன கோலத்தில் அமர்ந்துள்ளார். கைகள் இரண்டும் வணங்கி நிற்க, இடக்கையில் நாகம் சுற்றி தொடைமீது படமெடுத்து உள்ளது. காதுகளில் பத்ர குண்டலங்களோடு இவர் காட்சி தருகின்றார். இது ஒரு அபூர்வ கோலம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
குழலூதும் அழகிய ஶ்ரீவேணுகோபாலன்
https://www.alayathuligal.com/blog/e34gxzgbya2nzmgj7lssfl84dykkse

திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
திருவேங்கடவனின் மாமனார்
வைண மத ஆச்சார்யரான இராமானுசரின் சீடர்களில் ஒருவர் அனந்தாழ்வான். கர்நாடகத்திலுள்ள மாண்டியா மாவட்டத்தில் பிறந்த இவருடைய இயற் பெயர் அனந்தன். இவர் இராமானுசரின் விருப்பத்திற்கிணங்க, திருமலையில் நந்தவனம் அமைத்து, அதில் மலரும் பூக்களை பறித்து தினமும் மாலை தொடுத்து திருவேங்கடவனுக்கு சமர்பித்து வந்தார்.
இவரின் நந்தவனத்தில், திருமலை பட்டத்தரசியான அலர்மேல்மங்கை நாச்சியாரோடு திருவேங்கடவன் இரவு நேரங்களில் உலாவும் போது ஒருநாள் இதனை கண்ணுற்ற அனந்தாழ்வார் யாரோ ஒரு காதல் இணைகள் தன் நந்தவனத்தில் புகுந்து பாழ்ப்படுத்துவதாக எண்ணி பிடிக்க முயற்சித்தார். உடனிருந்த ஆண்மகன் தப்பிக்க பெண்மகள் மட்டும் அனந்தாழ்வரிடம் பிடிபட எப்படியும் இவளை மீட்க அவள் காதலன் வருவான் என அந்நந்தவனத்திலேயே அலர்மேல்மங்கை நாச்சியாரை பிணையாக சிறைப்படுத்தினார்.
பொழுது விடிந்து வழக்கம்போல் அன்றலர்ந்த மலர்களை மாலைகளாக்கி திருவேங்கடவன் சன்னதியடைய அங்கே மார்புறை நாச்சியாராகிய அலர்மேல்மங்கை திருவேங்கடவன் மார்பில் இல்லாதிருக்கக் கண்டு அஞ்சி நடுங்கினார். முன்னிரவில் தானே தன் மனைவியாளோடு நந்தவனத்திற்கு வந்ததுவும், அனந்தாழ்வாரின் பிணையாக நந்தவனத்தில் கட்டுண்டு இருப்பவள் அனைத்து உயிர்களுக்கும் அன்னையாகிய அலர்மேல்மங்கை நாச்சியாரே என திருவேங்கடவன் தெரிவிக்க ஒரு நொடியும் ஐயனை அகலாத அன்னை தன் செய்கையால் ஒர் இரவு முழுதும் பிரிய நேரிட்டதை எண்ணி, அனந்தாழ்வார் மிக்க வருத்தம் கொண்டார். அதற்கு ஈடுசெய்யும் பொருட்டு அவரே நாச்சியாரின் தகப்பனாராக இருந்து மீண்டும் திருவேங்கடவனுக்கு மணம் முடித்து சேர்த்து வைத்தார். இச்செயலால் திருமலை உறையும் திருவேங்கடவனுக்கு இவர் மாமனார் என அன்றிலிருந்து அழைக்கப்பட்டு வருகிறார்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
திருப்பதி பெருமாளுக்கு முகவாயில் பச்சைக் கற்பூரம் சாற்றும் வழக்கம் ஏற்பட காரணமாக இருந்த கடப்பாரை
https://www.alayathuligal.com/blog/8r2h5k9nc4zyxc85agwjcf5fww5jhw

திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
உலகளவில் புகழடைந்த, வைண குருமாரான இராமானுசரின் சீடர்களில் ஒருவர் அனந்தாழ்வான். இவர், கர்னாடகத்தின் மாண்டிய மாவட்டத்தில் சிறுப்புத்தூர் எனும் ஊரில் அனந்தன் என்னும் இயற்பெயரில் பிறந்தவர். சுவாமி இராமானுசர் மீது அளவுகடந்த பக்தி கொண்ட இவர், இராமனுசர் ஆணைப்படியே திருமலையில் எழுந்தருளியுள்ள திருவேங்கடமுடையானுக்கு நந்தவனம் அமைத்து மலர் கைங்கர்யம் செய்வதையே வாழ்க்கையின் பலனாக கொண்டு திருமலையிலேயே வாழ்ந்தவர்.
திருப்பதி திருமலைவாசனை தரிசிக்கச் செல்லும்போது, கருவறையின் பிரதான வாசலின் வலப் புறத்தில், ஒரு கடப்பாரை தொங்குவதைப் பார்க்கலாம். அந்தக் கடப்பாரை, திருமலை நந்தவனத்தின் தண்ணீர் தேவைக்காக அனந்தாழ்வான் வெட்டிய குளத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. அந்தக் கடப்பாரைதான், திருமலைவாசனுக்கு தினமும் முகவாயில் பச்சை கற்பூரம் சார்த்தும் வழக்கம் ஏற்பட காரணமாக இருந்தது.
திருவரங்கத்தில் திருவரங்கப் பெருமானின் கைங்கர்யத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட ஶ்ரீராமாநுஜருக்கு, நீண்டகாலமாகவே ஒரு குறை இருந்துவந்தது. திருவரங்கத்தைப் போல்
நந்தவனமும், தபோவனமும் திருவேங்கடத்தில் அமைக்க முடியவில்லையே' என்பதுதான் அவருடைய ஆதங்கம். அலருடைய மனக்குறையை அறிந்த சீடர் அனந்தாழ்வான், தாம் அந்த கைங்கர்யத்தை செயவதாக தனது குருவிடம் தெரிவித்தார். ஏழுமலை ஆண்டவனுக்கு திருமாலை தொடுத்து சேவை செய்யும்பேறு தனக்குக் கிடைத்த மகிழ்ச்சியோடு தனது மனைவியுடன் அவர் திருமலைக்கு வந்து சேர்ந்தார்.
திருமலையில் நந்தவனம் அமைத்தார். மண்வெட்டியால் வெட்டி நிலத்தைப் பண்படுத்தி பூச்செடிகளை நட்டார். அந்த நந்தவனத்துக்கு தமது குருநாதரின் திருப்பெயரே நிலைக்கும்படி 'ராமானுஜ நந்தவனம்' என்று பெயரும் வைத்தார். இப்போதும் அந்த நந்தவனம் அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது.
பின்னர் நந்தவனத்தின் தண்ணீர்த் தேவைக்காக குளம் வெட்டி அதில் தண்ணீரைத் தேக்க முடிவுசெய்தார். இச்சமயம் அவரது மனைவி கர்ப்பம் தரித்திருந்தார். 'நானும் உங்களுக்கு உதவுகிறேன்' என குளம் வெட்டும் பணியில் மனைவியும் சேர்ந்துகொண்டார்.
அனந்தாழ்வான் வெட்டிய மண்ணை ஒரு புறமிருந்து மறுபக்கம் கொண்டு சென்று மனைவி கொட்டிவிட்டு வந்தார். ஒரு கர்ப்பிணிப் பெண் மண் சுமந்து செல்வதைப் பார்த்த ஒரு சிறுவன், அவருக்குத் தானும் உதவுவதாகக் கூறினான். ஆனால், அனந்தாழ்வானோ, அந்தச் சிறுவனை எதற்கு சிரமப்படுத்த வேண்டும் என நினைத்து அவனை அனுப்பிவிட்டார். பெருமாளின் கைங்கர்யத்தில் தானும் தன் மனைவியும் மட்டுமே ஈடுபடவேண்டும் என்று நினைத்தார்.
ஆனாலும், கர்ப்பிணிப் பெண் கஷ்டப்பட்டு மண் சுமப்பதைப் பார்த்து அந்தச் சிறுவன் மிகவும் வருந்தினான். சற்று வளைவான பாதையில் சென்று மண்ணைக் கொண்டுபோய் கொட்ட வேண்டியிருந்ததால், மனைவி அங்கு சென்று மண்ணைக் கொட்டி விட்டு வந்தார். அனந்தாழ்வான் இந்தப் பக்கம் மண் தோண்டினார். வளைவுக்கோ அதிக தூரம் இருந்தது. அவர் போகச் சொன்ன சிறுவன் போகாமல், அந்தப்பக்கத்தில் கூடையுடன் நின்றிருந்தான்.
'தாயே, நான் மண் சுமந்தால்தானே அவர் கோபப்படுவார். அவருக்குத் தெரியாமல் உங்களுக்கு உதவுகிறேன். இந்த வளைவுக்கு இந்தப் பக்கம் நான் சுமக்கிறேன். அந்தப்பக்கம் நீங்கள் சுமந்து வாருங்கள்' 'என்றான் சிறுவன். சிறுவனின் கெஞ்சல் மொழியைக் கேட்ட பிறகு அவளால் மறுக்க இயலவில்லை.
'சரி, தம்பி' என்று கூடையை மாற்றிக் கொடுத்தாள். சற்றுநேரம் இப்படியே வேலை நடந்தது. திடீரென்று அனந்தாழ்வானுக்கு சந்தேகம் தோன்றியது. 'மண்ணைக் கொட்டிவிட்டு சீக்கிரம் சீக்கிரமாக வந்து விடுகிறாயே' என்று மனைவியைக் கேட்க, 'சீக்கிரமாகவே சென்று போட்டு விடுகிறேன் சிரமம் இல்லை' என்று பதில் சொல்லி சமாளித்தாள்.
சிறிது நேரம் சென்றதும், அனந்தாழ்வான் கரையைப் பார்க்க வந்தார். சிறுவன் கர்மசிரத்தையாக மண்ணைக் கொண்டு போய் கொட்டிக்கொண்டிருந்தான். தன்னை அவர் கவனிப்பதைக்கூட பொருட்படுத்தாமல் சிறுவன் தன் பணியைச் செய்தவாறு இருந்தான்.
இதனால், கோபம் தலைக்கேற கடப்பாரையால் சிறுவனின் கீழ்த்தாடையில் அடித்தார். சிறுவனின் தாடையில் இருந்து ரத்தம் கொட்டியது. கடப்பாரையால் அடிபட்டு ரத்தம் பெருகிய நிலையில், அந்தச் சிறுவன் ஓடிப்போய்விட்டான்.
அவசரப்பட்டுத் தான் சிறுவனை ரத்தம் வரும்படி அடித்துவிட்டோமே என்ற வருத்தத்தில் அனந்தாழ்வானுக்கும், தொடர்ந்து வேலை செய்யப் பிடிக்கவில்லை. குடிசைக்குத் திரும்பிவிட்டார்.
மறுநாள் காலை திருமலை பெருமாளுக்கு அர்ச்சனைகள் செய்ய வந்த அர்ச்சகர்கள் கதவைத் திறந்ததும் அலறினர். பெருமாளின் தாடையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. 'அர்ச்சகரே பயப்படவேண்டாம். அனந்தாழ்வாரை அழைத்து வாருங்கள்' என ஒரு அசரீரி கேட்டது. உடனே அவரை அழைத்துவந்தனர்.
பெருமாள் தாடையில் ரத்தம் வடிவதை அனந்தாழ்வான் கண்டார். ஆனால், அவருக்கு மட்டும், தான் மண்சுமந்த கோலத்தைக் காண்பித்தார் பெருமாள்.
'சுவாமி, என்னை மன்னித்து விடுங்கள். தங்கள் தொண்டுக்கு அடுத்தவர் உதவியை நாடக்கூடாது என்ற சுயநலத்தில் சிறுவனை விரட்டினேன். அவன் வலிய வந்து மண் சுமந்ததால் வந்த கோபத்தில் அடித்தேன். அந்தச் சிறுவனாக வந்தது தாங்கள்தான் என்று தெரியாது. சுவாமி என்னை மன்னித்தருள்க' என்று விழுந்து வணங்கினார் அனந்தாழ்வான்.
'அனந்தாழ்வா, நீ மலர்மாலை நேர்த்தியாகக் தொடுத்து அணிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், கர்ப்பிணியான உன் மனைவி மண் சுமப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
பக்தர்களின் கஷ்டத்தைப் போக்கத்தான் நான் இங்கு இருக்கிறேன். என் பக்தை கஷ்டப்படுவதைக் கண்டு வேடிக்கை பார்க்க என் மனம் எப்படி இடம் கொடுக்கும்' என்று அசரீரியாகக் கேட்டார்.
'கருணைக் கடலே! என்னை மன்னியுங்கள் சுவாமி' என்றார்.
'சரி. ரத்தம் வழியாமல் இருக்க என்ன செய்வது?' என்று அர்ச்சகர்கள் குழம்பினர்.'சுவாமியின் தாடையில் பச்சைக்கற்பூரத்தை வைத்து அழுத்துங்கள் ரத்தம் வழிவது நின்றுவிடும்' என்றார்.
அர்ச்சகர்களும் மூலவரின் கீழ்தாடையில் பச்சைக் கற்பூரத்தை வைக்க, ரத்தம் வழிந்தது நின்று போனது. இதைநினைவுபடுத்தும் விதமாகவே திருப்பதிப் பெருமாளின் தாடையில் பச்சைக் கற்பூரம் வைக்கும் நிகழ்ச்சி இன்றளவும் தொடர்கிறது.

ராஜகோபாலசுவாமி கோவில்
பெண் வடிவ கருடாழ்வார்
திருவாரூரிலிருந்து சுமார் 30 கி,மீ. தொலைவில் உள்ள மன்னார்குடியில் அமைந்துள்ளது ராஜகோபால சுவாமி கோவில். குருவாயூரைப் போலவே, மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலையும் 'தட்சிண துவாரகை' என்று அழைக்கிறார்கள். இங்கு அருள்பாலிக்கும் மூலவரின் திருநாமம் ஸ்ரீவாசுதேவப் பெருமாள் என்பதாகும். உற்சவரின் திருநாமம் ராஜகோபால சுவாமி. தாயாரின் பெயர், செங்கமலத் தாயார். உற்சவரின் பெயரான ராஜகோபால சுவாமி என்ற பெயரிலேயே ஆலயம் விளங்குகிறது.
பெரிய திருவடி என்று போற்றப்பெறும் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளுவதே தனி அழகும் கம்பீரமும்தான். கருடவாகனத்தில் பெருமாளை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே இல்லை என்பது வைஷ்ண வர்களின் மாபெரும் நம்பிக்கை. பெருமாளுக்கு வாகனமாகவும், அவரது கொடியின் சின்னமாகவும் இருப்பவர்
கருட பகவான் சாதாரணமாக இரு பெரிய இறக்கைகளுடன் மனிதனைப் போல வடிவம் கொண்டு, வளைந்த மூக்குடன் அழகிய முகத் தோற்றத்தில் பெருமாள் எதிரே நின்ற நிலையில்தான் கோயில்களில் காட்சி தருவார். வாகனமாக திருமாலை எழுந்தருளச் செய்து செல்லும்போது அமர்ந்த நிலையில் காட்சி தருவார். சிறந்த பக்தி, ஞாபக சக்தி, வேதாந்த அறிவு, வாக்கு சாதுரியம் போன்றவை கருடனை வணங்கும்போது கிடைக்கும் என ஈஸ்வர சம்ஹிதை என்ற நூல் கூறுகிறது. கருடாழ்வாரை வணங்கி உபவாசம் இருந்தால் மனநோய், வாய்வுநோய், இதயநோய், தீராத விஷ நோய்கள் தீரும் என கருட தண்டகத்தில் கூறப்பட்டுள்ளது. கருடன் நிழல் பட்ட வயல்களில் அமோக விளைச்சல் உண்டாகும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை. கருடபகவானை நினைத்தாலே விஷ உயிர்களின் மூலம் உருவாகும் பயமும் துன்பமும் மறையும் என்பது ஐதீகம்.
இத்தலத்தில் செங்கமலத் தாயார் சன்னிதி அருகே, பெருமாள் சன்னிதி எதிரே, பெண் வடிவ கருடாழ்வார் காட்சி தருகிறார். இப்படி பெண் வடிவில் காட்சி தரும் கருடாழ்வாரை வேறெங்கும் நாம் தரிசிப்பது அரிது. இந்த பெண் வடிவ கருடாழ்வாருக்கு நெய்தீபம், எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண தோஷம் புத்திரதோஷம் விலகிவிடும்.

வரதராஜப் பெருமாள் கோவில்
மூன்று திவ்ய தேச பெருமாள்கள் எழுந்தருளியிருக்கும் தலம்
சென்னையில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது, பூந்தமல்லி வரதராஜப் பெருமாள் கோவில்.
ஸ்ரீராமானுஜரின் குருவான திருகச்சி நம்பிகளின் அவதாரத் தலம் இதுவாகும். இந்த ஆலயத்தில் திருக்கச்சி நம்பிகள் கையில் விசிறியுடன் காட்சி தருகிறார். இங்கு மூலவரான வரதராஜப் பெருமாள், புண்ணியகோடி விமானத்தின் கீழ், பின் தலையில் சூரியனுடன் இருக்கிறார். இதனால் இது சூரிய தலமாகவும் கருதப்படுகிறது.
இந்த ஆலயத்தில் திருப்பதி வேங்கடேசர், திருவரங்கம் அரங்கநாதர், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. மூவருக்கும் தனித்தனியாக பிரம்மோற்சவமும் நடை பெறுகிறது. அப்போது மூவரும் திருக்கச்சி நம்பிக்கு, கருடசேவை காட்சி தருவர்.
இத்தல தாயார், மல்லிகை மலரில் அவதரித்ததால் 'புஷ்பவல்லி' என்று பெயர். இவள் பூவில் இருந்தவள் என்பதால், இந்த ஊர் 'பூவிருந்தவல்லி' என்றானது. அதுவே மருவி 'பூந்தமல்லி' என்று அழைக்கப்படுகிறது.
திருமாலுக்கு விசிறி சேவை செய்ய எண்ணிய திருக்கச்சி நம்பிகள், முதலில் திருவரங்கம் சென்றார். அரங்கநாதரோ, தான் காவிரிக்கரையில் குளிர்ச்சியாகவே இருப்பதாக சொல்லி விட்டார். பின்னர் திருக்கச்சி நம்பிகள், திருப்பதி சென்றார். அங்கிருக்கும் வேங்கடேசனோ, தான் மலை மீது இருப்பதால் எப்போதும் குளிரில் இருப்பதாக கூறினார். இதனால் காஞ்சிபுரம் வந்த திருக்கச்சி நம்பிகள், அங்கு உக்கிரமாக இருந்த வரதராஜருக்கு தன்னுடைய விசிறி சேவையை செய்து வந்தார்.
திருக்கச்சி நம்பிகள், தினமும் காஞ்சிபுரம் சென்று விசிறி சேவை செய்து வந்தார். அதோடு இங்கு நந்தவனம் அமைத்து மலர்களைத் தொடுத்து மாலையும் அணிவித்து வந்தார். வயதான பின்பும் இதே போன்று அவர் காஞ்சிபுரம் சென்று வந்து கொண்டிருந்தார். அவரது தள்ளாத வயதை கருத்தில் கொண்ட வரதராஜப் பெருமாள், பூந்தமல்லிக்கே வந்து காட்சி தந்தார். அந்த இடத்தில்தான் தற்போதைய ஆலயம் இருக்கின்றது.
சூரிய தோஷ நிவர்த்தி தலம்
இது சூரியதலம் ஜோதிட ரீதியாக சூரிய திசை நடப்பவர்கள், தந்தையுடன் கருத்து வேறுபாடு உள்ளவர்கள, உடல்நலம்
பாதிக்கப்பட்டோர், இத்தல பெருமாளை வழிபட்டால் நலம் கிடைக்கும்.

நித்ய கல்யாண பெருமாள் கோவில்
ஒவ்வொரு நாளும் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் திவ்ய தேசம்
சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரைச்சாலையில், 40 கிலோமீட்டர் தொலைவில், கோவளத்திற்கு முன்னதாக திருவேடகத்தில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில். இங்கு, லட்சுமியை தன் இடது தோளில் ஏந்தியபடி காட்சி தருகிறார் நித்ய கல்யாணப் பெருமாள். லட்சுமியை இடப்பக்கம் ஏந்திய திருத்தலம் என்பதால் `திருஇடந்தை' என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே திருவிடந்தை ஆக மாறிவிட்டது.
கருவறையில் மூலவரான ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் சுமார் ஆறரை அடி உயரமுள்ள கல் விக்ரகமாக- தேவியை மடியில் அமர்த்திக் கொண்டு வீற்றிருக்கிறார். பெருமாளின் திருவடியின்கீழ் தன் பத்தினியுடன் ஆதிசேடன் உள்ளார். ஸ்ரீஆதிவராக மூர்த்தியின் இடப்பக்கத்தில் உள்ள நாச்சியாருக்கு அகில வல்லி நாச்சியார் என்றும், பிரதி தினம் கல்யாணம் செய்து கொண்டபடியால், பெருமாளுக்கு நித்திய கல்யாண பெருமாள் என்றும் திருநாமம் வழங்கலாயிற்று. தாயார் திருநாமம் கோமளவல்லி.
பெருமாளுக்கு அனுதினமும் திருமணம் நடந்த வரலாறு
சரஸ்வதி ஆற்றங்கரையில் உள்ள சம்பு என்று அழைக்கப்பட்ட தீவில் குனி என்னும் முனிவர் தவம் செய்து வந்தார். அவருக்குப் பணிவிடை செய்வதற்காக கன்னிகை ஒருத்தி அங்கு வந்து சேர்ந்தாள். ஒரு காலகட்டத்தில் அந்த முனிவர் மோட்சம் அடையவே, அவரைப் போலவே மோட்சம் அடைய அந்தக் கன்னிகை கடுந்தவம் செய்து வந்தாள். ஒரு நாள் அங்கு வந்த நாரத முனிவர் அவளிடம்,'திருமணம் செய்து கொள்ளாமல் மோட்சம் அடைய இயலாது' என்று கூறினார். எனவே பல முனிவர்களிடமும் சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டினாள். காலவ முனிவர் என்பவர் அவளை மணந்து கொண்டார். அவர்களுக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்தார்கள். முதலாவது பெண் குழந்தையின் பெயர் கோமளவல்லி. அவர்களைப் பெற்ற சிறிது காலத்தில் குழந்தைகளின் தாய் மறைந்து விட்டாள். காலவ முனிவர் அந்த 360 பெண் குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்டார். பெண் குழந்தைகள் மளமளவென்று வளர்ந்து பருவமடைந்து, திருமணத்திற்குக் காத்திருக்கும் கன்னிகளானார்கள். இத்தனை பெண்களையும் எப்படி திருமணம் செய்து கொடுப்பது என்று தவித்தார் காலவ முனிவர். சம்புத்தீவிற்கு வந்து மற்ற முனிவர்களிடம் அந்தப் பெண்களுக்கு எவ்வாறு திருமணம் செய்து வைப்பது என்று வருத்தத்துடன் ஆலோசனை கேட்டார். அவர்கள் திருவிடந்தை சென்று பெருமாளை வழிபடக் கூறினார்கள். இத்தலத்திற்கு தனது 360 கன்னிகைகளுடன் வாழ்ந்து வந்த காலவரிஷியின் வேண்டுதலை ஏற்று, பெருமாள் பிரம்மச்சாரியாக வந்து தினம் ஒரு கன்னிகையாக 360 நாட்களில் அனைவரையும் திருமணம் செய்து கொண்டு கடைசி நாளன்று அனைவரையும் ஒருவராக்கி தனது இடபாகத்தில் வைத்துக் கொண்டு எழுந்தருளினார்.
திருஷ்டி தோஷம் விலக்கும் தலம்
உற்சவரான ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி ஆகியோர் பஞ்சலோக விக்ரகங்களாகக் காட்சி தருகின்றனர். ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாளின் திருமுகத்தில் திருஷ்டிப் பொட்டு ஒன்று உள்ளது. இது இயற்கையிலேயே அமைந்ததாம். இந்த திருஷ்டிப் பொட்டையும் தனிச்சந்நிதி தாயாரான கோமள வல்லித் தாயாரின் திருமுகத்தில் இருக்கும் திருஷ்டிப் பொட்டை யும் தரிசிப்பவர்களுக்கு திருஷ்டி தோஷம் விலகும் என்கிறார்கள். இந்த கோவிலுக்கு வந்து வேண்டிக்கொண்டால் சட்டென்று திருமணம் முடிந்து விடும். அவ்வாறு திருமணம் முடிந்த தம்பதியர், இந்த கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

லட்சுமி நரசிம்மர் கோவில்
தீராத நோய்களைத் தீர்க்கும் வைத்திய நரசிம்மர்
தெலுங்கானா மாநிலம் யாதகிரி மாவட்டத்தில், யாதகிரிகுட்டா என்ற ஊரில் அமைந்துள்ளது. லட்சுமி நரசிம்மர் கோவில். ஐதராபாத்தில் இருந்து 52 கிலோ மீட்டரிலும், வாரங்கல்லில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. தீராத நோயைத் தீர்த்து வைக்கும் சக்திமிக்கவராக விளங்கும் இத்தல நரசிம்மர், 'வைத்திய நரசிம்மர்' என்றும் அழைக்கப்படுகிறார்.
தல வரலாறு
திரேதா யுகத்தில், ருஷ்யசிருங்கரின் மகனான யாத மகரிஷி இங்கு தவம் செய்கையில் அவருக்குப் பிரத்யட்சமான அனுமன் அவரது வேண்டுகோளின்படி அவருக்கு நரசிம்மரின் திருக்கோலம் காணும் பாக்கியத்தை அருளினார். நரசிம்மர் அவருக்கு ஐந்து வடிவில் காட்சி தந்த தலம் இது. இந்த இடம் தற்போது கோவில் இருக்கும் இடத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. மக்களின் முறையற்ற வழிபாட்டின் காரணமாக, நரசிம்மர் தன்னுடைய புராதன இடத்தில் இருந்து தற்போதைய குன்றில் வந்து அமர்ந்ததாகவும், அதை அறிந்து இங்கே ஆலயம் கட்டப்பட்டதாகவும் தலவரலாறு சொல்கிறது.
இங்கு வீற்றிருக்கும் மூலவரான லட்சுமி நரசிம்மர், மிகவும் சக்தி வாய்ந்தவர். இவர் 12 அடி உயரமும், 30 அடி அகலமும் கொண்ட குகையில் இருந்து அருள்புரிகிறார். யோக நரசிம்மர், நரசிம்பர், ஜூவால் நரசிம்மர், உக்கிர நாசிப்பர், லட்சுமி நரசிம்மர்' என ஐந்து தோற்றங்களில் யாதரிஷி முனிவருக்கு, காட்சிதந்த தலம் என்பதால், இந்தக் கோவில் பஞ்ச நரசிப்பர் கோவில்' என்றும் அழைக்கப்படுகிறது. பதினெட்டு புராணங்களில் ஒன்றான கந்த புராணத்தில், கோவிலைப் பற்றிய தகவல்கள் இருப்பதை வைத்து, இது எவ்வளவு புராதனமான ஆலயம் என்பதை உண முடியும்.
தீராத நோயைத் தீர்த்து வைக்கும் சக்திமிக்கவராக விளங்கும் இத்தல நரசிம்மர், 'வைத்திய நரசிம்மர்' என்றும் அழைக்கப்படுகிறார். சகல மனக்கிலேசங்களையும், அச்சங்களையும் அகற்ற வல்லவர் நரசிம்மர். இங்கு ஒரு மண்டல காலம் தங்கித் தொழுதால் மனப்பிணிகள் அகன்று விடும் என்பது நம்பிக்கை. இங்கு வந்து தொழுவோருக்கு பில்லி, சூனியம், ஏவல் ஆகியவை அகன்று விடும் என்பதும் நம்பிக்கை.உத்தியோகம், உத்தியோகத்தில் உயர்வு, மகப்பேறு ஆகியவற்றிற்காவும் இத்தலம் பெயர் பெற்றுள்ளது.

லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில்
நாள்பட்ட நோயால் சிரமப்படுபவர்கள் வழிபட வேண்டிய தலம்
செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் 16 கி.மீ.தூரத்திலும், காஞ்சிபுரத்திலிருந்து 21 கி.மீ. தூரத்திலும் பழைய சீவரம் தலத்தில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது.
மூலவர் லட்சுமிநரசிமமர் மேற்குநோக்கி வீற்றிருக்கிறார். கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியும்,வலக்கரத்தால் அபயம் அளித்தும், இடது கையால் லட்சுமியை அணைத்தபடியும் உள்ளார். தாயார் அகோபிலவல்லி.
பக்தரின் வயிற்று வலியை போக்கிய லட்சுமிநரசிமமர்
300 ஆண்டுகளுக்கு முன், வடஇந்தியாவிலிருந்து பக்தர்கள் இங்கு வந்தனர். அதில் ஒருவருக்கு தீராத வயிற்றுவலி இருந்தது. பழைய சீவரம் தலத்திற்கு தாிசனம் செய்ய வந்த இந்த அன்பா் புண்ணியநதியான 'ஷீர நதியில்' (பாலாறு) நீராடி எம்பெருமானை வழிபட்டு அன்று இரவு இத்தலத்திலேயே ஓய்வெடுத்தாா் . அவரது கனவில் பிரத்யக்ஷமான எம்பெருமான் இத்தலத்தில் ஒரு மண்டலம் தங்கி வழிபாடு செய்ய உடல் நோய் முற்றிலும் குணமாகும் என அருள்பாலித்தாா். நெஞ்சம் நெகிழ்ந்த அன்பா் எம்பெருமானின் திருவுள்ளப்படி இத்தலத்தில் தங்கி வழிபாடுகள் செய்ய அவரது உடல் நோய் முற்றிலும் நீங்கியது. எம்பெருமானின் அருட்கடாட் சத்தை எண்ணி வியந்த இந்த அன்பா் திருக்கோயிலுக்குப் பல திருப்பணிகளை செய்து மகிழ்ந்தாா். அவருடைய பரம்பரையில் வந்தவர்களே அறங்காவலர்களாக இன்றும் இருந்து வருகின்றனர்.
நாள் பட்ட நோய்களை விரட்டும் லட்சுமி நரசிம்ம மந்திரம்
நாள்பட்ட வியாதிகளால் அவதியுறும் அன்பா்கள் இத்தலத்தில் வழிபட, நோயின் தாக்கம் உடனடியாகக் குறைந்து உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது. நாள்பட்ட நோய்களால் அவதிப்படுபவர்கள் ஆரோக்கியம் பெற லட்சுமி நரசிம்மரை வீட்டிலிருந்த படியே வேண்டிக் கொள்ளலாம். அறுவை சிகிச்சை செய்ய இருப்பவர்கள், மருத்துவமனை செல்லும் முன் இங்கு வந்து தரிசிக்கின்றனர். இவர்கள் லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை ஜபித்தபடியே மருந்து உண்டால், நோய்கள் பறந்தோடும் என்பது நம்பிக்கை. பாவம் காரணமாகவே நோய்கள் வருகின்றன. இந்த மந்திரத்தை ஜெபித்து, நல்லதை மட்டுமே செய்தால் நோய்கள் தங்கள் பரம்பரைக்கும் வராமல் தடுக்கலாம். துளசி மாலை சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில்
காலபைரவர் மூச்சு விடும் அதிசயம்
திருநெல்வேலியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் நாங்குனேரிக்கு அருகில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருக்குறுங்குடி. இத்தலத்தில் பெருமாள் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 திருக்கோலங்களில் எழுந்தருளியுள்ளார். தாயார் குறுங்குடிவல்லி
சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இக்கோவிலில் சிவபிரான் 'மகேந்திரகிரி நாதர்' என்ற பெயரில் எழுந்தருளியிருக்கிறார்.
இங்கே பெருமாள் சன்னதியில் காலபைரவர் அதிசயிக்கதக்க வகையில் இருக்கிறார். உள் பிரகாரத்தை சுற்றி வரும்போது பிரமாண்டமான தோற்றத்தில் இருக்கும் இவரே, இக்கோவிலின் காவல் தெய்வமாக இருக்கிறார்.
காலபைரவர் சன்னதியில், கருவறையின் மேற்பக்கம் ஒரு விளக்கும், கீழ்பகுதியில் ஒரு விளக்கும் ஏற்றப்பட்டிருக்கும். இவைத் தவிர பக்கவாட்டில் இரண்டு சரவிளக்குகளும் இருக்கும். இந்த நான்கு தீபங்களும் எரியும்போது தெரியும் பிரகாசமான ஒளியில் பைரவர் ரூபம் அழகாகக் காட்சியளிக்கும். இந்தக் கருவறைக்குள் எந்த திசையிலிருந்தும் காற்று புகாவண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் இதில் அதிசயம் என்னவென்றால் மேற்பகுதியில் உள்ள விளக்கின் ஜ்வாலை மட்டும் காற்று பட்டால் அசையும் தீபம் போல ஆடிக் கொண்டேயிருக்கும். கீழே உள்ள விளக்கின் தீப ஒளி எந்தவித சலனமும் இல்லாமல் இருக்கும்.
மேல் இருக்கும் விளக்கு மட்டும் வெளிபக்கமாகவும் , உள்பக்கமாகவும் அசைவது பைரவர் விடும் மூச்சு காற்று என சொல்லபடுகிறது. அதாவது பைரவர் மூச்சை இழுக்கும்போது தீபம் உள்பக்கமாகவும், மூச்சு வெளிவிடும்போது தீபம் வெளிப்பக்கமாகவும் அசைகிறது. மற்ற தீபங்கள் எல்லாம் எந்த சலனமும் இல்லாமல் அசையாமல் இருக்கும்போது அவருடைய முகத்துக்கு பக்கத்தில் இருக்கும் விளக்கு மட்டும் உள்பக்கம் வெளிபக்கமாக அசைவதை பகதர்கள் நேரில் கண்கூடாகப் பார்க்கலாம்.
குழந்தைப்பேறு வேண்டி இங்கே வழிபாடு நடத்துபவர்களுக்கு உடனடியாகப் பலன் கிடைக்கிறது. இவருக்கு தயிரன்னமும், வடைமாலையும், பூசட்டையும் படைக்கப்படுகிறது.