அத்திமுகம் ஐராவதேஸ்வரர் கோவில்

அத்திமுகம் ஐராவதேஸ்வரர் கோவில்

நவக்கிரகங்கள் யோக நிலையில் அமர்ந்திருக்கும் அரிய காட்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் நகரத்திலிருந்து 19 கி.மீ. தொலையில் அமைந்துள்ளது அத்திமுகம் ஐராவதேஸ்வரர் கோவில். இக்கோவில் சுமார் 1800 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இங்கு இறைவன் ஐராவதேஸ்வரரும், இறைவி காமாட்சி அம்மனும் தம்பதி சமேதராக, சிவ சக்தியாக ஒரே கருவறையில் அருள் பாலித்து வருவது ஒரு தனி சிறப்பாகும்.

பொதுவாக சிவாலயங்களில், நவக்கிரகங்கள் பீடத்தின் மேல் நின்ற நிலையில் காட்சி அளிப்பார்கள். இத்தலத்தில் நவக்கிரகங்கள் ஒன்பது பேரும் அமர்ந்த நிலையில் தோற்றம் அளிக்கிறார்கள்.நவக்கிரகங்கள் அனைவரும் யோக நிலையில் அமைதியாய் இருப்பதனால் தான் இங்கு அமர்ந்த கோலத்தில் இருக்கிறார்கள். இப்படி அமர்ந்த கோலத்தில் இருக்கும் நவக்கிரகங்களை ஒரு சில இடங்களில் மட்டுமே நாம் காண முடியும்.

Read More
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில்

தனித்துவமான, திருமேனி வடிவமைப்புள்ள அம்பிகை

மூக்குத்தி போடுவதற்கான துவாரமும், தலைப்பின்னலில் ஜடை குஞ்சத்துடன் இருக்கும் அரிய காட்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் அமைந்துள்ளது சந்திரசூடேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் மரகதாம்பிகை. பச்சையம்மன், பர்வதம்மன் என்ற பெயர்களும் உள்ளன.

தமிழ்நாட்டில் மலைமீது அமைந்த ஒரு சில சிவாலயங்களில் இந்த சந்திரசூடேஸ்வரர் கோவிலும் ஒன்று. மலை மேல் அமைந்துள்ள இக்கோவிலை அடைய சுமார் 200 படிகள் உள்ளன. வாகனங்கள் செல்ல சாலை வசதியும் உள்ளது. பல நூற்றாண்டுகள் பழமையானது இத்தலம்.ஹொய்சளர்களால் ஆளப்பட்ட இவ்வூர் ஹோசூர் என்ற பெயர் பெற்றது. இம்மாவட்டத்தில் தங்கத்தேர் அமைந்த ஒரே கோவில் இது ஒன்றேயாகும்.

இத்தலத்து இறைவி மரகதப் பச்சை நிறம் கொண்ட திருமேனி உடையவர். ஒரு சமயம் சிவபெருமான், தான் தங்கியிருந்த இத்தலத்திற்கு பார்வதிதேவியை அழைத்துவர ஒரு திருவிளையாடலை நடத்தினார். ஒளிவீசும் உடும்பு வடிவம் கொண்டு கயிலை மலையின் உத்தியான வனத்தில் இருந்த பார்வதிதேவிக்கு அருகே வந்தார். அந்த அதிசய உடும்பைக் கண்ட பார்வதி, அதைப் பிடிக்க தோழிகளுடன் சென்றார். உடும்பானது, அவர்களின் கைகளில் அகப்படாமல் காடு, மலைகளைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் தேவி அந்த உடும்பின் வாலை பிடிக்க, அவரது உடல் பச்சை நிறமானது.

கருவறையில் நான்கு கரங்களுடன், நின்ற நிலையில் காட்சி தரும் அம்பிகையின் மூக்கில் மூக்குத்தி போடுவதற்கான துளை அமைந்துள்ளதும், அம்பிகையின் பின்னல் ஜடை ,குஞ்சத்துடன் அமைந்துள்ளதும் அதிசயமான காட்சியாகும். இப்படிப்பட்ட தனித்துவமான வடிவமைப்புள்ள அம்பிகையை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. அம்பிகைக்கு முன்பு ஸ்ரீசக்ரம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீசக்ரத்தின் முன் ஆடி வெள்ளி, தைவெள்ளி, நவராத்திரி நாட்களில் சண்டி ஹோமம் நடைபெறும். அழகு மிளிரும் திருமுகத்துடன் காட்சி தரும் அம்பிகை, பெண்களுக்கு குழந்தை செல்வம், குடும்ப ஐஸ்வர்யம் அளிப்பதில் வல்லவள்.

Read More
அத்திமுகம் ஐராவதேஸ்வரர் கோவில்

அத்திமுகம் ஐராவதேஸ்வரர் கோவில்

சிவலிங்க பாணத்தில் யானையின் உருவம் தெரியும் அபூர்வ காட்சி

ஒரே கருவறையில் சிவலிங்கத் திருமேனியும், அம்பிகையும் அருள் பாலிக்கும் அரிய காட்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் நகரத்திலிருந்து 19 கி.மீ. தொலையில் அமைந்துள்ளது அத்திமுகம் ஐராவதேஸ்வரர் கோவில். இக்கோவில் சுமார் 1800 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.ஹஸ்தி என்றால் யானை என்று பொருள். யானை இங்கு வந்து சிவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு 'ஹஸ்திமுகம்' எனப் பெயர் வந்தது. இதுவே காலப்போக்கில் அத்திமுகம் என்று மருவியது. இக்கோவிலானது சாலை மட்டத்திலிருந்து, பத்தடி பள்ளத்தில் அமைந்துள்ளது. பல நூறு ஆண்டு காலம் தண்ணீருக்குள்ளும், மண்ணுக்குள்ளும் புதைந்து கிடந்த இக்கோவில் தற்போது தான் வெளி உலகிற்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது.

பொதுவாக ஒரு கோவில் என்று எடுத்துக்கொண்டால் ஒரு மூலவர் இருப்பார். ஆனால் இங்கு இரண்டு மூலவரை நாம் தரிசிக்கலாம். காமாட்சி உடனுறை ஐராவதேஸ்வரர் ஒரு கருவறையிலும், அகிலாண்டேஸ்வரி உடனுறை அழகேசுவரர் தனிக் கருவறையிலும் அருள்பாலிக்கிறார்கள். ஒரே கருவறையில் ஐராவதேஸ்வரரும், அவருக்கு பின்னால் காமாட்சி அம்மன் நின்ற கோலத்திலும் அருள்பாலிப்பதும் இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். மேலும் தை மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் சூரியனின் பூஜைக்காக, நந்தி மூலவருக்கு நேர் எதிரில் இல்லாமல் சற்று விலகி இருப்பதும் ஒரு தனிச்சிறப்பாகும்.

இந்திரன் விருத்திராசுரனை கொன்று அழிக்க, அவருக்கும் அவரது யானை ஐராவதத்திற்கும் ப்ரம்மஹத்தி தோஷம் பிடிக்கின்றது. இத்தலத்து இறைவனை வழிபட்டு தோஷம் நீங்க பெற்றனர். அதனால் இறைவனுக்கு ஐராவதேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. ஐராவத யானை இங்கு வழிபட்டதால், ஐராவத யானையின் முகம் சிவலிங்கத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஐராவதேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும்போது, யானையின் உருவம் மிகத் தெளிவாக தெரியும். பொதுவாக சிவலிங்கத்தின் மீது உருவங்கள் பொறிக்கப்படுவது மிக அபூர்வம். அந்த வகையில் இத்தலத்து சிவலிங்கத்தின் பாணத்தில், யானை உருவம் தெரிவது ஒரு அரிய காட்சியாகும்.

இங்கு இறைவன் ஐராவதேஸ்வரரும், இறைவி காமாட்சி அம்மனும் தம்பதி சமேதராக சிவ சக்தியாக ஒரே கருவறையில் அருள் பாலித்து வருவதால் களத்திர தோஷம்,திருமண தடை,கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறைவு போன்ற பிரச்சனைகள் நீங்குகிறது.

இக்கோவிலில் திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Read More