திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில்

காணும் பொங்கலன்று மாட்டு வண்டியில் வீதி உலா வரும் திருத்தணி முருகன்

திருத்தணி முருகன் கோவிலின் உற்சவர் காணும் பொங்கலன்று, வள்ளி, தெய்வானையுடன் மலைக்கோவிலில் இருந்து படிகள் வழியாக இறங்கி வருவார். பின்னர் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் உற்சவ பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தர நகர வீதிகளில் உலா வருவார். திருவீதி உலா வரும் தெருக்களில் வண்ணக்கோலங்கள் போட்டு, கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து பக்தர்கள் முருகனை வழிபடுவர். பொதுவாக காணும் பொங்கல் அன்று பக்தர்கள் கோவிலுக்கு இறைவனை தரிசிக்க செல்வது வழக்கம். ஆனால், திருத்தணியில்

பக்தர்களுக்கு தரிசனம் தர, முருகப்பெருமானே மலையில் இருந்து இறங்கி வருவது தனிச்சிறப்பாகும்.

காணும் பொங்கல் சிறப்புகள்

பொங்கல் பண்டிகையை நான்கு நாட்கள் கொண்டாடுவது வழக்கம். பொங்கலுகக்கு முந்தைய நாளும், மார்கழி மாதத்தின் கடைசி நாளும் ’போகி’ பண்டிகை கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல்நாள் தைப்பொங்கல் கொண்டாடாப்படுகிறது. இடண்டாவது நாளில் உழவுக்கு உதவும் மாடுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடுகிறோம். நான்காவது நாள்தான் காணும் பொங்கல். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். காணும் பொங்கல் (கன்னி பொங்கல்) அன்று திருமணம் ஆகாத கன்னி பெண்கள் தமக்கு நல்ல கணவர் கிடைக்க வேண்டுமென்று மார்கழி மாதம் முழுவதும் விரதம் எடுத்து பொங்கல் வைத்து வழிபாடு செய்வது கன்னி பொங்கலாகும்.

காணும் பொங்கல் அன்று செய்த சாதத்தை உடன் பிறந்தவர்களின் நன்மைகாக, காக்கா குருவிக்கு அன்னமிடவேண்டும் என்பதே சம்பிரதாயமாகும். ஆற்றங்ரையிலோ அல்லது வீட்டு மொட்டைமாடியிலோ ,மஞ்சள் அல்லது வாழை இலைகளை கிழக்கு முகமாய் பார்த்து 5 வகையான சாதங்களை வைக்கவேண்டும். முதல் நாள் பொங்கிய சாத்தில் மஞ்சள் பொடி, கொஞ்சம் குங்குமம் தூவி, பால் சேர்த்து , சக்கரைப் பொங்கல், தயிர் சேர்த்த சாதத்தை காகத்திற்கும் ,குருவிக்கும் படையல் வைக்க வேண்டும். 'காக்காப்பிடி வச்சேன் கணுப்பிடி வச்சேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணம். கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம். கூடப்பிறந்த சகோதர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய் வாழணும்' என்றுச் சொல்லி படையல் வைக்க வேண்டும்.

காணும் பொங்கலன்று உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் பெரும்பாலோரின் நடைமுறையாக உள்ளது. முக்கியமான பண்டிகை ஆகும். இந்நாள் பெண்களுக்கு, பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.டக்கும்.

Read More
ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

பாயாச நிவேதனத்தை சிறுவர்கள் உருவில் வந்து ஏற்கும் முருகன்

தென்காசியிலிருந்து சுரண்டை செல்லும் சாலையில் 5 கிமீ தொலைவில் உள்ள நான்முனைச் சாலையின் வலப்புறத் திருப்பத்தில் இருந்து 6 கிமீ தூரத்தில் ஆய்க்குடி கிராமம் உள்ளது. மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி, பாலகனாக ஒரு முகத்துடனும் நான்கு கரங்களுடனும் பத்மபீடத்தில் தாமரைப் பூவின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவர் அருகில் உள்ள மயிலின் முகம் இடப்புறம் பார்த்தபடி உள்ளது. மூலவருக்கு ஹரிராம சுப்பிரமணியர் என்ற பெயரும் உண்டு. மூலவரைப் போலவே அமைந்த உற்சவர் முத்துக்குமார சுவாமி மயில் வாகனத்தில் நின்ற கோலத்தில் உள்ளார்.

படிப்பாயசம் நிவேதனம்

மதுரையில் வாழ்ந்த பட்டு வணிகர் ஒருவர் குழந்தை வரம் வேண்டிப் பல கோவில்களுக்குச் சென்று, இறுதியாக ஆய்க்குடிக் கோவிலுக்கு வந்து பாலசுப்பிரமணிய சுவாமியைத் தனக்குக் குழந்தை பிறந்தால் முருகனுக்கு வைரவேல் சாற்றுவதாக வேண்டிக் கொண்டார். அவருக்குக் குழந்தைப் பேறு கிடைத்தது. ஆனால் அவர் தனது வேண்டுதலை மறந்து போனார். முருகன் வணிகரின் மனைவியின் கனவில் தோன்றி வேண்டுதலை மறந்து போனதை நினைவுறுத்தினார். தன் மறதிக்கு வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கோரிய வணிகர் தன் வேண்டுதலை நிறைவேற்றும் முகமாக, வைரவேலை முருகருக்குச் சாற்றி ஆண்டுதோறும் படிப்பாயசம் நிவேதனம் செய்தார்.

குழந்தை பேறு வேண்டுவோர் இங்கு வந்து வழிபட்டால் விரைவில் மழலை பேறு கிட்டும். தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பிறகு, பாயாசத்தை நிவேதனமாக படைத்து அதனை கோவிலுக்கு அருகில் ஓடும் அனுமன் நதிக்கரையில் உள்ள படியில் ஊற்றி சிறுவர்களை அருந்த சொல்கிறார்கள். இதனை படிப்பாயாச நிவேதனம் என்கிறார்கள். சிறுவர்கள் உருவில் முருகனே வந்து பாயாச நிவேதனத்தை ஏற்பதாக பக்தர்களின் நம்பிக்கை.

Read More
திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவில்

முருகன்- தெய்வானை நிச்சயதார்த்த தலம்

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவில். முருகனின் திருவிளையாடல்கள் நடைபெற்ற அறுபடை வீடுகளைத் தவிர,முருகனின் காலடிபட்ட தலங்கள் இரண்டு மட்டுமே. அதில் ஒன்று முருகப்பெருமான் வள்ளி யை மணம்புரிந்த வள்ளிமலை. மற்றொன்று பாவ விமோசனம் பெறுவதற்காக முருகன் தவம் இயற்றிய இந்த திருவிடைக்கழி என்பது சிறப்புக்குரிய விஷயமாகும்.

தல வரலாறு

சூரபத்மனை முருகன் கொன்றார். சூரபத்மனின் மகனான இரண்யாசுரன், முருகனுக்கு பயந்து தரங்கம்பாடி கடலுக்குள் மீன் உருவம் எடுத்து ஒளிந்தான். சிவபக்தனான அவனையும், பராசக்தியின் அருளால் முருகன் கொன்றார். அசுரனாக இருந்தாலும், சிவபக்தனைக் கொன்றதால் முருகனுக்கு பாவம் உண்டானது. அதைப் போக்க இங்குள்ள குராமரத்தின் அடியில் தவமிருந்தார். இதனால் 'திருக்குராவடி' என இத்தலத்திற்கு பெயர் வந்தது. இவரை தரிசித்தால் பாவம் நீங்கும்.

இங்கே உள்ள முருகன் ஆறடி உயரத்தில் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கிறார். சுவாமியின் வலது கை அபயம் தரும் விதத்திலும், இடதுகை தொடையில் வைத்தபடி உள்ளன. கருவறையில் ஒரு சிவலிங்கம் உட்புறத்தி லும், மற்றொரு லிங்கம், முருகனின் முன்புறமும் உள்ளது. தினமும் அர்த்தஜாம பூஜையின் போது, முருகன் பூஜித்த பத்ரலிங்கத்திற்கு முதலில் பூஜை நடக்கும். குராமரத்தின் அடியில் தியானம் செய்ய மனத்தெளிவு, அறிவுக்கூர்மை உண்டாகும்.

நிச்சயதார்த்த தலம்

முருகனை மணம் செய்ய விரும்பிய தெய்வானை, தவம் செய்த தலம் இது. இங்கு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. தெய்வானையின் முகம், வெட்கத்தால் சற்று சாய்ந்தது போல் உள்ளது. திருமணத்தடை அகல இவரை வெள்ளிக்கிழமையில் வழிபடலாம். முதல்படைவீடான திருப்பரங்குன்றம் செல்ல தெய்வானை விடை பெற்றதாலும், முருகனுக்கு இரண்யாசுரனைக் கொன்ற பழி கழிந்ததாலும் இத்தலம் 'விடைக்கழி' எனப்படுகிறது.

ராகு தோஷ நிவர்த்தி தலம்

முருகப்பெருமான் சிவனை வழிபட்ட குரா மரத்தடியில் அமர்ந்து, ராகு பகவான் முருகப்பெருமானை வழிபட்டிருக்கிறார். இதனால் ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடந்தேறும். தம்பதியரிடையே ஒற்றுமை பலப்படும். நவக்கிரகங்கள் இல்லாத இந்த ஆலயத்தில் முருகப்பெருமானே நவ நாயகர்களாக இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். இத்தல முருகனை வழிபட்டாலேயே அனைத்து விதமான நவக்கிரக தோஷங்களும் விலகிவிடும் என்கிறார்கள்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

கருவறையில் முருகப்பெருமானுடன் சிவபெருமானும் சேர்ந்து அருள் பாலிக்கும் தலம்

 https://www.alayathuligal.com/blog/57mj4d6yd6s4ygtkd7gb42mffkhwtd

Read More
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்

சிங்காரவேலர் மயில் வாகனத்திலும், வள்ளி-தெய்வயானை யானை மேலும் எழுந்தருளியிருக்கும் அபூர்வக் கோலம்

சென்னையில், மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீசுவரர் கோவில், தேவாரப் பாடல் பெற்ற 32 தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானின் திருநாமம் சிங்காரவேலர். இவரை அருணகிரிநாதர் தம் திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார்.

பொதுவாக கோவில்களில், முருகப்பெருமான் தனியாகவோ அல்லது வள்ளி தெய்வயானை சமேதராகவோ, மயில் மேல் எழுந்தருளியிருப்பார். ஆனால் இக்கோவிலில் சிங்காரவேலர்,தனியே மயில் வாகனத்திலும், வள்ளி தெய்வயானை தனித்தனியே யானை மேலும் எழுந்தருளியிருப்பது தனிச சிறப்பாகும்.

முருகப்பெருமான் சண்முகநாதராக அருள்பாலிக்கும் தலங்களில் எல்லாம் கிழக்கு நோக்கித்தான் காட்சி அளிப்பார்.ஆனால் மயிலாப்பூர் தலத்தில், சிங்காரவேலர் மேற்கு நோக்கி இருப்பது மேலும் ஓரு சிறப்பாகும்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

1.இரண்டு கொடிமரங்கள் அமைந்த தேவாரத்தலம்

https://www.alayathuligal.com/blog/8anclgmaxr8w2a5pf5edegy49bbare

2. மயிலாப்பூர் கற்பகாம்பாள்

https://www.alayathuligal.com/blog/m8l7sr9dl79d9zh4zr7m6lpapkg6ln

Read More
சுவாமிநாதசுவாமி கோயில்
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

சுவாமிநாதசுவாமி கோயில்

நேத்திர கணபதி

கும்பகோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை. இத்தலத்தில் நேத்திர கணபதி அருள்பாலிக்கிறார்.

பிறவியில் பார்வை இல்லாத ஒருவர் கொங்கு நாட்டில் இருந்து இத்தலம் வந்து, இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி நேத்திர கணபதியை வணங்கியபோது பார்வை பெற்றார். பக்தருக்கு பார்வை கொடுத்ததால் இவர் 'கண் கொடுத்த கணபதி' எனப் பெயர் பெற்றார். கண் பார்வை கோளாறு உடையவர்கள்,, இவரை பூரணமாக வழிபட்டால் கண் நோய் குணமாகும் என்று இங்குள்ளவர்கள் கூறுகிறார்கள்.

Read More
சுப்பிரமணிய சுவாமி கோவில்
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

சுப்பிரமணிய சுவாமி கோவில்

தம்பிக்கு உகந்த விநாயகர்

மருதமலை முருகன் கோயில் , கோயம்புத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள மருதமலை மேல் அமைந்துள்ளது. மருதமலையின் அடிவாரத்திலிருந்து நடை பயணமாகச் செல்லும்போது, பாதையின் தொடக்கத்திலேயே காட்சி தருகிறது தான்தோன்றி விநாயகர் சந்நிதி. இச்சன்னதியில் விநாயகர், சுயம்புவாக இருக்கிறார். இவருடைய தோற்றம் ஒரு குட்டி யானை படுத்திருப்பது போன்று இருக்கின்றது. யானைத்தலை மட்டும் உள்ள இவருக்கு உடல் இல்லை. இவர், மலையிலுள்ள முருகன் சன்னதியை நோக்கி, தும்பிக்கையை நீட்டி காட்சி தருவதுவிசேஷம். விநாயகரின் இந்தக் கோலம் காண்பதற்கு அரிதாகும். விநாயகரின் அழகையும் பெருமைகளையும் மருதமலை தான்தோன்றி பதிகத்தில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் கூறியுள்ளார்.அருகில் மற்றொரு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சுயம்பு விநாயகருக்கு பூஜை செய்த பின்பே, பிரதான விநாயகருக்கு பூஜை நடக்கிறது.

முருகனுக்கு உகந்த நாட்களான கிருத்திகை, சஷ்டி, விசாகம் மற்றும் அமாவாசை நாட்களில் இவருக்கும் விசேஷ பூஜை நடக்கிறது. எனவே இவரை, 'தம்பிக்கு உகந்த விநாயகர்' என்றும் அழைக்கிறார்கள். மருதமலை சுப்பிரமணியரை தரிசிக்கச் செல்பவர்கள் இவரை வணங்கிவிட்டுச் செல்ல வேண்டுமென்பது ஐதீகம்."

Read More
சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

சுப்பிரமணிய சுவாமி கோவில்

கல்லால் ஆன கொடிமரம் அமைந்திருக்கும் முருகன் கோவில்

பொதுவாக கோவில்களின் கொடிமரம் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். ஆனால் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ராஜ கோபுரத்தை தாண்டி நாம் உள்ளே சென்றால், முதலில் கல்லாலான கொடிமரத்தை காண முடியும். இது ஒரு வித்தியாசமான அமைப்பாகும். இக்கொடிமரத்துக்கு முன் வலம்புரி விநாயகர் அமர்ந்திருக்கிறார். அவர்முன் வைக்கப்பட்டுள்ள பெரிய மயில்முக குத்துவிளக்கு,மிக்க கலைநயத்துடன் விளங்குகின்றது. மயில்முக விளக்கின் அடிப்புற ஆமை வடிவமும் அதனைத் தொடர்ந்த மேற்தண்டிலுள்ள பாம்பு உருவங்களும் சிறப்பாக அமைந்திருக்கின்றன.

Read More
சண்முக நாதர் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

சண்முக நாதர் கோவில்

முருகனுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் திருப்புகழ் தலம்

திருச்சி மதுரை சாலையில் சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது விராலிமலை சண்முக நாதர் கோவில்.ஒருகாலத்தில், கருப்புமுத்து எனும் பக்தர் இக்கோவிலின் திருப்பணியில் ஈடுபட்டிருந்தார். ஒருநாள், பலத்த மழை பெய்யவே. கருப்புமுத்துவால் ஆற்றைக் கடந்து கோயிலுக்கு வரமுடியவில்லை. குளிரில் நடுங்கியபடி, முருகப்பெருமானை தரிசிக்க முடியவில்லையே என்று வருத்தமுடன் இருந்தார். குளிருக்கு இதமாக இருக்கும் என்று நினைத்து சுருட்டு ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தார். அப்போது அவர் அருகே ஒருவர் நடுங்கியபடி வந்து நின்றார். அவர் மீது இரக்கப்பட்ட கருப்பமுத்து, உங்களுக்கும் சுருட்டு வேண்டுமா எனக் கேட்டார். வந்தவரும் சுருட்டை வாங்கிக் கொண்டார். அந்த நபர் கருப்பமுத்துவுக்கு ஆற்றைக் கடக்க உதவி செய்தார். பின்னர் காணாமல் போய்விட்டார். கருப்பமுத்து கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தபோது சன்னதியில் பாதி சுருட்டு இருந்தது கண்டு திகைத்துப் போனார். கருப்பமுத்து ஊர்மக்களிடம் நடந்ததைக் கூற அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அன்று முதல் மாலை வேளை பூஜையில் முருகனுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டது.பின்னர் இடைக்காலத்தில் புதுக்கோட்டை மகாராஜா இப்பழக்கத்திற்கு தடை விதித்தார். அவர் கனவில் தோன்றிய முருகன், “எனக்கு சுருட்டு படைப்பது பிறருக்கு முடிந்த உதவியைச் செய்ய வேண்டும்; இருப்பதை அடுத்தவருக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். துன்பப்படும் ஒருவனுக்கு ஏதோ ஒரு வழியில் உதவி செய்ய வேண்டும் என என் பக்தர் விரும்பினார். அதனால்தான் அவர் தந்த சுருட்டை தகுதியற்றதாயினும் அன்புடன் ஏற்றுக்கொண்டேன். இப்பழக்கம் தொடரட்டும். தடை செய்யாதே” என்றார். அதன் பிறகு இன்றுவரை இப்பழக்கம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பக்தர்கள் இந்த சுருட்டைப் பிரசாதமாகப் பெற்று, வீட்டில் கொண்டு வைக்கின்றனர். இறைவன் நாம் அன்புடன் படைக்கும் எதையும் ஏற்றுக் கொள்வான் என்பதையே இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது. இத்தலத்தில் நோய், துன்பம் விலகவும், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் பெருகவும் முருகப்பெருமானிடம் வேண்டுகிறார்கள்.

Read More
சுப்ரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

சுப்ரமணிய சுவாமி கோவில்

புத்தாண்டில் படிபூஜை நடக்கும் முருகன் தலம்

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிவில் வருடத்தின் நாட்களைக் குறிக்கும் விதமாக 365 படிகளுடன் அமைந்திருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது, புத்தாண்டில் ஆங்கிலேயர்களைச் சந்தித்து வாழ்த்து கூறுவதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தப் பழக்கத்தில் இருந்து மக்களை ஆன்மிக வழியில் திருப்ப, முருகபக்தரான வள்ளிமலை சுவாமிகள் 1917ல், புத்தாண்டில் படிபூஜை செய்து முருகனை வழிபடும் வழக்கத்தைக் கொண்டு வந்தார். புத்தாண்டிற்கு முதல்நாள் இரவில் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி பூஜித்து, ஒரு திருப்புகழ் பாடப்படுகிறது. அனைத்து படிகளுக்கும் பூஜை செய்த பின்பு, நள்ளிரவு 12 மணிக்கு முருகனுக்கு விசேஷ பூஜை நடக்கின்றது. தமிழ்ப்புத்தாண்டில் 1008 பால் குட அபிஷேகம் நடக்கும்.

Read More
சுப்ரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

சுப்ரமணிய சுவாமி கோவில்

குழந்தை முருகனுக்கு வெந்நீர் அபிஷேகம்

திருத்தணி மூலஸ்தானத்திற்கு பின்புறமுள்ள சுவரில் குழந்தை வடிவில், ஆதி பாலசுப்பிரமணியர் இருக்கிறார். கைகளில் அட்சர மாலை, கமண்டலத்துடன் இருக்கும் இந்த முருகனே, வள்ளி திருமணத்திற்கு முன்பு இங்கு எழுந்தருளியிருந்தார். மார்கழி திருவாதிரையில் இவருக்கு வெந்நீரால் அபிஷேகிக்கின்றனர். குளிர்காலம் என்பதால், அவர் மீதுகொண்ட அன்பினால், வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.

Read More
கந்தசாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

கந்தசாமி கோவில்

பாஸ்போர்ட், விசா பெற ஏற்படும் தடைகளை தகர்க்கும் முருகப்பெருமான்

திருப்போரூர் கந்தசாமி கோயில் முருகன் சந்நிதி சுற்றுச்சுவரில் அவரது ஒரு வடிவமான குக்குடாப்தஜர் (குக்குடம் என்றால் சேவல்) சிலை உள்ளது. ஒரு கையில் சேவல் வைத்திருப்பதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. பாஸ்போர்ட், விசா கிடைக்க தாமதம் அல்லது சிக்கல் இருந்தால், வெளிநாடு செல்ல முடியதாவர்கள் இவருக்கு அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்கிறார்கள். வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் நலமாக இருக்கவும் இவரை வேண்டிக் கொள்கிறார்கள்.

Read More
சுப்ரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

சுப்ரமணிய சுவாமி கோவில்

முருகனின் இடப்பக்கம் மயிலின் தலை திரும்பி இருக்கும் தலம்

நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் என்ற ஊரில் இருந்து சுமார்14 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பெரம்பூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் .இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு முகங்களுடனும் 12 திருக்கரங்களுனும் மயில் மீது அமர்ந்து வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். பெரும்பாலான முருகன் ஆலயங்களில் மயிலின் தலையானது முருகனின் வலப்பக்கம் திரும்பியிருக்கும் ஆனால் இத்தலத்தில் மயிலின் தலையானது முருகனின் இடப்பக்கம் திரும்பி இருக்கிறது.இது ஒரு விசேடமான அமைப்பாகும்.

Read More
சுப்பிரமணிய சுவாமி கோயில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

சுப்பிரமணிய சுவாமி கோயில்

சூரசம்ஹாரம் நடைபெறாத முருகன் தலம்

முருகப்பெருமான் திருச்செந்தூரில், அசுரர்களுடன் போரிட்டு வென்றதன் அடிப்படையில் முருகத்தலங்களில், கந்தசஷ்டியின்போது சூரசம்ஹாரம் விமரிசையாக நடத்தப்படும். ஆனால் திருத்தணி,முருகன், கோபம் தணிந்து காட்சி தரும் தலமென்பதால் இங்கு சூரசம்ஹாரம் கிடையாது. அன்று முருகனைக் குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது. அப்போது, ஆயிரம் கிலோ பூக்களை புஷ்பாஞ்சலிக்காகப் பயன்படுத்துகிறார்கள்.

Read More
சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

சுப்பிரமணிய சுவாமி கோவில்

முருகப் பெருமான் கையில் வேல் இல்லாத தலம்

தமிழ் கடவுள் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடு திருத்தணி.இத்தலம் அரக்கோணத்தில் இருந்து 18 கி.மீ. தூரத்திலும் சென்னைக்கு வடமேற்கே 84 கி.மீ. தூரத்திலும் இருக்கிறது. இத்தலத்து முருகனின் திருநாமம் சுப்ரமணியசுவாமி. முருகன் வலக்கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ரவேலுடன் (இடிபோன்ற ஓசையெழுப்பும் சூலம் போன்ற கருவி) இடக்கையை தொடையில் வைத்து ஞானசக்திதரராக காட்சி தருகிறார். இவரிடம் மற்ற கோயில்களில் காணப்படும் வேல் கிடையாது. அலங்காரத்தின்போது மட்டுமே தனியே வேல், சேவல் கொடி வைக்கின்றனர்.

Read More
சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

சுப்பிரமணிய சுவாமி கோவில்

தமிழகத்திலேயே மிகப்பெரிய முருகன் சிலை அமைந்துள்ள திருப்புகழ் தலம்

ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருத்தலம் வல்லக்கோட்டை. மூலவர் சுப்பிரமணியர் சுவாமி வள்ளி தெய்வானை சமேதராக காட்சி தருகிறார்.தமிழகத்திலேயே இக்கோவிலில் இருக்கும் 7 அடி முருகன் சிலைதான் மிகப் பெரிய முருகன் சிலை ஆகும்.

அருணகிரிநாதர் தல யாத்திரையாக பல ஆலயங்களுக்குச் சென்று வந்தார். திருப்போரூர் முருகனை தரிசித்த அவர், அன்றிரவு அங்கேயே தங்கினார். காலையில் திருத்தணி முருகனை தரிசிக்க வேண்டும் என்று எண்ணியபடியே உறங்கினார். அப்போது அவரது கனவில் தோன்றிய முருகன், ‘கோடைநகர் மறந்தனையே’ என்று சொல்லி மறைந்தார். மறுநாள் காலையில் எழுந்த அருணகிரிநாதர், கனவில் தோன்றிய முருகப்பெருமானை நினைத்தபடி, திருத்தணி செல்லும் வழியில் வல்லக்கோட்டை திருத்தலம் சென்று அங்குள்ள இறைவனை தரிசித்தார். மேலும் அந்த முருகப்பெருமானின் மீது 8 திருப்புகழ் பாமாலை பாடி மகிழ்ந்தார்.

Read More
கந்தசாமி கோயில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

கந்தசாமி கோயில்

ஓம்கார அமைப்பில் அமைந்த திருப்புகழ் தலம்

சென்னைக்கு அருகிலுள்ள திருப்போரூர் கந்தசாமி கோயில், அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம். இக்கோவில் ஓம்கார அமைப்பில் அமைந்த ஆலயம். அதனால்,சுவாமியை தரிசித்துவிட்டு வெளியேறும்போது, சந்நிதியில் இருந்து நாம் பார்த்தால், நமக்கு முன்னே சுவாமியை தரிசித்துவிட்டுச் செல்பவர்களைப் பார்க்கமுடியாதபடி நுட்பமாக அமைக்கப்பட்டு உள்ளது.

Read More
முருகநாதேசுவரர் கோயில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

முருகநாதேசுவரர் கோயில்

முருகப் பெருமான் வேலும் மயிலும் இல்லாமல் தனித்து நிற்கும் தேவாரத்தலம்

திருமுருகன்பூண்டி, திருப்பூர் நகரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம். முருகனால் இத்தலத்து சிவபெருமான் பிரதிஷ்டைசெய்யப்பட்டதால், திருமுருகநாதர் என்று அழைக்கப்படுகிறார். இதை விளக்கும் விதமாக, முருகன் சன்னதியில் லிங்கம் ஒன்று உள்ளது. முருகன் இங்கு வந்து சிவனை வழிபடும் முன்பு, தனது வேலை, கோயிலுக்கு வெளியே சற்று தள்ளி தரையில் ஊன்றினார். மயில் வாகனத்தை அதன் அருகில் நிறுத்தி வைத்தார். இதனால் வேலும் மயிலும் இல்லாமல், தனித்து நிற்கிறார்.

பெரும்பாலான கோவில்களில், சுப்ரமணியர் சிலை, முன்புறம் மூன்று முகங்களும், பின்னால் மூன்று முகங்களுடனும் அமைந்திருக்கும். இக்கோவிலில் மட்டும், ஐந்து முகங்கள் முன்புறமும், ஆறாவது முகம், பின்னாலும் அமைந்துள்ளது. அந்த முகம், “அதோ முகம்” என அழைக்கப்படுகிறது. இம்முகத்தை கண்ணாடியில் மட்டுமே பார்க்க முடியும். அதேபோல், தமிழகத்தில் தெற்கு நோக்கி சுப்ரமணிய சுவாமி அமர்ந்திருப்பது இத்தலத்து தனிச்சிறப்பு. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலுக்கு வந்து, வழிபட்டு, அதோ முகத்தை பார்த்தால், மனநிலை சரியாகி விடும் என்பது நம்பிக்கை.

Read More
சுப்பிரமணிய சுவாமி கோயில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

சுப்பிரமணிய சுவாமி கோயில்

வள்ளியும் தெய்வானையும் ஒருவராக இணைந்து காட்சி தரும் திருப்புகழ் தலம்

முருகனின், ஆறுபடை வீடுகளில் 5 ஆம் படைவீடாக திகழும் திருத்தணி, அரக்கோணத்தில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

திருமாலின் மகள்களான அமுதவல்லி, சுந்தரவல்லி இவர்களில் அமுதவல்லி, தெய்வானை என்ற பெயரில் இந்திரனிடமும், சுந்தரவல்லி வள்ளியாக நம்பிராஜனிடமும் வளர்ந்து முருகனை மணந்தனர். சகோதரிகளான இவ்விருவரும் வேறில்லை என்பதன் அடிப்படையில் இங்கு வள்ளியும் தெய்வானையும், ஒரே அம்பிகையாக, கஜவள்ளி என்னும் பெயரில் அருள்கிறார்கள். கஜவள்ளி வலது கையில் வள்ளிக்குரிய தாமரையும், இடக்கையில் தெய்வானைக்கு உரிய நீலோத்பவ மலரும் வைத்திருக்கிறாள்.

Read More
கொடுங்குன்றநாதர் கோயில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

கொடுங்குன்றநாதர் கோயில்

வயோதிக கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான்

பிரான்மலை தலத்தில், முருகப்பெருமான் தனிச்சன்னதியில் வயோதிக கோலத்தில் காட்சி தருகிறார். வழக்கமாக முருகன் சன்னதி எதிரில் மயில் வாகனம்தான் இருக்கும். ஆனால், இவரது சன்னதி எதிரில் யானை வாகனம் இருக்கிறது. அருணகிரிநாதருக்கு இத்தலத்தில் முருகன் நடனக்காட்சி காட்டியதாக ஐதீகம்.

Read More
தில்லை நடராசர் கோயில்

தில்லை நடராசர் கோயில்

சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரையும் ஒருசேர தரிசிக்கக் கூடிய தலம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில், மும்மூர்த்திகளான பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவரும் எழுந்து அருளி இருக்கிறார்கள். இவர்கள் மூவரையும், நாம் ஒரே இடத்தில் நின்றபடியே தரிசிக்க முடியும். இந்த மாதிரி அமைப்பு வேறு எந்தத் தலத்திலும் இல்லை. இந்த ஆலயம், தேவாரப்பாடல் பெற்ற திருத்தலமாகவும், திவ்ய தேசமாகவும் விளங்குவது மற்றுமொரு தனிச்சிறப்பாகும். இத்தகைய தனிச்சிறப்பு பெற்ற மற்றுமொரு ஆலயம். காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலாகும். சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தில்லை கோவிந்தராஜன் பெருமாள் சன்னதியும், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள நிலாத்திங்கள் துண்டம் பெருமாள் சன்னதியும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள் ஆகும்

Read More