திருமீயச்சூர் மேகநாதர் கோவில்

முகத்தின் ஒரு பக்கத்தில் கோபத்தையும், மறுபக்கத்தில் நாணத்தையும் வெளிப்படுத்தும் அபூர்வ அம்பிகை

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையின் அருகிலுள்ள பேரளம் ரயில் நிலையத்திலிருந்து, மேற்கே ஒரு கி.மீ. தொலைவில் அமைந்து உள்ள தேவார தலம் திருமீயச்சூர் மேகநாதர் கோவில். இறைவியின் திருநாமம் லலிதாம்பிகை.

திருமீயச்சூர், ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் நோன்றிய திருத்தலம். இங்குதான் ஸ்ரீ ஹயக்ரீவர், அகத்திய முனிவருக்கு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்தார். அகத்தியரும் ஒரு பௌர்ணமி நாளன்று ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தினால் திருமீயச்சூர் லலிதாம்பிகையை வழிபட்டதுடன், ஸ்ரீலலிதா நவரத்தின மாலை என்ற பாடலையும் தமிழில் இயற்றி அம்பிகைக்கு அர்ப்பணித்தார். இத்தலத்துக்கு வந்து, லலிதா சகஸ்ரநாமத்தையும், லலிதா நவரத்னமாலையையும் படிப்பவர்களுக்கு அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும்.

இக்கோவில் விமானத்தின் கீழ் தெற்கில் ஷேத்திரபுராணேச்வரர், பார்வதியின் முகவாயைப் பிடித்துச் சாந்தநாயகியாக இருக்கச் சொல்லி வேண்டுவது போன்ற வடிவில் காணப்படும் சிற்ப அழகை வேறு எந்தக் கோவிலிலும் காண்பது அரிது. இந்தச் சிற்பத்தை ஒரு பக்கத்தில் இருந்து பார்த்தால் அம்பாள் கோபமுடன் இருப்பது போலத் தோன்றும். இதே சிற்பத்தை மறுபக்கம் சென்று பார்த்தால், அம்பாள் சாந்த சொரூபியாக நாணத்துடன் காணப்படுவாள்.இந்த கோவிலில் நாம் அவசியம் தரிசிக்க வேண்டிய அபூர்வமான சிற்பமாகும் இது. இப்படி அம்பிகை இரு வேறு முக பாவணையை வெளிப்படுத்துவதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்ச்சி உள்ளது.

ஒரு சமயம் சிவபெருமானிடம் பெற்ற சாபத்தினால், சூரிய பகவானின் திருமேனி கருகி போனது. சூரியன், சாப விமோசனம் பெற திருமீயச்சூரில் 7 மாத காலம் கடுந்தவம் புரிந்தும் மேனி நிறம் மாறவில்லை. சூரியன் வாய்விட்டு அலறி இறைவனை அழைக்க, இறைவனோடு தனித்திருந்த பார்வதி, சூரியனின் அலறலினால் தன்னுடைய ஏகாந்தத்துக்கு ஏற்பட்ட இடையூரால் சூரியன் மேல் கோபம் அடைந்தாள்.அவனுக்கு சாபம் அளிக்க முற்பட்டாள். முன்னரே சாபத்தால் வருந்திக் கொண்டிருக்கும் சூரியனை மேலும் வருத்த வேண்டாம் என்றும் அமைதி கொள்ளுமாறும் சிவபெருமான் கூற, பார்வதி சாந்தநாயகி ஆனாள். இந்த நிகழ்ச்சியின் காரணமாகத்தான், அம்பிகை தன்னுடைய முகத்தில் இருவேறு பாவங்களைக் கொண்டிருக்கிறார்.

வாசகர்களின் கவனத்திற்கு

இப்பதிவில் வரைபடத்திற்கு (Map) கீழ் இடம் பெற்றுள்ள 'நுணுக்கமான சிற்பம்' என்று குறி சொல்லை கிளிக் செய்தால், முந்தைய பதிவுகளில் வெளியான நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கோவில்களை பற்றிய தகவல்களைப் படிக்கலாம்.

 
Previous
Previous

சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்

Next
Next

திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்